திங்கள், 13 அக்டோபர், 2008

கரையைத் தேடி...




ழைப்பிதழை வெகுநேரம் வெறித்துப் பார்த்திருந்த முரளி ஒரு முடிவுக்கு வந்தான்.

'உயிரை விட்டு விட வேண்டும்', உறுதியே எடுத்து விட்டான்.

'வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு தாழ்ந்து விட்டோம்', விரக்தியின் விளிம்பில் வெம்பினான்.

"உன்னை வளர்த்துப் படிக்க வைக்க எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன், அத்தனையும் வேஸ்ட். நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்? உங்கூடப் பிறந்தவங்களப் பாரு படிச்சமா, கையோடு வேலையில சேர்ந்தமான்னு. ச்சே" என்று சினிமாவிலும் சீரியல்களிலும் காட்டப்படும் அப்பாக்கள் கற்பனை அல்ல என நிரூபிக்கிற அப்பா.

"அதச் சொல்லுங்க. உங்களுக்கு மட்டுமா வச்சான் செலவு. அந்த கோர்ஸ் பண்றேன் இந்தக் கோர்ஸ் பண்றேன்னு எம் பணத்தையும் ஏப்பம் போட்டதுதான் மிச்சம். அய்யா எந்த கோச்சிலும் ஏறின பாடில்லை," என்று அடிக்கடி குத்திப் பேசும் அண்ணன்.

"வருமானத்துக்கு வக்கில்லாத பயதான் மானமில்லாம முதல்ல வக்கணையா கொட்டிக்கிறான்," சம்பாதிக்கும் திமிரில் தேளாகக் கொட்டுகின்ற தம்பி.

அவனோடு பேசுவதையே குறைத்து விட்ட நோயாளி அம்மா.

"வேலை வெட்டி இல்லாதவன்" என்று அலட்சியப் பார்வை பார்க்கும் சமுதாயம்.

எல்லோருக்கும் மேலாக உமா. அவளுக்கு அடுத்த வாரம் திருமணமாம். அதைத்தான் அவனால் தாங்கவே முடியவில்லை.

வனும் உமாவும் கம்ப்யூட்டர் கோச்சிங் வகுப்பொன்றில் அறிமுகமாகி நல்ல நண்பர்களும் ஆனார்கள். இவன் அந்த நட்பைக் காதலாக்கிப் பார்த்த போதும், அவள் அதை நட்பாகவே பாவிக்கத்தான் விரும்பினாள்.. ஆனால், இவனது தீவிரத்தைப் பார்த்து மனம் இளகி தந்தை முன் கொண்டு நிறுத்தினாள்.. அந்த நல்ல மனிதரோ ஒரு வேலையோடு வந்தால் உனக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கிறேன். இல்லையெனில் தான் பார்க்கும் வரனையே மணந்து கொள்வாள் என்று வாக்களித்து ஒரு வருட அவகாசமும் கொடுத்திருந்தார்..

உமா கொடுத்து வைத்தவள். கோச்சிங் முடிந்த கையுடனே வங்கியொன்றில் வேலையும் கிடைத்து விட்டிருந்தது. இவன் நேரம் எந்த வேலையும் சரியாக அமைய வில்லை. வருடமும் ஒன்றல்ல இரண்டே ஓடிட இப்போது வேறு வரன் பார்த்து விட்டார் அவளது தந்தை. இவன் வேலைக்கு முயற்சி செய்யாமலா இருந்தான்? எத்தனை இன்டர்வியூக்கள்? எத்தனை தோல்விகள்? அதுவும் கடந்த ஒரு வருடமாக உலகப் பொருளாதாரச் சரிவில் எங்கு பார்த்தாலும் ஆட்குறைப்பு வேறு. இந்தச் சமயத்தில் வேலையில் எந்த முன் அனுபவமும் இல்லாத தன்னை எவர் சீண்டுவர் என்கிற தன்னிரக்கம் வேறு தாறுமாறாகச் சுரந்தபடி இருக்கையில்தான் இப்படியொரு இடி. ஏற்கனவே அவமானத்தைச் சுமந்தபடி ஊசலாடிக் கொண்டிருந்த மனது இப்போது அடியோடு அறுந்து விட்டதைப் போல உணர்ந்தான்.

'வேலையில்லாத வெட்டிப் பயல் என வீட்டுக்கு வேண்டாதவனாக இருந்தேன். இப்போது விரும்பியவளுக்கும் வேண்டாதவனாகி விட்டேன். வேலையும் கிடைக்காமல் உமாவும் கிடைக்காமல் எதற்காக யாருக்காக நான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்துக்கே வர வைத்து விட்டது, வாசல் வராந்தாவில் அன்று வந்து விழுந்த உமாவின் திருமண அழைப்பிதழ்.

ம்மாவுக்கு டாக்டர் தந்திருந்த தூக்க மாத்திரைக்கான ப்ரிஸ்கிரிப்ஷனை எடுத்துக் கொண்டான். தூங்கிக் கொண்டிருந்த அம்மாவிடம் இப்போது பணம் கேட்டால் கூடவே ஆயிரம் கேள்விகள் கேட்பாள். ஏனென்றால் அப்பாவுக்கு சரியான காரணம் சொல்ல வேண்டுமாம்.. அவளுடன் வாக்குவாதம் செய்யும் மனநிலையில் அவன் இல்லை. அலமாரியின் மேல் கை விட்டு துழாவியதில் சாவி கிடைத்தது. சத்தம் வராமல் திறந்தான்.. அவன் அதிர்ஷ்டம் இழுப்பறை வாயிலேயே அதன் சாவி. இழுத்தான். ஏழுமலையான் படம் கொண்ட அதரப் பழைய சாக்லேட் பெட்டியில் அம்மா வைத்திருந்த நோட்டுத்தாள் சில்லறைகளை அப்படியே எடுத்து பையில் திணித்துக் கொண்டான்.

வீதியில் இறங்கிய போது ஒரே ஒரு முறை உமாவைக் கடைசியாக அவள் வேலை பார்க்கும் வங்கியில் சென்று சந்தித்து வாழ்த்தி விடும் எண்ணம் வந்தது. 'ஏன் அவள் நிம்மதியை சந்தோஷத்தைக் கெடுக்கப் பார்க்கிறாய்' மனசாட்சி இடித்தது.

'நாளை என் மரணம் தெரிய வருகையில் அந்தக் குற்ற உணர்விலே வாழ்நாளுக்கும் வருந்தட்டுமே. கடைசி கணத்திலும் வாழ்த்த வந்த என் பெருந்தன்மையை நினைத்து உருகட்டுமே'. இன்னோரு பக்கம் சாத்தான் வேதம் ஓதியது. சாத்தான் ஜெயிக்க பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான்.

பேருந்துக்காகக் காத்திருந்த போது, "என்ன சார், எங்கே கிளம்பிட்டீங்க?" என்ற குரல் கேட்டுத் திரும்பினான். அவனுக்கு 'சார்' என்று மரியாதை கொடுக்கும் ஒரே ஜீவன் காயத்ரியாகத்தான் இருக்க முடியும். பக்கத்து வீட்டுப் பெண். பிரபல மருத்துவமனையொன்றில் நர்ஸாக இருக்கிறாள்.

"சும்மாதான், இப்படியே இந்திரா நகர் வரை போகலாம்னு.."

"அதென்ன 'சும்மாதான்'? நம்ம ஜனங்கதான் சார், இப்படி எதற்கெடுத்தாலும் சொல்லப் படிச்சிருக்காங்க ஒரு வார்த்தை 'சும்மா'ன்னு" என்று சிரித்தவளின் முகம், அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சுமதியைப் பார்த்ததும் பிரகாசமானது.

"ஹாய் சுமதி! எப்ப வந்தே? நேற்று கூட உன் வீடு பூட்டியிருந்ததே? ரெண்டு நாளா உன் மொபைலுக்கு முயற்சித்தேன் எப்ப வருவேன்னு தெரிஞ்சுக்க. ஸ்விட்ச்ட் ஆஃப்னே வந்தது"

"இன்னிக்கு காலையில்தான் வந்தோம். ரோமிங்ல இருந்ததால் செல்லை அணைத்து வைத்திருந்தேன். என் ஆஃபிசுக்கு லீவு எக்ஸ்டெண்ட் பண்ணக் கேட்டு அங்கிருந்தே மெயில் கூட அனுப்பி விட்டிருந்தேன்."

"ட்ரிப் எப்படி? மாமா ஊரிலே ஒரு வாரமும் குஷாலாய் கழிஞ்சுதுன்னு சொல்லு!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே"

அவள் குரலில் இருந்த உற்சாகக் குறைவைக் கவனிக்கத் தவறவில்லை காயத்ரி.

"ஏன் என்ன விஷயம்?"

"அதையேன் கேட்கிறே? ஊரிலிருந்து கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்ன எங்க மாமா வீட்டுக்கு எதிர்த்த வீட்டுப் பையன் தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டான். அந்தப் பையனுக்கு பதினெட்டே வயசுதான் பாவம்! 'நீ வேற விதமாய் போயிருந்தா கூட விதின்னு மனசு ஏத்திருக்கும். ஆனா நாங்கெல்லாம் வேண்டாம்னு உதறிட்டுப் போயிட்டியே? எப்படிப்பா மனசு வந்தது'ன்னு அவன் குடும்பம் கதறின கதறல் இருக்கே, அப்பப்பா..! சரியாப் படிக்கலேன்னு அப்பா ஓவரா திட்டிட்டாரு போலிருக்கு. மனுஷன் குற்ற உணர்விலே ரொம்பவே உடைஞ்சு போயிட்டார்."

'நீ மட்டும் பிறக்காமலே இருந்திருந்தா எனக்கு எவ்வளவு மிச்சமாயிருக்கும்?' அருகில் நின்றிருந்த முரளிக்கு சமீப காலமாய் தன் அப்பா அடிக்கடி கூறும் வார்த்தைகள் மனதினுள் வந்து போக 'வேண்டியதுதான் அந்த அப்பனுக்கு' என்ற காட்டமாக நினைத்துக் கொண்டான்.

"எதற்குத் திட்டுகிறார்? அப்படியாவது பையனுக்கு ரோஷம் வந்து நல்லாப் படிக்க மாட்டானாங்கிற ஆசையில திட்டியிருப்பார். அவர் செஞ்சது சரின்னு சொல்ல வரலை. நீ சொல்ற மாதிரி ஓவர்தான். இருந்தாலும் எந்த அப்பாவும் தன் பையன் ஒழிஞ்சு போகட்டும்னு மனசார நினைக்கவே மாட்டார். போறவன் போயிட்டான். இருக்கிறவங்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் பார்த்தியா? அவன் மேல பாவப்படுறியே?"

சுரீரென்று வந்த காயத்ரியின் பதிலில் இவன் திகைக்க ஏற்பட்ட அதே வியப்பில் சுமதி கேட்டே விட்டாள்: "என்ன மனசுடி உனக்கு? அவன் முடிவு உன்னைப் பாதிக்கவேயில்லையா?"

உஷ்ணமேறியது காயத்திரியின் குரலில். "பாதிக்கிறதனாலேதான் சொல்றேன், அவன் மேலே பாவமாயில்லேன்னு. பரிதாபப் படுறேன் அவன் குடும்பத்த நினைச்சு. வருத்தப்படுறேன் அவன் முட்டாள் தனத்தையும் கோழைத் தனத்தையும் நினைச்சு. ஆனா என்னால ஏனோ அவன் மேல இரக்கப் பட முடியல. வழி தெரியாம தடுமாறுகிற நம்ம இளைய சமுதாயத்தை நினைச்சு கவலைப் படத்தான் தோணுது. ரிசல்ட் சமயத்திலே எத்தனை ஸ்டூடன்ட்ஸ் தற்கொலை பண்ணிக்கிறாங்க பாரு! எதிர்காலத்தை எதிர் கொள்ளும் துணிச்சல் இல்லாத இவங்க கையில்தான் நாட்டின் எதிர்காலம் இருக்குன்னு நாம நம்பிட்டிருக்கோம்."

"ஈஸி காயத்ரி. ரொம்ப உணர்ச்சிவசப்படுறியே?"

"இல்லப்பா! ரொம்ப நாளாகவே எம் மனசை அரிச்சிட்டிருக்கும் விஷயம் இது. 'காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை! இளம்பெண் தற்கொலை'ன்னு எத்தனை ந்யூஸ் படிக்கிறே? இவங்கெல்லாம் காதலும், கலியாணமும் மட்டுமேதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அது வாழ்க்கையிலே ஒரு அம்சம்தான். இட்ஸ் ஒன்லி எ பார்ட் ஆஃப் அவர் லைஃப். விரும்பினவங்களை அடையறது ஒண்ணுதான் வாழ்க்கையோட லட்சியம்னு தப்புக் கணக்குப் போட்டு வாழறாங்களே! வாழ்க்கையிலே இதையெல்லாம் தாண்டி உயர்ந்த லட்சியங்கள் எவ்வளவு இருக்கு? நாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்ற என்னவெல்லாம் சாதிக்கணும்னு ஆக்க பூர்வமா சிந்திக்க மறந்திட்டு இந்த இளைய சமுதாயம் 'காதல் காதல்'னும், 'காதல் இல்லையேல் சாதல்'னும் இருப்பதைப் பார்த்தால் மனசு பதறது. 'சாதல்'னா 'சாகிறது'ன்னு நினைச்சுட்டாங்க!"

காயத்ரி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன் கன்னத்தில் விழுந்த அறைகளாக முரளி உணர, அவளோ யாரையும் சட்டை பண்ணாமல் சீரியஸாகப் பேச்சைத் தொடந்தாள்.

"போன வாரம் கூட எங்க ஹாஸ்பிடல்லே போஸ்மார்ட்டத்துக்கு ஒரு கேஸ் வந்ததுப்பா. பி.காம் படிச்சவனாம். வேலை தேடித் தேடி அலுத்துப் போய் தற்கொலை பண்ணிக்கிட்டானாம். இப்படி வெள்ளைத் துணியப் போட்டு மூடற நிலைக்குப் போனாலும் பரவாயில்லை. வெள்ளைச் சட்டை வேலை... அதாம்பா வொயிட் காலர் ஜாப் கிடைச்சாதான் பார்க்கணும்ங்கிற போலி கவுரவத்திலே ஒரேடியாப் போய்ச் சேர்ந்துட்டான்."

"அவன் ஒரு விரக்தியில அப்படி பண்ணியிருக்கலாமில்லே?"

"அந்த விரக்தியையே வெற்றியா மாற்றிக் காட்டறது நம்ம கையிலேதானே இருக்கு. முதல்லே தன்னம்பிக்கை இருக்கணும். 'நாமா தேடிப் போறதுதான் வேலைன்னு இல்லே. தேர்ந்து எடுத்துக்கிறதுக்கும் எத்தனையோ வேலை இருக்கு. எங்க கான்டீன் சர்வர் ஒரு போஸ்ட்க்ராஜூவேட். அவ்வளவு ஏன்? உங்க பக்கத்து வீட்டில இருக்கிற வேணு டிகிரிய முடிச்சிட்டு முதல்ல ஆட்டோதான் ஓட்ட ஆரம்பிச்சார். இப்பப் பாரு நாலு ஆட்டோ ரெண்டு டாக்ஸிக்குச் சொந்தக்காரராயிட்டார். தேடுறது கிடைக்கிற வரைக்கும் போலி கவுரவம்ங்கிற சட்டையைக் கழட்டிட்டு ஏதோ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாமே?"

"இந்த மாதிரி கோணங்களிலே எல்லாம் நான் யோசிக்கவேயில்லை காயத்ரி," என்றாள் சுமதி வியப்பு தொனிக்கும் குரலில்.

'நானும்தான்' என்று நினைத்துக் கொண்டான் முரளி. அவனுக்குள் ஒரு புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது.

"சரி இருக்கட்டும். இவங்களை விடு. புகுந்த வீட்டிலயோ வேலைக்குப் போகிற இடத்திலயோ ஏற்படுகிற ஏதேதோ பிரச்னைகளால உயிரை மாய்ச்சுக்கிற பெண்கள்?" சுமதியிடமிருந்து அடுத்தக் கேள்வி புறப்பட்டது.

"ம்ம்ம்... இல்லப்பா சூழ்நிலைக் கைதிகளாயிட்டாலும் கூட அவங்களும் முட்டாள்கள் கோழைகள்னுதான் சொல்லத் தோணுது. உலகத்தை விட்டே வெளிநடப்பு செய்யத் துணிஞ்ச பிறகு புக்ககத்தை விட்டு வெளிநடப்பு செய்ய ஏன் தயங்கணும்? சொந்தக் காலிலே வாழ்ந்து காட்ட முடியும்ங்கிற தைரியம் எப்பவும் இருக்கணும். இப்பல்லாம் பொண்ணப் பெத்தவங்க சீர் செனத்திய விட பொண்ணுகளுக்கு முக்கியமா இந்தத் தைரியத்தை தந்து அனுப்புறதும் ஆம்பள பசங்களுக்கு குறைவில்லாம அவங்களையும் படிக்க வைக்கறதும் பாராட்டுக்குரியது. ஒரு பொண்ணு வீட்டிலயும் சரி வேலைக்குப் போகிற இடத்திலயும் சரி, கோழையா பயந்து சாகிறத விட வாழ்ந்து அவளுக்கு அநியாயம் பண்றவங்கள இந்த சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாமில்லையா?"

அதுவரை பேசாமலிருந்த முரளிம், "உங்களை ஒண்ணு கேட்கலாமா காயத்ரி" என்றான். 'தாராளமாக' என்பது போலப் பார்த்தாள் காயத்ரி.

"தற்கொலை பண்ணிக்கிறதை முட்டாள்தனம்னு சொல்றீங்க.. சரி. ஆனா கோழைத்தனம்னு எப்படிச் சொல்ல முடியும்? சாகிறதுக்கு ஒரு அசாத்திய தைரியம், துணிச்சல் இருக்கணுமில்லையா?"

காயத்ரியின் முகம் சிவந்தது.

"பிரச்னைகளை விட்டு ஓடறது துணிச்சலா? தைரியமா எதிர் கொண்டு நிக்கறது துணிச்சலா? தற்கொலை ஒரு ஈஸி எஸ்கேப்பிஸம். பிரச்னைகளுக்குத் தீர்வு தற்கொலைதான்னா எல்லோருமே சாக வேண்டியதுதான்! யாருக்குதான் பிரச்னையில்லை?"

"ஒத்துக்கறேன். பிரச்னை ஒரு பொதுச் சொத்துதான். ஆனா அவங்க துவண்டு போறது ஓட ஓட விரட்டும் தாங்க முடியாத தோல்விகளாலே..."

"முரளி சார், தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு..."

"இருங்க இருங்க. முதல் சில தோல்விகளிலே வேணுமானா அப்படி நினைக்கலாம் நம்பலாம். ஆனா வெற்றிப் படியே கண்ணுக்குத் தெரியாம அடுக்கடுக்கா தோல்விகளே தொடரும் போது..?"

"வெற்றி கிடைக்குமோ என்னமோ? அதனாலே இப்பவே செத்திடலாம்னு முடிவு பண்ணிடணுமா? முயற்சி வேணுங்க. நடுக்கடலிலே கப்பலே கவிழ்ந்திட்ட மாதிரி பெரிய கஷ்டம்னே வச்சுக்குவோம். கரையையே பார்க்க முடியலை. அப்போ 'நாம நீந்தி நீந்திக் களைச்சுப் போய் அப்படியும் கரையே தெரியாமப் போயிட்டா, கரை சேர முடியாமப் போயிட்டா என்ன பண்றது... அத்தனை கஷ்டப்பட்டு சாகிறதை விட முயற்சியே பண்ணாம இங்கேயே இப்பவே மூழ்கிச் செத்திடுவோம்'னு முடிவெடுப்பீங்களா? இல்ல, கிடைக்கிற ஏதோ ஒரு கட்டையை ஆதாரமா பிடிச்சுக்கிட்டு எதிர்நீச்சல் போட்டு, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கரையைத் தேடிப் போவீங்களா? எதுங்க விவேகம்?"

பொட்டில் அறைந்தது போலப் புறப்பட்ட அவளது கேள்வியிலே பொதிந்திருந்த பொருளைப் புரிந்து கொண்டான் முரளி. மனதில் இருந்த அத்தனை பாரங்களையும் காயத்ரி என்ற காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. கூடவே உமாவின் நினைவுகளையும். நன்றியுடன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

"நான் சொல்றதெல்லாம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?"

'இல்லை' என்பது போலத் தலையாட்டியவன், என்ன பதில் சொல்வதென யோசிக்கையிலேயே அவனுக்குச் சிரமம் வைக்காமல் பேருந்து வந்து நின்றது. ஏறுவதற்கு எல்லோரும் எத்தனிக்கையில், இவன் மட்டும் அம்மா பார்க்கும் முன் பணத்தைத் திரும்ப வைக்க வேண்டுமே என்ற அவசரத்துடன் திரும்பி நடக்கலானான்.

"இந்திரா நகர் போகணும்னீங்களே? இப்ப எங்க போறீங்க..?" அவசரத்துடன் கூவினாள் காயத்ரி.

"கரையைத் தேடி..." என்றபடி இவன் கை அசைக்க, அவன் சொன்னது புரியாத முக பாவத்துடனே காயத்ரி பஸ்ஸில் ஏறிக் கொள்ள, அது வேகமாக நகர்ந்தது.

*** *** ***

*மார்ச் 1988 "நண்பர் வட்டம்" இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை காலத்திற்கேற்ற சிறு மாற்றங்களுடன்.


*இங்கு வலையேற்றிய பின்
அக்டோபர் 16, 2008 திண்ணை இணைய இதழிலும் அக்டோபர் 17,2008 கீற்று இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]

*26 மார்ச் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும்:









37 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கைக்கு உரமளிக்கு வார்த்தைகள்...

    பாராட்டுக்கள். மிக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. புதுகைத் தென்றல் said...
    //me the firstu//

    ஆமாம் தென்றல் நீங்கள்தான் முதல் வரவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புதுகைத் தென்றல் said...
    //தன்னம்பிக்கைக்கு உரமளிக்கு வார்த்தைகள்...//

    நான் சொல்ல வந்ததை மிகச் சரியாக புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தற்கொலைக்கு எத்தனையோ மன அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். அவற்றை நியாயப் படுத்துவதையெல்லாம் தாண்டி வாழ்க்கையைப் பாஸிட்டிவ்வாகப் பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. ஆனால் இன்று வரை இம்மாதிரியான செய்திகளை தினசரிகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்:(!

    //பாராட்டுக்கள். மிக ரசித்தேன்.//

    பாராட்டுக்கும், சரியான பாயின்டை பிடித்து ரசித்ததற்கும் மறுபடி நன்றி!

    பதிலளிநீக்கு
  4. //உலகத்தை விட்டே வெளிநடப்பு செய்யத் துணிஞ்ச பிறகு புக்ககத்தை விட்டு வெளிநடப்பு செய்ய ஏன் தயங்கணும்?//

    சரிதான்... இப்ப கூட எங்க ஊர்லயே இப்படி ஒண்ணு நடந்தது :( சமயங்கள்ல கரை இருக்குங்கிற நம்பிக்கையே அத்துப் போயிடறப்போ இப்படி ஆயிடுது. என்ன செய்யலாம்? சரியான வழிகாட்டுதலும் நண்பர்களும் இல்லைன்னா கரை தெரியாம அவதிப்படறவங்க பாடு கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  5. கவிநயா said...
    //சரிதான்... இப்ப கூட எங்க ஊர்லயே இப்படி ஒண்ணு நடந்தது
    :(//

    வருத்தமான விஷயம் கவிநயா. கடந்த மாதம் எனக்கு மிகவும் பரிச்சயமான குடும்பத்தில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாள். அவளது குடும்பத்தினர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.

    //சமயங்கள்ல கரை இருக்குங்கிற நம்பிக்கையே அத்துப் போயிடறப்போ இப்படி ஆயிடுது. என்ன செய்யலாம்?//

    அத்துப் போயிடறதா அல்லது அதைப் பற்றிய சிந்தனை வரும் முன்னரே வாழ்வை முடித்து விடுகின்றனரா என்பதுவும் புரியாததாக இருக்கிறது.

    //சரியான வழிகாட்டுதலும் நண்பர்களும் இல்லைன்னா கரை தெரியாம அவதிப்படறவங்க பாடு கஷ்டம்தான்.//

    ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள். இவர்களுக்குத் தேவை வழிகாட்டுதல்தான்.

    பதிலளிநீக்கு
  6. முரளிக்கு கரையை காட்டிய காயத்ரி போல்...தற்கொலை மனநிலையில் இருப்பவர்க்கெல்லாம் ஒரு காயத்ரி கிடைத்தால்.....? கிடைக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  7. தற்கொலை என்பது எவ்வளவு தவறான முடிவு என்று சொல்லும் கதை. தன்னம்பிக்கை அவசியம் என்பதெல்லாம் கிளிஷே வார்த்தைகள் போலத் தோன்றினாலும், ஆழமான உண்மையும் அதுதான்.

    //உலகத்தை விட்டே வெளிநடப்பு செய்யத் துணிஞ்ச பிறகு புக்ககத்தை விட்டு வெளிநடப்பு செய்ய ஏன் தயங்கணும்? // பிரமாதமான வரிகள். நல்ல வைட்டமின் கதை. வாழ்த்துக்கள்.

    ஆமாம், 1988 ல இவ்வளவு எழுதிய நீங்கள், உங்கள் பரந்த வாசிப்பிற்கும், கூடிய அனுபவங்களுக்கும் இன்னும் நிறைய இப்போதும் எழுதலாமே!

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  8. நானானி said...
    //முரளிக்கு கரையை காட்டிய காயத்ரி போல்...தற்கொலை மனநிலையில் இருப்பவர்க்கெல்லாம் ஒரு காயத்ரி கிடைத்தால்.....? கிடைக்க வேண்டும்!//

    வாருங்கள் நானானி, திருவார்த்தை சொல்லியிருக்கிறீர்கள். முரளிக்கு காயத்திரியின் வார்த்தைகள் மந்திரமாக ஒலித்து மனதை மாற்றியது போல தற்கொலை மனநிலைக்குத் தள்ளப் படுபவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டல் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  9. அனுஜன்யா said...
    //தன்னம்பிக்கை அவசியம் என்பதெல்லாம் கிளிஷே வார்த்தைகள் போலத் தோன்றினாலும், ஆழமான உண்மையும் அதுதான்.//

    ஆமாம் இதுதான் நான் சொல்ல வந்த கருத்தும்.

    //நல்ல வைட்டமின் கதை. வாழ்த்துக்கள்.//

    நன்றி. இது வைட்டமினாகப் பயன்பட வேண்டுமென்பதே எனது நோக்கமும்.

    //ஆமாம், 1988 ல இவ்வளவு எழுதிய நீங்கள், உங்கள் பரந்த வாசிப்பிற்கும், கூடிய அனுபவங்களுக்கும் இன்னும் நிறைய இப்போதும் எழுதலாமே!//

    வைட்டமின் கதைக்குப் பரிசாக எனக்கு நீங்கள் வழங்கியிருப்பது வைட்டமின் வார்த்தைகள். கண்டிப்பாக இவற்றை மனதில் நிறுத்தி முயற்சிப்பேன் அனுஜன்யா.

    பதிலளிநீக்கு
  10. அக்கா! ஊருக்கு போய்ட்டு வந்ததும், தன்னம்பிக்கைகாக அழகா ஒரு கதையைப் போட்டு அசத்திட்டீங்க... :)
    நானும் 1997 ல் ஒரு வருடம் போல் முரளியின் மனநிலையில் பாதிக்கப்பட்டு அலைந்த காலம் உண்டு......:)
    நல்ல கதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. தமிழ் பிரியன் said...
    //அக்கா! ஊருக்கு போய்ட்டு வந்ததும், தன்னம்பிக்கைகாக அழகா ஒரு கதையைப் போட்டு அசத்திட்டீங்க... :)//

    நன்றி தமிழ் பிரியன்.

    //நானும் 1997 ல் ஒரு வருடம் போல் முரளியின் மனநிலையில் பாதிக்கப்பட்டு அலைந்த காலம் உண்டு......:)//

    உங்களது சில பதிவுகளில் பலரின் பின்னூட்டங்களை வைத்து ஓரளவு அறிவேன். கரை சேர்ந்து நீங்கள் பிறருக்குக் கற்பித்திருக்கும் பாடம் போற்றத் தக்கது.

    பதிலளிநீக்கு
  12. //வழி தெரியாம தடுமாறுகிற நம்ம இளைய சமுதாயத்தை நினைச்சு கவலைப் படத்தான் தோணுது.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். "யாரு சொல்றத கேக்கறாங்க. அதற்கே உரிய பருவம் என்றாலும், சொல்லுகிறவர்கள் சொல்லும் போது கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் !" கதை நாயகன் முரளி போல.

    "அந்த விரக்தியையே வெற்றியா மாற்றிக் காட்டறது நம்ம கையிலேதானே இருக்கு. முதல்லே தன்னம்பிக்கை இருக்கணும். 'நாமா தேடிப் போறதுதான் வேலைன்னு இல்லே. தேர்ந்து எடுத்துக்கிறதுக்கும் எத்தனையோ வேலை இருக்கு. எங்க கான்டீன் சர்வர் ஒரு போஸ்ட்க்ராஜூவேட். அவ்வளவு ஏன்? உங்க பக்கத்து வீட்டில இருக்கிற வேணு டிகிரிய முடிச்சிட்டு இப்போ ஆட்டோ ஓட்டலையா? தேடுறது கிடைக்கிற வரைக்கும் போலி கவுரவம்ங்கிற சட்டையைக் கழட்டிட்டு ஏதோ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாமே?"//

    சிந்திக்க வைத்த வரிகள். நம்ம ஊர்ல தான் இன்னும் இதே போல, "படிப்புக்கேத்த வேலை கிடைக்கல" என்ற காரணங்கள் எல்லாம். இந்த மனநிலை மாறவேண்டும்.

    கதையின் நடையும், சொல்ல வந்த கருத்தும் அருமையாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கதை. அது முரளிக்கு மெசேஜ் சொல்றதுன்னாலும், எல்லாருக்குமே அதுல நிறைய மெசேஜ் இருக்கு!! நீங்க புத்தகம் ஏதாவது எழுதியிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  14. சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
    //Very nice story.//

    Thank you Sudarmani!

    //I remember this words now,
    S-CCESS WITHOUT U IS NOT POSSIBLE.. //

    You are right,
    UNLESS 'U' PUT IN YOUR EFFORTS SUCCESS IS IMPOSSIBLE.

    பதிலளிநீக்கு
  15. சதங்கா (Sathanga) said...
    //யாரு சொல்றத கேக்கறாங்க. அதற்கே உரிய பருவம் என்றாலும், சொல்லுகிறவர்கள் சொல்லும் போது கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் !" //

    ஆமாம், சொல்லப் படும் விஷயத்தில் இருக்கிற நல்லதை பற்றிக் கொள்ளும் இயல்பு எல்லோரிடமும் இருப்பதில்லை பருவம் போன்ற பல காரணங்களால்.

    //சிந்திக்க வைத்த வரிகள். நம்ம ஊர்ல தான் இன்னும் இதே போல, "படிப்புக்கேத்த வேலை கிடைக்கல" என்ற காரணங்கள் எல்லாம். இந்த மனநிலை மாறவேண்டும்.//

    உண்மைதான் சதங்கா. இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையில் இந்த மனோபாவம் அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் இப்போதைய காலக் கட்டத்தில் வேலை கிடைக்கவில்லை என யாராவது சொன்னால் அவர்களை ஏறயிறங்கத்தான் பார்ப்பார்கள். அத்தனை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பது ஆறுதலான விஷயமே!

    //கதையின் நடையும், சொல்ல வந்த கருத்தும் அருமையாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

    நன்றி சதங்கா.

    பதிலளிநீக்கு
  16. அருமை.. அருமை.. கதையோட நடையில லேசா ஒரு பழைய வாசம் அடிக்குதேன்னு நெனச்சிட்டு இருக்குறப்பவே 1988ல எழுதுனதுன்னு போட்டுட்டீங்க.. நல்ல கரு. கடைசி வரிகள் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  17. சந்தனமுல்லை said...
    //அருமையான கதை. //

    நன்றி சந்தனமுல்லை.

    //அது முரளிக்கு மெசேஜ் சொல்றதுன்னாலும், எல்லாருக்குமே அதுல நிறைய மெசேஜ் இருக்கு!!//

    உண்மைதான். வெவ்வேறு காரணங்களுக்காக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணமாகத்தான் இருக்கின்றன:(!

    //நீங்க புத்தகம் ஏதாவது எழுதியிருக்கீங்களா?//

    இந்தக் கேள்விக்குப் பின் இருக்கும் ஊக்கத்துக்கு நன்றி! ஆனால் பதில் 'இல்லை' என்பதுதான். இப்போதுதான் பத்திரிகைகளில் முயற்சிக்கலாமா என்கிற எண்ணம் இலேசாக வந்திருக்கிறது:)!

    பதிலளிநீக்கு
  18. வெண்பூ said...
    //அருமை.. அருமை.. கதையோட நடையில லேசா ஒரு பழைய வாசம் அடிக்குதேன்னு நெனச்சிட்டு இருக்குறப்பவே 1988ல எழுதுனதுன்னு போட்டுட்டீங்க.. நல்ல கரு.//

    ஒரு தேர்ந்த கதாசிரியரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டைப் பெறுவது மகிழ்வாக இருக்கிறது.

    //கடைசி வரிகள் சூப்பர்.//

    மிக்க நன்றி வெண்பூ, தலைப்பு கடைசியில் வருமாறு கவனித்துச் செய்ததை.. கவனித்ததற்கு. அட, உங்கள் சுழல் கதைகளின் உத்தியை இருபது ஆண்டுகளுக்கு முன் செய்து பார்த்தா மாதிரி இல்லை:))?

    பதிலளிநீக்கு
  19. நல்ல கதை

    /*பிரச்சனைகளை விட்டு ஓடறது துணிச்சலா? தைரியமா எதிர் கொண்டு நிக்கறது துணிச்சலா*/

    /*இங்கேயே இப்பவே மூழ்கிச் செத்திடுவோம்'னு முடிவெடுப்பீங்களா? இல்ல, கிடைக்கிற ஏதோ ஒரு கட்டையை ஆதாரமா பிடிச்சுக்கிட்டு எதிர்நீச்சல் போட்டு, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கரையைத் தேடிப் போவீங்களா*/

    சிந்திக்க வைத்து தன்னம்பிக்கை ஊட்டும் கேள்விகள்.

    பதிலளிநீக்கு
  20. ராமலக்ஷ்மி கவிதை கதைனு கலக்குறீங்க வாழ்த்துக்கள். தற்கொலை செய்து கொள்பவர்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு நியாயம் கற்பிக்க கேட்கும் கேள்விகளை சரியாக கேட்டுளீர்கள் கூடவே அதற்க்கு சரியான பதிலும் கொடுத்துள்ளீர்கள்.

    குறைவான பதிவே எழுதினாலும் நிறைவான பதிவாக தருகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  21. அமுதா said...
    //நல்ல கதை//

    கருத்துக்கு நன்றி.

    //சிந்திக்க வைத்து தன்னம்பிக்கை ஊட்டும் கேள்விகள்.//

    அதுதான் கதையின் நோக்கம் அமுதா.

    பதிலளிநீக்கு
  22. கிரி said...
    //ராமலக்ஷ்மி கவிதை கதைனு கலக்குறீங்க வாழ்த்துக்கள்.//

    இதுவரை எழுதிய கதைகளின் எண்ணிக்கை மிகக் குறைவே.

    //தற்கொலை செய்து கொள்பவர்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு நியாயம் கற்பிக்க கேட்கும் கேள்விகளை சரியாக கேட்டுளீர்கள் கூடவே அதற்க்கு சரியான பதிலும் கொடுத்துள்ளீர்கள்.//

    ஆமாம் அதுவே எனது பாணியாகி விட்டது:)! அனுஜன்யா சொன்னது போல //கிளிஷே// வகையிலேயே அமைந்து போகின்றனவோ பெரும்பாலான எனது பதிவுகள்:(?

    //குறைவான பதிவே எழுதினாலும் நிறைவான பதிவாக தருகிறீர்கள்//

    தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  23. நல்ல கதை. சுவராசியமாகவும், தன்னபிக்கை ஊட்டும் வகையில் இருக்கிறது.
    ஆணித்தரமான வாதங்களை முன் வைத்து எழுதியிருக்கிறீர்கள் அக்கா.
    பதியுலகில் இது போன்ற சமுதய அக்கறையுள்ள கதைகள் வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  24. @கடையம் ஆனந்த்
    கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  25. அக்கா 20 வருஷம் ஆனாலும் இன்னும் காட்சி மாறவில்லை. இப்பவும் பலருக்கும் தேவை உங்களின் இந்தக்கதை . நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு
  26. புதுகை.அப்துல்லா said...
    //அக்கா 20 வருஷம் ஆனாலும் இன்னும் காட்சி மாறவில்லை.//

    ஆமாம் அப்துல்லா. மாறாத காட்சிகள்தான் மறுபடி இந்தக் கதையைத் தேடிப் பதிவிடத் தூண்டியது.

    //இப்பவும் பலருக்கும் தேவை உங்களின் இந்தக்கதை . நல்லா இருந்தது.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. மிக நல்ல கருத்து.
    சொன்ன விதம் அருமை !!!

    பதிலளிநீக்கு
  28. nathas said...
    //மிக நல்ல கருத்து.
    சொன்ன விதம் அருமை !!!//

    உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி nathas!

    பதிலளிநீக்கு
  29. அன்பின் ராமலக்ஷ்மி,

    மிக மிக உயர்ந்த, வரவேற்கத்தக்க கருவைக் கொண்டு எழுதப்பட்ட உங்கள் சிறுகதை உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள மரியாதையை அதிகப்படுத்திவிட்டது. மிக இயல்பாக காத்திரமான ஒரு விடயத்தை எழுதியிருக்கிறீர்கள்.

    //நடுக்கடலிலே கப்பலே கவிழ்ந்திட்ட மாதிரி பெரிய கஷ்டம்னே வச்சுக்குவோம். கரையையே பார்க்க முடியலை. அப்போ 'நாம நீந்தி நீந்திக் களைச்சுப் போய் அப்படியும் கரையே தெரியாமப் போயிட்டா, கரை சேர முடியாமப் போயிட்டா என்ன பண்றது...அத்தனை கஷ்டப் பட்டு சாகிறதை விட முயற்சியே பண்ணாம இங்கேயே இப்பவே மூழ்கிச் செத்திடுவோம்'னு முடிவெடுப்பீங்களா? இல்ல, கிடைக்கிற ஏதோ ஒரு கட்டையை ஆதாரமா பிடிச்சுக்கிட்டு எதிர்நீச்சல் போட்டு, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கரையைத் தேடிப் போவீங்களா? //

    மிகச் சரியான வசனங்கள். மிகச் சரியான கேள்விகள்.
    எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரி.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  30. @ ரிஷான் ஷெரீப்
    உலகளாவிய ரீதியில் சமீபத்தில் நடைபெற்ற 'கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2008'-ல் சிறப்புப் பரிசு பெற்று சிறுகதை இலக்கியத்தில் தனி முத்திரை பதித்து வரும் உங்களிடமிருந்து இப்படியொரு ஊக்கத்தையும் பாராட்டையும் பெறுவது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதாக இருக்கிறது. மிக்க நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  31. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, ராமலக்ஷ்மி!

    ***அவ்வளவு ஏன்? உங்க பக்கத்து வீட்டில இருக்கிற வேணு டிகிரிய முடிச்சிட்டு இப்போ ஆட்டோ ஓட்டலையா? தேடுறது கிடைக்கிற வரைக்கும் போலி கவுரவம்ங்கிற சட்டையைக் கழட்டிட்டு ஏதோ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாமே?"***

    என் சிந்தனையும் இதேபோல்தான் போகும், அதனால் தானோ என்னவோ ரொம்ப பிடிக்குது.

    லின்க் கொடுத்ததற்கு நன்றி. :-)

    பதிலளிநீக்கு
  32. இப்போது தான் முழுவதும் படித்தேன், ரொம்ப நல்ல கதை ராமலஷ்மி அவர்களே.

    பதிலளிநீக்கு
  33. வருண் said...

    //ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, ராமலக்ஷ்மி!//

    நன்றி வருண்.

    //***அவ்வளவு ஏன்? உங்க பக்கத்து வீட்டில இருக்கிற வேணு டிகிரிய முடிச்சிட்டு இப்போ ஆட்டோ ஓட்டலையா? தேடுறது கிடைக்கிற வரைக்கும் போலி கவுரவம்ங்கிற சட்டையைக் கழட்டிட்டு ஏதோ ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாமே?"***

    என் சிந்தனையும் இதேபோல்தான் போகும், அதனால் தானோ என்னவோ ரொம்ப பிடிக்குது.//

    பெற்றவர்கள் பேதலித்து நிற்க தற்கொலை செய்து கொண்டவனைப் பார்த்து பரிதாபப் பட முடியவில்லை என்கிற
    உங்கள் சிந்தனை
    யைப் போன்றே என் சிந்தனையும் போனதாலேதான் லிங்க் கொடுத்திருந்தேன் வருண்.

    பதிலளிநீக்கு
  34. கயல்விழி said...

    //இப்போது தான் முழுவதும் படித்தேன், ரொம்ப நல்ல கதை ராமலஷ்மி அவர்களே.//

    வருணுடன் வந்திருந்து தாங்களும் வாசித்து கூறியிருக்கும் கருத்துக்கு
    மிக்க நன்றி கயல்விழி!

    பதிலளிநீக்கு
  35. :) :) http://erodenagaraj.blogspot.com/

    சமீபத்தில் நைஜீரியா சென்று வந்தேன், அங்கு முத்துகள் மிகப் பிரபலம்..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin