சனி, 20 செப்டம்பர், 2014

‘ஆறடி நிலம்’ பாகம் 2 - ‘தினகரன் வசந்தம்’ தொடர்

பாகம் 1 இங்கே.

ராணி ஜீனத் மஹால் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பிரச்சனையைக் கொண்டு வரக் கூடிய எந்த விஷயத்தையும் பேசத் தயாராக இல்லை. பிரிட்டிஷ்காரர்களுக்கும் இது நன்றாகத் தெரிந்திருந்தது. அதனாலேயே யாரையாவது ராணியிடம் கதை சொல்ல அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புரட்சி எனப் புறப்பட்டவர்கள், தெற்கே தம்மை எதிர்த்தவர்கள் எல்லாம் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக விளக்க வைத்தார்கள். புத்திசாலிகள்.

இன்னொரு விஷயமும் ஜாஃபர் மனதை அலைக்கழித்தது. தன்னை ஒரு சுஃபி மகானாக உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார். எத்தனையோ பேரின் துயர்களை, நோய்களை தன் ஆசிர்வாதத்தால், பிரார்த்தனையால் குணப்படுத்த முடிந்திருக்கிறது. இப்படியொரு அசாதாரண சக்தியைத் தனக்கு அள்ளித் தந்த கடவுள் என்ன நினைப்பார்? ஜனங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதை விரும்புவாரா? அதே நேரம், ஒரு மகான் போரில் ஈடுபடலாமா? போரில் இறங்கி பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகலாமா? குழப்பமாக இருந்தது. தன் பிறப்பின் நோக்கம் என்ன? எது சரி? எது தப்பு? தன் மேல் விதிக்கப்பட்டதுதான் என்ன?

ராம் பாபாவைக் கேட்கலாமா?

ஜாஃபரின் தாய்வழித் தாத்தா ஒரு இராஜபுத்திர மன்னர். அவரிடம் அரசவை ஜோசியராக இருந்தவர் ராம் பாபாவின் தாத்தா. ஜாஃபரின் தாய் லால்பாயின் திருமணத்துக்கு ஜாதகம் கணித்த போதே சொன்னாராம், பிறக்கும் மைந்தன் பின்னாளில் பேரரசன் ஆவான் என்று. அறுபத்திரண்டு வயது வரை யாருமே நினைக்காத ஒன்று நிறைவேறிய பிறகு, ராம் பாபா சொல்லிச் சொல்லிப் பூரிப்பார், தன் தாத்தாவின் ஆருட சக்தியை எப்பேற்பட்டதென்று.   ஜாஃபருக்கு நீண்ட ஆயுசென்றும், வரலாற்றையே மாற்றக் கூடிய செயல்களை ஒரு நாள் செய்வாரென்றும், உலகம் உள்ள வரை இவர் பெயர் நிலைத்திருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமா? மொகல் சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய பேச்சு வருகையில் அக்பருக்கு இணையாக இவரும் நினைக்கப்படுவார் என்றும் சொல்லி விட்டுப் போய் விட்டார்.

அடிக்கடி இதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறார் ஜாஃபர். பாபாவின் தாத்தா சொன்னதில் பாதி நடந்து விட்டது. முதலில் பேரரசர் ஆனது. ஆன பிறகுதான் இந்த ஆருடமே நினைவுக்கு வந்தது. அதுவும் ராம் பாபா சொல்லிதான். நீண்ட ஆயுள்? அது கூட நடந்து விட்டது. முந்தைய ஐந்தாறு மன்னர்களை விடவும் அதிகம் வயதாகி விட்டது. இன்னும் நிறைவேறாமல் இருப்பது பெரும் புகழ் அடைவதுதான். அதுதான் எப்படியெனப் புரியவில்லை. மற்ற மன்னர்களை விடக் கற்றறிந்தவர். கவிஞர். மன்னரான சுஃபி மகான். ஆனால் இதெல்லாம்  நீண்ட நாளுக்கு நினைவில் நிற்கும்படியானவையா என்ன? அவ்வப்போது சுழன்ற இந்தக் கேள்விகளை ஒருநாள் புறந்தள்ளினார். எப்படி நினைக்காமலே மன்னரானாரோ அதே போல விதித்திருந்தால் பெரும் புகழும் தானாக வந்து சேரும் என்ற உறுதியான முடிவோடு அதை மறந்தும் விட்டிருந்தார்.

அகமதின் பேச்சுக்குப் பிறகு மீண்டும் அந்த ஆருடம் நினைவை ஆக்ரமித்துக் கொண்டது. பெரும் புகழுக்கான நேரம் நெருங்கி விட்டதோ? துயரில் இருக்கும் மக்களுக்காக எடுக்கப் போகும் நடவடிக்கைகள் மூலம் அதை நோக்கிச் செல்கிறாரோ? தைரியமாகச் செயலாற்ற அகமது மூலமாகக் காலம் விடும் அழைப்பை ஏற்றுக் கொள்வதுதான் முறையோ?

திரைச்சீலைக்குப் பின்னால் நிழலாடியது. நுழைந்தான் மிர்ஸா. தூரத்து உறவு. மொகல் குடும்பத்தின் அங்கமாக இருப்பதைப் பெருமையாக நினைப்பவன். இவரை விட முப்பது வயது இளையவன். துடிப்பானவன்.

 “உங்களோடு பேச வேண்டும், மாமன்னா” என நேர் எதிரே வந்து நிற்கவும் நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜாஃபர்.

நேற்று அகமது சொன்னவற்றையே  விரிவாக, வேகமாகச் சொன்னான். அந்த நிமிடமே முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நெருக்கினான். அகமதை ஒதுக்கியது போல் அத்தனை எளிதாக மிர்ஸாவை ஒதுக்கி விட்டு எழுந்து செல்ல முடியாது. சிந்திக்கக் கூட விடாத அவனது படபடத்தப் பேச்சு மிரட்சியாக இருந்தது. திடுமென இவர் முகத்துக்கு முன்னே குனிந்த மிர்ஸா, கேட்டான்: “சொல்லி விடலாம்தானே மாமன்னா, கலகத்தில் இறங்கியிருக்கும் கிழக்கிந்திய கம்பெனி சிப்பாய்களுக்குத் தலைமை ஏற்க, உங்களுக்கு முழுச் சம்மதமென்று?”

சமீபமாகச் சிப்பாய்கள் எழுப்பி வரும் எதிர்ப்புக் குரல் ஜாஃபர் அறிந்ததுதான். ஆரம்பத்தில் ரொம்பப் பெருமையாகவே பிரிட்டிஷ்காரர்களிடம் போய் வேலைக்குச் சேர்ந்தார்கள் சிப்பாய்கள். துப்பாக்கிகளின் பலம் பிரமிப்பைத் தந்தது. சீருடை சிலிர்ப்பைத் தந்தது. அவர்கள் அள்ளித் தந்த சம்பளம் கண்களை மறைத்தது. கம்பெனியர் கை காட்டியவர்களையெல்லாம் தம் மக்களாயிற்றே என்ற குற்ற உணர்வே இல்லாமல் போட்டுத் தள்ளினார்கள். எல்லாம் கொஞ்ச காலம்தான். இப்போது நிலைமை வேறு மாதிரியாகி விட்டது.

ஆரம்பத்தில், கைது செய்யப்பட்டக் குறுநில மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் பழக்க வழக்கங்களையும் உடை உணவு கலாச்சாரங்களையும் கேலி செய்து மகிழ்ந்த பிரிட்டிஷ்காரகளுடன் தாங்களும் சேர்ந்துதான் சிரித்தார்கள். இது ஒன்றும் புதிதில்லையே. மன்னர்களும் முன்னால் செய்ததுதானே. சிறைப் பிடித்த மற்ற நாட்டு அரசரை, அவர் மக்களை, பெண்களை அவமதித்தவர்கள்தானே. இப்போது அதையே பிரிட்டிஷ்காரர்கள் செய்வதில் தப்பென்ன? மன்னர்களுக்கு ‘வேண்டும் இந்தப் பாடம்’ என உவகை பொங்கத் துணை போனார்கள்.

போகப் போக கிழக்கிந்திய கம்பெனியரின் அட்டகாசம் எல்லை மீற ஆரம்பித்து விட்டது.  பொது இடங்களில் பொதுமக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தபோது வலிக்க ஆரம்பித்தது. அப்படி இப்படியெனக் கடைசியில் மத நம்பிக்கைகளை காலில் போட்டு மிதிக்க ஆரம்பித்த போது பொறுமை இழந்தார்கள்.  குறிப்பாக இந்துக்கள் புனிதமாய் நினைத்த விலங்கின் கொழுப்பையும், இஸ்லாமிய தவிர்க்க விரும்பும் விலங்கின் கொழுப்பையும், சிப்பாய்கள் வாயில் வைத்து இழுக்க வேண்டிய துப்பாக்கி ரவையின் குப்பிகளில் பிரிட்டிஷ்காரர்கள் பயன்படுத்திய போது கொந்தளித்தப் போனார்கள். ‘வீராதி வீரரென மார் தட்டிய மன்னரையெல்லாம் துவம்சம் செய்து விட்டோம். பொடியர்கள்.. என்ன செய்து விட முடியும் உங்களால்’ எக்காளமாய்க் கேட்கும் பிரிட்டிஷ்காரார்கள் மேல் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் சிப்பாய்கள் இப்போது.

விளக்கமாகச் சொல்லி முடித்த மிர்ஸா, இவர் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறான். கண்களை மூடிச் சாய்ந்து விட்டார் ஜாஃபர் தன் வெள்ளி நாற்காலியில். ஓரிரு நிமிடம் பார்த்து விட்டு மிர்ஸா வெளியேறிடுவான் என்றொரு நப்பாசை.  அவனோ எரிச்சல் அடைந்து இவர் கையைப் பிடித்து அசைத்து “மன்னாதி மன்னா, உங்களைத் தூங்க வைக்கக் கதையா சொன்னேன்? இரும்பு சூடாக இருக்கும்போது ஓங்கி அடிப்பதுதான் புத்திசாலித்தனம். இந்த சிப்பாய்களைப் பயன்படுத்திதான் நாமும் நம் சாம்ராஜ்ஜியத்தை மீட்க முடியும்”என்றான்.

பதில் சொல்லாமல் கூரையைப் பார்த்தார் ஜாஃபர்.

(தொடரும்) 


 நன்றி தினகரன் வசந்தம்!
***

6 கருத்துகள்:

  1. ராம்பாபா சொன்னது போல் நீண்ட ஆயுள் இருக்கிறது பெரும்புகழ!

    சிப்பாய் கலகத்தால் நன்மை ஏற்படப் போகிறதே அதில் வந்து விடுமா/ ஆவலாக இருக்கிறேன் தொடர்கிறேன்.
    நன்றாக கதையை கொண்டு போகிறது கதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. புத்தகத்திலேயே படித்ததாலும், அந்தப் புத்தகங்கள் என்னிடத்திலே இருப்பதாலும்....! :)))))

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா. அடுத்த வாரத்தில் மற்ற பாகங்களையும் பதிந்திடுவேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin