வானத்தின் அகலம்
நூறாண்டு கடந்த
பழைய அரசமரத்திலிருந்து
ஒவ்வொரு காலையிலும்
புறப்படுகின்றன பறவைகள்
வானத்தின் அகலத்தை
அளந்து பாராமல்
இன்றைய பறப்புக்கு
இன்னொரு நாள் பறக்க
தேவையான நீலம்
மீதமிருக்குமா என
ஒருபோதும் அவை
கேட்டுக் கொள்வதில்லை
அடிவானம் விலகிச் செல்கிறதா
அல்லது
மெல்ல நெருங்கி வருகிறதா என
யோசித்ததில்லை
சிறகுகளுக்குக் கீழே
ஒவ்வொரு கணமும்
விரிந்து கொண்டிருக்கும்
வழியைத் தவிர
வேறு எந்த வரைபடத்தையும்
பின்பற்றுவதில்லை
சென்ற இடங்களுக்கு
சாட்சியாக
வீட்டுக்குக் கொண்டு செல்ல
வானத்தின் துண்டுகளை
சேகரிப்பதில்லை
எழுகின்றன
சிதறுகின்றன
காற்றிடம் தம்மை
ஒப்படைக்கின்றன
வயல்களுக்கிடையே
கூரைகளுக்கிடையே
தொலைவில் ஒலிக்கும்
அழைப்புகளுக்கிடையே
பகலைக் கழிக்கின்றன
மாலை சாய்கையில்
திரும்புகின்றன
புறப்பட்ட அதே சிறகுகளுடன்
புறப்பட்ட அதே கிளைக்கு—
வானம் முழுவதுமே
இரு கிளைகளுக்கு
இடையேயான தூரமே தவிர
வேறொன்றுமில்லை
என்பதைப் போல.
*
படம்: ஏஐ உருவாக்கம்
*
26 ஜூலை 2026, சொல்வனம் இணைய இதழ்: 371_ல் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளில் ஒன்று.


படம் அருமை. கவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவானம்முழுவதும் இரு கிளைகளுக்கு இடையேயான தூரம் தான்.
அது உண்மைதான். அவைகள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகம்.
இயற்கையோடு இயந்து வாழும் . வானத்தில் பறக்க நீள அகலங்களை கணக்கிடுவது இல்லை.
ஆம், பறவைகளிடம் கற்க ஏராளமானவை உள்ளன. தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குஇரு கிளைகளுக்கிடையேயான தூரம்தான் வாழ்க்கை அவைகளுக்கு. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான தூரம் மனிதனுக்கு! கவிதை அருமை.
பதிலளிநீக்குஅழகாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி ஸ்ரீராம்.
நீக்குசென்ற வாரம் மொட்டை மாடியில் காலை 6;30 மணிக்கு பார்த்தபோது காக்கைகளும், புறாக்களும் கூட்டம் கூட்டமாக வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் மனிதர்கள் போல பறப்பதைப் பார்த்தேன். எனக்கும் அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
பதிலளிநீக்குசில காக்கைகள் எழுந்து ஒன்றிரண்டாக அல்லது கூட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து சிறகுகளை சோதித்துக் கொண்டு மெல்ல நேரம் எடுத்து பறக்க ஆரம்பித்தன.
இன்றைய உங்கள் கவிதை எனக்கு அவற்றை நினைவு படுத்துகிறது.
பறவைக் கூட்டங்களைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியே. இங்கு கிளிக் கூட்டங்களைக் காண முடிகிறது. பொதுவாக காலை வேளைகளில் எல்லாப் பறவைகளும் சிறகுகளைச் சோதித்தபடி அமர்ந்திருக்கும். பல பறவைகளை அந்த போஸில் படமாக்கியுள்ளேன்:).
நீக்குகருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.