நேர்க் கோட்டில் சில கணங்கள்
வளைந்து திரும்பி,
இராட்டினக்குதிரை போல்
உயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள்
கைக்கெட்டும் தூரத்தில்
கைக்கெட்டா கனவொன்றைப் போல்
பறந்து கொண்டிருந்த பருந்தினை
விடாமல் பின்தொடர்ந்தது
அங்குல இடைவெளியில்
இரண்டாம் பருந்து.
மேகங்கள் கூடிக் கூடி
வேடிக்கை பார்த்திருக்க
மூன்றாவதாய் ஓர் பருந்து
வேகமாய் இவற்றைக் கடக்க
ஆவலாய் முதல் பருந்து
அதனைத் தொடர ஆரம்பித்தது.
விக்கித்து விலகிய இரண்டாவது
செய்வதறியாத நிலையில்
உயர உயர எழும்பி
சுற்றிச் சுற்றி வந்தது
தன்னந்தனியாகக் காற்றுவெளியில்..
தாழப் பறந்து கொண்டிருந்த
புறாவொன்று கண்ணில் படவும்
அதிவிரைவாய்
காற்றைக் கிழித்துக் கீழிறங்கி
ஆக்ரோஷமாய்
துரத்தத் தொடங்கியது
வாழ்வோ பணியோ
பதவியோ பந்தயமோ
ஏமாற்றத்தின் வலியை
தோல்வியின் துயரை
எளியோனிடம் கடத்தும்
மனிதனைப் போலவே.
***
15 ஏப்ரல் 2011 நவீன விருட்சம் இணைய தளத்தில்.., நன்றி நவீன விருட்சம்!
படம்: நான் எடுத்தது..