திங்கள், 24 மார்ச், 2014

திருமதி. செல்வி ஷங்கர் பார்வையில்.. - இலைகள் பழுக்காத உலகம்

தலைமைத் தமிழாசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி. செல்வி ஷங்கர். ‘வலைச்சரம்’ ஆசிரியர் சீனா அவர்களின் மனைவி. ‘பட்டறிவும் பாடமும்’ வலைப்பூவில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து வருகிறார். ‘எண்ணச் சிறகுகள் - வள்ளுவம்’ என்ற இன்னொரு வலைப்பூவில் திருக்குறளுக்கு உரை எழுதி வருகிறார். ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பை வாசித்து விட்டு மின்னஞ்சல்  மூலமாக அனுப்பியிருந்த கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

ண்மையில் கவிதை - தவிப்பு - ஏக்கம் - இருப்பு என்று பூக்குட்டிகளைச் சுமந்த படி கடவுளே காப்பாற்று என்றெல்லாம் சொல்லும் பொழுது கவிதை இயல்பாகவே நீரோட்டமாய்ச் செல்கிறது.

இலைகள் பழுக்காத உலகம் எப்பொழுதும் எங்கோ இருக்கத்தான் செய்கிறது. தந்தையின் பாசமும் தளிர்களின் கற்பனையும் ஒரு காலத்தில் ஒட்டி உறவாடின என்பதை காலக் கண்ணோட்டம் கருத்தாய்ச் சொல்கிறது. கம்பீரமாய்ச் சிரிக்கும் அதே தந்தையின் கண்கள் எட்டு வயதுச் சிறுமியைத் தேடுகின்றன என்ற போது நமது முதுமையும் நரையும் திரையும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

ராணித்தேனீயில் இன்னமும் அடக்கு முறையால் ஒடுக்கப் படுகின்ற பெண் சமுதாயத்தின் கேவல்கள் கேட்பது போலவே உள்ளது. என்ன தான் உரிமைகள் பெற்று பிறர் உயர்விற்காக பொருளையும் செய்கின்ற பெண்களுக்கு இன்னம் மாறாத நிலைமைதான்.


ஏக்கத்தில் காணும் கருத்து இயல்பானது. அது ஒன்று தான் கால ஓட்டத்தில் இன்றும் மாறாமல் இருக்கிறது. அப்புறமாய்ச் சொல்லடா ! என்று அன்பாய் அணைத்து அவசரமாய் அடக்கி விடும் அன்னையரின் மனம் குழந்தை உறங்கிய பின்னால் முகத்தில் அமைதிப் பாடம் படிக்கிறது.

நகரத்தின் நகரும் நிலையும் இயற்கையை அழித்துவிட்டு  இன்ப மாளிகைகள் எழும் சூழலிலும் சிட்டுக் குருவிகளின் சிறகுகளை விரித்து விட்டு மெல்ல முணுமுணுக்கும் சிறுமியின் எண்ணங்கள் சிந்திக்க வைக்கின்றன.

பிள்ளையாரின் காலடித் தட்டில் இலட்டுகளை வைத்து விட்டு சாலையில் உருண்டு கிடந்த தக்காளியைச் சுவைக்கச் சென்ற மூஞ்சூறும் திரும்ப வந்து பிள்ளையாரைத் தேடியது நல்ல இருப்பு தான்.

ரோஜாக்களுக்குப் பச்சை வண்ணமும் இலைகளுக்கு மஞ்சள் வண்ணமும் தீட்டிய பூக்குட்டிகளின் அன்பு இன்றைக்கும் டீச்சருக்கு உண்டு. நல்ல கவிதை!

வண்ணக் குடைகள் வண்ணக் குடைகள் தான் ! ஏழைகளின் வறுமையும் வயிற்றுப் பசியும் தன்னையும் மறக்கச் செய்து கலை நயத்தோடு பொருள்களைக் காலாற கடை பரப்பும் வேளையில் மழைத் துளிகள் கண்டு அனைத்துக் குடைகளையும் மடக்கிப் பத்திரமாய்ப் பைக்குள் திணித்தது காலத்தின் கோலம்தான். கசிகிறது மனம்.

சென்னை நகரத்துப் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து நின்றால் தான் அது அதிசயம். நிறுத்தம் தாண்டிச் சென்ற பேருந்து சற்று தூரம் கடக்கையில் ஒட்டி வந்து நின்றது ! ஏதோ காரணத்தால் தாமதம் என்ற அடிகளை மிகவும் சுவைத்தேன்.

அப்பா அம்மாவாகவே முடியாதோ ? எனறு திகைத்த போது ஆறுதலாய் அருகே வந்து முத்தமிட்ட மகள் தாயாகி விடுகிறாள். இந்த எல்லாம் புரிந்தவள் மிக நல்ல கவிதை.

கவிதைத் தொகுப்பின் எல்லாப் பக்கங்களூமே ஏற்றம் மிகுந்த ஏணிப்படிகள் தான். இயல்பான கருத்தும் இயற்கையான சிந்தனை ஓட்டமும் என்னை மிகவும் கவர்ந்தன. எனக்கு இன்னொரு வியப்பு ! எப்படித்தான் இப்படி இயல்புகளை பல்வேறு சூழ்நிலைகளில் கவிதைக் கண்களோடு பார்க்க முடிந்ததென்று ! ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு சூழலில் எழுந்தது. இது எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. இதனை நன்றாய்ச் செய்திருக்கிறீர்கள் ! வாழ்க வளமுடன் ! 
**

நன்றி திருமதி. செல்வி ஷங்கர்!
**


கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட:
aganazhigai@gmail.com

இணையத்தில் வாங்கிட:
இலைகள் பழுக்காத உலகம்

14 கருத்துகள்:

  1. ஏற்றம் மிகுந்த ஏணிப்படிக்கள்ளாக
    சிதறும் பூக்குட்டிகளின் சிரிப்பொலிகளாக அருமையான விமர்சனம்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. ரசனையான விமர்சனம்...

    திருமதி. செல்வி ஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல விமர்சனம்.

    மீண்டும் ஒரு முறை உங்களது சில கவிதைகள் படித்த உணர்வு....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  4. திருமதி செல்வி ஷங்கர் எழுதி வரும் அத்தனை வலைப்பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.

    இதுகாறும் படிக்கவில்லையே என்ற பெருமூச்சு விட்டேன்.

    இனி, மூச்சுள்ள வரை இவரது பதிவுகளைத் தொடர்ந்து
    படிக்கவேண்டும் என்ற உறுதியும் கொண்டேன்.

    "இலைகள் பழுக்காத உலகம் " இனி தான் படிக்கவேண்டும்.

    நிறுத்தத்தில் நிற்காத ஊர்தி பற்றிய செல்வி அவர்களது கருத்து
    என்னை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது.

    மவுண்ட் சாலையில் ஒரு நாள் ஒரு ஊர்தி, நிறுத்தத்தில் நில்லாமல் சற்று தூரம் சென்ற போழ்து அதை பிடிக்க ஓடினேன். நான் அதை பிடிக்கு முன்பாகவே அந்த ஊர்தி கிளம்பிவிட வருத்தம் மிகக் கொண்டு இருந்தபோது , அதே எண் கொண்ட இன்னொரு ஊர்தி, சரியான இடத்தில் நிறுத்த, அதை அடைய, இன்னொரு முறை ஒடினேன்.

    நான் அந்த இடத்திற்கு வருவதற்குள், அந்த ஊர்தியும் கிளம்பிச செல்ல,

    எனது விதியை நொந்து சிரித்தேன்.

    வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

    அல்லவா. !!!

    நிற்க.

    இலைகள் பழுக்கா உலகும்
    அலைகள் இல்லா கடலும்
    இலை என்பது இலை .

    படிப்பேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. மிக அழகாய் சொல்லி இருக்கிறார். திருமதி செல்விஷ்ங்கர் அவர்கள்.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin