ஞாயிறு, 31 மார்ச், 2019

வாசிப்பு - இந்த வாரக் கல்கியில்..

7 ஏப்ரல் 2019, 
இந்த வாரக் கல்கியில்..

எனது படைப்பு
‘வாசிப்பு’

துதான் தான் வாசிக்கும்
கடைசிப் புத்தகமாக இருக்குமோ,
தடுமாறும் எண்ணத்தை
தவிர்க்க இயலாது
நகருகின்றன அவரது நாட்கள்.

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு புத்தகமும்
அன்று புதிதாய் 
தோன்றியதோர் உலகை
அளிக்கத் தவறவில்லை.

நடுங்கும் விரல்களால்
பக்கங்களைத் திருப்பி
இடுங்கிய கண்களால்
மனதை நிரப்பி
கழிக்கின்ற பொழுதுகளில்
காணாது போகிறது அவரது
வயோதிகத் தனிமை.

நித்திரை தொலையும்
நீண்ட இரவுகளில்
நினைவிடுக்கிலிருந்து
புறப்படுகிற விடயங்கள்
எழுதப்படாத புத்தகங்களாக
சேர்ந்து கொண்டிருந்தன ஒரு பக்கம்.

சாய்வு நாற்காலியில்
நண்பகல் சன்னல் வெயில் கதகதப்பில்
சற்றே கண்ணயர்ந்தவரின்
கைகளிலிருந்த புத்தகத்தை விலக்கி
‘போதும், இப்புத்தகங்கள்
உன்னை விட ஆர்வமான வாசிப்பாளனிடம்
போய்ச் சேரட்டுமே’ என்பது போலாக
மேசையில் வைத்த பணியாள்  
வெதுவெதுப்பான நீரை
கொடுத்துச் செல்கிறான். 

நிச்சலனமாக நோக்குகிறார்
குவளைக்குள் இருந்த நீரை.
ஒரே பாரமான தன்னுடலை நீங்கி
நீந்தத் தொடங்குகிறார் அந்நீரில்.
எல்லைகள் புலப்படாது
விரிந்த பெருங்கடலில்
திசைக்காட்டியாக அவரது வாசிப்பு.
பயமின்றிப் பயணிக்கிறார்
தனதான்மாவைத் தேடி.
எங்கெங்கு இருப்பின்
அவருள்ளம் மகிழுமோ 
அங்கெல்லாம் கொண்டு செல்கிறது
ஆதுரத்துடன் நீர்.
எங்கிருந்து வந்தாரோ
அங்கேயே கொண்டு சேர்க்கிறது
பரிவோடு வீசியக் காற்று.
**
நன்றி கல்கி!
***

18 கருத்துகள்:

  1. அருமை.

    வாழ்த்துகள் கல்கியில் வந்ததற்கு.

    பதிலளிநீக்கு
  2. என் அப்பா ஞாபகம் வருகிறது. கடைசி நாட்களில் அவரால் எழவே முடியவில்லை. ஒரு பக்கம் ஸ்ட்ரோக் வேறு... அந்நிலையிலும் நான் சென்னையிலிருந்து மதுரை சென்றதும் என்ன புத்தகம் கடைசியாய்ப் படித்தேன் என்று கேட்டார். ஏதாவது கையில் கொண்டு வந்திருக்கிறேனா என்று குழறிக் குழறிக் கேட்டது பார்த்து என் மாமாவுக்கு வியப்பு. எனவே அவர் ஞாபகம் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரைப் பற்றி முன்னர் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

      நீக்கு
  3. அறிஞர் அண்ணாவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்தபோது சற்று நேரம் கேட்டாராம் -கையில் இருக்கும் புத்தகங்களை படித்துவிட்டு வந்து விடுவதாக.

    அதே போலதான் பகத்சிங்கையும் சொல்வார்கள். தூக்கு மேடை ஏறுமுன்பும் படித்துக் கொண்டிருந்தாராம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல நூல்களின் வாசிப்பு அளிக்கும் வலிமையை ஒரு சித்திரம் போல் வார்த்தைகளால் வரைந்து விட்டீர்கள். அப்பா ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பை சுவாசிப்பாக நினைத்து வாழ்ந்த, வாழும் எவருக்கும் பொருந்திப் போகும் விஷயம். ஸ்ரீராமும் தன் தந்தையை நினைவு கூர்ந்திருக்கிறார்.

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அருமையான கவிதை.
    கல்கியில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. முதுமையின் சோகத்தை சொல்லும் நல்ல கவிதை. கல்கியில் வெளியானதற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமை! மனமார்ந்த வாழ்த்துக்கள்! இனிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin