திங்கள், 4 பிப்ரவரி, 2013

கூழாங்கற்கள் - நவீன விருட்சம் 92_வது இதழில்..



மணல் வீட்டைக் கட்டி
மாளிகை எனக் கொண்டாடுகிறது குழந்தை.
ஆர்ப்பரித்துத் தோழர்கள் அளித்தக்
கூழாங்கற்களால்
அகழியை அலங்கரித்து
அழகு பார்க்கிறது.

பிரபஞ்சத்துக்கு அப்பாலும்
வர்த்தகப் பரிமாற்றம்..
அன்றாடம் நாம் அனுப்பும்
புண்ணிய பாவங்களின் வடிவில்.

செல்வக் குவியலென நினைத்துச்
சேகரிப்பவற்றில்
செய்த நல்லன மட்டும்
கணக்கில் வருகின்றன.

பக்தியும் பவ்யமும்
மயங்க வைத்தக் கைத்தட்டல்களும்
வைர வைடூரியங்களானாலும்,
இருட்டத் தொடங்கியதும்
ஆட்டம் முடிந்ததென
ஆற்றங்கரையோடு குழந்தைகள்
விட்டு வந்து விடும்
கூழாங்கற்களாகிப் போகின்றன.
***

ஜனவரி 2013, நவீன விருட்சம் 92-வது இதழில்..

நன்றி நவீன விருட்சம்!
 
 ***

படம் நன்றி: இணையம்

24 கருத்துகள்:

  1. அவ்வளவு தான் வாழ்க்கை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் மனம் இருந்தால் மணல் வீட்டை மாளிகையாக நினைக்கும் மனமும் விளையாட்டு முடிந்தவுடன் அவற்றை கலைத்து வீடு திரும்பவும் முடியும்.

    பிரபஞ்சத்திற்கு அப்பாலும் வர்த்தகப்பரிமாற்றம்//
    அருமை.

    வாழ்க்கை தத்துவத்தை அழகாய் சொல்லிவிட்டீர்கள் நமக்கு நாம் செய்யும் நல்லவை மட்டும் கணக்கில் இருக்கும்.
    நவீன விருட்சம் 92-வது இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.


    பதிலளிநீக்கு
  3. அசத்தலான கவிதை..

    நவீன விருட்சத்தில் வெளியானமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. ஜொலிக்கிறது ஊடுருவிய உண்மையால்.

    பதிலளிநீக்கு
  5. அருமை.

    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. அசத்தல் கவிதை ஜொலிக்கிறது...

    பதிலளிநீக்கு
  7. சத்தியத்தின் ஒளியில் மின்னுகிற கவிதை மனதைப் பறித்தது. நவீன விருட்சம் இதை வெளியிட்டதில் மகிழட்டும். நான் உங்களை மனம் நிறைய மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  8. @கோமதி அரசு,

    குழந்தைகளின் மனநிலை பற்றி அழகாகச் சொல்லி விட்டீர்கள். வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin