வியாழன், 24 பிப்ரவரி, 2011

குழந்தை முகத்தில் குளிர் நிலவு! - இந்த வார கல்கியில்..

இக்கவிதைக்கான புகைப்படமே எதிர்ப்பக்கம் அமைந்த நான்கு கவிதைகளுக்கும் பின்னணியாக..

கல்கி ஆன்லைனில் இருந்து அப்படமும் உங்கள் பார்வைக்கு..

புகைப்படத் துறையில் சிறப்பாகப் பரிமளித்து வரும் எழுத்தாளரும் கவிஞருமான விழியன் எடுத்த படம். நிலவை நோக்கும் நிலவு அவரது பெண் குழலி.

என் கவிதைக்கு முக்கியத்துவமும் முழுப்பக்கமும் தரப்பட்டிருப்பது பார்த்து அளவற்ற மகிழ்ச்சி:)!
நன்றி கல்கி!

இம்மாதத்தில் கல்கியில் வெளியாகி இருக்கும் இரண்டாவது கவிதை இது. முதல் கவிதை இங்கே.

கல்கி வார இதழை இப்போது நீங்கள் ஆன்லைனிலும் வாசிக்கலாம். கூடவே மங்கையர் மலர் மாத இதழ், கோகுலம், ஆங்கிலத்தில் Gokulam ஆகியனவும் வலையேற்றப்பட்டு வருவது வரவேற்புக்குரிய செய்தி.

கல்கி ஆன்லைன் அன்புடன் வரவேற்கிறது

வாசித்துப் பயன்பெற முதலில் உங்கள் பெயர் மற்றும் மின்மடல் முகவரியைப் பதிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அதிவேகத்தில் சிறையான எழிலோவியப் படங்கள்- கிருஷ்ணகிரி மாம்பழங்கள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி பக்க இயற்கையெழில் காட்சிகள்.

சமீபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக விரைந்த எம் வாகனத்தினுள் இருந்து, ஏற்றிய கண்ணாடிகள் வழியே, ஷட்டர் ஸ்பீட் 1/800-ல் முயற்சித்த படங்கள்.

குறிப்பிடும் அளவுக்கு இது பெரிய விஷயமா எனக் கேட்டால், இதே போல விரைந்த வாகனத்தில் இருந்து நான் எடுத்த படம், [சரியாக இரண்டு வருடம் முன்னர் பிப்ரவரி 2009 PiT ] ‘கணநேரக் கண்ணாடிகள்-ஆக்‌ஷன் படங்கள்’ தலைப்புக்காக இரண்டாவது படமாக இந்தப் பதிவில்!

பார்த்து விட்டீர்களா? இப்போது புரிந்திருக்குமே ஏன் ஆர்வமாக SLR-ல் இந்த முயற்சி என்று? ஒத்தும் கொள்வீர்கள்தானே கிடைத்த ரிசல்டை நான் பகிர்ந்திட நினைத்ததில் தவறில்லை என்று:)!

1. எழிலோவியம்


2. நீல வானமும் நீண்ட மலைகளும்..

இதே படங்களை வண்டியை ஆங்காங்கே நிறுத்தியும் எடுத்திருக்கலாம்தான். ஆனால் திட்டமிட்ட நேரத்தில் ஊர் போய் சேர இயலாதென்பதோடு, நெடுஞ்சாலைகளில் திடீர் திடீரென வேகத்தைக் குறைப்பதையும், ஆங்காங்கே நிறுத்துவதையும் தவிர்ப்பதே நல்லதெனக் கருதுவேன். விரையும் பிற ஊர்திகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடியே செல்லுவதும் தேவையான ஒன்றாக உள்ளது.


3. நெடிந்துயர்ந்த தென்னைகளும்..


4.தேசிய நெடுஞ்சாலையும்..



குன்றுகள்
சன்னல் கண்ணாடியை இறக்கினால் அடிக்கிற காற்றில் எடுக்கிற படமும் கிழிந்திடும் போல:)! ஆக ஏற்றியே இருந்த கண்ணாடியின் பிரதிபலிப்பு கீழ் வரும் முதலிரண்டு படங்களில் தெரியத்தான் செய்கிறது.

5. பச்சைப் பாவாடை அணிந்து..


6. பளபளக்கும் பாறையுடன் நிமிர்ந்து..


7. உச்சியிலே கோட்டையினைச் சுமந்து..


திப்பு சுல்தானும், கிருஷ்ணகிரி மாம்பழமும்:

இப்படங்களை ஒரு ஆர்வத்தில் ‘தமிழ்வாசல்’ பல்சுவை மின்குழுமத்தில் பகிர்ந்து கொண்ட போது கிருஷ்ணகிரியை சொந்த ஊராகக் கொண்ட வடக்கு வாசல் ஆசிரியர் திரு.பென்னேஸ்வரன் ‘ எங்கள் ஊருக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.’ என்றதோடு ‘இத்தனை அழகான இடத்தை விட்டு டெல்லியில் வந்து வாழ எந்த ஜென்மத்தில் எந்தப் பாவம் செய்திருக்கிறேனோ தெரியவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார். படங்களுடன் தொடர்புடையதாக சில அரிய வரலாற்றுத் தகவல்களையும் தந்திருந்தார். அவற்றை அவரது வார்த்தைகளிலே, வண்ண எழுத்துக்களில் பதிந்துள்ளேன்.

நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கும் இடங்களில் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் அலைந்திருக்கிறார்கள். குலாம் அலி என்கிற மனிதர் சுமார் 103 ஆண்டுகள் உயிரோடு இருந்தவர். திப்புவால் 18ம் நூற்றாண்டின் இறுதியில் கான்ஸ்டான்டிநோபிள் அனுப்பப்பட்டார். இவர்தான் கிருஷ்ணகிரியின் முதல் முன்சீப்பாக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். அதற்கு விலையாக அவர் பின்னாளில் திப்புவைக் காட்டிக் கொடுத்தார்.

உங்கள் இரண்டாவது புகைப்படம்
[2. நீல வானமும் நீண்ட மலைகளும்] இருக்கும் குன்றில் திப்புவின் நண்பர் பசவராஜ் என்பவர் பாண்டிச்சேரிக்கு திப்புவின் உதவி கோரிய ஓலையை சுமந்து குதிரையில் பயணித்த போது அவரை சில துரோகிகள் வழிமறித்துக் கொன்று அங்கேயே புதைத்தனர். பிரான்சுப் படைக்கு திப்பு நலமாக இருப்பதாகவும் படைகள் தேவை இல்லை என்று வேறு செய்தியை அந்தத் துரோகிகள் அனுப்பினார்கள். பிரென்சுப் படைகள் நேரத்தில் வராததால் திப்பு போரில் மரணத்தைத் தழுவினார்.

மீண்டும் குலாம் அலிக்கு வருகிறேன். அவர் கான்டோன்டிநோபிள் சென்ற போது திப்புவுக்காக அங்கிருந்து ஒரு கூடை நிறைய மாம்பழங்கள் சுமந்து வந்தார். அந்தப் பழத்தில் ஒரு கொட்டையை திப்பு சந்தூர் என்கிற கிராமத்தில் (அநேகமாக உங்கள் படம் 5ல் உள்ள குன்றின் பின்புறம் உள்ள கிராமம்) புதைத்து வைத்தார். அந்த மாம்பழம்தான் சந்தூரா என்ற பெயரில் பெங்களூரிலும் கிடைக்கின்றன.

சேலத்து மாம்பழம் என்று பெயர் வாங்கியதும் இந்த மாம்பழம்தான். கிருஷ்ணகிரிக்கு சேரவேண்டிய பெருமை, அப்போது கிருஷ்ணகிரி சேலம் மாவட்டத்தில் இருந்ததால் சேலத்து மாம்பழம் என்று பெயர் வாங்கி விட்டது.


ஊர்க்காரர்களுக்கே உரித்தான உண்மையான ஆதங்கம்.

எதேச்சையாக எடுத்த படங்களுக்குப் பின்னால் இத்தனை அரிய பல தகவல்கள் இருக்குமென்று நினைத்திருக்கவில்லை. மிக்க நன்றி திரு. பென்னேஸ்வரன்!.

வன ஆண்டு:

வரலாற்று உண்மைகளுக்குப் பிறகு நிகழ்காலத் தகவல் ஒன்று:

அந்தி நேரத்து நிர்மலமான நீலவானம், மலைகள், குன்றுகள் இவற்றோடு பார்வைக்குக் கிடைத்த பசுமைகள் யாவும் ‘இருக்கிற வளமாவது காக்கப்பட வேண்டுமே’ எனும் ஏக்கத்தை ஏற்படுத்தியது. 2011 சர்வ தேச வன ஆண்டாகக் கொண்டாடப்படுகிறதாம். இப்படியான கொண்டாட்டங்களை அறிவித்துதானே விழிப்புணர்வைக் கொண்டு வரவும் மரங்களைக் காப்பாற்றவும் போராட வேண்டியிருக்கிறது.

கீழ்வருவது மட்டும் டோல் கேட் பக்கம் நின்ற சில நொடிகளின் போது...

8. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

அந்தப் பனை அழகா? இல்லை.., பாயும் கதிர் அழகா..?

எது அழகு:)? நீங்களே சொல்லுங்கள்!
*** *** ***

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அன்புக்காக.. படங்கள் - பிப்ரவரி PiT போட்டி

அன்பு.

போட்டித் தலைப்பு.

ஒரு படம் போட்டிக்கு.. நான் எடுத்தது.

ஒரு படம் தலைப்புக்கு.. நான் இருப்பது.


தளிர் நடை
தத்தித் தத்தி நடந்து வரும் தங்க பாப்பா
அவள்
தானாக நடக்கும் வரை தாங்கிப் பிடிக்க
தாய்மாமனோ தகப்பனோ..
தந்திருக்கும் அன்புக் கரங்கள்!
அந்த ஆதரவில்
ஒளிர்கின்றன மின்மினியாய்க்
கண்மணியின் சின்னக் கண்கள்!


அம்மாவின் ஆசைக்காக..

அன்பைச் சொல்லும், பாசம் பேசும் இப்படம்.. உங்கள் பார்வைக்கு..

என் திண்ணை நினைவுகளில் பதிவுக்குப் பொருத்தமாக சிறுவயது படங்கள் பலவற்றை உபயோகித்திருந்தேன். அதைப் பார்த்த நாளிலிருந்து அம்மாவின் ஆசை இந்தப் படத்தை என்றேனும் நான் வலைப்பூவில் பகிர்ந்திட வேண்டுமென்று. கள்ளமில்லாப் பிள்ளைச் சிரிப்பென்பது இதுதான் எனச் சொல்லிச் சொல்லி ரசிப்பார்கள்.


புகைப்படச் சட்டத்துள்
காலம் நகருகையில்
படங்களும் புதிது புதிதாக
மாறியபடி இருப்பது
பொதுவாக வழக்கம்தான்.

ஆனால் படம் எடுத்த அப்பா
விரும்பி சட்டத்துள் வைத்தது என
அவர் மறைந்த பின்னும்
மாற்றாமல் இருந்தார்கள் அம்மா.

படத்தில் இருக்கும்
மறைந்த அண்ணனின் நினைவாக
மாற்றாமல் வைத்திருக்கிறேன்..

இன்றுவரை நானும்.
***
எனது பிட் பதிவுகள் எதிலும் நான் எடுக்காத படம் எதையும் இதுவரை பதிந்ததில்லை. இந்த முறை ‘அன்புக்காக’ ‘அம்மாவுக்காக’ப் பகிர்ந்தது என்பதால் தவறில்லை என எண்ணுகின்றேன்.

இருத்தலின் அடையாளமாக 'தளிர் நடை' போட்டு என் படம் போயிருக்க,அன்பு வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும் ஏனைய போட்டிப் படங்கள் இங்கே. பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

அப்டேட்ஸ்:



நன்றி PiT!!


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மின்னல் தென்றல் புதையல்..- காதல் காதல் காதல்..


மின்னல்
இரவு வானும் நட்சத்திரங்களும்
முழு நிலவும் பனிக் காற்றும்
மழை மேகமும் மின்னல் கீற்றும்
ரசனைக்குள் வந்தபோதுதான் புரிந்தது..
வாழ்வை அற்புதமாக்கும்
மந்திரசக்தி காதலென்பது.
***

தென்றல்


தீண்டிய யாவரையும்
தழும்பச் செய்தது
காதலால் தென்றல்..
காற்றுவெளியை நிறைத்தக்
காதல் குறுஞ்செய்திகளில்
குளித்த களிப்பில்.
***

புதையல்
வெண்டைப் பிஞ்சு விரல்கள்
ரோஜாப்பூ இதழ்கள்
மான்போல் மருளும் விழிகள்
தேன்போல் ஒலித்தது சிணுங்கல்
பூக்குவியலாய் கையில் புதையல்
மகவை ஏந்திய அக்கணத்தில்..
பெருகியது ஈன்ற உன்மேல்
பன்மடங்காய் காதல்!
***

காதலர் தின ஸ்பெஷல்:)!

படம்: இணையத்திலிருந்து..

இன்று வல்லமை இணைய இதழில்.., நன்றி வல்லமை!

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

நவீன விருட்சத்தில்.. - அழகிய வீரர்கள்


மிகக் கவனமாக
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..


அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..


இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..


விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
‘அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..


காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..


மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..


ஆராதித்து வந்த தலைமையின்
அசல் முகங்கண்ட அதிர்ச்சியில்,
விசிறியடிக்கப்பட்ட விசுவாசி
விதியை நொந்தபடி..


இக்கணத்திலும்,
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..


மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***

முதன் முறையாக நவீன விருட்சத்தில், நன்றி நவீன விருட்சம்!

படம் நன்றி: இணையம்



இந்தக் கவிதை ஜூன் 2011-ல் வெளியான நவீனவிருட்சம் சிற்றிதழ் பிரசுரத்துக்கும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆசிரியருக்கு நன்றி!


ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

முகமூடிகள் - உயிரோசை கவிதை

ன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு முகமூடிகள்

அணிந்தது அறியாதபடி
தோலோடு சங்கமமாகி
சதையோடும் எலும்போடும் ஊடுருவி

பளபளத்த முகமூடிகளுக்கே
எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள்
அத்தனையும் ரசித்தபடி
இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி
உயிரோடு ஒன்றிப்போய்
உலகுக்கான அடையாளமாகி.

ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில்
விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம்
கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத்
தன்னிச்சையாக

ஒவ்வொன்றாக அன்றி
ஒட்டு மொத்தமாக

சுற்றம் மறந்து நிதானம் இழந்து
மதி மழுங்கி மற்றவர் வருத்தி
மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில்
எதிரே இருந்த கண்ணாடியை
எதேச்சையாய் ஏறிட

பேதலித்து அலறுகிறது சுயமுகம்
தன்கோரம் தானே காணச் சகியாமல்.

***
டைந்து போன பொம்மையைக்
கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த
குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும்
விளையாட்டுச் சாமான்களைப் போலக்
கலைந்து கிடந்தது வீடு
கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால்

கலங்கி நின்ற மனதை
ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்
தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின-
ஆத்திரமாய் தத்தமது முகமூடிகளை

குவிந்த முகமூடிகளுக்குள்
அமுங்கி மூச்சுத் திணறி
மீட்கக் கோரி வெளி நீண்ட கையை
ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட
மகானுபாவர்,

”வருத்தம் விடு!
மனிதருக்காகவே
படைக்கப்பட்டவைதாம் இவை.
சேர்ந்து கிடப்பதில்
இன்னும் சிறப்பானதாய்த்
தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள
கிடைத்த வாய்ப்பாகப் பார்”
உபதேசித்தார்

நழுவத் தொடங்கிய தன் முகமூடியைக்
கெட்டியாகப் பிடித்தபடி.
*****

படம் 1: TOI Crest-ல் பொருத்தமாகக் கிடைத்தது.

படம் 2: உயிரோசையில் கவிதையுடன் வெளியானது.

நன்றி உயிரோசை!

புதன், 2 பிப்ரவரி, 2011

கல்கி இதழில்..-தவிப்பு

முதன் முறையாக கல்கியில்
என் கவிதை

நன்றி கல்கி!


படம்:http://www.flickr.com/photos/kaaviyam/5359828191/in/set-72157625196293310/ எந்தப் புகைப்படத்தை ஃப்ளிக்கரில் பார்த்ததும் கவிதை தோன்றியதோ அதையே உரியவர் அனுமதியுடன் பதிந்துள்ளேன். நன்றி காவியம்:)!

கல்கியின் அதே பக்கத்தில் நமது நண்பர் உழவனின் கவிதையும். வாழ்த்துக்கள் உழவன்:)!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin