** விகடன்.காம் முகப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
** விகடன்.காம் முகப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மே, 2010

நட்சத்திரங்கள்




உய்உய் உய்உய்..
பின்னிரவில்
உயர் குடியிருப்பு வளாகத்தில்
வாகனம் எழுப்பிய தொடர்சப்தத்தில்
விழித்துச் சுதாகரித்து
துழாவிச் சாவியெடுத்து
'உன்னிதா என்னிதா'
அறிய ஓடிவந்தவர்கள்

தம்மிதில்லையெனத் தெரிந்த நிம்மதியில்
போர்வைக்குள் பொதிந்து போயினர்
பொழுது புலர்ந்ததும்
புலம்பிக் கொள்ளலாமென
கலைந்த தூக்கத்தைத் துரத்திப் பிடிக்க

உரியவர் அடக்கியதும்
ஓய்ந்தது உய் உய்

காத்திருந்து
அணைந்து போயின அலுப்புடனே
ஆங்காங்கே ஒளிர்ந்த
சன்னல் வெளிச்சங்கள்

பதில்சொல்லிக் களைத்த
இரவுக் காவலாளியின்
இருண்ட வானக் கூரையில்
மிளிர்ந்து கொண்டிருந்தன
நட்சத்திரங்கள்

ஊர் அசந்தபின்னும் தாம் அசராது
கண்சிமிட்டிக் காவலிருந்த
விண்மீன்களை ரசித்தவாறே
விழி பிசைந்த உறக்கந்தனை
விரட்டியடிக்க
உதடு குவித்து இசைக்கலானான்

சூழ்ந்திருந்த நிசப்தத்தில்
சுரம் பிசகாமல்

அண்டம் அனுபவிக்கும்
அத்தனைக்கும் அடிநாதமாய்..
அறியப்படாமலே
காற்றோடு கரைந்து போகும்
உழைக்கும் வர்க்க கீதமாய்..
உய்... உய்...!

***






திங்கள், 22 மார்ச், 2010

நோட்டு மாலைகள்


பசித்துப்
பாலுக்கு அழுதபடியே இருக்கும்
பாவஜீவனாய்
எங்கோ ஒரு கைக்குழந்தை

மருந்துக்கு வழியின்றி
ஏதோவொரு வீட்டின் மூலையில்
விடாமல் இருமிக் கொண்டிருக்கும்
முதிய தாய்

உடைந்துபோன மூக்குக் கண்ணாடியின்
சட்டத்தைத் தினம்தினம்
தொட்டுப் பார்த்து
மகனிடம் புதுசுக்கு
மனுப்போட்டுக் காத்திருக்கும்
வயோதிகர்

அஸ்தமனம்வரை உழைத்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காவது ஆகுமென
உலைவைக்க வந்தவளிடம்
உதைத்துப் பிடுங்கிக்கொண்டவனை
நினைத்து நொந்து சுருண்டவளாய்
மனைவியெனும் ஒரு பிறவி

'பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
பள்ளிக்கூடம் போவேன்'
சொன்னாதாலே அடிவாங்கி
கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
சின்னஞ்சிறு பாலகன்

'இந்த ஒரு வருசமாவது
பொறந்த நாளைக்கி
புதுசு வாங்கித் தாப்பா'
கிழிந்த பாவாடையில்
வழிந்த கண்ணீரைத்
துடைத்துக் கொள்ளும்
பதின்ம வயது மகள்

ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.
***












நன்றி விகடன்!



திங்கள், 8 மார்ச், 2010

சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...- விகடன்.காமின் சக்தி 2010-ல்

மகளிர்தின வாழ்த்துக்கள்!

ன்றைக்கும் காணக் கிடைக்கிற காட்சிதான் இது. உற்சாகக் கூவலுடன் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருக்க அவர்கள் வயதொத்த சிறுமி ஏக்கமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பது. கடந்து செல்லுபவர்கள் ‘இவளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்றால் "இது பாய்ஸ் கேம்ஸ்’ என்பதாக இருக்கும் வருகிற பதில். ஒரு ஓவர் பவுலிங் கொடுத்துப் பார்க்கும் முன்னரே ஏன் இந்த முடிவு? ‘அவளாலே முடியாது’ அப்போதுதான் நம் கண் எதிரே அருமையான கேட்சை தவறவிட்ட சிறுவன் அலட்சியமாகச் சொல்லுவான்.

துறுதுறுவென ஓடிச்சாடி அந்தச் சிறுமியின் கால்கள் காட்டத் துடிக்கும் வேகத்தை அத்தனை எளிதாய்ப் புறக்கணித்தால் எப்படி? கண்கள் கவனத்தைக் குவிக்க, தாவிக் கைகள் பிடிக்க என அவள் பந்துகளைத் தடுத்தாள ஒரு வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டால் எப்படி? உடல் பலத்தில் ஒருபடி கீழே இருந்தாலும் கூட உற்சாகத்தை உயிரினுள்ளிருந்து திரட்டி, பிடித்திருக்கும் மட்டைக்கு ஊட்டி, அவளால் இயன்ற வரை ஓங்கி அடிக்கிற பந்து சிக்சரா ஃபோரா, இல்லையேல் காற்றிலே மட்டை மட்டும் சுழல க்ளீன் போல்டா, பரவாயில்லை எதுவானாலும் ஆடிப் பார்க்கதான் விடுங்களேன்.

கமனிதனுக்கான வாய்ப்பைக் கிடைக்கவிடாமல் செய்வதைப் போன்றதொரு மட்டமான விஷயம் வேறில்லை உலகில். அதுவே பெண்கள் என வருகையில் சமுதாயம் இதை எப்போதும், அந்தச் சிறுவனைப் போலவே தயங்காமல், ‘இதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது’ என்கிற மாதிரியான மனோபாவத்துடன் இன்றளவும் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காண்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பெண்கள். கடந்த வருடம் நவம்பர் 20ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பு பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட்டது. அன்று இருபத்து இரண்டு வயதே நிரம்பிய அம்பிகா ஹூடா, சீமாராணி ஆகிய இரு பெண் அதிகாரிகள் துணை லெப்டினென்ட் பொறுப்பேற்றனர்.



இதுகாலம் வரையில் பெண் பைலட்டுகள் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்கி வந்துள்ளனர். ஆனால் இந்த சாதனை மகளிர் கப்பற்படையின் குண்டு பொழியும் வசதிபடைத்த டார்னியர் விமானங்களை ஓட்டி ரேடார் மூலமாகக் கடலைக் கண்காணிப்பது, போர் விமானங்களின் வருகையைக் கவனித்து விமானப் படைக்குத் தகவல் தருவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளைக் கையாளப் போகிறார்கள். ஆக, ஆண்களால் மட்டுமே முடியுமென நினைக்கப்பட்ட விஷயங்களை பெண்களும் செய்து பார்க்க அனுமதி அளிக்கப் பட்டதால்தானே இது சாத்தியப்பட்டது. அவர்கள் முயற்சித்துதான் பார்க்கட்டுமே. முடியவில்லை எனத் தோற்றாலும் நட்டமொன்றும் இல்லை. ஆனால் முயற்சிக்க விடுங்கள்!

மாம் இப்போது இங்கே எந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது? சொல்லபோனால் எங்களுக்கான வாய்ப்புகளும் இவர்களால்தான் கெட்டுப் போகிறது’ என முணுமுணுக்கும் ஆண்கள் பலருண்டு. உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரியானா மாநில அரசானது அரசுப்பணியிலிருக்கும் பெண்களுக்கு இரண்டு வருட சி.சி.எல் எனும் சைல்ட் கேர் லீவ் ஒன்றை அறிவித்துள்ளது. முதலிரண்டு குழந்தைகளுக்கு மட்டுமென்றும், பதினெட்டு வயதை அவர்கள் எட்டும் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

இது சரியா தவறா எனும் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘இனிமேல் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். பெரும்பாலும் அலுவலகங்கள் இதனால் காலியாகத்தான் இருக்கப் போகின்றன. எந்த வேலைகளும் நடக்கப் போவதில்லை’ எனும் எக்காளம் வலுக்கிறது. தம்மை ஈன்றவளும் தம் வாரிசுகளைச் சுமந்தவளும் பெண் என்பதை இவர்கள் மறந்தொன்றும் போகவில்லை. மதிக்கின்ற மனம்தான் இல்லை. ஆனால் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கீதா புக்கல், தாய்மையைப் மதித்துப் போற்றும் அடையாளமாகவே இச்சட்டம் அமலுக்கு கொண்ட வரப்பட்டதாக அறிவித்துள்ளார்.

‘பெண்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக மட்டுமேயன்றி தம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டிலும் வெளியிலுமாக சுமைதாங்கும் அவர்களுக்கு இது தேவையான ஒன்றுதான்’ என அனுசரணையாகக் குரல் எழுப்பியுள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர். இருப்பினும், கிளம்பியிருக்கும் அதிருப்தியால் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்ற முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்க இன்றளவிலும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பிரசவகால விடுப்பு மூன்றுமாதங்களாகவே இருந்து வருகிறது.

விடுப்பு கிடைக்கிறது என்பதற்காக எவரும் தேவையில்லாமல் அதை பயன்படுத்துவார்கள் எனத் தோன்றவில்லை. ஏனெனில் வேலையின் மீதான் அக்கறையும், போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில் தன்னை நிரூபித்தாக வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் பெண்கள். இடைக்காலங்களில் தவிர்க்கமுடியாமல் நீண்ட விடுப்புகள் தேவைப்படுகையில் வேறுவழியின்றி பார்த்து வந்த வேலையை ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் ராஜினாமா செய்து விட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உண்டு. அந்த நிலைமை ஏற்படாமலிருக்கவும் இந்த சட்டம் உதவும் என்கிற வகையில் நிச்சயம் இது பாராட்டுக்குரியதே.

பி
ரசவகாலம் தவிர்த்து தன்னை ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி சலுகைகள் பெறுவதில் அத்தனை நாட்டமோ விருப்பமோ கொண்டவர்களாகத் தெரியவில்லை இன்றைய மங்கையர். எந்த உடல் உபாதையானாலும் பொறுத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வேலை செய்கிறார்கள். தமது குழந்தைகளுக்கொரு பிரச்சனை, எதிர்பாராத உடல்நலக் குறைவு என வரும் போது விடுப்பு எடுக்கும் சூழல்கள் அமைந்துதான் போகிறது. தாய்மையா வேலையா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிற நிலைமைதான். இதையே சாதகமாக்கி, ஒரு பதவி உயர்வென்று வருகையில், திறமையிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதிலும் பலமடங்கு முன்னணியில் இருந்தாலும்கூட பெண் எனும் காரணத்தால், குடும்பப் பொறுப்புடன் இந்தப் பொறுப்பை சரிவர செய்வது அத்தனை சாத்தியப்படாது என அவர்களைப் பின்தள்ளுவது நடப்பதேயில்லை என யாராவது சொல்ல இயலுமா?

சமுதாயத்தைப் பார்த்து எழுப்பப்படும் இக்கேள்விகள் யாவும், கவனிக்க, பெண்களுக்கும் உரித்தானதே. மேலதிகாரியாக இருப்பது ஒரு பெண்ணே ஆனாலும், அலுவலக நன்மை கருதியென இந்தமாதிரியான கட்டங்களில் பதவி உயர்வை திறமையில் ஒருபடி கீழே இருக்கும் ஆணுக்குத் தந்து விடுவதுண்டு. அந்த வாய்ப்பை உரிய தகுதியுடைய அந்தப் பெண்ணுக்கேதான் வழங்கிப் பாருங்களேன். எப்பாடு பட்டேனும் மூன்று குதிரையில் கூட சவாரி செய்து உங்கள் அலுவலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவார். இந்த இடத்தில்தான் வீட்டிலுள்ளவர்கள் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு.

வீடும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே? தினசரி வீட்டு வேலைகளில் உதவுவதில் முடிந்து விடுவதில்லை கணவனின் கடமை. குழந்தைகளின் பள்ளியில் பெற்றோர் சந்திப்புகள் அல்லது அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற பொறுப்புகள் தந்தைக்கும் உண்டு.தன்னைவிட மனைவி பெரிய பொறுப்பில் இருந்தால் ‘என் வேலை அத்தனை முக்கியம் இல்லை என நினைத்தாயா?’ என்றோ, அல்லது தான் உயர்பதவி வகிக்கும் கர்வத்தில், ‘என்வேலை முக்கியமா உன் வேலை முக்கியமா’ என்றோ விவாதம் செய்வது சரியல்ல. குறிப்பிட்ட அத்தினத்தில் மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் அதிமுக்கிய வேலை இருக்கலாம். அவரது வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லை எட்ட வைக்கக் கூடியதாக இருக்கலாம்.

கவனித்துப் பார்த்தால் இது போன்ற ‘நீயா நானா’வில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஊர் மாற்றமோ வேலை மாற்றமோ ஆணுக்கு நிகழுகையில், அதே ஊருக்கு தனது அலுவலகம் மூலமாக மாற்றலாகிட வழியில்லாது போகையில், அதுவரை பார்த்துச் சேர்ந்த பெயர் பதவி எல்லாவற்றையும் துறந்து வேறுவேலையைத் தேட கணவனுக்காகக் பொட்டியைக் கட்டும் மனைவியர்தான் எத்தனைபேர்? மறுபடியும் ஆரம்பப் புள்ளியிலிருந்து புதிய இடத்தில் வேலையைத் தொடங்க ஆண்களே அதீத தயக்கம் காட்டுகையில் குழந்தைகளின் படிப்பு,வீடு,வேலை,இட மாற்றங்களுக்கு மனத்திண்மையுடன் தம்மை தயார் செய்து கொள்கிறார்கள் பெண்கள்.

துரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.
*** ***






  • 6 மார்ச், “சக்தி 2010” மகளிர்தினச் சிறப்பிதழின் ஹைலைட்ஸ் ஆகஇங்கே:













  • யூத்ஃபுல் விகடன் தளத்தின் ‘அதிகம் படித்தவை’ பட்டியலிலும்:
நன்றி விகடன்!

  • ‘பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்’ எனும் தலைப்பில் ஜனவரி 2011 'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகையின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழிலும்.., நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தேடல்


ன்னென்ன நம் தேவை
என்கின்ற கோணத்திலேயே
என்றைக்கும் சிந்தித்து
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..

அதை அடைந்திடும் நோக்கம்
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்
துடிப்புடன் நாளதும் பொழுதும்
ஓயாமல் ஓடியாடி..

ஒருவழியாய் ஆசையது
நிறைவேறும் வேளைதனில்
தேடத்தான் வேண்டியிருக்கிறது
பலனாகக் கிடைத்ததா
துளியேனும் பரவசமென்று!

***

ன்னென்ன தேவையில்லை
எனத் தீர்மானித்து
ஒருதெளிவாய் வாழ்கின்ற
வகையினருக்கு மட்டுமின்றி..

இதுயிதுவே தேவையென
எல்லைகள்
வகுத்துக் கொள்ளாமல்
விடிகின்ற காலைகளை
நன்றிப் புன்னகைசிந்தி
எதிர்கொள்வது போலவே
வருகின்ற வளர்ச்சிகளைச்
சந்தித்தவராய்
செய்யும் பணிகளிலே
கவனத்தைக் குவித்துத்
திறம்பட முடிப்பதையே
பேரானந்தமாய்
உணர்பவருக்கும்..

தேடாமலேதான்
கிடைத்து விடுகிறதோ
நம்மில் பலருக்கும்
தீராத் தேவையாகவே
இருந்துவரும் அந்தப்
பரிபூரண மனநிறைவு?

*** *** ***


படம்: இணையத்திலிருந்து...






யூத்ஃபுல் விகடன் முகப்பில்:















விகடன்.காம் முகப்பில்:












வெள்ளி, 30 அக்டோபர், 2009

சிரிக்கும் சீனப் புத்தர்



கொள்ளைச் சிரிப்பில்
உள்ளம் தொலைத்து,
வரவேற்பரையை
அலங்கரிக்கவெனக்
கொண்டு வைத்தாலும்-
உழைப்பவர் வீடெனில்
அதிர்ஷடப் பொம்மையாய்
அருள்புரிவார் அங்கு
அழகாய்ச் சிரித்தபடி புத்தர்!

கொள்ளை கொள்ளையாய்
கொட்டும் பணமென
வாங்கி வைத்துவிட்டு-
உறங்குபவர் வீட்டிலோ
அலங்காரப் பொம்மையாகவே
வீற்றிருப்பார் என்றும்
எள்ளி நகைத்தபடி புத்தர்!
*** *** ***


இரண்டு வரி வாசகமாய் 'பொம்மை[அக்டோபர் PiT]' இடுகையில் நான் பதிந்த கருத்து, பதிவர் கோமாவின் பின்னூட்டக் கேள்வியால் ‘க்ளிக்’ கவிதையாய் மலர்ந்து விட்டுள்ளது 28 அக்டோபர் 2008 யூத் விகடனில். நன்றி கோமா!

இக்கவிதைக்கு விகடன்.காம் முகப்பிலும் இணைப்பு தரப் பட்டுள்ளது. நன்றி விகடன்!














2-4/11 யூத்ஃபுல் விகடனின்
‘அதிகம் படித்தவை’ பட்டியலிலும்:

புதன், 22 ஏப்ரல், 2009

விடியலுக்கு ஏங்கும் வெற்றுப் பிம்பங்கள்

இது கவிதையா என்கிற ஆராய்ச்சியை ஒதுக்கி விட்டு, ஒவ்வொரு வேளை வயிற்றுப்பாட்டையும் ஒவ்வொரு நாள் வாழ்க்கைப் பாட்டையும் பெரும் சிரமங்களுடன் கழிக்கின்ற ஏழைப் பொது ஜனங்களின் இதயக் கூவலாக, மன்னிக்க.. கேவலாகப் பாருங்கள்.

1987-ல் முதுகலை (ஆங்கிலம்) இறுதியாண்டில் இருக்கையில் அனைத்துக் கல்லூரி கவியரங்கில் வாசிக்கப்பட்டு பரிசும் பாராட்டும் பெற்றது. அடுத்த ஆண்டு நெல்லை சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் ‘முன்னாள் மாணவி’ என்ற குறிப்புடன், கேட்டு வாங்கி வெளியிட்டிருந்தார்கள்.




சை அலைகள்
ஆர்ப்பரிக்கும்
அரசியல் அரங்கிலுன்
அடிப்படை
நியாய உணர்வுகள்
நசிந்து விடாதென்றே
நம்பி இருந்தோம்!

இன்று
புல்லுருவிகள்
புசிக்கத் தொடங்கி விட்டன.
அவைஉன் பழைய
புண்ணியங்களைப்
புதைத்து விட்டுப்
பணத்துக்காகப்
பாவம் பண்ணச் சொல்லி
பசியாறத் தொடங்கி விட்டன!

அந்த
நய வஞ்சகர்களின்
கயமை மகுடிக்கு
நர்த்தனம் ஆடும்
நச்சுப் பாம்பாக
நீமாறி விட்டதை
முதலில்
எம்கண்கள் நம்ப மறுத்தாலும்
பின்னர் உன்னால்
எம்நெஞ்சில் உருவாக்கப்பட்ட
புண்கள்-
அவை
நிஜமே என்று
நிச்சயப்படுத்தி விட்டன!

அன்று
உன் உதடுகள்
உச்சரித்த
உறுதி மொழிகளை
உண்மையென்றே நம்பி
உற்சாகம் அடைந்திருந்தோம்.

அவை அச்சான
தினசரிகளைக் கூட
ஆதாரமாய்க் கையிலேந்தி-
அன்றைய கஞ்சியைத் துறந்து
ஆளுயர மாலையாக்கி-

ஆவலுடன் உன்
ஆடம்பர மாளிகையின்
வாசல்தேடி வந்திருந்தோம்.

கற்றைநோட்டுக்களைத்
தந்து செல்லும்
கனவான்களின்
கார்களுக்கு மட்டும்
விரியவே திறந்த
வெளிக் கதவுகள்-
கனவுகளைக் கண்களில்
தேக்கிநின்ற எங்களைக்
கடைசி வரை
கண்டு கொள்ளவேயில்லை!

அட
போலிக்காகக் கூடப்
பொது மக்களைப்
பொறுத்துப் போகாத
புதுமையை
இங்குதான் பார்க்கிறோம்!
குற்றம்யாவும் அந்தக்
கூர்க்கன்மேல்தான் என்றெண்ணி
அப்படியும் அயராமல்
அடுத்தமுறை வந்திருந்தோம்.

உன்
தரிசனம் வேண்டி
எமை மதியாத-அத்
தலைவாசல் விட்டுச்
சற்று தள்ளியே
கவனமுடன் இம்முறை
தவமிருந்தோம்.

வெளி வந்ததுன்
படகு வண்டி.
தென் பட்டது
உன் திருமுகம்.
முன் வந்து
முகம் மலர்ந்தோம்.
கை கூப்பிக்
கலங்கி நின்றோம்.

நீயோ
கண்டு கொள்ளாமல்
வண்டியை விடச்
சொன்னாய்.
ஆனாலும்
கணநேரத்தில் சுதாகரித்து
காரினை மறித்துக்
கரகோஷம் இட்டோம்.

நீயோ
காவலரை நோக்கிக்
கண்ஜாடை காட்டியே-
எம்மைக்
கலைக்கச் செய்தாய்.

உன் வாகனம்
எம் நம்பிக்கைகள்மீது
புழுதியை இரைத்துவிட்டுப்
புறப்பட்டுச் சென்றது.

அப்போதுதான்
இந்த
அப்பாவி
ஜனங்களின் மனங்கள்
யார் பாவி என்று
தப்பின்றி உணர்ந்தது
காலங்கடந்தே யாயினும்
தப்பின்றி உணர்ந்தது.

போலிக்காகக் கூடப்
பொது மக்களைப்
பொறுத்துப் போகாத
புதுமையைப்
பழகவும்
தெரிந்து கொண்டோம்.

ட்டு வீட்டில்
வாழ்ந்த உன்னை
ஓட்டுப் போட்டு
மாடி வீட்டில்
ஏற்றி வைத்தோமே?
பதவிக்குநீ வந்தால்
எம்பிள்ளைகள் படிப்பார்-
பானைச்சோறு உண்பார்-
படுத்துறங்க கூரைபெறுவார்-

என்றெதேதோ எண்ணித்தானே
ஊரோடு ஒட்டுமொத்தமாய்
உனக்கோர்
வெற்றிக்கொடி அளித்தோம்!

தேடித்தேடி வந்தன்று
தேனொழுகப் பேசியநீ
உதவிகேட்டு இன்று
கதறிவரும்
எங்களைக் கண்டு-
பதறியடித்து
ஓடிவரா விட்டாலும்
பாராமுகமாய் இருப்பதைக்
கூடவா தவிர்த்திட
இயலவில்லை?

பட்டத்து அரசன்நீ
கொத்தவரும் பருந்தானாய்.
சிதறிப் போன
நம்பிக்கைகளைச்
சேகரிக்கும் முயற்சியில்
சிறகொடிந்து போன
சிட்டுக் குருவிகளாய்
சீரழிந்து கொண்டிருக்கும்
எங்களுக்கு-உன்
சிந்தனையில் இடமுண்டா
என்றறியோம்!

உனக்கிருக்கும் இன்றைய
தகுதியைத் தந்ததே உன்
தொகுதி மக்கள்தாம்
என்பது
உனக்கு மறந்தேவிட்டது.

உன்
மனசாட்சியும் மரத்துவிட்டது.
சுயநலம் எனும்
சுகந்தமான கிரீடத்தைச்
சூடிக் கொண்டு
மனபலம் இழந்து
மருண்டு போய்
மருகும் எங்களுக்கோர் நல்ல
மாற்றம் தர
மறுக்கும் உன்
மனசாட்சி மரத்தேதான்விட்டது!

எமது
உயிர்கள் இங்கே
ஊசலாடிக் கொண்டிருக்க
நீயோ
உற்சாகமாய் ஊழலில் அங்கே
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றாய்!

உலை வைக்கவும்
வகையின்றி எம்
உள்ளங்கள் உழலுவதை
உணராமல் எம்
உணர்வுகளுக்கு
உலைவைத்து விட்டுநீ
உல்லாசமாய் உலகைச்சுற்றி
உலாவந்து கொண்டிருக்கின்றாய்!
நீங்கள்
வெற்றி பெறுவதே
வெளி நாடுகளைச்
சுற்றிப் பார்க்கத்தானே?

ஆசை அலைகள்
ஆர்ப்பரிக்கும் அரசியல்
அரங்கிலுன் அடிப்படை
நியாய உணர்வுகள்
நசிந்து விடாதென்ற
எங்கள்
நம்பிக்கைகள்தாம்
நசிந்து விட்டன!
அடிப்படை
வாழ்வாதார வசதிகள்
என்பவை எமக்கு
கானல்
நீராகி விட்டன!

வறண்ட வாழ்வெனும்
வகுத்தலுக்கு விடைதேடும்
வெற்றுப் பிம்பங்களாகி
நிற்கின்றோம்!

***

வ்வொரு தேர்தலும்
நம்பிக்கையை விதைப்பதும்
ஓரிரு திங்களில்அவை
தேய்ந்து மறைவதுமாய்
இடிதாங்கி இடிதாங்கி எம்
இதயங்கள் வலுப்பெறுகின்றதா
ஆடி ஆடி ஒருநாள்
அடங்கியே விடப்போகின்றதா?


இக்கேள்விகளுக்கு விடையைத்
தேடிடத் தெம்பில்லாமல்
எம்மைச் சுற்றிப்படர்ந்திருக்கும்
சூனியம் சுட்டெரிக்கப்பட்டு
வெளிச்சமானதோர் விடியல்
வந்தேதீரும் என-
நசிந்துபோன நம்பிக்கைகளை
வழக்கம் போலப்
புதுப்பித்துக் கொண்டு-
இதோ கிளம்பி விட்டோம்
இப்போதும் வாக்களிக்க!













*** *** ***




கடைசி இரண்டு பத்திகள் மட்டும் இன்றைய தேவை கருதி சேர்த்தததாகும். அன்றும் சரி இன்றும் சரி. எந்தத் தனிப்பட்ட கட்சியையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதப் பட்டதில்லை இது. ஆனாலும் ஏங்குகின்ற ஏழைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் இன்றளவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

வறுமைக் கோட்டின் கீழே அல்லல் உற்றாலும் தங்கள் வாக்கினை என்றைக்கும் பதியத் தவறாத இவர்களை, இவர்தம் அடிப்படித் தேவைகளை, வெற்றி பெறுபவர்கள் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டி...

இந்தத் தேர்தலில் நாளை என் வாக்கினைப் பதியும் முன்...

வைக்கின்றேன் ஒரு கோரிக்கையாய் இப்பதிவையே!

***

[படம்: இணையத்திலிருந்து]




இங்கு வலையேற்றிய பின் 23,24,25 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன்.காமில் இக்கவிதை:




24,25 ஏப்ரல் 2009 விகடன்.காம் முகப்பிலும்:










1 மே 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

ஜெய் ஹோ...!

முதன் முறையாக யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் எனது இக்கவிதை!


"எல்லாப் புகழும்
இறைவனுக்கே
"-
அல்லாவின் திருவடியில்
அத்தனைப் பாராட்டையும்
அர்ப்பணித்து
வெற்றி ஏணியின்
ஒவ்வொரு படியிலும்
ஏ.ஆர் ரஹ்மான்
தன் உள்ளிருந்து
உச்சரிப்பது.
உலகமே பார்த்திருக்க
இந்திய இதயங்கள்
இன்பத்தில் பூத்திருக்க
தமிழர் தலைகள்
பெருமிதத்தில்
நிமிர்ந்திருக்க
உச்சிப்படியில் நின்று
மறுபடி அதையவர்
உச்சரிக்கக் கேட்ட போது
அரங்கம் அதிர்ந்தது
கரகோஷத்தில்
அகிலம் அதிர்ந்தது
அவர் தந்த இசையில்..
ஜெய் ஹோ...!

தன்னம்பிக்கை இவரது
வெற்றியின் சூட்சமம்
தன்னடக்கமே இவரது
தாரக மந்திரம்-
ஈன்றெடுத்த
தாயின் பாதங்களில்
விருதினை சமர்ப்பித்து
தாய் மண்ணுக்கும்
ஈட்டித் தந்திருக்கிறார்
இத்தனை பெருமை-
ஆனந்த வெள்ளத்தில்
குதித்துக் கும்மாளமாய்
கூவுகிறார் ரசிகரெல்லாம்..
ஜெய் ஹோ...!

சூழ்கிறார் இவரைப் பேட்டிக்கு-
"எதுவும் முடியும்
எனும் எண்ணம்
இனி வரட்டும்
இளைஞர் ஒவ்வொருவருக்கும்"

சொல்கிறார் நற்செய்தி
வெல்கின்ற வழிகாட்டி-
சொல்லுங்கள் இளைஞர்களே
ஜெய் ஹோ..
வெல்லுங்கள் உலகை
ஜெய் ஹோ...!

செய்யும் தொழிலே
தெய்வம் என்று
நேர்த்தியை நாடி
விழித்தே இருந்த
இவரது இரவுகள்
யாவும் விடிந்தன
வெற்றியின் முகத்தில்
ஒவ்வொரு நாளும்-
வந்தன விருதுகள்
வாசலைத் தேடி..
ஜெய் ஹோ...!

வறுமை இவரை
வறுத்த போதும்
வருத்தம் விடுத்து
பொறுப்புகள் சுமந்தார்.
இளமையில் கல்வி
முழுமை அடைய
முடியாது போயினும்-
முயன்று கற்றார்
அல்லும் பகலும்-
முழுமையாய் இசையினை
மூத்தோர் பலரிடம்-
கூடவே கற்றார்
பணிவும் பண்பும்-
அயராத உழைப்பால்
அடைந்தார் வெற்றியும்-
ஜெய் ஹோ...!

பெற்றவர் இன்ன
துறையில் எனை
நுழைய விட்டிருந்தால்
தொட்டிருப்பேன் வானத்தை-
இன்னார் எனக்குவந்த
இவ்வாய்ப்பைத்
தட்டிப் பறிக்காதிருந்தால்
எட்டியிருப்பேன் இமயத்தை-
என்றெல்லாம்
போனவற்றைப் பேசிப்பேசிப்
பொழுதினைப் போக்காமல்
காரணத்தைத் தேடித்தேடி
கணங்களைக் வீணாக்காமல்
கற்றிடுங்கள் பாடமிவர்
பெற்றிருக்கும் வெற்றியில்
ஜெயிக்கப் பிறந்தவர்தாம்
நிச்சயமாய் நீங்களும்..
ஜெய் ஹோ...!
*** *** ***


[படம்: இணையத்திலிருந்து..]

[25-27 பிப்ரவரி 2009 விகடன் இணைய தள முகப்பிலும் ஒலித்தது 'ஜெய் ஹோ...!']


யூத்ஃபுல் விகடன் முகப்பில்
:
விகடன் இணையதள முகப்பில்:

வியாழன், 1 ஜனவரி, 2009

முதல் நாளில் என் முதல் கவிதை

பரிசல்காரர் சில மாதங்களுக்கு முன்னர் எல்லோரையும் அவரவர் 'முதல்’களை வலையில் போடச் சொல்லி அழைப்பு விட்டிருந்தார். தொடர்ந்தன பல முதல்கள்.. முதல் கதை, முதல் கவிதை, முதல் காதல், கிடைத்த முதல் வேலை, வாங்கிய முதல் சேலை, முதன் முதலில் சைக்கிள் ஓட்டியது கார் ஓட்டியது விமானம் ஏறியது என. போட்ட முதலுக்கு நல்ல கருத்து வட்டியும் பெற்றனர். அதோ அந்த வரிசையில் சற்றுத் தாமதமாக என்றாலும், புது வருடத்தின் முதல் மாதம் முதல் நாளில் முதல் நாழிகையில் இதோ என் முதல் கவிதை:

எத்தனை படைப்புகள் இறைவனாலே


[தலைக்காவேரி உச்சியிலிருந்து என் காமிராவுக்கு கிட்டிய தரிசனம்]


எத்தனை படைப்புகள் இறைவனாலே
அத்தனையும் நமக்கென அறிந்திடுவோம்;
முத்தென அவற்றை நாமுமே நம்
சொத்தென போற்றிக் காத்திடுவோம்!

வானின் கருமையும் வயலின் செழுமையும்
தந்திடும் செல்வம் நமக்காக;
காடும் மலையும் கடலும் ஆறும்
விலங்கும் பறவையும் வாழ்வின் சுழற்சிக்காக!

மாந்தர் அனைவரும் நம் நண்பரென
சாந்தமாக நடந்தே நாம்-நற்பெயரும்
அன்பும் பெருக்கிடுவோம்-மென்மேலும்
பண்புடன் வாழப் பழகிடுவோம்!

இறைவனின் வரமாம் இயற்கையின் அருளால்
எல்லா வளமும் பெற்றிடுவோம்;
அறத்தின் வழியினைக் கடைப்பிடித்து
அல்லல் இன்றி வாழ்ந்திடுவோம்!
*** *** ***

1979-ல் பத்தாவது வகுப்பில் இருக்கையில், நான் பயின்ற பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் தனது ஐம்பது ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்ட சிறப்பு மலரில் வெளியான கவிதை.

எனது பதினைந்தாவது வயதில் எழுதியது. ஆகையால்,
சொற்பிழை பொருட்பிழை இருந்தால் பொறுத்தருள்வீர்!
சொல்ல வந்த கருத்தை மட்டும் கணக்கில் கொள்வீர்!
பொற்காசை வழக்கம்போல வழங்கிச் செல்வீர்!
[பொற்காசு? வேறென்ன உங்கள் பொன்னான பின்னூட்டமும் கண்ணான கருத்தும்தான்!!]




கடந்த வருட PiT மெகாப் போட்டியில் முதல் பதினொன்றில் ஒன்றாக முன்னேறி நடுவர் சர்வேசனால் "ஒரு வாழ்த்து அட்டைக்கு உரிய சர்வ லட்சணங்களும்" உள்ளதாகப் பாராட்டப் பட்ட எனது படத்தையே இங்கு பதிந்து, வரவிருக்கும் வருடம் சிறக்க வாழ்த்துகிறேன்.

இயற்கை அன்னை பொழியட்டும் கருணை





உதிக்கின்ற இளங்காலைச் சூரியனுடனே
பிறக்கின்ற புது வருடத்தில்
இதுவரை இருந்த எந்தவொரு
இன்னலெனும் இருளும் விலகி-
ஒவ்வொருவர் குடும்பத்திலும்
எல்லா வளமும் பெருகி-
நம் நாட்டில் மட்டுமின்றி
உலகம் முழுவதும்
மனிதம் உயிர்திருக்கவும்
ஒற்றுமை ஓங்கி அமைதி தவழவும்-
ஈழ மக்களின் பிரச்சனை யாவும்
இனிய முடிவுக்கு வரவும்-
தனிமனிதனுக்கு உணவு கிடைக்க
வழியற்ற வறுமை நீங்கவும்-
தடுமாறும் பொருளாதாரம்
தலைதூக்கி சுபிட்சம் நிலவவும்-
எல்லாம் வல்ல இறைவனை
இணைந்து நாம் பிரார்த்திப்போம்.
அகிலமெங்கும் இப்படியான
அறம் தழைத்திட்டால்-
நீர் நிலம் நெருப்பு
ஆகாயம் காற்று இவை
எவற்றிற்கும் ஏற்படாது
எள்ளளவும் சீற்றம்.
இயற்கை அன்னையின் கருணையும்
உவகையுடன் பொங்கி வழியும்!
வாழ்வீர் வளமுடன் யாவரும்!

[பாருங்கள்,இயற்கை அன்னையை வியந்து எழுதிய என் முதல் கவிதையின் கருத்து இப்போது படைத்த வாழ்த்திலும் தானாகவே வந்து விட்டதை..]

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!




இங்கு வலையேற்றிய பின்னர் 'இயற்கை அன்னை பொழியட்டும் கருணை' 13 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் சித்திரைத் திருநாள் வாழ்த்தாக:

விகடன்.காம் முகப்பில்:

திங்கள், 20 அக்டோபர், 2008

'புகை'ச்சல்




விரலிடுக்கில்
அது
உங்கள் விருப்பம்.
அறவே
அதை
நீங்கள் விட்டிடத்தான்
அரசு வைக்கிறதோ
மறைமுகமாய்
ஒரு விண்ணப்பம்?

'பொது இடத்தில்
புகைக்கத் தடை'
அது
கிளப்பிய புகைச்சலுக்கு
இருக்கிறதா பாருங்கள்
இங்கே விடை:
சட்டம் கொடுக்கிறது
சில நிமிடக்
கட்டாய ஓய்வு.
அதனால்
தடை படுவதோ
உங்கள்
ஆயுளின் தேய்வு.


தனிமனித உரிமை
தவிடு பொடி ஆவதாய்
படபடக்கும் முன்னே-
வருமா
ஒரு சிந்தனை?
உடனிருக்கும் மாந்தருக்கும்
உண்டன்றோ
சுத்தமான காற்றை
சுவாசிக்கும் உரிமை.


வீட்டினிலும் கூடத்தான்-
நேசிப்பவரின் சுவாசிப்பில்
மாசினைக் கலந்திடல்
நியாயமா என
யோசித்தால் அருமை!
***

விரல் இடுக்கில்
அது என்றும்
உங்கள் விருப்பம்.
அதை விடுவதா
எனும் சிந்தனையே
பெரும் கலக்கம்.

ஊதும் புகையோடு
உள்ளிருக்கும்
மன இறுக்கம்
வெளியேறி விண்ணோடு
மறைவதாய்
மனம் மயங்கும்.
ஆனால்
உண்மைகள் யாவும்
அறிவுக்குத் தெரியும்.
***

விரல் இடுக்கில்
அது என்றென்றும்
உங்கள் விருப்பம்.
ஆயினும்
அறிவீர் நீரே:
இதயநோயின் உதயத்துக்கு
வாய்ப்பென்றும்-
புற்றுநோய்க்குப் பூத்தூவி
வரவேற்பென்றும்-
பக்கவாதத்தைப் பக்கமே
வரவிடக் கூடுமென்றும்-
சிறுநீரகப் பாதிப்பெனும்
சிக்கலிலே சீக்கிரமே
சிக்க வைத்திடலாமென்றும்.

இத்தனையும்
அறிந்த பின்னும்
எத்தனை நாள்
தொடர்வதென்பதும்
சத்தியமாய்
உங்கள் விருப்பம்.
ஆயினும்
சிந்திக்க நேரமின்றி
கவலைப்பட கணங்களின்றி
ஓடிக் கொண்டிருக்கும்
உங்களைத்
தேடி வந்திங்கு
நினைவூட்டவே
இந்தச் சட்டமென
நினைத்துப் பார்த்தால்
புகைச்சலோடு வந்த
எரிச்சலும் எரிந்திடும்.
***

வாழ்விலே
வேறென்னென்ன
உங்கள் விருப்பம்?
மாறாத புன்னகையை
உறவுகளுக்குத் தருவது?

மனதில்
உறுதி கொண்டால்
மறந்திட
இயலாதா புகையை?

இயலும்
உங்கள் நலத்தோடு
பின்னியது
உங்கள் நலம் நாடுவோர்
நலமும்
என்பதை
இதயத்தில்
இருத்திக் கொண்டால்!
*** *** ***
[படம்: இணையத்திலிருந்து]




இங்கு வலையேற்றிய பின் அக்டோபர் 23, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.

'உங்கள் விருப்பம்’ என்ற தலைப்பில் 21 மே 2009 யூத்ஃபுல் விகடன் இணையதளத்திலும்:












23 மே 2009 விகடன்.காம் முகப்பிலும்:

வியாழன், 5 ஜூன், 2008

ஜானி ஜானி நோ பப்பா:( ?


"ப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ்"

"ஏண்டா இப்படிக் கிளம்புற நேரத்தில் உயிரை வாங்கிற! சொன்னா சொன்னதுதான்." பெட்டிகளை வேனில் ஏற்றுவதில் மும்முரமாக இருந்த ரகுபதி சுள்ளென்று எரிந்து விழுந்தார்.

முரளிக்கு கண்ணீர் வந்தது. மெல்ல மண்டியிட்டு அமர்ந்து ஜானியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். "இல்லடா ராஜா, உன்னை விட்டுட்டு போயிட மாட்டேன்" என்றான் அடிக்குரலில். அதற்கு புரிந்ததோ என்னமோ வழக்கத்தை விட அதிக பாசத்துடன் வாலை ஆட்டியபடி அவனிடம் குழைந்தது.

வீட்டுக்குள் இருந்து எதேதோ சாமான்களை வேனில் ஏற்றுவதற்காக சிரமத்துடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த அக்கா கல்பனா கோபத்தில் கத்தினாள். "எப்படி அல்லாடுறேன்! இங்க வந்து ஒரு கை கொடேன். இன்னும் ஏன் அதோடயே இழைஞ்சிட்டு நிக்கறே ? சனியனை என்னவானாலும் கூட்டிட்டுப் போகறதில்லேன்னு ஆயிடுச்சு." ஜானியைக் கண்டாலே அவளுக்கு அப்படியொரு வெறுப்பு. ஜானிக்கு பயந்துதான் தன் தோழிகள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்று வேறு நினைப்பு.

"போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு" பதிலுக்குச் சீறினான் முரளி. 'சே! ஜானி எவ்வளவு நன்றியாய் பாசமாய் இருக்கிறது! யாரும் அதைப் புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறார்களே! ' வருத்தம் மேலிட அதைத் தடவிக் கொடுத்தான்.

ஜானி குட்டியாய் இருந்த போது, ஒரு மழை நாளில் குளிரில் நடுங்கியபடி இவன் வீட்டு வராந்தாவில் பதுங்க, பாவப்பட்டு அடைக்கலம் கொடுக்கப் போய் இவனுடனேயே ஒட்டிக் கொண்டது. இந்த இரண்டு வருடத்தில் 'திமுதிமு ' என ஒரு பெரிய கன்றுக்குட்டியின் சைசுக்கு என்னமாய் வளர்ந்து விட்டது. ஸ்கூலுக்கு, கடைக்கு, நண்பர் வீடுகளுக்கு என் எங்கு போனாலும் கூடவே வரும்.

இப்போது அப்பாவுக்குப் பதவி உயர்வோடு மாற்றலாகி விட்டது. வீட்டு சாமான்களெல்லாம் டெம்போவில் போயாகி விட்டது. இவர்களும் இன்று கிளம்புகிறார்கள். ஜானியைக் கூட அழைத்துப் போக வேனில் இடமிருந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் மனதில் இடமில்லையே.

கடைசி நிமிடம் வரை போராடிப் பார்த்து விடுவது எனத் தீர்மானித்தவன் போல "அப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ்" என மறுபடியும் கெஞ்ச ஆரம்பித்தான் முரளி.

"டேய் சும்ம தொணதொணக்காதே! ஏதோ ரொம்ப ஆசைப்பட்டியேன்னு இது நாள் வரை அதை இருக்க விட்டதே பெரிசு. நான்தான் அங்கே போனதும் உனக்கு வேற நாய் வாங்கித் தர்றேன்னு சொல்றனே! " என்றார் எரிச்சலாய்.

"ஏம்பா! அந்த புது நாய் என் ஜானியாகிட முடியுமா என்ன ? "கண்ணில் நீர் முட்டக் கேட்டான் முரளி.

"புரியாம பேசறியேடா! வாங்கிற நாய்க்கும் ஜானின்னு பேர் வச்சா போச்சு! நாம போற இடத்தில அவனவன் டாபர்மேன், அல்சேஷன்னு வளர்த்திட்டிருப்பான். அங்கே இந்த தெரு நாயைக் கூட்டிட்டுப் போனா நம்ம ஸ்டேட்டஸ் என்னாகிறது? "

"சரியா சொன்னீங்கப்பா, 'புசுக் புசுக்'குன்னு பட்டுப் போல ஒரு பொமரேனியனை வாங்கி வளர்ப்போம்" என்று ஒத்துப் பாடினாள் கல்பனா.

"நீ சும்மா இருடி" என்று அவளை அதட்டிய முரளி ஒரு கணம் அப்பாவை உறுத்துப் பார்த்து விட்டுக் கேட்டான், "ஏம்ப்பா இந்த வாயில்லா ஜீவன்கள் கிட்டேயே ஜாதி பார்க்கிற நீங்களா மனுஷங்களுக்கிடையே உள்ள ஜாதி வித்தியாசங்களை ஒழிக்கப் போறீங்க?"

த்து வயது பாலகனின் அந்தக் கேள்வி, பல ஆயிரம் பாம்புகள் கொத்தியது போலிருந்தது ரகுபதிக்கு.

நேற்று அவருக்கும் குடும்பத்தினருக்கும் தரப்பட்ட பிரிவு உபசார விழாவில், தான் பேசியதைத்தான் முரளி குறிப்பிடுகிறான் எனப் புரியாமல் இல்லை.

"எனக்குப் பதவி உயர்வு கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சதும் ஜாதி சங்கத்திலே இருந்து கூட்டமா வந்து எனக்குப் பாராட்டு விழா எடுக்க விரும்புறதா சொன்னாங்க. 'முதல்ல உங்க சங்கத்தை கலைச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு பெரிய விழா எடுத்துட்டுப் போறேன்'னு நான் சொன்னேன்"

நன்றியுரை ஆற்றும் போது அவர் சொன்னதைக் கேட்டு சிரித்த கூட்டத்தை நோக்கி கையமர்த்தி விட்டு ஆவேசமாய் "ஜாதி என்னய்யா ஜாதி ? நான் உசந்தவன், நீ தாழ்ந்தவன்கிற சண்டையே ஜாதியாலதான் வருது. ஜாதிகள் மறையணும்னா முதல்படியா சங்கங்கள் கலையணும். போற இடத்திலே எல்லாம் நான் இதை அஞ்சாமல் அடித்துச் சொல்லத்தான் போகிறேன்" என்றார் ரகுபதி.

அப்போது கை தட்டிக் கரகோஷித்தக் கூட்டம் இப்போது கை கொட்டி சிரிப்பது போல மனதுக்குள் ஒரு பிம்பம் தோன்றி மறைய, தலையை உலுக்கிக் கொண்டார் ரகுபதி.

"எவ்வளவு திமிர் இருந்தா அப்பாவையே எதிர்த்துப் பேசுவ நீ" என்று சமயம் பார்த்துத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள கை ஓங்கிய கல்பனாவைத் தடுத்த ரகுபதி, முரளியைக் கனிவுடன் நோக்கி "ஜானியும் நம்ம கூட வருது" என்றார்.


***



'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1992 'நண்பர் வட்டம்' இலக்கியப் பத்திரிகையிலும், பின்னர் August 28, 2003 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்த சிறுகதை.

படம் : இணையத்திலிருந்து

இங்கு வலையேற்றிய பின் மார்ச் 11, 2009 யூத்ஃபுல் விகடன் இணையதளத்தில் கீழ் காணும் தலைப்புடன் வெளிவந்த இச்சிறுகதைக்கு விகடன்.காம் முகப்பிலும் லிங்க் தரப்பட்டிருந்தது:


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin