![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC7Wdnkp8SkDcmNlX7eZf4cd0-be1lAnry7bmu0JPPF4z1hCyTcAnXaKyK40e4KDr-AxbIyofQ_4A-3qKOx30aHtO2niAClpH-SHQ-BP7FW7yJ4T65sGiGAwmgEA1IjAanetfFyGiQBno/s400/porter.jpg)
இரயிலைப் பிடிக்க
எந்த நிபந்தனையும் விதிக்காமல்
கனத்த பெட்டிகளையும்
பெருத்த பைகளையும் வாங்கிக்கொண்டு
‘எந்தவண்டி எந்தகோச்’
கேட்டபடிகூட்டத்துள் புகுந்து புறப்பட்டு
ஓடியகூலியைப் பின்தொடர்ந்தேன்
ஒருகையில் குழந்தையும்
மறுகையில் அழுத்திப்பிடித்த
மனைவியின் கரமுமாக
இலாவகமாய் சுமையை உள்சேர்த்து
ஏறவும் கைகொடுத்தவன்
தெய்வமாகத் தெரிந்தான்
‘எவ்வளவு சொல்லுப்பா’
தப்பாகி விடக்கூடாதேயெனும்
தவிப்பில் நானும்
‘நீயேதான் போட்டுக்கொடு சார்’
அதீத நம்பிக்கையில் அவனும்
இடம்மாறிய நோட்டுத்தாள்களில்
அடைந்தானா திருப்தியென
அளவெடுக்கும் முன்னரே
நகரத்தொடங்கியிருந்தது வண்டி
அவசரமாய் இறங்கிச்சென்றவன்
இமைகளுக்கிடையே இருந்தது
சங்கடமா சந்தோஷமா
எழுந்த சந்தேகம்
வழியனுப்பிப் பார்த்துநின்ற
பலநூறு விழிகளின்
விதவிதமான உணர்வுகளுக்குள்
வேகவேகமாய்க் கரைந்து
காணாமல் போய்க்கொண்டிருந்தது
இனிஆராய்ந்து விடைதேட
அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!
***படம்: இணையத்திலிருந்து..
நன்றி புன்னகை!
'புன்னகை' , க.அம்சப்ரியா அவர்களை ஆசிரியராகக் கொண்டு கடந்த பத்து ஆண்டுகளாக பொள்ளாச்சியிலிருந்து வெளிவரும் கவிதை இதழ். ஏப்ரல் மாதம், தனது அறுபதாவது இதழை அறுபது கவிஞர்களின் கவிதைகளுடன் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. அறுபதில் ஒன்றாக இக் கவிதையும்..!