திங்கள், 1 செப்டம்பர், 2014

பால கணேஷ் பார்வையில்.. ‘அடை மழை’

திரு. பாலகணேஷ் அவர்கள் தனது ‘மின்னல் வரிகள்’ தளத்தில் ‘அடைமழை’ சிறுகதைத் தொகுப்புக்கு அளித்த விமர்சனத்தை இங்கும் சேமித்துக் கொள்கிறேன்:

முத்துச் சரம் நமக்குத் தொடுத்து அளிக்கும் ராமலக்ஷ்மி ராஜன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.  பத்திரிகைகளில் (தளத்தில்) பேனாவால் கவிதை எழுதுவார், தன் காமிராவினாலும் அதை எழுதுவார், கச்சிதமாய் சிறுகதைகளும் எழுதுவார், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அழகாக மொழிபெயர்ப்பும் செய்வார். மொத்தத்தில் பொறாமை கொள்ளச் செய்கிற பன்முகப் படைப்பாளி. அவர் எழுதிய ‘அடைமழை’ என்கிற சிறுகதைத் தொகுப்பை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி, அடுத்து வந்த மாதத்தில் வாசித்து முடித்து விட்டேன். என்றாலும் அதைப் பற்றிப் பேச  இப்போதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

ராமலக்ஷ்மி  இயற்கை வர்ணனை, கதாபாத்திர வர்ணனை என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாது, நம்மை நேரடியாகக் கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிற எளிமையான எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறார். அவர்தம் கதை மாந்தர்களும் 90 சதம் அடித்தட்டு மக்களாகவே அமைந்து விடுவது இப்படியான எழுத்து நடைக்கு கூடுதல் வேகத்தை அளிக்கிறது. ‘அடைமழை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள 13 கதைகளின் மையச்சரடாக அமைந்திருப்பது மனிதம்தான். சக மனிதர்களின் மீதான அக்கறை, சமூகத்தின் மீதான அக்கறை என்று நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறுகிற விஷயங்களின் மீது விரல் நீட்டுகின்றன இவரின் கதைகள். அவற்றைச் சில வரிகளில் பார்த்து விடலாம்....

முதல் சிறுகதை ‘வசந்தா’ குழந்தைத் தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வு பரவி விட்டதாக நாம் நினைக்கும் இன்றையச் சூழலிலும் எவ்விதத்தில் அது நம்முடன் இருக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறது. இரண்டாவது கதையான ‘பொட்டலம்’ வசதிக் குறைவான பெற்றவர்கள் நல்ல கல்வியை விரும்பி பெரிய பள்ளியில் தங்கள் மகனைப் படிக்க வைப்பதால் அந்தச் சிறுவனுக்கு எழும் மனவியல் பிரச்னையையும் கூடவே ஆசிரியைகள் நடந்து கொள்ளும் விதத்தையும் கண்முன் படம் பிடிக்கிறது. மூன்றாவது கதை ‘வயலோடு உறவாடி’ விவசாய நிலங்களை மறந்து. துறந்து வாழும் நம்மை கையைப் பிடித்து அங்கே இழுத்துச் சென்று அதன் அருமையை மனதில் உணரச் செய்கிறது.

நான்காவது சிறுகதை ‘ஈரம்’ எனக்கு மிகப் பிடித்திருந்தது. கணவனின் விருப்பத்திற்காக வேலையை விட முடியாமல் குழந்தையை ‘க்ரச்’சில் விட்டுவிட்டுச் செல்லும் ஒரு பெண்ணின் குடும்ப, அலுவலகச் சூழல்கள் இவரின் எழுத்தில் ஒரு குறும்படமாய் மனதில் விரிகிறது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் படிப்பவரையும் தொற்றிக் கொள்கிறது. ஐந்தாவது சிறுகதை ‘அடையாளம்’ தன் பெயரை எவரும் விசாரிக்கக் கூட செய்யாமல் வாழும் ஒரு எளியவனின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிற சிறந்த சிறுகதை. ஆறாவது சிறுகதை ‘பயணம்’ கூட்டுத் தொழில் செய்யும் நண்பன் திட்டியதால் மன உளைச்சலுடன் ரயிலில் பயணிக்கும் ஒருவனுக்கு ஏற்படும் திடுக் அனுபவத்தை விளக்கி எதிர்பாராத முடிவினால் புன்னகைக்க வைக்கிறது.

ஏழாவது சிறுகதை ‘ஜல்ஜல் எனும் சலங்கையொலி’ அவரது தளத்தில் படிக்கையிலேயே மனதில் தனியிடம் பிடித்த ஒன்று. படித்து முடிக்கையில் சுப்பையாத் தாத்தாவிடம் கதை கேட்க வேண்டுமென்ற ஏக்கம் என் மனதிலும் வந்தது. அவர் ஏன் அந்த ‘ஜல்ஜல் மாட்டுவண்டி’க் கதையை கடைசிவரை சொல்லவே இல்லை என்பதை நீங்கள் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிறப்பு. எட்டாவது சிறுகதை ‘அடைமழை’யை நட்சத்திரக் கதை என்றே சொல்லலாம். தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் ஒருவன். போலீஸ்காரர் ஒருவரால் துரத்தப்பட்டு, அவமானமடைந்து வாழ்க்கையின் முன்னேற சபதம் செய்து போராடுகிறான். சற்றே வளர்ந்துவிட்ட நிலையில் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்ப்பது போல அந்தப் போலீஸ்காரரின் கோணத்தில் அவர்கள் வாழ்வை அவன் பார்க்க நேரிடுகிறது. அங்கே மனிதம் மலர்கிறது.

ஒன்பதாவது சிறுகதை ‘சிரிப்பு’ உம்மணாமூஞ்சியான ஒருவனை சிரிக்கச் செய்வது எது என்பதை விவரித்து நம் உதடுகளிலும் புன்னகையை ஒட்டுகிறது. பத்தாவது சிறுகதை ‘பாசம்’ பிற்பட்டோருக்கான கோட்டாவில் ஸ்காலர்ஷிப்பில் மகனை பெரிய படிப்பு படிக்க அனுப்பிவிட்டு அவ்வப்போது அவன் கேட்கும் பணத்தை அனுப்ப அந்தப் பாசமுள்ள பெற்றோர் படும் பாட்டை ரத்தமும் சதையுமாக வர்ணிக்கிறது. இச்சிறுகதையின் முடிவு கண்களை வேர்க்கச் செய்து விடுகிற ஒன்று. பதினொன்றாவது சிறுகதை ‘உலகம் அழகானது’ எனக்கு மிகப் பிடித்தமான சிறுகதை. பார்க்கில் காலை நடைபயிலும் இரண்டு நண்பர்கள் அருகம்புல் விற்கும் வியாபாரிகளிடம், தன் மகனைப் படிக்க வைப்பதற்காக அதே தொழில் நடத்தும் ஒருவனுக்காகப் பரிந்து பேச, அவர்களுடன் தகராறு செய்ய நேரிடுகிறது. பின்னர் அந்த வியாபாரிகளின் மனமாற்றம் நேர்ந்து அந்த வியாபாரிக்கும் ஓரிடம் கிடைக்கிறது அங்கு. இந்தச் சிறுகதையின் உள்ளீடான மனிதநேயமும், பாஸிட்டிவ் அப்ரோச்சும் சேர்ந்து ராமலக்ஷ்மியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக்கி விடுகிறது இதை.

பன்னிரண்டாவது சிறுகதை ‘இதுவும் கடந்து போகும்’ கூட பாஸிட்டிவ் அப்ரோச் கொண்ட கதைதான். ‘தானே’ புயலின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளின் பின்ணணில் துவங்கி உணர்வுகளைப் பேசும் கதை. படித்துத்தான் அதை நீங்கள் அனுபவிக்க முடியும். பதிமூன்றாவது சிறுகதை ‘அடைக்கோழி’ மருமகளின் விருப்பத்துக்கு மாறாக மாமியார் வளர்க்கும் கறுப்பி என்கிற கோழியையும் மாமியார்  உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட பின் அந்த அடைக்கோழி என்னாகிறது என்பதையும் விவரிக்கிறது. இதுவும் நுட்பமான உணர்வுபூர்வமான கதைகளில் ஒன்றாகக் குறிப்பிட வேண்டியது.

நான் தமிழில் ‘சுதாரித்துக் கொண்டு’ என்று வார்த்தை இருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். புத்தகம் பூராவிலும் ‘சுதாகரித்துக் கொண்டு’ என்றே வருகிறது. (சுதாரி - சரியா, சுதாகரி - சரியா?) பேச்சு வழக்கில் எது சரியான சொல் என்பது சரியாகத் தெரியவில்லை. யாராவது தமிழ் அறிஞர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். பார்க்கலாம்...

மொத்தத்தில் ‘அடைமழை‘ தொகுப்பைப் படித்து முடிக்கையில் உங்களுக்கு ஒரு மனநிறைவும், கூடவே லேசாய் மனதில் கனமும் ஏற்படுவதும், சிந்தனைகள் கிளறப்படுவதும் நிச்சயம் நடக்கக் கூடிய விஷயங்கள். என்னைப் பொறுத்த வரையில் இதுபோன்ற நல்ல கதைகள் சிலவற்றை நாமும் எழுதியாகணும் என்று மனம் உறுதி கொண்டது. தொப்பிகள் இறக்கப்பட்டன (ஹாட்ஸ் ஆஃப்-க்கு தமிழ்.. ஹி... ஹி...) ராமலக்ஷ்மி மேடம்!
*

ஊக்கம் தரும் விரிவான விமர்சனத்திற்கு மிக்க நன்றி கணேஷ்:)!
அவரது தளத்தில் வாசிக்க இங்கே செல்லலாம். அங்கு வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி.
**

“அடை மழை”
பக்கங்கள்:110 விலை: 100
பதிப்பகம்: அகநாழிகை

கிடைக்குமிடங்கள்:
சென்னை :

அகநாழிகை - புத்தக உலகம், சைதாப்பேட்டை
 டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர்
பனுவல், திருவான்மியூர்
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர்
பொக்கிஷம், அண்ணா நகர்

மற்றும்

கார்முகில் புத்தக நிலையம், திருச்சி
வம்சி புக்ஸ், திருவண்ணாமலை
சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்
பாரதி புக் ஹவுஸ், மதுரை
பாரதி புத்தகாலயம், ஈரோடு
பாலம் புத்தக நிலையம், சேலம்
விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்

தபாலில் வாங்கிட:
aganazhigai@gmail.com

இணையத்தில் வாங்கிட:

விரைவில்... Flipkart மூலமாகவும் வாங்கலாம்.
***

14 கருத்துகள்:

  1. ஹை.... முத்துச்சரத்தில் என் பெயரும்... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ராமலக்ஷ்மி மேம். என் விமர்சனத்தை மதித்து இங்கே பகிர்ந்ததற்கு என் இதயம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மின்னல் வரிகள் தளத்தில் நானும் படித்தேன். சிறந்த முறையில் சிலாகித்திருக்கிறார் கணேஷ்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.கணேஷ் நன்றாக ரசித்துப் படித்திருக்கிறார்.எனக்கு எப்போது சந்தர்ப்பம் வாய்க்குமோ.

    பதிலளிநீக்கு
  4. விமர்சனம் அருமை பால கணேஷ்.

    வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  5. @ஸ்ரீராம்.,

    ஆம். விரிவான மதிப்புரை. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. @வல்லிசிம்ஹன்,

    உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி வல்லிம்மா :).

    பதிலளிநீக்கு
  7. அருமையான் கதை விமர்சனம்.
    வாழ்த்துக்கள் மின்னல்வரி கணேஷ் அவர்களுக்கும் உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin