வாசிப்பனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 மே, 2023

தேரி - ராஜேஷ் வைரபாண்டியனின் நாவல் - ஒரு பார்வை - கீற்று மின்னிதழில்..

தேரி. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், அற்புதம்! ‘ஒவ்வொரு நாளும் ஒருசில அத்தியாயங்கள்’ என முடிவெடுத்து ஆரம்பித்தேன். ஆயின் ஆவல் மிக, தொடர்ச்சியாக மூன்று தினங்களில் வாசித்து முடித்தேன்.  

காட்சிகளாக விரியும் கிராமத்து மக்களின் எளிய வாழ்க்கை,  சீரிய எழுத்து நடை, ரசிக்க வைக்கும் வட்டார வழக்கு, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கண் முன் கொண்டு வந்த சிறப்பு,  நுட்பமானக் கதைப் பின்னல், வாசகரின் ஆர்வத்தைத் தூண்டியபடி சென்று உரிய நேரத்தில் ஒவ்வொன்றாகக் கட்டவிழ்க்கப்பட்ட முடிச்சுகள்!

வெள்ளி, 29 மார்ச், 2013

சாமியாட்டம் - யெஸ். பாலபாரதியின் சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை - கீற்றினில்..


படைப்பிலக்கியம் என்பது அந்தந்த காலக்கட்டத்தின் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருந்து வருகின்றன. ஏற்கனவே சமூகத்தில் ஊறிப்போன கோட்பாடுகளிலிருந்து விலகாமல் அவற்றைச் சார்ந்தும் ஆதரித்துமாய் படைக்கப்படுகிறவை ஒரு வகை. களையப்பட வேண்டிய நெறிமுறைகளை, தவறான நம்பிக்கைகளை, திருத்திக் கொள்ள வேண்டிய வழக்கங்களை அக்கறையுடனும், அங்கதம் கலந்தும் சுட்டிக்காட்டுபவை ஒரு வகை. இரண்டாவது வகையில் வெற்றி கண்டிருக்கிறது யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதைத் தொகுப்பு.   மற்றுமொரு செய்தியாக நாம் கடக்க நேர்ந்த நிகழ்வுகளையும், புரையோடிக் கிடக்கும் சமூக சீர்க்கேடுகளையும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் சித்தரிக்கிற கதைகள் மனதில் வலியையும், நம் இயலாமை குறித்த குற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

ஞாயிறு, 17 மார்ச், 2013

பெண் மகவைக் கொண்டாடும் “ங்கா” - தேனம்மை லெஷ்மணனின் கவிதைக் குழந்தைகள் - ஒரு பார்வை


“ங்..கா..”

குழந்தையின் முதல் மழலைச் சொல்.

ஒவ்வொரு குழந்தையும் முதன் முறை இதை உச்சரிக்கையில் குடும்பமே குதூகலிக்கிறது. அந்தக் குதூகலம் குழந்தையையும் தொற்றிக் கொள்ள ‘படீர் படீர்’ எனக் காலைப் படுக்கையில் ஓங்கி அடித்துக் கால் தண்டையோ கொலுசோ ’ஜல் ஜல்’ எனப் பக்கவாத்தியம் வாசிக்க, பொக்கை வாய் மலரச் சிரித்து, கண்கள் மினுங்க இன்னும் சத்தமாய் ‘ங்கா.. ங்கா’ எனத் தொடரும் போது அன்னைக்கும்,  அனைவருக்கும் உலகமே மறந்து போகிறது. சம்பந்தி வீட்டாருக்கிடையே இருக்கும் மனக் கசப்புகள் கூட அந்த மழலைச் சொல்லில் மறைந்து போகிறதென்கிறார் தலைப்புக் கவிதையில் கவிஞர். உண்மைதான். அதுவும் எங்கள் ஊர்ப் பக்கத்தில் குழந்தை ‘ங்கா’ சொல்ல ஆரம்பித்ததும் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, மாமா, சித்தப்பா, அக்கா, அண்ணா என ஆளாளுக்கு மாற்றி மாற்றி அதைச் சூழ்ந்து கொண்டு “இங்குங்கு பேசணுமா..? ஆக்காக்கு பேசணுமா..?’ எனக் கொஞ்சியபடியே இருப்பார்கள். அந்த அழகான முதல் மழலைச் சொல்லையே தொகுப்புக்குப் பெயராக்கிய இரசனையிலும் பாராட்டைப் பெறுகிறார் கவிஞர்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

கேட்பினும் பெரிது கேள்! - புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்..

கவிதை தொன்மையானது. எத்தனையோ நூற்றாண்டுகளாக உலகின் எல்லாப் பாகங்களிலும் பயனில் இருந்து, பல துறையைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு உணர்வுகளின் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் கூடவே கவிதை வாழ்க்கைக்குத் தேவையா எனும் கேள்வியும் இருந்து வரவே செய்திருக்கிறது. அதற்கு விடையாக வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் தன் எல்லைக்குள் கொண்டு வந்து காட்டியிருக்கிறது, காட்டிக் கொண்டிருக்கிறது கவிதை. தனது முதன்மையான குறிக்கோள் அழகை ஆராதிப்பதிலோ, தத்துவங்களைப் பொழிவதிலோ, கருத்துக்களை நம்ப வைப்பதிலோ அன்றி கற்பனையோ நிஜமோ, பொதுவானதோ புதிரானதோ, அழகோ அல்லாததோ, நேர்மையோ அநீதியோ.., வாழ்க்கை அனுபவங்களை வார்த்தைகளில் கோர்த்து வாசிப்பவரை மீண்டும் வரிகளிலே வாழச் செய்வதே என நிரூபித்து வந்திருக்கிறது, வருகிறது.

கவிதையின் இன்றியமையாமையைக் கருத்தினில் கொண்டு க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோர் கவிதைகளுக்காகவே வெளியிட்டு வரும் இருமாதச் சிற்றிதழ் “புன்னகை - கேட்பினும் பெரிது கேள்!”. கவிதைகளோடு அதில் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. தனது அறுபதாவது இதழில் அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது . பலரது படைப்புகளோடு ஒரு குறிப்பிட்டக் கவிஞரின் சிறப்பிதழாகவும் கவிஞர்களைக் கெளரவித்து வருகிற புன்னகையின் எழுபதாவது இதழில் அந்தப் பெருமையைப் பெறுகின்றவர் கவிஞர் கதிர்பாரதி. ஜூலை-ஆகஸ்ட் 2012 புன்னகையில் இவரது 13 கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு இதழிலும் கவிதை குறித்த பார்வையாக அமைகிற முதல் பக்கம் புன்னகையின் சிறப்பம்சம். எழுபதாவது இதழின் முதல் பக்க வரிகளில் சில, கவிதையிடம் தன்னை ஒப்படைத்திருக்கிற கதிர்பாரதிக்கும் அவரது கவிதைகளுக்குமே பொருந்துவதாக:
  • “கவிதையை உணர்ந்து படைப்பவர்களுக்கும் கவிதையை உள்ளக் கிளர்ச்சியோடு தேடுகிறவர்களுக்காகவும் கவிதை தன்னை ஒப்படைத்துவிடவே ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறது.
  • கவிதை கடைசிச் சொட்டு கண்ணீரையும் ஒற்றியெடுக்கும் கைக்குட்டையாகவும் இருக்கும்.
  • கவிதை போராட்டத்தின் வலிமையை கூடுதலாக்கும் ஒரு வைராக்கியச் சொல்லாகவும் மாறும்.
  • தனித்த பயணத்தில் பாதைகாட்டியாகவும் தன்னை அடையாளப்படுத்தும்.”
பத்திரிகைகள், சிற்றிதழ்கள் மற்றும் இணையம் மூலமாக இவரது கவிதைகள் ஏற்கனவே எனக்குப் பரிச்சயம் என்கிற வகையிலேயே இதை எளிதாக உணரவும் சொல்லவும் முடிகிறது. சீரணிக்கச் சிரமமான, வாழ்வின் கடினமான நிதர்சனங்களைப் படம் பிடிப்பவையாக இருக்கின்றன இவரது கவிதைகள். கூர்மையுடன் கவனிக்கிற வாசகருக்கு நல்லன அல்லாதன எவையும் இவர் கண்களினின்று தப்பாததும் சமூகத்தின் மீதானக் கோபங்களைக் கூட அழகியலுடன் அங்கதம் கலந்து சொல்லிச் செல்வதும் புலனாகும். அன்பு நகரில்,
அல்லவை அனைத்தும் நல்லவையானதற்கு
அன்பு ஆட்சிக்கு வந்ததுதான் காரணம்” என்ற சுற்றலா வழிகாட்டியின் வார்த்தைகளில் பதற்றமுற்று அதிகாரம் ஆட்சி செலுத்தும் நகரத்துக்குத் தப்பித்து வந்ததைச் சொல்லுகிற ‘அன்பின் வாதை’ அப்படியான ஒன்றே.

வேம்பு கசப்பதில்லை’ கவிதையின் வார்த்தை வனப்பில் தமிழ் தித்திக்கிறது:
...ஏறுவெய்யில் நிலம் சலிக்கும் ஒரு முன்மாலையில்
பொன்மூக்குத்தி பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாய் இல்லை
இந்தக் கோடை.

பழைய குடும்பப் படங்கள் எதேச்சையாகக் கையில் கிடைக்கையில் அதில் நம்மையே தொலைத்து விடுகிறோம். நம் அனைவரின் உணர்வாகவும் இந்தக் ‘குடும்பப் புகைப்படம்’:

நெடுநாட்கள் கழித்து குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பார்க்கையில்
சுடர்விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள் ஒரு முகத்தில்
வேறொன்றில் வெறுப்பு மின்னலென ஓடி மறைகிறது
மற்றொன்றில் சாந்தம் கொண்டலென வீசுகிறது
பிறிதொன்றில் அசூயையும் ஆற்றாமையும் வழிகிறது
தளிர்முகமொன்றில் தன் சல்லிவேருக்கு
பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது
வயோதிகச் சுருக்கங்களில் காலம் சலசலத்துப் பிரவகிக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக சதியொன்றின் வடுவில்
தடுக்கி விழ நேர்கிறது
திடுக்கிட்டு மூடிவிட்ட புகைப்படத்தை
மீண்டுமொருமுறை எடுத்துப் பார்க்கிறீர்கள்” என நீளுகின்ற கவிதையில் இந்தக் கடைசி நான்குவரிகளில் ஒரு திடுக்கிடலை உணரவே செய்கிறோம்.

வீட்டை எட்டிப் பார்த்தல்’. மனித இயல்புகளில் ஒன்றான இதை விவரித்துச் செல்லுகிறவர் முடிவில்,
...புறாக்கள் இரையுண்ட
அவ்வீட்டின் கிணற்றடியை எட்டிப் பார்க்காமல் வந்துவிட்டீர்கள்.
ஏனெனில் கிணற்றுக்குள் தளும்புவது தண்ணீரல்ல
ஒரு பெண்ணின் கேவல்கள் என்று
உங்களுக்குத் தெரிய வந்துவிட்டது.
இனி ஒருபோதும் அந்த வீட்டைக் கடந்து
உங்கள் வீட்டுக்குப் போக முடியாது.” என பெண்ணின் சோகத்துக்கான காரணங்களை வாசகர் கற்பனைக்கு விட்டு தீராத தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

‘நமது வாழ்வை முழுமையாக வாழுகிறோமோ?’ கேட்டுக் கொள்ளாமல் கடக்கவே இயலாது நம்மால் மற்றுமொரு கவிதையான ‘கடக்க இயலாத தெரு’வை:
தெரு ஒன்றைக் கடப்பதென்பது
உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும் போலும்.
விம்மல் கலந்து உதிரும் கண்ணீர்த் துளியொன்றை
விளக்கேற்றி வைக்கும் புன்னகையொன்றை
மெதுமெதுவாய் மடல்விரியும் மலரொன்றை
புறவாசலில் பூத்து மறையும் மின்னலொன்றை
தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுமையாக தெருவைக் கடக்கவில்லை.
வாழ்வையும்தான்.

சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் அவதானித்து, இவரிடம் தன்னை ஒப்படைத்த கவிதைக்கு நேர்மையாக ஒவ்வொரு கணத்தையும் வரிகளாக வடித்து, நம் உணர்வுகளையும் அவற்றில் உயிர்த்தெழச் செய்கிற கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு இந்த வருடம் வெளியாக இருக்கிறது. வாழ்த்துவோம் கவிஞரை.
***

புன்னகை இதழின் ஆண்டுச் சந்தா: ரூ.60
அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை
68, பொள்ளாச்சி சாலை,
ஆனைமலை - 642 104
படைப்புகள் அனுப்ப:
punnagaikavi@gmail.com

வியாழன், 7 ஜூன், 2012

அகஸ்டஸின் ‘டீக்கடைச்சூரியன்': மானுட வாழ்வின் மறுபக்கங்கள் - வடக்கு வாசலில்..

ப்படிதான் இருக்க வேண்டும் கவிதை என யாரும் அதை ஒரு வரையறைக்குள் கொண்டு வர இயலாது. கவிதைக்கொரு விதிசெய்வது காற்றைக் கையில் பிடிக்க முயலுவது போல என்பார்கள். பிடிக்க முடிந்து விட்டால் அது காற்று அல்ல. கோட்பாட்டுக்கு உட்பட்டு எழுதினால் அது கவிதை அல்ல. கவிதை குறித்து பலருக்கும் பலவிதமான கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கூறிய கருத்து மனதுக்கு இசைவானதாக இருக்கிறது: “சக்திமிகு உணர்வுகளின் தங்குதடையற்ற வெளிப்பாடே கவிதை”. அப்படியான கவிதைகள் தாமே தமது வேகத்தை வடிவத்தை நீளத்தை நிர்மாணித்து நதியைப் போல் பாய்ந்து வாசகனின் மனமெனும் கடலோடு சங்கமித்து வெற்றி கண்டு விடுகின்றன. அப்படிப் பல்வேறு இதழ்களின் மூலமாக வாசகர் மனங்களைத் தொட்ட, இருபத்தியெட்டு வருடங்களாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கும் கவிஞர் அகஸ்டஸின் இருபத்தைந்து கவிதைகள் அடங்கிய தொகுப்பே ‘டீக்கடைச் சூரியன்’.

முதல் ஆச்சரியமே பின் அட்டைதான். நூலுக்குள் வரவேற்கும் விதமாக, நூலாசிரியர் படத்துடன் அவர் பற்றிய குறிப்புகளோ, படைப்பைப் பற்றிய பாராட்டுகளோ இடம்பெறும் முற்றத்தில் ஒரு கவிதை.., கவனமாக இழைக்கப்பட்ட கவிப்பேழையைத் திறக்க நம் கையில் கிடைத்தத் தங்கச்சாவியாக:
இடுப்புவரை அலையாடி
விளையாடிக் கிடப்பது
கடல்தானென்றால்
கைகளால் விலக்கிக்
கால்களால் முன்னேறி
வெளிவந்து விடலாம்தான்

கடலல்ல
கருங்கற்பாறை
இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க
யோசித்தபடியே டீ குடித்து
பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற
சிற்பியையே
வெறித்துக்கொண்டிருந்தது
தலையிலிருந்து
இடுப்புவரை
செதுக்கவிடப்பட்ட சிலை.


சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’ எனும் அதன் தலைப்பைப் பரபரப்பாகப் புத்தகத்தைப் புரட்டியே அறிய வருகிறோம். ஆதிகாலந்தொட்டு இன்று வரையிலும் தொடரும் அவலமாக அமைந்த ஒரு சூழலை இதை விடச் சிறப்பாக மனதில் உளி கொண்டுப் பதிக்க எவராலேனும் முடியுமா என்றே தோன்றியது.

மனித வாழ்வின் தீராக் காதலாய் அடங்கா வெறியாய் அணை போட இயலா உணர்வாய் இருப்பவற்றுள் முக்கியமானது புகழ் மீதான ஆசை. சிலைகள் புகழின் அடையாளங்கள். வாழ்ந்ததின் மிச்சமாக விட்டுச் செல்ல எண்ணுபவற்றின் உச்சக்கட்ட ஆசையாக இருக்கிறது பலபேருக்கு:
அயராத பேச்சொலியில்
அடங்காத கரவொலியில்
தூக்கம் கலைந்து
அனைத்தும் ஒரு சிலைக்கென்றறிந்து
அச்சிலையின் வாழ்வைக் கனவாக்கி
கட்டியணைத்துக் கிடந்த
கற்பிண்டங்களைத் தட்டிவிலக்கி
மலையிலிருந்து நழுவி
சிற்பியிடம் சென்று நின்றது ஒரு கல்”.

“முதல் சிலையை
தானேதான்
செதுக்கிக் கொள்ளவேண்டும்
சிற்பி செதுக்கி வருவதில்லை
சிலைகளுக்குப் பெயரும் புகழும்

எனத் தொடங்கி வளரும் ‘சிலைகள் வளரும் காலம்’ முச்சந்தியின் முழுச் சிலையொன்றில் முடிகிறது.

சிலைகளைப் படிமங்களாகக் கொண்டு வாழ்வைச் சித்தரிக்கும் இன்னுமொரு கவிதையாக ‘சிலைகள் நகரும் நேரம்’ பேசுகிறது பெருநகரம் ஒன்றின் பசியை:
கீழே
சிறு மணலைக்கூட
உருட்டிக் கல்லாக்கி
உளிகொண்டு செதுக்கி
ஒரு சிலையாக்கிவிடும் பசியுடன்
வாழ்ந்து கொண்டிருந்தது
ஒரு பெரும் நகரம்


யுத்தங்கள் நிறைந்த பூமி இது. வலியோனும் வலியோனும் மோதிக் கொள்ளும் யுத்தங்களை விடவும் எளியோனைத் தன் பலத்தினால் அடக்கியோ நசுக்கியோ வெற்றி பெற்றதாகக் கொக்கரிக்கும் மடையர்களும் கொடூரர்களுமே யுத்தக் குறிப்புகளை அதிகமாக ஆக்ரமித்துக் கிடக்கிறார்கள். கவிஞரின் ‘மகா யுத்தம்’ அதைக் கண் முன்னே கொண்டு வருகிறது. சிலைகளைப் போலவே இன்னொரு படிமமாகப் பலகவிதைகளில் தோன்றுகிற நத்தை இக்கவிதையில்:
சிற்றுடல் இழுத்து வாழ்வதன்றி
வேறேதும் புரியாதிருந்தும்
ஏதோவொன்று தன்மீது
பளிச்சென்று எச்சில் துப்பக்
காத்திருப்பதாய்ப் பயந்து
பயம் பயமென
உடலைக் குறுக்கியதில்
செயலற்றவனின் ஓட்டைச்சுற்றி
கேலியும் கிண்டலும்
முட்புதர்களும் கல்செடிகளும்


வெலவெலத்த நத்தை தன் மேல் படர்ந்த நிழலை யாதென்று அறியாது திகைத்திருந்த வேளையில்,
ஆடாது அசையாது
தூக்கி நிறுத்திய காலால்
பாத நிழலை
நிழற்சிலையென படர்த்திக்
காத்து நின்ற கோபம்
தலைக்குள்ளெரிய
சிறு நத்தையோட்டையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த யானை
சிறுநகர்வு கண்டதும்
வெறியும் வெற்றியுமாய்ப் பிளிறி
நிலத்தோடு அறைந்து மூடியது
அந்தச் சிறு உலகத்தை
”.

விதிக்கப்பட்ட நாள் வரையிலும் பிழைத்துக் கிடக்க வேண்டிய பூமியில் வலியோரைச் சமாளித்துத் தொடர வேண்டியிருக்கிற வாழ்க்கைப்பயணத்தையும் நத்தையின் மூலமாகவே உணர்ந்துகிறது ‘யுத்த முயற்சி’.

காலைத் தேநீரில் ஊதியூதி அந்தச் சூரியனையே குடிக்கிற கவிஞர் எப்படி மலை இறங்குகிறார் பாருங்கள் ‘டீக்கடைச் சூரியன்’ கவிதையில்,
அருவியில் நீர் அள்ளாமல்
காலியாய்த் திரும்பும்
குடத்துக்குள்
சிரிக்கும் காற்றின் சிரிப்பைக்
கேட்டபடியே
”.

றுக்கெனச் சுருக்கமாகச் சொல்லி நகரும் கவிதைகளுக்கு நடுவே சில நீளமான கவிதைகளும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் சொன்னது போலக் கவிதையின் நீளத்தைக் கவிஞனின் உணர்வுகளும் அதன் வேகமுமே தீர்மானித்திருக்கிறது. தனக்காகப் படைக்கிற கவிதைகளில் வாசகருக்கு அயர்வைத் தருமோ போன்ற எண்ணங்கள் கவிஞனுக்கு ஏற்படுவதில்லை.

ஆதியில் வார்த்தை
ஆண்டவனிடம் இருந்தது
அவன் அதை மனிதனில் விதைக்க
முளைத்தது நாக்கு

எனத் தொடங்குகிற முதல் கவிதை ‘வார்த்தைப்பாடு’ம், கடைசிக் கவிதை ‘அஞ்சலி’யும் அப்படியானவை. பல்வேறு பரிமாணங்களில் பாடுபொருளை அடர்த்தியாகக் காட்டியபடி கூட்டிச் செல்லுவதில் இரண்டு கவிதைகளுமே தனித்து நிற்கின்றன.

வார்த்தைப் பாட்டில்,
வாழ்வைச்
சட்டையைப் போல மடித்துக்
கரையில் வைத்துவிட்டு
ஆதிவார்த்தையின்
மாய மெளனம் கேட்கத்
தத்தம் கடவுள்களின் கடலில்
வார்த்தைப் பெருநீச்சலிடுகின்றனர்
சிலர்
”.

அஞ்சலியில்,
ஆயிரமாயிரமாய்
விளக்குகள் எரிந்து கொண்டிருக்க
உன்போன்று மெழுகுவர்த்திகளும்
தேவையற்று எரிந்துகொண்டிருக்க
நீஅணைந்தபோது
உன் குழந்தைகளைச்
சுற்றிமட்டும் இருள் சூழ்ந்தது.


ஆழமான உணர்வுகளை அழுத்தமாகப் பதித்துக் காலத்தால் பேசப்படும் நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர்.
***

விலை ரூ:50; பக்கங்கள்: 71; வெளியீடு: நிலாப் பதிப்பகம்;
விற்பனை உரிமை: வடக்கு வாசல் பதிப்பகம்
[5A/11032,Galli No.9, Sat Nagar, Karol Baug, New Delhi-110005.
vadakkuvaasal@gmail.com ; Ph: 011-25815476,65858656]
*****

ஜூன் 2012 வடக்குவாசலில்:

நன்றி வடக்குவாசல்!

வியாழன், 8 மார்ச், 2012

‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை - வல்லமையில்..


ன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்து கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. மருத்துவம், மதம், அரசியல், அறிவியல், விஞ்ஞானம், கலை என சத்தமில்லாமல் சாதித்து எந்தக் குறிப்புகளிலும் இடம்பெறாமல் மறைந்து போன பெண்கள் ஏராளமானவர்கள். ‘சரித்திரத்தின் அடிக்குறிப்புகளாகவே பெண்கள் இருந்தார்கள்’ என்பதை மறுதலித்துச் சொல்லுகிறார் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் சான்ட்ரா சிஸ்னெரோஸ் “அடிக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளாக இருந்தார்கள்” என்று. சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்துவதில் அக்கறையின்மையும் அலட்சியமும் தொடரவே செய்கிறது. அந்த வகையில் தன் சொந்த முயற்சியில் சரித்திரத்தில் பதினேழு சாதனை அரசிகளை இடம்பெறச் செய்திருக்கிறார் தேனம்மை.

சமகாலத்தில் நம்மிடையே வாழும் உதாரணப் பெண்மணிகளைத் தேடிச்சென்று அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையில் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வந்த தொடரின் தொகுப்பே ‘சாதனை அரசிகள்’. இந்த வாய்ப்பைத் தான் வழங்கிய போது “நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். அதற்கு மேல் முடியுமா தெரியவில்லை” என ஆரம்பத்தில் தயங்கியதாகவும் பின்னர் அடுத்தடுத்து பலரைக் கண்டு பிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டதாகவும் நூலின் முன்னுரையில் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் பத்திரிகையின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள். ஒவ்வொருவரையும் பேட்டி காணத் தேனம்மை எடுத்துக் கொண்ட சிரமங்களும், உழைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது எனில் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் நூலைத் தந்த வகையில் தானும் ஒரு சாதனை அரசியாக உயருகிறார் தேனம்மை.

களிர் தினத்தில் தேனம்மை கொண்டாடிய மகளிரில் சிலரைப் பற்றிய என் சுருக்கமான பகிர்வு உங்களுக்கு நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

  • பதிமூன்று வயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு நெருப்புக்காயத்தினால் சென்ற வருட டிசம்பர் வரையிலும் 42 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் சந்தித்தவர் ரம்யா தேவி. எம் சி ஏ படித்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் ப்ராஜெக்ட் மேனஜராகப் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கும் இவர் தன் தோழி காயத்ரியுடன் சேர்ந்து ஆற்றி வரும் சமூக சேவைகள் எண்ணிலடங்கா. “தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டு என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்” என்கிறார் நூல் ஆசிரியர்.

  • ‘சுயம்புவாக உருவான பெண்’ என ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனா சுந்தரம் அவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். வசதிகளற்ற ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பது உட்பட வீட்டுவேலைகளை செய்தவிட்டு பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்புப் படிக்க குடும்பத்தினருடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இதையொட்டி குடும்பமே இவருக்கு விஷம் வைத்துக் கொல்லவும் பார்த்திருக்கிறது. விலங்கியல் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, பொறுப்பு முதல்வராக ஓய்வு பெற்றவர். ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தன்னைத் தாக்கிய புற்று நோயிலிருந்தும் போராடி மீண்டு வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

  • சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார் தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை. நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரருடன் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கைச் சுற்றி அமர்ந்து படிப்பதாக இருந்திருக்கிறது பள்ளிப் பருவம். கல்லூரியில் சேரக் கட்டணம் செலுத்தும் வரிசையில் நின்றபோது ‘இவங்க எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறாங்க’ என ஒருவர் கேட்ட கேள்வியே தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாகக் கூறியிருக்கிறார். பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை உருவாக்கி பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு உதவுவதுடன் சங்கங்களின் மூலமாக இலவச மருத்துவ முகாம்களையும் நடத்துகிறார்.

  • சென்ற வருடம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஜனாதிபதியிடம் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர் லூர்து ராணி. 31 வருடங்களாக சிகப்பு அணுக்குறைவுக்காக ஸ்டிராய்ட் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனால் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகளை மனபலத்துடன் சமாளித்தபடி மற்ற பலரையும் விடத் தன் பணியைச் சிறப்புற ஆற்றியவர். படிக்க வசதியற்ற மாணவர் பலருக்கு உதவியும் வருகிறார்.

  • மலைகளில் தேன் எடுத்து வாழும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வசந்தி. ஆறாவது குழந்தையாகப் பிறந்து, சொந்தத்தில் தத்து கொடுக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு முடித்திருக்கையில் மணம் ஆக அதன் பிறகு எம் ஏ வரை படித்திருக்கிறார். தம் இன மக்களுக்கு மாலை நேர வகுப்பாசிரியராகவும், கிராம முன்னேற்ற அதிகாரியாகவும் பணியாற்றி இன்று ‘வானவில் பெண்கள் நலச் சங்கம்’ உட்பட பல கூட்டமைப்புகளை உருவாக்கிப் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அவற்றின் மூலமாக பயனடையக் காரணமாக இருந்து வருகிறார்.

சாலையோரங்களில் அநாதரவாக விடப்பட்டவர்களைக் காப்பாற்றி சரியான புகலிடங்களில் சேர்ப்பிக்கும் சாருமதி; மாங்குரோ காடுகளில் இறால் வளர்ப்புக் கேடுகளையும், அவற்றின் கழிவுகளினால் உண்டாகும் கேடுகளையும் கண்டுபிடித்த டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி; இந்திய தொழிற்சங்கத்தின் மாநில உறுப்பினராக செயலாற்றும் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி உட்பட மேலும் பல பெண்களின் சாதனைகளைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

நூலின் முக்கிய அம்சமே இப்பெண்கள் அனைவரையும் ஆசிரியர் நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழித்து, நட்புடன் அளவளாவி, மனம் திறந்து அவர்கள் சொன்ன கதைகளோடு ஒன்றி, வியந்து போற்றி எழுதியிருக்கிறார்.

தடைகளாகவும் எதிர்ப்புகளாகவும் சுற்றிச் சூழும் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டெழுந்து புடம் போட்டப் பொன்னாக மிளிரும் பெண்மையை உயிர்ப்புடன் சித்தரித்திருக்கும் ஜீவாநந்தனின் அட்டைப்பட ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களும், செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு அவர்களும் வாழ்த்துரையும் நட்புரையும் வழங்கியுள்ளார்கள்.

நூலில் இடம் பெற்ற பதினேழு பேரும் இலட்சக் கணக்கான பெண்களின் பிரதிநிதிகளாகவே எனக்குத் தோன்றுகிறார்கள். இன்னல்களையும், இடறுகளையும் கடந்து இவர்போலத் தன்னம்பிக்கையுடன் போராடி, தம்மோடு தம்மைச் சுற்றியிருப்பவரையும் உயர்த்திக் கொண்டே செல்லும் பெண்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்!

மகளிருக்கு மட்டுமின்றி எவருக்கும் தன்னம்பிக்கை தரும் ‘சாதனை அரசிகள்’ சரித்திரத்தின் ஒரு பக்கம். காலம் தேனம்மைக்கு நன்றி சொல்லும்.

**

சாதனை அரசிகள்
பக்கங்கள்:80; விலை:ரூ.50
பதிப்பகம்: முத்துசபா
கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
தொலைபேசி எண்கள் : 9940446650

*****


8 மார்ச் 2012 வல்லமை (மகளிர் வாரம்) இதழில்.., நன்றி வல்லமை!

18 மார்ச் 2012 திண்ணை இணைய இதழிலும்,நன்றி திண்ணை!

புதன், 11 ஜனவரி, 2012

‘அகநாழிகை’ பொன். வாசுதேவனின் "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை"-ஒரு பார்வை-உயிரோசையில்..



கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக ’ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளுடன் சில என்றால் அன்பைத் தேடுவனவாக பிரியங்களைப் போற்றுவனவாக இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத்
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது:
“உன்னுடன் சேர்ந்து வரும்
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம்
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம்
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’. உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27.
*** *** ***

11 ஜனவரி 2012 உயிரோசையில்.., நன்றி உயிரோசை!

திங்கள், 19 டிசம்பர், 2011

‘சதுரங்கம்’, ‘ஒருவேளை உணவு’ - 2010_ன் சிறந்த பனிரெண்டு சிறுகதைகளில்.. - ஒரு பகிர்வு (கீற்றினில்..)


சில கதைகளை எழுத்தாளருக்காகவே வாசிப்போம். சிலசமயம் எழுதியவர் யார் என்று கவனிக்காமலே வாசிக்கத் துவங்குவோம். பாதி வாசிக்கையிலேயே நடையாலோ கருத்தாலோ ஈர்க்கப்பட்டு அவசரமாய் பக்கத்தைத் திருப்பி யார் எழுதியது எனப் பார்ப்போம். அப்படியான அனுபவமே முதன்முறை ஆனந்த் ராகவ் அவர்களின் எழுத்தை வாசித்தபோது எனக்குக் கிட்டியது. கதையின் பெயர் நினைவில் இல்லை. பலமாதங்கள் முன்னர் வடக்குவாசலில் வெளியானது. புதியதாக வாங்கிய காரை ஓட்டிச் செல்லும் ஒருவனது மனநிலையைப் பற்றியதானது. பிறகு விகடனில் அவர் கதைகள் வெளியானபோது எழுதியவரின் பெயருக்காகவே முதலில் வாசித்தேன். வாசகர்களைக் கதைக்குள் இழுக்கும் நடைக்குச் சொந்தக்காரர். சென்ற வருட சிறந்த பனிரெண்டு கதைகளில் ஆகச்சிறந்ததாக இவரது கதை தேர்வாகியிருப்பதோடு இரண்டு கதைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சிறப்பையும் பெறுகிறார். அக்கதைகள் குறித்த பகிர்வுக்கு முன் இத்தொகுப்பைக் குறித்துச் சிலவரிகள்.

1970-லிருந்து கடந்த 41 வருடங்களாக இலக்கிய சிந்தனை வானதிபதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டு வருவதே இந்தப் பனிரெண்டு சிறந்த சிறுகதைகள் தொகுப்பு. பிரதி மாதம் கடைசி சனிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி மண்டபத்தில் இலக்கிய சிந்தனை அமைப்பின் கூட்டம் தவறாமல் நடைபெற்று வருகிறது. கூடுகிற வாசகர்களில் ஒருவர் கடந்த மாதத்தில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். ஆண்டு இறுதியில் புத்தகமாக 12 கதைகளையும் தொகுக்கும் முன், அதிலிருந்து ஒன்றைச் சிறந்ததாக தேர்ந்தெடுத்து அறிவிப்பதுடன், அனைத்துக் கதைகளுக்கும் மதிப்புரையும் வழங்கும் பணி ஒரு தேர்ந்த எழுத்தாளாருக்கோ அல்லது தீவிர இலக்கியத் திறானாய்வாளருக்கோ வழங்கப்படுகிறது. இந்த விவரங்களைத் தொகுப்பின் பதிப்புரை மற்றும் மதிப்புரையிலிருந்தே அறிய முடிந்தது. இம்மாதம் இப்பணியைச் சிறப்புற ஆற்றியிருப்பவர் மு. இராமநாதன் அவர்கள்.

சதுரங்கம் (ஆனந்த் ராகவ்), ‘அமுதசுரபி’ வெளியீடு: தாய்லாந்தின் எல்லையை எதிர்கொண்டபடி இருக்கும் மயாவடி எனும் பர்மிய நாட்டு எல்லையோர ராணுவ அவுட் போஸ்டில் முவங்தான், மின்டோன் ஆகிய இரண்டு முரட்டு அதிகாரிகளுக்கிடையேயான சதுரங்க ஆட்டம். எப்போதாவது அகப்படும் கேரன் படை கொரில்லாக்களுடன் சுபிட்சமில்லாத தம் நாட்டை விட்டுத் தாய்லாந்துக்குப் பிழைப்புத் தேடி தப்பியோடும் பர்மியரையும் சிறைப்படுத்துகிற இவர்கள், கைதிகளை எப்படி வெறித்தனமாகக் கொடுமை செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகச் சதுரங்க விளையாட்டைப் பயன்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சதுரங்கத்தை இதுகாலமும் புத்திசாலித்தனம், சாதுர்யம் நிறைந்த ஒரு விளையாட்டாகப் பார்த்தும் போற்றியும் வந்த நம்மில் பலரும் இக்கதையை வாசித்த பின்னர் நிச்சயமாய் அதைவேறு பரிமாணத்தில் பார்க்கத் தொடங்குவோம். உலகின் அத்தனை குற்றங்களுக்கும் பின்னான காய்நகர்த்தல்கள் எத்தனை கொடூரமானவை என்பது புரியவரும்.

முன்னே பின்னே பக்கவாட்டில் என்று குதித்து போர்களத்தின் வீச்சை நாலு எட்டில் எட்டி விடும் அந்தக் காயின் ஓட்டத்தைக் கண்டுபிடித்தவன் நிச்சயம் குதிரை சவாரியின் அற்புத அனுபவத்தை உணர்ந்த ஒரு புத்திஜீவி. குதிரை ஓட்டியபடியே ஓடும் மனிதர்களை துரத்திச் சுட்டுக்கொல்லும் முவங்தானுக்குப் பிடித்தமான வசீகரமான விளையாட்டைச் சதுரங்கக் குதிரையைக் கண்டுபிடித்தவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஆண்டாண்டு காலமாகத் தொடரும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தையும் போராட்டங்களைப் பற்றியதான அலட்சியம் மிகுந்த அவர்தம் எண்ணங்களையும் காட்டுகிறார்: “ராணுவத்திடம் பிடிபடும் சாத்தியக்கூறை மீறி எல்லை தாண்டுபவர்களின் எண்ணிக்கை குறையாமல் தொடர்வதும், உயிரைப் பயணம் வைத்து விடுதலை தேடும் வேட்கையும், முவங்தானால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. நாற்பத்தி எட்டு வருட ராணுவ ஆட்சியின் குரூரமான அடக்கு முறைக்கு அடிபணிந்த, நசுக்கப்பட்ட சமூகம் அவனை அவ்வளவாக எதிர்த்ததில்லை. எப்போதாவது எழும் போராட்டக் குரல்களும் ஊர்வலங்களும், ஆர்ப்பரிப்பும், வெடிக்கும் துப்பாக்கிகளில் சிதறிப்போய் தெருவெங்கும் ரத்தம் சிந்திவிட்டு சொற்ப நாட்களுக்குள் அடங்கிப் போய்விடும்.”

சதுரங்கப் பலகையை உற்று நோக்கியபடி மேலும் தொடர்கிறார்: “ ஒரு ராணுவ வீரனாய் அவன் அந்நிய நாட்டு எதிரிகளை விட சொந்த நாட்டின் ஜனங்களைக் கொன்றது அதிகம். அதுவேறு வகையான சதுரங்க ஆட்டம். ஆயுத பலம் பொருந்திய ராணுவத்தினருக்கும், நிராயுதமாணிகளான ஜனநாயகம் விரும்பும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் நிரந்தர சதுரங்க ஆட்டம். எதிரணியின் தலைமையைச் சிறையிலடைத்து அவர்கள் ஆதரவாளர்களை நகரக் கூட அனுமதிக்காத அடக்குமுறை ஆட்டம்.

ஆட்டத்தில் தோல்வியடையும் அதிகாரி ஆத்திரத்தில் சதுரங்கப் பலகையிருந்த மேஜையையே தூக்கியெறிகிறான். வென்றவனின் ஆர்ப்பரிப்பும் கொக்கரிப்பும் உச்சக்கட்டப் போர் கொடூரத்தை நோக்கி நகர்வதாகக் கதை முடிகிறது.

நம்பிக்கையூட்டும் படியாக இக்கதையின் முடிவு அமையாததற்கு பதில் சொல்லும் விதமாக மு. இராமநாதன் அவ்ர்கள் தன் மதிப்புரையில் எடுத்தாண்டிருக்கும் பி.ஏ. கிருஷ்ணனின் வரிகள் மறுக்க முடியாத உண்மையாக, “தருமம் வெல்வதும், சூது தோற்பதும் மனிதனின் நிறைவேறாத ஆசைகளில் முக்கியமானது... ஆனால் வெட்ட வெட்ட வளரும் தலைகள் சூதினுடையது.. தருமம் வெல்ல இன்னும் பலநாட்கள் ஆகும் என்பது பற்றி ஒரு நல்ல சிறுகதை கோடி காட்டிவிடும்”!

ஒருவேளை உணவு (பாவண்ணன்), ‘வடக்குவாசல்’ வெளியீடு: பெருநகரங்களில் ‘ஹெளஸ் கீப்பிங்’ எனும் சொல்லோடு வேலைக்கு எடுக்கப்படும் அடித்தட்டு பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்: “ஒப்பந்தக் காரர்களிடம் எப்போதும் இரண்டு தூண்டில்கள் உண்டு. கிராமத்தில் வாழ வழியில்லாமல் நகரை நோக்கி வருகிற, உடலுழைப்பாளர்களை நோக்கி ஒரு தூண்டில் எப்போதும் நீண்டிருக்கும். வசதியில்லாத காரணத்தால் நகரத்திலேயே பள்ளியிறுதிப் படிப்போடு கல்வியை முடித்துவிட்டு எதிர்காலம் குறித்த அச்சத்தோடு உலவிக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஈர்க்கும் வகையில் மற்றொரு தூண்டில் நீண்டிருக்கும்.

கதைசொல்லி பேருந்து நிறுத்தத்தில் தான் சந்திக்க நேரும் சாவித்திரி எனும் பெண்மணி, ஜி எம் குவார்டர்ஸில் வேலை செய்வதை அறிய வருகிறார். நாளடைவில் அவள் நட்புடன் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளின் மூலமாக ஒருவேளை உணவுக்காக இவர்கள் எப்படி சுயமரியாதை மறந்து வாழ வேண்டிய சூழலில் என்பதையும் பணம் என்கிற ஒரேயொரு விஷயத்தில் மேம்பட்டு விட்டதால் மனிதர் மனிதரை எப்படியெல்லாம் கீழ்தரமாக நடத்தவும் பேசவும் துணிகிறார்கள் என்பதையும் சொல்வதாகக் கதை அமைந்துள்ளது. சாவித்திரி சொல்லுகிறாள்: “ஒருவேளை சோத்துக்கூட வழியில்லன்னுதான இந்த வேலைக்கு வந்தம். மானம் ரோசம்லாம் பாத்தா எங்க போயி நிக்கறதுன்னு பல்ல கடிச்சினு போயிடுவேன்.

சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தாண்டி, இன்னும் பல தேவைகளையும் தீர்த்து வைக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உரையாடலில் உணவைப் பற்றிய பேச்சே இடம் பெறுவதில்லை. வீடு, வாசல், வாகனம், சொத்து எனப் பல திசைகளில் உணவைத் தாண்டிய தேவைகளை நோக்கி விரிந்து போகிறது. சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளவே முடியாதபடி பற்றாக்குறையாக இருக்கிறது. அவர்கள் மன ஆழத்தில் உள்ளூர உணவைப் பற்றிய அச்சம் எப்போதும் நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தபடியே இருக்கிறது.” விவரிக்கும் கதை சொல்லிக்கு மேல்வர்க்கம் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பார்த்து ஏற்படுகிற நடுக்கம் நமக்கும் பரவுகிறது.

வூடு (பாரதி தம்பி) ‘ஆனந்த விகடன்’ வெளியீடு: மனிதனுக்குப் பிறப்பு என்பது ஒரே விதமாகதான் நடக்கிறது. வறுமை என்பது தொப்புள் கொடியோடு சேர்ந்தா வருகிறது? அப்படித்தான் என்றால் எங்கோ பிழை இருக்கிறது.

பரந்த இவ்வானின் கீழ் தம் வீடென சொல்லிக்கொள்ள ஓரங்குல இடமும் அற்று வீதியோரத்தில் வாழ்க்கை நடத்தும் குடும்பம் ஒன்று. அதன் தலைவன் திறக்கப்படாத கட்டணக் கழிப்பறையில் தன் குடும்பத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு குடியேற்றுகிறான். அங்கேயே பால் காய்ச்சுகிறார்கள். வீட்டின் தனிமையை, தமது என்பதன் உரிமையை ரசித்து ருசிக்கிற குடும்பம் மீண்டும் வீதிக்கே வருவதே கதை. சிறுவன் ஜஸ்டிஸை முன் வைத்துக் கதை நகர்கிறது.

குறையொன்றுமில்லை (ஜோதிநகர் சிவாஜி கிருஷ்ணா) , கல்கி வெளியீடு: எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாது அரசு புறக்கணிக்கும் கிராமங்களில் நூறுசதவிகிதம் வாக்குப் பதிவாவதும் அவர்களை மதிக்க அரசு தவறுவதும் இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. அப்படியான ஒரு மலைக் கிராமத்துக்கு தேர்தல் சமயத்தில் வந்து சேரும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு எந்த வசதிக் குறைவும் வராது பார்த்துக் கொள்கின்றனர் அப்பாவி மக்கள். அந்தத் தேர்தலில் ஒரேயொரு வாக்கு மட்டும் குறைந்து போனதின் காரணம் கலங்க வைப்பதாக.

நான்கு கதைகளைப் பற்றி மட்டும் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். இவற்றுடன் ஆனந்த் ராகவ் எழுதிய ‘தரை தொடும் விமானங்கள்’ உட்பட செ. செண்பக கண்ணு, மாதங்கி, ஜெய் விஜய், சீதா ரவி, பாமதி மைந்தன், இராம. முத்து கணேசன், மலர் மன்னன் ஆகியோர் எழுதியதுமாக, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒன்றெனும் கணக்கில் பனிரெண்டு கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. பனிரெண்டு எழுத்தாளர்களுக்கும், கதைகளை வெளியிட்டப் பத்திரிகைகளுக்கும் வாழ்த்துகள். இலக்கிய சிந்தனை அமைப்பின் சேவைக்கும் வானதிப் பதிப்பகத்துக்கும் பாராட்டுக்கள். இந்த வருடம், 2011-ன் சிறந்த கதைகளின் தொகுப்புக்காகக் காத்திருப்போம்.
***

சதுரங்கம் - இலக்கியச் சிந்தனை 2010ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்


விலை ரூ:60. பக்கங்கள்: 154.

வெளியீடு: வானதி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடம்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006].
***

17 டிசம்பர் 2011, கீற்று இணைய இதழில், நன்றி கீற்று!

திங்கள், 7 நவம்பர், 2011

‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை (திண்ணையில்..)


எழுத்து என்பது ஒரு சிற்பத்தைப் போல ஒரு கல்வெட்டைப் போல தான் வாழ்ந்த காலத்தை வருங்காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாக அமைந்து போகையில் எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்பட்டு மக்கள் மனதில் இடம் பெறுவதையெல்லாமும் தாண்டி வருங்காலம் வியந்து போற்றுவதாக உயர்ந்து நின்று விடும். கவனிப்பற்று போகும் அத்தகு எழுத்துக்கள் கூட பின்னாளில் எவராலேனும் புதையல் எனக் கண்டெடுக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. ஆனால் ஆசிரியர் சுகாவுக்கு சக காலத்திலேயே அந்த அங்கீகாரத்தை ஆனந்த விகடன் தந்திருந்தது ‘மூங்கில் மூச்சு’ தொடர் மூலமாக. அதன் பனிரெண்டாவது அத்தியாயத்தின் போது ‘யார் இந்த சுகா’ என வியப்புடன் நான் பகிர்ந்து கொண்ட குறிப்பைத் தொடர்ந்து நண்பர்கள் எனக்குப் பரிந்துரைத்ததே சொல்வனம் இணைய இதழில் அவர் தொடராக எழுதிப் பிறகு தொகுப்பாக வெளியான “தாயார் சன்னதி”. தபால் மூலமாக தருவித்துக் கொண்டாலும் ஏனோ ‘மூங்கில் மூச்சு’ முடிந்த பின்னரே வாசிக்க வேண்டுமெனத் தோன்றக் காத்திருந்து வாசித்தேன். பகிர்ந்திடும் நேரம் இப்போதுதான் வாய்த்தது.

மூங்கில் மூச்சின் முந்தைய பாகம் என்று சொல்ல முடியாமல் இரண்டும் சம காலத்தின் வெவ்வேறு நிகழ்வுகளின் பதிவுகளாக. இதிலிருக்கும் எந்த அத்தியாயங்களையுமே அவர் மூங்கில் மூச்சில் பகிர்ந்ததாகத் தெரியவில்லை, விஞ்சை விலாஸ் தவிர்த்து. அதுவும் உணவகங்களைப் பற்றி எழுதுகையில் தவிர்க்க முடியாமல் சேர்த்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.

மூங்கில் மூச்சில் பல கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டிருந்ததால் எளிதாக ஒன்றி சிநேகத்துடன் பயணிக்க முடிந்தது. என் பிறந்த மண்ணைப் பற்றிய பகிர்வு என்பது கூடுதல் ஈர்ப்பு என்பதையும் மறுப்பதற்கில்லை. அதே நேரம் இத்தொடரை நேசிக்கவும் ரசிக்கவும் நெல்லை மண்ணில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது கிஞ்சித்தும் அவசியமில்லை. நெல்லையப்பரும் காந்திமதியும் எம் மண்ணுக்கு அப்பனும் அம்மையும் என்றால் அவரவர் ஊருக்கு அருள் பாலித்திருக்கும் அம்மை அப்பனை இவரது வரிகளில் தரிசிப்பீர்கள். நெல்லை வீதிகளில் ஆசிரியர் நடக்கும் போது, தியேட்டர்களில் படம் பார்க்கும் போது, தன் சமூகத்தின் வழக்கங்களைப் பகிரும் போது, சந்தித்த மக்களைக் கொண்டாடும் போது தன்னிச்சையாக உங்கள் நினைவுகளும் உங்கள் ஊரைச் சுற்றிவரும் என்பதற்கு நூறு சதவிகிதம் உத்திரவாதம் தர முடிகிறது.

குஞ்சு போன்றதொரு தோழன் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருப்பார். ஜெயண்ட் வீலில் சின்னப்பையனோடு தெம்பாக ஏறி அமர்ந்து, சுற்ற ஆரம்பித்ததும் வெலவெலத்துப் போன சுந்தரம்பிள்ளை பெரியப்பா; பாம்புக்கு பயந்து உத்திரத்தில் தொங்கி, யாரோ அடித்துப் போட்ட பிறகு அதைத் தெருவழியே தூக்கி நடந்த அம்பி மாமா, எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான அன்னண்ணன், ‘வான் நிலா’ பாடலை ரசிக்கும் அம்போத்தி இவர்கள் வேறு பெயர்களில், வேறு உருவங்களில் ஒவ்வொருவர் ஊரிலும் உலவியிருப்பார்கள்.

தாயார் சன்னதி’ என்றதும் காந்திமதி அம்மனைப் பற்றியதாகவே இருக்குமென நான் எண்ணியிருக்க அது ஆசிரியரது தாயாரின் கடைசி தினங்களைப் பற்றியதாக, மருத்துவமனையில் அவர் போலவே பாதிக்கப்பட்டிருந்த சில தாயார்களைப் பற்றியதாக அமைந்திருப்பது நெகிழ்வு. “முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்துவிட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.

பாம்பு என்ற பூச்சி’, விளக்கு வைத்த பின் பாம்பைப் பாம்பு என சொல்லக் கூடாதென்பதை நாங்களும் சிறுவயதில் கடைப்பிடித்திருக்கிறோம்.

ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்.’ உண்மைதான். அத்தனை பல்லும் போனாலும் நெஞ்சு முழுக்க அன்பைச் சுமந்து கொண்டு ஆழ்வாற்குறிச்சியிலிருந்து எங்களைப் பார்க்க வரும் அம்மாவின் பெரியம்மா பெயர் கோமதி என்பதைச் சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தேன் இதை எழுதும்போது. எல்லோருக்கும் அவர் ‘பொக் பொக்’ ஆச்சி. தொட்டிலில் கிடந்த கொள்ளுப் பேரனாகிய என் அண்ணனின் அழுகையை நிறுத்த ‘கொக்கரக்கோ’ எனக் கூவிக் காட்டிய அம்மாவின் ஆச்சியை ‘கொக்கரக்கோ’ ஆச்சி என்றே இன்றளவும் விளிக்கிறோம். ஆசிரியர் காட்டும் பசு ஆச்சி, குட்டை ஆச்சி, மாம்பழத்தாச்சி போன்றோரின் பிரதிபலன் பாரா பாசம், அன்பு இன்றைய உலகில் காணக் கிடைப்பதே அரிது.

இலங்கை வானொலி கேட்ட இனிய நாட்களை மீட்டெடுக்கிறது ‘சில மனிதர்கள், சில பாடல்கள்’. ‘ஆய்புவன்’ இலங்கை ரூபவாஹினி திருநெல்வேலியில் தெரிய ஆரம்பித்த போது அதை மட்டும் நம்பியே வாங்கப்பட்ட டைனோரா, சாலிடேர் டிவி காலங்களுக்கு அழைத்துச் செல்கிறது. தொடர்ந்து தூர்தர்ஷன் தெரிய ஆரம்பிக்க மொழியே தெரியவில்லையென்றாலும் ஊரே விடாது பார்த்த ‘புனியாத்’ ஹிந்தி சீரியலை நினைவு கூர்கின்றது. நமசிவாயம் பிள்ளை கேட்கிறார் “மருமகனே, வடநாட்டு பொம்பளேளெல்லாம் எந்த நேரமும் சப்பாத்தி போட்டுட்டெ இருக்காளுவளே என்னடே? அவ்வொ புருசமாருல்லாம் அவ்வளவு கானம் திம்பானுவொ, என்னா?

இவர் பரிமாறி இருக்கும் ‘பந்தி’ யைப் பற்றிச் சொன்னால் சுவைக்காது. வாசித்தாலே ருசிக்கும். பரிமாறும் முறை, உணவுகளின் வகை, எந்தெந்த நிகழ்வுகளுக்கு எப்படியாக இருக்க வேண்டும் பந்தி என்பதைப் பற்றிய நுணுக்கமான விவரிப்புக்கள் அற்புதம். மண்ணின் பழக்க வழக்கங்களைச் சிறப்பாகத் தொடரெங்கும் பதிந்திருக்கிறார் தனிப்பட்ட சமூக நெடி படிந்திடாத படியும்.

கட்டுரையில் நடமாடும் மாந்தரை நாம் நேரில் பார்க்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது எழுத்து. சின்னச் சின்ன விஷயங்களையும் நினைவிடுக்கிலிருந்து மீட்டெடுத்துத் தந்த விதமும் ரசிப்புக்குரியது, நெற்றியெல்லாம் நீறுமணக்க கழுத்தி ஸ்படிக, ருத்திராட்ச மாலைகளுடன் விஞ்சை விலாஸ் கைலாசம் பிள்ளை தாத்தா எப்படி பத்மினி ஊதுபத்தியை அதன் பாக்கெட்டின் துளையில் செருகி வைத்திருப்பார் என்பது வரை கூர்மையான அவதானிப்பு.

தொடரைத் தாங்கி நிற்கும் தூணாக வட்டார வழக்கு. தெப்பக்குளத்தெரு ரங்கநாதனின் “நேர்ல பாக்க வருதேன்” எனும் மூன்று வார்த்தைகள் எப்படி ஆசிரியரை சந்தோஷப்படுத்தியதோ அதே சந்தோஷம் கிட்டுகிறது ஊர் மக்களுக்கு, முதல் அத்தியாயத்தின் பெயரைப் பார்த்ததுமே. ‘திருநவேலி’! “ஒன் வயசென்ன என் வயசென்னலே” சண்முக அண்ணன் தன்னிலை மறந்து கோபப்பட்டது என்னவோ நாய் ஜாக்கனிடம் என்றாலும் இந்த வார்த்தைகளை உபயோகிக்காத ‘திருநவேலி’ ஆட்கள் மிகக் குறைவு.

இன்று திருமணத் தகவல் மையங்களில் அல்லாடும், இணையத்தில் மேட்ரிமோனியல் சர்வீஸ்களை உள்ளூற அச்சத்துடன் மேய்ந்து கொண்டிருக்கும் பெற்றோரை ஏங்க வைப்பவராக ‘துப்பு’ சொல்லும் வீரையன் தாத்தா.

கணவன் பேரைச் சொல்லக் கூடாதெனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஆச்சிகள், அக்காக்கள், அத்தைகள், சித்திகள், மதினிகள் வலம் வருகிறார்கள் விதம் விதமாய் ‘முருகன் சாமி பேரு’ சொல்லி.

”நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது” முன்னுரையில் வண்ணதாசன் அவர்கள் சிலாகித்திருப்பது பற்றி மேலும் நான் சொல்ல என்ன இருக்கிறது? உயரத்துக்குக் கொண்டு போகும் அந்த சிலவற்றுள் உரக்கச் சிரிக்க வைப்பவையாக சொக்கப்பனை, ஜெயண்ட் வீல், கரையும் உள்ளம், நட்சத்திரம் பார்த்தல்..

ஹாஸ்யம் என்பது வெகு இயல்பாக எழுத்தோடு ஒன்றி தொகுப்பு நெடுக ஆங்காங்கே புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள். எப்போது நாம் அதில் காலை வைப்போமென்றே தெரியாது.

குஞ்சுவே தொடரில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட பாத்திரம். சிறுவனாக இருந்தபோது ஒருநாள் காணாமல் போன குஞ்சு, போலிஸ் படையுடன் ஊரெங்கும் தேடப்படஷாஃப்டர் பள்ளி மைதானத்தில் எம்.ஜி. ஆரைப் பார்க்கப் போய் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் போது பிடிபடுகிறார். பின்னாளில் நண்பர்கள் இதைச் சொல்லி நகைக்கையில் “எல, அது வெவரம் தெரியாத வயசுல நடந்த விஷயம். சின்னப் பிள்ளைல இத விட என்னென்ன கிறுக்குத்தனம்லாம் பண்ணிருக்கோம். அதுக்காக இப்பவும் அப்படியேவா இருக்கோம்?” சொல்லி வாய்மூடியவரின் அடுத்த செய்கையும், அவரே சொன்ன அத்தனை கிறுக்குத்தனங்களும் பிட்டுப் பிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன தொகுப்பில். குஞ்சு ’ஒருவேளை கற்பனை பாத்திரமாக இருக்குமோ’ என வண்ணதாசன் அவர்களுக்கு எழுந்த சந்தேகம், ஆரம்ப அத்தியாயங்களில் ஏற்பட்டாலும் போகப்போக அந்தப் பாத்திரப் படைப்பின் இயல்பு கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நம்ப வைக்கிறது. கிண்டலானது நட்பின் நெருக்கத்திலும் உரிமையிலும் செய்யப்பட்டிருக்கும் என்றொரு புரிதல் வருகிறது.

இளம் பிரயாத்து வாழ்வின் முழுமையான நேர்மையான பதிவாக அமைந்திருக்கும் ’தாயார் சன்னதி’ மண் மணத்தோடு தாமிரபரணி பிரவாகமாக எங்கும் தொய்வின்றி சுவாரஸ்யத்துடன் அமைந்து நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

தொகுப்பில் இடம் பெற்ற படங்களை வரைந்த வள்ளி அவர்களும் பாராட்டுக்குரியவர். அட்டைப்படங்களுடன், நெல்லை மாநகராட்சி ஆர்ச், தேரும் ஜனத்திரளும், காந்திமதி அம்மன் கோபுரத்துடன் கோவில் தெப்பக்குள மண்டபம் போன்றவை தத்ரூபம்.

மூங்கில் மூச்சை வாசித்தவர்கள் தவறவிடக் கூடாததாக இத்தொகுப்பு. இதை வாசித்து ‘மூங்கில் மூச்சை’த் தவறவிட்டவர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் அத்தொகுப்பை விகடன் வெளியீடாக.
***

தாயார் சன்னதி

விலை ரூ:150. அத்தியாயங்கள்: 45. பக்கங்கள்: 256.

வெளியீடு: சொல்வனம் பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.

இணையத்தில் வாங்கிட: உடுமலை.காம்
*** *** ***

6 நவம்பர் 2011 திண்ணை
இதழில்., நன்றி திண்ணை!

***

டிசம்பர் 2012 குங்குமம் தோழி என் ஜன்னலிலும்.., நன்றி குங்குமம் தோழி!

***

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

361 டிகிரி - காலாண்டு சிற்றிதழ் - ஒரு அறிமுகம்


361 டிகிரி. வித்தியாசம் பெயரில் மட்டுமின்றி இதழின் அளவு கூட இதுவரை கண்டிராத வகையில் சற்றே பெரிய நோட்டு ஒன்றினைப் போல. ஒவ்வொரு படைப்புக்கும் சிரத்தை எடுத்து பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்பட்ட ஓவியங்கள், கனமான அட்டை ரோஹிணி மணியின் சித்திரங்களுடன், ஸ்பரிசிக்க முடிகிற தலைப்பு, தரமான தாள்களில் நேர்த்தியான வடிவமைப்பு எனக் கையில் எடுத்த உடன் ஈர்க்கும் விடயங்கள் பல.

அந்த ஈர்ப்பு வற்றிவிடாத வண்ணம் தொகுப்பட்டுள்ளது பொருளடக்கம். சொல்லப் போனால் நவீனத்துவம் நோக்கி நகரும் இலக்கியம் பயணப்பட வசதியாக விரிவாக்கப்பட்டதொரு நெடுஞ்சாலையாகத் தோற்றமளிக்கிறது இச்சிற்றிதழ்.

மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான ஒதுக்கீடு வரவேற்புக்குரியதாக. இன்று பேசப்பட்டு வரும் கவிஞர்கள், படைப்பாளிகள் பலரும் முதல் இதழில் இடம் பெற்றுள்ளார்கள். சிறப்பு சேர்க்கின்றன தேவதச்சனின் கவிதைகள்:

மலை
மரணச் சடங்கில் அமர்ந்திருக்கும்
என்னைப் போல்
மெளனமாக இருக்கிறது சரி.
உள்ளே
அவ்வளவு கனமாக இருக்கிறது.
மலர்
ஏன் மெளனமாக
இருக்கிறது. உள்ளே
அவ்வளவு
கனமாக இருக்கிறது போலும்.


மேலும் என்னைக் கவர்ந்த கவிதைகளிலிருந்து சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாகிப்கிரானின் நான்கு கவிதைகளில் ஒன்றான ‘ஒரு பூட்டும் பல்வேறு திறவுச் சொற்களும்’தனில்..

..எழுதிக்கொண்டிருக்கும் எனது
வரிகளுக்கிடையே
மாண்டுபோன அத்தனை எழுத்துக்களும்
தனக்கான இடங்களில் தோன்றிக்கொள்ள

நான் இப்போது
வெற்றுக் கட்டங்களை நிரப்புபவனாகிறேன்.
....
....

எனது தாளில் இப்போது
இங்கொன்றும் அங்கொன்றுமாகச்
சில
எழுத்துக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

அவற்றைக் கூட்டி
ஒரு சில வாக்கியங்களை அமைக்கும்
சாத்தியம் மட்டுமே
கைக்கொண்டவன்
என்னத்தைக் கூறிவிட முடியும்
உங்களிடம்?


ன்று ஆனந்தவிகடன், கல்கி போன்ற பல பத்திரிகைகளில் சிறப்பாக எழுதி வரும் வேல்கண்ணனின் ‘வேள்வி’யில்:

..நீளும் மெளன மலையின் தவம்
அடைக்காப்பது நிலையாமையின்
நிர்மூலங்கள்
தன் எதிரில் நிற்கும் கிளி வழித்துணைக்கு அல்ல
தன்னில் பசியாறுவதற்கு மட்டுமேயென அறிந்திருக்கும்
இலவ மனம்.
சுற்றத்தாரைப் பொழியும் அமிலத்திலிருந்து
காப்பதற்கு கோபாலன் நம்பியிருப்பது
ஒற்றைப் பனை..


காலத்தை அறுத்துக் கொண்டு நுரைக்கின்ற ‘ஆலகாலம்’தனை அருமையாகச் சித்திரிக்கிறார் கதிர்பாரதி. ‘யவ்வனம்’ எனும் தன் வலைப்பூவின் பெயரிலேயே படைத்திருக்கும் கவிதையில் விரிந்திருக்கும் கற்பனை அழகு.

எதை நாம் ‘ஒட்டகம்’ என்கிறோம் எனக் கண்முன் காட்டுகிறார் மணிவண்ணன். பாலைவனத்திலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டுப் பூங்காவிற்குக் கொண்டுவரப் படும் அவ்விலங்கைப் பற்றியதானதாக மட்டுமின்றி வலுவில் புலம் பெயர்க்கப்பட்டுத் தம் இயல்பை இழக்க நேரிடும் எதையும் எவரையும் குறிப்பிடுவதாக நடை போடுகிறது கவிதை.

சிவனின் ‘கடந்து செல்லும் நிழல்’:

...ஒரு வாழ்வைப்போலவே
ஒரு பறவையையும்
எதிர்கொள்ளவோ
வரவேற்கவோ
விசாரித்து விருந்தோம்பிக் கொண்டாடவோ
நமக்குத் தெரிவதேயில்லை...

வெறும் நிழலாய்க்
கடந்து சென்றுவிடுகிறது அது

பெயரில்லை
ஊரில்லை
அதற்கோர் கூடுமில்லை.


நேசமித்திரனின் ‘மற்றும்-ஃ’ :

சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்...

பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள்
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்...


ம் இதயத்தைத் துளைக்கப்போகும் அந்த ஒரு வார்த்தையை கூர் தீட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் மண்குதிரையின் ‘என் பழைய கவிதைப் புத்தகம்’ மற்றும் ‘கண்ணாடி பிம்பங்களின் இசை’ இரண்டுமே வெகு நன்று. இசையினின்று..

.. ஆரத் தழுவமுடியாத
பெரும் மழையை
அள்ளிக் கொண்டோடுவது எப்படி
என் சிற்றோடையே

அண்ணாந்து வியக்கும்
பெரிய வெளியைப்
பறந்து தீர்ப்பது எப்படி
என் சிறிய பறவையே..


பட்டியல் பற்றி சுவாரஸ்யமான கட்டுரையொன்றை வழங்கியுள்ளார் அ. முத்துலிங்கம் ‘தவறிவிட்டது’ கட்டுரையில். சிறுகதைகள் மூன்று இடம் பெற்றுள்ளன.

ரு இலை அசைவதை
மரத்தைக் கடப்பவர்கள் யாரும்
தலை உயர்த்திப் பார்ப்பது இல்லை.


அற்புதமான இவ்வரிகளுக்குச் சொந்தக்காரரான எஸ். செந்தில் குமாரின் “முன் சென்ற காலத்தின் சுவை” கவிதைத் தொகுப்பை முன் வைத்து இசை எழுதியிருக்கும் விரிவான விமர்சனம் ‘யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு!...’ ஆகச் சிறப்பான ஒன்றாக. குறிப்பாகக் கவிதையைக் குறித்த தன் பார்வையாக அவர் முன் வைத்த முன்னுரையும், சிந்தனையில் கனிந்த முடிவுரையும் என்னைக் கவர்ந்தன.

...அறிவியலைப் போலின்றி கலைக்குத் திட்டமிட்ட சூத்திரம் ஏதுமில்லை. H2o=water என்பதைப் போல ஒரு கவிதையைச் சொல்லிவிட முடிவதில்லை. அதனாலேயே ஒரு கவிதை மர்மமும் வசீகரமும் மிக்கதாய் இருக்கிறது. அதனாலேயே நாம் தொடர்ந்து ஈர்க்கப்படுகிறோம். நாமும் பேசிப்பேசி அது H2o ஆகிவிடுமோ என்று பார்க்கிறோம். அல்லது ஒருக்காலும் அப்படி ஆகிவிடாது என்கிற தைரியத்தில் பேசுகிறோம்.

ஒரு கவிதைக்குள் உருக்கொள்ளும் குழப்ப நிலை வாசகனை வசீகரிப்பதாகவே இருக்க வேண்டும். “அந்தக் கவிதை எனக்குப் புரியலை... ஆனா பிடிச்சிருக்கு” என்று பலர் கூற நான் கேட்டிருக்கிறேன். நானும் கூறியிருக்கிறேன். அந்த பரவசத்தின் துணையுடனேயே ஒரு வாசகன் அந்தக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப பிரவேசித்து புதிய வெளிச்சங்களைக் கண்டடைகிறான்”

உண்மைதான், இல்லையா? ஆனால் அதற்கும் அடுத்த கட்டத்துக்கு நகரும் கவிதைகள் குறித்து...

...அப்படியல்லாது, கவியாக்கத்தின் குளறுபடிகளால் உருவாகும் சிக்கலும் குழப்பமும் வாசகனை விரட்டியடிக்கவே செய்கின்றன. அவன் ஓரிரு முறை முயன்று பார்த்துவிட்டு ஒரு சடை முனியைக் கண்டதைப் போல கவியைத் தொழுதுவிட்டு வெளியேறிவிடுகிறான். எவ்வளவு நுட்பமானதைச் சொல்ல வருகிறோம் என்பதைப் போலவே எத்தனை துல்லியமாகச் சொல்ல முனைகிறோம் என்பதும் முக்கியமானதே.”

அருமை!

மிகுந்த சிரமங்களுக்கிடையில் விளம்பரங்கள் ஏதுமின்றி தரமான தாளில் 52 பக்கங்களுடன், இலக்கிய ஆர்வலர்களின் புத்தக அலமாரியில் நிரந்தர இடம்பெறும் ‘நூல்’ ஆக அமைத்திட ஆசிரியர்கள் ஆர்வம் காட்டியிருப்பதும் உழைத்திருப்பதும் புரிகிறது. இதழின் குறை என்று பார்த்தால் பல பக்கங்களில் பரவலாகக் காணப்பட்ட எழுத்துப் பிழைகள். முதல் இதழ் என்பதால் மற்ற நல்ல விடயங்களை மனதில் நிறுத்தி மன்னிக்கலாம். இனிவரும் இதழ்களில் இத்தவறு நேராது என நம்பலாம். ஆகஸ்ட் இறுதியில் வெளியாக இருக்கும் அடுத்த இதழ் அதிக பக்கங்களுடன் மலர இருப்பது ஆரோக்கியமான செய்தி. படைப்பாளிகளுக்குச் சிறப்பான தளம் அமைத்துக் காத்திருக்கிறது 361*. உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:361degreelittlemagazine@gmail.com

ஆசிரியர்கள் நிலா ரசிகன், நரன் ஆகியோரின் நல்முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
***

முதல் இதழ் கிடைக்குமிடங்கள்:
New BookLands, T.nagar,chennai 17 (தொலைபேசி எண்கள்: 28158171,28156006)
Discovery book palace,K.K.Nagar,Chennai. (Contact Vediappan- 9940446650)

விலை: ரூ.20

31 ஜூலை 2011 திண்ணை இணைய இதழில், நன்றி திண்ணை!

புதன், 27 ஜூலை, 2011

செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’ - ஒரு பார்வை - திண்ணையில்..


ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்”. தலைப்பே சற்று அதிர்வைத் தருகிறது இல்லையா? ஞாபகம் அற்றுப் போவது எவருக்கும் நிகழும் வாய்ப்பு உள்ளது. மூப்பினால் ஆகலாம். ஏதேனும் அழுத்தத்தால் ஆகலாம். பிணியினால் நேரலாம். எப்படியேனும் நாம் வாழ்ந்த வாழ்வு, சந்தித்த மனிதர்கள், நித்தம் கடந்த நிமிடங்கள் என எல்லாமே முற்றிலுமாய் அற்றுப் போகும் ஒரு நாள் வந்தே தீரும். அது எப்படி அமையும்? சர்வ சாதாரணமாகச் சொல்லியதாலேயே தலைப்புக் கவிதை கனம் கூடிப் போய். வாழ்வோடு, சமகால நிகழ்வுகளையும் பதிய வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாக அமைந்த அற்புதமான இத்தலைப்பை, நியாயப் படுத்தியிருக்கின்றன தொகுப்பின் 52 கவிதைகளும்.


எழுத்து என்பதே அதுதானே. சிலர் கதைகளாக, கட்டுரைகளாக தமது அடையாளங்களை, தாம் பார்த்த சமூகத்தின் போக்குகளை, எதிர்கொண்ட மானுடர் ஏற்படுத்திய உணர்வுகளை ஆவணப்படுத்திச் செல்லுகிறார்கள். இங்கு செல்வராஜ் ஜெகதீசனுக்கு அது கவிதைகளில் கைகூடி வந்திருக்கிறது வெகு சுலபமாக.


செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் 2008-ல் திண்ணை இணைய தளத்தில் எனக்கு அறிமுகமாயின. தொடர்ந்து நவீன விருட்சம், உயிரோசை, கீற்று, வார்ப்பு போன்ற பல இணைய இதழ்களிலும் கல்கி, யுகமாயினி, அகநாழிகை, நவீன விருட்சம் போன்ற பல பத்திரிகைகளிலும் பரவலாக எழுதி வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர் அபுதாபியில் மின் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.


2008, 2009 என அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘அந்தரங்கம்’,‘இன்ன பிறவும்’ என முதலிரண்டு தொகுப்புகளை வெளியிட்டுக் கவிஞரை சிறப்பித்திருக்கிறது அகரம் பதிப்பகம். இது மூன்றாவது. அகநாழிகை வெளியீடு. முன்னுரை மொழிந்திருப்பவர் கவிஞர் கல்யாண்ஜி என்பதுவே போதும் கவிதைகளுக்குக் கட்டியங் கூற.


தொகுப்பிலுள்ள பல கவிதைகள் நான் ஏற்கனவே இணைய இதழ்களிலும், அவரது வலைப்பக்கத்திலும் வாசித்திருந்தாலும் ஒருசேர வாசிக்கையில் அன்றாடங்களைப் பற்றியதான அவரது அவதானிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மறுமுறை” கவிதையில்,

‘நன்றி தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்

மறுமுறை வாய்க்காமலே
மறுதலிக்கப்படலாம்
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு.



நடைபாதை சித்திரம்” ஒன்றை நம்முள் விரிய வைத்துத் தன் வேதனையைப் பகிருகிறார். ஒரு சாண் வயிற்றுக்காக ஓயாமல் உழைக்கும் கடைநிலை ஊழியரின் வாழ்க்கைப் போராட்டத்தை, ஓடிக்குறைக்க இயலும் தன் வளர்ந்த வயிற்றுடன் ஒப்பிட்டு சமூக இடைவெளியைக் காட்டுகிறார் “வயிறு” கவிதையில். உடல் உழைப்புக்கு உரிய நியாயம் கிடைக்காத உலகமல்லவா இது? எதிர் கேள்வி கேட்காத “கிடை ஆடுகள்” மானுடருக்கு எத்தனை ருசியானவை என மனதை உதற வைக்கிறார். “விளம்பரங்களில்” வகுபட்டுப் பின்னமாகிக் கொண்டிருக்கும் பொழுதுகளைச் சாடுகிறார். “முன் முடிவுகளற்று இருப்பது” குறித்து முழுமூச்சாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.


குழந்தைகளைக் கொண்டாடுகிறார் சில கவிதைகளில். “பெரிய ரப்பர்” ரசிக்க வைக்கிறது. “நண்பர்கள் வட்டம்” கேட்கிற கேள்வி சுய பரிசோதனைக்கு உதவுகிறது. புலால் கடையிலிருந்து “பின் தொடரும் நிழல்” வன் கொடுமையை வாழ்வில் இயல்பானதாக எடுத்துக் கொண்டு விட்ட மனிதரைச் சாடுகிறது.


சிறுகவிதைகளில் ஒன்று,

பறத்தல் என்பதைத் தவிர
வேறெந்த முகாந்திரம்
இருக்கப் போகிறது
வெளிர் நீல வானில்
மிதந்தலையும் அந்த
வெண்ணிறப் பறவைக்கு.


‘பறத்தல்’தனை வாழ்தல் என்பதாகவும் பொருள் கொள்ளத் தோன்றுகின்றது எனக்கு. இவர் போல வாழ்வாதாரத்துக்காக ஊரையும் உறவுகளையும் விட்டுப் பிரிந்தவர் தனிமையில் உணரும் வெறுமையை ஆதங்கத்துடன் பேசுவதாகப் படுகிறது. அப்படித் தோன்றக் காரணிகளாக பிரிவின் துயரைப் பேசுகின்றன “ரயில் கவிதைகள்.” தவிரவும் “விமான நிலைய வரவேற்பொன்றில்” ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்ப்பட்டவனிடம் தனையே பொருத்திப் பார்க்கிறாறோ கவிஞர்? அவனை நோக்கித் தவழவிட்டப் புன்னகையைப் பற்றி,

இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு’
.


இதுவும் கடந்து போகும்” துவண்டு நிற்போருக்கும், துரோகத்தை பார்த்தோருக்கும், துயரில் தத்தளிப்போருக்கும் உலகெங்கும் பரவலாக வழங்கப்படும் ஆறுதல் மொழி. ஆனால்..,

இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை


என்பது அனுபவித்தவருக்கே புரியுமென்பதாக அமைந்து போன பேருண்மை.


தையும்” எனும் இரண்டாவது கவிதையில்..,

இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்களேன்
ஏனைய பிற யாவற்றையும் போல


என கேட்டிருப்பது அவசியமில்லாத தவிப்பாக..! ஏனெனில் தொகுப்பை முடிக்கும் போது நன்றாக உணர முடிகின்றது, கால் நனைக்கும் ஓயாத கடலலைகள் பாதங்களுக்கடியிலிருக்கும் மணலோடு நமையும் இழுப்பது போல், தீராத வாழ்வலைகளால் நமை உள்வாங்கும் கவிதைகளை. ஆயினும் அத்யாவசியமானதாகிறது இக்கவிதை,

இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்


எனும் முந்தைய தன்னடக்க வரிகளால். அவையே ஆழ்கடலினின்று ஆகச் சிறந்த ஒரு நன்முத்தைக் கரை ஒதுக்கிச் சென்று விட்டுள்ளன இத்தொகுப்பாக. பத்திரமாகக் கொண்டு சேர்ப்பித்தச் சிப்பியாக அகநாழிகை பதிப்பகம். கவிஞருக்கும் பதிப்பகத்துக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!
***

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
பக்கங்கள்:64 ; விலை:ரூ.50
பதிப்பகம்: அகநாழிகை (http://www.aganazhigai.com)
புத்தகத்துக்கு அணுகவும் : பொன்.வாசுதேவன் (அகநாழிகை) - 999 454 1010
இணையத்தில் வாங்கிட: [https://www.nhm.in/shop/100-00-0000-081-8.html]
*** ***

24 ஜூலை 2011 திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை!

புதன், 13 ஜூலை, 2011

துளசி கோபாலின் ‘என் செல்ல செல்வங்கள்’ - ஒரு பார்வை - அதீதத்தில்..

ன் செல்லச் செல்வங்கள்’. தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்த்து விட்டு இது செல்லப் பிராணிகளின் வளர்ப்பு பற்றியதான புத்தகமாக மட்டுமே எண்ணி சிலர் கடந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது, ஆனால் இது அதையும் தாண்டி அன்பைப் பற்றி அதிகம் பேசுவதாய் உள்ளது. சுமார் முப்பது ஆண்டு கால வாழ்க்கையை அலசியபடியே நகரும் பயணம் எங்கினும் அன்பு காட்டிய செல்லங்களுடன்.. அன்பைப் பொழிந்த மனிதர்களும் வருகிறார்கள். குறிப்பாக முதல் ஒன்பது அத்தியாயங்களில்.

புத்தகத்தினுள் செல்லும் முன் ஆசிரியரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பத்திரிகை எழுத்தாளர்கள் இன்னுமொரு வட்டத்தை அடைய விரும்பி இணையத்தை தஞ்சம் அடைந்து வருவது ஒரு பக்கம் எனில் இவர் இணையத்தில் எழுத ஆரம்பித்துத் தனக்கென ஒரு பெரிய வாசகர் வட்டத்தைப் பெற்று இணையத்தில் பகிர்ந்தவற்றையே புத்தகங்களாக்கிக் கொண்டு வருகிறார். கூடவே பல பத்திரிகைகளின் மூலமாக வாசகர் வட்டம் விரிந்து கொண்டே செல்கிறது.

இது இவரது முதல் புத்தகம். பேச்சுவழக்கிலான எழுத்து வாசிக்கும் எவருக்கும் ஒரு தோழியின் பகிர்வைப் போன்றதான நெருக்கத்தைத் தருவதாக உள்ளது. இந்தப் புத்தகத்தின் கடைசி சில அத்தியாயங்கள் இணையத்தில் பகிரப்படும் போது அவற்றுடனே நானும் பயணித்திருக்கிறேன். கோகியின் புகைப்படங்களுக்கு முதன்மையான ரசிகையாக இருந்திருக்கிறேன். அறியாத முந்தைய பாகங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு முழுமையான வாழ்க்கைக் குறிப்பை.. அனுபவக் கதையை.. வாசித்து முடிக்கையில் ஏற்பட்ட கலவையான உணர்வுகளில், தவிப்பும் நெகிழ்வும் ஆசிரியரின் சோகத்துக்கு ஆறுதல் வேண்டி நின்றன.

அத்தியாயங்கள் 1-9:

சின்னவயதில் ஒருசில மணிநேரமே அன்புகாட்ட வாய்த்த மஞ்சள் நிற மணிவாத்துக்கள்; திருமணத்துக்குப் பின் சிலநாள் மட்டுமே கூட இருந்த நாய்க்குட்டிகள் டைகர், ஜிம்மி; ஆறாவதாகக் குடிபோன வீட்டில் ச்சிண்ட்டு, தத்தி சிட்டுக்குருவிகள் ( “எங்க தலைமேலே உக்காந்து ரெண்டு ரூமுக்கும் சவாரி... கூண்டு எல்லாம் இல்லே”); பேருந்து நிலையத்தில் கணவருக்குக் காத்திருக்கையில் காலை நக்கி அரைவாலை ‘விசுக் விசுக்’ என ஆட்டி அடைக்கலமான ச்சிண்ட்டு.

கேரளா, புனே என வசித்து, ஃபிஜித் தீவுகளுக்கு நாடுவிட்டுச் சென்ற காலக்கட்டம் வரையிலான வாழ்வை அற்புதமாகப் பதிந்திருக்கிறார். அதிலும் ச்சிண்ட்டுவுடன் வசித்த குடியிருப்பில், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் ‘பாரத விலாஸ்’ போல என இவர் காட்டியிருக்கும் வாழ்க்கைச் சித்திரம் இன்றைய காலகட்டத்தில் நாம் இழந்து போன சில சமூக உறவுகளை ஏக்கத்துடன் நினைக்க வைக்கின்றன.

கூடவே நமது பாரத விலாஸ் காலத்து நண்பர்களில் தொடர்பு விட்டுப்போனவர்கள், அவர்தம் பிள்ளைகள் இப்போது எங்கு எப்படி இருப்பார்கள் எனும் எண்ணங்களும், முன்னுரையில் மதுமிதா பகிர்ந்திருப்பது போல அவரவர் வாழ்வில் வந்த வளர்ப்புப் பிராணிகளின் நினைப்பும் வந்து போகின்றன.

எங்கிட்டே இது ஒரு கஷ்டம். எப்பவும் பேசுற விஷயத்தை விட்டுட்டு அப்படியே போயிருவேன்’ என்கிறார் ஓரிடத்தில். முதலில் நமக்கும் அப்படியான ஒரு உணர்வு ஏற்பட்டாலும், இப்படி அங்கும் இங்கும் நினைவுக் குதிரைகளைத் தட்டி விட்டு, தட்டி விட்டு மீட்டெடுத்த விஷயங்கள் யாவும் ஆவணப்படுத்த வேண்டிய அவசியமான விவரங்களாகவே புத்தகத்தை சுவாரஸ்யப்படுத்தியிருப்பது வாசிக்க வாசிக்கத் தானாகப் புரிய வருகிறது.

அத்தியாயங்கள் 10-11:

சிஃபிக் சமுத்திரத்தில் இருக்கும் ஃபிஜித் தீவுகளில் வசித்த ஆறு வருடங்களை இந்த இரண்டு அத்தியாயங்களில் அடக்கி விட்டுள்ளார், விரிவாக அடுத்து வெளியிட்ட புத்தகத்தில் சொல்ல இருந்ததாலோ என்னவோ..!

பக்கத்து வீட்டில் காவல்காரனாக மட்டுமே பார்க்கப்பட்டு, ‘ஃப்ரெண்ட்லியானவன் இல்லை’ என வளர்த்தவர்களாலேயே பழிக்கப்பட்டு, கர்ஜிக்கும் சிங்கமென எப்போதும் கட்டியே போடப்பட்டிருந்த ராக்கி, இவரது அன்பான பார்வையிலே கட்டுண்டு கன்றுக்குட்டியானதைப் பார்க்கையில் அதிசயமாகவும், கடவுள் இவருக்கும் பிராணிகளுக்கும் நடுவே ஒரு அலைவரிசையை வரமாகவே அளித்தாரோ என்றும் நினைக்கத் வைக்கிறது.

அவரேதான் சொல்லுகிறாரே நூலின் ‘என்னுரை’யில் தான் “போன ஜென்மத்தில்... மானா இல்லை யானையா.. சரி.. ஏதோ ஒரு விலங்கினம். இல்லாவிடில் இந்த உயிர்கள் மீது இப்படி ஒரு பிணைப்பு ஏற்படுவானேன்? பூர்வ ஜென்ம பந்தம்” என்று.

மகள் பிறக்க அவளின் மழலையை ரசிக்கச் சுற்றிச் சுற்றி வந்த செல்லங்களுக்குக் கணக்கில்லை என்றாலும் அவளுடனேயே சேர்ந்து வளர்ந்த நூரி எனும் நாய்க்குட்டியை நல்லபடியாக விரும்பிக் கேட்ட நண்பர் வீட்டுக்குத் தத்துக் கொடுத்து விட்டு நியூசிலாந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

அத்தியாயங்கள் 12-23:

க்கத்து வீட்டுக்காரர்கள் காலிசெய்து போகையில் மறந்து விட்டுப்போன பூனை பிளாக்கி, கற்பகம் எனும் நாமகரணத்துடன் ‘கப்பு’வாக இவர் மடியிலும் மனதிலும் ஏறிக் கொண்டாள். ‘கப்பு, தி ராயல்’.

அடுத்தடுத்து வந்து சேர்ந்த பூனைகளாக உயர் நாகரீக மிடுக்கு நிறைந்த மிடில் ஏஜ்ட் ஷிவா; கணவர் கோபாலின் செல்லமாகிப் போனதாலும், அடைக்கலம் ஆன புதிதில் கராஜில் அவரது காரின் மேல் பாலக் கிருஷ்ணன் போலத் தினம் தினம் பாதத் தடம் விட்டதாலும் கோபாலக் கிருஷ்ணன் ஆகி சகபதிவர்களால் ‘கோகி’ என அன்பு பாராட்டப்பட்ட ஜி கே; இவர்களுடன் இன்னும் எத்தனை எத்தனை பேர்.

அணையா அடுப்புடன் வந்தவருக்கெல்லாம் சாப்பாடு எனக் கேள்விப்பட்டிருப்போம். ‘துளசி விலாஸ்’ அணையா அன்புடன் வாசல் வந்து நின்ற அத்தனை பூனைகள், ஹெட்ஜ் ஹாக் கூட்டம், நாய்கள் என எல்லோருக்கும் உணவளித்திருக்கிறது.

பிராணிகள் வளர்ப்புக்கு அந்நாட்டில் இருந்த முக்கியத்துவம், அக்கறையான மருத்துவ வசதிகள், உணவு வகைகள் இவற்றுடன் விடுதி வசதிகள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கூடவே ஒவ்வொரு செல்லங்களின் தனிப்பட்ட சிறப்புக் குணாதிசயங்களையும்.

கோகியை விடுதியில் விடக் கவலைப்படும் போது, பல வருடம் முன் இவருக்கு ஆபரேஷன் ஆகியிருந்த சமயம் ச்சிண்ட்டுவை அதீத அக்கறையுடன் கவனித்துக் கொண்ட பூனா குடியிருப்பினர் நம்மை அறியாமலே நினைவுக்கு வந்து செல்கின்றனர்.

கப்புவும் கோகியும் இவர்களது வாழ்க்கையை எப்படி நிறைவாக்கினாக்கினார்கள், அதே நேரம் எப்படி நீங்காத பிரிவுத் துயரையும் தந்து மறைந்தார்கள் என்பதை வாசித்தால் மட்டுமே உணர முடியும். கப்புவுடனான தினசரி கொயட் டைம் நெகிழ்வு. இவர் கப்புவுக்கு எப்படியோ அப்படியே அதுவும் இவருக்கு அன்னையாக சகோதரியாக எல்லாமுமாக. செல்லங்கள் குறித்து ‘ஒரு முடிவு’ எடுக்க வேண்டிய சூழல்களில் சந்தித்த மனப் போராட்டங்கள் கசிய வைக்கின்றன.

இருபதாம் அத்தியாயத்தின் இறுதியில் பிரிய கப்புவின் மறைவுக்குப் பின் மனம் கனத்து சொல்லுகிறார் “வளர்ப்பு மிருகங்களை இழந்து தவிக்கிற எல்லோருக்கும் இதை அர்ப்பணிக்கின்றேன்”.

அதே போல ‘என்னுரை’யில் “கப்புவின் மறைவுக்குப் பின் அப்போதைய கடைசிப் பகுதியை (இணையத்தில்) எழுதியதற்கு, நிறைய நண்பர்கள் அவரவர் செல்லங்களின் இழப்பின் வலியைச் சொல்ல நாங்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி அமைதியானோம். இழப்பின் வலி எல்லோருக்கும் ஒன்றல்லவா?

பதினைந்து வருடப் பந்தம் கப்புவுடன் என்றால் கோகியுடன் எட்டு வருடம். கோகியின் இழப்பு வலிக்கு ஒரு துளி ஆறுதலை அந்நேரத்தில் நானும் தந்திருக்கிறேன். மீண்டும் இப்போது இவ் விமர்சனம் மூலமாக..!

ந்த இடத்திலும் எதற்காகவும் எதையும் சமரசம் செய்து கொள்ளாத எழுத்து. தன்னுடைய ஆரம்பப் பொருளாதரமாகட்டும், செல்லங்களால் வீட்டில் ஏற்பட்ட பூசல்களாகட்டும், செல்லங்கள் குறித்து பலமுறை ‘ஒரு முடிவு’ எடுக்க நேர்ந்த சூழல்களாகட்டும். நேர்மையான பதிவுகள்.

கணவரிடம் ஒவ்வொரு முறையும் தான் போராடியதாகப் பல இடங்களில் குறிப்பிடுபவர் ‘எங்க இவரு’-வின் உள்ளார்ந்த ஆதரவின்றி இத்தனை செல்லச் செல்வங்களை அடைந்திருக்க முடியாது என்பதையும் ஒத்துக் கொள்கிறார் ஓரிடத்தில் பெருந்தன்மையாக ஏதோ நமக்குத் தெரியாததைச் சொல்வதைப் போல:)!

மனிதர்களுக்கே உரிய எரிச்சல் சுபாவம் பிரச்சனைகளின் போது தலை தூக்கியிருந்தாலும் கருணை உள்ளத்திலும் இரக்க சுபாவத்திலும் எந்த விதத்திலும் குறைந்தவரல்ல ‘இவங்க அவரு’ [சரி சரி, ஒத்துக் கொள்கிறேன். அதையும் 'இவங்க’ பகிர்வுகள்தான் புரிய வைக்கிறது என்பதை..:) ] !

செல்வச் செல்லங்களிடம் தாம் காட்டிய அன்பைப் பன்மடங்காக அவற்றிடமிருந்து திரும்பப் பெற்றதாக உணரும் இத்தம்பதியர், பெற்ற அன்பை நெஞ்சம் நிறைய சுமந்து பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கி வருவதாலேயே சேருகிறது இவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

எந்த ஊருக்கு, நாட்டுக்குச் சென்றாலும் பதிவர்களை தேடிச் சென்று சந்திப்பது; பயணம் எங்கினும் சந்திக்கும் எளிய மனிதர்கள் அத்தனை பேரின் பெயரையும் விவரங்களையும் அக்கறையுடன் கேட்டறிந்து அவற்றைத் தன் பதிவுகளில் அன்புடன் நினைவு கூர்ந்திடுவது; புதிதாகப் பதிவு எழுத வருபவரை உற்சாகமாக வரவேற்பது; ஐம்பது நூறாவது பதிவினை எட்டிப் பரவசமடைபவரைத் தன் போல ஆயிரம் பதிவு தாண்டிட உளமார ஆசிர்வதிப்பது; பதிவரின் குடும்பத்து நல்லதுகளில் தம்பதி சமேதராக வாழ்த்துவது, வருத்தங்களில் பங்கேற்பது என அன்பால் இவர் எழுப்பியிருக்கும் கோட்டை மிகப் பிரமாண்டமானது. பிரமிப்புக்குரியது.

வாயில்லா ஜீவன்களாகட்டும். மானுடராகட்டும். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்.

உதாரணமாக இத்தம்பதியினர், அன்பே சிவமென..!
***

விலை ரூ:80. பக்கங்கள்: 152. வெளியீடு: சந்தியா பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.


13 ஜூலை அதீதம் இதழில்.., நன்றி அதீதம்!

புதன், 25 மே, 2011

விழியனின் ‘காலப் பயணிகள், ஒரே ஒரு ஊரிலே..’ இரு நாவல்கள்- ஒரு பார்வை

ணினி விளையாட்டுக்கள், கார்ட்டூன் படங்கள் இவையே பிடித்தமான பொழுது போக்குகளாகி வருகின்றன இன்றைய குழந்தைகளுக்கு. அதே கணினியும் தொலைகாட்சிப் பெட்டிகளுமே பெரியவர்களின் நேரத்தையும் ஆக்ரமித்துக் கொண்டு வருகையில் வாசிப்பை எப்படிக் குழந்தைகளிடம் வளர்ப்பது? தாமும் மாறி, குழந்தைகளுக்கும் வாசிப்பை ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாற்ற வேண்டியது பெற்றோரின் அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிறது.

பாடப் புத்தகங்கள் அறிவை வளர்க்குமெனில் நல்ல குழந்தை இலக்கியங்கள் நாளைய உலகை எதிர்கொள்ளத் தேவையான நேர்மையை, மனவலிமையை, நற்பண்புகளை, நல்ல பழக்கவழக்கங்களை வளர்க்கும். மொழிவளம், கற்பனைத் திறன் பெருகும். பிழையற்ற தமிழ் வசமாகும்.

குழந்தைப் பருவத்தில் கோகுலம், அம்புலிமாமா, ரத்னபாலா, பாப்பா மலர், அணில் மற்றும் சாகசங்கள் நிறைந்த காமிக்ஸ்கள் என புதியதோர் மாய உலகுக்குள் நம்மை கட்டிப் போட்ட கதைகள்தாம் எத்தனை? நல்ல நல்ல குழந்தை இலக்கியங்களைத் தேடித்தேடி வீட்டுப் பெரியவர்கள் வாங்கித் தந்தார்கள். இதோ நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தர அற்புதமான இரு நாவல்களைப் படைத்திருக்கிறார் பள்ளிச் சிறுவர்களை மனதில் கொண்டு, கவிஞரும் எழுத்தாளரும், பதிவரும் புகைப்படக் கலைஞருமான விழியன் என்ற உமாநாத்.


நாவல் 1: காலப் பயணிகள்


ரே தெருவில் குடியிருக்கும் நான்கு மாணவர்கள் வினய், ராகவ், ப்ரீதா, ஆர்த்தி. இதில் சிறுமியர் இரட்டையர்கள். நல்ல நண்பர்களான இவர்கள் கையில் கிடைக்கிறது மாயப் புத்தகம் ஒன்று.அதன் மூலமாக கடந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் பயணம் செய்து வாழ்வின் வெற்றி ரகசியத்தை எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள் என்பதே ‘காலப் பயணிகள்’ நாவல். பதினாறு அத்தியாயங்களுக்கும் ஆவலை அதிகரிக்கும் விதமாக ‘அனுமானுடன் சந்திப்பு, இராமனும் போர்க்களமும், பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன் அரண்மனையில், வேங்கடரத்தினம் எனும் ஆச்சரியம்’போன்ற சுவாரஸ்யமான தலைப்புகள்.

முன்னூறு ஆண்டுகள் முன்னுக்குச் சென்று சந்தித்த வேங்கடரத்தினம் நமக்கும் ஆச்சரியமானவர்தான். நாட்டுக்கு ஒருவர் அப்படிக் கிடைத்து விட்டால்.. ? அவர்கள் நுழைந்த வருங்காலத்தில் ப்ளாஸ்டிக் ஒழிந்து, எங்கெங்கும் மரங்கள் வளர்ந்து, புகைவரும் வண்டிகள் மறைந்து, சூரியஒளி பயன்பாடு பெருகி எனப் பேராச்சரியங்கள் பல சாத்தியப்பட்டதற்கு.., இன்றைய மாணவர்களிடம் ஏற்பட்ட உலகளாவிய விழிப்புணர்வைக் காரணம் காட்டிய இடத்தில் ஆசிரியர் தன் நோக்கத்தைத் தொட்டு உயர்ந்து நிற்கிறார்.

அனுமானின் வழவழப்பான கூந்தலைப் பார்த்து அதைப் பராமரிக்க என்ன பயன்படுத்துகிறார் என ப்ரீதா கேட்க எண்ணுவது,ஜாக்ஸன் துரையை தான் சந்தித்த அனுபவத்தை நிஜக் கட்டபொம்மன் குழந்தைகளுக்கு விவரிக்கையில் “அரசே, ‘மாமனா.. மச்சானா.. மானங்கெட்டவனே’ இந்த வசனத்தை நீங்கள் பேசவேயில்லையே?” என வினய் கேட்பது என ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.

பெற்றோருக்குத் தெரியாமல் இந்த சாகசப் பயணங்களில் ஈடுபடுவதாக வருவது மட்டுமே நெருடல். சொன்னால் கதை நிகழ்ந்திருக்கவே வாய்ப்பில்லையே. ஹாரி பாட்டர் போன்ற மந்திர மாய புதினங்களில் தவிர்க்க முடியாது போகும் சில சமரசங்களுக்கும், நிதர்சனத்துக்குமான இடைவெளிதனைப் புரிந்தவரே இக்காலப் புத்திசாலிக் குழந்தைகள் எனத் தாராளமாக நம்பலாம். இருப்பினும் கூட அடுத்த கதையில் இதை சரி செய்து விட்டுள்ளார் ஆசிரியர்.

வினய்யின் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம், குழந்தைகளின் நூலகம் செல்லும் ஆர்வம் கண்டு பெற்றோர் அடையும் மகிழ்ச்சி, நேரந்தவறாமை இவற்றுடன் ‘தீவிரமாக ஒரு செயலில் ஈடுபட்டால் தானாகவே வழிகள் பிறக்கும்’, நட்பின் இலக்கணம் நண்பர்களின் வெற்றியைக் கொண்டாடுவது போன்ற பல நற்சிந்தனைகளையும் கதையின் போக்கில் தேனில் தோய்த்த பலாச் சுளைகளாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். முத்தாய்ப்பாக வருகிறது ஆழமாய் மனதில் நிறுத்த வேண்டிய வெற்றியின் ரகசியம்.
***

நாவல் 2: ஒரே ஒரு ஊரிலே..


அடுத்த நாவலின் தலைப்பே அழகு. 'ஒரே ஒரு ஊரிலே...' அட, இப்படித்தானே எல்லாக் கதைகளையும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோர் நமக்கும், நாம் நமது குழந்தைகளுக்கும் சொல்ல ஆரம்பிப்போம். சுற்றிக் குழந்தைகளை அமர வைத்து அவர்தம் கண் அகலக் கதை கேட்கிறதொரு பாணியிலே சொல்லிச் செல்கிறார் இக்கதையை.

பதினைந்து அத்தியாயங்கள் கொண்டது. அறிமுக அத்தியாயங்களை ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எனத் தனித்தனியாக ஒதுக்கியிருக்கிறார். சோழவரம்பன் கதை சொல்லும் அத்தியாயம் குழந்தைகளை ரசிக்க வைக்கும். யார் சோழவரம்பன்? பார்க்கலாம்.

இந்தக் கதையிலும் நாயகர்களாக நண்பர்கள் அருண், செந்தில், சாப்பாட்டுப் பிரியன் சரவணன், ஆராதனா அவள் ‘வளர்க்கும் பிரிய நாய்’ சோழவரம்பன் மற்றும் எப்போதாவது இவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கப்படும் வரலட்சுமி.

பள்ளி செல்லும் ஒரு நாளில் ஆரம்பிக்கிற கதையானது பள்ளி முடிந்து விடுமுறையைக் கழிப்பதிலும், அதன் முடிவில் பிரிந்து செல்ல நேரும் தோழர்கள் பிறகும் நட்பை எப்படி மறவாமல் தொடர்ந்தார்கள் என்பதையும் சிறுவர்களுக்குரிய அத்தனை மெல்லுணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் விவரிக்கிறது. சின்னச் சின்ன செல்லச் சண்டைகளையும் விட்டு வைக்கவில்லை.

தந்தையற்ற செந்திலுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த உதவுவது, கிரிக்கெட்டில் தம் தோழியர் மாநில அளவில் பெயர் பெற சிறுவர்கள் மனதார ஆசைப்படுவது, மலைக் கோவில் செல்ல தெளிவாகத் திட்டமிடும் திறன், வழியில் சந்திக்கும் டீக்கடைக்காரரின் தாயற்ற மகளிடம் காட்டும் கனிவு, பின்னொரு சமயம் அச்சிறுமி வீடுதேடி வருகையில் செய்யும் உபச்சாரம் என நற்குணங்களை அறிவுரையாக அன்றி, இந்நாவலிலும் கதையின் போக்கில் குழந்தைகளுக்கு உணர்த்துகிறார் ஆசிரியர்.

மினி பயணத்துக்குப் பெற்றோரிடம் ‘அனுமதி’ பெறவதற்கென்றே ஒரு அத்தியாயத்தை ஒதுக்கி, அதன் அவசியத்தை இயல்பு வாழ்வை ஒட்டிய இக்கதையில் வலியுறுத்தியதன் மூலம், ‘காலப் பயணிகள்’ கதையில் கண்ட ஒரே குறையை ஜாக்கிரதையாக நிவர்த்தி செய்திருக்கும் ஆசிரியரின் அக்கறையும் சிரத்தையும் பாராட்டுக்குரியது.

மலைக்கோவிலில் காணமல் போன அருண் எங்கே எப்படிக் கிடைத்தான் என்பதை அவனது நண்பர்களைப் போலவே பதற்றத்துடன் வாசித்து அறிந்து கொள்ளட்டுமே உங்கள் பிள்ளைகளும்:)!
***

வனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தகம் எங்கும் தூவப்பட்டிருக்கும் விதைகள் நிச்சயம் நாளை விருட்சங்களாகும். விண்ணைத் தொடும். வாழ்த்துக்கள் விழியன்.

இப்படியொரு சிறப்பான சிறுவர் இலக்கியத்தை நாளைய சந்ததியரின் நலன் கருதி வெளியிட்டிருக்கும் திரிசக்தி பதிப்பகத்தாருக்கு நன்றி.

நடுநிலைப் பள்ளி மாணவருக்கு இப்புத்தகத்தைத் தமிழ் துணைப்பாட நூலாக்கிட தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கிறேன்.

***

ங்கே கிளம்பி விட்டீர்கள்? கோடை விடுமுறை முடியும் முன் குழந்தைகளுக்குப் புத்தகத்தை வாங்கித் தந்திடவா? நல்லது. மகிழ்ச்சி!

விலை ரூ:70. பக்கங்கள்: 122. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.

இணையத்தில் வாங்கிட: உடுமலை.காம்
*** ***

இந்நூல் விமர்சனம் இன்று 25 மே 2011 வல்லமை இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி வல்லமை!

வியாழன், 31 மார்ச், 2011

ஆனந்த விகடனில் சுகாவின் ‘மூங்கில் மூச்சு’ - ஒரு பகிர்வு

லகமெங்கும் விரவி ஊரின் நினைவோடு வாழும் திருநெல்வேலிக்காரர்கள் அனைவரும் கடந்த 12 வாரங்களாக ஆனந்த விகடன் கைக்குக் கிடைத்ததுமே முதலில் வாசிப்பது ‘மூங்கில் மூச்சாகவே’ இருக்கக் கூடும் என்பது என் அனுமானம்.

சில அத்தியாயங்கள் அப்படியே நம்மை எண்பதுகளின் காலக் கட்டதுக்குக் கொண்டு செல்லுபவையாக இருக்க, அதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிந்தவர்களாகவோ அல்லது அறிந்தவர்களுடன் தொன்னூறு சதவிகிதம் ஒப்பிடும்படியாகவோ சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்.ஹை லைட்டாக அமைந்து தொடரை மேலும் நெருக்கமாக உணரச் செய்கிறது நெல்லைப் பேச்சுத் தமிழ்.

இழையோடும் நகைச்சுவையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் வாசிக்கையில் அடக்க முடியாமல் சிரிப்பார் கணவர். அவருக்கும் நெல்லைதான். அப்படி என்னதான் என அடுத்து வாசிக்கையில் அடக்க முடியாது எனக்கும் சிரிப்பை!

தொடர் நிறைவுற்றுத் தொகுப்பாக வெளிவரக் காத்திருக்கிறேன்..

தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..

ழுத்தாளர் சுகாவுக்கு ஒரு வலைப்பூவும் இருப்பது சமீபத்தில் நண்பர்களின் buzz மூலமாக அறிய வந்தேன். வேணுவனம் அதன் பெயர். இதுவும் நெல்லைக்காரர்களுக்காக மட்டுமின்றி எல்லோருக்குமான தகவல்:)!

திங்கள், 28 மார்ச், 2011

‘அவனும் இவனும்’-ஷைலஜாவின் சிறுகதைத் தொகுப்பு-ஒரு பார்வை : கீற்றினில்..

ழுத்தாளரின் முதல் பத்திரிகைப் பிரவேசம் எந்தப் பத்திரிகையில் எந்த வயதில் என்பது சுவாரஸ்யம். பத்து வயதில், ஆனந்த விகடனில். இன்று இவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வுக்கும் சேர்த்து பிள்ளையார் சுழியை இட்டது விகடன், இவரது நகைச்சுவை துணுக்கைப் பிரசுரித்து. பிறகு பதின்மங்களில் பள்ளியில் நடத்தப்பட்ட நாடகங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் தொடர்ந்த எழுத்து, கல்லூரி வயதில் மறுபடி விகடனில் கட்டுரையாகக் கால் பதித்து எம்பிப் புறப்பட்டு, இன்று வரையிலும், இவர் எழுத்துக்கள் வெளிவராத பத்திரிகைகளே இல்லையென சொல்லக்கூடிய வகையில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது 230-க்கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள்,கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 2 தொலைக்காட்சி நாடகங்கள், சில கவிதைகள் என இடைவெளி என்பதே இல்லாமல் இருபத்து ஐந்து ஆண்டுகளாய்.

1996-ல் விகடனின் பவழவிழா ஆண்டில் நடந்த போட்டியில் இவரது படக்கதை நாவலுக்கு ரூ.30,000 பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

லில்லி தேவசிகாமணியின் ‘பெண் எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு’; எழுத்தாளர் உத்தமசோழன் தயாரித்த ‘மழைசார்ந்தவீடு’; மகரம் தயாரித்த ‘வானதி சிறப்பு சிறுகதைகள்’ ஆகிய மூன்று தொகுப்புகளில் பிற எழுத்தாளர்களின் கதைகளுடன் இவரது கதைகள் இடம்பெற்றிருப்பினும், இவரது தனிக் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு 2001-ல் திருமகள் நிலையம் வெளியிட்ட, 14 சிறந்த கதைகளை உள்ளடக்கிய ‘திரும்பத் திரும்ப’ என்பதாகும். பிறகு வெளிவந்த நல்ல கதைகளை இசைக்கவி ரமணன் அவர்கள் ஊக்கம் தந்து எடுத்த முயற்சியில், திரிசக்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டு கௌரவித்திருந்தது சென்ற ஆண்டில். அதுவே நம் கைகளில் தவழ்கிறது “அவனும் இவனும்” ஆக.

பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் கலைமகள் ஆசிரியரின் அணிந்துரைகளோடு, கதாசிரியரின் ‘என்னுரை’யும் பதிப்பகத்தாரின் முன்னுரையும் சிறப்பு சேர்க்கின்றன நூலுக்கு. தொகுப்பில் இருக்கும் பதினாறு சிறுகதைகளும் பத்திரிகைகளில் வெளிவந்தவை. கலைமகள், கல்கி, அமுதசுரபி, கணையாழி, தினமலர், தினமணி கதிர், இலக்கிய பீடம் என நீள்கிறது பட்டியல்.

இவரது கதைகள் மானுடத்திற்கு பெருமதிப்பு அளிப்பவையாகவும், குடும்பம் சார்ந்தவையாகவும், முதியோர்களின் மனவலியைப் பிரதிபலிப்பவையாகவும் அமைந்திருப்பதை உணர முடிகிறது. சமீபமாக இணையத்தில் பெண் எழுத்தைப் பற்றி தொடர் சங்கலியாகப் பலரும் எழுதி வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பெண் எழுத்து பேசப்படவேண்டும் பலராலும் அறியப்படவேண்டும் எனும் ஆசையிலும் அக்கறையிலும் ஷைலஜாவின் இத்தொகுப்பினைப் பாராட்டி, சிறப்பானதொரு பெண் எழுத்தை அற்புதமாய் அடையாளப்படுத்தி அங்கீகாரம் தந்திருக்கும் திரிசக்தி பதிப்பகத்தாருக்கும் நன்றி சொல்லி, தொகுப்புக்குள் செல்கின்றேன்.

வனும் இவனும்’ தலைப்புச் சிறுகதையை கலைமகளில் வெளியான போதே, சம்பவங்களை அழகாகக் கோர்த்திருந்த விதம் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறேன். நாயகன் அமெரிக்காவில். குடும்பமே இவன் ஒருவனை நம்பியிருக்க, தன் வேலை போய்விட்டதை சொல்ல இயலா தவிப்புடன் இருக்கையில் கிடைக்கிறது தந்தையின் மறைவைப் பற்றிய தகவல். மூன்றாம் நாள் ஊர் போய் சேருகிறவன் ஒருவருக்கும் உண்மையை சொல்லாமல் இருப்பதும், அண்ணனின் மகள் இவன் வாங்கிக் வ்ந்திருந்த க்ரேயான் பென்சில்களை சிலாகித்தபடி இருப்பதும், காரியம் செய்ய வந்த இளைஞன் வேறு வழியில்லாமல் அத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாக இவனிடம் வெளிநாட்டு வேலை கேட்பதும், ‘இருட்டு அறையில் எல்லா வர்ணங்களும் ஒன்றுதான்’ என அக்கணத்தில் தான் பெற்ற தெளிவையே சொல்லி அண்ணன் மகளின் சந்தேகத்தை தீர்ப்பதுமாக, ஆரம்பித்த புள்ளிக்கே கொண்டு வந்து முடித்து அழகான கோலத்தை இட்டிருக்கிறார் இக்கதையில்.

ஸ்ரீரங்கத்தை சொந்த ஊராகக் கொண்டவர்கள் ‘அரங்கபவன்’ கதையோடு அதிகமாக ஒன்றிட இயலும். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை முகத்தில் அடித்த மாதிரி நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் புரிய வைக்கிற இக்கதை இலக்கியபீடம் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றதாகும்.

தவழ்ந்து வளர்ந்த, பிறந்த வீட்டின் மீது கல்லால் மண்ணால் ஆன கட்டிடம் என்பதை மீறி தீராத ஒரு பாசம் வைத்திருப்போர் எத்தனையோ பேர் இந்த உலகினில். ‘மனிதரை நேசியுங்கள். உயிரற்ற உடமைகள் மேல் வைக்காதீர் அநாவசிய ஒட்டுதல்கள்.’ ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமென்றாலும், நம் உணர்வுகளால் உயிர் கொடுத்து விடுகிறோம் அவற்றிற்கு என்பதே உண்மை. ‘காத்திருக்கிறேன்’ கதையில் தன் மேல் கசிந்துருகி அன்பு வைத்திருக்கும் வசந்தாவுக்காக, அவளது கொலுசுச் சத்தத்தை ஒரே ஒரு முறையேனும் கேட்பதற்காக, மண்ணோடு போகும் கடைசி நிமிடம் வரை பரிதவித்துக் காத்திருப்பது.. ஆம் வீடேதான். அது பேசுவதாகவே கதையை அமைத்திருப்பது வித்தியாசம், உணர்வுப் பூர்வம்.

கல்லூரி மாணவியர் உயிரோடு பேருந்தில் கொளுத்தப்பட்ட அநியாயம், ஈவ் டீஸிங் தொல்லையால் சிலர் உயிரை விட்ட அவலம் போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டு கொந்தளித்த தன் உணர்வுகளை, படிப்பறிவில்லாத சின்னசாமியின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ‘தப்புப் பண்ணியவர்கள்’ தினமலர் போட்டிக் கதையில்.

நடுத்தர வர்க்கத்திலிருந்து அமெரிக்கா சென்று, ஒருவர் கொண்டு வரும் டாலர்கள் எப்படி சில குடும்பங்களில் அன்பை பாசத்தை மறக்க வைத்து, பகட்டுக்கும் போலித்தனத்துக்கும் வழிவகுத்து, சம்பாதிப்பவரை ஒரு பணங்காய்ச்சி மரமாகப் பார்க்கவும் வைக்கிறது என்பதைச் சொல்லுகிறது ‘பாரத சமுதாயம் வாழ்கவே’.

நம் கலாச்சாரத்தில் குடும்ப உறவுகளின் பின்னல், பிணைப்பு ஒரு காலத்தில் மற்ற நாடுகளால் வியந்து பார்க்கப்பட்டு வந்தது. இப்போது எங்கெங்கும் முளைத்து நிற்கின்றன முதியோர் இல்லங்கள். வளர்த்து ஆளாக்கியவர்களை எப்படி கைகழுவத் துடிக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என்பதைப் பேசுகிறது ‘மானுடம் வெல்லும்’.

தன்னலமற்ற மனிதநேயம் மரித்துப் போகவில்லை என நம்பிக்கை தருகிறது ‘புதிய உறவு’. கோவிலின் கருவறைக்குள் சென்று இறைவனை பூஜிக்க பிறப்பு முக்கியமன்று, நல்ல மனதும் ஆத்ம சுத்தியுமே போதுமெனக் கூறி உயர்ந்து நிற்கிற ‘மனம் நிறைந்தது’ கதையுடன் நிறைவடைகிறது தொகுப்பு. நிறைந்து போகிறது மனமும்.
***

விலை ரூ:70. பக்கங்கள்: 120. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்
*** ***

25 மார்ச் 2011 கீற்று இதழில்..
, நன்றி கீற்று!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin