ஞாயிறு, 14 ஜூன், 2020

திசை மாறிய பறவைகள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (74
பறவை பார்ப்போம் - பாகம் (51)
#1
“வளர்ச்சி வலி கொண்டது. மாற்றம் வலி கொண்டது. 
ஆனால் நமக்குச் சற்றும் சொந்தமில்லாத இடத்தில் 
மாட்டிக் கொள்வதைப் போன்ற வலி 
வேறெதுவும் இல்லை.”
_Mandy Hale

ந்த வார வாழ்வியல் சிந்தனைகளோடு பகிர்ந்திருக்கும் படங்களின் பின்னணியையும் சொல்லி விடுகிறேன். முதலிரண்டு படங்களும் சரியாக இருவாரங்களுக்கு முன் எடுத்தவை. அப்போதுதான் பெங்களூரில் தொடங்கியிருந்தது மழைசீஸன். இரவெல்லாம் பெருமழை. அத்தோடு காற்றும் பயங்கரமாக வீசி அடித்தது. மறுநாள் காலை..
சற்றே வளர்ந்த இந்த இந்திய சாம்பல் இருவாச்சிக் குஞ்சு எங்கள் குடியிருப்பில் தென்பட்டது நீண்ட இடைவெளிக்குப் பின். அதாவது ஒரு முழுவருடம் கழித்து. ஏனெனில் நான் சென்ற வருடம் இதே சமயத்தில்தான் இருவாச்சிப் பறவையைப் பற்றி விரிவாக இங்கே பகிர்ந்திருந்தேன்:


புயலில் வழிதப்பித் தன் கூட்டைவிட்டு வெகுதொலைவு வந்து விட்டதோ என்னவோ எங்கள் குடியிருப்பின் வீட்டுத் தோட்டங்களில் மரத்துக்கு மரம் தாவி அமர்ந்து, தவிப்போடு அவ்வப்போது கூவிக் கொண்டேயிருந்தது.  அதைக் குறிப்பிட்டு முகநூலில் ‘கூடும் குடும்பமும் கூடிய விரைவில் கிட்டட்டுமாக!’ எனப் படங்களைப் பகிர்ந்திருந்தேன். நண்பர்களும் பறவைக்கான பிராத்தனையில் இணைந்தார்கள். 

#2
“கவலை 
நாளைய வருத்தங்களைக் குறைக்கப் போவதில்லை, 
மாறாக இன்றைய மகிழ்ச்சியையும் அழித்து விடும்.”

‘என் கூட்டைக் கண்டாயா?’ 
எனக் கேட்பது போலில்லை?!

என்ன ஆச்சரியம், குஞ்சின் தவிப்பை எங்கிருந்தோ உணர்ந்து, மூன்றாவது நாள் தம்பதி சமேதராக  வந்து சேர்ந்தனர் குஞ்சின் பெற்றோர். இறைவன் படைப்பில் எல்லா உயிர்களிடத்திலும் பாசத்தையும் அன்பையும் பார்க்க முடிகிறது. பெற்றோர் குஞ்சினை ஆற்றுப் படுத்தினர். அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

ஓரிரு தினங்கள் சென்றன.  இறைவன் படைப்பில் அதே உயிரினங்கள் தம் குஞ்சுகளும் குட்டிகளும் சற்றே வளர்ந்ததுமே தாமாகத் தம்மைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதில் மிக உறுதியாக இருப்பதும் வியப்பே. பெற்றோர் குஞ்சினை இங்கேயே விட்டுவிட்டுத் தம் இடத்துக்குப் போய் விட்டன போலும். மீண்டும் குஞ்சு தவிக்க ஆரம்பித்தது. நாளெல்லாம் மரத்துக்கு மரம் தாவி முன்னை விடப் பலமாக கீச்சிட்டபடி இருக்கிறது. நாமேதான் நம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிற புரிதல் அதற்குக் கொஞ்சம் கொஞ்சமாக வந்து விடும்! 

இரு தினங்களுக்கு முன் எடுத்த படம்:

#3
“மன உறுதி தகர்த்து விடும்
எந்தவொரு சக்தியையும்..!”
சிறு பறவை 
சிந்திக்க ஆரம்பித்து விட்டது!

**

டுத்து, லாக்டவுன் ஆரம்பித்த நாட்களில் உளவியல் ரீதியாக மக்களைப் போலவே பாதிக்கப்பட்டு விட்டதோ என எண்ணும் படியாக இருந்தது இந்த வெள்ளைப் புறாவின் நடவடிக்கை. முன்பிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் போல அல்லாமல், இங்கே மாடப்புறாக்களையோ வெள்ளைப் புறாக்களையோ பார்க்கவே முடியாது. மணிப்புறாக்கள் மட்டுமே உண்டு. அபூர்வமாக வருகை தந்த இந்த வெள்ளைப் புறா குடியிருப்பில் உள்ள தோட்டங்களிலும், வீடுகளின் முன்பகுதிகளிலும் மனிதர்களைக் கண்டு கொஞ்சம் கூடப் பயப்படாமல் எல்லோரையும் பின் தொடருவதும் கால்களைக் கொத்த முயலுவதுமாக இருந்தது. தன் கூட்டத்தை விட்டு வெகுதூரம் வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. படம் எடுக்க முயன்ற போது படபடத்துத் தோளில் வந்தமர்ந்து அச்சுறுத்தி, பின் அப்படியேத் தாவித் தலைமேல் அமர்ந்து என்னை வீறிட வைத்தது:). அப்போது அங்கிருந்த வயதான தோட்டக்காரர் அதை லாவகமாக அப்படியேக் கையில் பிடித்துப் பத்தடிகள் தள்ளிச் சென்று பறக்க விட்டார். ஆனால் புறாவோ போன வேகத்தில் விர்ரெனத் திரும்பியும் என் வீட்டுப் பக்கமே வந்தமர்ந்தது. இதற்கெல்லாம் பயந்து முயற்சியைக் கை விடுவேனா நான்:)? சன்னல் கதவிடுக்கின் வழியாகக் கேமராவை நுழைத்து எடுத்த படங்கள்:

#4
“உங்கள் சிந்தனைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை உணர்வீர்களானால் 
ஒரு போதும் எதிர்மறையாகச் சிந்திக்க மாட்டீர்கள்.”


#5
“என்னுடைய ஒரே போட்டியாளர் 
நேற்றைய நான் மட்டுமே!”

#6
“வாழ்க்கை ஒரு துணிச்சலான  சாகசப் பயணம் 
அல்லது 
ஒன்றுமே இல்லை.” 
― Helen Keller

[சிந்தனைத் தொகுப்புகள் தொடரும்...]

***

20 கருத்துகள்:

  1. அந்தக் குஞ்சுப்பறவை தனது வாழ்வின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.  அதுதான் அதன் வாழ்க்கை.

    படங்களும், வாசகங்களும் சிறப்பு.  இரண்டாவது படத்தின் வாசகம் இன்றைய மனிதனின் சூழ்நிலைக்கும் பொருந்தும்.

    புறாவுக்கு என்ன கஷ்டமோ...  என்ன சொல்ல வந்ததோ...   நமக்குதான் பயமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நம்பிக்கையை நிச்சயம் பெற்று விடும்.

      புறா அன்றைய தினத்திற்குப் பின் காணக் கிடைக்கவில்லை. அவற்றுக்கும் ஏதேதோ பிரச்சனைகள், பாவம்.

      கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்களுடன் வாழ்க்கைப் பாடங்களும் அருமை...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  3. முதல் வாசகம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகப் பொருத்தமானது. குறிப்பாக வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மனதில் ஒவ்வொரு நாளும் நினைவில் தோன்றி எழும் உணர்வு இது. எனினும் வாழ்க்கையின் Commitments, வளர்ச்சி, வாழ்க்கை மாற்றம்.., இவை வலி தாங்கும் திறனைத் தருகிறது.

    "தாமாகவே தம்மைக் கவனித்துக் கொள்ள வேண்டும் எனும் மனவுறுதி" பறவைகளிடமிருந்து கற்க வேண்டும்.

    படங்களும், பாடங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வாசகம் குறித்தத் தங்கள் பகிர்வுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் அழகு.
    நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் எல்லோருக்கும் அவசியம் இப்போது.
    புறாவை விடாபிடியாக அழகாய் படம் எடுத்து விட்டீர்கள்.
    வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் புரிதல் தற்போதைய சூழலுக்கு அத்தியாவசியமானதாகி விட்டது.

      நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. படங்களும் கருத்துகளும் சிறப்பு.

    முதல் இரண்டு படங்கள் - அந்தப் பறவைக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும்.

    புறா - தலையில் அமர்ந்து கொண்டதோ - அட...

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. மிக்க நன்றி.

      தங்கள் பெயர் ஐடி_யில் வெளியாகவில்லையே.

      நீக்கு
  7. வாசகங்களும் படமும் நன்று.

    'தானே தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும் நாமும்'மிருகங்கள்,பறவைகளிடம் இருந்து கற்க வேண்டும்.

    தேன் சிட்டுகள் வீட்டினுள் லைற் லாம் மேல் கூடு கட்டி இருந்தன வளர்ந்ததும் அம்மா அப்பாவுடன் பறந்து வெளியே சென்று வந்தன.காலம் வர பெற்றோர்விட்டு சென்றனர்.
    மாலையில் கூட்டுக்கு வந்து பார்த்து செல்லும் பெற்றோர் வந்துள்ளார்களா என .சில நாட்களாக தொடர்ந்தது பின் குஞ்சும் வரவில்லை.

    புறா என்னை படம் எடுத்து போடு என அழகாக போஸ் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன் சிட்டுகளின் குஞ்சுகளும் வாழ்வைப் புரிந்து கொண்டிருக்கும். கருத்துகளுக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  8. வாசகங்கள் மிக சிறப்பு ...

    வழமை போல அற்புத காட்சி பதிவுகள் ..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin