புதன், 30 செப்டம்பர், 2009

பன்னீர் புஷ்பங்களே!



வாட்டும் நோயினால்
வருத்தத்தில் அவன்-
இறுகிய முகமும்
குன்றிய உள்ளமுமாய்...

நலம் விசாரிக்க
வலம் வந்த மருத்துவர்
இவன் இருக்கும் இடம்
வந்து நின்றார்-
வெளிர் உடையும்
பளீர் சிரிப்புமாய்...

'கலக்கம் விலக்கிடு
காலத்தே குணமாவாய்!
பரிந்துரைத்த பயிற்சிகளைப்
பழகச் சலிப்பதேன் ?
படுத்தே இருந்தால்
அடுத்துநீ எழுந்து நடப்பது
எப்போதாம்?' கேட்டார்
புன்னகை பூத்தபடி.

தொடர்ந்தார் கனிவாய்:
'மலர்ச்சியுடன் மருந்துகளை
உட் கொள்வாய்,
உற்சாகமாய் இருந்திட்டாலே
தேறிடலாம் விரைவாய்!'

நம்பிக்கை ஊற்றினிலிருந்து
நன்னீர் வழங்கிய
திருப்தியுடன்
திரும்பி நடந்தார்.

'மிடுக்காக வந்து
துடுக்காகச் சொல்லிவிட்டாரே,
பட்டால் அன்றோ புரியும்
வலியின் ஆழமும்-
கதிகலங்கி நிற்குமென்
உள்மனதின் கோலமும்!'

தெளிக்கப்பட்டது பன்னீர் என்ற
தெளிவில்லாமல வென்னீரென்றே
நினைத்துச் சலிக்கின்றான்.

சொன்னவரும் மனிதர்தான்
அவருக்கும் இருக்கக்கூடும்
ஆயிரம் உபாதை என்பதனை
ஏனோ மறக்கின்றான்.
**

வாழ்வோடு வலியும்
காலத்தோடு கவலையும்
கலந்ததுதான் மானுடம் என்பது
இறைவனின் கணக்கு.
இதில் எவருக்குத்தான்
தரப்படுகிறது விதிவிலக்கு?

ஆறுதலாய் சொல்லப்படும்
வார்த்தைகள் கூட சிலருக்கு
வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்
வேல்களாய்த் தோன்றுவது
வேதனையான விந்தை!

துயரின் எல்லை என்பது
தாங்கிடும் அவரவர்
மனவலிமையைப்
பொறுத்ததே!
ஆயினும் கூட...

பாவம்பாவம் எனப்
பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்
உற்றார் பலர் உத்தமராகிறார்.
விரக்தியை விடச் சொல்லுபவர்
வேதனை புரியாதவராகிறார்!

சோதனை மேல் சோதனையென
சோர்ந்திருப்பவனின் சோகத்தை
மென்மேலும் சூடேற்றுபவர்
மனிதருள் மாணிக்கமாகிறார்.

மனதைரியத்துடன் இருக்கும்படி
மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ
அடுத்தவர் அல்லல்
அறிய இயலாத
அற்பப் பதராகிறார்!

அக்கறையை அனுபவத்தை
ஆக்கப் பூர்வமாய்
நோக்கத் தெரியாமல்-
அன்பை ஆறுதலை
இனம் புரிந்து
ஏற்கத் தெரியாமல்..

நேசத்துடன் பாசங்கலந்து
நீட்டப்படும் பூங்கொத்தில்
முட்களைத் தேடியபடி-
இருக்கத்தான் செய்கிறார்
சிலர்..

அத்தகு
இடம் அறிந்து
மெளனிகளாகத்
தெரியாமலேதான்
பலர்..!
*** *** ***

படம்: இணையத்திலிருந்து..

*17 ஏப்ரல் 2003, திண்ணை இணைய இதழில் 'இரண்டு கவிதைகள்’ என்ற தலைப்பின் கீழ் வெளிவந்த மற்றொரு கவிதை.
23 ஜூலை 2009 ‘விந்தை உலகம்’ என்ற தலைப்பில் வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்.


*“ஈடு செய்ய முடியாத இழப்பினைச் சந்தித்தவருக்கும் மீண்டு வரப் போராடும் உடல்நலக் குறைவோடு வருந்துவோருக்கும் மட்டும், என்றைக்கும் ஆறுதலை பன்னீர் புஷபங்களான வார்த்தைகளால் மட்டுமே தந்துவிட முடியாது. ஆனால் அவர்தம் மனக்காயங்களைக் காலம் ஆற்றிட, உடல் நலம் பெற்றுத் தேறிட நம் உள்ளார்த்தமான பிரார்த்தனைப் பூக்கள் நிச்சயம் கை கொடுத்திடும்.

வியாழன், 24 செப்டம்பர், 2009

இல்லாதாரும் இலவசங்களும்...


ழுத்தாலோ எண்ணத்தாலோ
செயல்படுத்தும் திட்டத்தாலோ
எழும்பும் விளைவுகள்
எளியவனை இயலாதவனை
எழுந்துநிற்க வைத்தால்
எத்தனை நலம்?
ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
கூனியே கையேந்தவிடுவதா
அவன்வாழ்க்கைக்கு பலம்?

'னியொரு விதி செய்வோம்
அதைஎந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!'-
பசித்தவன் கேட்டுவிட்டு
பரவசப் படட்டுமென்றா
பாடினான் பாரதி?
இல்லாதவன் கேட்டுவிட்டு
இங்கெமக்குக் குரல்கொடுக்க
இனியொரு நல்லவன்
இதுபோலப் பிறப்பானா என
நன்றியில் நனைந்து போக
வேண்டுமென்றா
எண்ணினான் பாரதி?
பாரதம் தன்னிறைவு கண்டு
பார்புகழத் தலைநிமிர்ந்து
எழுந்துநிற்க அல்லவா
எழுதினான் அந்தமகாக்கவி!

முற்றிலும் முடியாதவனா
தவறில்லை போடலாம்சோறு!
ஆனால்..
முடிந்தும் முயற்சியற்றவனா
இயன்றால்
வேளாவேளைக்குக்
கூழோகஞ்சியோ கிடைத்திட
வேலைக்கு வழிசெய்து-
உழைப்பின் உயர்வை
உன்னதத்தை
உணர்த்திடப் பாரு!
அது விடுத்துத்
தானம் என்றபெயரில்
தந்துதந்து அவனை
தன்மானம் மறக்கச்
செய்வதிடலாமா கூறு!

ல்லாதவனிடம் கொள்ளும்
இரக்கமும்
கலங்கிநிற்பாரிடம் காட்டும்
கருணையும்..
அவரை
முன்னேற்றப் பாதையில்
செல்லத் தூண்டும்
முயற்சியை வேகத்தை-
ஆர்வத்தைத் தாகத்தைக்
கொடுக்க வேண்டியது
அவசியம்.
முட்டுக்கட்டையாய்
அயற்சியை சுயபச்சாதாபத்தை
அலட்சியத்தை சோம்பலைத்
தராமல் பார்த்திடல்
அத்யாவசியம்!

னியொருவனுக்கு உணவில்லாத
ஜகத்தினை அழித்திடும்
சாத்தியம் இல்லாது போனாலும்-
சாதிக்க வேண்டிய ஜகம்
இலவசங்களால்
சக்தி இழந்திடாதிருக்க
சிந்திப்போமே!
பொன்னான பொழுதினைத்
தூங்கியே கழிப்போரையும்-
செல்லும்பாதையில் களைத்துத்
துவண்டு விழுவோரையும்-
தூக்கி நிறுத்தும்
தூண்டுகோலாய் நாமிருக்க
யோசிப்போமே!
தத்தமது காலாலே
வீறுநடை போட்டிடத்தான்
பழக்கிடுவோமே!
*** **** *** **** ***

படம்: இணையத்திலிருந்து..

*17 ஏப்ரல் 2003 திண்ணை இணைய இதழில் 'இரண்டு கவிதைகள்' தலைப்பின் கீழ் வெளிவந்த ஒரு கவிதை.

*தொடர்கின்ற இலவசங்கள், இல்லாதாரை இருக்குமிடத்திலேயே இன்னும் அழுத்தி இருத்துவது தொடர்கதையாவது கண்டு.. இதைத் தேடி எடுத்துப் பதிவிடத் தோன்றியது.
*இங்கு வலையேற்றிய பின் 2 நவம்பர் 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்..

திங்கள், 21 செப்டம்பர், 2009

பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!

கண்ணே கலைமானே












பெ
ற்றவள் விற்றா விட்டாள்
சொல்கிறார்கள் குற்றமாய்-
ஆயினும் எவருக்கும்
தெரியவில்லை சரியாய்-
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடிக் கிளியே
கேள்விக் குறியாக நீ!
***

கத்தை கத்தையாய் கண்ணே
நோட்டுக்களைக் கைமாற்றி
நோகாமல் உனைக் கையாளத்
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
தோள்கள் துவண்டு போய்
தொங்கி விழும் தலையுடன்
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!
***

தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் இடம் மாற்றி-
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பல் இவர்கைகளிலே
தத்தளித்திடும் தளிரே- உண்மையிலே
'தத்து' அளித்திடத்தான்
தரப் பட்டாயா நீ?
***

கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!
***

கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ?
***

மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலமாம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!
***

காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்ததாயென-செய்தி
ஊடகங்கள் உறுதி செய்ததும்தான்
உறக்கம் வந்தது எமக்கு
நிறைவாய் ஒரு
வாக்கியம் உனக்கு-
இனியேனும் இனிதாய்
வாழ்ந்திடுக நீ!
*** ***

பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்















கு
ற்ற உணர்வென்பது
கொஞசமும் இன்றிக்
குப்பைத் தொட்டியிலும்
இடுகாட்டு வாசலிலும் கூட
இட்டுச் செல்கிறாராமே உனைப்
போன்றப் பல பூஞ்சிட்டுக்களை
விடிகின்ற காலையோடு
விடிந்து விடும் உம்வாழ்வுமென-
விட்டிடலாம் கவலைதனை
எவரேனும் கண்டெடுத்துக்
கரை சேர்ப்பாரென-
இரை தேடி இரவெல்லாம்
சுற்றி வரும் நாய்களிடம்
மாட்டி மடிய நேர்ந்தால்
என்னவாகும் எனும்
பின்விளைவுகளைப் பற்றிய
சிந்தனை சிறிதுமின்றி...!
***

எட்டி யோசிக்கட்டும்
பூக்கள் உம்மைப்
புறக்கணிக்கும் செடிகள்.
***

என் செய்வது..
சில செடிகளுக்கு-
பல கொடிகளுக்கு-
பூக்களுடனான பந்தம்
தொடர்ந்திடக் கொடுத்து
வைப்பதில்லைதான்.
***

வறுமை முதல் வெறுமைவரை
வெவ்வேறு காரணங்களால்
அடித்து வீசும் காற்றாகவும்
சுழன்று வீசும் புயலாகவும்
வாழ்க்கையை விளையாடிவிட்ட-
விதியின் சதியினால்
துளிர்க்கின்ற தளிர்களைத்
தம்மோடு வைத்துக்
கொள்ள வழியற்ற-
அச்செடிகொடிகள்
அரசுத் தொட்டிலிலோ
ஆதரவற்றோர் இல்லத்திலோ
உம்மை உதிர்த்துச் சென்றால்-
தத்தெடுக்கக் காத்திருப்போர் வசம்
சட்டப்படி ஒப்படைக்கப்பட்டு-நீவிர்
வாழ்வாங்கு வாழ்ந்திடத்தான்
வழிவகை பிறந்திடுமே.
*** *** ***

முதல்படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்
இரண்டாவது படம்: இணையத்திலிருந்து..

*'கண்ணே கலைமானே' கவிதை செப்டம்பர் 4, 2003 திண்ணை இணைய இதழில் வெளியாகி உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டதுதான் என்றாலும், வேதனை கலந்த வேண்டுகோளாக ஒலிக்கும் அடுத்த பாக சேர்க்கையுடன் 11 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும், 1 ஜூன் 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும் வெளியாகியுள்ளது.


*ஹ்லோ, நான்தாங்க:


“இந்த மீ(நீ)ள்பதிவினைத் தொடர்ந்து, புதிதாய் எழுதும்வரை முத்துச்சரத்தில் கோர்க்காத சில பழைய படைப்புகளை அடுத்தடுத்து பார்வைக்கு வைக்கலாம் என்றிருக்கிறேன். 'ஆ.., இன்னுமா ஸ்டாக் தீரலை’ன்னு கேட்க மாட்டீங்கதானே?

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

Dawn and Dusk [Silhouette-Sep PiT போட்டிக்கு]

புத்தம்புது காலை பொன்னிற வேளை



இனிவருமோ இந்நிமிடம்?



எங்கோ கூவும் குயில்களின் கீதம்
மகிழ்வாய்ப் பாடும் மைனாக்களின் கானம்
'கீச்'சிடும் குருவிகள் நடத்திடும் உற்சாகப்பாடம்
தென்னங்கீற்றுகளும் கேட்டுத் தலையசைக்கும்;
விழித்தெழும் கிளிகள் சிறகுகள் விரிக்கும்
புலர்ந்தது பொழுதெனக் குதூகலமாய்க் கிளம்பும்;

இன்று இப்பொழுது காணக் கிடைக்கும்
இதோ இந்த சூரிய உதயம்
இந்நிமிடம் நொடிக்கு மட்டுமே சொந்தம்;
ஒருமுறை கடந்தது மறுமுறை வாய்ப்பினும்
ஒன்றல்ல உணர்வோம் அதுவும் எதுவும்!

நாளையைக் காண நமக்கு விதித்திருந்தாலும்
நழுவ விடாதிருப்போம் நம்மைப் புதுப்பிக்கும்
எத்தகு இனிய சிலிர்ப்புகளையும்;
அத்தோடு தொலைக்காது இருப்போம்
இந்நிமிடம் இந்நொடியில் நாடிவரும்
நம்மை உயர்விக்கத் தேடிவரும்
எந்தவொரு நல்வாய்ப்புக்களையும்;
சோம்பித் தள்ளிப்போடாதும் இருப்போம்
முயன்றால் அக்கணமே அத்தருணமே
முடிக்கக் கூடிய வேலைகளையும்!
*** *** ***





மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே



நம்பிக்கையின் சூத்திரம்

அந்திமழைக்குப் பின்னே அழகு காட்டும் வானம்
அஸ்தமனத்துக்கு பின்னே இருள் வந்து சூழும்;
அஸ்திவாரம் நம்பிக்கைக்கு அதுவே ஆகும்
அடுத்தநாள் விடிகையில் தானே புரியும்.
*** *** ***


'இனிவருமோ இந்நிமிடம்?' இங்கு வலையேற்றிய பின் 17 செப்டம்பர் 2009 யூத்ஃபுல் விகடனில்க்ளிக் கவிதை"யாக வெளியாகியுள்ளது:




*ஹலோ, நான்தாங்க பேசறேன்:
[அப்பப்போ இப்படிப் பேசுவேன். “நான்தாங்கன்னா யாரு”ன்னு கலாய்க்க கூடாது. ஓகே:)?]

ஒரு மாதம் ஆயிற்று உங்களையெல்லாம் சந்தித்து. விடுப்பு நீடித்தாலும் விழுந்தடித்து ஓடிவந்து ‘பிட்’டுக்கு பதிவிட்டு, இரண்டாவது படத்தை போட்டிக்குக் கொடுத்த கையோடு மறுபடியும் 'பைபை' சொல்லவிருக்கிறேன்! முன்போல செயல்பட இன்னும் நாளாகலாம் என்றாலும் அவ்வப்போது வந்தபடி இருப்பேன்.

ஒவ்வொரு மாதமும் தலைப்பைத் தந்து எப்படி எடுக்கலாம் படங்கள் எனப் பாடமும் நடத்துகிறார்கள் ‘பிட்’டிலே. படித்துப் புதிதாய் படம் பிடிப்பவர் பலர். இருப்பதைக் கொடுத்தே காலத்தை ஓட்டுகிறோம் சிலர்:)! புது புரொஃபசர் நந்துவும் அழகாய் விளக்கியிருக்கிறார் silhouette பற்றி, பாருங்கள் இங்கே.

மேலுள்ளவை பார்வைக்கு முன்னர் வைத்த படங்களே ஆயினும் போட்டியில் கலந்து கொள்ளாதவை. நந்து அப்பதிவுகளின் பின்னூட்டத்தில் அப்போது அறிவுறுத்தியபடி பி.பி செய்தவை. இம்மாதத் தலைப்புக்குப் பொருத்தமாய் தோன்றியதால் மீள்படங்கள் ஆனவை. கவிதைகள் வழக்கம்போல படத்துக்காகவே படைத்தவை. பை பை:)!



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin