புதன், 30 ஏப்ரல், 2025

பிர்லா மந்திர் - ஹைதராபாத் (2)

 பிர்லா மந்திர்:

#1

பிர்லா மந்திர் 280 அடி உயர நௌபத் பஹாட் எனும் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. சட்ட மன்றக் கட்டிடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த குன்று சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1976 -ஆம் ஆண்டு பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோயில். கட்டி முடிக்க சுமார் 10 ஆண்டு காலம் ஆகியுள்ளது. ராமகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுவாமி ரங்கநாதானந்தாவால் திறந்து வைக்கப்பட்டது.

#2

முழுவதும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலுக்காக சுமார் 2000 டன் (மார்பிள்) பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பித்தளையால் ஆன கொடிக் கம்பம்  42 அடி வரை உயர்ந்து நிற்கிறது.

அலைபேசிகளுக்கு அனுமதி இல்லை. காலணிகளையும், அலைபேசிகளையும் பாதுகாக்கத் தனித்தனியாக வசதி செய்யப்பட்டுள்ளது. 

#3

சுமார் 200 படிகள் கொண்ட கோயில். ஆங்காங்கே ஓரிரு நிமிடங்கள் ஓய்வெடுத்து மேலே வரை சென்று விட்டேன்:). குன்றின் மேல் ஏறிச் செல்லுகையில் பிள்ளையார், சிவன், சரஸ்வதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகியோரின் சன்னதிகளை தரிசித்தபடியே வரலாம். உச்சி தளத்தை அடைவதற்கு முந்தைய தளத்தில்  சீரடி சாய்பாபாவுக்கு பரந்த பெரிய சன்னதி உள்ளது. 

குன்றின் உச்சியில் உள்ள சன்னதியில் மூலவராக பதினொரு அடி உயர வெங்கடேஸ்வர பெருமாள்  அருள்பாலிக்கிறார். திருப்பதி பெருமாளை பார்க்கிற அனுபவம் கிட்டுகிறது.

சன்னதியைச் சுற்றியுள்ள இடத்தில் மக்கள் அமர்ந்து குன்றின் உச்சியில் சிலுசிலு என வீசும் காற்றையும் தெய்வீக சூழலையும் அனுபவிக்கிறார்கள். கோயிலில் பராம்பரியமான பெரிய மணிகள் கிடையாது. பக்தர்கள் தியானம் செய்யும் சூழலை உருவாக்கித் தரவேண்டும் என்கிற, சுவாமி ரங்கநாதானந்தாவின் விருப்பத்திற்கு ஏற்ப மணிகள் அமைக்கப்படவில்லை.

அவ்வளவு உயரத்திலிருந்து ஹைதராபாத் நகரைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. 

உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும் தரிசனம் செய்ய வருகிறார்கள்.

#4 

#5

பிர்லா அறக்கட்டளை இது போன்ற அமைப்பில் இந்தியாவின் பல இடங்களில் கோயில்களை அமைத்துள்ளது. அதில் கொல்கத்தா கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு 2016_ஆம் ஆண்டு கிடைத்தது. படங்களுடன் பகிர்வு இங்கே: பிர்லா மந்திர் - கொல்கத்தா https://tamilamudam.blogspot.com/2018/10/5.html

***

(#ஹைதராபாத் பயணப் பதிவுகள்.. தொடரும்..)

10 கருத்துகள்:

  1. மொபைலுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள்.  இங்கிருக்கும் படங்கள் வெளியில் எடுக்கப்பட்டவையா? 

    சிறப்பான பதிவு.  அந்த உயரத்தில் அழகான சூழலில் மனதுக்குள் கிடைக்கும் இதம் தனிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மொபைலை லாக்கரில் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பழைய பதிவையும் சென்று பார்த்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி:). கொல்கத்தாவிலும் படங்கள் எடுக்க அனுமதி கிடையாது. ஆனால் மொபைல் வைத்துக் கொள்ள தடை எதுவும் இருக்கவில்லை. கூட்டமும் குறைவு.

      நீக்கு
  3. குன்றின் உச்சியில் அமைந்துள்ள பிர்லா மந்திர் அழகு. இரவில் போனீர்களா?
    இருட்டும் அழகு, மணிகூண்டும் அழகு. சிலு சிலு காற்றை அனுபவத்தி தியானம் செய்தார்களா மக்கள்.

    அமைதியான இடம் என்றால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், இரவில் செல்வதும் ஒரு அழகிய அனுபவம். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. பெயரில்லா8 மே, 2025 அன்று 11:22 AM

    பிர்லா மந்திரின் இரவுக் காட்சிகள் ரொம்ப அழகா இருக்கு. வெளியில் இருந்து எடுத்துவிட்டு அப்புறம் அங்கு ஒப்படைத்துவிட்டுப் போனீங்களோ? நல்ல அனுபவமாக இருந்திருக்கும். உச்சியில் ஏறிய போது காற்று சுகமான அனுபவம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாக்கரில் ஒப்படைக்க யோசனையாக இருந்ததால், மகனிடம் ஒப்படைத்து விட்டு முதலில் நாங்கள் சென்று வந்தோம். பிறகு மகன் தரிசிக்க சென்ற போது காத்திருந்த வேளையில் எடுத்த படங்கள் :).

      நன்றி கீதா.

      நீக்கு
  5. பெயரில்லா8 மே, 2025 அன்று 11:26 AM

    கொல்கத்தா பிர்லா மந்திரையும் அச்சுட்டிக்குச் சென்று பார்த்தேன். அங்கும் படங்கள் ரொம்ப அழகா இருக்கு அந்த கலர் டோன் ரொம்பப் பிடித்தது. விவரங்களும் வாசித்துக் கொண்டேன். ஆமாம் பிர்லா குடும்பத்தினர் பல இடங்களிலும் கட்டியிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொல்கத்தா மந்திர் இந்த அளவுக்கு பெரியது அல்ல என்றாலும் கச்சிதமான வடிவமைப்பில் நன்றாக இருந்தது. நன்றி கீதா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin