** நண்பர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
** நண்பர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 நவம்பர், 2008

இரத்த பாசம் (பாகம் 2)

நாட்டின் வருங்காலம் யார் கையிலோ அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகளை உருளச் செய்பவர் யார்?

மாணவர்கள் திசை திரும்பித் தீயவழி நடக்கக் காரணமாயிருப்பவர் யார்?

இவரைப் போன்றவர்கள் திருந்துவார்களா..

பெற்றவர்களின் கனவுகளை அறிவார்களா..

வளர்த்தவர்களின் வலியினை உணர்வார்களா..

கேள்விகள் உந்தித் தள்ள, 1990-ல் எழுதிய இக்கதையைப் பதிவிட்டுள்ளேன்.

பாகம் 1
இங்கே.

பாகம் 2 தொடர்கிறது..





ங்க கெளம்பிட்டே” ஆச்சரியமாய் கேட்டான் மாரி.

“ஆளெடுக்க டவுணுலருந்து லாரி வந்திருக்காம். போயிட்டு பொழுது சாய வந்துருவேன். கணிசமா கூலி கெடைக்கும். நா சொன்னதைச் சொல்லி வாத்தியார் வீட்ல மறக்காம கேட்டு வாருமய்யா”

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவசரமாய் லாரியைப் பிடிக்க ஓடும் மனைவியைப் பார்த்து மனம் கலங்கிப் போயிற்று மாரிக்கு. உடம்புக்கு முடியாமல் கிடந்தவள் மகனுக்கு ஒரு தேவை என்று வந்ததும் சோர்வை உதறி விட்டு, கணவனின் சுமையைக் குறைக்க ஓடுகிறாள். ‘போகாதே’ என்று சொல்ல அவன் மனம் துடிக்கத்தான் செய்தது. ஆனால் அப்போதைய தேவை அப்படிச் சொல்ல விடாமல் அவனை வாளாவிருக்க வைத்து விட்டது. அவனை நினைத்து அவனுக்கே அவமானமாய் இருந்தது.

’சே, என்ன சென்மம் நான். ராசாத்தி போல அவள வச்சுக் காப்பாத்தத்தான் வக்கில்லாத போச்சு. ஒடம்புக்கு ஆகாத நெலமெல ஓடுதவளத் தடுக்கக் கூடத் தோணாது என் நாக்குக்குமில்ல கேடு வந்து போச்சு’ என்று நொந்து கொண்டான்.

அப்படி அவளை வாத்தியார் வீட்டில் அடகு வைத்துப் பணம் வாங்கி மகனுக்கு அனுப்ப வேண்டுமா என்று யோசித்தான். ‘இப்பதைக்கு அனுப்ப ஏலாதுன்னு ரெண்டு வரி எழுதிப் போட்டுட்டா என்ன’ என்றும் தோன்றியது. மகனின் முகம் மனதுக்குள் வந்து போக அந்த எண்ணம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது.

இருவருமே தாங்கள் மகன் மேல் கொண்டிருக்கும் பாசம் எத்துணை ஆழமானது, வலிமையானது என்பதை உணர்ந்திருந்தார்கள். அவனுக்காக எந்தக் கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருந்தார்கள் என்றாலும் கூட அதற்காக மாரி படும் கஷ்டத்தைச் சகிக்க முடியாமல் தாயி பரிதவிக்க, அவளைப் பார்த்து இவன் பரிதாபப் பட என இயலாமையில்தான் அவர்கள் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

ரவு பதினொன்றரை மணி போல மாரி விறகுக் கடை வேலையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் கண்ணுச்சாமி டீக்கடையை அடைத்துக் கொண்டிருந்தார்.

“ஏலே மாரி, நில்லுப்பா. நானும் வாரேன்” என்று பேச்சுத் துணைக்கு அவனை நிறுத்தி வைத்தவர் கடையைப் பூட்டிய பின் சைக்கிளை உருட்டித் தள்ளியவாறு மாரியுடன் நடக்கத் தொடங்கினார்.

“காலம்பற அவசரத்தில ஏதோ கத்திப் புட்டேன், வுடு அத. என்ன... மறுபடி காசு கேட்டுருக்கானா உம் மவன்?”

யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்தவன் போல மடமடவென்று அவரிடம் சொல்லத் தொடங்கினான் மாரி “ஆமா அண்ணாச்சி, பீசு கட்ட அவசரமா முன்னூறு வேணுமாம். எம் பொஞ்சாதி நாளேலர்ந்து வாத்தியாரு வூட்டுக்கு வேல பாக்கப் போறா. அவுகளும் மொதல்ல சந்தோசமா வரட்டும்னாக. அப்பால முன் பணம் கேட்டனா? மூஞ்சில அறஞ்சாக்ல முடியாதுன்னுட்டாக”

“ம்.. அப்புறம்” என்றார் கண்ணுச்சாமி சுவாரஸ்யமாக.

“அப்பால என்னா! காலுல வுழாத கொறதான். படிப்புக்காகத்தான கேக்குறேன். மனசு வைக்கப் படதா? ‘வைத்தியம் புள்ள சீக்கு வாத்தியாம் புள்ள மக்கு’ன்னு சும்மாவா சொன்னாக பெரியவுக. அவுக மவன் பத்து தாண்டாத ஊரச் சுத்திட்டு வாரான். சரி, ஊராம் புள்ளயாச்சும் படிச்சு பெரிசா வரட்டுமேங்கிற பெரிய மனசு இல்லயே!”

‘அதுச...ரி’ மனதுக்குள் கேலியாக நினைத்துக் கொண்ட கண்ணுச்சாமி, “கடைசில குடுத்தாரா இல்லையா?” என்று கேட்டார்.

“குடுத்தாரு குடுத்தாரு. ஆனப் பசிக்குச் சோளப் பொறிய போட்டாக்குல அம்பது ரூவா குடுத்தாரு. பொறவு வெறகுக் கடை ஐயாட்ட கெஞ்சிக் கூத்தாடி அவரு ஏச்சு பேச்செல்லாம் கேட்டுக்கிட்டு அம்பது ரூவா வாங்குனேன். தாயி வேற இன்னைக்கு கூலிக்குப் போச்சு. அதுல என்னத்த பெரிசா வரும்.. பத்தோ பதினஞ்சோ!

“ஹூம்.. ஒம்பாடும் சிரமந்தான்”

‘அட அண்ணாச்சி இரக்கப் படுதாகளே, இவுககிட்ட கொஞ்சம் கேட்டுப் பாப்போமா?” என்ற நப்பாசையின் கூடவே ‘இவருட்ட புதுசா என்னத்த வாங்கிக் கட்ட வேண்டி வருமோ’ என்ற ஐயமும் எழ குழப்பத்துடன் நடந்தான் மாரி.

அந்தக் குறுகிய சந்தின் வழி நெடுக மாடுகள் குறுக்கும் நெடுக்குமாய் படுத்துக் கவலையின்றி அசை போட்டுக் கொண்டிருக்க, இவர்கள் வளைந்து நெளிந்தும் தாண்டிக் குதித்தும் நடக்க வேண்டியதாயிற்று.

“குறுக்கு வழியேன்னு வந்தா இதே ரோதனயாப் போச்சு” முணுமுணுத்தபடி சில இடங்களில் கண்ணுச்சாமி சைக்கிளைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டார்.

குடிசைகள் இருளில் மூழ்கிக் கிடக்க, வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்தவர்கள் ‘சளப்’ எனக் கன்னம் கை காலோடு சேர்த்துக் கொசுவை அடித்துக் கொண்டும் விரட்டிக் கொண்டும் இருந்தார்கள்.

“எப்படித்தான் இந்த மாதிரி எடத்தில காலந்தள்ளுறீங்களோப்பா” என்றார் கண்ணுச்சாமி.

மாரிக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. இன்னும் ஒரு பர்லாங் நடந்தால் குடிசை வந்து விடும். அதற்குள் அவரிடம் கேட்டு விட வேண்டும் என்ற தீவிர சிந்தனையுடன் நடந்தான்.

ன்னலே திடீர்னு வாயடச்சுப் போயிட்டே?”

பேச்சுத் துணைக்குக் கூட்டி வந்தவன் பேசாமல் வருகிறானே என்று பொழுது போகாத கண்ணுச்சாமி மறுபடி அவன் வாயைக் கிளறினார்.

“ரோசனதான். மிச்சப் பணத்த எப்படிப் பொரட்டன்னுட்டு”

“நா இப்படிச் சொல்லுதனேன்னு சங்கடப் படாத மாரி. அப்படி உம் மவனுக்கு என்னதான் செலவுன்னு எனக்குப் புரியல. அடுத்த ஊருல இருக்கானே எம் மச்சினன். பணக் கஷ்டப் படுதவருதான். உம் மவனப் போல ஒபகாரச் சம்பளத்திலதான் படிக்கான் அவரு புள்ள. ஒங்க பொறப்பு இல்லயே அப்புறம் எப்படின்னு பாக்காத. மாநில அளவுல ராங்கு வாங்குனதல கெடச்சுதப்பா, நாங்கொண்ணும் பொழப்புக்காக ஒத்தத்தொரப் போல பொறப்பு சர்டிபிகேட்ட மாத்திக் குடுக்கிற மனுஷா இல்லப்பா” வீம்பாகச் சொன்னவர் “எம் மருமவன் தன் செலவு போக மிச்சம் பண்ணி வீட்டுக்கும் கூட அனுப்புதானாம் அப்பப்ப” என்று முடித்தார்.

கண்ணுச்சாமியின் கடைசி வாக்கியம், பரிதாபமான தன் நிலையைக் கேட்டு மனமிரங்கி இவராவது உதவ முன் வர மாட்டாரா என்ற மாரியின் கடைசி எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போட “அப்ப என் மவன் பொய் சொல்லுதாங்குறீக..” என்றான் மாரி காட்டமாக.

“எனக்கென்னவோ அவன் ஒங்களை நல்லா ஏமாத்துறான்னுதான் படுது. வர்ற பணத்துல அழகா பரிச்சைக்குப் பணங்கட்டி சாப்பாடு பொஸ்த செலவு எல்லாஞ் சமாளிக்க முடியும். இவன் என்ன ஷோக்கு பண்ணதுக்கு ஒங்களப் புழிஞ்செடுக்கானோ..”

“என்னாத்துக்கு கேட்டாதான் என்ன? செலவுக்குத் திண்டாடத மன நெறவா இருந்தாத்தானே படிப்புல கவனம் போகும், அவன் நல்லா படிச்சு வரணும்ங்கிறதுக்காகத்தானே நாங்களும் இந்தப் பாடு படுதோம்.”

“சரி இப்பவே இப்படி ஒங்கள ஏய்க்கிறானே. நாளைக்கி படிச்சு முடிச்சு பெரிய ஆளானப்புறம் ஒங்களத் திரும்பிப் பாப்பான்னா நினைக்கறே. நீங்க நாயாப் பேயாப் படுத பாடெல்லாம் வெழலுக்கு இறச்சத் தண்ணியாத்தான் போப்போவுது போ.”

“அடப் போங்க அண்ணாச்சி. அவன் பின்னால எங்களக் காப்பாத்தணும்னா இம்புட்டும் செய்யறோம்? இத்தன வருசமும் அவனா எங்களுக்குச் சோறு போட்டான்? வாழலயா நாங்க? உசிரு போகந்தன்னியும் எங்க வயித்துப்பாட்டை எப்படியோ கழிச்சிக்க எங்களுக்குத் தெரியும். அவனாவது எங்களைப் போல கஸ்டப் படாத பின்னால நல்ல படியா வாழ்ந்தா சரிதான்” படபடவென்று பேசியவன் தன் குடிசை நெருங்கி விடவே “நா வாரேன்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்து விட்டான்.

“தானாவும் புரிஞ்சுக்காது. சொன்னாலும் வெளங்கிக்காது. ஹூம் இதெல்லாம் தேறாத ஜென்மங்க” சைக்கிளில் ஏறி பெடலை மிதித்த கண்ணுச்சாமியின் முணுமுணுப்பு காதில் விழ, ஆத்திரமாக வந்தாலும் ஏதும் பேச இயலாதவனாய் குடிசைக்குள் நுழைந்தான் மாரி.

ண்ணுச்சாமி சொன்ன வாக்கில் யோசித்துப் பார்க்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. முதலில் சற்று குழப்பமாக உணர்ந்தாலும் ‘எம் மவன எனக்குத் தெரியாதாக்கும்’ என்கிற எண்ணம் மேலிட சமாதானம் அடைந்தான்.

இருட்டுக்கு கண் பழக, மூலையில் தாயி சுருண்டு கிடப்பது தெரிந்தது.

”இப்படித்தான் வந்து வுழுவேன்னு தெரியும். ஏதாச்சும் தின்னியா இல்லயா? என் வயித்துப் பாடாவது போற வர்ற வூட்டுல அவுக குடுக்கற மிச்ச மிஞ்சாடியில கழிஞ்சுடுது. ஒனக்கு அதுவுமில்ல” என்றபடி வேட்டியில் செருகியிருந்த தீப்பட்டியை எடுத்து தீக்குச்சி ஒன்றைக் கிழித்தான். அதைக் கையில் பிடித்தபடி சிம்னியைத் தேடி எடுத்து பற்ற வைத்தான்.

தாயிடடிருந்து ஒரு சலனமும் இல்லாது போக அவள் அருகில் அமர்ந்து “ஏ புள்ள தாயீ, உன்னத்தானே..” என்று உலுக்கவும், பதறி விழித்த தாயி மலங்க மலங்க முழித்தாள்.

“என்னா முழிக்கறே? தின்னியா நீ”

“கா..காசு கெடச்சுதா?”

“அட நா கேட்டதுக்கு பதிலச் சொல்லு. ஏதாச்சும் ஆக்கி வயித்துக்குப் போட்டியா?”

“ஆங்...ஆமா அதான் ஆசுபத்திரில குடுத்தாகளே”

“என்ன ஆசுபத்திரியா? என்ன ஒளருதே?” குழப்பமாகக் கேட்டவன் “என்ன செய்யுது ஒனக்கு? கிணத்துக்குள்ளார இருந்து பேசறாப்ல பேசறியே?”

அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

தாயி அதை சட்டை செய்யாமல் “எவ்ளோ கெடச்சுது” என்றாள் மறுபடியும்.

“வுட மாட்டியே, வாத்தியாரு வீட்ல அம்பது. அப்பால வெறகுக் கடயில ஒரு அம்பது தேறுச்சு” என்றான் அயர்வுடன்.

“இந்தாய்யா இதையுஞ் சேத்து நாள தபாலுக்கு மொதல்ல அனுப்பீருக. மிச்சத்தை எப்படியாச்சும் பொரட்டி சீக்கிரமா அனுப்புதோம்னு ஆர விட்டாவது ரெண்டு வரி எழுதிப் போட்ருக” மெலிந்த குரலில் பேசியவள் தட்டுத் தடுமாறி சேலை முடிப்பில் இருந்த கசங்கிய பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கையில் திணித்தாள்.

“ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு..இம்புட்டுப் பணம் ஏது புள்ள” கூவினான் மாரி.

”சொன்ன பிற்பாடு என்னய ஏசிப்பிடாதீக. உச்சி நேரந்தன்னியும் வயல்ல நின்னுட்டு அரை நா கூலி மட்டும் வாங்குனனா..! அந்தானிக்கு அப்படியே டவுணு ஆசுபத்திரி போய் ரத்தங் குடுத்தேன். அவுகதான் சாப்பாடுங் குடுத்து இப்படிக் கணிசமா கையில தந்தாக. எல்லாம் அந்தப் புண்ணியவதி முக்கு வீட்டு கருப்பாயி சொன்ன ரோசனதான்” திணறித் திணறி பேசியவள் மீண்டும் சுருண்டு விழுந்தாள்.

“ரோசன கொடுத்தவளப் பாம்பு புடுங்க. புண்ணியவதியாம்ல வருது நல்லா வாயில. பாவிமவளே ஒடம்பு கெடக்க கெடயில நெசமாலும் ரத்தத்தை வித்தா பணங் கொண்டாந்தே”
நெஞ்சு பதற அவளை வாரி எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.

“தாயீ இப்பத்தான் அந்த டீக்கட பயட்ட வீம்பாப் பேசிட்டு வந்தேன். ஆனா எனக்காக இல்லாங்காட்டியும் ஒனக்காகவாவது ஆண்டவங் கருணயில நம்ம மவன் படிச்சு ஊரு கண்ணு படுதாக்ல ஒசந்து நம்மளயும் கூட்டி வச்சுக்கோணும். அவனாச்சும் ஒன்ன ராணி கணக்கா வச்சுக் காப்பாத்தோணும்”

ஆற்ற மாட்டாமல் குலுங்கிக் குலுங்கி அழுதான் மாரி.

(முற்றும்)

[1990 ஜனவரி மாத ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகையில் வெளியானது][இங்கு வலையேற்றிய பின் டிசம்பர் 12, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]

புதன், 19 நவம்பர், 2008

இரத்த பாசம் (பாகம் 1)

சமீபத்திய சட்டக் கல்லூரி சம்பவம் நமது சமுதாய அமைப்பின் சீர்கேடு மட்டுமல்ல நாட்டின் சாபக்கேடும் கூட.

பாசத்தைக் கொட்டி வளர்த்து..
இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து..
கனவுகளைக் கண்களில் ஏந்தி..
நினைப்பை நெஞ்சில் தாங்கித்தான்..
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறார்கள். இது எந்தத் தட்டு மக்களுக்கும் பொருந்தும். இந்தப் புரிதல் இருந்தால் பொறுப்புணர்வும் கூடவே வரும் மாணவருக்கு. ஆனால் இவர்களை திசை திருப்பும் தீயசக்தியாக அல்லவா இருக்கிறது சமுதாயம்?

தங்கள் சுயநலத்துக்காக மாணவர்களை சாதி மதம் கட்சியின் பெயரில் பகடைக் காய்களாய் உருட்டிக் கொண்டிருக்கும் சமுதாயத்துக்கு என்று வரும் புத்தி என்கிற வேதனை எழ இக் கதையைப் பதிவிடும் எண்ணம் தோன்றியது.

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட கதையாகையால் அந்தக் காலக் கட்டத்தை மனதில் கொண்டு வாசித்தால் ‘லாஜிக்’ இடிக்காது. அப்படியே இடித்தாலும் இக்கதையில் காணப்படும் உணர்வுகள் இன்றளவும் உயிர்ப்பானவை. உண்மையானவை.

இனி கதை...



"லே மாரி!” என்ற குரலுடன் தொடர்ச்சியான சைக்கிள் மணியோசையும் கேட்க ‘யாரோ கூப்புடுதாக்ல இருக்கு. என்னான்னு பாருமய்யா” தாயி கணவனை உலுக்கினாள். தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வெளியில் வந்தான் மாரி.

“அடடே! டீக்கடை அண்ணாச்சிங்களா? வாங்க வாங்க”

“ஆமா, விடிஞ்சும் விடியாம மூணு மணிக்கெல்லாம் ஒங்கூட்டுல விருந்து சாப்பிடத்தான் கெளம்பி வந்திருக்கனாக்கும்” சலித்தபடி கையிலிருந்த உள்நாட்டு உறையை நீட்டினார் கண்ணுச்சாமி.

என்னமோ மகனையே பார்ப்பது போல மாரி முகம் மலர அதை வாங்கிக் கொண்டான்.

“நெதமும் எங்க வூட்டைத் தாண்டித்தான் போற வார. நின்னு ‘கடிதாசி வந்திருக்கா’ன்னு கேட்க என்ன கொள்ளை பிடிச்சிருக்கோ” என்று சைக்கிளைத் திருப்பினவரை வழி மறிப்பது போல நின்று கொண்டு “அண்ணாச்சி நல்லாருப்பீக. அப்படியே இதக் கொஞ்சம் வாசிச்சுக் காட்டீர மாட்டீங்களா” கெஞ்சினான் மாரி.

“அடங்கொப்புறானே, எடத்தக் குடுத்தா மடத்த புடுங்கறான் பாரு! காலங்காத்தால ஒன்னோட பெரிய ரோதனயால்ல போச்சு. கடையத் திறக்க நேரமாவுது மாரி. இந்தா.. இந்நேரம் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பஸ்ஸைப் புடிக்கிற சனங்கல்லாம் வர ஆரம்பிச்சிருப்பாங்க. பொழப்பக் கெடுக்காதப்பா. வேற யாருட்டயாச்சும் கேட்டுக்க”

தன்னை விலக்கி விட்டு சைக்கிளில் விரைந்தவரை ஒரு கணம் வெறித்துப் பார்த்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தான் மாரி.

ன்னாத்துக்கு இந்தாக் கோவமா ஏசுதாரு?” மெலிந்த குரலில் வினவிய தாயி மெதுவாக எழுந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.

”ஆமா, அட்ரசு இல்லாத குடிசேல இருந்துக்கிட்டு அடுத்தவன் வூட்டு மூலமா கடிதாசி வாங்குறோம்ல! கொண்டு தாரவன் நாலு கொடை குடுத்தா அதையும் வாங்கிக் கட்டிக்கத்தான் வேணும்”

“என்ன எம்புள்ள கதிருட்டேருந்து கடிதாசியா” பூரித்துப் போய் கேட்டாள்.

“பாரேன், நேத்து ராவையிலேருந்து பேசக் கூட திராணியில்லன்னு மொடங்கிக் கிடந்தவ, புள்ள கடிதாசி போட்டிருக்கான்னதும் என்னமா கூவுற” கிண்டலாகச் சிரித்தபடி அவள் அருகே அமர்ந்து கடித உறையைப் பிரிக்கப் போனான்.

“இந்தாய்யா, போனவாட்டி போல எக்குத் தப்பா கிழிச்சு வைக்கப் போறீக.பேசாத ஆருட்ட படிக்கத் தரப் போறீகளோ அவுகளே பிரிக்கட்டும்னு வுடும்” தாயி பதறி எச்சரித்தாள்.

”அதுஞ்சரிதான், இந்தக் கோட்டிக்கார பயமவனும் ஏந்தான் நீல ஒறையில எழுதறானோ. கேட்டாக்க கார்டு போட்டா கவுரவக் கொறச்சலுங்கறான். என்னமோ போ..!” என்றபடி கடிதத்தை வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டு எழுந்தான்.

”சரி தாயீ நா கெளம்புதேன். அப்புறம் மாடுங்க கத்த ஆரம்பிச்சிரும். இன்னிக்கு சோறு ஒண்ணும் ஆக்காதே. பழசு கெடக்குல்லா. படுத்து நல்லா தூங்கி முழி”

துண்டை தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு கிளம்பியவனை “ஏன்யா காசு ஏதும் கேட்டு எழுதியிருக்க மாட்டானுல்ல” தாயியின் பரிதவிப்பான கேள்வி தடுத்து நிறுத்தியது.

“போ புள்ள. போன மாசந்தான ஐநூறு ரூவா அனுப்பிச்சோம். திரும்பயும் கேட்டு எழுத அத்தன வெவரங் கெட்டவனா? ‘அனுப்பிச்சது வந்து சேந்தது ரொம்ப சந்தோசம்’னு எழுதியிருப்பான்”

“என்னமோய்யா. விக்கக் கூட வூட்ல பொட்டுச் சாமான் கெடயாது. இருந்த ஒண்ணு ரெண்டு அண்டா குண்டானையும் வித்து அனுப்பியாச்சு”.

“அட, மனசப் போட்டு ஒழப்பிக்காத. நா வருசையா எல்லா வூட்டுலேயும் தொழுவெல்லாஞ் சுத்தம் பண்ணிட்டு, மாடுங்களக் குளுப்பாட்ட வாய்க்காலுக்குப் பத்திட்டுப் போறதுக்கு முன்னால, ஒரு ஆறு மணி வாக்கில இங்கன வந்து விசயத்த சொல்லிப்புட்டுப் போறன். அதுக்குள்ள ஆரும் அம்புடாமயா போயிருவாக வாசிச்சு சொல்ல”

மனைவியின் அருகில் வந்து அவள் தோளைத் தட்டி “நா கதவ சாத்திட்டுப் போறன். கொஞ்ச நேரம் நிம்மதியா தலயச் சாயி” ஆதுரத்துடன் சொல்லி விட்டு வெளியேறினான் மாரி.

வன் மூடிச் சென்ற கதவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் தாயி.

‘கடவுளே இது காசு கேட்டு வந்த கடிதாசியா இருக்கப் படாதே. இந்த மனசனும் நாயாத்தான் அலக்கழியுதாரு. ஊரச் சுத்தி கடனு. எல்லா வூட்டுலயும் முன் பணம் வாங்கிட்டாரு. இனிம ஆருட்டன்னு போயி கேக்க முடியும்’

கணவனை நினைத்து இப்படிக் கலங்கிய உள்ளம் மறுகணமே மகனை நினைத்து மருகத் தொடங்கியது.

‘அவனுந்தான் என்ன செய்வான்? பெரிய எஞ்சனீரு படிப்பு படிக்கான். ஆவாதா பின்ன செலவு? ஆத்தா அப்பன்னு இந்த ரெண்டு உசுரும் கிடக்குந்தன்னியும் இங்கனதான கேக்கும் புள்ள’

எண்ண ஓட்டங்களுக்கிடையே உறங்கிப் போனவள் “ஏ தாயக்கா” என்ற ராக்காயியின் கூப்பாட்டைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.

”எம்மா நேரமா கூப்புடுதேன். கதவயே தெறக்கல. என்னமோ ஏதோன்னு உள்ளார வந்தேன். ஒடம்புக்கு என்னா?”

“ஒரே அசதி, கையுங் காலும் கழண்டுரும் போலல்லா இருக்கு”

“ப்போ, சரி அப்ப நா கெளம்புதேன். நயினார் கொளத்துக்கு அந்தாண்ட வயல்ல அறுப்புக்கு ஆளு கூப்புட்டு லாரி இட்டாந்திருக்காக. இன்னும் அரை மணில கெளம்பிரும். எல்லாரும் போறம். ஆஞ்சு ஓஞ்சு கெடக்கிற நீயி அங்கன வந்த என்னாத்த கிழிக்கப் போற? பேசாத வூட்லதான் வுழுந்து கெட”

’உனக்கென்ன கொடுத்து வச்ச மவராசி. ஒன்னப் போல தெம்பா இருந்தாக்க எம் புருசனை இந்தப் பாடு பட வுடுவனா என்ன’ முணுமுணுத்தபடி மீண்டும் படுக்கப் போனவள் மாரி வருவதைப் பார்த்ததும் ஒற்றைக் கையை ஊன்றி அமர்ந்தாள். அவன் முகத்தைப் பார்த்தே அவளுக்குப் புரிந்து போயிற்று.

“எவ்ளோ வேணுமாம்?”

“முன்னூறு, அதும் அவசரமா வேணுமாம். பரிச்சைக்குக் கட்டணுமாம்”

கவலை தோய்ந்த முகத்துடன் அவள் அருகில் அமர்ந்தான் மாரி.

பாவம் அவனும்தான் என்ன செய்வான். ஓய்வா ஒழிச்சலா? நாள் முழுக்க உழைக்கத்தான் செய்கிறான். ஏழெட்டு வீடுகளில் மாடு கவனிக்கிறான். அதிகாலையில் கிளம்பிப் போனால் தொழுவை சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி தண்ணீர் வைத்து, பால் கறப்பவர் கறக்கின்ற வேளையில் சாணங்களை வரட்டி தட்டி காயப் போட்டு, பின் மேய்ச்சலுக்கு மாடுகளைப் பற்றிச் சென்றால் பொழுது சாயத்தான் திரும்ப முடிகிறது. அதன் பிறகும் கூட முடிகிற போது விறகுக் கடையில் மரம் உடைக்கிற வேலை என எது கிடைத்தாலும் விட்டு வைப்பதில்லை.

தன்னால் ஒரு வேலையில் நிரந்தரமாக இருந்து கணவனுக்கு உதவ முடியவில்லையே என்று தாயிக்குத் தாங்க முடியாத ஆற்றாமையாக இருந்தது. அவள் உடல் நிலை அப்படி. பத்து நாள் வயல் கூலிக்குப் போனால் பத்து நாள் விழுந்து கிடப்பாள். மாரி வேலை பார்க்கும் வீடுகளிலிருந்து நெல் அவிக்க, அரிசி புடைக்க என்று அடிக்கடி அழைப்பு வரும். கணவன் அவர்களிடம் வாங்கியிருக்கும் முன் பணத்தை மனதில் கொண்டு உடம்புக்கு முடியா விட்டாலும் போய் செய்து விட்டு வருவாள்.

போனமுறை வாத்தியார் வீட்டம்மா கூடக் கேட்டாள் ”ஏண்டி தாயீ, எங்க வீட்ல நெரந்தரமா வீட்டு வேலைக்கு இரேன்னு நானும் நாலு மாசமா கேக்கறேன். இந்தா அந்தான்னு மழுப்பிட்டே போறியே. பட்டணம் போல் இப்ப இங்கியும்லா வேலைக்கு ஆளு கிடைக்கறது குதிரக் கொம்பாப் போச்சு. எல்லாம் வீட்டோட இருந்து பீடி சுத்தறதுல சுகங் கண்டுட்டுதுகள்”

இப்படி அந்த அம்மாள் அலுத்துக் கொண்ட போது ”ஏம்மா நெரந்தரமா வாரேன்னு ஒத்துக்கிட்டா சொன்ன வாக்கு பொரளாம நெதம் வரணும். இந்தப் பாவி மவளுக்குதான் பாதி நாள் படுக்கையில போகுதே. வேணா என்னால முடியறப்பல்லாம் வந்து ஒங்களுக்கு ஒத்தாசையா இருக்கேன்” என்றாள் சமாதானமாக.

“ஆமா நீ எப்போ வருவே என்னிக்கு வர மாட்டேன்னு தெரியாத பாத்திரந் துணியெல்லாம் நாறப் போடவா? பாக்க நல்லா திராட்டிக்கமாதான் தெரியுத. முடியல முடியலன்னு ஒனக்கு சும்ம ஒரு மனப் பிராந்திதான்” சுளுவாகச் சொல்லி விட்டாள் அந்த அம்மாள். ஆனாலும் தாயிக்கு அவள் மேல் ஆத்திரம் வரவில்லை. மாதச் சம்பளம் வரக் கூடிய வேலைக்குப் போகும் வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று தன்னைத்தான் நொந்து கொண்டாள்.

’ஹூம் இன்னிய பாட்ட மொதல்ல பாப்போம்’ துரத்திய நினைவுகளைத் துடைத்து உதறினாள்.

ருட்டியாச்சும் கேட்டுப் பாத்தீகளா?” வரப் போகும் பதிலைத் தெரிந்தே கேட்டாள்.

“ஆருட்டன்னு போய் நிக்க? கேட்டோம்னாக்க ‘ஒபகாரச் சம்பளத்தில படிக்கிற பயலுக்கு அப்படி என்ன அடங்காத செலவு’ன்னு மூஞ்சில அடிச்சாப்ல கேக்கறானுக. நம்ம பொறப்ப வச்சு ஏதோ இந்த மட்டும் படிக்க எடம் கிடைச்சுதேன்னு நாம சந்தோசப் பட்டா அதுவே பாதி பயலுவளுக்கு வயித்தெரிச்சலா இருக்கு”

தாயி பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாய் இருந்தாள் சில கணம். பிறகு சுவரைப் பிடித்தபடி எழுந்தவள் நிற்க முடியாமல் தடுமாறினாள். கண்ணை மூடி நின்று ஒருவாறாகத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மெல்ல நடந்து பானையில் இருந்த ஒரு குத்துப் பழஞ்சோற்றையும் பிழிந்தெடுத்து தட்டில் போட்டு சிறிது உப்பும் போட்டு மாரியிடம் நீட்டினாள்.

“ஒனக்கு”

“ஒழைக்கிற மனுசன்.. நீரு சாப்பிடுமய்யா”

”நல்லாருக்கே கத. உக்காரு புள்ள. ரெண்டு பேருமா திம்போம். ஹூம் வயத்துப் பாடு கழியறதே மலைப்பா இருக்கேல என்னன்னுதான் இவன படிக்க வய்க்கப் போறமோ”

“மர வச்சவன் தண்ணீ ஊத்தாதயா போயிருவான். எல்லாக் கஸ்டமும் அவன் படிச்சு முடிக்கந்தன்னிதானே. அதுவர நம்மால முடிஞ்சத ராசாக்கு செய்வோம். வாத்தியார் வூட்டம்மாட்ட சொல்லிப் புடுமய்யா நாளேலருந்து அவுககிட்ட வூட்டு வேலைக்கு சேந்திடறேன்னு. இதச் சொல்லியே முன் பணமும் கேட்டுப் பாரும்”

கனவோடு கணக்குப் போட்டபடி ஒரு கை சோற்றையும் வாயில் போட்டு சாப்பிட்டதாகப் பெயர் பண்ணி விட்டு எழுந்தாள் தாயி. கையையும் முகத்தையும் அலம்பிக் கொண்டு புதிதாக உயிர் வந்தவள் போலத் தெம்புடன் வெளியில் கிளம்ப ஆயத்தமானாள்.

“எங்க கெளம்பிட்டே” ஆச்சரியமாய் கேட்டான் மாரி.

(தொடரும்..)


பாகம்: 2
  • 1990 ஜனவரி மாத ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகையில் வெளியானது]

  • இங்கு வலையேற்றிய பின் டிசம்பர் 12, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.

திங்கள், 13 அக்டோபர், 2008

கரையைத் தேடி...




ழைப்பிதழை வெகுநேரம் வெறித்துப் பார்த்திருந்த முரளி ஒரு முடிவுக்கு வந்தான்.

'உயிரை விட்டு விட வேண்டும்', உறுதியே எடுத்து விட்டான்.

'வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டோம்', விரக்தியின் விளிம்பில் வெம்பினான்.

"உன்னை வளர்த்துப் படிக்க வைக்க எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன், அத்தனையும் வேஸ்ட். நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்? உங்கூடப் பிறந்தவங்களப் பாரு படிச்சமா, கையோடு வேலையில சேர்ந்தமான்னு. ச்சே" என்று சினிமாவிலும் சீரியல்களிலும் காட்டப்படும் அப்பாக்கள் கற்பனை அல்ல என நிரூபிக்கிற அப்பா.

"அதச் சொல்லுங்க. உங்களுக்கு மட்டுமா வச்சான் செலவு. அந்த கோர்ஸ் பண்றேன் இந்தக் கோர்ஸ் பண்றேன்னு எம் பணத்தையும் ஏப்பம் போட்டதுதான் மிச்சம். அய்யா எந்த கோச்சிலும் ஏறின பாடில்லை," என்று அடிக்கடி குத்திப் பேசும் அண்ணன்.

"வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்," சம்பாதிக்கும் திமிரில் தேளாகக் கொட்டுகின்ற தம்பி.

அவனோடு பேசுவதையே குறைத்து விட்ட நோயாளி அம்மா.

"வேலை வெட்டி இல்லாதவன்" என்று அலட்சியப் பார்வை பார்க்கும் சமுதாயம்.

எல்லோருக்கும் மேலாக உமா. அவளுக்கு அடுத்த வாரம் திருமணமாம். அதைத்தான் அவனால் தாங்கவே முடியவில்லை.

வனும் உமாவும் கம்ப்யூட்டர் கோச்சிங் வகுப்பொன்றில் அறிமுகமாகி நல்ல நண்பர்களும் ஆனார்கள். இவன் அந்த நட்பைக் காதலாக்கிப் பார்த்த போதும், அவள் அதை நட்பாகவே பாவிக்கத்தான் விரும்பினாள்.. ஆனால், இவனது தீவிரத்தைப் பார்த்து மனம் இளகி தந்தை முன் கொண்டு நிறுத்தினாள்.. அந்த நல்ல மனிதரோ ஒரு வேலையோடு வந்தால் உனக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கிறேன். இல்லையெனில் தான் பார்க்கும் வரனையே மணந்து கொள்வாள் என்று வாக்களித்து ஒரு வருட அவகாசமும் கொடுத்திருந்தார்..

உமா கொடுத்து வைத்தவள். கோச்சிங் முடிந்த கையுடனே வங்கியொன்றில் வேலையும் கிடைத்து விட்டிருந்தது. இவன் நேரம் எந்த வேலையும் சரியாக அமைய வில்லை. வருடமும் ஒன்றல்ல இரண்டே ஓடிட இப்போது வேறு வரன் பார்த்து விட்டார் அவளது தந்தை. இவன் வேலைக்கு முயற்சி செய்யாமலா இருந்தான்? எத்தனை இன்டர்வியூக்கள்? எத்தனை தோல்விகள்? அதுவும் கடந்த ஒரு வருடமாக உலகப் பொருளாதாரச் சரிவில் எங்கு பார்த்தாலும் ஆட்குறைப்பு வேறு. இந்தச் சமயத்தில் வேலையில் எந்த முன் அனுபவமும் இல்லாத தன்னை எவர் சீண்டுவர் என்கிற தன்னிரக்கம் வேறு தாறுமாறாகச் சுரந்தபடி இருக்கையில்தான் இப்படியொரு இடி. ஏற்கனவே அவமானத்தைச் சுமந்தபடி ஊசலாடிக் கொண்டிருந்த மனது இப்போது அடியோடு அறுந்து விட்டதைப் போல உணர்ந்தான்.

'வேலையில்லாத வெட்டிப் பயல் என வீட்டுக்கு வேண்டாதவனாக இருந்தேன். இப்போது விரும்பியவளுக்கும் வேண்டாதவனாகி விட்டேன். வேலையும் கிடைக்காமல் உமாவும் கிடைக்காமல் எதற்காக யாருக்காக நான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்துக்கே வர வைத்து விட்டது, வாசல் வராந்தாவில் அன்று வந்து விழுந்த உமாவின் திருமண அழைப்பிதழ்.

ம்மாவுக்கு டாக்டர் தந்திருந்த தூக்க மாத்திரைக்கான ப்ரிஸ்கிரிப்ஷனை எடுத்துக் கொண்டான். தூங்கிக் கொண்டிருந்த அம்மாவிடம் இப்போது பணம் கேட்டால் கூடவே ஆயிரம் கேள்விகள் கேட்பாள். ஏனென்றால் அப்பாவுக்கு சரியான காரணம் சொல்ல வேண்டுமாம்.. அவளுடன் வாக்குவாதம் செய்யும் மனநிலையில் அவன் இல்லை. அலமாரியின் மேல் கை விட்டு துழாவியதில் சாவி கிடைத்தது. சத்தம் வராமல் திறந்தான்.. அவன் அதிர்ஷ்டம் இழுப்பறை வாயிலேயே அதன் சாவி. இழுத்தான். ஏழுமலையான் படம் கொண்ட அதரப் பழைய சாக்லேட் பெட்டியில் அம்மா வைத்திருந்த நோட்டுத்தாள் சில்லறைகளை அப்படியே எடுத்து பையில் திணித்துக் கொண்டான்.

வீதியில் இறங்கிய போது ஒரே ஒரு முறை உமாவைக் கடைசியாக அவள் வேலை பார்க்கும் வங்கியில் சென்று சந்தித்து வாழ்த்தி விடும் எண்ணம் வந்தது. 'ஏன் அவள் நிம்மதியை சந்தோஷத்தைக் கெடுக்கப் பார்க்கிறாய்' மனசாட்சி இடித்தது.

'நாளை என் மரணம் தெரிய வருகையில் அந்தக் குற்ற உணர்விலே வாழ்நாளுக்கும் வருந்தட்டுமே. கடைசி கணத்திலும் வாழ்த்த வந்த என் பெருந்தன்மையை நினைத்து உருகட்டுமே'. இன்னோரு பக்கம் சாத்தான் வேதம் ஓதியது. சாத்தான் ஜெயிக்க பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான்.

பேருந்துக்காகக் காத்திருந்த போது, "என்ன சார், எங்கே கிளம்பிட்டீங்க?" என்ற குரல் கேட்டுத் திரும்பினான். அவனுக்கு 'சார்' என்று மரியாதை கொடுக்கும் ஒரே ஜீவன் காயத்ரியாகத்தான் இருக்க முடியும். பக்கத்து வீட்டுப் பெண். பிரபல மருத்துவமனையொன்றில் நர்ஸாக இருக்கிறாள்.

"சும்மாதான், இப்படியே இந்திரா நகர் வரை போகலாம்னு.."

"அதென்ன 'சும்மாதான்'? நம்ம ஜனங்கதான் சார், இப்படி எதற்கெடுத்தாலும் சொல்லப் படிச்சிருக்காங்க ஒரு வார்த்தை 'சும்மா'ன்னு" என்று சிரித்தவளின் முகம், அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சுமதியைப் பார்த்ததும் பிரகாசமானது.

"ஹாய் சுமதி! எப்ப வந்தே? நேற்று கூட உன் வீடு பூட்டியிருந்ததே? ரெண்டு நாளா உன் மொபைலுக்கு முயற்சித்தேன் எப்ப வருவேன்னு தெரிஞ்சுக்க. ஸ்விட்ச்ட் ஆஃப்னே வந்தது"

"இன்னிக்கு காலையில்தான் வந்தோம். ரோமிங்ல இருந்ததால் செல்லை அணைத்து வைத்திருந்தேன். என் ஆஃபிசுக்கு லீவு எக்ஸ்டெண்ட் பண்ணக் கேட்டு அங்கிருந்தே மெயில் கூட அனுப்பி விட்டிருந்தேன்."

"ட்ரிப் எப்படி? மாமா ஊரிலே ஒரு வாரமும் குஷாலாய் கழிஞ்சுதுன்னு சொல்லு!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே"

அவள் குரலில் இருந்த உற்சாகக் குறைவைக் கவனிக்கத் தவறவில்லை காயத்ரி.

"ஏன் என்ன விஷயம்?"

"அதையேன் கேட்கிறே? ஊரிலிருந்து கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்ன எங்க மாமா வீட்டுக்கு எதிர்த்த வீட்டுப் பையன் தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டான். அந்தப் பையனுக்கு பதினெட்டே வயசுதான் பாவம்! 'நீ வேற விதமாய் போயிருந்தா கூட விதின்னு மனசு ஏத்திருக்கும். ஆனா நாங்கெல்லாம் வேண்டாம்னு உதறிட்டுப் போயிட்டியே? எப்படிப்பா மனசு வந்தது'ன்னு அவன் குடும்பம் கதறின கதறல் இருக்கே, அப்பப்பா..! சரியாப் படிக்கலேன்னு அப்பா ஓவரா திட்டிட்டாரு போலிருக்கு. மனுஷன் குற்ற உணர்விலே ரொம்பவே உடைஞ்சு போயிட்டார்."

'நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்?' அருகில் நின்றிருந்த முரளிக்கு சமீப காலமாய் தன் அப்பா அடிக்கடி கூறும் வார்த்தைகள் மனதினுள் வந்து போக 'வேண்டியதுதான் அந்த அப்பனுக்கு' என்ற காட்டமாக நினைத்துக் கொண்டான்.

"எதற்குத் திட்டுகிறார்? அப்படியாவது பையனுக்கு ரோஷம் வந்து நல்லாப் படிக்க மாட்டானாங்கிற ஆசையில திட்டியிருப்பார். அவர் செஞ்சது சரின்னு சொல்ல வரலை. நீ சொல்ற மாதிரி ஓவர்தான். இருந்தாலும் எந்த அப்பாவும் தன் பையன் ஒழிஞ்சு போகட்டும்னு மனசார நினைக்கவே மாட்டார். போறவன் போயிட்டான். இருக்கிறவங்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் பார்த்தியா? அவன் மேல பாவப்படுறியே?"

சுரீரென்று வந்த காயத்ரியின் பதிலில் இவன் திகைக்க ஏற்பட்ட அதே வியப்பில் சுமதி கேட்டே விட்டாள்: "என்ன மனசுடி உனக்கு? அவன் முடிவு உன்னைப் பாதிக்கவேயில்லையா?"

உஷ்ணமேறியது காயத்திரியின் குரலில். "பாதிக்கிறதனாலேதான் சொல்றேன், அவன் மேலே பாவமாயில்லேன்னு. பரிதாபப் படுறேன் அவன் குடும்பத்த நினைச்சு. வருத்தப்படுறேன் அவன் முட்டாள் தனத்தையும் கோழைத் தனத்தையும் நினைச்சு. ஆனா என்னால ஏனோ அவன் மேல இரக்கப் பட முடியல. வழி தெரியாம தடுமாறுகிற நம்ம இளைய சமுதாயத்தை நினைச்சு கவலைப் படத்தான் தோணுது. ரிசல்ட் சமயத்திலே எத்தனை ஸ்டூடன்ட்ஸ் தற்கொலை பண்ணிக்கிறாங்க பாரு! எதிர்காலத்தை எதிர் கொள்ளும் துணிச்சல் இல்லாத இவங்க கையில்தான் நாட்டின் எதிர்காலம் இருக்குன்னு நாம நம்பிட்டிருக்கோம்."

"ஈஸி காயத்ரி. ரொம்ப உணர்ச்சிவசப்படுறியே?"

"இல்லப்பா! ரொம்ப நாளாகவே எம் மனசை அரிச்சிட்டிருக்கும் விஷயம் இது. 'காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை! இளம்பெண் தற்கொலை'ன்னு எத்தனை ந்யூஸ் படிக்கிறே? இவங்கெல்லாம் காதலும், கலியாணமும் மட்டுமேதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அது வாழ்க்கையிலே ஒரு அம்சம்தான். இட்ஸ் ஒன்லி எ பார்ட் ஆஃப் அவர் லைஃப். விரும்பினவங்களை அடையறது ஒண்ணுதான் வாழ்க்கையோட லட்சியம்னு தப்புக் கணக்குப் போட்டு வாழறாங்களே! வாழ்க்கையிலே இதையெல்லாம் தாண்டி உயர்ந்த லட்சியங்கள் எவ்வளவு இருக்கு? நாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்ற என்னவெல்லாம் சாதிக்கணும்னு ஆக்க பூர்வமா சிந்திக்க மறந்திட்டு இந்த இளைய சமுதாயம் 'காதல் காதல்'னும், 'காதல் இல்லையேல் சாதல்'னும் இருப்பதைப் பார்த்தால் மனசு பதறது. 'சாதல்'னா 'சாகிறது'ன்னு நினைச்சுட்டாங்க!"

காயத்ரி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன் கன்னத்தில் விழுந்த அறைகளாக முரளி உணர, அவளோ யாரையும் சட்டை பண்ணாமல் சீரியஸாகப் பேச்சைத் தொடந்தாள்.

"போன வாரம் கூட எங்க ஹாஸ்பிடல்லே போஸ்மார்ட்டத்துக்கு ஒரு கேஸ் வந்ததுப்பா. பி.காம் படிச்சவனாம். வேலை தேடித் தேடி அலுத்துப் போய் தற்கொலை பண்ணிக்கிட்டானாம். இப்படி வெள்ளைத் துணியப் போட்டு மூடற நிலைக்குப் போனாலும் பரவாயில்லை. வெள்ளைச் சட்டை வேலை... அதாம்பா வொயிட் காலர் ஜாப் கிடைச்சாதான் பார்க்கணும்ங்கிற போலி கவுரவத்திலே ஒரேடியாப் போய்ச் சேர்ந்துட்டான்."

"அவன் ஒரு விரக்தியில அப்படி பண்ணியிருக்கலாமில்லே?"

"அந்த விரக்தியையே வெற்றியா மாற்றிக் காட்டறது நம்ம கையிலேதானே இருக்கு. முதல்லே தன்னம்பிக்கை இருக்கணும். 'நாமா தேடிப் போறதுதான் வேலைன்னு இல்லே. தேர்ந்து எடுத்துக்கிறதுக்கும் எத்தனையோ வேலை இருக்கு. எங்க கான்டீன் சர்வர் ஒரு போஸ்ட்க்ராஜூவேட். அவ்வளவு ஏன்? உங்க பக்கத்து வீட்டில இருக்கிற வேணு டிகிரிய முடிச்சிட்டு முதல்ல ஆட்டோதான் ஓட்ட ஆரம்பிச்சார். இப்பப் பாரு நாலு ஆட்டோ ரெண்டு டாக்ஸிக்குச் சொந்தக்காரராயிட்டார். தேடுறது கிடைக்கிற வரைக்கும் போலி கவுரவம்ங்கிற சட்டையைக் கழட்டிட்டு ஏதோ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாமே?"

"இந்த மாதிரி கோணங்களிலே எல்லாம் நான் யோசிக்கவேயில்லை காயத்ரி," என்றாள் சுமதி வியப்பு தொனிக்கும் குரலில்.

'நானும்தான்' என்று நினைத்துக் கொண்டான் முரளி. அவனுக்குள் ஒரு புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது.

"சரி இருக்கட்டும். இவங்களை விடு. புகுந்த வீட்டிலயோ வேலைக்குப் போகிற இடத்திலயோ ஏற்படுகிற ஏதேதோ பிரச்னைகளால உயிரை மாய்ச்சுக்கிற பெண்கள்?" சுமதியிடமிருந்து அடுத்தக் கேள்வி புறப்பட்டது.

"ம்ம்ம்... இல்லப்பா சூழ்நிலைக் கைதிகளாயிட்டாலும் கூட அவங்களும் முட்டாள்கள் கோழைகள்னுதான் சொல்லத் தோணுது. உலகத்தை விட்டே வெளிநடப்பு செய்யத் துணிஞ்ச பிறகு புக்ககத்தை விட்டு வெளிநடப்பு செய்ய ஏன் தயங்கணும்? சொந்தக் காலிலே வாழ்ந்து காட்ட முடியும்ங்கிற தைரியம் எப்பவும் இருக்கணும். இப்பல்லாம் பொண்ணப் பெத்தவங்க சீர் செனத்திய விட பொண்ணுகளுக்கு முக்கியமா இந்தத் தைரியத்தை தந்து அனுப்புறதும் ஆம்பள பசங்களுக்கு குறைவில்லாம அவங்களையும் படிக்க வைக்கறதும் பாராட்டுக்குரியது. ஒரு பொண்ணு வீட்டிலயும் சரி வேலைக்குப் போகிற இடத்திலயும் சரி, கோழையா பயந்து சாகிறத விட வாழ்ந்து அவளுக்கு அநியாயம் பண்றவங்கள இந்த சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாமில்லையா?"

அதுவரை பேசாமலிருந்த முரளிம், "உங்களை ஒண்ணு கேட்கலாமா காயத்ரி" என்றான். 'தாராளமாக' என்பது போலப் பார்த்தாள் காயத்ரி.

"தற்கொலை பண்ணிக்கிறதை முட்டாள்தனம்னு சொல்றீங்க.. சரி. ஆனா கோழைத்தனம்னு எப்படிச் சொல்ல முடியும்? சாகிறதுக்கு ஒரு அசாத்திய தைரியம், துணிச்சல் இருக்கணுமில்லையா?"

காயத்ரியின் முகம் சிவந்தது.

"பிரச்னைகளை விட்டு ஓடறது துணிச்சலா? தைரியமா எதிர் கொண்டு நிக்கறது துணிச்சலா? தற்கொலை ஒரு ஈஸி எஸ்கேப்பிஸம். பிரச்னைகளுக்குத் தீர்வு தற்கொலைதான்னா எல்லோருமே சாக வேண்டியதுதான்! யாருக்குதான் பிரச்னையில்லை?"

"ஒத்துக்கறேன். பிரச்னை ஒரு பொதுச் சொத்துதான். ஆனா அவங்க துவண்டு போறது ஓட ஓட விரட்டும் தாங்க முடியாத தோல்விகளாலே..."

"முரளி சார், தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு..."

"இருங்க இருங்க. முதல் சில தோல்விகளிலே வேணுமானா அப்படி நினைக்கலாம் நம்பலாம். ஆனா வெற்றிப் படியே கண்ணுக்குத் தெரியாம அடுக்கடுக்கா தோல்விகளே தொடரும் போது..?"

"வெற்றி கிடைக்குமோ என்னமோ? அதனாலே இப்பவே செத்திடலாம்னு முடிவு பண்ணிடணுமா? முயற்சி வேணுங்க. நடுக்கடலிலே கப்பலே கவிழ்ந்திட்ட மாதிரி பெரிய கஷ்டம்னே வச்சுக்குவோம். கரையையே பார்க்க முடியலை. அப்போ 'நாம நீந்தி நீந்திக் களைச்சுப் போய் அப்படியும் கரையே தெரியாமப் போயிட்டா, கரை சேர முடியாமப் போயிட்டா என்ன பண்றது... அத்தனை கஷ்டப்பட்டு சாகிறதை விட முயற்சியே பண்ணாம இங்கேயே இப்பவே மூழ்கிச் செத்திடுவோம்'னு முடிவெடுப்பீங்களா? இல்ல, கிடைக்கிற ஏதோ ஒரு கட்டையை ஆதாரமா பிடிச்சுக்கிட்டு எதிர்நீச்சல் போட்டு, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கரையைத் தேடிப் போவீங்களா? எதுங்க விவேகம்?"

பொட்டில் அறைந்தது போலப் புறப்பட்ட அவளது கேள்வியிலே பொதிந்திருந்த பொருளைப் புரிந்து கொண்டான் முரளி. மனதில் இருந்த அத்தனை பாரங்களையும் காயத்ரி என்ற காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. கூடவே உமாவின் நினைவுகளையும். நன்றியுடன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

"நான் சொல்றதெல்லாம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?"

'இல்லை' என்பது போலத் தலையாட்டியவன், என்ன பதில் சொல்வதென யோசிக்கையிலேயே அவனுக்குச் சிரமம் வைக்காமல் பேருந்து வந்து நின்றது. ஏறுவதற்கு எல்லோரும் எத்தனிக்கையில், இவன் மட்டும் அம்மா பார்க்கும் முன் பணத்தைத் திரும்ப வைக்க வேண்டுமே என்ற அவசரத்துடன் திரும்பி நடக்கலானான்.

"இந்திரா நகர் போகணும்னீங்களே? இப்ப எங்க போறீங்க..?" அவசரத்துடன் கூவினாள் காயத்ரி.

"கரையைத் தேடி..." என்றபடி இவன் கை அசைக்க, அவன் சொன்னது புரியாத முக பாவத்துடனே காயத்ரி பஸ்ஸில் ஏறிக் கொள்ள, அது வேகமாக நகர்ந்தது.

*** *** ***

*மார்ச் 1988 "நண்பர் வட்டம்" இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை காலத்திற்கேற்ற சிறு மாற்றங்களுடன்.


*இங்கு வலையேற்றிய பின்
அக்டோபர் 16, 2008 திண்ணை இணைய இதழிலும் அக்டோபர் 17,2008 கீற்று இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]

*26 மார்ச் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும்:









வியாழன், 5 ஜூன், 2008

ஜானி ஜானி நோ பப்பா:( ?


"ப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ்"

"ஏண்டா இப்படிக் கிளம்புற நேரத்தில் உயிரை வாங்கிற! சொன்னா சொன்னதுதான்." பெட்டிகளை வேனில் ஏற்றுவதில் மும்முரமாக இருந்த ரகுபதி சுள்ளென்று எரிந்து விழுந்தார்.

முரளிக்கு கண்ணீர் வந்தது. மெல்ல மண்டியிட்டு அமர்ந்து ஜானியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். "இல்லடா ராஜா, உன்னை விட்டுட்டு போயிட மாட்டேன்" என்றான் அடிக்குரலில். அதற்கு புரிந்ததோ என்னமோ வழக்கத்தை விட அதிக பாசத்துடன் வாலை ஆட்டியபடி அவனிடம் குழைந்தது.

வீட்டுக்குள் இருந்து எதேதோ சாமான்களை வேனில் ஏற்றுவதற்காக சிரமத்துடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த அக்கா கல்பனா கோபத்தில் கத்தினாள். "எப்படி அல்லாடுறேன்! இங்க வந்து ஒரு கை கொடேன். இன்னும் ஏன் அதோடயே இழைஞ்சிட்டு நிக்கறே ? சனியனை என்னவானாலும் கூட்டிட்டுப் போகறதில்லேன்னு ஆயிடுச்சு." ஜானியைக் கண்டாலே அவளுக்கு அப்படியொரு வெறுப்பு. ஜானிக்கு பயந்துதான் தன் தோழிகள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்று வேறு நினைப்பு.

"போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு" பதிலுக்குச் சீறினான் முரளி. 'சே! ஜானி எவ்வளவு நன்றியாய் பாசமாய் இருக்கிறது! யாரும் அதைப் புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறார்களே! ' வருத்தம் மேலிட அதைத் தடவிக் கொடுத்தான்.

ஜானி குட்டியாய் இருந்த போது, ஒரு மழை நாளில் குளிரில் நடுங்கியபடி இவன் வீட்டு வராந்தாவில் பதுங்க, பாவப்பட்டு அடைக்கலம் கொடுக்கப் போய் இவனுடனேயே ஒட்டிக் கொண்டது. இந்த இரண்டு வருடத்தில் 'திமுதிமு ' என ஒரு பெரிய கன்றுக்குட்டியின் சைசுக்கு என்னமாய் வளர்ந்து விட்டது. ஸ்கூலுக்கு, கடைக்கு, நண்பர் வீடுகளுக்கு என் எங்கு போனாலும் கூடவே வரும்.

இப்போது அப்பாவுக்குப் பதவி உயர்வோடு மாற்றலாகி விட்டது. வீட்டு சாமான்களெல்லாம் டெம்போவில் போயாகி விட்டது. இவர்களும் இன்று கிளம்புகிறார்கள். ஜானியைக் கூட அழைத்துப் போக வேனில் இடமிருந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் மனதில் இடமில்லையே.

கடைசி நிமிடம் வரை போராடிப் பார்த்து விடுவது எனத் தீர்மானித்தவன் போல "அப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ்" என மறுபடியும் கெஞ்ச ஆரம்பித்தான் முரளி.

"டேய் சும்ம தொணதொணக்காதே! ஏதோ ரொம்ப ஆசைப்பட்டியேன்னு இது நாள் வரை அதை இருக்க விட்டதே பெரிசு. நான்தான் அங்கே போனதும் உனக்கு வேற நாய் வாங்கித் தர்றேன்னு சொல்றனே! " என்றார் எரிச்சலாய்.

"ஏம்பா! அந்த புது நாய் என் ஜானியாகிட முடியுமா என்ன ? "கண்ணில் நீர் முட்டக் கேட்டான் முரளி.

"புரியாம பேசறியேடா! வாங்கிற நாய்க்கும் ஜானின்னு பேர் வச்சா போச்சு! நாம போற இடத்தில அவனவன் டாபர்மேன், அல்சேஷன்னு வளர்த்திட்டிருப்பான். அங்கே இந்த தெரு நாயைக் கூட்டிட்டுப் போனா நம்ம ஸ்டேட்டஸ் என்னாகிறது? "

"சரியா சொன்னீங்கப்பா, 'புசுக் புசுக்'குன்னு பட்டுப் போல ஒரு பொமரேனியனை வாங்கி வளர்ப்போம்" என்று ஒத்துப் பாடினாள் கல்பனா.

"நீ சும்மா இருடி" என்று அவளை அதட்டிய முரளி ஒரு கணம் அப்பாவை உறுத்துப் பார்த்து விட்டுக் கேட்டான், "ஏம்ப்பா இந்த வாயில்லா ஜீவன்கள் கிட்டேயே ஜாதி பார்க்கிற நீங்களா மனுஷங்களுக்கிடையே உள்ள ஜாதி வித்தியாசங்களை ஒழிக்கப் போறீங்க?"

த்து வயது பாலகனின் அந்தக் கேள்வி, பல ஆயிரம் பாம்புகள் கொத்தியது போலிருந்தது ரகுபதிக்கு.

நேற்று அவருக்கும் குடும்பத்தினருக்கும் தரப்பட்ட பிரிவு உபசார விழாவில், தான் பேசியதைத்தான் முரளி குறிப்பிடுகிறான் எனப் புரியாமல் இல்லை.

"எனக்குப் பதவி உயர்வு கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சதும் ஜாதி சங்கத்திலே இருந்து கூட்டமா வந்து எனக்குப் பாராட்டு விழா எடுக்க விரும்புறதா சொன்னாங்க. 'முதல்ல உங்க சங்கத்தை கலைச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு பெரிய விழா எடுத்துட்டுப் போறேன்'னு நான் சொன்னேன்"

நன்றியுரை ஆற்றும் போது அவர் சொன்னதைக் கேட்டு சிரித்த கூட்டத்தை நோக்கி கையமர்த்தி விட்டு ஆவேசமாய் "ஜாதி என்னய்யா ஜாதி ? நான் உசந்தவன், நீ தாழ்ந்தவன்கிற சண்டையே ஜாதியாலதான் வருது. ஜாதிகள் மறையணும்னா முதல்படியா சங்கங்கள் கலையணும். போற இடத்திலே எல்லாம் நான் இதை அஞ்சாமல் அடித்துச் சொல்லத்தான் போகிறேன்" என்றார் ரகுபதி.

அப்போது கை தட்டிக் கரகோஷித்தக் கூட்டம் இப்போது கை கொட்டி சிரிப்பது போல மனதுக்குள் ஒரு பிம்பம் தோன்றி மறைய, தலையை உலுக்கிக் கொண்டார் ரகுபதி.

"எவ்வளவு திமிர் இருந்தா அப்பாவையே எதிர்த்துப் பேசுவ நீ" என்று சமயம் பார்த்துத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள கை ஓங்கிய கல்பனாவைத் தடுத்த ரகுபதி, முரளியைக் கனிவுடன் நோக்கி "ஜானியும் நம்ம கூட வருது" என்றார்.


***



'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1992 'நண்பர் வட்டம்' இலக்கியப் பத்திரிகையிலும், பின்னர் August 28, 2003 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்த சிறுகதை.

படம் : இணையத்திலிருந்து

இங்கு வலையேற்றிய பின் மார்ச் 11, 2009 யூத்ஃபுல் விகடன் இணையதளத்தில் கீழ் காணும் தலைப்புடன் வெளிவந்த இச்சிறுகதைக்கு விகடன்.காம் முகப்பிலும் லிங்க் தரப்பட்டிருந்தது:


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin