
மைசூர் அரண்மனை பற்றிய விரிவான தகவல்களுடனும் 27 படங்களுடனும் ஆன எனது 2017_ஆண்டுப் பதிவு ஒன்று இங்கே: “அம்பா விலாஸ்”.
முன்னரெல்லாம் அரண்மனையை வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதி இருந்தது. உள்ளே செல்லும் முன் மீண்டும் நுழைவாயிலுக்குச் சென்று கேமரா, மொபைல் அனைத்தையும் லாக்கரில் ஒப்படைத்து விட்டே செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறைகள் சென்ற போதும் இதுதான் விதிமுறையாக இருந்ததால் ‘அதில் என்ன மாற்றம் வந்து விட்டிருக்கப் போகிறது’ என்று சற்றே அலட்சியமாக இருந்து விட்டேன் இந்த முறை. அரண்மனைக்குச் செல்வது பயணத் திட்டத்திலும் இருக்கவில்லை. ஆனால் உயிரியல் பூங்காவுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில் நேரம் இருந்ததால், அரண்மனைக்கு வெளியே மட்டும் சுற்றி விட்டு வரலாம் என்கிற முடிவுடன் சென்றேன்.
#2
#3
அந்தியில் மின்னிய அரண்மனையின் வெளித் தோற்றத்தை ஓரிரு படங்கள் எடுப்போம் என ஆரம்பித்த போதுதான் கவனித்தேன், முதல் தளத்தில் பலபேர் கையில் அலைபேசிகளுடன் செல்ஃபி எடுத்தபடி நின்றிருந்ததை. வியப்பாகி அங்கிருந்த காவலரிடம் கேட்ட போது, ‘உள்ளே ஃபோட்டோகிராஃபி அலவ்ட்’ என்றார். “ நீங்கள் போக வேண்டுமா? ஐந்தரை மணி வரையிலும்தான் அரண்மனைக்குள் நுழைய முடியும், ஆறு மணிக்கு வெளியேற்றி விடுவார்களே. வேகமாகப் போங்கள்” என்றார். இன்னும் 5 நிமிடங்களே இருக்க அரக்கப் பரக்க விரைந்து ஒருவாறாக நுழைந்து விட்டோம்.
#4
அரை மணி நேர அவகாசமே இருந்ததாலும், உள்ளே இருந்த கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே மக்களை அவசரப்படுத்தியபடி இருந்ததாலும், ஆற அமர படமாக்க முடியவில்லை. கிடைத்த நொடிகளில் ரசித்து எடுத்தவற்றின் அணிவகுப்பு கீழே..
அரண்மனையில் முதல் தளத்தில் அமைந்துள்ளன இரண்டு தர்பார் மண்டபங்கள். தெற்கு பார்க்க அமைந்திருப்பது மன்னர் பார்வையாளர்களைச் சந்திக்கும் பொது தர்பார் மண்டபம்.
கிழக்குப் பார்க்க அமைந்திருப்பது மகராஜா தனிப்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கும் அம்பா விலாஸா எனப்படும், தனிப்பட்ட தர்பார் மண்டபம்.
தனிப்பட்ட (private) தர்பார் மண்டபம் ‘அம்பா விலாஸா’ என அழைக்கப்படுவதுடன் அதன் பெயரே அரண்மனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
#5
இது இந்தோ-சரசெனிக் (Indo-Saracenic) கட்டடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.