திங்கள், 31 அக்டோபர், 2011

ஈரம்

ரமாக்கி விட்டிருந்தாள் குழந்தை.

பார்த்துப் பார்த்து பால் பவுடர், ஃபீடிங் பாட்டில், ஜூஸ், ஒவ்வொரு முறை டயாப்பரை மாற்றும் முன்னும் போடவேண்டிய க்ரீம், பவுடர், மாற்றுடை இத்யாதிகள் எல்லாம் எடுத்துக் கூடையில் வைத்து விட்டு, செய்த காலை உணவை உண்ணக் கூட நேரமில்லாமல் இரயிலில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என டப்பர்வேர் டப்பாவில் அடைத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்க வந்தால்.., ஈரம் ஏற்படுத்திய அசெளகரியத்தைக் கூட வெளிப்படுத்தாமல் செப்புவாய் திறந்திருக்க அயர்வாகக் கிடந்தாள் செளம்யா.

ஏதோ உறுத்தத் தொட்டுத் தூக்கிய அனு பதறிப் போனாள். குழந்தையின் உடலில் சூடு தெரிந்தது.

“தூங்கிட்டுதானே இருக்கா? நல்லதாப் போச்சு. சட்டை கூட மாத்த வேண்டாம். டயாப்பரை போட்டு சீக்கிரமா கெளம்பும்மா, நேரமாகுது” அவசரப்படுத்தினான் பின்னால் வந்து நின்ற அருண்.

“காய்ச்சல் இருக்கறாப்ல தெரியுதே. டாக்டரிடம் காமிச்சா தேவல போலிருக்கே.”

ஒரு கணம் திகைத்தவன் "சரி அப்போ உன்னை டாக்டர் வீட்டில் விட்டுட்டு போறேன். நீ காமிச்சுட்டு க்ரஷ்ல விட்டுட்டு அதே ஆட்டோவுல ஸ்டேஷன் போயிடேன்.”

“இதுக்குதான் ஒரு நல்ல ஏற்பாடாகுற வரை வீட்லயே இருக்கேன்னேன்” என்றாள் தீனமாக.

“சரி சரி உடனே ஆரம்பிக்காத. அப்போ லீவைப் போடு.”

“லீவா? நான்தான் சொன்னேனே? வழியே இல்லை. அப்படின்னா இந்த வேலைய மறந்திடணும். நீங்க டாக்டரைப் பார்த்து காமிச்சு க்ரஷ்ல விட்ருங்களேன். காலையில் ஒரு ட்ரெயினிங் அட்டெண்ட் செய்யணும். அது முடிஞ்சு முக்கியமான ப்ராஜெக்ட் ஒண்ணு முடிச்சுக் கொடுக்க வேண்டி இருக்கு. சீக்கிரம் வரக் கூட பெர்மிஷன் கேட்க முடியுமா தெரியல.”

“நானா? என்ன விளையாடறியா? முன்ன காய்ச்சல் வந்தப்பல்லாம் உடனேயேவா டாக்டர்ட்ட ஓடுனோம்? ஏன் பயப்படறே? வந்து காட்டிக்கலாம். வழக்கமா கொடுக்கற சிரப்பைக் கொடுத்துடு. க்ரஷ்லயும் அடுத்தாப்ல எப்ப கொடுக்கணும்னு சொல்லிடலாம்.”

அடுத்த ஐந்து நிமிட வாதத்தில் அவள் பேச்சு எடுபடாத மாதிரி எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழி சொன்னவனை மீறும் வழி தெரியாமல் திகைத்தவள், இயக்கப்பட்டவள் போல் டெம்ப்பரேச்சர் செக் செய்து, மருந்தை ஊற்றிக் கொடுத்து, ஈரத்துணியை மாற்றி, டயாப்பரை மாட்டிக் குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

செள
ம்யாவுக்கு இப்போது நான்கு மாதமாகிறது. பால்குடி மாறவில்லை. குழந்தை பிறந்த ஓரிரு வருடங்கள் வீட்டில் இருந்திடவே அவளுக்கு விருப்பம். தனது திறமைக்கு மீண்டும் உடனே வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கை நிறைய இருந்தது. ஆனால் அருண் சம்மதிக்கவில்லை. பேசிப் பேசிக் கரைத்தான்.

தன் அம்மா கூடவந்து இருப்பாள் என்றான். அனுவின் சம்பளத்தையும் கணக்குப் போட்டுதான் கார் லோன் எடுத்ததாகவும், அடுத்தாற்போல் வீட்டு லோன் பற்றி சிந்தக்க வேண்டாமா என்றும், பிறந்திருப்பது பெண் குழந்தையாச்சே, ஓடிஓடி சேர்த்தால்தானே ஆச்சு என்றும் என்னென்னவோ சொன்னான். மூன்றாம் மாதம் முடிந்ததுமே அவள் மேலதிகாரியின் நம்பரை டயல் செய்து ஃபோனைக் கையில் திணித்தான்.

அவரது பேச்சு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகவே இருக்கும். அவளது திறமைக்காக இன்னும் ஒருவருடம் வரை கூடச் சம்பளமில்லா விடுமுறை தந்து காத்திருக்கத் தயாராய் இருப்பதாக ஒரு துண்டு. இப்போதே வருவதானாலும் சரி, சேர்ந்த பிறகு குழந்தையைக் காரணம் காட்டி அடிக்கடி லீவு போடக் கூடாது என்பது ரெண்டாவது துண்டு. இவளும் தன் மாமியாரை நம்பி ‘அந்தப் பிரச்சனையே வராது. உடனேயே ஜாயின் பண்றேன் சார்’ என உறுதி அளித்தாள்.

சேரவேண்டிய நாள் நெருங்க நெருங்க மனதுக்குள் பயம் கவ்வியது. புகுந்த வீட்டிலிருந்து ஒரு தகவலும் இல்லை. அருணிடம் கேட்டால் ‘அதெல்லாம் வந்திடுவா அம்மா. அண்ணாவே அழைச்சு வந்து விடுறேன்னிருக்கார்’ என்றான்.

மாமனார் காலமாகி ஆண்டுகள் பல ஆகியிருக்க, மூத்தமகனுடன் மருமகள் அன்பில் நனைந்தபடி பேரக் குழந்தைகளைப் பேணிப் பிரியமாய் பார்த்துக் கொண்டு இருப்பதாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மாமியார், இவளைப் பெண் பார்க்க வந்த போது. அந்தக் குழந்தைகளைப் பிரிந்து இங்கு வருவாராமா? ஒன்றும் புரியவில்லை. அருணுக்குத் தெரியாமல் ஊருக்குத் தொலைபேசிய பொழுது அன்பொழுக நலம் விசாரித்தாரே தவிர வருவதாய் ஒருவார்த்தை சொல்லவில்லை.

அருண் மேலான சந்தேகம் வலுத்தது. பிரசவம் முடிந்த இரண்டாம் மாதமே பிறந்த வீட்டிலிருந்த அவளைத் தன்னோடு அழைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டியவனாயிற்றே. அப்பா கூட “பாசக்கார மாப்பிள்ளம்மா. பாரு உன்னய கொழந்தய பிரிஞ்சு இருக்க முடியாம அவஸ்தை படுறாரு” என சொன்ன போது இவளும் எப்படி வெள்ளந்தியாய் நம்பிக் கிளம்பி வந்து விட்டிருந்தாள்!

திட்டமிட்டே தன்னைத் தயார் செய்திருக்கிறான் என்பதை உணர்ந்த போது மனம் வலித்தது. ‘அம்மாவுக்கு திடீர்னு ஆஸ்துமா ஜாஸ்தியாயிட்டாம். பழகுன டாக்டர் இல்லாம இங்கு வந்து இருக்க பயப்படுறா. ஹை பி பி வேற படுத்துதாம்’ எங்கோ பார்த்தபடி சொன்னவன் இரண்டு தெரு தள்ளி இருக்கிற குழந்தைகள் காப்பகத்தின் வசதிகளை மடமடவென அடுக்கினான். ‘மேலதிகாரியிடம் சொன்ன தேதியில் சேர்ந்து விடலாம், அம்மா கொஞ்ச காலம் பொறுத்து கட்டாயம் வருவா. பேத்தி மேல் கொள்ளை ஆசை’ என்றான்.

ஒருமாதம் ஓடி விட்டது வேலைக்குச் செல்ல ஆரம்பித்து.

கார் காப்பகத்தின் வாசலில் நின்றிருந்தது. அதை நடத்துகிற காந்தாதான் இப்போது அனுவுக்குக் குலசாமி.

தூங்கிய குழந்தையை கைமாற்றியபடி விவரம் சொன்ன போது குலசாமி அதை ரசிக்கவில்லை. “ஏம்மா, நான்தான் சேர்க்கும் போதே சொல்லியிருக்கேனே. குழந்த உடம்புக்கு முடியலேன்னா கொண்டு விடாதீங்கன்னு. அதுவும் இது ரொம்ப சிறுசு.”

“மருந்து கொடுத்திருக்கேங்க. திரும்ப 4 மணிநேரம் கழிச்சு இந்த சிரப்பைக் கொடுங்க. நான் சீக்கிரமா வரப் பார்க்கிறேன்.”

நின்றால் மேலே ஏதும் கேட்டு விடுவாளா எனப் பயந்து இவள் விடைபெற்றால், அதையே அருண் இன்னொரு விதத்தில் தனக்கு செய்வதாய் பட்டது. அதிக நெரிசல் இல்லாத சாலையிலும் ரொம்ப டென்ஷனாக ஓட்டுவதான பாவனையுடன் விரட்டி விரட்டிச் சென்று ஸ்டேஷன் வாசலில் இவளை உதிர்த்து விட்டு “இடையிடையே ஃபோனைப் போட்டுக் கேட்டுக்கோ” எனக் கட்டளை வேறு.

புறநகரில் இருக்கும் அலுவலகத்துக்கு இப்படி அரக்கப் பரக்க இரயிலைப் பிடிப்பதெல்லாம் பழகிப் போன ஒன்றுதான் என்றாலும் என்றைக்குமில்லாத ஒரு கிலி. சுயபச்சாதாபம், குற்றஉணர்வு எல்லாம் தாண்டி குழந்தையைப் பற்றிய கவலையால் கட்டி எடுத்து வந்த காலை உணவைப் பிரிக்கவே பிடிக்கவில்லை.

ஹாய் அனு! குட் மார்னிங். யு லுக் சிம்ப்ளி க்ரேட் இன் திஸ் யெல்லோ சுடிதார்யா” லேட்டாகி விட்டதோ என ட்ரெயினிங் ஹாலை நோக்கி வேகவேகமாக நடந்த போது பின்னாடியே உற்சாகக் குரல் கொடுத்தபடி வந்தாள் அலுவலகத் தோழி ஸ்வேதா.

மூன்று மணி நேர ட்ரெயினிங். நடுவே எங்கேனும் யாரும் பேசினால் மேலாளருக்குப் பிடிக்காது. ஏகப்பட்ட பணம் செலுத்தி அழைத்து வந்த ட்ரெய்னர் சொல்வதை அப்படியே அனைத்துப் பேரும் உள்வாங்கி செயல்பட்டு கம்பெனியை நாட்டின் நம்பர் ஒன்னாக்கி விட வேண்டுமெனக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டபடி கவனித்துக் கொண்டிருப்பார். கலந்துரையாடலில் அத்தனை பேரின் பங்கும் இருந்தே ஆக வேண்டும். பள்ளி கல்லூரி பருவக் கெடுபிடிகளே தேவலாம்.

மொபைலை அனைவரும் சைலன்டில் போட்டிருந்தனர். அவ்வப்போது கைப்பையிலிருந்து எடுத்துப் பார்க்கக் கூட இவளுக்குத் தயக்கமாய் இருந்தது. இதில் எங்கே ரெஸ்ட் ரூமுக்குச் செல்ல? நெஞ்சுப் பாரம் அதிகரித்தது. தாய்ப்பாலை எடுத்து அலுவலக குளிர்சாதனப் பெட்டியில் சேகரித்து வைத்து, வீட்டுக்கு எடுத்துச் செல்வதாய் சிலர் சொல்லி பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். சீனியர் சிலரிடம் கேட்டபோது ‘நம்ம கம்பெனியிலா. அடப் போம்மா’ என்றதற்கு என்ன அர்த்தம் என்றுதான் இவளுக்குப் புரியவில்லை.

கூட்டம் முடிந்த வேளையில் மொபைலுக்கு ஒரு காலும் வந்திக்கவில்லை. சற்று நிம்மதியானது மனது. காந்தாம்மாவை அழைத்தாள்.

அடுத்த டோஸ் மருத்து கொடுத்து விட்டதாகவும் சூடு குறைந்திருப்பதாகவும் சொன்னவர், குழந்தை பாட்டிலையே வாயில் வாங்க மறுத்து விட்டதாகவும், தம்ளரில் ஊற்றிப் போக்குக் காட்டிக் கொஞ்சம் புகட்டி விட்டதாகவும் குண்டைத் தூக்கிப் போட்டார்.

‘கொஞ்சம் என்றால் எத்தனை அவுன்ஸ்?’ இவள் கேட்க முடியாது. கேட்டால் நாளைக்கே வேறு இடம் பார்க்க வேண்டி வரலாம்.

“ரொம்ப தேங்க்ஸ்மா” என்றாள்.

பாவம் அம்முச் செல்லம். உடம்புக்கு முடியாது போனால் அம்மாவின் கதகதப்பான அணைப்புத்தான் வேண்டும் அவளுக்கு.

காலையிலும் சாப்பிடாதது பசித்தது. வழக்கமாக கேண்டீனுக்கு செல்லுபவள் நேரத்தை மிச்சம் பண்ண, கொண்டு வந்த காலை உணவையே அவசரமாய் ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பித்து விட்டாள். அடுத்த அரை மணியில் காந்தாம்மாவின் அழைப்பு. சிணுங்கலாக இருந்த குழந்தையின் அழுகை சமாதானங்களுக்கு மசியாமல் பெரிதாகி விட்டதாகவும், தூங்கப் போட முயலுவதாகவும் சொன்னாள். ‘கிளம்பி வந்தால் பிள்ளைக்கு நல்லது’ என்றாள்.

கலகலப்பாகக் காலை வணக்கம் சொல்லி நேசம் பாராட்டிய ஸ்வேதாவின் நினைவு வர, தேடி ஓடினாள். நிலைமையை விளக்கி ‘ப்ராஜெக்டை கொஞ்சம் முடிச்சுக் கொடுக்க முடியுமா’ கெஞ்சலாகக் கேட்ட போது “என்னப்பா என் வேலையே இன்னும் முடியலையே. இதையும் சேர்த்து செய்யணும்னா நான் பத்து மணி வரை இருக்க வேண்டியதுதான். சீக்கிரமா செய்யத்தான் பாரேன்” எனக் கை விரித்தாள். முதல் காலாண்டின் இறுதி நெருங்கிக் கொண்டிருக்க, வேலைப் பளு எல்லோர் தோளிலும்தான்.

ஏமாந்த மனதைத் தேற்றியபடி அந்த செக்க்ஷனை விட்டு வெளியே வந்தவளுக்கு ‘எதற்கும் அவளையே வேறு நண்பர் யாரிடமாவது கேட்டுப் பார்க்கச் சொல்லலாமோ’ எனும் எண்ணம் எழ, திரும்பி நடந்தாள். பிரசவ விடுமுறைக்கு பிறகு அலுவலகம் நுழைந்த போது பல புதிய முகங்கள். சிலரை இன்னும் சரியாக அறிமுகம் ஆகி இருக்கவில்லை.

ஸ்வேதாவின் இருக்கையை நெருங்கிய போது இவள் பின்னால் வந்து நிற்பது தெரியாமல் யாரையோ அலைபேசியில் அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள்: “இவல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றா? பிள்ளையப் பாத்துட்டு வீட்டோட கெடக்கலாமில்ல கொஞ்ச காலம். எல்லாம் வயித்தெரிச்சல். எங்கே அதுக்குள்ள நான் அவள ஓவர்டேக் செஞ்சு ப்ரோமஷனைத் தட்டிட்டுப் போயிடுவனோன்னு..”

மேலே நின்று கேட்கப் பிடிக்காமல் நகர்ந்து வந்த அனு, மனதின் அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி, கவனத்தைக் கூட்டிப் பிடித்து ஒரு பிசாசைப் போல வேலையை செய்து முடித்தாள். அதைக் காட்டியே வழக்கத்துக்கு மாறாக ஒருமணி முன்னால் கிளம்ப அனுமதி வாங்க முடிந்தது.

ரயில் நிலையத்தில் கூட்டம் இருக்கவில்லை. வண்டி வந்தது. நெரிசல் நேரம் இல்லையாதலால் பல பெட்டிகள் காலியாகக் கிடக்க, ஒன்றிலேறி சன்னலோர இருக்கையைப் பிடித்தாள். மற்ற இருக்கைகளும் நிரம்பலாயின.

மனம் ஆசுவாசமானது. ‘அம்முச் செல்லம், இன்னும் அரைமணி பொறுத்துக்கோடா. அம்மா வந்துட்டே இருக்கேன்டா’ என்றது.

ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிய ஒருசில நொடிகளிலேயே ஏதோ காரணத்தால் வண்டி நின்று விட்டது. ‘அஞ்சு நிமிசமாகுமாம்’ விரல்களைக் குவித்து விரித்துத் தகவல் சொன்னபடியே சன்னலைக் கடந்து சென்றார், என்னவென்று பார்க்க இறங்கிய சிலரில் ஒருவர். பக்கத்துத் தண்டவாளத்தில் சரளைக் கற்கள் குவிக்கப் பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

அதன் அருகிலிருந்த மரத்தின் இறக்கமான கிளையிலிருந்து பருத்திச் சேலையில் தொட்டிலொன்று தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே குழந்தை. தொட்டிலுக்குக் கீழே தண்ணீர் புட்டி, மருந்து பாட்டில், கிலுகிலுப்பை, கிளிப்பச்சை நிறத்தில் ஒன்றரையடி உயர பிளாஸ்டிக் சிறுமி பொம்மை.


குழந்தை சிணுங்க ஆரம்பிக்க வேலையிலிருந்த பெண்மணி ஓடிச் சென்று “உலுலாயி உலுலாயி” என இழுத்து இழுத்து ஆட்டவும் அமைதியானது. அந்த ஆட்டத்திலேயே விட்டுவிட்டு அம்மாக்காரி வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். ஆடி ஆடி தொட்டில் நிற்கவும் நெளிந்து வளைந்து பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தது குழந்தை.

“யாரம்மா அது? புள்ளயக் கதறவிட்டுக்கிட்டு வேலையப் பாக்குறது. போம்மா போயி புள்ளயக் கவனி”

எங்கிருந்தோ ஓங்கி ஒலித்த குரல் மேற்பார்வையாளருடையதாக இருக்க வேண்டும். மண்வெட்டியால் சரளைகளைத் தட்டுக்குத் தள்ளிக் கொண்டிருந்த பெண்மணி பதறி அதை அப்படியே போட்டுவிட்டு ஓடினாள் குழந்தையிடம்.

யூரோப் பாரளுமன்றக் கூட்டத்துக்கு அதன் உறுப்பினரான இத்தாலியப் பெண்மணி லிஸியா தன் கைக்குழந்தையை நெஞ்சோடு தொட்டிலிட்டு அணைத்து எடுத்துச் செல்ல முடிகிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைகளைப் பற்றிய மசோதாவிற்காக வாதாடவும் வாக்களிக்கவும் வந்தவரின் இச்செயலைப் பார்த்து உலகம் பூரிக்கிறது. பாராட்டுகிறது. நடைமுறையில் எத்தனை அலுவலகங்களில் இது சாத்தியமாகிறது? அதை சாத்தியப் படுத்தும் கருணை அந்த வீதியோரத்து உழைக்கும் மக்களிடத்திலாவது இருப்பதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அனுவுக்கு.

கூடவே ‘இத்தனை வேண்டாம் சாமீ. ஒரு அனுசரணை, புரிதல் இருந்தால் போதுமே தன் போன்றோருக்கு’ என்கிற ஏக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தது.

பெட்டிக்கு நேர் எதிரே என்பதால் அனைவரின் கவனமும் அங்கேயே இருந்த வேளையில் அழைத்த அலைபேசியில் காப்பகத்தின் எண் மிளிர்ந்தது. “என்னம்மா நீ. கெளம்பியாச்சா இல்லியா? பிள்ள விடாம அழுறா. ஒரு அக்கற வேண்டாம்?”

காந்தாம்மாவின் குரல் அந்த நிசப்தமான சூழலில் அனைவருக்கும் கேட்கும்படி ஒலித்தது வேறு தர்மசங்கடத்தை அதிகரிக்க, “நாலு மணிக்கே கெளம்பிட்டேங்க. வழியிலே என்னமோ பிரச்சனை. இரயில் நின்னு போச்சு. பொறப்பட்டிரும் இப்ப. நீங்க திரும்பப் பாலைக் கரைச்சுக் கொடுத்துப் பாருங்களேன்” என்றாள்.

‘அது தெரியாதா எங்களுக்கு’ என்பது போல மறுமுனை கடுப்பாகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

மொபைலை பைக்குள் போட்டுவிட்டு நிமிர்ந்த போது தொழிலாளப் பெண்மணி குழந்தையை மார்போடு அணைத்தபடி மரத்துக்குப் பின்னால், அமர இடம் தேடிக் கொண்டிருந்தாள்.

‘கொடுத்து வச்ச அம்மா. அதைவிடக் கொடுத்து வச்ச...’

இவளது சிந்தனை முழுமை பெறுமுன்..,

“குழந்தை எத்தனை கொடுத்து வச்சிருக்கு பாத்தீங்களா?” என்றார் எதிர் இருக்கையிலிருந்த மனிதர் பக்கத்தில் இருந்தவரிடம்.

பதிலுக்கு அந்த நல்ல மனிதர் “ஆமாங்க. என்ன பாவம் பண்ணுச்சுங்களோ சில குழந்தைங்க. பொறந்த சில நாளுல காப்பகத்துல விட்டுட்டு கெளம்பிடறாங்க வேலைக்கு. ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்.. உள்ளே இருக்குமாம்...” என முடிக்காமல் நமுட்டாகச் சிரித்தார் ஜாடையாக இவளைப் பார்த்தபடி.

கோபமாய் ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அப்படியே அமுங்கிப் போனாள். காலையில் இருந்து நேர் கொள்ள நேர்ந்த பல மனிதர்களின் உள்ளங்களில் காணக் கிடைக்காத ஈரம், அங்கு சிதறப்பட்ட வார்த்தைகள் தந்த அதே வலி மிகுந்த வீரியத்துடன் வெளிப்பட்டு குழந்தைக்கும் இல்லாமல் நெஞ்சை நனைத்து விட்டிருக்க, வேகம் பிடித்து விரையத் தொடங்கிய வண்டிக்கு ஈடாகப் போட்டிபோட்டுக் கொண்டு காற்றில் படபடத்த துப்பட்டாவை நடுங்கிய விரல்களால் இழுத்து இறுகப் பற்றிக் கொண்டு, உலர்ந்த கண்களால் மெளனமாகச் சன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
***

வம்சி சிறுகதைப் போட்டிக்காக.

படம் நன்றி: கருவாயன் என்ற சுரேஷ்பாபு
http://www.flickr.com/photos/30041161@N03/5864024764/in/photostream


***

மு.வி. நந்தினியின் பார்வையில்.. “ஈரம்” ..

செவ்வாய், 25 அக்டோபர், 2011

கல்கி தீபாவளி மலர் 2011-ல்.. படங்கள் இரண்டு..

சிறப்பான பொருளடக்கத்துடன் 324 பக்கங்களில், கோகுலம், மங்கையர்மலர் பக்கங்களையும் உள்ளடக்கி மலர்ந்திருக்கும் 2011 கல்கி தீபாவளி மலரின்..
308 மற்றும் 310-ஆம் பக்களில்..நான் எடுத்த படங்கள் இரண்டு:)!
நன்றி கல்கி!

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஓர் கனவு - ஸ்பானிஷ் கவிதை

அதீதம் ஆசிரியர் குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் அனுப்பித் தந்த ஸ்பானிஷ் கவிதையின் ஆங்கில ஆக்கத்துக்கான தமிழ் மொழிபெயர்ப்பு, என் முதல் முயற்சியாக.

20 அக்டோபர் 2011 தீபாவளிச் சிறப்பிதழில்.. நன்றி அதீதம்!

மொழிபெயர்ப்பு இலக்கியம் எந்தக் காலக்கட்டத்திலும் அவசியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. வெவ்வேறு காலக் கட்டங்களில் உலகின் ஏதோ ஒரு பக்கத்தின் வாழ்க்கையை, சமூகத்தை, அக்காலச் சூழல் எழுத்தாளர் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை தாய்மொழியினருக்கு அறியத் தருவதாக இருக்கிறது. அவ்வப்போது ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்துத் தரும் கவிதைகளுக்கு எனது இம்முயற்சி தொடரக் கூடும்.


ஓர் கனவு


புல்பூண்டற்றப் பிரதேசத்தின்
மத்தியில்
அதிக உயரமென்று சொல்ல முடியாத
கற்கோட்டையொன்று
கதவுகளோ சன்னல்களோ இன்றி.

கோட்டையினுள்ளிருந்த
ஒரேயொரு வளைந்த அறையின்
புழுதி படர்ந்த தரையில் கிடந்தன
மரத்தாலான மேசையும் நாற்காலியும்.

அவ்வட்டச் சிறைதனில்
எனைப் போன்ற ஒருவன்
எழுதிக் கொண்டிருந்தான்
எதையோ தீவிரமாக.

அது ஒரு நீண்ட கவிதையாக
புரிந்து கொள்ள இயலாததாக
இன்னொரு வளைந்த அறையில்
அவனைப் போலவே
கவிதை எழுதிக் கொண்டிருந்தவனைப் பற்றியதாக
அந்தக் கவிதையோ
இன்னுமோர் வட்டச்சிறைவாசியைப் பற்றியதாக..

முடிவற்றச் சுற்றாக
எவருக்குமே புரியாததாக

கைதிகளின் எழுத்துகள்!
***

மூலம்:
A Dream
Jorge Luis Borges (1899-1986)
(Translated, from the Spanish, by Suzanne Jill Levine.)

படம்: இணையத்திலிருந்து எடுக்கப்பட்டுக் கவிதையுடன் வெளியானது.

புதன், 19 அக்டோபர், 2011

உண்மை - நவீன விருட்சத்தில்..

உண்மைகள் என்றால்
அவனுக்குக் கொள்ளைப் பிரியம்

தனக்குத் தெரியாத உண்மைகளே
இருக்கக் கூடாதென்பதில்
தணியாத மோகம்

அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்

முழு உண்மைகளை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கத் தயாராக இருந்தான்

அவனது பாதுகாப்பே
விலையென்றாலும்
பயப்பட மாட்டான்

எந்தக் கடையில் எந்த உண்மை
விலைக்கு வந்தாலும்
முதலில் அவனுக்கே
சொல்லி அனுப்பினார்கள்

சந்தைக்கு வராத உண்மைகளைச்
சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்
சத்தியத்தை மீறியேனும் அவை தன்
சட்டைப்பைக்குள் வர
சகல உத்திகளையும் கையாண்டான்

சேகரித்த உண்மைகள்
இரும்பாய்க் கனத்து இழுத்தாலும்
காட்டிக் கொள்ளாமல்
நிமிர்ந்தே நடந்தான்

அறியாதவற்றால் ஏற்படும்
ஆச்சரியங்களாலும்
தெரிய வராதவற்றால் தொடரும்
சுவாரஸ்யங்களாலும்
உயிர்த்திருக்கும் வாழ்வில்

மறுக்கப்படும்
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை
என்கிற உண்மை மட்டும்

பார்வைக்குச் சிக்காமல்
அவனது நடுமுதுகில் அமர்ந்து
கண்சிமிட்டிச் சிரித்தபடி
சவாரி செய்து கொண்டிருந்தது

தன்னை விலை பேசவே முடியாதென்று.
***

படம்: இணையத்திலிருந்து
..

12 செப்டம்பர் 2011 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

வெள்ளி, 14 அக்டோபர், 2011

இசைத் தட்டுக் காலம், மருக்கொழுந்து வாசம்..-மறந்து போனவை [Oct PiT]

1. மறந்து போனதின் மறு அவதாரம்மின் விளக்காக..


2. துருப் பிடித்திருந்தாலும்
தூர எறியப்படாமல்..
தொடரும் பந்தம்

3. தொடரட்டும் பந்தங்கள்என்றும் நன்றியுடன்!


4. மரிக்கொழுந்து வாசம்பாட்டிக்கு மாறவில்லை நேசம்


5. சலவைக் கற்கள்நினைவில் இருக்கா?


6. மாலை முழுவதும் விளையாட்டுவழக்கப்படுத்திக் கொண்ட
ஒரு மழலை மொட்டு!

முன் போல பூங்காக்களில் கூட்டம் இருப்பதில்லை:(! இன்டோர் கேம்ஸ் கூட கணினித் திரை முன்னும், எக்ஸ் பாக்ஸ், ப்ளே ஸ்டேஷனுடன் டிவி திரை முன்னுமே கழிகின்றன. பரம பதத்தில் நூறை நெருங்குகையில் பாம்பு கொத்தப் பகீர்னு ஆவதும், ஏணியப் பிடிச்சுக் கிடுகிடுன்னு ஏறுகையில் வானின் உச்சிக்கே செல்லும் உற்சாகம் ஊற்றெடுப்பதும்.., தாயம் விழுமா விழுமா எனக் கட்டைகளை விட கண்ணை உருட்டி உருட்டிப் பார்ப்பதும்.., பல்லாங்குழியில் வெற்றிடம் துடைத்துச் சோழிகளைப் புதையலாக அள்ளியதும்.. ம்ம்ம், இதெல்லாம் இக்காலக் குழந்தைகள் விளையாடிப் பார்க்க முடிவதில்லை. மறந்த போன அந்த அழகான விளையாட்டுப் பலகைகளையோ தாயக்கட்டைகளையோ கூடப் படம் பிடித்துக் காட்டலாம் நீங்கள்.


7. கேட்ட கானங்கள் கொஞ்சமோ..?
ஐபாட் காலத்தில், இதில் காட்சிக்கு வைக்க ஒரு இசைத்தட்டேனும் கிடைக்குமா என நானும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.


8. நெஞ்சம் மறப்பதில்லை..
யாஷிகா- D
அப்பாவின் கேமரா, என்னுடைய முதல் கேமராவும்..
இது குறித்த பகிர்வு இங்கே.
***

9. நினைவுப் பறவை விரிக்குது சிறகை

இந்த ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமரா (1957-63 தயாரிப்பு) 35mm ஃபிலிம் சுருளுக்கும் முன்னே 120 format காலத்தைச் சேர்ந்தது. 6செ.மீ x 6செ.மீ அளவிலான படங்களைத் தரும் இப்படி.


10. நினைத்தாலே இனிக்கும்

பள்ளிக்குக் கேமராவை எடுத்துச் செல்லுகையில் க்ளிக் ஃபோரை தயக்கமின்றி இயக்க முன் வருபவர் யாஷிகாவைத் தொட்டு இயக்கத் தயாராக இருக்கவில்லை. எனவே நான் இருக்கும் படங்களை செல்ஃப் டைமரிலேயே எடுப்பேன். ஃப்லிம் சுருள் தரும் 12 படத்தில் ஒரு 4 படத்துலயாவது தலையக் காட்டலேன்னா எப்படின்னு காட்டி விடுவது வழக்கம்:)! ட்ரைபாடாக வகுப்பறையிலிருந்து இழுத்து வரப்படும் பெஞ்சு மேசைகளே பயன்படும். இதிலிருக்கும் தோழியர் இருபத்து ஒன்பது வருடங்கள் கழித்து இப்படத்தை இங்கு பகிர்வதில் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என ஒரு நம்பிக்கைதான்:)! நினைத்தாலே இனிக்கிற, பாடித் திரிந்த +2-வில் இருக்கும் போது எடுத்தது. இந்த வயதுப் பெண்கள் மறந்து போன உடையாக.. அல்லது என்றேனும் பாட்டிகளை மகிழ்விக்க அணியும் உடையாக.. பாவாடை தாவணி.

வாங்க, மறந்து போனவற்றை நினைவிடுக்களிலிருந்து மீட்டெடுங்க. கடிதக் காலத்துக்குப் போய் தபால் பெட்டி, போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷக் கடிதங்களின் உறைகள் இவற்றைக் கூட படமாக்கலாம். போட்டி அறிவிப்பு இங்கே. நேரம் அதிகமில்லை. இன்னும் ரெண்டே ரெண்டு நாள்தான் இருக்கு. இதுவரை போட்டிக்கு வந்த அற்புதமான படங்கள் எல்லாம் இந்த பிகாஸா ஆல்பத்தில் இருக்கு. வல்லிம்மா கிணற்று ராட்டினத்தைச் சிறப்பாப் படமாக்கியிருக்கிறாங்க. இருபது பைசா நாணயத்தை வருண் எப்படி எடுத்திருக்கிறார் பாருங்க. பாலசுந்தரம் கஞ்சி காய்ச்சிப் பச்ச மொளகா, வத்த மொளகா, சின்ன வெங்காயத்தால அலங்கரிச்சு மண்கலயத்தில் கொடுத்திருக்கிறாரு. அப்படியே எடுத்து உறிஞ்சிக் குடிக்கலாம் போல. நம்ம மக்கள் எத்தனை ரசனையோடு படம் எடுக்கறாங்க? பார்க்கப் பார்க்க உங்களுக்கே வேகம் வரும்.
***

செவ்வாய், 11 அக்டோபர், 2011

தூறல் - பண்புடன் இணைய இதழ் - செப் 30, 2011



எப்போதும்
சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்

காலைஉணவை மறந்ததில் வந்த
களைப்பானாலும்
காய்ச்சலில் கிடக்கும் குழந்தையின்
நினைப்பானாலும்
காரணமேயின்றி மேலாளர்
சீறினாலும்
வாடிக்கையாளர் வரம்புமீறிப்
பேசினாலும்

வாட்டமிலா
சற்றுங்கோணா
முகங்காட்ட வேண்டும்

இயந்திரத்தனமாய் இன்றி
சிந்தும் புன்னகை
இயல்பாய் இருந்து தொலைக்க
தூங்கும் போது கனவில் சுமந்தும்
போகுமிடமெங்கும் ஏந்தித் திரிந்தும்
பழக வேண்டும்

தசைகளை
இழுத்துத் தைத்துக் கொண்டால்
தேவலாமெனும் சிந்தனை
தந்த சிரிப்புடன் கிளம்பிய
ஒரு காலையில்..

திசைமாறி வீசிய பருவக்காற்று
திரட்டி வந்த கருமேகங்கள்
தூறலைப் பெரிய பெரிய பொட்டாகச்
சாலையில் எட்டி எட்டிப் போட

அண்ணாந்து ஆகாயம் பார்த்தவள்
பொறாமையுடன் புன்னகைக்கிறாள்

இதயம் வெடித்து விடாதிருக்க
இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.
***

செப்டம்பர் 30, 2011 பண்புடன் இணைய இதழில்.., நன்றி பண்புடன்!

படம்: படைப்புடன் வெளியானது.

வியாழன், 6 அக்டோபர், 2011

ரெட் ஃப்ரேம்ஸ் போட்டி - அதீதம் ஃபோட்டோ கார்னர் - பிட் க்ரூப் பூல் - புகைப்படப் பிரியன்

ரெட் ஃப்ரேம்ஸ் புகைப்படப் போட்டி
பிறந்த மண்ணின் பெருமையை
வசிக்கும் ஊரின் அருமையை
பிடித்த ஊரின் அழகை
உலகுக்குச் சட்டமிட்டுக் காட்டுங்கள்!
மூன்று இலட்சம் பெறுமானமுள்ள பரிசுகளை அள்ளுங்கள்!


மேலும் விவரங்களுக்கு PiT-ல் நான் பதிந்த இடுகை இங்கே: ‘என் நகரின் காட்சிகள்’-ரெட் ஃப்ரேம்ஸ் புகைப்படப் போட்டி 2011


அதீதம் ஃபோட்டோ கார்னர்

புதுப் பொலிவுடன் மீண்டும் மலர்ந்த அதீதம் இணைய இதழின் இரண்டாம் பதிப்பிலிருந்து (முதல் பதிப்பில் ‘எல்லாம் வல்ல..’) அதன் ரெடி ஸ்டெடி க்ளிக் கார்னர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. ‘ராமலக்ஷ்மி ராஜன் ஃபோட்டோ கார்னர்” என்றே அதை முகப்பில் நிறுத்தியிருக்கும் அதீதத்துக்கும் இங்கு என் நன்றி.

PiT Group Pool
-வுடன் கைகோர்க்கிறது அதீதம்


ஃப்ளிக்கர் தளம் குறித்தும் அதில் பதியும் படங்களை PiT Pool-லில் பகிர்வது குறித்தும் “போகுமிடம் வெகுதூரமில்லை” எனும் என் இடுகையில் விரிவாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்த வாரப் படத் தேர்வு சில காரணங்களால் தொடராது போன சூழலில் மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கும் வண்ணமாக பிட் பூலில் பகிரப் படுபவற்றில் (இந்த வாரம்தான் என்றில்லாமல் நல்ல படங்கள் எவையும்) என் பார்வையில் சிறப்பானவை, கருத்தைக் கவர்ந்தவை தேர்வு செய்யப்பட்டு அதீதம் மாதமிருமுறை இணைய இதழில் இடம் பெறும். முன்னரே படத்தை எடுத்தவருக்குத் தகவல் தரப்பட்டு அனுமதியும் பெறப்படும். இதுவரை பிட் குளத்தில் நான் பிடித்தத் தங்க மீன்கள் எனது தலைப்பு மற்றும் வரிகளுடன் உங்கள் பார்வைக்கு:

அதீதம் ஜூலை II இதழில்..

1. குறையாத சந்தோஷம் (சரவணன் தண்டபாணி)


2. கரையாத கம்பீரம் (ஜேம்ஸ் வஸந்த்)


ஆகஸ்ட் I இதழில்..
அம்மா என்றால் அன்பு
1. (ஆன்டன் க்ரூஸ்)


2. (மல்லிகா-காவியம் ஃபோட்டோகிராபி)


ஆகஸ்ட் II சுதந்திர தினச் சிறப்பிதழில்..
கருவாயன் படங்கள்

தாய் மண்ணே வணக்கம்
***

நம்பிக்கை நட்சத்திரங்கள்

செப்டம்பர் I இதழில்..
சரவணன் தண்டபாணி படங்கள்
உழைப்பே வாழ்வில் ஒளியேற்றும்
***

இனிய தருணங்களின் அடையாளங்கள்
இடம் விட்டு அகன்ற பின்னும் அழியாமல்
***

செப்டம்பர் II இதழில்..

1. சுவடுகள்(ரமேஷ் கிருஷ்ணன்)அழுந்தப் பதித்து நடப்போம்
கடந்த பின்
எழுந்து நின்று பேர் சொல்லுட்டும்
நாம் விட்டுச் செல்லும் சுவடுகள்!
***

2. கரங்கள் (ஜீவா சுப்ரமணியன்)
துடிப்பான
உதவிக் கரங்களா?

அல்லது

படிப்பைத் துறந்து
உழைக்க வந்த
பிஞ்சுக் கரங்களா?
***

அக்டோபர் I ஃபோட்டோ கார்னரில் இடம்பெற்றிருக்கும் படங்களைக் காண இங்கே செல்லுங்களேன்:)! இனி வரும் பதிப்புகளிலும் என் தேர்வைக் காண வருவீர்கள் என நம்புகிறேன்:)!

தினம் தினம் படங்கள் பகிரப்பட்டு ஒருவருக்கொருவர் ஆலோசனைகள் பரிமாறி உற்சாகமாக இயங்கி வருகிறது பிட் பூல். ஃப்ளிக்கரில் இருக்கும் நண்பர்கள் அதில் இணையக் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இணைந்து படங்களை சேர்க்காமல் இருப்பீர்களாயின் சேர்த்து வரக் கேட்கிறேன். அதீதம் இதழ் கூடிய விரைவில் பிட் பூல் படங்களைத் தனது பக்கத்தில் Slide Show-ஆகக் காட்ட இசைந்துள்ளது. இதன் மூலமாக பிட் குடும்பத்தினரின் படங்கள் மேலும் பல பார்வையாளர்களைப் பெறுகிறது.

‘எனக்கு ஃப்ளிக்கரில் கணக்கு இல்லை, ஆனால் அதீதத்துக்கு படம் அனுப்ப ஆவல்’ என்பவர்களும் கவலைப்பட வேண்டாம். உங்கள் படங்களை articlesatheetham@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இதே முகவரிக்கு உங்கள் கவிதை, கட்டுரை, கதைகள் மற்றும் புத்தக விமர்சனங்களை அனுப்புமாறும் அதீதம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது. படைப்புகள் இதுவரை வேறெங்கும் வெளிவராதவையாக இருக்க வேண்டுமென்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதீதத்தில் வெளியான பிறகு உங்கள் தளங்களில் பதிந்து கொள்ளலாம்.


புகைப்படப் பிரியன்
ஃப்ளிக்கர் தளத்தின் ஒரு குறைபாடு 1GB-க்கு மேலே படங்கள் பகிர பணம் செலுத்தி நமது கணக்கை pro-account-ஆக upgrade செய்து கொள்ள வேண்டும். இதை விரும்பாத சிலர் 1 GB ஆனதும் நிறுத்தியோ அல்லது எப்போதேனும் மட்டுமோ படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். கேமராக்களில் டிஜிட்டல் புரட்சி வரவும் அதன் பயன்பாடுகள் மேலும் மேலும் சுலபமாக இன்று கேமரா இல்லாத நபரே இல்லை எனலாம். ஆர்வமாக படமாக்கி வருபவர் ஃப்ளிக்கர் தவிர்த்து படங்களைப் பகிர ஒரு தளம் இருக்கிறதா எனத் தேடக் கூடும். நீங்கள் அப்படியானவரா? உங்களுக்கு முகநூலில்(Face Book) கணக்கு உள்ளதா? கவலையை விடுங்கள். புகைப்படப் பிரியனில் இணைய விண்ணப்பம் அனுப்புங்கள்.புகைப்படக் கலைஞர் மெர்வின் ஆன்டோவினால் தமிழர்களுக்கெனப் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப் பட்டுள்ள Closed Group இது (இதன் admin பொறுப்பிலும் உள்ளேன்). இதில் படங்களைப் பகிர கண்டிப்பாக தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும். தமிழிலே உங்கள் கருத்துப் பரிமாற்றம் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி. தமிழ் எழுத்துரு இல்லையென்றாலும் ஆங்கிலத்தில் [தங்கலீஷாமே அதற்குப் பேரு:)] தட்டச்சுவதும் வரவேற்கப் படுகிறது. தினம் ஒரு நபருக்கு ஒரு படமே பகிர அனுமதி. குறிப்பாகப் பகிரும் படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே புரியப் பட வேண்டிய விதி. பிட் குழுவும் சரி, புகைப்படப் பிரியனும் சரி தமிழ் நண்பர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவது அவரவர் மனங்களிலே.

இங்கும், கிடைக்கிற ஊக்கத்தில் மகிழ்ந்து ஆரம்பித்த சிலநாட்களிலேயே ஐநூறுக்கும் மேலானோர் இணைந்து உற்சாகமாகப் படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். கமெண்ட் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.


முகநூலில் PiT

ன்றைய இணைய உலகில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்ட முகநூலில், தன் சேவையை நண்பர்களிடம் விரைந்து சேர்க்க PiT Page உருவாக்கப்பட்டுள்ளது. அதை Like செய்து உறுப்பினராகிக் கொள்ளுங்கள். PiT-ல் வெளியாகும் அனைத்துப் பதிவுகளும் இங்கே உடனுக்குடன் அப்டேட் ஆகும்.

புகைப்படக் கலை பற்றி அநேகமாக A to Z விரிவாக அலசப்பட்டு விட்டன PiT-ல். இப்போதைய வாசகர்களுக்காக முக்கியமான, அத்தியாவசியமான பதிவுகள் தேடி எடுக்கப்பட்டு இந்தப் பக்கத்தில் பகிரப் பட்டு வருகிறது PiT குழும உறுப்பினரால். இதை நன்கு பயன்படுத்திப் பலனடையக் கேட்டுக் கொள்கிறேன்.


அக்டோபர் 2011 PiT போட்டி:
றிவிப்பைப் பார்த்து விட்டீர்கள்தானே? மறந்து போனவற்றை நினைவு படுத்தி, காணமல் போனவற்றைக் கண்முன் கொண்டுவர ஆயத்தமாகி விட்டீர்கள்தானே? இம்மாதப் போட்டிக்கான எனது மாதிரிப் படங்களுடன் விரைவில் வருகிறேன்:)!

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தொடரும் பயணம் - நவீன விருட்சத்தில்..


ஒரு தேவதையைப் போலதான்
வாழ்ந்திருந்தாள்.
கிரீடத்தில் நட்சத்திரங்களாக
ஒளிர்ந்த வைரங்களுடன்
கூந்தல் நிறம் போட்டி போடவும்
பறத்தலில் வேகம் குறைந்தது.
உதிரும் சிறகுகளால்
வீடெங்கும் குப்பையாவதாக
இறக்கைகள்
வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன.
ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க
அனுமதியில்லை.
நடந்தேனும் ஊர்ந்தேனும்
தனக்கான தானியத்தை
ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

பாய்ந்து வந்த
வார்த்தை அம்புகளைத் தடுக்க
எட்டுகிற தொலைவில் கிடந்தும்
கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை.
சுழற்றி வீச வாளொன்று
சுவரிலே தொங்கியும்
நிமிர்த்திப் பிடிக்க
விரல்களில் வலுவில்லை.
இவள் தொட்டு ஆசிர்வதித்த
செங்கற்களைக் கொண்டு
எழுந்த மனையென்பது
எவர் நினைவிலும் இல்லை.

மேகங்களுக்குள் புகுந்து
வெளிவந்த காலத்தில்
அதன் வெண்மையை வாங்கி
மிளிர்ந்த உடை
பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க
இரை தேடக் கிளம்புகிறாள்.
வழக்கமாகச் செல்லும் பேருந்து
நிறுத்தம் தாண்டிச்
சென்று விட்டதாக எண்ணி
நடக்கத் தொடங்குகிறாள்.

சற்றுதூரம் கடந்திருக்கையில்
ஒட்டி வந்து நின்றது
ஏதோ காரணத்தால்
தாமதமாகப் புறப்பட்டிருந்த பேருந்து.
சாலைவிதிகளை மீறி
நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி
ஏறிக் கொள்ளுமாறு
அன்றாடப் பயணி அவளை
அடையாளம் கண்டு அழைத்த
ஓட்டுநரின் கனிவு..

மயிற்பீலியின் நீவலென
ஆற்றுகிறது மனதின் காயங்களை.

கால் துவளும் வேளையில்
ஏதேனும் ஒரு பல்லக்கு
எங்கிருந்தோ வந்தடைகிறது
பயணத்தைத் தொடர.
***

படம் நன்றி: ஜீவா சுப்ரமணியம் http://www.flickr.com/photos/jeevanphotography/6126097836/in/photostream

13 ஆகஸ்ட் 2011நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin