திங்கள், 23 மே, 2011

எல்லாம் புரிந்தவள் - வல்லமையில்..

மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.

அர்த்தங்கள் பல
முயன்று தோற்று

‘அப்பா
அம்மாவாகவே முடியாதோ..’
திகைத்து வருந்தி நிற்கையில்

புரிந்தவளைப் போல்
அருகே வந்தணைத்து
ஆறுதலாய் முத்தமிட்டு

எனக்கு
அம்மாவாகி விடுகிறாள்
அன்பு மகள்.
***

23 மே 2011 வல்லமை இணைய தளத்தில்.., நன்றி வல்லமை!

படம் நன்றி: http://www.istockphoto.com, கவிதையுடன் வல்லமையில் வெளியானது.

திங்கள், 16 மே, 2011

பக் பக் புறாக்களும்.. கீச் கீச் மைனாக்களும்..

தினெட்டு வருடம் முன்னே பெங்களூர் மல்லேஷ்வரத்தில் ஏழடுக்கு குடியிருப்பின் மேல்தளத்தில் வசித்திருந்தோம் மூன்று ஆண்டுகள். அதிகாலை சரியாக ஏழுமணிக்கு ஆரம்பித்து அடுத்த அரை மணிக்கு கூட்டம் கூட்டமாக நூற்றுக்கணக்கில் பச்சைக் கிளிகள் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கிச் சென்றபடி இருக்கும். ஒரு (flock)குழுவில் 25,30 கிளிகளாவது இருக்கும். சரியாக மாலை ஐந்தரை மணிக்கு மறுபடி மேற்கிலிருந்து கிழக்காக வழியெங்கும் இருப்போரைக் குசலம் விசாரித்தபடியே வீடு திரும்பும். இந்தக் காட்சியை ரசிக்க எனக்கும் இரண்டு வயது பாலகனாயிருந்த மகனுக்கும் மிகப் பிடிக்கும்.

இப்போது வானில் கிளிகளைக் காணவே இல்லை:(! அபூர்வமாக சில மாதம் முன்னே ஓரிரு கிளிகள் குடியிருப்பு சுற்றுச்சுவரையொட்டிய மரமொன்றில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கக் கண்டேன். (சோனிW80 ஜூமுக்கு அவை அத்தனை தெளிவாகப் பதிவாகவில்லை. எனவே இங்கு பதியவில்லை.)

அதே போல நம் ஊர்ப்பக்கம் தினம் தினம் சிறுவயதில் பார்க்கக் கிடைத்த சாம்பல் நிற கொழுக் மொழுக் குண்டு சிட்டுக்குருவியும் மும்பையில் இருந்த போதும் சரி பெங்களூரிலும் சரி கண்டதே இல்லை. எங்கள் திண்ணை வீட்டில்(அப்பதிவில் படம்.3) தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் நாற்காலியை ஒட்டிய தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையே, உச்சியில் குருவிகள் குடியிருக்க ஒரு பரண் அமைத்து வைத்திருந்தார்கள். குருவிகள் வைக்கோலைக் கொண்டு வந்து கூடமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்தன. முற்றம் குருவிகளின் இன்னிசையால் நிரம்பியிருக்கும். தாய்ப்பறவை வெளியேறக் காத்திருந்து நாற்காலி கைப்பிடியில் ஏறி தூணைப் பிடித்து எம்பி எம்பி குஞ்சுகளைப் பார்த்து ரசிப்போம்.

அப்போதெல்லாம் காலை வேளைகளில் தொடர்ச்சியாக அடுத்த வீட்டு வேப்பமரம் அல்லது வீட்டுக்குப் பின்புறமிருந்த அரசமரத்திலிருந்து ‘அக்கூ... அக்கூ’ எனக் குரல் வந்தபடி இருக்கும். குரலெழுப்பும் பறவையை குறிப்பாகப் பார்க்க முடிந்ததில்லை. அதற்கு ஒரு கதை சொல்வார்கள். அது தங்கைக் குருவி என்றும், அக்காவுடன் சேர்ந்து ஆற்றுக்கு குளிக்கப் போயிருந்ததென்றும், அக்கா ஆற்று வெள்ளத்தோடு போய்விட தங்கை தினம் தினம் அக்காவைத் தேடி ஏங்கிக் குரல் கொடுக்கிறது என்றும் சொல்வார்கள். கதையின் தாக்கம் அந்த வயதில் ஆழமானதாய் இருந்தது. ‘அக்கூ அக்கூ’ கேட்க ஆரம்பித்தாலே அப்படியொரு அய்யோ பாவமாக இருக்கும். ‘குருவிக்கு அக்காவைத் தேடிக் கொடுத்திடு சாமீ..’ன்னு அரசமர புள்ளையாரை சுற்றி வந்த நினைவும் உள்ளது. அக்கூ குருவி இன்னும் நம்மூர் பக்கம் இருக்கா சொல்லுங்க.

ஆனந்த ராகம்.. கேட்கும் காலம்
:

லைபேசிக் கோபுரங்களால் அழிந்து வரும் இனங்களாக குருவிகளும் கிளிகளும் ஆகிவரும் வேளையில், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளை ஆனந்தப் படுத்துபவையாக உள்ளன மாடப் புறாக்களும், பாடும் மைனாக்களும், நீளவால் கருஞ்சிட்டுக் குருவிகளும். அதுவும் கோடை வந்தால் புறாக்களின் பக்கூம் பக்கூம் கொக்கரிப்பும், மைனாக்களின் ஆனந்த ராகங்களும் அதிகாலை ஐந்தரைக்கு எல்லாம் ஆரம்பமாகி விடுகின்றன.

சில பறவைகள் தோழமையாய் பார்க்கும். சில கண்டு கொள்ளவே செய்யாது. சிலது பயந்து படபடத்துப் பறந்து விடும். பல்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் தொகுப்பு:



1. இங்கும் அங்கும் யார் வரவைத் தேடுது?


சின்ன சின்னக் கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்..

2. சாது மிரண்டால்..

அமைதிப் புறாவின்
ஆத்திரப் பார்வை


3. ‘நான் சொல்லல.. அம்மாதான் ஆட்சியைப் புடிப்பாங்கன்னு..’

அரசியல் பேசும் புறாக்கள்
(அதிக தொலைவில் நின்றவை)


4. வெள்ளைப் புறா ஒன்று
இந்தப் புறா எங்கள் தளத்துக்கு நேர்மேல் அமைந்த மாடத்தில் குடியிருக்கிறது. ஒருநாள் தொடர்ந்து ஒருமணிக்கு மேலாக குறிப்பிட்ட மரத்துக்கு சென்று சென்று குச்சி குச்சியாக ஒடித்துக் கொண்டு வந்தபடியே இருந்தது, வாயிலே அழகாகக் கவ்வியபடி. காமிராவில் சரியாகக் கவ்வ முடியவில்லை என்னால்:)! MQN எடுத்த இப்படத்தைப் போல ஓர் நாள் எடுக்க ஆசை. பேராசை:)?

5. வழி மேல் விழி வைத்து..

பாட்டுக்குப் பாட்டு:

ரண்டு நாள் முன்னே காலை நேரம் வீட்டுக்குள் பிஸியாக நான் இருந்த நேரம். ஆரம்பித்தது பாருங்க ஒரு பாட்டுக்குப் பாட்டு. தொடர்ந்து பத்து நிமிடமாய் மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டேயிருந்தன இரண்டு மைனாக்கள். மெதுவாக காமிராவுடன் நான் அருகில் செல்லவும் ஒன்று விர்ரெனப் பறந்து விட்டது.

ற்றதோ ‘அட, ஒண்ணும் செஞ்சுட மாட்டாங்க. என்னைப் பாரு எப்படி பயப்படாம நிற்கிறேன்’ என்றது.
6. தோரணை



பிறகு ‘பாடவா என் பாடலை..’ என ஓரிரு நிமிடங்கள் எனக்காகத் தொடர்ந்து பாடியது:
7. தனி ஆவர்த்தனம்


மீண்டும் திரும்பித் துணையைக் கூப்பிட்டது சேர்ந்து பாட வருமாறு:
8. வா வா அன்பே அன்பே..


து அடுத்த கட்டிடத்தில் அமர்ந்தபடி ‘ஊஹூம்’னு சொல்ல இது என்னைப் பார்த்து..,
9. ‘வரட்டுமா..’

அது சரியான பயந்தாங்குளி. ரொம்ப வெட்கமும். கண்டுக்காதீங்க’ என்று சொல்லிவிட்டு சிறகை விரித்துப் பறந்து போய்விட்டது:)!

[ஆனந்த ராகத்தை என் ஃப்ளிக்கர் தளத்தில் ரசித்தவர்கள்].

எடுத்த படங்களை கணினியில் ஏற்றிய பிறகே கவனித்தேன், அன்பாய் பார்த்த, பேசிய அந்த மைனா ஒரு மாற்றுத் திறனாளி என்பதை. மனது கனத்தது. ஆயினும் ஒன்று புரிந்தது. ஆம், அந்த மைனாவின் உற்சாக கானம். அது வாழ்க்கைக்கான நம்பிக்கை கீதம்.
***

பறவை பார்ப்போம் (1)

புதன், 11 மே, 2011

பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க சில குறிப்புகள்

ரு புகைப்படத்தில் இருப்பவர் பளிச்சுன்னு தெரிய புன்னகைக்கு அடுத்து போட்டிருக்கும் உடையும் பெரும்பங்கு வகிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதானே?

மே மாத PiT போட்டி உடைகளுக்கு எனப் படம் எடுக்க இருப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாகவே படங்களுக்கு எந்தவிதமான உடைகள் அட்டகாசமாக அம்சமாக அமையும் என்பது குறித்து ஒரு சில குறிப்புகள். PiT தளத்தில் நான் இட்ட பதிவை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.

மீடியம் மற்றும் டார்க் பின்னணியில் படம் எடுக்க டார்க் கலர் உடைகள் என்றைக்கும் பொருத்தம். டார்க் பின்னணி என்பது ஒரு கராஜ் முன்னாலோ வீட்டு சன்னலின் வெளிப்புறம் நிற்க வைத்தோ எடுக்கலாம். அதுவுமில்லாமல் டார்க் ஷேட்ஸ் ஒருவரை இன்னும் ஸ்லிம்மாகவும் காட்டும்!

அழுத்தமான வண்ணத்துக்கும் 'அடிக்க வரும்' வண்ணத்துக்குமான வித்தியாசத்தையும் நினைவில் நிறுத்திடுங்கள். ப்ரைட் கலர்களை புகைப்படங்களுக்குத் தவிர்த்திடுங்கள்.

டையில் வாசகங்கள் படத்துக்கு அழகூட்டாது. உடையின் சிறப்பை.. முகத்தின் பூரிப்பை.. கவனிக்க விடாது.

முழுக் கை உடைகள் பிரமாதமாகத் தெரியும்.
[படம்: 1 # கருவாயன்]
க்ளோஸ் நெக், ஹை நெக் இன்னும் அழகென்று படங்களே சொல்கின்றன.[படம்: 2 # ராமலக்ஷ்மி]

கையற்ற மற்றும் அரைக்கால் உடைகளை தவிர்த்தல் நலம். உடல் பாகங்களே கவனத்தைப் பெறுவதாகி விடும். ஆனால் சின்னஞ்சிறு தவழும் மற்றும் நடை பயிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை சில விஷயங்கள் ரிவர்ஸ். அவர்களது உடல் அதிகம் தெரியுமாறு, பிரகாசமான ப்ரைட் கலர்கள் அணிவித்து எடுக்கலாம். பேட்டர்ன், எழுத்துக்கள், படங்களுடனும் உடைகள் இருக்கலாம். படம்: 4_ல் கவனியுங்கள்.

ஒரு உடையில் எடுக்கும் போது க்ளோஸ் அப், முழுப்படம், இரண்டுக்கும் நடுவிலாக என பலவாறாக எடுத்து சிறப்பானதை தேர்வு செய்திடலாம்.

மெயின் உடை, கச்சேரி போல களை கட்ட, பக்க வாத்தியங்களிலும் அக்கறை காட்டணும். பெல்ட், ஜாக்கட், காலணி, தொப்பி, ஸ்கார்ஃப் போன்றவை மேலும் அழகூட்டும், பெரியவர் சிறியவர் பேதமின்றி. (படம்_2-ல் பாப்பாவின் ஹேர் பேண்ட்).

உடையின் காண்ட்ராஸ்ட் கலரில் ஸ்கார்ஃபை குழந்தைகள் கழுத்தில் கட்டி படம் எடுத்துப் பாருங்களேன். சொக்கிப் போகலாம் ஒரு பூங்கொத்தைப் பார்க்கிற மாதிரி:)! [படம்:3 # இணையம்]

குழந்தைகளை எடுக்கையில், அவர்கள் நமக்கு ஒத்துழைக்கும் இதமான சூழலை உருவாக்கித் தரணும். அவுட் டோரில் எடுப்பது இயற்கையான பின்னணிகளுடன் அருமையான படங்களைத் தரும் என்பதோடு குழந்தைகள் தங்களைப் படமெடுக்கிறார்கள் எனும் உணர்விலிருந்து விடுபட்டு சுற்றுப்புறத்தில் லயித்து இயல்பாக போஸ் கொடுப்பார்கள். நீங்களே பாருங்க:)![படம்: 4 # கருவாயன்]

அவுட் டோர் படங்களை காலை பத்தரை மணிக்கு முன்பாகவும், மாலை என்றால் ஐந்து மணிக்கு மேலும் எடுத்தால் சூரிய வெளிச்சம் அழகாய் ஒத்துழைக்கும்.

லைட் பின்னணிக்கு லைட் கலர்கள் பரவாயில்லை. மெலிந்த உடலமைப்பு கொண்டவராயின் லைட் கலர் உடையில் டார்க் பின்னணியிலும் தோன்றி அசத்தலாம் இப்படி:
[படம்:5 # ஜீவ்ஸ்]

மிதமாக, ஒரு சீராகப் பரவி நிற்கும் இப்படத்தின் லைட்டிங் என்னைக் குறிப்பாகக் கவர்ந்த ஒன்று. [நான் பொதுவாக இரண்டு பக்கமும் டேபிள் லாம்ப் வைத்து ஒளியூட்டுவேன். ஒரு சில இடங்களில் அதீத ஒளி விழுந்து போவதைத் தவிர்க்க முடிந்ததில்லை.] எனவே இப்படம் குறித்து ஜீவ்ஸிடம் கேட்டதும், எடுத்த விதத்தை ஒரு படமாக அனுப்பி வைத்து விட்டார். நன்றி ஜீவ்ஸ்!

வீட்டுக்குள்ளே மினி ஸ்டூடியோவும் ‘எதிரொளி’யும்:
[விளக்கப்படம்: ஜீவ்ஸ்]
ஒரு கயிறு கட்டி தேவையான வண்ணத்தில் ஒரு புடவை அல்லது துப்பட்டாவை இப்படிப் பின்னணியில் தொங்க விடுங்கள். இங்கே இவர் லைட் கலர் உடையை எடுப்பாகக் காட்ட கருப்பு வண்ணத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

இடப்பக்கம் ஒரு ட்ரைபாடில் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷை பொறுத்தி கூரையைப் பார்த்து வைக்க, ஒளி கூரையில் பட்டு சிறுமியின் மேல் விழுந்து மீண்டும் ரிஃப்ளெக்ட் ஆகி வலப்பக்கமிருக்கும் தெர்மகோல் ஷீட்டின் மேல்பட்டுத் தெறித்து ‘எதிரொளி’யாய் தேவதையைக் குளிப்பாட்டியிருக்கிறது:)!

பெண்கள் உடைக்கேற்ற இயல்பான ஹேர் ஸ்டைல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். ஆண்கள் ஓரிருநாள் முள்ளுத் தாடிகள் இல்லாமல் க்ளீன் ஷேவ்ட் ஆக இருப்பது உடைக்கும் பிரகாசத்தைத் தரும்.

நம்ம ஊர் உடையான புடவை உலகெங்கும் கொண்டாடப்படுவதன் காரணம், முழுநீளத்தில் விதவிதமாய் உடுத்தும் வகையில் வியக்க வைப்பதால்தான் என்பது சொல்லியா தெரியணும்:)? புடவை மட்டுமில்லாமல் பாரம்பரிய உடையான வேட்டியும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்தில் ஒவ்வொரு விதமாக அணியப் படுகிறது. உழைப்பாளிகள், கிராம நகர மக்கள் தங்கள் செளகரியத்துக்கேற்ப வேட்டியை மடித்துக் கட்டுவதும், புடவையை இழுத்துச் செருகிக் கொள்வதும் ஒரு ஸ்டைல். கருப்பு வெள்ளையிலும் கவனத்தை உடை மேல் செலுத்த வைக்க கருவாயனால் மட்டுமே முடியும்:[படம்:6 # கருவாயன்]

அற்புதமான காட்சிகள் கண்ணுக்கு கிட்டும் போது உச்சி வெயில் எல்லாம் பார்க்க முடியாதில்லையா:)? அந்த வெயிலும் கூட இந்தத் தம்பதியரை ஆசிர்வதிப்பது போல அழகாய் ஒத்துழைத்திருக்கிறது!

நம்மைச் சுற்றி ரசனையான உடைகளுக்கா பஞ்சம்:)?

பதினைந்தாம் தேதிக்குள் படம் எடுத்து சீக்கிரமா அனுப்பி வையுங்க:)!




***

செவ்வாய், 10 மே, 2011

அரங்கு நிறையாக் காட்சிகள் - நவீன விருட்சத்தில்..

நண்டுகளோடு ஓடிப்பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தன
வெள்ளலைகள்

ஆளுயர அலைகளுக்கு அகப்படாமல்
பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன
மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாய்..
நண்டைப் பிடிக்கவோ நீர் பருகவோ
குழுமியிருந்த கடற்பறவைகள்

எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்

கடலுக்குள் இறங்கும்
சூரியனின் கதிர்வீச்சில்
நிஜத்தை விடப் பன்மடங்கு
நீண்டு விழுந்து
பிரமிப்பைத் தந்தன
கரையோர நிழல்கள்

இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்

அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்

அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.
*** ***

படம்: இணையத்திலிருந்து..

29 ஏப்ரல் 2011, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

சனி, 7 மே, 2011

உலகத்தை எதிர்கொள்ள பள்ளி மாணவிகளுக்கு மனோபலம் குறைந்தது ஏன்?-இவள் புதியவளில்..

பிப்ரவரி மாதம் மனதைப் பாதித்த நிகழ்வுகள், வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவியரின் தற்கொலைகள்.

முதல் வாரம், சென்னை பெசண்ட் நகர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் மீது சுமத்தப்பட்ட திருட்டுப் பட்டத்துக்கு அவரது ஏழ்மையே காரணமாக அமைந்த கொடுமையுடன், மோசமான முறையில் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார். மனமுடைந்த அவர் தூக்கு மாட்டிக் கொண்டார். அடுத்த பத்து நாட்களில் ஆசிரியர் திட்டியதன் காரணமாக, சென்னை புளியந்தோப்பில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கு மாட்டியும், கும்பகோணம் அருகே ஒரு மாணவி தீக்குளித்தும் இறந்து போயினர்.

இது குறித்த என் எண்ணங்கள்.. இவள் புதியவளில்..
[எழுத்துக்கள் வாசிக்க சிறிதாக இருப்பின் ctrl மற்றும் + குறிகளை ஒரு சேர அழுத்திப் பக்கத்தைப் பெரிதாக்கிடக் கேட்டுக் கொள்கிறேன்]நன்றி இவள் புதியவள்!

புதன், 4 மே, 2011

3 வருடம் / 34 மாதம்.. - முத்துச்சரம் / PIT போட்டி..

ன்றுடன் முத்துச்சரத்துக்கு 3 ஆண்டு நிறைவு. உடன் வரும் அத்தனை பேருக்கும் என் அன்பான நன்றி:)!

மூன்று வருடங்களும் நடைபெற்ற ஒவ்வொரு PiT போட்டிகளிலும் தவறாமல் பங்கு பெற்று பதிவுகளும் இட்டு வந்துள்ளேன். நடுவே சில மெகா மற்றும் குழுமப் போட்டிகளின் கால அவகாசம் நீட்டிக்கப் பட்டதால் முப்பத்தாறுக்கு பதில் 34 போட்டிகள்தான். தலைப்பு சரிதானே?

இப்போது என் 35 ஆவது போட்டிப் பதிவை முத்துச்சரத்தில் அன்றி, PiT தளத்திலேயே பதிந்து விட்டுள்ளேன், அதுவும் அறிவிப்புப் பதிவாக:)! PiT குழுவின் சார்பில் இம்மாதப் போட்டிக்கு நடுவராக இயங்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் சர்வேசன். நன்றி PiT!




றிவிப்பையும் சில மாதிரிப் படங்களையும் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்:

தலைப்பு: உடைகள்.

படத்தைப் பார்த்த உடன் உடைகளே நம்மைக் கவர வேண்டும். ஒரு நடனப் படமாய் இருந்தாலும் பாவனை ஒப்பனையை விட உடை பிரதானமாக ஈர்க்க வேண்டும்.

PIT மாதாந்திர போட்டி விதிமுறைகள்
இங்கே விரிவாகவும் தெளிவாகவும். முடிவுத் தேதி மே 15.


படம்:1 # சி வி ஆர்
Duriyodhana in action

படம்:2 # ஜீவ்ஸ்
Seller

படம்:3 # கருவாயன்
ரெட்டை ஜடை

படம்:4,5 #ராமலக்ஷ்மி
‘கிமோனோ’ ஜப்பானிய உடை/ ’Kimono' Japanese Traditional Dress

‘கிமோனோ’ ஜப்பானியப் பாரம்பரிய உடை


இந்த உடை ஜப்பானில் ஆண், பெண், சிறுவர் அனைவராலும் அணியப் படுகிறது. இதற்கான அர்த்தம் ‘அணிவதற்கான பொருள்’, ki "wear" and mono "thing", என்கிறது விக்கிபீடியா.

தற்காலத்தில் இது முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே அணியப் படும் உடையாகி வருகிறது. பாரம்பரியத்தைக் காக்க விரும்பும் ஒரு சில வயதில் மூத்த ஆண், பெண்கள் மட்டும் தினசரி அணிகிறார்கள்.



மேலும் மாதிரிப் படங்களுக்கு: மே 2011 போட்டி அறிவிப்பு

அறிவிப்பான அடுத்தநாளிலிருந்து அணிவகுக்கத் தொடங்கிவிட்டன அழகழகான படங்கள் போட்டிக்காக இங்கே. படங்கள் வர வர உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தபடி இருங்கள். முக்கியமாக,

உற்சாகமாக நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் ‘எதைக் கொடுக்க’ எனக் கேட்டு உங்களை சிரமப் படுத்தியதற்கு பதிலடியாக, இந்த முறை ‘எதை தேர்ந்தெடுக்க’ எனும் சிரமத்தை எனக்கு வழங்குங்கள்:)!

*** *** ***

ஞாயிறு, 1 மே, 2011

மே தினம் - தினமணி கதிரில்.. ‘பிடிவாதம்’

பொங்கி வந்த பாலை அணைத்து, அளவான சர்க்கரை டிக்காஷனுடன் சேர்த்து, கிளம்பிய மணத்தை நாசிக்குள் இழுத்தவாறே கோப்பையுடன் டிவி முன் அமர்ந்தான் ரகு.

‘இன்று காலை பத்து மணிக்கு ஞாயிறு மகளிர்மலர் நிகழ்ச்சியில் இளம் மருத்துவர் சக்தி ரகுநாதன் நம்முடன் கலந்துரையாடுகிறார். காணத் தவறாதீர்கள்.’

உறிஞ்சத் தொடங்குகையில் தேவாமிர்தமாய் இருந்த காஃபி ஒரே கணத்தில் வெறுத்தது. கடனே என குடித்து முடித்தான் மிச்சத்தை. ஆனால் மீத வாழ்க்கையை அப்படி சலிப்புடன் கழிக்கத் தான் தயாராக இல்லை என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தான்.

இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே ரெகார்ட் செய்ய சக்தி செட் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. மெயின் சுவிட்சை அணைத்து விடலாம் என அற்பமாக யோசித்த வேளையில் தொலைபேசி ஒலித்தது. ஊரிலிருந்து அம்மா.

“ஏன்டா, சக்தி ப்ரோக்ராம் இன்னிக்குதானே? போன ஞாயிறே அவ சொன்னதாலே பார்க்கச் சொல்லி அக்கம்பக்கம் தெரிஞ்ச எல்லார்க்கிட்டேயும் கொட்டடிச்சாச்சு. அவ பேட்டி முடிஞ்ச கையோட நானும் அப்பாவும் சம்பா சித்தி பொண்ணு கல்யாணத்துக்குக் கிளம்பிட்டிருக்கோம். வந்து பேசறேன்னு சக்திட்ட சொல்லு. இருக்காளா?”

சின்ன தயக்கத்துக்குப் பின் “நைட் ட்யூட்டி முடிஞ்சு வரல இன்னும்” என்றான்.

“ம்ம். சரி. அவதான் வர முடியாட்டியும் நீயாவது வந்திருக்கலாம்டா. சித்தி நீ ஏன் வரலைன்னு என்னப் பிச்சு எடுக்கப் போறா?” பதிலை எதிர்பார்க்காமல் ஃபோனை வைத்து விட்டாள் அம்மா.

‘வந்தா என்னைய ஆளாளுக்குப் பிச்சுத் தொங்க விட்டுறுவீங்களே’

போன வாரம் கல்லூரி நண்பன் கதிரேசன் தம்பிக்குத் திருமணம். குடும்பத்தோடு வந்து அவனுக்குச் சட்டை, சக்திக்குப் பட்டுப்புடவை தந்து அழைப்பு வைத்திருந்தார்கள். ஒருமாதம் முன்னாலிருந்தே சக்தியிடம் நினைவுபடுத்தியபடி இருந்தும் அன்று காலை தவிர்க்க முடியாத பிரசவ கேஸ் எனக் கிளம்பிப் போய் விட்டாள். நண்பர்களின் கலாட்டா தாங்கவில்லை. அதுவும் குரு இவன் காலை வாருவதிலேயே குறியாயிருந்தான்.

“வந்துட்டான்யா வந்துட்டான், கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி வந்துட்டான்” அத்தனை நண்பர்களும் ‘கொல்’ என சிரித்தது காதுக்குள் இன்னும் காய்ச்சி ஊற்றிய ஈயமாக. கல்லூரி நண்பர்கள் எப்போதுமே அதிக உரிமை எடுத்து கிண்டல் செய்வது சகஜம்தான். என்றாலும், வரவர இது போன்ற விளையாட்டுக்களை ரசிக்க முடியவில்லை.அதிக நேரம் அங்கிருக்கப் பிடிக்காமல் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிடாமலே நழுவி வந்து விட்டிருந்தான் ரகு.

ஏற்கனவே மாமாவால் புகையத் தொடங்கியிருந்த மனம் குபுக் என பற்றிக் கொண்டதும் அன்றுதான்.

வேலை விஷயமாக ஊரிலிருந்து வந்து அவனோடு இரண்டு நாள் தங்கியிருந்த தாய்மாமா கிளம்பும் முன்னே, “என்ன வாழ்க்கடா வாழற. நல்லாப் படிச்சு உத்தியோகத்துல மடமடன்னு முன்னேறி என்ன பிரயோசனம் எங்கியோ பார்த்தேன், இவதான் வேணும்னு டாக்டர் பொண்ணக் கட்டுன. நீ வீட்டுக்கு வந்தா அவ கிளம்பிப் போறா. அவ காலையில திரும்பி வரும் போது நீ போயிடுற. எப்ப பாக்குறீங்களோ? எப்ப பேசுறீங்களோ? புள்ளக் குட்டியும் இன்னும் ரெண்டு வருஷம் வேண்டாம்னு இருக்கோம்ங்கிற. ஒண்ணும் நல்லதாத் தெரியல” என்றவர் போகிற போக்கில் ஒரு ஆலோசனையையும் தூக்கிப் போட்டார்.

“ஒண்ணு பண்ணு. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு எம் எம் மெடிக்கல் காலேஜில் இருக்கான். அவன் மூலமா லெக்சரர் வேலைக்கு ஏற்பாடு செய்யறேன். நேரத்துக்கு போனமா வந்தமான்னு வாழ்க்கை சுலபப்படும். யோசிச்சு எனக்கு ஃபோன் செய். அவ மாட்டேன்னுதான் சொல்லுவா. பேசிக் கீசி கன்வின்ஸ் செய்யப் பாரு”

அதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் நண்பர்களின் கேலியால் நொந்த தருணத்தில் பரிசீலிக்கத் தொடங்கி, இரண்டு நாள் முன்னர் சக்தியிடம் பேச்சை ஆரம்பிக்க முடிவற்றதாய் நீண்டு, இனி சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்கிற உச்சத்தைத் தொட்டு, இப்போது அவள் நர்சிங்ஹோம் கெஸ்ட் ஹவுஸில். பிடிவாதக்காரி. பிரிவதில் தனக்கு உடன்பாடில்லை என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாளே தவிர, தன் ஆலோசனையைப் பரிசீலிக்கக் கூட அவள் தயாராக இல்லாதது இவனுக்குப் பெரும் கோபத்தைக் கிளப்பி விட்டது.

அவளா தானா என பார்த்து விடும் கட்டத்தில் இருந்தான். ’என்னை விட உன் தொழில்தான் முக்கியமென்றால் அப்படியே இருந்து விடு’ தீர்மானமாய் சொல்லி விட்டான். இத்தனைக்கும் விரும்பிக் கைப் பிடித்தவள். எப்போது பார்த்தான் முதன் முதலில் அவளை?

பெரியம்மா மகனின் திருமணத்தில் மணப்பெண்ணின் தோழியாக. பார்த்த சில நிமிடங்களிலேயே அப்படிப் பிடித்துப் போனது அவனுக்கு. அவள் டாக்டர் எனத் தெரியவந்த போது அவனால் நம்பவே முடியவில்லை. படித்து ஓரளவு நல்ல வேலையில் அமர்ந்ததுமே மனிதர்களிடம் இயல்பாக வந்து ஒட்டிக் கொள்ளும் கெத்து எதுவும் இல்லாமல் மிக எளிமையாகவும் கலகலப்பாகவும் ஓடியாடி ஒவ்வொருவரையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அப்போதே பெரியம்மாவைக் கைக்குள் போட்டுக் கொண்டு கட்டினால் சக்தியைத்தான் கட்டுவேன் எனக் கைகாட்டி விட்டு வந்து விட்டான்.

‘நம்ம சமூகம் இல்லை. டாக்டர் பொண்ணு குடும்பத்துக்குச் சரிப்பட்டு வராது’ என அவன் பக்கத்திலும், ‘எங்க ஆட்கள் இல்லீங்களே. அது கூடப் பரவாயில்ல. நாங்க டாக்டர் பையனா தேடறோமே’ என சக்தி குடும்பத்திலும் கிளம்பிய எதிர்ப்புகளையும் மறுப்புகளையும் நடுவில் நின்று சமாளித்து, பரஸ்பரம் சந்திக்க வைத்துப் பேசி முடித்தது பெரியம்மாதான்.

சக்தி மிகத் தெளிவாக இருந்தாள்.

“ஒரு டாக்டரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னா என் ப்ரொஃபஷனைப் பற்றிய புரிதலோட நடந்துப்பாங்கன்னு என் அப்பா நினைக்கறதில தப்பில்லை. நான் ஆசைப்பட்டதுக்காக பல சிரமங்களுக்கு மத்தியில என்னப் படிக்க வச்சவரு அவரு. அந்தப் படிப்புக்கான மரியாதை நான் இதுல உயர்ந்து காட்டறதுதான். அதுக்கு உங்களால...”

“நோ சக்தி. இது ஒரு புனிதமான வேலைன்னு புரியாதவன் இல்லை நான். எங்க சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியிலும் நேரங்காலமில்லாத உழைப்புகள் எல்லாம்தான் இப்போ சகஜமாகி விட்டதே. என்னோட மனைவின்னு ஒரு வட்டத்துக்குள்ள கண்டிப்பா உங்களக் கட்டிப் போட மாட்டேன்” அவள் நம்பினாளோ இல்லையோ தான் அப்படி இருப்போம் என்பதில் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை இருந்தது அப்போது. ஓரளவு தொழிலில் கவனம் செலுத்தி ஒரு நிலைக்கு வர மூன்று வருடமாகலாம் என்றும், அதுவரை குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்க முடியுமா என்றும் அவள் கேட்டதற்கு, “அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை” என்று தலையைத் தலையை ஆட்டியவன்தான் அப்போது.

ப்போது அவன் பார்வை முழுவதுமாய் மாறி விட்டிருந்தது. பொறுமை போய் விட்டிருந்தது.

ஆனால் அவளோ மாமாவின் ஆலோசனையை முன் வைத்த போது கோபப்படவே இல்லை.

“ஏன் ரகு, திடீர்னு இப்படி லெக்சரர்? தட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ. ஜஸ்ட் இன்னும் ஒரே வருஷம். ஒரு சிறந்த குழந்தைப்பேறு நிபுணராகிடுவேன். அப்புறம் ஒண்ணென்ன ரெண்டோ மூணோ கூட பெத்துத் தந்துட மாட்டேனா. வேலைக்கும் போயிக்கிட்டு, ஆளுங்களப் போட்டு குழந்தைகளையும் நிச்சயம் நல்லாப் பார்த்துக்க முடியும் என்னாலே”

“பெரிய தப்பு பண்ணிட்டேன்னு இப்போ தோணுது” ஏதேதோ இவன் பேச, பதிலுக்கு அவளும் பேச “அவுட்” என வாசலைக் காட்டிக் கொந்தளித்து விட்டான்.

“உங்களிடம் இப்போ என்ன பேசியும் புண்ணியமில்லை. ஆற அமர யோசிங்க. என்னைப் பார்க்கப் பார்க்க கோபம்தான் அதிகமாகும். இப்போதைக்கு நர்சிங்ஹோமிலேயே தங்கிக்கறேன்” என துணிமணிகளை அடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“வீராப்பா போறியா? போ போ. ஊர் வாய்க்குப் பயந்துகிட்டெல்லாம் உங்கிட்டே தோற்க மாட்டேன். திரும்ப வந்து கூப்பிடவும் மாட்டேன். நீயா வர்றியான்னு ஒரு மாசம் பார்ப்பேன். நான் சொல்றதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா சேர்த்துப்பேன். இல்லைன்னா டைவர்ஸ்தான்.”

அடம் பிடிக்கும் சின்னக் குழந்தையைப் பார்ப்பது போல ஒரு புன்னகையை வீசி விட்டுக் கிளம்பி விட்டாள்.

லைபேசி அழைத்தது. அறியாத எண்கள்.

அழைத்தது, நண்பன் பாலகணேஷ்.

“டேய்ய்ய் பாலா...” அலறினான் ஆனந்தத்தில்.

“மாறவே இல்ல ரகு நீ. அப்பாவுக்கு பை பாஸ் சர்ஜரி. சென்னை வந்து ஒரு வாரமாச்சு. காலையிலே ஃப்ரீயா சொல்லு. எனக்கு 12 மணிக்கு ஃப்ளைட். அதுக்குள்ள உன்னைப் பார்த்துட்டு போலாம்னு..”

“வா வா. ப்ரேக்ஃபாஸ்ட் இங்கயே வச்சுக்கலாம்”

சமையல் உதவிக்கு வரும் சீதாம்மாவைப் பாலாவுக்குப் பிடித்த பூரிக்கிழங்கை செய்யச் சொல்லிவிட்டுக் குளிக்க ஓடினான்.

பாலா ப்ளஸ் டூ வரைக் கூடப் படித்த பால்ய சிநேகிதன். பக்கத்து தெருவும் ஆகிப் போக எப்போதும் சேர்ந்தே திரிவார்கள். எத்தனை நட்புகள் பின்னாளில் கிடைத்தாலும் எதிர்பார்ப்புகளற்ற கள்ளமில்லா சிறுவயது நட்புக்கு ஈடாகுமா? கல்லூரிக்காகப் பிரிந்தவர்கள். பிறகு சந்திக்கும் வாய்ப்பே கிடைத்திருக்கவில்லை. கல்லூரி முடித்த கையோடு இவன் சென்னையிலும் அவன் டெல்லியிலுமாய் செட்டிலாக ஒருவர் திருமணத்துக்கு மற்றவர் போகவும் இயலவில்லை.

சொன்னபடியே ஒரு மணிநேரத்தில் அங்கிருந்தான் பாலா. ஆரத் தழுவிக் கொண்டார்கள். நான்கு கண்களும் மினுங்கி மினுங்கிப் பழைய காலத்துக்குப் போய்த் திரும்பின.

பாலா சொன்னான்: “நினைவிருக்கா ரகு. உங்கிட்டே ஒரு பிடிவாதம் உண்டு. ஏதாவது விளையாட்டில நீ தோத்துப் போனா அத்தோட விட மாட்டே. எதிராளிகிட்ட நைச்சியமா பேசியோ சமயத்தில கெஞ்சியோ மறுபடி விளையாட வச்சு ஜெயிச்சாதான் நிம்மதியாவே. உன்னோட அந்தப் போக்கு எங்களுக்கு அலுப்பா இருந்தாலும், போகுது ஃப்ரெண்டாச்சேன்னு சலிப்பா விளையாண்டாலும் உள்ளுக்குள்ள பிரமிப்பா இருக்கும்.”

ரகுவுக்குப் பெருமையாக இருந்தது.

பாலா தொடர்ந்தான்: “ஒருவகையில நான் இப்ப நல்ல நிலமையில இருக்கதுக்கு உன் கூடவே இருந்து கத்துக்கிட்ட அந்த பிடிவாத குணமும் ஒரு காரணம். அப்போ அதோட அருமை தெரியல. அவரவர் வழியில பிரிஞ்ச பிறகு வாழ்க்கையில எந்தத் தடை வந்தாலும் இத ரகு எப்படி சமாளிச்சிருப்பான்னு என்னய நானே கேட்டுப்பேன்னா பார்த்துக்கோயேன்” சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவன் அலைபேசி சிணுங்கியது.

“சொல்லும்மா.... அவகிட்ட ஃபோனைக் குடும்மா நான் பேசறேன்.... அனுக்குட்டி, செல்லமாச்சே நீ. பாட்டியைப் படுத்தாம குடுத்ததை சமர்த்தா சாப்பிடுவியாம். அப்பா இதோ வந்துட்டேயிருக்கேன்.... சரி சரி... வாங்கிட்டு வர்றேன். குளிச்சு ரெடியா இருக்கணும். நாம ரெண்டு பேரும் ஏர்போர்ட் போகணுமில்லையாடா.. குட் கேர்ள்” போனை வைத்தான்.

“வொய்ஃப் வரலையாடா உன்னோட?”

“இல்லடா. அவங்க ஆன்சைட் ப்ராஜக்டுக்காக யு கே போய் ஆறுமாசமாகுது”

“அப்போ குழந்தைய யார் பார்த்துக்கறது?” ஆச்சரியமாய் கேட்டான் ரகு.

ன் நான்தான். ஆயாம்மா காலையில எட்டு மணிக்கு வந்து சாயங்காலம் நான் வந்ததுமா ஆறுமணிக்குப் போவாங்க. அதுக்கு மேல நான் பாத்துக்கறேன்”.

“எப்படிடா மூணு வயசுதான் ஆகுதுங்கறே?”

“அனுக்குட்டிக்கு ஒண்ணரை வயசா இருக்கும் போதே ஒரு மாசம் பிரியா ஜெர்மனி போனப்போ பார்த்துக்கிட்டவன் நான். இப்ப முடியாதா என்ன ஆறு மாசமேன்னு ரொம்ப யோசிச்சாங்க இந்த தடவை. திறமைக்குச் சவாலா தேடிவந்த பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாதுன்னு தைரியம் சொல்லி அனுப்பி வச்சிருக்கேன். சீக்கிரமா வாழ்க்கையில செட்டிலாகணும்னோ கவுரவுத்துக்காகவோ வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னே அடமா நின்னு பண்ணிக்கறவங்க எத்தனை பேரு. ஆனா வொய்ஃப் ஒரு ஏடிஎம் மெஷினப் போல பணங்காய்ச்சி மரமா ஒரே எடத்துல நிக்கணும்னா எப்படி?”

ரகுவுக்கு வியர்த்தது.

“ஒண்ணுக்கு ரெண்டு பசங்க ஆயிட்டா வேலைய விடச்சொல்ற ஆளுங்களையும் நிறையப் பார்த்துட்டேன். வர்ற ப்ரோமோஷனை வேண்டாம்னுட்டு, தன்னைவிடத் திறமை குறைஞ்சவங்க தாண்டிப் போறத கைகட்டி வேடிக்க பார்த்துகிட்டு, சம்பளத்தை மட்டும் கொண்டு தரணும்னாஅநியாயமா இல்லே? மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை”

ரகுவுக்கு லேசாக வெட்கம் வந்தது. தன்னிச்சையாக செட் டாப் பாக்ஸ் பக்கம் பார்வை சென்றது. சக்தியின் பேட்டி அதில் ரெகார்ட் ஆகிக் கொண்டிருந்தது.

“உறவும் ஊரும் இன்ன வரை என்னப் பேசாத கேலி இல்ல. வர்றான் பாரு ஃபீடிங் பாட்டில்னுதான் ஃப்ரெண்ட்ஸ் கிண்டலடிப்பாங்க. அவங்களுக்கென்ன, ஜாலியாச் சொல்லிட்டு அடுத்த வேலயப் பார்க்கப் போயிடுவாங்க. நாம ஏன் அதை மனசுல ஏத்திட்டுத் திரியணும்னு எதையும் சட்டை செய்யறதில்ல. இது நம்ம வாழ்க்கை. அடுத்தவங்க மூக்கை நுழைக்கப்படாதுங்கறதுல தீர்மானமா இருந்தோம் ரெண்டு பேருமே...

“நா ஒரு முட்டாள். யாரு கிட்ட என்ன சொல்லிட்டிருக்கேன் பாரு. அன்னக்கி உம்மேல வச்ச பிரமிப்பு இன்ன வர மாறல, நா சொல்லியா தெரியணும் இதெல்லாம்? ஊரே மெச்சுற டாக்டரையில்ல கட்டிக்கிட்டிருக்க. அவங்கள பார்க்காம போறமேன்னுதான் வருத்தம் எனக்கு. அடுத்த தடவை ஃபேமிலியோட மீட் பண்ணலாம்.” விடாமல் பேசிய பாலா கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்தான்.

ஏதேதோ மிதப்பில் இருந்த ரகு மெல்லத் தரை தொட்டிருந்தான்.

"இது நம்ம வாழ்க்கை' உதடுகள் முணுமுணுக்க, டின்னருக்கு சக்தியை எங்கே அழைத்துச் செல்லலாம் எனும் சிந்தனை வந்திருந்தது.
*** *** ***

படம்: கதையுடன் பிரசுரமானது.

  • உழைக்கும் மகளிருக்கு உறுதுணையாய் இருங்கள்:)! மேதினத்தில் இச்சிறுகதையை வெளியிட்டிருக்கும் தினமணி கதிருக்கு என் நன்றி!
  • தினமணி இணையதளத்திலும் வாசிக்கலாம்இங்கே.
  • அனைத்து வர்க்க உழைப்பாளிகளின் வாழ்வு சிறக்க, நலன் பெருக மே தின வாழ்த்துக்கள்! சென்ற வருட என் மே தினக் கவிதை ‘நட்சத்திரங்கள் இங்கே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin