புதன், 17 டிசம்பர், 2008

விடையற்ற வியப்புக் குறிகள்!!!






'ன் வயிற்றில்
உதித்த நான்-
உத்தமனாய் வாழ்ந்து காட்டி-
உன் பெயரை
ஊர் உலகம்-
உயர்வாகப் போற்றிடச்
செய்வேனம்மா !'
**

மரித்திட்ட
தன் தாய்க்கு-
தந்திட்ட வாக்குதனை-
வேதமெனக் கொண்டு
வேலை தேடி-
வீதி வழி நடந்தானே!
**

நெஞ்செல்லாம்
இலட்சியக் கனவோடு-
அஞ்சாது செய்திட்ட
சத்தியத்தின் நினைவோடு-
சென்றவனின்
கண்ணிலே பட்டவன்தான்-
பிக்பாக்கெட் தொழிலினிலே
பிரபலக்கேடி!**

விழிமுன்னே மற்றவரின்
பர்சு ஒன்று-
பரிதாபமாய்
பறி போவதைப்
பார்த்திட்ட அவனுமே
'எவன் சொத்தோ போகுதடா
எனக்கென்ன கவலையடா?'
என்று-
இன்று இப்
புனிதப்
பூமியிலே-
போற்றிக் காக்கப்படும்
பொன்னான கொள்கை
புரியாதவனாய்-
பாய்ந்தோடிக்
கேடியினைப் பிடித்தானே!
**

கேடியெனும்
பட்டமெல்லாம் சும்மாவா ?
கில்லாடியான அவன்-
கிட்டத்தில் ஓடிவந்த
காவலரின்
கரத்தினையே-
தேடிப் பற்றி
சம்திங் தந்தானே!
**

நீதி
காக்க வேண்டிய
காவலரோ-
கரன்சி செய்த வேலையினால்-
கமுக்கமாகச் சிரித்தபடி-
கயவனவன் முதுகினிலே-
'செல்'லுமாறு
செல்லமாகத்
தட்டி விட்டு-
அப்பாவியான இவன்
கழுத்தினிலே கை போட்டு-
'அட
நடடா, இது புது கேசு '
என்றாரே!
**** **** ****

லர வேண்டிய பருவத்திலே
மடிய நேரும்
மொட்டுக்கள்!!!**

கலர் கலராய்
கண்ட கனவுகள்
கருகிப் போகும்
சோகங்கள்!!!
**

பழி ஓரிடம்
பாவம் ஓரிடம்-
பரிதாபப் பட
யாருமின்றி
பரிதவிக்கும்
பலியாடுகள்!!!
**

'அவரவர் விதி'யென்றும்
'அவன் தலைச் சுழி'யென்றும்-
ஆராய அவகாசமின்றி
அவசர கதியில்
அள்ளித் தெளிக்கப் படும்
ஆழமற்ற
அனுதாபங்கள்!!!
**

ஆங்கோர் பக்கம்-
சி.பி.ஐ
ஆதாரங்களுடன்
கைதாகும்
கனவான்கள்-
சில மணியில்-
சிரித்தபடி
சிறை விட்டு
விடுதலையாகி
வெளியேறும்
விநோதங்கள்!!!
**

அவருக்காக
குரல் கொடுத்துக்
கவலைப் படக்
கணக்கற்றக்
கூட்டங்கள்!!!
**

இப்படி
ஏராளமாய்
இருக்கின்றன-
விடையற்ற
வியப்புக் குறிகள்!!!
**** **** ****



[படம்: இணையத்திலிருந்து]




'இறைவனிடம் ஒரு கேள்வி' என்ற தலைப்பில் 1984-ல் திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரிலும்; கடைசி சில பத்திகளின் சேர்க்கையுடன் June 23, 2005 திண்ணை இணைய இதழிலும்; 4/11/2008 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும் 6 மே 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளியாகிய கவிதை.



வியாழன், 11 டிசம்பர், 2008

நிழல்கள்-டிசம்பர் PiT போட்டிக்கு

'பங்களிப்பே சிறப்பு’ என வந்து விட்டேன் நானும் நிழல்களோடு.
முதல் நான்கு படங்கள் மட்டும் நிழல்களுக்காகவே முயற்சித்தவை.
மற்றவை முன்னரே எடுத்தவை; என் ஆசைக்கு வைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு.
'முதலிரண்டில் ஒன்றை'ப் போட்டிக்குத் தர எண்ணியுள்ளேன்.



வரிவரியாய் கவிபாடும் நிழல்கள் கீழே!
தெரிகிறது நிஜத்தின் பிம்பம் மேலே!









வளைந்து குழைந்த திரைச்சீலை மேலே
நெளிந்தே விழுகின்றன நேர்க்கம்பியின் நிழல்கள்



பார்த்துப் பழகு
நேர்ப் பாதையிலே செல்லுபவனாய்
நீ இருந்தாலும்
பார்ப்பவருக்கு இந்நிழல் போலவே
கேள்விக்குறியாவாய்- சென்று நீ
சேர்கின்ற கூட்டத்தார்
வசதிக்கும் வாய்ப்புக்கும்
வளைந்து நெளிந்த
குறுக்குப் பாதையைத்
தேர்ந்தெடுப்பவரானால்!







குருவியின் குடை







வெள்ளிக் கம்பிகளாய் அருவி வீழ்கின்ற நீரிலே
விரிந்து மலர்ந்திருக்கிறது உச்சி மரத்து நிழலே!







அடிப்பது அனல் வெயிலானாலும் இந்தக்
கண்ணனின் வெண்ணெய் உருகாது
பிடிக்கின்ற பந்து போலத் தெரிந்தாலும்
பள்ளம் நோக்கிப் பாயாது!








குன்றிலே கோபுரம் ஒளி வெள்ளத்தில்!
குளிர்வாய் பாறை அடிவாரத்தில்!







மறுகோடியில் கொளுத்தும் கோடையில் கடல்
மாறாக இப்பக்கம் மரங்களின் அருளாலே குளுகுளுவென்று நிழல்
ஊடுருவி நலம் விசாரிக்கிறது ஆங்காங்கே வெயில்








நிழல் நிரம்பிய சோலையும்
வளைந்து திரும்பும் சாலையும்!








உள்ளம் கொள்ளை போகுதே



கடலும் வானும் அலையும் மணலும்
மரமும் நிழலும் புல்லும் செடியும்..
உள்ளம் துள்ளுது நெஞ்சை அள்ளுது !





‘பார்த்துப் பழகு’
கவிதை நான் எடுத்த படத்துடனேயே ‘நேர்க் கம்பியின் நிழல்கள்’ ஆக ஏப்ரல் 2009 'மனிதம்' மின்னிதழில்:

வியாழன், 4 டிசம்பர், 2008

முடிவில் ஒரு விடிவு

அன்றாட வாழ்வில் இன்றைக்கும் ஏதாவது ஓரிடத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவலங்களைக் கண்டு அயர்ந்து போகும் நாம் எங்கேனும் நல்ல மாற்றங்கள் நிகழுகையில் போற்றுதல் முறைதானே!

அப்படிப் போற்றி 2003-ல் திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. எதைப் போற்றி...?

அப்போதைய சிவகாசி மாவட்ட ஆட்சியாளர் அங்கு குழந்தைத் தொழிலாள முறை முற்றிலுமாகக் களையப் பட்டதாக மகிழ்வுடன் வெளியிட்டிருந்த பேட்டியை Times of India-வில் படித்து அறிந்த போது போற்றிப் பாடியது.







முடிவும்







விடிவும்





































சிவகாசி சீமையிலிருந்து
சிறப்பான செய்தி ஒன்று!
சித்திரங்கள் தீட்ட வேண்டிய
சின்னஞ்சிறு கைகள்
சிதறி வெடிக்கும் மருந்துகளைச்
செய்து வந்த அவலங்கள்
முடிவுக்கு வந்ததென்று
முத்தாய்ப்பாய் செய்தியொன்று-அம்
முத்துக்களின் முன்னேற்றத்துக்கு
முகவுரையாய் வந்ததின்று!

மத்தாப்பாய் மலர வேண்டிய
மழலை மொட்டுக்கள்
மத்தாப்புத் தயாரிப்பில்
மகிழ்ச்சிகளைத் தொலைத்த
மாசு இன்று பல
நல்ல மனங்களால்
தூசு தட்டப் பட்டு
துலங்குவது குதூகலமே.

கற்றிருந்தால்
கல்பனா சாவ்லா போல்
விண்வெளியை ஆராயும்
வித்தகர்களாய்
விளைந்திருக்கக் கூடிய
வித்துகள்!

கல்வி என்பதே
கானல் கனவாகிப் போனதால்
வான்வெளியில்
வாண வேடிக்கைக்கு வெடிகள்
வார்ப்பதிலே-
வாய்ப்புக்களையும்
வாழ்வின்
வசந்தங்களையும்-தாரை
வார்த்து விட்டக்
குருத்துகள்!

இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!

பக்குவம் இல்லாத
பழைய தலைமுறை
பணத்துக்காகப்
பச்சிளம் பாலகரைப்
பட்டாசுச் சாலையிலே
பயன் படுத்தியது
பாவம் என்று-
படித்துத் தேர்ந்த
புதிய தலைமுறை
புரிந்து கொண்டது
புண்ணியமே!

எழுபது ஆண்டுகளாய்
இத் தொழிலிலே
ஈட்டிய பணம் யாவும்
எத்தனை
எளிய பிஞ்சுகளின்
எதிர்காலத்தை
ஏய்த்துப் பிரட்டியது என்பதை
எண்ணி உணர்ந்த-இன்றைய
எஜமானர் வர்க்கம்
ஏற்றமிகு சமுதாயம் கண்டிட
ஏக மனதாய் பாடுபடுவது
போற்றுதலுக்குரியதே!

அரசு அரட்டியதால் மட்டுமின்றி
மனசும் அரற்றியதால் வந்தது
இந்த மாற்றமே!
உலகம் தூற்றியதால் மட்டுமின்றி
உறங்கிக் கிடந்த மனசாட்சியும்
விழித்துக் கொண்டதாலும்
விளைந்தது
இந்த ஏற்றமே!

ஆட்சியாளரே தருகிறார்
சாட்சி இன்று:
தன்னிறைவு நோக்கித்
தடம் புரளாமல்
பயணிக்கிறது சிவகாசி-
பருவத்தே பயின்றிடப்
பாடசாலைகளும்
கருத்துடன் கற்றிடக்
கல்லூரிகளும்
தொழிலிலே தேர்ந்திடப்
பயிற்சி கூடங்களுமாய்ப்
பல்கிப் பெருகி...
பெருமை சேர்கிறது.

வேலை வாய்ப்புக்கும்
குறைவேது?
விதவிதமாய்
வெடிவெடித்து
வேடிக்கையாய்
கேளிக்கைகளைக்
கொண்டாடிட-
உலகமே இருக்கிறது
இவர் ஒருவரையே
எதிர் பார்த்து...
வாழ்வும் வளமாகிறது.

இப்போது
உழைப்புக்கு ஊதியங்களும்
லாபமாய் லகரங்களும்
உறுத்தல்கள் ஏதுமின்றி
உண்மையின் பாதையிலே!
வெறுப்புக்கு இடம் கொடாமல்
வெற்றியினை நோக்கி
வேக நடை போடுவது-இரண்டு
வர்க்கங்களுமே!

*** *** *** *** ***




ஆனால் இந்நிலை இன்றும் அங்கு தொடர்கிறதா..?

அன்று ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்று எனைத் தூண்டிய அதே TOI, தீபாவளி அன்று (அக்டோபர் 27,2008 நாளிதழில்) இந்த வருடம் பட்டாசு அதிகமாக விற்பனை ஆகாததற்கான காரணங்களைப் பட்டியல் இட்டிருந்தது. அதில் ஒன்றாக.. இன்னும் குழந்தைகள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுத்தப் படுவதாக வந்த தகவல்களால் மக்களில் சிலர் இந்த முறை பட்டாசைப் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

அன்று போற்றி எழுதியது பொய்யாகிப் போகாது மறுபடி மெய்பட வேண்டும். அங்கு மட்டுமின்றி எங்கும் குழந்தைகளை வேலை வாங்கும் அவலம் முற்றிலுமாய் முற்றுப் பெற வேண்டும்.
குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. கடந்த மாதம் பெங்களூரில் மட்டும் இரண்டு சம்பவங்கள் காவலர் மற்றும் மீடியாவின் கவனத்துக்கு வந்து குழந்தைகள் மீட்கப் பட்டனர்.

இதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்.



படங்கள்: இணையத்திலிருந்து

August 28, 2003 திண்ணை இணைய இதழில் "சிவகாசி சித்திரங்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. 2 ஜூன் 2009 யூத் விகடன் இணைய தளத்திலும்:


புதன், 26 நவம்பர், 2008

26/11 என்னதான் வேண்டும் உமக்கு?

மும்பைச் சம்பவம் நாட்டின் வரலாற்று ஏட்டில் இன்னொரு கரும்புள்ளி. விடுதிக்குள் இருந்தபடி வீரம் காட்டிக் கொண்டிருப்பவரை ஒவ்வொரு சாமான்யனும் கேட்க விளைவதே இங்கே வரிகளாய்:



என்னதான் வேண்டும் உமக்கு?
எதுவரை செல்லுவதாய் கணக்கு?
எப்போது நிறுத்துவதாய் உத்தேசம்?
எவ்வளவுதான் தாங்கும் இத்தேசம்?

மனிதம் மறப்பதே புனிதம் என
போதிக்கிறது உமக்குத் தீவிரவாதம்
உங்கள் உயிரைப் பணயம் வைத்து
பணம் பார்க்கிறது பயங்கரவாதம்.

மூளைச் சலவையில் முகவரி தொலைத்து
மூளை மயங்கி முகங்காட்டுவது வீரமென்று
கையில் தரப்பட்ட 'ஏகே'க்களை ஏந்தி
கண்ணில் பட்டவரை சுடுவதுதானா உம்வெற்றி?

உங்கள் உயிரையும் போக்கிக் கொண்டு
உதவாக்கரைகளுக்கு உதவிக் கொண்டு
பாவமூட்டைகளை சுமந்து கொண்டு
பாவிகளாய் வாழ்ந்து காண்பதுதான் என்ன?

இன்றைய வெறி இத்தோடு அடங்கட்டுமே
இறப்பவர் எண்ணிக்கை இத்தோடு நிற்கட்டுமே
கணக்கின்றி போகும் காயமடைந்தோர் கதறல்கள்
கனக்கச் செய்யவில்லையா உங்கள் கல்லிதயங்களை?

பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்
பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன என்றால்
வீரமரணம் அடைகின்ற காவலரின் தியாகங்கள்
கரங்கூப்பிக் கலங்கித் தொழ வைக்கின்றன!

விட்டுவிடுங்கள் போதுமிந்தக் கோரவிளையாட்டு
குடும்பங்கள் உண்டவருக்கு புரியாதா உங்களுக்கு?
பத்துதிங்கள் உமைஒருத்தி சுமந்துதானே பெற்றாள்
மற்றவரும் அவ்வாறே வந்திந்தமண்ணிலே உதித்தார்!

***




தீவிரவாதிகள் கையில் மாட்டிக் கொண்டிருப்போர் எந்த உயிர்சேதமுமின்றி வெளிவர கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.

வெள்ளி, 21 நவம்பர், 2008

இரத்த பாசம் (பாகம் 2)

நாட்டின் வருங்காலம் யார் கையிலோ அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகளை உருளச் செய்பவர் யார்?

மாணவர்கள் திசை திரும்பித் தீயவழி நடக்கக் காரணமாயிருப்பவர் யார்?

இவரைப் போன்றவர்கள் திருந்துவார்களா..

பெற்றவர்களின் கனவுகளை அறிவார்களா..

வளர்த்தவர்களின் வலியினை உணர்வார்களா..

கேள்விகள் உந்தித் தள்ள, 1990-ல் எழுதிய இக்கதையைப் பதிவிட்டுள்ளேன்.

பாகம் 1
இங்கே.

பாகம் 2 தொடர்கிறது..





ங்க கெளம்பிட்டே” ஆச்சரியமாய் கேட்டான் மாரி.

“ஆளெடுக்க டவுணுலருந்து லாரி வந்திருக்காம். போயிட்டு பொழுது சாய வந்துருவேன். கணிசமா கூலி கெடைக்கும். நா சொன்னதைச் சொல்லி வாத்தியார் வீட்ல மறக்காம கேட்டு வாருமய்யா”

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவசரமாய் லாரியைப் பிடிக்க ஓடும் மனைவியைப் பார்த்து மனம் கலங்கிப் போயிற்று மாரிக்கு. உடம்புக்கு முடியாமல் கிடந்தவள் மகனுக்கு ஒரு தேவை என்று வந்ததும் சோர்வை உதறி விட்டு, கணவனின் சுமையைக் குறைக்க ஓடுகிறாள். ‘போகாதே’ என்று சொல்ல அவன் மனம் துடிக்கத்தான் செய்தது. ஆனால் அப்போதைய தேவை அப்படிச் சொல்ல விடாமல் அவனை வாளாவிருக்க வைத்து விட்டது. அவனை நினைத்து அவனுக்கே அவமானமாய் இருந்தது.

’சே, என்ன சென்மம் நான். ராசாத்தி போல அவள வச்சுக் காப்பாத்தத்தான் வக்கில்லாத போச்சு. ஒடம்புக்கு ஆகாத நெலமெல ஓடுதவளத் தடுக்கக் கூடத் தோணாது என் நாக்குக்குமில்ல கேடு வந்து போச்சு’ என்று நொந்து கொண்டான்.

அப்படி அவளை வாத்தியார் வீட்டில் அடகு வைத்துப் பணம் வாங்கி மகனுக்கு அனுப்ப வேண்டுமா என்று யோசித்தான். ‘இப்பதைக்கு அனுப்ப ஏலாதுன்னு ரெண்டு வரி எழுதிப் போட்டுட்டா என்ன’ என்றும் தோன்றியது. மகனின் முகம் மனதுக்குள் வந்து போக அந்த எண்ணம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது.

இருவருமே தாங்கள் மகன் மேல் கொண்டிருக்கும் பாசம் எத்துணை ஆழமானது, வலிமையானது என்பதை உணர்ந்திருந்தார்கள். அவனுக்காக எந்தக் கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருந்தார்கள் என்றாலும் கூட அதற்காக மாரி படும் கஷ்டத்தைச் சகிக்க முடியாமல் தாயி பரிதவிக்க, அவளைப் பார்த்து இவன் பரிதாபப் பட என இயலாமையில்தான் அவர்கள் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

ரவு பதினொன்றரை மணி போல மாரி விறகுக் கடை வேலையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் கண்ணுச்சாமி டீக்கடையை அடைத்துக் கொண்டிருந்தார்.

“ஏலே மாரி, நில்லுப்பா. நானும் வாரேன்” என்று பேச்சுத் துணைக்கு அவனை நிறுத்தி வைத்தவர் கடையைப் பூட்டிய பின் சைக்கிளை உருட்டித் தள்ளியவாறு மாரியுடன் நடக்கத் தொடங்கினார்.

“காலம்பற அவசரத்தில ஏதோ கத்திப் புட்டேன், வுடு அத. என்ன... மறுபடி காசு கேட்டுருக்கானா உம் மவன்?”

யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்தவன் போல மடமடவென்று அவரிடம் சொல்லத் தொடங்கினான் மாரி “ஆமா அண்ணாச்சி, பீசு கட்ட அவசரமா முன்னூறு வேணுமாம். எம் பொஞ்சாதி நாளேலர்ந்து வாத்தியாரு வூட்டுக்கு வேல பாக்கப் போறா. அவுகளும் மொதல்ல சந்தோசமா வரட்டும்னாக. அப்பால முன் பணம் கேட்டனா? மூஞ்சில அறஞ்சாக்ல முடியாதுன்னுட்டாக”

“ம்.. அப்புறம்” என்றார் கண்ணுச்சாமி சுவாரஸ்யமாக.

“அப்பால என்னா! காலுல வுழாத கொறதான். படிப்புக்காகத்தான கேக்குறேன். மனசு வைக்கப் படதா? ‘வைத்தியம் புள்ள சீக்கு வாத்தியாம் புள்ள மக்கு’ன்னு சும்மாவா சொன்னாக பெரியவுக. அவுக மவன் பத்து தாண்டாத ஊரச் சுத்திட்டு வாரான். சரி, ஊராம் புள்ளயாச்சும் படிச்சு பெரிசா வரட்டுமேங்கிற பெரிய மனசு இல்லயே!”

‘அதுச...ரி’ மனதுக்குள் கேலியாக நினைத்துக் கொண்ட கண்ணுச்சாமி, “கடைசில குடுத்தாரா இல்லையா?” என்று கேட்டார்.

“குடுத்தாரு குடுத்தாரு. ஆனப் பசிக்குச் சோளப் பொறிய போட்டாக்குல அம்பது ரூவா குடுத்தாரு. பொறவு வெறகுக் கடை ஐயாட்ட கெஞ்சிக் கூத்தாடி அவரு ஏச்சு பேச்செல்லாம் கேட்டுக்கிட்டு அம்பது ரூவா வாங்குனேன். தாயி வேற இன்னைக்கு கூலிக்குப் போச்சு. அதுல என்னத்த பெரிசா வரும்.. பத்தோ பதினஞ்சோ!

“ஹூம்.. ஒம்பாடும் சிரமந்தான்”

‘அட அண்ணாச்சி இரக்கப் படுதாகளே, இவுககிட்ட கொஞ்சம் கேட்டுப் பாப்போமா?” என்ற நப்பாசையின் கூடவே ‘இவருட்ட புதுசா என்னத்த வாங்கிக் கட்ட வேண்டி வருமோ’ என்ற ஐயமும் எழ குழப்பத்துடன் நடந்தான் மாரி.

அந்தக் குறுகிய சந்தின் வழி நெடுக மாடுகள் குறுக்கும் நெடுக்குமாய் படுத்துக் கவலையின்றி அசை போட்டுக் கொண்டிருக்க, இவர்கள் வளைந்து நெளிந்தும் தாண்டிக் குதித்தும் நடக்க வேண்டியதாயிற்று.

“குறுக்கு வழியேன்னு வந்தா இதே ரோதனயாப் போச்சு” முணுமுணுத்தபடி சில இடங்களில் கண்ணுச்சாமி சைக்கிளைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டார்.

குடிசைகள் இருளில் மூழ்கிக் கிடக்க, வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்தவர்கள் ‘சளப்’ எனக் கன்னம் கை காலோடு சேர்த்துக் கொசுவை அடித்துக் கொண்டும் விரட்டிக் கொண்டும் இருந்தார்கள்.

“எப்படித்தான் இந்த மாதிரி எடத்தில காலந்தள்ளுறீங்களோப்பா” என்றார் கண்ணுச்சாமி.

மாரிக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. இன்னும் ஒரு பர்லாங் நடந்தால் குடிசை வந்து விடும். அதற்குள் அவரிடம் கேட்டு விட வேண்டும் என்ற தீவிர சிந்தனையுடன் நடந்தான்.

ன்னலே திடீர்னு வாயடச்சுப் போயிட்டே?”

பேச்சுத் துணைக்குக் கூட்டி வந்தவன் பேசாமல் வருகிறானே என்று பொழுது போகாத கண்ணுச்சாமி மறுபடி அவன் வாயைக் கிளறினார்.

“ரோசனதான். மிச்சப் பணத்த எப்படிப் பொரட்டன்னுட்டு”

“நா இப்படிச் சொல்லுதனேன்னு சங்கடப் படாத மாரி. அப்படி உம் மவனுக்கு என்னதான் செலவுன்னு எனக்குப் புரியல. அடுத்த ஊருல இருக்கானே எம் மச்சினன். பணக் கஷ்டப் படுதவருதான். உம் மவனப் போல ஒபகாரச் சம்பளத்திலதான் படிக்கான் அவரு புள்ள. ஒங்க பொறப்பு இல்லயே அப்புறம் எப்படின்னு பாக்காத. மாநில அளவுல ராங்கு வாங்குனதல கெடச்சுதப்பா, நாங்கொண்ணும் பொழப்புக்காக ஒத்தத்தொரப் போல பொறப்பு சர்டிபிகேட்ட மாத்திக் குடுக்கிற மனுஷா இல்லப்பா” வீம்பாகச் சொன்னவர் “எம் மருமவன் தன் செலவு போக மிச்சம் பண்ணி வீட்டுக்கும் கூட அனுப்புதானாம் அப்பப்ப” என்று முடித்தார்.

கண்ணுச்சாமியின் கடைசி வாக்கியம், பரிதாபமான தன் நிலையைக் கேட்டு மனமிரங்கி இவராவது உதவ முன் வர மாட்டாரா என்ற மாரியின் கடைசி எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போட “அப்ப என் மவன் பொய் சொல்லுதாங்குறீக..” என்றான் மாரி காட்டமாக.

“எனக்கென்னவோ அவன் ஒங்களை நல்லா ஏமாத்துறான்னுதான் படுது. வர்ற பணத்துல அழகா பரிச்சைக்குப் பணங்கட்டி சாப்பாடு பொஸ்த செலவு எல்லாஞ் சமாளிக்க முடியும். இவன் என்ன ஷோக்கு பண்ணதுக்கு ஒங்களப் புழிஞ்செடுக்கானோ..”

“என்னாத்துக்கு கேட்டாதான் என்ன? செலவுக்குத் திண்டாடத மன நெறவா இருந்தாத்தானே படிப்புல கவனம் போகும், அவன் நல்லா படிச்சு வரணும்ங்கிறதுக்காகத்தானே நாங்களும் இந்தப் பாடு படுதோம்.”

“சரி இப்பவே இப்படி ஒங்கள ஏய்க்கிறானே. நாளைக்கி படிச்சு முடிச்சு பெரிய ஆளானப்புறம் ஒங்களத் திரும்பிப் பாப்பான்னா நினைக்கறே. நீங்க நாயாப் பேயாப் படுத பாடெல்லாம் வெழலுக்கு இறச்சத் தண்ணியாத்தான் போப்போவுது போ.”

“அடப் போங்க அண்ணாச்சி. அவன் பின்னால எங்களக் காப்பாத்தணும்னா இம்புட்டும் செய்யறோம்? இத்தன வருசமும் அவனா எங்களுக்குச் சோறு போட்டான்? வாழலயா நாங்க? உசிரு போகந்தன்னியும் எங்க வயித்துப்பாட்டை எப்படியோ கழிச்சிக்க எங்களுக்குத் தெரியும். அவனாவது எங்களைப் போல கஸ்டப் படாத பின்னால நல்ல படியா வாழ்ந்தா சரிதான்” படபடவென்று பேசியவன் தன் குடிசை நெருங்கி விடவே “நா வாரேன்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்து விட்டான்.

“தானாவும் புரிஞ்சுக்காது. சொன்னாலும் வெளங்கிக்காது. ஹூம் இதெல்லாம் தேறாத ஜென்மங்க” சைக்கிளில் ஏறி பெடலை மிதித்த கண்ணுச்சாமியின் முணுமுணுப்பு காதில் விழ, ஆத்திரமாக வந்தாலும் ஏதும் பேச இயலாதவனாய் குடிசைக்குள் நுழைந்தான் மாரி.

ண்ணுச்சாமி சொன்ன வாக்கில் யோசித்துப் பார்க்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. முதலில் சற்று குழப்பமாக உணர்ந்தாலும் ‘எம் மவன எனக்குத் தெரியாதாக்கும்’ என்கிற எண்ணம் மேலிட சமாதானம் அடைந்தான்.

இருட்டுக்கு கண் பழக, மூலையில் தாயி சுருண்டு கிடப்பது தெரிந்தது.

”இப்படித்தான் வந்து வுழுவேன்னு தெரியும். ஏதாச்சும் தின்னியா இல்லயா? என் வயித்துப் பாடாவது போற வர்ற வூட்டுல அவுக குடுக்கற மிச்ச மிஞ்சாடியில கழிஞ்சுடுது. ஒனக்கு அதுவுமில்ல” என்றபடி வேட்டியில் செருகியிருந்த தீப்பட்டியை எடுத்து தீக்குச்சி ஒன்றைக் கிழித்தான். அதைக் கையில் பிடித்தபடி சிம்னியைத் தேடி எடுத்து பற்ற வைத்தான்.

தாயிடடிருந்து ஒரு சலனமும் இல்லாது போக அவள் அருகில் அமர்ந்து “ஏ புள்ள தாயீ, உன்னத்தானே..” என்று உலுக்கவும், பதறி விழித்த தாயி மலங்க மலங்க முழித்தாள்.

“என்னா முழிக்கறே? தின்னியா நீ”

“கா..காசு கெடச்சுதா?”

“அட நா கேட்டதுக்கு பதிலச் சொல்லு. ஏதாச்சும் ஆக்கி வயித்துக்குப் போட்டியா?”

“ஆங்...ஆமா அதான் ஆசுபத்திரில குடுத்தாகளே”

“என்ன ஆசுபத்திரியா? என்ன ஒளருதே?” குழப்பமாகக் கேட்டவன் “என்ன செய்யுது ஒனக்கு? கிணத்துக்குள்ளார இருந்து பேசறாப்ல பேசறியே?”

அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

தாயி அதை சட்டை செய்யாமல் “எவ்ளோ கெடச்சுது” என்றாள் மறுபடியும்.

“வுட மாட்டியே, வாத்தியாரு வீட்ல அம்பது. அப்பால வெறகுக் கடயில ஒரு அம்பது தேறுச்சு” என்றான் அயர்வுடன்.

“இந்தாய்யா இதையுஞ் சேத்து நாள தபாலுக்கு மொதல்ல அனுப்பீருக. மிச்சத்தை எப்படியாச்சும் பொரட்டி சீக்கிரமா அனுப்புதோம்னு ஆர விட்டாவது ரெண்டு வரி எழுதிப் போட்ருக” மெலிந்த குரலில் பேசியவள் தட்டுத் தடுமாறி சேலை முடிப்பில் இருந்த கசங்கிய பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கையில் திணித்தாள்.

“ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு..இம்புட்டுப் பணம் ஏது புள்ள” கூவினான் மாரி.

”சொன்ன பிற்பாடு என்னய ஏசிப்பிடாதீக. உச்சி நேரந்தன்னியும் வயல்ல நின்னுட்டு அரை நா கூலி மட்டும் வாங்குனனா..! அந்தானிக்கு அப்படியே டவுணு ஆசுபத்திரி போய் ரத்தங் குடுத்தேன். அவுகதான் சாப்பாடுங் குடுத்து இப்படிக் கணிசமா கையில தந்தாக. எல்லாம் அந்தப் புண்ணியவதி முக்கு வீட்டு கருப்பாயி சொன்ன ரோசனதான்” திணறித் திணறி பேசியவள் மீண்டும் சுருண்டு விழுந்தாள்.

“ரோசன கொடுத்தவளப் பாம்பு புடுங்க. புண்ணியவதியாம்ல வருது நல்லா வாயில. பாவிமவளே ஒடம்பு கெடக்க கெடயில நெசமாலும் ரத்தத்தை வித்தா பணங் கொண்டாந்தே”
நெஞ்சு பதற அவளை வாரி எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.

“தாயீ இப்பத்தான் அந்த டீக்கட பயட்ட வீம்பாப் பேசிட்டு வந்தேன். ஆனா எனக்காக இல்லாங்காட்டியும் ஒனக்காகவாவது ஆண்டவங் கருணயில நம்ம மவன் படிச்சு ஊரு கண்ணு படுதாக்ல ஒசந்து நம்மளயும் கூட்டி வச்சுக்கோணும். அவனாச்சும் ஒன்ன ராணி கணக்கா வச்சுக் காப்பாத்தோணும்”

ஆற்ற மாட்டாமல் குலுங்கிக் குலுங்கி அழுதான் மாரி.

(முற்றும்)

[1990 ஜனவரி மாத ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகையில் வெளியானது][இங்கு வலையேற்றிய பின் டிசம்பர் 12, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]

புதன், 19 நவம்பர், 2008

இரத்த பாசம் (பாகம் 1)

சமீபத்திய சட்டக் கல்லூரி சம்பவம் நமது சமுதாய அமைப்பின் சீர்கேடு மட்டுமல்ல நாட்டின் சாபக்கேடும் கூட.

பாசத்தைக் கொட்டி வளர்த்து..
இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து..
கனவுகளைக் கண்களில் ஏந்தி..
நினைப்பை நெஞ்சில் தாங்கித்தான்..
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறார்கள். இது எந்தத் தட்டு மக்களுக்கும் பொருந்தும். இந்தப் புரிதல் இருந்தால் பொறுப்புணர்வும் கூடவே வரும் மாணவருக்கு. ஆனால் இவர்களை திசை திருப்பும் தீயசக்தியாக அல்லவா இருக்கிறது சமுதாயம்?

தங்கள் சுயநலத்துக்காக மாணவர்களை சாதி மதம் கட்சியின் பெயரில் பகடைக் காய்களாய் உருட்டிக் கொண்டிருக்கும் சமுதாயத்துக்கு என்று வரும் புத்தி என்கிற வேதனை எழ இக் கதையைப் பதிவிடும் எண்ணம் தோன்றியது.

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட கதையாகையால் அந்தக் காலக் கட்டத்தை மனதில் கொண்டு வாசித்தால் ‘லாஜிக்’ இடிக்காது. அப்படியே இடித்தாலும் இக்கதையில் காணப்படும் உணர்வுகள் இன்றளவும் உயிர்ப்பானவை. உண்மையானவை.

இனி கதை...



"லே மாரி!” என்ற குரலுடன் தொடர்ச்சியான சைக்கிள் மணியோசையும் கேட்க ‘யாரோ கூப்புடுதாக்ல இருக்கு. என்னான்னு பாருமய்யா” தாயி கணவனை உலுக்கினாள். தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வெளியில் வந்தான் மாரி.

“அடடே! டீக்கடை அண்ணாச்சிங்களா? வாங்க வாங்க”

“ஆமா, விடிஞ்சும் விடியாம மூணு மணிக்கெல்லாம் ஒங்கூட்டுல விருந்து சாப்பிடத்தான் கெளம்பி வந்திருக்கனாக்கும்” சலித்தபடி கையிலிருந்த உள்நாட்டு உறையை நீட்டினார் கண்ணுச்சாமி.

என்னமோ மகனையே பார்ப்பது போல மாரி முகம் மலர அதை வாங்கிக் கொண்டான்.

“நெதமும் எங்க வூட்டைத் தாண்டித்தான் போற வார. நின்னு ‘கடிதாசி வந்திருக்கா’ன்னு கேட்க என்ன கொள்ளை பிடிச்சிருக்கோ” என்று சைக்கிளைத் திருப்பினவரை வழி மறிப்பது போல நின்று கொண்டு “அண்ணாச்சி நல்லாருப்பீக. அப்படியே இதக் கொஞ்சம் வாசிச்சுக் காட்டீர மாட்டீங்களா” கெஞ்சினான் மாரி.

“அடங்கொப்புறானே, எடத்தக் குடுத்தா மடத்த புடுங்கறான் பாரு! காலங்காத்தால ஒன்னோட பெரிய ரோதனயால்ல போச்சு. கடையத் திறக்க நேரமாவுது மாரி. இந்தா.. இந்நேரம் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பஸ்ஸைப் புடிக்கிற சனங்கல்லாம் வர ஆரம்பிச்சிருப்பாங்க. பொழப்பக் கெடுக்காதப்பா. வேற யாருட்டயாச்சும் கேட்டுக்க”

தன்னை விலக்கி விட்டு சைக்கிளில் விரைந்தவரை ஒரு கணம் வெறித்துப் பார்த்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தான் மாரி.

ன்னாத்துக்கு இந்தாக் கோவமா ஏசுதாரு?” மெலிந்த குரலில் வினவிய தாயி மெதுவாக எழுந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.

”ஆமா, அட்ரசு இல்லாத குடிசேல இருந்துக்கிட்டு அடுத்தவன் வூட்டு மூலமா கடிதாசி வாங்குறோம்ல! கொண்டு தாரவன் நாலு கொடை குடுத்தா அதையும் வாங்கிக் கட்டிக்கத்தான் வேணும்”

“என்ன எம்புள்ள கதிருட்டேருந்து கடிதாசியா” பூரித்துப் போய் கேட்டாள்.

“பாரேன், நேத்து ராவையிலேருந்து பேசக் கூட திராணியில்லன்னு மொடங்கிக் கிடந்தவ, புள்ள கடிதாசி போட்டிருக்கான்னதும் என்னமா கூவுற” கிண்டலாகச் சிரித்தபடி அவள் அருகே அமர்ந்து கடித உறையைப் பிரிக்கப் போனான்.

“இந்தாய்யா, போனவாட்டி போல எக்குத் தப்பா கிழிச்சு வைக்கப் போறீக.பேசாத ஆருட்ட படிக்கத் தரப் போறீகளோ அவுகளே பிரிக்கட்டும்னு வுடும்” தாயி பதறி எச்சரித்தாள்.

”அதுஞ்சரிதான், இந்தக் கோட்டிக்கார பயமவனும் ஏந்தான் நீல ஒறையில எழுதறானோ. கேட்டாக்க கார்டு போட்டா கவுரவக் கொறச்சலுங்கறான். என்னமோ போ..!” என்றபடி கடிதத்தை வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டு எழுந்தான்.

”சரி தாயீ நா கெளம்புதேன். அப்புறம் மாடுங்க கத்த ஆரம்பிச்சிரும். இன்னிக்கு சோறு ஒண்ணும் ஆக்காதே. பழசு கெடக்குல்லா. படுத்து நல்லா தூங்கி முழி”

துண்டை தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு கிளம்பியவனை “ஏன்யா காசு ஏதும் கேட்டு எழுதியிருக்க மாட்டானுல்ல” தாயியின் பரிதவிப்பான கேள்வி தடுத்து நிறுத்தியது.

“போ புள்ள. போன மாசந்தான ஐநூறு ரூவா அனுப்பிச்சோம். திரும்பயும் கேட்டு எழுத அத்தன வெவரங் கெட்டவனா? ‘அனுப்பிச்சது வந்து சேந்தது ரொம்ப சந்தோசம்’னு எழுதியிருப்பான்”

“என்னமோய்யா. விக்கக் கூட வூட்ல பொட்டுச் சாமான் கெடயாது. இருந்த ஒண்ணு ரெண்டு அண்டா குண்டானையும் வித்து அனுப்பியாச்சு”.

“அட, மனசப் போட்டு ஒழப்பிக்காத. நா வருசையா எல்லா வூட்டுலேயும் தொழுவெல்லாஞ் சுத்தம் பண்ணிட்டு, மாடுங்களக் குளுப்பாட்ட வாய்க்காலுக்குப் பத்திட்டுப் போறதுக்கு முன்னால, ஒரு ஆறு மணி வாக்கில இங்கன வந்து விசயத்த சொல்லிப்புட்டுப் போறன். அதுக்குள்ள ஆரும் அம்புடாமயா போயிருவாக வாசிச்சு சொல்ல”

மனைவியின் அருகில் வந்து அவள் தோளைத் தட்டி “நா கதவ சாத்திட்டுப் போறன். கொஞ்ச நேரம் நிம்மதியா தலயச் சாயி” ஆதுரத்துடன் சொல்லி விட்டு வெளியேறினான் மாரி.

வன் மூடிச் சென்ற கதவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் தாயி.

‘கடவுளே இது காசு கேட்டு வந்த கடிதாசியா இருக்கப் படாதே. இந்த மனசனும் நாயாத்தான் அலக்கழியுதாரு. ஊரச் சுத்தி கடனு. எல்லா வூட்டுலயும் முன் பணம் வாங்கிட்டாரு. இனிம ஆருட்டன்னு போயி கேக்க முடியும்’

கணவனை நினைத்து இப்படிக் கலங்கிய உள்ளம் மறுகணமே மகனை நினைத்து மருகத் தொடங்கியது.

‘அவனுந்தான் என்ன செய்வான்? பெரிய எஞ்சனீரு படிப்பு படிக்கான். ஆவாதா பின்ன செலவு? ஆத்தா அப்பன்னு இந்த ரெண்டு உசுரும் கிடக்குந்தன்னியும் இங்கனதான கேக்கும் புள்ள’

எண்ண ஓட்டங்களுக்கிடையே உறங்கிப் போனவள் “ஏ தாயக்கா” என்ற ராக்காயியின் கூப்பாட்டைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.

”எம்மா நேரமா கூப்புடுதேன். கதவயே தெறக்கல. என்னமோ ஏதோன்னு உள்ளார வந்தேன். ஒடம்புக்கு என்னா?”

“ஒரே அசதி, கையுங் காலும் கழண்டுரும் போலல்லா இருக்கு”

“ப்போ, சரி அப்ப நா கெளம்புதேன். நயினார் கொளத்துக்கு அந்தாண்ட வயல்ல அறுப்புக்கு ஆளு கூப்புட்டு லாரி இட்டாந்திருக்காக. இன்னும் அரை மணில கெளம்பிரும். எல்லாரும் போறம். ஆஞ்சு ஓஞ்சு கெடக்கிற நீயி அங்கன வந்த என்னாத்த கிழிக்கப் போற? பேசாத வூட்லதான் வுழுந்து கெட”

’உனக்கென்ன கொடுத்து வச்ச மவராசி. ஒன்னப் போல தெம்பா இருந்தாக்க எம் புருசனை இந்தப் பாடு பட வுடுவனா என்ன’ முணுமுணுத்தபடி மீண்டும் படுக்கப் போனவள் மாரி வருவதைப் பார்த்ததும் ஒற்றைக் கையை ஊன்றி அமர்ந்தாள். அவன் முகத்தைப் பார்த்தே அவளுக்குப் புரிந்து போயிற்று.

“எவ்ளோ வேணுமாம்?”

“முன்னூறு, அதும் அவசரமா வேணுமாம். பரிச்சைக்குக் கட்டணுமாம்”

கவலை தோய்ந்த முகத்துடன் அவள் அருகில் அமர்ந்தான் மாரி.

பாவம் அவனும்தான் என்ன செய்வான். ஓய்வா ஒழிச்சலா? நாள் முழுக்க உழைக்கத்தான் செய்கிறான். ஏழெட்டு வீடுகளில் மாடு கவனிக்கிறான். அதிகாலையில் கிளம்பிப் போனால் தொழுவை சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி தண்ணீர் வைத்து, பால் கறப்பவர் கறக்கின்ற வேளையில் சாணங்களை வரட்டி தட்டி காயப் போட்டு, பின் மேய்ச்சலுக்கு மாடுகளைப் பற்றிச் சென்றால் பொழுது சாயத்தான் திரும்ப முடிகிறது. அதன் பிறகும் கூட முடிகிற போது விறகுக் கடையில் மரம் உடைக்கிற வேலை என எது கிடைத்தாலும் விட்டு வைப்பதில்லை.

தன்னால் ஒரு வேலையில் நிரந்தரமாக இருந்து கணவனுக்கு உதவ முடியவில்லையே என்று தாயிக்குத் தாங்க முடியாத ஆற்றாமையாக இருந்தது. அவள் உடல் நிலை அப்படி. பத்து நாள் வயல் கூலிக்குப் போனால் பத்து நாள் விழுந்து கிடப்பாள். மாரி வேலை பார்க்கும் வீடுகளிலிருந்து நெல் அவிக்க, அரிசி புடைக்க என்று அடிக்கடி அழைப்பு வரும். கணவன் அவர்களிடம் வாங்கியிருக்கும் முன் பணத்தை மனதில் கொண்டு உடம்புக்கு முடியா விட்டாலும் போய் செய்து விட்டு வருவாள்.

போனமுறை வாத்தியார் வீட்டம்மா கூடக் கேட்டாள் ”ஏண்டி தாயீ, எங்க வீட்ல நெரந்தரமா வீட்டு வேலைக்கு இரேன்னு நானும் நாலு மாசமா கேக்கறேன். இந்தா அந்தான்னு மழுப்பிட்டே போறியே. பட்டணம் போல் இப்ப இங்கியும்லா வேலைக்கு ஆளு கிடைக்கறது குதிரக் கொம்பாப் போச்சு. எல்லாம் வீட்டோட இருந்து பீடி சுத்தறதுல சுகங் கண்டுட்டுதுகள்”

இப்படி அந்த அம்மாள் அலுத்துக் கொண்ட போது ”ஏம்மா நெரந்தரமா வாரேன்னு ஒத்துக்கிட்டா சொன்ன வாக்கு பொரளாம நெதம் வரணும். இந்தப் பாவி மவளுக்குதான் பாதி நாள் படுக்கையில போகுதே. வேணா என்னால முடியறப்பல்லாம் வந்து ஒங்களுக்கு ஒத்தாசையா இருக்கேன்” என்றாள் சமாதானமாக.

“ஆமா நீ எப்போ வருவே என்னிக்கு வர மாட்டேன்னு தெரியாத பாத்திரந் துணியெல்லாம் நாறப் போடவா? பாக்க நல்லா திராட்டிக்கமாதான் தெரியுத. முடியல முடியலன்னு ஒனக்கு சும்ம ஒரு மனப் பிராந்திதான்” சுளுவாகச் சொல்லி விட்டாள் அந்த அம்மாள். ஆனாலும் தாயிக்கு அவள் மேல் ஆத்திரம் வரவில்லை. மாதச் சம்பளம் வரக் கூடிய வேலைக்குப் போகும் வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று தன்னைத்தான் நொந்து கொண்டாள்.

’ஹூம் இன்னிய பாட்ட மொதல்ல பாப்போம்’ துரத்திய நினைவுகளைத் துடைத்து உதறினாள்.

ருட்டியாச்சும் கேட்டுப் பாத்தீகளா?” வரப் போகும் பதிலைத் தெரிந்தே கேட்டாள்.

“ஆருட்டன்னு போய் நிக்க? கேட்டோம்னாக்க ‘ஒபகாரச் சம்பளத்தில படிக்கிற பயலுக்கு அப்படி என்ன அடங்காத செலவு’ன்னு மூஞ்சில அடிச்சாப்ல கேக்கறானுக. நம்ம பொறப்ப வச்சு ஏதோ இந்த மட்டும் படிக்க எடம் கிடைச்சுதேன்னு நாம சந்தோசப் பட்டா அதுவே பாதி பயலுவளுக்கு வயித்தெரிச்சலா இருக்கு”

தாயி பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாய் இருந்தாள் சில கணம். பிறகு சுவரைப் பிடித்தபடி எழுந்தவள் நிற்க முடியாமல் தடுமாறினாள். கண்ணை மூடி நின்று ஒருவாறாகத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மெல்ல நடந்து பானையில் இருந்த ஒரு குத்துப் பழஞ்சோற்றையும் பிழிந்தெடுத்து தட்டில் போட்டு சிறிது உப்பும் போட்டு மாரியிடம் நீட்டினாள்.

“ஒனக்கு”

“ஒழைக்கிற மனுசன்.. நீரு சாப்பிடுமய்யா”

”நல்லாருக்கே கத. உக்காரு புள்ள. ரெண்டு பேருமா திம்போம். ஹூம் வயத்துப் பாடு கழியறதே மலைப்பா இருக்கேல என்னன்னுதான் இவன படிக்க வய்க்கப் போறமோ”

“மர வச்சவன் தண்ணீ ஊத்தாதயா போயிருவான். எல்லாக் கஸ்டமும் அவன் படிச்சு முடிக்கந்தன்னிதானே. அதுவர நம்மால முடிஞ்சத ராசாக்கு செய்வோம். வாத்தியார் வூட்டம்மாட்ட சொல்லிப் புடுமய்யா நாளேலருந்து அவுககிட்ட வூட்டு வேலைக்கு சேந்திடறேன்னு. இதச் சொல்லியே முன் பணமும் கேட்டுப் பாரும்”

கனவோடு கணக்குப் போட்டபடி ஒரு கை சோற்றையும் வாயில் போட்டு சாப்பிட்டதாகப் பெயர் பண்ணி விட்டு எழுந்தாள் தாயி. கையையும் முகத்தையும் அலம்பிக் கொண்டு புதிதாக உயிர் வந்தவள் போலத் தெம்புடன் வெளியில் கிளம்ப ஆயத்தமானாள்.

“எங்க கெளம்பிட்டே” ஆச்சரியமாய் கேட்டான் மாரி.

(தொடரும்..)


பாகம்: 2
  • 1990 ஜனவரி மாத ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகையில் வெளியானது]

  • இங்கு வலையேற்றிய பின் டிசம்பர் 12, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.

செவ்வாய், 11 நவம்பர், 2008

ஈழம்:வேள்வித் தீயில் புகையும் கேள்விகள்

தூயாவின் அழைப்புக்காக...
அவர் தொடுத்த கேள்விகளுக்குப் பதிலாக...
இக்கவிதை தன்னுள் பல கேள்விகளை அடக்கிக் கொண்டு...






எம் மொழி பேசுவதால்
எமக்கு மட்டுமா சகோதரர்
உம் மண்ணில் பிறந்ததால்
உமக்கும் அன்றோ சகோதரர்?
***

மொழியால் நமக்குள் பந்தம்
வாழ்ந்து வரும் வழியால்
அவரும் ஒருவகையில்
உமக்கு சொந்தமன்றோ?
***

ஒரே பூமியின் புத்திரர்
ஒரே நாட்டினில் வாசம்
ஒரே காற்றினை சுவாசம்
ஒருவொருக்கொருவர் ஏன்
வைத்திடலாகாது நேசம்?

"உடன் பிறந்தவர்களைப் போலே-இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்"
பரந்த மனதுடன் பாரதி சொன்னார்
இன்னும் கேட்டார் அன்றே அவர்
"இடம் பெரிதுண்டு வையகத்தில்-இதில்
ஏனுக்குச் சண்டைகள் செய்வீர்?"
இதயமும் பெரிதாக இருந்து விட்டால்
உதயமாகிடாதோ உடன் ஒரு தீர்வு?
***

முப்பது ஆண்டுக்கும் மேலாக
முடிவின்றி போகின்ற யுத்தத்தில்
அப்பாவி மக்கள் ஆயிரமாயிரம் பேர்
கொட்டிய குருதிக்கும் விட்டிட்ட உயிருக்கும்
ஏது பதிலுண்டு உம்மிடம்?

ஆறறிவைத் தந்தான் ஆண்டவன் நமக்கு
அடுத்தவர் உயிரைப் பறிப்பதற்கல்ல
கொடிய காட்டு விலங்குகளா மக்கள்
கண்டபடி சுட்டுத் தள்ள?

பெளத்தம் வாழும் மண்ணில்
இரத்தம் ஆறாகப் பெருகுவது
எத்தனை அபத்தம் என
உணர்வதெப்போ?
மனிதர்கள் மனிதர்களாய்
இருப்பதெப்போ?

மற்ற எல்லாம் எல்லாம்
புறந்தள்ளி விட்டு
மனிதாபிமானம் மட்டும் மட்டும்
மனதினில் இருத்திக் கொண்டு
பிரச்சனையைத் தீர்த்திட
பிரமாணம் எடுப்பதெப்போ?
***

'பேச்சினில் வந்திடுமா தீர்வு எம்
மூச்சினை விட்டால்தான் வாழ்வு'
எனும் அன்பரே
ஆழ்மன வடுக்கள் ஆறாதுதான்
வீழ்ந்திட்ட மலர்களும் வாராதுதான்
சேதங்களால் மனம் மருகுகிறதுதான்
வேதனை எமக்கும் புரிகிறதுதான்
'இன்று யாம் மடிந்தாலும்
நாளை எம் சந்ததிக்காக'- இதுவே
தாரக மந்திரமாய் இருக்கிறதுதான்.

நேற்று மடிந்தோரும்
இன்று மாள்வோருமாய்
நாழிகையோடு நாட்களும்
மாதங்களோடு வருடங்களும்
கரைந்து கொண்டேயிருக்க
'நாளை'யைக் காண
நாட்டினிலே யாரிருப்பார்?
***

சற்றுத் தள்ளி இருங்கள் என்றரசு
வேண்டிட நினைப்பது சரியல்ல
சுற்றியிருக்கும் நாடுகள் யாவற்றிற்கும்
உண்டிங்கு கடமை உண்டிங்கு உரிமை
தயங்காமல் தட்டிக் கேட்டிடத்தான்
சூறாவளியாய் வந்த சுனாமியின் போது
மற்றவர் உதவியைப் பெற்றிட்ட நீவிர்
ஏனென்று கேட்போர் எவரையுமின்று
எளிதாய் ஒதுக்கிட இயலாது உணர்வீர்
இயற்கையின் சீற்றம் ஒன்றுதான்
மனிதர்களை இணைத்திட வல்லதா?
முயற்சியால் மாற்றம் கொண்டு வந்து
இனியாவது அமைதி கண்டிடல் நல்லதா?
***

யுத்தம் நிறுத்திடுங்கள் சத்தம் ஓயட்டுமே
அமைதி காணுங்கள் அன்பு நிலவட்டுமே
தீர்வு காணுங்கள் அறம் தழைக்கட்டுமே
மனம் வையுங்கள் பார் புகழட்டுமே!
*** *** ***





[வேள்வித் தீயில் புகைகின்ற கேள்விகளில் எவருக்குரியது எது என அவரவர் அறிவார். உள்ளத்தின் ஆதங்கத்தை உள்ளபடி உரைத்துள்ளேன் அமைதிக்கான பிரார்த்தனையாய். மாற்றுக் கருத்துடையோர் மன்னிப்பாராக...]

திங்கள், 3 நவம்பர், 2008

'ஊக்கமது கைவிடேல்' [அய்யனுக்கு அர்ப்பணம்-25ஆம் பதிவு]

எனது இருபத்தைந்தாவது பதிவு. இலக்கு எதுவுமின்றி தொடங்கிய பயணம் இனிதாகவே போகிறது. சரியாக இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. இந்த அரை ஆண்டில் அவ்வப்போது அறிவுரை ஆலோசனைகள் வழங்கி வழிநடத்திய மூத்த பதிவர்களுக்கும், பாராட்டிப் பக்க பலமாக இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும், தொடர்ந்து உற்சாகம் ஊக்கம் அளித்து வரும் சகோதர சகோதரிகள் யாவருக்கும் என் நன்றிகள்.




புதுகைத் தென்றல் பேரன்ட்ஸ் கிளப் வலைப்பூவில் 'தந்தையின் கடமை' என்று, குறளைக் கொண்டு கதை வடிக்கும் தொடரைத் தொடங்கி வைத்தார்.

அப்பதிவின் முடிவில் அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்த வரிகள்:
"இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்."


அப்படி தான் சொன்ன கருத்துக்களாலே மகானாகி விட்ட மாமனிதர் திருவள்ளுவர்.


தென்றல் தொடங்கி வைத்த குறள் ஜோதி ஓட்டத்தில் இயலும் போது இணைவதாக நான் கொடுத்த வாக்கு, அய்யனுக்கு அர்ப்பணமாக இதோ..




ஊக்கமது கைவிடேல்

நரேனுக்கு அந்த மின்மடலை வாசித்ததும் வியர்த்து விறுவிறுத்து விட்டது. இதை எப்படித் தன் மேலதிகாரியிடம் சொல்லப் போகிறோம் என்கிற பதட்டத்தில உடல் கூட லேசாக நடுங்கியது.

அவன் அந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமே ஆகிறது. ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவத்தில் அதைத் தொடங்கிய ரவிசங்கர் இன்று பலரும் போற்றும் அளவுக்கு அதை பெரிய இடத்துக்கு கொண்டு வந்துள்ளதைக் கொண்டாடாத பத்திரிகைகள் இல்லையெனலாம்.

அப்படிப் பட்ட நிறுவனத்தில் அதுவும் எம்டியிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் பதவியில் தான் இருப்பதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதமே. பொறுப்புக்களைச் சரிவரச் செய்ய வேண்டுமென்கிற அக்கறையோடு ஒரு பதட்டமும் எப்போதும் தன்னோடு ஒட்டிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை நரேனுக்கு.

அவனது மேற்பார்வையில் இருந்த ப்ராஜக்ட் முடிவடையத் தாமதமானதில் அதிருப்தி கொண்ட அந்த வெளிநாட்டுக் கஸ்டமர் அடுத்து கொடுக்கவிருந்த சுமார் ஒரு கோடிக்கான ப்ராஜக்ட் ஆர்டரை ரத்து செய்வதாக மெயிலின் வாசகங்கள் கூறின. ஒருவாறாக சுதாகரித்துக் கொண்டு அடுத்த அறையிலிருந்த ரவிசங்கருக்கு அதை ஃபார்வர்ட் செய்தான். பின் வியர்வையை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தான்.

"வாங்க நரேன் வாங்க. இப்பதான் உங்க மெயிலைப் பார்த்தேன்."

கூலாகப் பேசும் ரவிசங்கரை பிரமிப்புடன் பார்த்தான்.

"என்ன பாக்குறீங்க. எப்படி இந்த மாதிரி டென்ஷனில்லாம இருக்கிறேன்னா" லேசாகச் சிரித்த ரவிசங்கர், "முதல்ல உட்காருங்க" என்றார்.

"ஆடிப் போயிட்டா மாதிரி தெரியுது. தண்ணியைக் குடிங்க முதல்ல"

நொந்து வந்த தன்னை ரிலாக்ஸ் செய்ய உதவும் மேலதிகாரி இன்னும் இன்னும் உயர்வாகத் தெரிந்தார்.

"பாருங்க நரேன். இதெல்லாம் நாம சமாளிக்க வேண்டிய சவால்கள். ஒவ்வொரு முனையிலிருந்தும் கத்தி போல பிரச்சனைகள் பாய்ந்து வந்த படிதான் இருக்கும் கேடயத்தை தயாராப் பிடிச்சிருந்தும் கூட. சரி, இந்த ப்ராஜக்ட் முடிய இன்னும் எத்தனை நாள் ஆகும்? தாமதத்துக்கான காரணங்களை சரியா அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி எடுத்துச் சொன்னீர்களா இல்லையா?"

"சொன்னேன் ரவி." முதலாளியானாலும் அதிகாரியானாலும் யாவரும் யாவரையும் பெயர் சொல்லி அழைப்பதே அங்கு வழக்கம். அந்தக் அலுவலகத்தில் நரேனைக் கவர்ந்த பல நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரியான காரணங்களை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதை நரேன் சொல்லச் சொல்ல முகத்தில் எந்த மாறுதலுமின்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டார் ரவிசங்கர்.

"இது போன்ற நல்ல கஸ்டமர்களை நாம் இழக்க நேரிட்டால் அது பெரிய நட்டம்தான். முடிந்த வரை ப்ராஜக்டைத் துரிதப் படுத்தி தற்போது வாய்தா வாங்கியிருக்கும் தேதிக்கு முன்னதாகவாவது அனுப்பப் பாருங்கள். அடுத்த ஆர்டரைப் பற்றி இப்போது ஏதும் பேச வேண்டாம். அவர்களது கோபம் தணியட்டும்.அப்புறமாக முயற்சிக்கலாம். ஏன் நீங்களே நேரில் கூட போய் பேசிக்கலாம்.""

"அதெப்படி ரவி,அதற்குள் நம்ம போட்டிக் கம்பெனிகளில் யாராவது முந்திக் கொண்டால்.. ஒரு கோடி... பரவாயில்லையா?"

"பொருள் வரும் போகும், பரவாயில்லை.நாம் ஊக்கத்துடன் உழைத்து மறுபடி ஈட்டிட இயலும். ஆனால் பெயர்.." எனச் சொல்லும் போதே தொலைபேசி ஒலிக்க அதை ஒரு கையால் எடுத்து "ஹலோ" என்றவர் அவரது மேசையில் அவரைப் பார்க்க இருந்த புகைப்படச் சட்டம் ஒன்றை அவனைப் பார்க்கத் திருப்பி வைத்தார். ஆள்காட்டி விரலால் தட்டி கண்களாலேயே பேசினார் அதைப் பார்க்குமாறு. அதில் கைப்பட எழுதப் பட்ட சில குறள்கள். அவர் விரல் சுட்டிய இடத்தில்:
"உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடமை
நில்லாது நீங்கி விடும்."


தொலைபேசி உரையாடல் நீண்டு செல்ல அதைத் தவிர்க்க இயலாத ரவிசங்கர் 'நீங்கள் சென்று உங்கள் வேலையைத் தொடரலாம்' என்பது போலத் தலையசைத்து விடை கொடுக்க நரேன் மறக்காமல் குறள் இருந்த சட்டத்தை அவரை நோக்கித் திருப்பி வைத்தான். திரும்பி நடக்கையில் கூடவே அவனுக்கு நினைவுக்கு வந்தது:
"வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு."

*** *** *** *** ***




புதுகைத் தென்றலைத் தொடர்ந்து கடந்த மாதம் குறள் கதை படைத்தவர்கள்: ஜீவ்ஸ், முத்துலெட்சுமி கயல்விழி,செல்விஷங்கர், சதங்கா,சுடர்மணி,தமிழ் பிரியன் மற்றும் சிலர். [இவ்விடத்தே 'சிலர்' என்பது 'பலர்'ஆக வேண்டுமென்பது என் அவா.]

தொடர் பதிவுக்கென அன்றி சில மாதங்களுக்கு முன்னர் கவிநயா எழுதிய 'இடுக்கண் வருங்கால்...', 'இன்னா செய்தாரை...' ஆகிய கதைகளையும் இங்கே இணைத்துக் கொள்கிறேன்.

திருக்குறள்..என்றும் அணையா ஜோதி. பிரகாசமாக ஒளிர்ந்து அதைப் பின்பற்றுவோர் வாழ்வையும் அதன் மூலம் அவரைச் சுற்றி இருப்போர் உலகையும் ஜோதி மயமாக்குகிறது. இந்த ஜோதியில் ஐக்கியமாக விரும்புவோர் இதோ இங்கிருந்து கையிலேந்தித் தொடரலாம்.



திங்கள், 20 அக்டோபர், 2008

'புகை'ச்சல்




விரலிடுக்கில்
அது
உங்கள் விருப்பம்.
அறவே
அதை
நீங்கள் விட்டிடத்தான்
அரசு வைக்கிறதோ
மறைமுகமாய்
ஒரு விண்ணப்பம்?

'பொது இடத்தில்
புகைக்கத் தடை'
அது
கிளப்பிய புகைச்சலுக்கு
இருக்கிறதா பாருங்கள்
இங்கே விடை:
சட்டம் கொடுக்கிறது
சில நிமிடக்
கட்டாய ஓய்வு.
அதனால்
தடை படுவதோ
உங்கள்
ஆயுளின் தேய்வு.


தனிமனித உரிமை
தவிடு பொடி ஆவதாய்
படபடக்கும் முன்னே-
வருமா
ஒரு சிந்தனை?
உடனிருக்கும் மாந்தருக்கும்
உண்டன்றோ
சுத்தமான காற்றை
சுவாசிக்கும் உரிமை.


வீட்டினிலும் கூடத்தான்-
நேசிப்பவரின் சுவாசிப்பில்
மாசினைக் கலந்திடல்
நியாயமா என
யோசித்தால் அருமை!
***

விரல் இடுக்கில்
அது என்றும்
உங்கள் விருப்பம்.
அதை விடுவதா
எனும் சிந்தனையே
பெரும் கலக்கம்.

ஊதும் புகையோடு
உள்ளிருக்கும்
மன இறுக்கம்
வெளியேறி விண்ணோடு
மறைவதாய்
மனம் மயங்கும்.
ஆனால்
உண்மைகள் யாவும்
அறிவுக்குத் தெரியும்.
***

விரல் இடுக்கில்
அது என்றென்றும்
உங்கள் விருப்பம்.
ஆயினும்
அறிவீர் நீரே:
இதயநோயின் உதயத்துக்கு
வாய்ப்பென்றும்-
புற்றுநோய்க்குப் பூத்தூவி
வரவேற்பென்றும்-
பக்கவாதத்தைப் பக்கமே
வரவிடக் கூடுமென்றும்-
சிறுநீரகப் பாதிப்பெனும்
சிக்கலிலே சீக்கிரமே
சிக்க வைத்திடலாமென்றும்.

இத்தனையும்
அறிந்த பின்னும்
எத்தனை நாள்
தொடர்வதென்பதும்
சத்தியமாய்
உங்கள் விருப்பம்.
ஆயினும்
சிந்திக்க நேரமின்றி
கவலைப்பட கணங்களின்றி
ஓடிக் கொண்டிருக்கும்
உங்களைத்
தேடி வந்திங்கு
நினைவூட்டவே
இந்தச் சட்டமென
நினைத்துப் பார்த்தால்
புகைச்சலோடு வந்த
எரிச்சலும் எரிந்திடும்.
***

வாழ்விலே
வேறென்னென்ன
உங்கள் விருப்பம்?
மாறாத புன்னகையை
உறவுகளுக்குத் தருவது?

மனதில்
உறுதி கொண்டால்
மறந்திட
இயலாதா புகையை?

இயலும்
உங்கள் நலத்தோடு
பின்னியது
உங்கள் நலம் நாடுவோர்
நலமும்
என்பதை
இதயத்தில்
இருத்திக் கொண்டால்!
*** *** ***
[படம்: இணையத்திலிருந்து]




இங்கு வலையேற்றிய பின் அக்டோபர் 23, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.

'உங்கள் விருப்பம்’ என்ற தலைப்பில் 21 மே 2009 யூத்ஃபுல் விகடன் இணையதளத்திலும்:












23 மே 2009 விகடன்.காம் முகப்பிலும்:

புதன், 15 அக்டோபர், 2008

விளம்பரத்துக்கு அணுகவும் [PiT-Oct போட்டிக்கு]

"விளம்பரம்"
அக்டோபர் மாத PiT போட்டிக்கு எனது பங்களிப்பு:
இரண்டாவது படமாகிய
'பாரம்பரியத்தின் கம்பீர வெற்றிக் களிப்பு '

***

கையெழுத்தாகும்
எந்த ஒப்பந்தத்துடனும்
இதன்
பந்தம் நிர்ப்பந்தம்.




பாரம்பரியம் தரும் கம்பீரம்



நூற்றறுபது ஆண்டுகளாக
க்ராஸுடனான வெற்றியை
எதுவும்
க்ராஸ் செய்ததாய் சரித்திரமில்லை!




முதுமை விரும்பும் பழமையும்
முதுமையும் ரசிக்கும் புதுமையுமாய்
என்றும்
திகழும் நெ:1 வார இதழ்!







திங்கள், 13 அக்டோபர், 2008

கரையைத் தேடி...




ழைப்பிதழை வெகுநேரம் வெறித்துப் பார்த்திருந்த முரளி ஒரு முடிவுக்கு வந்தான்.

'உயிரை விட்டு விட வேண்டும்', உறுதியே எடுத்து விட்டான்.

'வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டோம்', விரக்தியின் விளிம்பில் வெம்பினான்.

"உன்னை வளர்த்துப் படிக்க வைக்க எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன், அத்தனையும் வேஸ்ட். நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்? உங்கூடப் பிறந்தவங்களப் பாரு படிச்சமா, கையோடு வேலையில சேர்ந்தமான்னு. ச்சே" என்று சினிமாவிலும் சீரியல்களிலும் காட்டப்படும் அப்பாக்கள் கற்பனை அல்ல என நிரூபிக்கிற அப்பா.

"அதச் சொல்லுங்க. உங்களுக்கு மட்டுமா வச்சான் செலவு. அந்த கோர்ஸ் பண்றேன் இந்தக் கோர்ஸ் பண்றேன்னு எம் பணத்தையும் ஏப்பம் போட்டதுதான் மிச்சம். அய்யா எந்த கோச்சிலும் ஏறின பாடில்லை," என்று அடிக்கடி குத்திப் பேசும் அண்ணன்.

"வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்," சம்பாதிக்கும் திமிரில் தேளாகக் கொட்டுகின்ற தம்பி.

அவனோடு பேசுவதையே குறைத்து விட்ட நோயாளி அம்மா.

"வேலை வெட்டி இல்லாதவன்" என்று அலட்சியப் பார்வை பார்க்கும் சமுதாயம்.

எல்லோருக்கும் மேலாக உமா. அவளுக்கு அடுத்த வாரம் திருமணமாம். அதைத்தான் அவனால் தாங்கவே முடியவில்லை.

வனும் உமாவும் கம்ப்யூட்டர் கோச்சிங் வகுப்பொன்றில் அறிமுகமாகி நல்ல நண்பர்களும் ஆனார்கள். இவன் அந்த நட்பைக் காதலாக்கிப் பார்த்த போதும், அவள் அதை நட்பாகவே பாவிக்கத்தான் விரும்பினாள்.. ஆனால், இவனது தீவிரத்தைப் பார்த்து மனம் இளகி தந்தை முன் கொண்டு நிறுத்தினாள்.. அந்த நல்ல மனிதரோ ஒரு வேலையோடு வந்தால் உனக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கிறேன். இல்லையெனில் தான் பார்க்கும் வரனையே மணந்து கொள்வாள் என்று வாக்களித்து ஒரு வருட அவகாசமும் கொடுத்திருந்தார்..

உமா கொடுத்து வைத்தவள். கோச்சிங் முடிந்த கையுடனே வங்கியொன்றில் வேலையும் கிடைத்து விட்டிருந்தது. இவன் நேரம் எந்த வேலையும் சரியாக அமைய வில்லை. வருடமும் ஒன்றல்ல இரண்டே ஓடிட இப்போது வேறு வரன் பார்த்து விட்டார் அவளது தந்தை. இவன் வேலைக்கு முயற்சி செய்யாமலா இருந்தான்? எத்தனை இன்டர்வியூக்கள்? எத்தனை தோல்விகள்? அதுவும் கடந்த ஒரு வருடமாக உலகப் பொருளாதாரச் சரிவில் எங்கு பார்த்தாலும் ஆட்குறைப்பு வேறு. இந்தச் சமயத்தில் வேலையில் எந்த முன் அனுபவமும் இல்லாத தன்னை எவர் சீண்டுவர் என்கிற தன்னிரக்கம் வேறு தாறுமாறாகச் சுரந்தபடி இருக்கையில்தான் இப்படியொரு இடி. ஏற்கனவே அவமானத்தைச் சுமந்தபடி ஊசலாடிக் கொண்டிருந்த மனது இப்போது அடியோடு அறுந்து விட்டதைப் போல உணர்ந்தான்.

'வேலையில்லாத வெட்டிப் பயல் என வீட்டுக்கு வேண்டாதவனாக இருந்தேன். இப்போது விரும்பியவளுக்கும் வேண்டாதவனாகி விட்டேன். வேலையும் கிடைக்காமல் உமாவும் கிடைக்காமல் எதற்காக யாருக்காக நான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்துக்கே வர வைத்து விட்டது, வாசல் வராந்தாவில் அன்று வந்து விழுந்த உமாவின் திருமண அழைப்பிதழ்.

ம்மாவுக்கு டாக்டர் தந்திருந்த தூக்க மாத்திரைக்கான ப்ரிஸ்கிரிப்ஷனை எடுத்துக் கொண்டான். தூங்கிக் கொண்டிருந்த அம்மாவிடம் இப்போது பணம் கேட்டால் கூடவே ஆயிரம் கேள்விகள் கேட்பாள். ஏனென்றால் அப்பாவுக்கு சரியான காரணம் சொல்ல வேண்டுமாம்.. அவளுடன் வாக்குவாதம் செய்யும் மனநிலையில் அவன் இல்லை. அலமாரியின் மேல் கை விட்டு துழாவியதில் சாவி கிடைத்தது. சத்தம் வராமல் திறந்தான்.. அவன் அதிர்ஷ்டம் இழுப்பறை வாயிலேயே அதன் சாவி. இழுத்தான். ஏழுமலையான் படம் கொண்ட அதரப் பழைய சாக்லேட் பெட்டியில் அம்மா வைத்திருந்த நோட்டுத்தாள் சில்லறைகளை அப்படியே எடுத்து பையில் திணித்துக் கொண்டான்.

வீதியில் இறங்கிய போது ஒரே ஒரு முறை உமாவைக் கடைசியாக அவள் வேலை பார்க்கும் வங்கியில் சென்று சந்தித்து வாழ்த்தி விடும் எண்ணம் வந்தது. 'ஏன் அவள் நிம்மதியை சந்தோஷத்தைக் கெடுக்கப் பார்க்கிறாய்' மனசாட்சி இடித்தது.

'நாளை என் மரணம் தெரிய வருகையில் அந்தக் குற்ற உணர்விலே வாழ்நாளுக்கும் வருந்தட்டுமே. கடைசி கணத்திலும் வாழ்த்த வந்த என் பெருந்தன்மையை நினைத்து உருகட்டுமே'. இன்னோரு பக்கம் சாத்தான் வேதம் ஓதியது. சாத்தான் ஜெயிக்க பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான்.

பேருந்துக்காகக் காத்திருந்த போது, "என்ன சார், எங்கே கிளம்பிட்டீங்க?" என்ற குரல் கேட்டுத் திரும்பினான். அவனுக்கு 'சார்' என்று மரியாதை கொடுக்கும் ஒரே ஜீவன் காயத்ரியாகத்தான் இருக்க முடியும். பக்கத்து வீட்டுப் பெண். பிரபல மருத்துவமனையொன்றில் நர்ஸாக இருக்கிறாள்.

"சும்மாதான், இப்படியே இந்திரா நகர் வரை போகலாம்னு.."

"அதென்ன 'சும்மாதான்'? நம்ம ஜனங்கதான் சார், இப்படி எதற்கெடுத்தாலும் சொல்லப் படிச்சிருக்காங்க ஒரு வார்த்தை 'சும்மா'ன்னு" என்று சிரித்தவளின் முகம், அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சுமதியைப் பார்த்ததும் பிரகாசமானது.

"ஹாய் சுமதி! எப்ப வந்தே? நேற்று கூட உன் வீடு பூட்டியிருந்ததே? ரெண்டு நாளா உன் மொபைலுக்கு முயற்சித்தேன் எப்ப வருவேன்னு தெரிஞ்சுக்க. ஸ்விட்ச்ட் ஆஃப்னே வந்தது"

"இன்னிக்கு காலையில்தான் வந்தோம். ரோமிங்ல இருந்ததால் செல்லை அணைத்து வைத்திருந்தேன். என் ஆஃபிசுக்கு லீவு எக்ஸ்டெண்ட் பண்ணக் கேட்டு அங்கிருந்தே மெயில் கூட அனுப்பி விட்டிருந்தேன்."

"ட்ரிப் எப்படி? மாமா ஊரிலே ஒரு வாரமும் குஷாலாய் கழிஞ்சுதுன்னு சொல்லு!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே"

அவள் குரலில் இருந்த உற்சாகக் குறைவைக் கவனிக்கத் தவறவில்லை காயத்ரி.

"ஏன் என்ன விஷயம்?"

"அதையேன் கேட்கிறே? ஊரிலிருந்து கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்ன எங்க மாமா வீட்டுக்கு எதிர்த்த வீட்டுப் பையன் தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டான். அந்தப் பையனுக்கு பதினெட்டே வயசுதான் பாவம்! 'நீ வேற விதமாய் போயிருந்தா கூட விதின்னு மனசு ஏத்திருக்கும். ஆனா நாங்கெல்லாம் வேண்டாம்னு உதறிட்டுப் போயிட்டியே? எப்படிப்பா மனசு வந்தது'ன்னு அவன் குடும்பம் கதறின கதறல் இருக்கே, அப்பப்பா..! சரியாப் படிக்கலேன்னு அப்பா ஓவரா திட்டிட்டாரு போலிருக்கு. மனுஷன் குற்ற உணர்விலே ரொம்பவே உடைஞ்சு போயிட்டார்."

'நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்?' அருகில் நின்றிருந்த முரளிக்கு சமீப காலமாய் தன் அப்பா அடிக்கடி கூறும் வார்த்தைகள் மனதினுள் வந்து போக 'வேண்டியதுதான் அந்த அப்பனுக்கு' என்ற காட்டமாக நினைத்துக் கொண்டான்.

"எதற்குத் திட்டுகிறார்? அப்படியாவது பையனுக்கு ரோஷம் வந்து நல்லாப் படிக்க மாட்டானாங்கிற ஆசையில திட்டியிருப்பார். அவர் செஞ்சது சரின்னு சொல்ல வரலை. நீ சொல்ற மாதிரி ஓவர்தான். இருந்தாலும் எந்த அப்பாவும் தன் பையன் ஒழிஞ்சு போகட்டும்னு மனசார நினைக்கவே மாட்டார். போறவன் போயிட்டான். இருக்கிறவங்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் பார்த்தியா? அவன் மேல பாவப்படுறியே?"

சுரீரென்று வந்த காயத்ரியின் பதிலில் இவன் திகைக்க ஏற்பட்ட அதே வியப்பில் சுமதி கேட்டே விட்டாள்: "என்ன மனசுடி உனக்கு? அவன் முடிவு உன்னைப் பாதிக்கவேயில்லையா?"

உஷ்ணமேறியது காயத்திரியின் குரலில். "பாதிக்கிறதனாலேதான் சொல்றேன், அவன் மேலே பாவமாயில்லேன்னு. பரிதாபப் படுறேன் அவன் குடும்பத்த நினைச்சு. வருத்தப்படுறேன் அவன் முட்டாள் தனத்தையும் கோழைத் தனத்தையும் நினைச்சு. ஆனா என்னால ஏனோ அவன் மேல இரக்கப் பட முடியல. வழி தெரியாம தடுமாறுகிற நம்ம இளைய சமுதாயத்தை நினைச்சு கவலைப் படத்தான் தோணுது. ரிசல்ட் சமயத்திலே எத்தனை ஸ்டூடன்ட்ஸ் தற்கொலை பண்ணிக்கிறாங்க பாரு! எதிர்காலத்தை எதிர் கொள்ளும் துணிச்சல் இல்லாத இவங்க கையில்தான் நாட்டின் எதிர்காலம் இருக்குன்னு நாம நம்பிட்டிருக்கோம்."

"ஈஸி காயத்ரி. ரொம்ப உணர்ச்சிவசப்படுறியே?"

"இல்லப்பா! ரொம்ப நாளாகவே எம் மனசை அரிச்சிட்டிருக்கும் விஷயம் இது. 'காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை! இளம்பெண் தற்கொலை'ன்னு எத்தனை ந்யூஸ் படிக்கிறே? இவங்கெல்லாம் காதலும், கலியாணமும் மட்டுமேதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அது வாழ்க்கையிலே ஒரு அம்சம்தான். இட்ஸ் ஒன்லி எ பார்ட் ஆஃப் அவர் லைஃப். விரும்பினவங்களை அடையறது ஒண்ணுதான் வாழ்க்கையோட லட்சியம்னு தப்புக் கணக்குப் போட்டு வாழறாங்களே! வாழ்க்கையிலே இதையெல்லாம் தாண்டி உயர்ந்த லட்சியங்கள் எவ்வளவு இருக்கு? நாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்ற என்னவெல்லாம் சாதிக்கணும்னு ஆக்க பூர்வமா சிந்திக்க மறந்திட்டு இந்த இளைய சமுதாயம் 'காதல் காதல்'னும், 'காதல் இல்லையேல் சாதல்'னும் இருப்பதைப் பார்த்தால் மனசு பதறது. 'சாதல்'னா 'சாகிறது'ன்னு நினைச்சுட்டாங்க!"

காயத்ரி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன் கன்னத்தில் விழுந்த அறைகளாக முரளி உணர, அவளோ யாரையும் சட்டை பண்ணாமல் சீரியஸாகப் பேச்சைத் தொடந்தாள்.

"போன வாரம் கூட எங்க ஹாஸ்பிடல்லே போஸ்மார்ட்டத்துக்கு ஒரு கேஸ் வந்ததுப்பா. பி.காம் படிச்சவனாம். வேலை தேடித் தேடி அலுத்துப் போய் தற்கொலை பண்ணிக்கிட்டானாம். இப்படி வெள்ளைத் துணியப் போட்டு மூடற நிலைக்குப் போனாலும் பரவாயில்லை. வெள்ளைச் சட்டை வேலை... அதாம்பா வொயிட் காலர் ஜாப் கிடைச்சாதான் பார்க்கணும்ங்கிற போலி கவுரவத்திலே ஒரேடியாப் போய்ச் சேர்ந்துட்டான்."

"அவன் ஒரு விரக்தியில அப்படி பண்ணியிருக்கலாமில்லே?"

"அந்த விரக்தியையே வெற்றியா மாற்றிக் காட்டறது நம்ம கையிலேதானே இருக்கு. முதல்லே தன்னம்பிக்கை இருக்கணும். 'நாமா தேடிப் போறதுதான் வேலைன்னு இல்லே. தேர்ந்து எடுத்துக்கிறதுக்கும் எத்தனையோ வேலை இருக்கு. எங்க கான்டீன் சர்வர் ஒரு போஸ்ட்க்ராஜூவேட். அவ்வளவு ஏன்? உங்க பக்கத்து வீட்டில இருக்கிற வேணு டிகிரிய முடிச்சிட்டு முதல்ல ஆட்டோதான் ஓட்ட ஆரம்பிச்சார். இப்பப் பாரு நாலு ஆட்டோ ரெண்டு டாக்ஸிக்குச் சொந்தக்காரராயிட்டார். தேடுறது கிடைக்கிற வரைக்கும் போலி கவுரவம்ங்கிற சட்டையைக் கழட்டிட்டு ஏதோ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாமே?"

"இந்த மாதிரி கோணங்களிலே எல்லாம் நான் யோசிக்கவேயில்லை காயத்ரி," என்றாள் சுமதி வியப்பு தொனிக்கும் குரலில்.

'நானும்தான்' என்று நினைத்துக் கொண்டான் முரளி. அவனுக்குள் ஒரு புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது.

"சரி இருக்கட்டும். இவங்களை விடு. புகுந்த வீட்டிலயோ வேலைக்குப் போகிற இடத்திலயோ ஏற்படுகிற ஏதேதோ பிரச்னைகளால உயிரை மாய்ச்சுக்கிற பெண்கள்?" சுமதியிடமிருந்து அடுத்தக் கேள்வி புறப்பட்டது.

"ம்ம்ம்... இல்லப்பா சூழ்நிலைக் கைதிகளாயிட்டாலும் கூட அவங்களும் முட்டாள்கள் கோழைகள்னுதான் சொல்லத் தோணுது. உலகத்தை விட்டே வெளிநடப்பு செய்யத் துணிஞ்ச பிறகு புக்ககத்தை விட்டு வெளிநடப்பு செய்ய ஏன் தயங்கணும்? சொந்தக் காலிலே வாழ்ந்து காட்ட முடியும்ங்கிற தைரியம் எப்பவும் இருக்கணும். இப்பல்லாம் பொண்ணப் பெத்தவங்க சீர் செனத்திய விட பொண்ணுகளுக்கு முக்கியமா இந்தத் தைரியத்தை தந்து அனுப்புறதும் ஆம்பள பசங்களுக்கு குறைவில்லாம அவங்களையும் படிக்க வைக்கறதும் பாராட்டுக்குரியது. ஒரு பொண்ணு வீட்டிலயும் சரி வேலைக்குப் போகிற இடத்திலயும் சரி, கோழையா பயந்து சாகிறத விட வாழ்ந்து அவளுக்கு அநியாயம் பண்றவங்கள இந்த சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாமில்லையா?"

அதுவரை பேசாமலிருந்த முரளிம், "உங்களை ஒண்ணு கேட்கலாமா காயத்ரி" என்றான். 'தாராளமாக' என்பது போலப் பார்த்தாள் காயத்ரி.

"தற்கொலை பண்ணிக்கிறதை முட்டாள்தனம்னு சொல்றீங்க.. சரி. ஆனா கோழைத்தனம்னு எப்படிச் சொல்ல முடியும்? சாகிறதுக்கு ஒரு அசாத்திய தைரியம், துணிச்சல் இருக்கணுமில்லையா?"

காயத்ரியின் முகம் சிவந்தது.

"பிரச்னைகளை விட்டு ஓடறது துணிச்சலா? தைரியமா எதிர் கொண்டு நிக்கறது துணிச்சலா? தற்கொலை ஒரு ஈஸி எஸ்கேப்பிஸம். பிரச்னைகளுக்குத் தீர்வு தற்கொலைதான்னா எல்லோருமே சாக வேண்டியதுதான்! யாருக்குதான் பிரச்னையில்லை?"

"ஒத்துக்கறேன். பிரச்னை ஒரு பொதுச் சொத்துதான். ஆனா அவங்க துவண்டு போறது ஓட ஓட விரட்டும் தாங்க முடியாத தோல்விகளாலே..."

"முரளி சார், தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு..."

"இருங்க இருங்க. முதல் சில தோல்விகளிலே வேணுமானா அப்படி நினைக்கலாம் நம்பலாம். ஆனா வெற்றிப் படியே கண்ணுக்குத் தெரியாம அடுக்கடுக்கா தோல்விகளே தொடரும் போது..?"

"வெற்றி கிடைக்குமோ என்னமோ? அதனாலே இப்பவே செத்திடலாம்னு முடிவு பண்ணிடணுமா? முயற்சி வேணுங்க. நடுக்கடலிலே கப்பலே கவிழ்ந்திட்ட மாதிரி பெரிய கஷ்டம்னே வச்சுக்குவோம். கரையையே பார்க்க முடியலை. அப்போ 'நாம நீந்தி நீந்திக் களைச்சுப் போய் அப்படியும் கரையே தெரியாமப் போயிட்டா, கரை சேர முடியாமப் போயிட்டா என்ன பண்றது... அத்தனை கஷ்டப்பட்டு சாகிறதை விட முயற்சியே பண்ணாம இங்கேயே இப்பவே மூழ்கிச் செத்திடுவோம்'னு முடிவெடுப்பீங்களா? இல்ல, கிடைக்கிற ஏதோ ஒரு கட்டையை ஆதாரமா பிடிச்சுக்கிட்டு எதிர்நீச்சல் போட்டு, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கரையைத் தேடிப் போவீங்களா? எதுங்க விவேகம்?"

பொட்டில் அறைந்தது போலப் புறப்பட்ட அவளது கேள்வியிலே பொதிந்திருந்த பொருளைப் புரிந்து கொண்டான் முரளி. மனதில் இருந்த அத்தனை பாரங்களையும் காயத்ரி என்ற காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. கூடவே உமாவின் நினைவுகளையும். நன்றியுடன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

"நான் சொல்றதெல்லாம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?"

'இல்லை' என்பது போலத் தலையாட்டியவன், என்ன பதில் சொல்வதென யோசிக்கையிலேயே அவனுக்குச் சிரமம் வைக்காமல் பேருந்து வந்து நின்றது. ஏறுவதற்கு எல்லோரும் எத்தனிக்கையில், இவன் மட்டும் அம்மா பார்க்கும் முன் பணத்தைத் திரும்ப வைக்க வேண்டுமே என்ற அவசரத்துடன் திரும்பி நடக்கலானான்.

"இந்திரா நகர் போகணும்னீங்களே? இப்ப எங்க போறீங்க..?" அவசரத்துடன் கூவினாள் காயத்ரி.

"கரையைத் தேடி..." என்றபடி இவன் கை அசைக்க, அவன் சொன்னது புரியாத முக பாவத்துடனே காயத்ரி பஸ்ஸில் ஏறிக் கொள்ள, அது வேகமாக நகர்ந்தது.

*** *** ***

*மார்ச் 1988 "நண்பர் வட்டம்" இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை காலத்திற்கேற்ற சிறு மாற்றங்களுடன்.


*இங்கு வலையேற்றிய பின்
அக்டோபர் 16, 2008 திண்ணை இணைய இதழிலும் அக்டோபர் 17,2008 கீற்று இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]

*26 மார்ச் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும்:









செவ்வாய், 23 செப்டம்பர், 2008

ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..

அன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது.
இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை.

ஆனால்....
ஆனால் என்ன?

அன்றைக்கு ஒரு இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்த நையாண்டிக் கவிதையின் கடைசி நான்கு வரிகள் இன்றைக்கும் பொருந்தி வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லதானே!


[1980-ல் எழுதி '84-ல் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டிலிருந்த போது திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.]


இப்போது பாடலாமா:
"ஆசை ஆசை இப்பொழுது பேராசை... பெட்ரோல் போட்டு வண்டியில் போவதுதான்..."




[இங்கு வலையேற்றிய பின் செப்டம்பர் 25, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]





வியாழன், 11 செப்டம்பர், 2008

எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]

தொழுவோம்
நீயில்லாத இடமேயில்லை...

*** *** ***

துதிப்போம்

தேவனே என்னைப் பாருங்கள்...*** *** ***
தரிசிப்போம்

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்...

*** *** ***

தியானிப்போம்

புத்தம் சரணம் கச்சாமி...
*** *** ***
பொன்னான போதனைகளைத் தந்தவருக்கு பொன்னால் ஆன சிலை


ஞான ஒளி போதித்தது அஹிம்சாவழி
அதை
ஏனோ மறந்துசிலர் போவது வேறுவழி

*** *** ***

தியானத்தில்..

மெய்ப் பொருள் தேடி..
*** *** ***



குமரிக் கடலினிலே..

விவேகத்துக்கு வழி காட்டிய விவேகானந்தா வீற்றிருந்த பாறை
தியானத்தின் மேன்மையைச் சொல்லிட
எழுந்து நிற்கும் மணி மண்டபம்

*** *** ***

1330 ஈரடிகளைத் தந்திட்ட ஐயனுக்கு 133 அடி உயரத்தில் மரியாதை

கட்டுக் கோப்பான
வாழ்க்கைக்கு
வழி சொல்லும்
ஈரடிக் குறள்தனைப்
பேணி நாம்
போற்றி வர
அதைத் தந்திட்ட
ஐயனைப்
போற்றிப் பேணிடச்
சுற்றி வரக்
கட்டமைப்பு!
*** *** ***



சுற்றிப் படிக்கட்டு நீயும் வெற்றிக் கொடி கட்டு
குட்டையில் முடிந்து விடுவதில்லை வாழ்க்கை-
வெளி உலகில் எங்கெங்கும்
கொட்டிக் கிடக்கின்ற வாய்ப்புக்களைத் தேடி
எட்டியெட்டி முயற்சியுடன் ஏறிடவே
சுற்றி வரப் படிக்கட்டு- அதை
நன்கு புரிந்து நீயும்
வெற்றிக் கொடி கட்டு!

*** *** ***



ஓம்காரேஷ்வரா

ஓம் எனும் ஓங்கார ஒலி எழும்
இக்கோவிலின் சிறப்பென்ன அறிவீரா?
நாம் என்றும் ஒற்றுமையாய்
வாழ்ந்திட வேண்டுமென
வலியுறுத்தும் விதமாக-
இரு மதக் கட்டிடக் கலையும்
கலந்து இணைந்து எழுந்து நின்று-
இப்பதிவின் தலைப்புக்கும்
பொருத்தமாக... புறப்படுகிறது
போட்டிக்கு [கடைசி தின
நீட்டிப்பை அறிந்ததும்]!
*** *** ***


[தமிழ்மணம் அறிவித்த ‘விருதுகள் 2008’-ல் 'காட்சிப் படைப்புகள்’ பிரிவில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது இப்பதிவு.]

திங்கள், 1 செப்டம்பர், 2008

வேண்டுவது தளமா இல்லை சோர்வைத் தரும் களமா?

உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான். ஆனால் அதுவே போட்டி என்ற பெயரில் (போரில்)தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும் களமாக மாறிப் போக வேண்டுமா?

சமீபத்தில் கல்கத்தாவில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பெண் அதன் நடுவர்களின் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள இயலாது அங்கேயே கண்ணீர் சிந்தி வருத்தத்துடன் வீடு திரும்பினாள். அதன் பிறகு அவள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகப் பெற்றோரால் குற்றம் சாட்டப் பட்டு, பத்திரிகைகளில் பரபரப்பாக்கப் பட்டு பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆனார். பின்னர் ஏற்கனவே அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்ததால்தான் இத்தகைய மன உளைச்சல் ஏற்பட்டதென்றும் நிகழ்ச்சி நடுவர்கள் மேல் எந்தத் தவறுமில்லை எனவும் மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் நிரூபணமாகியதும் பலரும் அறிந்திருக்கக்கூடும். சேனல்,நிகழ்ச்சி, பெண்ணின் பெயர் எதுவும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.

பொதுவாகப் பார்த்தால் பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் தோல்விகளைக் குழந்தைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வண்ணம் ஒரு ஸ்போர்டிவ் ஸ்ப்ரிட், 'பங்களிப்பே சிறப்பு' எனும் உணர்வு இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் வெகு கவனமாக இருக்கிறார்கள். நமது காலத்தை விட இக்காலத்தில் அதைப் பல பள்ளிகள் ஒரு கொள்கையாகவே கடைப் பிடிக்கிறார்கள். ஐந்தாவது வகுப்பு வரை படிப்புக்கு கூட ரேங்கிங் சிஸ்டம் இருப்பதில்லை. அதுபோல ஒரு ஆண்டு விழா என்றால் குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து
அவரவருக்கு ஏற்ற வேடங்களாகக் கொடுத்து "அத்தனை" பேரையும் மேடையேற்றி அழகு பார்க்கிறார்கள். இந்த மாதிரியான தளங்களையும் தாண்டி தனித் திறமை வாய்ந்த குழந்தைகளின் பெற்றோர் மேலும் அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளை நாடுவதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால் யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது
என்று கேட்டுக் கொள்கிறேன்.

சில நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் தவறுகளை மென்மையாகச் சொல்கிறார்கள். சிலவற்றில் குழந்தைகள் சரிவரச் செய்யாமல் தடுமாறுகையில் அவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும் மாறி மாறிக் காட்டி டென்ஷனை அதிகரிப்பார்கள். இது இரு சாராருக்கும் மன அழுத்தத்தைத் தருகிறது. முடிவு நெருங்க நெருங்க அதிகரிக்கவும் செய்கிறது. ஒரு பிரபல சேனலின் ஜூனியர் பாட்டுப் போட்டி முதல் கட்டத் தேர்வுச் சுற்றிலே தேர்வாகாத குழந்தைகள் தேம்பி அழுதபடி கீழிறங்க இந்தப் பக்கம் ஏங்கி அழுதபடி பெற்றோர். அவ்வளவு ஏன்? அதே சேனலில் பெரியவர்களுக்கான ஜோடி ஆட்டபாட்ட நிகழ்ச்சியில் கூட தன் மகள் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாது ஒரு தாயார் அரங்கினில் நடந்து கொண்ட விதம் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

தோல்வியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தோற்று நின்றால் அதுவே "வெற்றிக்கு முதல் படி"
எனச் சொல்லித் தேற்றி அரவணைக்கும் முதிர்ச்சி முதலில் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள் 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விடாமல். இந்தப் பக்குவமும் முதிர்ச்சியும் மிஸ்ஸிங் என்றால் இந்த நிகழ்ச்சிகளின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். ஒரு சென்சேஷனை உண்டு பண்ணுமாறு நிர்ப்பந்திக்கும் விளம்பரதாரர்களுக்காகவும் அவர்கள் மூலம் கிடைக்கிற வருமானத்துக்காகவும் சேனல்கள் செய்யும் சர்க்கஸில் நாமோ நம் குழந்தைகளோ கோமாளிகளாகி விடக் கூடாது.

'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அளவுக்கு யாரும் இருப்பதில்லை என சிலர் சொல்லக் கூடும். விதி விலக்காய் இருக்கும் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படவே இப்பதிவு. மற்றொரு பிரபல சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பமாக போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சுற்று பெற்றோரில் ஒருவர் க்ளூ கொடுக்க பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பதிலளிப்பார்கள். சில குழந்தைகள் தடுமாறி சரியான பதிலையும் கூடவே தங்கக் காசுகளையும் தவற விட்டு விட்டு குடும்பத்திடம் திரும்பி வருகையில் கடுகடு சிடுசிடுவென அவர்களை எதிர்கொள்ளும் தாய்மாரைக் காமிராக் கண்கள் கவரத் தவறியதில்லை. அவர்களுக்கு அவர்தம் வியாபாரம் முக்கியம் என்றால்
நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.

*** *** ***

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

புன்னகைப் பூவே பூமிகா


பெற்றதும் பெற்றவளே 'தான் இனிப் பிழைக்க மாட்டோம்' என்ற எண்ணத்தில், பெற்ற பூவை பூமிக்குள் புதைத்து விட்டுப் பின் மனம் பதைத்து ஊர் மக்களிடம் சென்று சொல்ல, திரண்டு வந்து அவர்களால் காப்பாற்றப் பட்டிருக்கிறாள் இந்தச் சிசு. பெற்ற தாய் கை விட்டாலும் பூமித் தாய் கை விடவில்லை. அதனாலேயே "பூமிகா" என அன்புடன் அவர்களால் பெயரிடப் பட்டிருக்கிறாள். தாயும் இறந்து விட தூத்துக்குடி அடைக்கலாபுரத்திலுள்ள புனித சூசை அறநிலையக் காப்பகத்தில் அடைக்கலமாயிருக்கிறதாம் இந்தப் புன்னகைப் பூ.

இது ஒரு செய்தியாக படத்துடன் போன மாதம் குமுதம் வார இதழில் வெளியாகி இருந்தது. இதே போல 2003-ல் பெங்களூரின் பிரபல மருத்துவமனையொன்றில் பால்மணம் மாறாத பச்சிளம் சிசுவைக் கையாடி.. மயக்க மருந்து கொடுத்து.. சட்டத்துக்குப் புறம்பாக ஒரு கும்பல் விற்க முனைந்தாகச் செய்தி ஒன்றைப் படித்தப் பாதிப்பில் செப்டம்பர் 4, 2003 திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:



கண்ணே கலைமானே



பெற்றவள் கை
மாற்றியா விட்டாள்?
சொல்கிறார்கள் குற்றமாய்-
ஆயினும் எவருக்கும்
தெரியவில்லை சரியாய்-
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடி-கிளியே
கேள்விக் குறியாக நீ!

***

நோட்டுக்களாலே தொட்டில் கட்டி
நோட்டமிட்டு உனைக் கவர்ந்து
நோகாமல் கையாள
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!

***

தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் தடம் மாற்றி-
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பலிடம்
தத்தளித்திடும் தளிரே உண்மையிலே
தத்து அளித்திடவா
தரப் பட்டாய் நீ ?

***

கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!

***

கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ ?

***

மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!

***

காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்தாய் ஒரு வழியாய்
நிம்மதி நெஞ்சோடு
நிறைவாய் ஒரு வாக்கியம்
இனியேனும் இனிதாக
வாழ்வாங்கு வாழ்க நீ!

*** *** ***
இப்போது புன்னகைப் பூவாம் பூமிகாவும் நல்ல இடத்தில் சேர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்திடுவோம்!

முதல் படம் நன்றி: 6 ஜுலை 2008 குமுதம் வார இதழ்
இரண்டாவது படம் நன்றி: 29 ஜூலை 2003 டைம்ஸ் ஆஃப் இண்டியா [செய்தியுடன் வந்தது]

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேண்டுகோள்: பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!
கேள்வி: அரசுத் தொட்டில் முறை தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கிறதா?
ஆசை: முறை தவறுவதால் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் வறுமை மற்றும் பல காரணங்களால் வளர்க்க வழிவகை அறியாதவர்களுக்கும் உதவும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இம்முறை தவறாமல் இருக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரார்த்தனை: அரசுத் தொட்டில்களில் இட நேருகின்ற அவலங்கள் யாவும் மறைந்து அதற்கான அவசியமே இல்லாது போகும் பொற்காலம் பிறந்திட வேண்டும் என விரும்பும் பதிவர் ஆர்.செல்வக்குமாரின் கனவு மெய்ப்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விழிப்புணர்வு: 28 Aug 2008 அன்று இரவு Times Now சேனலில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் சுட்டியை பதிவர் சஞ்சய் மறுமொழியில் தந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் [பிரார்த்தனையை ஒரு பக்கம் நாம் தொடர்ந்தாலும்] தற்போதைய நடைமுறைத் தேவைக்காகவே எனது அந்த வேண்டுகோளும் ஆசையும் என்பது விளங்கக் கூடும். குழந்தைகளைப் புறக்கணிக்காமல், இப்படி கை மாற்றில் ஈடுபடாமல் பலவித சொந்தக் காரணங்களால் வளர்க்க இயலாது எனக் கருதுபவர்கள் முறையாகக் காப்பகங்களில் கொண்டு சேர்த்தால் அவர்கள் தத்து எடுக்கக் காத்திருக்கும் பல பெற்றோர்கள் வசம் சட்டப்படி ஒப்படைக்கப் பட்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.




வியாழன், 21 ஆகஸ்ட், 2008

காணாமல் போன கொசுவுடன் தொலைந்து போன லூஸு

நான் எழுதி 7/11/1986 குங்குமம் வார இதழில் வெளிவந்த துணுக்கு:

அப்போது நான் முதுகலை இறுதியாண்டு "மாணவாஸ்"ஸில் ஒருவள்.

***


திங்கள், 18 ஆகஸ்ட், 2008

வெண் புறா

ஆயிற்று ஆண்டுகள் சரியாக அறுபத்தியொன்று, அவரவர் வழியை அவரவர் பார்த்துக் கொண்டு போகிறோம் என அந்நியரிடமிருந்து அடுத்தடுத்த நாட்கள் சுதந்திரம் வாங்கிக் கொண்டு.

திரும்பிப் பார்த்தால் எத்தனை உயிர் இழப்புகள் இரண்டு பக்கங்களிலும் அன்றிலிருந்து இன்றுவரை என்னன்னவோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு.

வேண்டாம் வேண்டாம் இனி எந்த துவேஷமும் என ஏங்குவோர் இருபுறமும் உண்டு. அயர்வாக இருக்கிறது... அப்பக்கமும் இப்பக்கமும் விடுவதில்லை விடுவதில்லை என விடாமல் ஆவேசப்பட்டே அழிவுக்கு இட்டுச் செல்லும் அறிவிலிகளைக் கண்டு.

அத்தனையையும் தாண்டி அவ்வப்போது துளிர் விடும் நட்புகளைப் பூக்க விட்டால் நன்று. ஐந்தாண்டுகளுக்கு முன் அப்படி நம் நாட்டுக்கு வந்தது ஒரு அழகிய பூச்செண்டு.

சிகிச்சைக்கென வந்த நூர்பாத்திமாவின் வரவையொட்டி ஜூலை 24,2003-ல் திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை இதோ உங்கள் பார்வைக்கு:



வெண்புறா

இரு துருவங்களாக
பாகிஸ்தானும் பாரதமும்!
பாலமாக நீ வந்தாய்
நூர் பாத்திமா!
இத் துருவங்களை
இணைக்கத்தான்
இரு துளைகளை
இறைவன் வைத்தானோ
இத்தனை சின்ன உன்
இதயத்திலே!









மறுபடியும் துளிர்க்கிறது நட்பு,
லாகூருக்கும் டெல்லிக்கும் பேருந்து-
சின்னத் தேவதையே உன்னைச்
சிணுங்காமல் ஏற்றிக் கொண்டு!
பெங்களூரே பரபரப்பானது,
பிஞ்சே உன்
பஞ்சுப் பாதங்கள் பட்ட போது.
'நூர் நூர் ' என
உன்னைப் பார்க்கத்தான்
எத்தனை நூறு பேர்-
கை நிறைய பூங்கொத்துக்களும்
வாய் நிறைய வாழ்த்துக்களும்
நெஞ்சு நிறைய பிரார்த்தனைகளுமாய்-
குழந்தைகளும் பெரியவரும்
வரிசை வரிசையாய்-
நினைத்தாலே பெருமிதம்!












'அந்நிய நாட்டுக் குழந்தை ' என
அந்நியப் படுத்தாமல்
அத்தனை செலவையும்-ஏற்று
கொண்டார் ஒரு சிலர்.
அது
ஆனந்தம் என்றால்
நல்லிணக்கத்துடன்
அதை ஏற்று,
பாச மகளின்
மருத்துவதுக்காகக்
கொண்டு வந்த
பெருந்தொகையை
நேசத்துடன்
இந்தியக் குழந்தைகளுக்காக
இந்திய மருத்துவரிடம்
தந்தாரே உன் தந்தை-
அது
பேரானந்தம்!
தேறிடுவாய் நீ
சீக்கிரம்
தேவதையே பாத்திமா!
உன்
சிங்காரச் சிரிப்பினிலே
சிலிர்த்துக் கிளம்பிப்
பறந்திடுமே
சமாதான வெண்புறா!
*** *** ***


[படங்கள்:இணையத்திலிருந்து]

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin