செவ்வாய், 12 ஜூன், 2012

சிந்தை கவர்ந்த ‘பெங்களூர் சித்திரச் சந்தை’ 2012

# 1 காற்றில் எந்தன் கீதம்..
ஒரு தவத்தின் பலனாக ஒரு தியானத்தின் முடிவாக உருவாகும் ஒவ்வொரு ஓவியத்தின் பின்னும், தீட்டிய விரல்களின் உழைப்புடன் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும் இருப்பதை உணர வைத்தது பிரதி வருடம் ஜனவரி கடைசி ஞாயிறு பெங்களூர் குமர க்ருபா சாலையில் கோலாகலத் திருவிழாவாக நடக்கிற சித்திரச் சந்தை. 'எல்லோர்க்கும் கலை' (ART FOR ALL) எனும் கொள்கையுடன் பலவருடங்களாக இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி வருகிறது கர்நாடகாவின் சித்ரகலா பரிஷத்.

# 2 சித்ரகலா பரிஷத்காலை 9 மணிக்குக் கர்நாடக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு ஆரம்பமான கண்காட்சிக்கு நண்பகலில் சென்ற போது, வின்ட்சர் மேனர் பாலம் தாண்டி யு டர்ன் எடுக்கவே முடியாத அளவு பெரும் நெரிசல். ஊர்ந்து ஊர்ந்து ஒருவாறாக சாலையை நெருங்கவும் போலீஸ் படை சந்தை நடக்கும் சாலைக்குள் அன்றைக்கு ‘நோ என்ட்ரி’ என சொல்லி விட்டார்கள். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்த பின்னர்தான் தெரிந்தது முழுச்சாலையுமே அன்றைய கண்காட்சிக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது.சித்ரகலா பரிஷத் வளாகத்தின் உள்ளேயும் அதையொட்டிய பக்க சாலைகளிலும் கூட கிளைபரப்பியிருந்தன ஓவிய ஸ்டால்கள்.

# 3 ஆர்ட் காம்ப்ளெக்ஸ்
(வேறொரு சந்தர்ப்பத்தில் எடுத்த படம்.)

விருந்தாளிகளாக அழைக்கப்பட்டிருந்த நூற்றுப் பதினோரு புகழ்பெற்ற ஓவியர்கள் சித்ரகலா பரிஷத்தின் இந்த ஆர்ட் காம்ப்ளெக்ஸில் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்க மற்ற ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் சாலையோரங்களில் எண்கள் குறிக்கப்பட்டு ஸ்டால்கள் தந்திருந்தார்கள்.

ரூ.50 முதல் ரூ.50000 மேலாக எல்லா விலைகளிலும் கிடைக்கும்படி வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நடுவே ஒரு பாலமாக அமைந்து இச்சேவையை செய்து வருகிறது சித்ரகலா பரிஷத். ஆரம்பநிலை ஆர்வலர் முதல், இதில் கலந்து கொள்வதைப் பெருமிதமாகக் கருதி நாடெங்கிலும் இருந்து கூடும் பிரபல ஓவியர் வரை அனைவருக்கும் பாகுபாடின்றி அடுத்தடுத்து ஸ்டால்கள் பகிர்ந்து வழங்கப்பட்டிருந்தன.

‘சிறகுத்தூரிகைகளில் வண்ணம் தெறிக்கப் பறந்தபடி...’ வானம் வசப்படும் வலைப்பூவில் தமிழ்ப் பறவை என்ற பெயரில் தான் தீட்டும் வண்ணச் சித்திரங்களையும் பென்சில் கோட்டோவியங்களையும் பகிர்ந்து வரும் பரணிராஜனின் படங்களைப் பதிவிலே பாராட்டி வருவேன். சந்தை நடக்கும் 2 தினங்கள் முன் “நீங்கள் வருவீர்கள்தானே?” என என் பதிவொன்றில் பின்னூட்டம் இட்டுச் சென்று விட்டார், அடிக்கடி பெங்களூர் நிகழ்வுகளைப் பதிவாக்கும் நான் கண்டிப்பாக வருவேன் எனும் எண்ணத்தில். அவரது மின்னஞ்சலோ, அலைபேசி எண்ணோ தெரியாத நிலையில் ‘அங்கே போய்க் கண்டுபிடித்துக் கொள்ளலாம்’ என்றெண்ணிச் சென்றால், திகைத்தே போய் விட்டேன். 2000 ஸ்டால்களில் எங்கே என அவரைத் தேடுவது? தனது 10 ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருந்த அவருக்கும் முதன் முறை என்பதால், இப்படி ஒரு ஓவியக் கடலில் சங்கமிக்கப் போகிறோமென்று தெரிந்திருக்கவில்லை:)!

வாங்க, அந்தக் கடலில் நாமும் நீந்தி விட்டு வரலாம்.

#4 அலை அலையாய்க் கலை காண..
கேமராவைத் தூக்கிப் பிடித்து குத்து மதிப்பாக எடுத்தது. என் உயரத்துக்கு இவ்வளவுதான் கிடைத்தது:)!

நிறைய வெளிநாட்டவர்களைப் பார்க்க முடிந்தது.
#5 ரசனை

இவர் நின்று ரசித்த படங்கள் இவைதாம்:
#6 ராஜஸ்தானி ஓவியங்கள்

#7 கெளதம புத்தர்


#8 இயேசு நாதர்


பலராலும் விரும்பி வாங்கப்படுவதால் மட்டுமின்றி சிறந்த பயிற்சிக்கான பாடமாகவும் ரவிவர்மாவின் ஓவியங்கள் பெரும்பாலான ஆசிரியர்களால் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
#9 சித்திரம் பேசுதடி..
படைத்தவருக்கே அர்ப்பணிக்கும் ஈடுபாட்டுடன் தீட்டப்படுபவை மட்டுமே உயிர்ப்பானவை ஆகின்றன. கலையின் தேர்ச்சிக்கான ஒரு அங்கமாக இவற்றைக் கடந்து தமக்கென்றொரு பாணியை எல்லா ஓவியர்களும் உருவாக்கிக் கொள்கிறார்கள் விரைவில்.

#10 பூப்பூவாய்ப் பூத்திருக்கு..
மேலிரண்டு படங்களிலும் இருப்பவை தம்பி மனைவியின் கைவண்ணங்கள். சிறுவயதிலிருந்து தேர்ந்த ஆசிரியர் மூவரிடம் கற்ற கலையை ஆர்வத்துடன் தொடர்ந்து வருகிறார்.

#11 தோகை மயிலும் குழலூதும் பிள்ளையாரும்


#12 தாயும் சேயும்

என்னை மிகவும் ஈர்த்த படம் இது:
#13 ஆலயத்தில் ஆனை
வெயிலும் நிழலும் தூரிகையில் என்னமாய் விளையாடியிருக்கின்றன பாருங்களேன். (கையொப்பத்திலிருந்து ஓவியர் பெயரை ஊகிக்க முடியவில்லை.)

#14 மேலும் இவர் காட்சிப் படுத்தியிருந்த சித்திரங்கள்:
ஒளிப்பட நேர்த்தியுடன் வியக்க வைக்கும் ‘லைட்டிங்’ அனைத்திலுமே!

#15 Bull Fight
எந்நேரமும் கூட்டம் முண்டியடித்த ஸ்டால் இதுதான். அதிகமாக கேமராக்கள் க்ளிக்கிய படங்களும் இவையே. பிரபல ஓவியர் சேகர் பலாரியின் கைவண்ணங்கள். இவரது ஆன்லைன் கேலரி இங்கே. எத்தனை விதமான படங்கள் என்னென்ன விலையில் என நீங்களே பாருங்கள்.

#16 மிரட்டிய படம்


எங்கள் ஊரைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் திரு மாரியப்பன். தத்ரூபமான இவரது ஓவியங்களையும் போட்டோ பிடிக்க பெரிய போட்டா போட்டிதான்:

#17 உயிரோவியங்கள் பல படங்களைக் காட்சிப் படுத்தியிருந்தாலும் பிரதானமாக வைத்திருந்த இந்த 3 ஓவியங்களும் மிக நல்ல விலைக்கு வாங்கப்பட்டிருந்தன. அவரிடம் பேசியதில், எந்த மாதிரி வரைய வேண்டும் எனக் கற்பனை செய்ததை ஒளிப்படமாக்கிப் பிறகு இப்படி உயிரோவியமாக்கியிருக்கிறார் எனப் புரிய வந்தது. முதல் படம் போலவே நீங்கள் ரசிக்கவெனத் தனித்தனியாக நான் காட்சிப்படுத்திய மற்ற இரண்டு:

#18 மார்கழி முற்றம்

#19 பேசும் பொற்சித்திரம்
வெள்ளிச் சலங்கைகள் அணிந்திடும் கலைமகள்

இப்படி சொந்தமாக முயற்சி எடுத்து வரையும் ஓவியங்கள் நல்ல வரவேற்பைப் பெருகின்றன. தாங்களாக இப்படி ஒளிப்படம் எடுத்து வரைவது சாலச் சிறந்தது. அல்லது விருப்பமான ஒளிப்படங்களை எடுத்தவரின் 'அனுமதி' வாங்கியும் செய்யலாம். இந்த இடத்தில் இந்திய காபிரைட் சட்டம் என்ன சொல்கிறதென்றும் பார்ப்போம். புகைப்படம், ஓவியம், சினிமா போன்றன வெளியான நாளிலிருந்து 60 வருடங்கள் முடிந்து விட்டால் அவை பொதுவுடைமை ஆகின்றன. (எழுத்துகள் எனில் எழுத்தாளரின் மறைவுக்குப் பின் அறுபது வருடங்கள் ஆக வேண்டும்.)

பலத்த போலீஸ் பாதுகாப்பும் இருந்தது.
#20 உஷார்


#21 போதும்...
“போதும் அத்தே படமெடுத்தது” என சொல்றான்னு மட்டும் நினைச்சிட வேண்டாம்:)!

சின்னதிலிருந்தே வாசம் பிடிப்பதில் மன்னன். வீட்டின் ஏதோ ஒரு அறையில் இருப்பவனுக்கு சமையற்கட்டில் தயாராகும் காஃபியின் வாசம் எட்டி விடும். ”யார் வந்திருக்கா வீட்டுக்கு?” என விசாரித்தபடியே வெளிப்படுவான். பாளையங்கோட்டை வீதிகளைக் கடக்கும் போது “வடை வாசம்” என்பான். திரும்பிப் பார்த்தால் அங்கே டீக்கடை இருக்கும். சூடான வடைகள் எண்ணெய் சட்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும். இங்கும் வரிசையாக வண்டிகளில் விற்கிற அனைத்தையும், நாங்கள் கூட்டத்தைப் பிளந்து எட்டிப்பார்த்துக் கண்டுபிடிக்கும் முன்னரே சரியாகச் சொல்லிவிட்டான்.

#22 கமகம..வறுத்த கடலை வாங்கச் சொல்லி ஒன்றொன்றாக சாப்பிட்டபடி வந்தவனைப் “போதுமே. வீட்டுக்குப் போய் சாப்பாடு சாப்பிட வேண்டாமா?” எனத் தம்பி சொல்லிக் கொண்டேயிருக்க, “இன்னும் ஒரே ஒரு கடலை. அதோட போதும்” என ஒவ்வொரு முறையும் இப்படிக் கையைக் காட்டி தன் அப்பாவைத் தாஜா செய்தபடி வந்தவனைப் அப்படியே திரும்பி போஸ் கொடுக்கச் சொல்லி எடுத்ததே படம் #21.

#23 எங்கயோ சோளம் அவிக்கறாங்களே...
[அதையும் வாங்கி ஒவ்வொரு முத்தாகக் கொறித்தபடியேதான் வீடு வந்து சேர்ந்தான்:)!]

வரும் வருடங்களில் விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம். எடுத்த ஏராளமான படங்களிலிருந்து தேர்வு செய்து பதிய நினைத்ததில் பகிர்வு நான்கு மாதங்கள் தள்ளிப்போக நேர்ந்து விட்டது. தாமதமானாலும் ஆர்வமுடையவர்களுக்குப் பயனாகும் சில தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

டிசம்பர் மூன்றாம் வாரத்தில் விண்ணப்பப்படிவம்(ரூ.100) கொடுக்க ஆரம்பிப்பார்கள். அநேகமாக மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஸ்டால் ஒதுக்கப்பட்டிருப்பதை ஓரிரு வாரம் முன்னதாகத் தெரிவித்து விடுகிறார்கள். ஸ்டால் கிடைக்காதவர்கள் முந்தைய நாளில் நேரில்வந்து காத்திருந்தால் ரத்தாகும் ஸ்டால்கள் கிடைக்கின்றன. இரண்டாயிரம் ஸ்டாலுக்கு பன்மடங்காக விண்ணப்பங்கள் குவிவதும் இடம் கிடைக்காதவர்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைவதும் தவிர்க்க முடியாத காட்சியாக இருக்கிறது.

#24 மேலும் கீழும்..
மேலும் கீழுமாக நடந்து ஓவியங்களைப் பார்த்துச் செல்லுபவர்கள் கூட்டமே மாலை வரை அதிகமாய் இருக்கிறது. இரவு 7 மணிக்கு காட்சி முடிகிற ஒரு மணிநேரத்துக்கு முன்னிருந்துதான் வியாபாரமும் பேரமும் சூடு பிடிக்கிறதாம். சட்டமிட்டுக் கொண்டு செல்லுகிற படங்களை விட சட்டமிடாத படங்கள் வேகமாக விற்கின்றனவாம்.

ஓவியங்களை சந்தைப்படுத்த அவற்றை நேர்த்தியாகப் படமெடுத்துத் தருவதையே தொழிலாகக் கொண்டு இயங்கி வருகிறார்கள் சில புகைப்படக்காரர்கள். புகைப்படக் கலையின் பல பிரிவுகளில் இதுவும் ஒன்றென அறிய முடிந்தபோது தனி ஓவியங்களை அவற்றின் அழகு குறையாமல் படமாக்க நானும் பிரயத்தனப் பட்டிருக்கிறேன் இங்கு:)!

“இரண்டு வகைக் கலைஞர்களின் சங்கமாக இருந்தது சந்தை” எனப் புகைப்படப் பிரியர்கள் சிலரின் அன்றைய அனுபவங்களைப் பேட்டியெடுத்தும் வெளியிட்டிருந்தார்கள் மறுநாள் செய்தியாகப் பத்திரிகைகளில். 'நுண்ணிய விவரங்கள் வெளிப்படுமாறு படமாக்குவது ஒரு சவால் என்றால், தாம் தீட்டிய ஓவியங்கள் விரும்பி வாங்கப்படுகையில் ஓவியர்களின் முகத்தில் தெரிந்த பரவசத்தைப் படமாக்கியது பரம சந்தோஷம்’ எனச் சொல்லியிருந்தார் ஒருவர்.

சாலை முடிவில் (3D effect?) காட்சிக்கு இருந்த சுமார் பத்தடி உயரச் சித்திரமான இது, மீடியாக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்த ஓவியமும் ஆகும்.

#25 கண்ணால் பேசும் பெண்ணே..
ஓவியர் ஜெய்கணேஷின் கைவண்ணம்

இருபது வருடங்களாக பெங்களூரில் இருந்தாலும் இவ்வருடமே இது குறித்து அறிய வந்திருந்தேன். இனி வரும் ஆண்டுகளிலும் சென்று பார்க்கிற ஆவலைத் தந்திருக்கிறது சிந்தையைக் கவர்ந்த சித்திரச் சந்தை!
***

65 கருத்துகள்:

  1. விரிவான கட்டுரை. இவை பொதுஜனத்தால் ஆதரிக்கபப்டுகின்றன என்பதே நிறைவாக இருக்கிறது. அருமையான புகைப்படங்கள். மாரியப்பன் விலாசம் அல்லது தொடர்பு விவரம் வெளியிட முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கேமராவின் யானைப்பசிக்கு சிறுவன் போதும் என்று சொல்லுமளவுக்கு தீனி கிடைத்ததா?
    என்னை மிகவும் கவர்ந்தத மாரியப்பனின் 'காற்றில் எந்தன் கீதம், மார்கழி முற்றம், பேசும் பொற்சித்திரம்' மூன்றும் போட்டோ மாதிரியே இருக்கிறதே என நினைக்கையில் அவர் எப்படி வரைந்தார் என்று நீங்கள் சொன்னதும் அருமை.
    ஹூம். நான் இங்கு வாராவாரம் உழவர் சந்தைக்கு போகிறேன். அடுத்த வருஷம் சித்திர சந்தை எப்போ என்று சொல்லுங்கள்.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  3. @ அப்பாத்துரை,

    ஆம். நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறது சந்தை.

    ஓவியர் மாரியப்பனின் மின்னஞ்சல் முகவரியைக் கூடிய விரைவில் பெற்று பதிவில் இணைக்கிறேன்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. @ சகாதேவன்,

    நன்றி! கிடைத்த தீனியை முழுதாகக் காண்பிக்க இன்னும் பல பதிவுகள் வேண்டுமாகையால் 25 படங்களோடு நிறுத்திக் கொண்டேன்:)!

    ஒவ்வொரு வருடமுமே ஜனவரி கடைசி ஞாயிறுதான் சந்தை.

    பதிலளிநீக்கு
  5. பார்க்க பார்க்க பரவசம்.... இன்னும் பல படங்களை பதிவிடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  6. இணைப் போன்ற ஓவியப் பித்தனுக்கு உங்கள் பதிவு ஒரு விருந்து. புகைப் படங்கள் கண்ணில் ஓட்டிக்கொண்டு விட்டன !

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமையான பதிவு.

    எல்லாப்படங்களும் பேசும் படங்களாகவே உள்ளன.

    ஓவியர் மாரியப்பன் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள், நன்றிகள்.

    படங்கள் 17-19 என்னை மிகவும் கவர்ந்தன. ;)

    பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வுங்க, நன்றி!

    பதிலளிநீக்கு
  9. ஹைய்யோ!!!!! ஒவ்வொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுதே!!!!!

    எதைச் சொல்ல எதை விட?

    கடலை எப்படி இருந்துச்சாம் சி(தி)ன்னவருக்கு? முகபாவனை அபாரம்!

    சட்டம் போடாதவைகளைத்தான் நானும் வாங்குவேன். இல்லைன்னா கொண்டு வர்றது கஷ்டம். ஆனால்..... இங்கே சட்டத்தின் விலை படத்தின் விலை போல் பலமடங்கு ஆகிரும்:(

    ரவிவர்மா, என்னிடத்திலும் சில உண்டு. எல்லாம் சின்ன சைஸ்:(

    மாரியப்பனின் படங்களும் மாடலும் அபாரம்!

    பகிர்வுக்கு நன்றிப்பா.

    பதிலளிநீக்கு
  10. உங்க தம்பி வீட்டு உயிருள்ள ஓவியம் ரொம்ப அழகு..சுத்திப்போடுங்க ;-))

    கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையான சித்திரங்கள்... அடுத்த பாகமும் வெளியிடுங்களேன். அவ்ளோ அழகாருக்கு.

    பதிலளிநீக்கு
  11. “பெங்களூரில் சித்திரச் சந்தை” இப்போதுதான் நான் கேள்விப் படுகிறேன். தெரியப் படுத்தமைக்கு நன்றி! பதிவு முழுக்க வழக்கம் போல உங்கள் காமிராவில் கிடைத்த வண்ணப் படங்கள். இனி வரும் காலங்களில் இதுபோல் சித்திரச் சந்தை அல்லது புகைப்படக் கண்காட்சி நடக்கும்போது முன்னரே வலைப் பதிவில் சொன்னால் சென்று பார்க்க உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான சித்திரங்கள்
    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  13. பல ஓவியங்களும் உங்கள் படங்களும் அருமை. எதை சொல்வது என தெரியலை

    பதிலளிநீக்கு
  14. சித்திர விருந்து கொடுத்திருக்கிறீங்க ராமலக்‌ஷ்மி. மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. சகோ மாரியப்பன் மிகச்சிறந்த திறமைசாலியாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்..!

    ஏனெனில் #18 புகைப்படத்தில் இருக்கும் அந்த ஓவியத்தில் அப்பெண்ணின் கண்களில் வழியும் புன்னகையை இத்தனை தத்ரூபமாக வரைய நல்ல திறமை இல்லாமல் சாத்தியமில்லை ..!

    பதிலளிநீக்கு
  16. //சிந்தை கவர்ந்த .. சித்திரச் சந்தை’//

    தலைப்பே அள்ளுது!!

    அசந்தால் அலுத்துவிடக்கூடிய ஒரு சப்ஜெக்ட்டை, உங்கள் வர்ணனைகள் அழகாகத் தாங்கிப் பிடித்துச் செல்கின்றன.

    மாரியப்பனின் படங்கள் விகடன் இளையராஜாவின் படங்களை நினைவுபடுத்துகின்றன. கொலுசு போடும் படம் நிஜம் போலவே இருக்கு.

    //பலத்த போலீஸ் பாதுகாப்பும் இருந்தது.//
    கீரைக்கா?? :-))))

    படம் #23 - ரொம்ப நேரம் ரசிச்சேன்!!

    //சின்னதிலிருந்தே வாசம் பிடிப்பதில் மன்னன்//
    எங்க வீட்டுச் சின்னவரும் இதில் மன்னர்!!

    பதிலளிநீக்கு
  17. மாரியப்பனின் படங்கள் தத்ரூப அழகு.
    மிக விவரமாக எழுதியிருக்கும் கட்டுரை
    பல விவரங்களுடன் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனை எத்தனைத் திறமை ஓவியர்களுக்குள்...

    பதிலளிநீக்கு
  18. //மாரியப்பனின் படங்கள் விகடன் இளையராஜாவின் படங்களை நினைவு படுத்துகின்றன/

    ஆமாம். எனக்கும் தோன்றியது. பெயர் ஞாபகத்துக்கு வராததால் சொல்லவில்லை!/

    பதிலளிநீக்கு
  19. பார்த்தேன் ரசித்தேன்
    படித்தேன் புரிந்தேன்

    பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  20. ஓவியர் மாரியப்பன் ஓவியங்கள் மனதை கொள்ளை கொண்டன

    பதிலளிநீக்கு
  21. எல்லா ஓவியங்களும் உங்களின் புகைப்படங்களின் நேர்த்தியும் மனசைப் பறிச்சிடுச்சு. நாமளும் அடுத்த வருஷம் கண்காட்சில கலந்துக்கணும்னு எண்ணம் தோணிடுச்சு. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  22. அழகானதொரு கருத்துக் கோர்வை! பெங்களூர்வாசிகள் உண்மையில் நல்ல கலாரசிகர்கள் தான்! படம் எண் 13 மனதில் நீங்காமல் நிலை பெற்றது!

    பதிலளிநீக்கு
  23. அழகான ஓவியங்கள்...

    புகைப்படங்கள் மூலம் எங்களுக்கும் ரசிக்கத் தந்ததற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  24. மிக மிக அழகான கட்டுரை....super coverage... ! சென்னையிலிருந்து எஸ்.இளையராஜா என்பவர் வாட்டர்கலர் ஓவியங்கள் பெரிய அளவில் வைத்திருந்தார். சிறப்பாக இருந்தது...!

    பதிலளிநீக்கு
  25. அழகான படங்களோட எங்களையும் சித்திரச் சந்தைக்கு கூட்டிப் போய்ட்டிங்க :)
    குறிப்பாக தாயும் சேயும் மனதில்..

    பதிலளிநீக்கு
  26. சித்திரங்கள் பேசியதைப் பதிவிட்டிருக்குன் உங்களுக்கு விசேட நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  27. வாவ். ஒவ்வொரு சித்திரமும் மனசுக்குள் புகுந்து என்னென்னவோ செய்கிறது. மிகவும் நன்றி ராமலக்ஷ்மி!!

    பதிலளிநீக்கு
  28. வெகு நல்ல பதிவு.வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  29. உங்களின் காமிரா வழியாக ஓவியங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  30. அத்தையின் காமிரா மற்றும் எழுத்தின் வழியாக எங்களுக்கு அறிமுகமான அந்த லிட்டில் மாஸ்டரின் பெயரை குறிப்பிடாமல் விட்டது ஏனோ?

    அவரின் படங்களை தொடர்ந்து எங்களுடன் பகிர்ந்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  31. //இந்த இடத்தில் இந்திய காபிரைட் சட்டம் என்ன சொல்கிறதென்றும் பார்ப்போம்.//

    அது சரி, மோகன் சார் வேலையையும் நீங்களே எடுத்துக்கிட்டா எப்படி:-))))))?!

    நல்ல முயற்சி. பல்வேறு
    தகவல்களைப் படிப்பவர்களுக்கு தர வேண்டும் என்கிற தங்களின் எண்ணத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. மாரியப்பன் அவர்கள் வரையும் பெண் முக உணர்வுகளும் இளையராஜா வரையும் பெண் முக உணர்வுகளிலும் அதியத்தக்க ஒற்றுமைகள் காண முடிகிறது. இரண்டுமே நிஜத்திற்கு வெகு அருகில் நிற்கின்றன‌.

    பதிலளிநீக்கு
  33. விச்சு said...
    //பார்க்க பார்க்க பரவசம்.... இன்னும் பல படங்களை பதிவிடுங்களேன்.//

    ஆர்வத்துக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு
  34. மோகன்ஜி said...
    //இணைப் போன்ற ஓவியப் பித்தனுக்கு உங்கள் பதிவு ஒரு விருந்து. புகைப் படங்கள் கண்ணில் ஓட்டிக்கொண்டு விட்டன !//

    நன்றி மோகன்ஜி!

    பதிலளிநீக்கு
  35. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //மிகவும் அருமையான பதிவு.

    ஓவியர் மாரியப்பன் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள், நன்றிகள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  36. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    //அருமையான பகிர்வுங்க, நன்றி!//

    மிக்க நன்றி ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  37. துளசி கோபால் said...
    //மாரியப்பனின் படங்களும் மாடலும் அபாரம்!

    பகிர்வுக்கு நன்றிப்பா.//

    அவருக்குத் தெரிவிக்கிறேன்.

    கடைசிக் கடலை வரை விடவில்லை சின்னவர்:)!

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. அமைதிச்சாரல் said...
    //கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையான சித்திரங்கள்... அடுத்த பாகமும் வெளியிடுங்களேன். அவ்ளோ அழகாருக்கு.//

    படங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் இத்துடன் நிறுத்தி விட்டிருந்தேன். ஃப்ளிக்கரில் தொடர்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  39. தி.தமிழ் இளங்கோ said...
    //பதிவு முழுக்க வழக்கம் போல உங்கள் காமிராவில் கிடைத்த வண்ணப் படங்கள்..................முன்னரே வலைப் பதிவில் சொன்னால் சென்று பார்க்க உதவியாக இருக்கும்.//

    நன்றி. புகைப்படக் கண்காட்சி அறிவிப்பு PiT தளத்தில் சொல்லப்படுகிறது. முதன்முறையாக சென்றதால் இப்படி இருக்குமென்பதை எதிர் பார்த்திருக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  40. செய்தாலி said...
    //அருமையான சித்திரங்கள்
    ரசித்தேன்//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  41. மோகன் குமார் said...
    //பல ஓவியங்களும் உங்கள் படங்களும் அருமை. எதை சொல்வது என தெரியலை//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  42. மதுமிதா said...
    //சித்திர விருந்து கொடுத்திருக்கிறீங்க ராமலக்‌ஷ்மி. மனமார்ந்த வாழ்த்துகள்.//

    நன்றி மதுமிதா.

    பதிலளிநீக்கு
  43. வரலாற்று சுவடுகள் said...
    //சகோ மாரியப்பன் மிகச்சிறந்த திறமைசாலியாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்..!
    .... இத்தனை தத்ரூபமாக வரைய நல்ல திறமை இல்லாமல் சாத்தியமில்லை ..!//

    உண்மைதான். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. ஹுஸைனம்மா said...
    //மாரியப்பனின் படங்கள் விகடன் இளையராஜாவின் படங்களை நினைவுபடுத்துகின்றன. //

    இங்கே ஸ்ரீராம், குமரன் ஆகியோரும் ஃப்ளிக்கரில் பலரும் கூட இளையராஜா ஓவியங்களுடன் ஒப்பிட்டிருந்தார்கள்.

    பாருங்களேன்:)), கீரைக்காரர் கூட பேச்சுக் கொடுத்தபடி போலீஸ் எவ்வளவு அலர்ட்டாக இருக்கிறார் என.

    நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  45. ஸ்ரீராம். said...
    //மாரியப்பனின் படங்கள் தத்ரூப அழகு. மிக விவரமாக எழுதியிருக்கும் கட்டுரை பல விவரங்களுடன் சொல்லியிருக்கிறீர்கள்.//

    நன்றி ஸ்ரீராம். இளையராஜாவும் சித்திரச் சந்தையில் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தாராம். அதைக் காணத் தவறி விட்டோம்.

    பதிலளிநீக்கு
  46. மனசாட்சி™ said...
    //பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி//

    ரசித்ததில் மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  47. தருமி said...
    //நல்ல விருந்து ..//

    நன்றி சார்:).

    பதிலளிநீக்கு
  48. நிரஞ்சனா said...
    //நாமளும் அடுத்த வருஷம் கண்காட்சில கலந்துக்கணும்னு எண்ணம் தோணிடுச்சு. சூப்பர்.//

    அவசியம் கலந்து கொள்ளப் பாருங்கள்:). நன்றி நிரஞ்சனா.

    பதிலளிநீக்கு
  49. தக்குடு said...
    //அழகானதொரு கருத்துக் கோர்வை! பெங்களூர்வாசிகள் உண்மையில் நல்ல கலாரசிகர்கள் தான்! படம் எண் 13 மனதில் நீங்காமல் நிலை பெற்றது!//

    எனக்கு ரொம்பப் பிடித்ததாயிற்றே:)! நன்றி தக்குடு.

    பதிலளிநீக்கு
  50. வெங்கட் நாகராஜ் said...
    //அழகான ஓவியங்கள்... புகைப்படங்கள் மூலம் எங்களுக்கும் ரசிக்கத் தந்ததற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  51. thamizhparavai said...
    //மிக மிக அழகான கட்டுரை....super coverage... !//

    மிக்க நன்றி! அடுத்த சந்தையில் உங்கள் படங்களைப் ஒளிப்படமாக்கும் வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்:)!

    நீங்கள் சொல்லியே ஓவியர் எஸ் இளையராஜா கலந்து கொண்டது தெரிய வருகிறேன். தவற விட்டதில் வருத்தமே.

    பதிலளிநீக்கு
  52. சுசி said...
    //அழகான படங்களோட எங்களையும் சித்திரச் சந்தைக்கு கூட்டிப் போய்ட்டிங்க :)
    குறிப்பாக தாயும் சேயும் மனதில்..//

    ஆம், அழகான ஓவியம். நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  53. பாச மலர் / Paasa Malar said...
    //சித்திரங்கள் பேசியதைப் பதிவிட்டிருக்குன் உங்களுக்கு விசேட நன்றிகள் பல...//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  54. கவிநயா said...
    //வாவ். ஒவ்வொரு சித்திரமும் மனசுக்குள் புகுந்து என்னென்னவோ செய்கிறது. மிகவும் நன்றி ராமலக்ஷ்மி!!//

    மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.

    பதிலளிநீக்கு
  55. விமலன் said...
    /வெகு நல்ல பதிவு.வாழ்த்துக்கள்/

    நன்றி விமலன்.

    பதிலளிநீக்கு
  56. அமைதி அப்பா said...
    //உங்களின் காமிரா வழியாக ஓவியங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!//

    நன்றி அமைதி அப்பா.

    லிட்டில் மாஸ்டர். சண்முகம்:)!

    பதிலளிநீக்கு
  57. Kumaran said...
    //மாரியப்பன் அவர்கள் வரையும் பெண் முக உணர்வுகளும் இளையராஜா வரையும் பெண் முக உணர்வுகளிலும் அதியத்தக்க ஒற்றுமைகள் காண முடிகிறது. இரண்டுமே நிஜத்திற்கு வெகு அருகில் நிற்கின்றன‌.//

    நிஜத்தின் அருகில் இருப்பதாலே அனைவர் மனதிலும் அழுத்தமாக பதிந்து விடுகின்றன. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  58. படங்கள் அனைத்துமே அருமை! இதை அனைத்தையும் ஒன்றாக பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்து இருக்கும். எனக்கு ஓவியத்தில் ஆர்வம் இல்லை ஆனால் ரசிக்கப் பிடிக்கும்.

    //கையொப்பத்திலிருந்து ஓவியர் பெயரை ஊகிக்க முடியவில்லை//

    அதென்னமோ டாக்டர் கையெழுத்து மருந்துக் கடைக்காரருக்கு மட்டுமே புரியும் என்பது போல இவர்கள் கையெழுத்து அவர்களுக்கு மட்டுமே புரியும் போல இருக்கு :-)

    பதிலளிநீக்கு
  59. @ கிரி,

    ஓவியங்களுக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தால் பெயரைக் கேட்டு அவர்களை கூட நிற்கவைத்துப் படமும் எடுத்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஓவியர்கள் மற்றவர்களுடையதை ரசிக்கச் சென்று விட்டார்கள்:)! நாள் முழுக்க திருவிழா என்பதால் விருப்பமானவர்கள் திரும்ப கடைக்கு வருவார்கள் எனும் எண்ணமாக இருக்கலாம்.

    நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  60. @ திண்டுக்கல் தனபாலன்,

    Email Subscription Widget ரொம்ப காலமாக உள்ளதே. சிலவாரங்களுக்கு முன் அதைக் கீழே மாற்றி விட்டிருந்தேன். இப்போது மறுபடி அதே இடத்துக்குக் கொண்டு வந்து விட்டேன்.

    இதற்கு முன்னரும் என் தளத்துக்கு வந்திருக்கிறீர்கள்:)! தற்போது தொடருவதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  61. Thanks for sharing such a lovely post, Yes, This useful information sure helping me for find more art gallery around me. I’ve really enjoyed them and look forward to following your blog.
    I am a great fan of paintings and I have several collection of paintings from different art gallery in various country, I visited IndianArtZone to choose from a wide variety of paintings,an online portal for artists. They also have same type of paintings .Thank you for sharing this blog. Keep posting!!.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin