சனி, 31 டிசம்பர், 2011

2011-ல் முத்துச்சரம்



ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நேசம் அமைப்பு பற்றி அறிந்திட இங்கே செல்லக் கேட்டுக் கொள்கிறேன்.


சென்ற வருடம் இதே நாளில் நண்பர்கள் அழைத்ததன் பேரில் 2010-ல் முத்துச்சரம் [தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்] எழுதினேன். ‘2011-ம் நானும்’ எனத் தொடர் பதிவுகள் பதிவுலகில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் முத்துச்சரம் பற்றிய ஒரு பார்வை, சுய அலசலாக அடுத்த ஆண்டை எதிர்நோக்க வைக்கும் என்பதால் இந்தப் பகிர்வு. எனக்கான ஒரு டைரிக் குறிப்பாகவும் கொள்கிறேன்.

வலையுலகில் முதல் மூன்று வருடங்களுமே மாதம் மூன்று எப்போதேனும் நான்கு என்ற அளவிலேயே பதிவிட்டு வந்த நான் இந்த வருடம் சராசரியாக மாதம் 10 பதிவுகள் தந்திருப்பதற்கு நண்பரின் ஊக்கம் காரணம் என்பதை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

இந்த வருடச் சிறப்பாக அமைந்திருந்தன வலைச்சர வாரமும், தமிழ்மணம் நட்சத்திர வாரமும்.

வலைச்சர வாரத்தில் நண்பர்கள் பலரின் சிறந்த பதிவுகளை அறிமுகப்படுத்த முடிந்த மகிழ்ச்சியுடன் அங்கு ஒன்றும், அறிவிப்பாக முத்துச்சரத்தில் ஒன்றுமாக வழக்கத்துக்கு மாறாக 14 பதிவுகள் இட்டது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் மீள்பதிவுகள் இன்றித் தரமுடிந்த 16 பதிவுகள். நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் வெளியிடும் வாராந்திர ‘டாப் 20’ பட்டியலில் முத்துச்சரத்துக்கு முதலிடம் கிடைத்தது.

இரண்டு வாரங்களிலும் நண்பர்கள் தந்த ஊக்கம் நெகிழ்வானது.

எழுத்துக்கும் புகைப்படப் பயணத்துக்குமான அங்கீகாரங்களாக அமைந்து ஊக்கம் தந்தன கீழ்வரும் வெளியீடுகள்:

பத்திரிகைகள்:

  • தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள். அதிலொன்று நட்சத்திரவாரத்தில் பிடித்த ஓவியர் ராமுவின் சித்திரத்துடன்..

  • வடக்குவாசல் இலக்கிய இதழில் 3 கவிதைகள்
  • நவீன விருட்சம் 89-90வது இதழில் கவிதை

இணைய இதழ்கள்:


  • உயிரோசையில் 3 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
  • கீற்றினில் 5 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
  • திண்ணையில் 4 கவிதைகள்; 4 புத்தக விமர்சனங்கள்; 1 சிறுகதை
  • நவீனவிருட்சத்தில் 11 கவிதைகள்
  • வல்லமையில் 2 புத்தக விமர்சனங்கள், 1 கவிதை
  • பண்புடனில் 1 கவிதை; 1 புகைப்படத் தொகுப்பு
  • அதீதத்தில் 3 புத்தக விமர்சனங்கள்; 1 மொழிபெயர்ப்புக் கவிதை

வெளியிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.


க்ளிக் க்ளிக்


புகைப்படங்களைப் பொறுத்தவரை ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பதிவுக்கு தமிழ்மணம் விருது 2010-ன் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது: 2009-லும் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் என்பதில் இது தொடர் வெற்றியாயிற்று.

DSLR-ன் பயன்பாடுகளைக் கற்றுத் தேறிட வேண்டுமென்பதில் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. இருப்பினும் அதில் எடுத்த படங்களுடனான பதிவுகள் பல நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. PiT பதிவுகள் போக குடியரசு மற்றும் சுதந்திர தின மலர்கண்காட்சிகள், நிலவைப் பிடித்த கதைகள்(சூப்பர் மூன், சித்திரா பெளர்ணமி, சந்திரக் கிரகணம்), அதிவேகத்தில் எடுத்த இயற்கைக் காட்சிகள், பக் பக் பறவைகள், பெங்களூர் சிவாலயம் மற்றும் சிங்கப்பூர் பயணப் படங்கள் ஆகியன அவற்றில் சில.

மே மாதம் PiT குழுமத்தில் உறுப்பினராக இணைந்தது இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வைத் தந்தது.

29 நவம்பர், ஃப்ளிக்கர் எக்ஸ்போளரரில் அன்றைய சிறந்த படங்களில் ஒன்றாக என் படம் இடம் பெற்றது:

ஜூலையிலிருந்து அதீதம் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாக. அதன் ‘வலையோசை’ மற்றும் ‘ஃபோட்டோ கார்னர்’ பகுதிகளுக்கு முழுப் பொறுப்பு எடுத்து நல்ல வலைப்பக்கங்களையும் சிறந்த நிழற்படங்களையும் அறிமுகப்படுத்த முடிவதில் திருப்தி கிடைக்கிறது.

அதீதம் புத்தாண்டு இதழில்..அதீதத்தில் இந்த வருடம் மாதம் ஒரு சிறப்பாசிரியரை அறிமுகம் செய்வதை நடைமுறைப்படுத்தி உள்ளோம். புத்தாண்டு இதழுக்கு யார் ஆசிரியர் என அறிய இங்கே செல்லுங்கள். வலையோசையைக் காண இங்கே செல்லலாம். ஃபோட்டோ கார்னரில் புத்தாண்டை வரவேற்று ஆடும் அழகு மயில்களை எடுத்தவர் யார் என்பதைக் காண வேண்டாமா?

டந்த வருடம் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடாக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டுமென எடுத்தத் தீர்மானம் ஓரளவு நிறைவேறியிருப்பதைப் புத்தக விமர்சனங்களின் எண்ணிக்கை காட்டுகிறது. சிறுகதைகள் அதிகம் எழுத வேண்டுமென எடுத்த தீர்மானம் காற்றில் பறந்தது. பல கரு மனதில் இருந்தும் வடிவம் கொடுக்காத சோம்பேறித்தனம் வரும் ஆண்டிலாவது மாறுமா தெரியவில்லை. கவிதைகள் தோன்றும் பொழுது மட்டுமே எழுதுவதால் எந்தத் தீர்மானமும் எடுத்திருக்கவில்லை.

ஆக, செயல்படுத்த முடிந்த புகைப்பட நுணுக்கங்கள் கற்பது, வாசிப்பு இதற்கே வரும் வருடத்திலும் அதிக நேரம் செலவிட வேண்டுமென்பது சுலபமான நிலைப்பாடாகத் தோன்றுகிறது:)! பதிவுகளைப் பொறுத்த வரையில் வாரம் இத்தனை எனும் திட்டமிடல் ஏதுமின்றி இயலும்போது பதியலாம் என்றிருக்கிறேன். எண்ணிக்கை இவ்வருடம் போல் அமைவது சிரமமே.

2012_ல் வேண்டுவது இயற்கையின் ஆசி, உலகில் அமைதி, அனைத்துதரப்பு மக்கள் வாழ்விலும் சுபிட்சம், ஆரோக்கியம். இயற்கையிடம் நன்றியுடன் இருப்போம். இயன்றவரை பிறருக்கு உதவுவோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

வெள்ளி, 30 டிசம்பர், 2011

நைட் சஃபாரி - சிங்கப்பூர் பயணம் (9) - நிறைவுப் பாகம்

# 1. நீரைக் குடித்து நெருப்பாய்க் கக்கு
காணும் கனவைக் காரியம் ஆக்கு


ருட்டத் தொடங்கும் ஏழுமணிக்கே ஆரம்பமாகிறது காட்டுக்குள் பயணம். அதற்கொரு அரை மணி முன்னதாகவே ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றத் தொடங்கி விடுகிறார்கள். காத்திருக்கும் வேளையில் மீன் தொட்டிகளுக்குள் கால்களைக் கொடுத்து ஃபிஷ் ஸ்பா செய்தபடி சிலர், சுற்றியிருக்கும் கடைகளில் நினைவுப் பொருட்கள் வாங்கியபடி சிலர், மலைப்பாம்புகளை வாங்கிக் கழுத்தில் இட்டுப் படமெடுத்தபடி சிலர் எனக் கலகலப்பாக இருக்கிறது இடம். பாம்புகளைத் தோளில் போட்டுக் கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமென்கிற நம்பிக்கை அங்கே உள்ளது. ஜூராங் பூங்கா, மக்கள் நடமாட்டமுள்ள மெர்லயன் என எல்லா இடங்களிலுமே இதற்கென்றே பாம்புகளை வைத்திருந்தது குறித்து பாகம் இரண்டில் படங்களுடன் பகிர்ந்திருந்தேன். கையிலெடுக்க நடுக்கம், ஆனால் வேண்டும் அதிர்ஷ்டம் என்போருக்கு இங்கே அட்டை வீரன் பாம்பை ஏந்திக் காத்திருக்கிறான். முகத்தை உள்ளே விட்டுப் படமெடுத்துக் கொண்டு திருப்தியாக நடையைக் கட்டுகிறார்கள் வரப்போகும் அதிர்ஷ்டத்தை எண்ணிக் கனவு கண்டபடி.

# 2. முகப்பில் வரவேற்கும் பழங்குடியினர் சிலைகள்

# 3. பக்கத்தில் (சிரித்த முகத்துடன்?)‘நல்வரவு’ எனக் கூவும் முதலைசமீபத்தில் தன் அமெரிக்கப் பயணத்தில் அச்சு அசல் இதே போன்ற ஒரு முதலைச் சிலையின் வாயினுள் தன் ஒற்றைக் காலைக் கொடுத்து இரண்டு கைகளையும் தூக்கி அலறுவது போன்ற முகபாவத்துடன் ஒரு தோழி தன் படத்தைப் பகிர்ந்திருந்தார்:)! யோசனையும் ரசனையும் இணைந்த காட்சியாக இருந்தது அது.

# 4. நிகழ்வு மேடைஇரவு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் வரை தைரியசாலிகள் பாம்புமாலை அணிந்து காட்சி கொடுத்தபடி இருந்த மேடை.

# 5. தீப்பந்தங்கள்

திங்கள், 26 டிசம்பர், 2011

சீனக் கோவில், ஒரு சித்திரக் கூடம் - சிங்கப்பூர் பயணம் (பாகம் 8)



லகின் எந்தப் பாகமானாலும் இறையும் கலையும் இணைந்தே இருப்பதொரு அற்புதம். சிங்கப்பூரின் முக்கியமான, மிகப் பழமை வாய்ந்த வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான தியான் ஹாக் கெங் (‘சொர்கத்தின் மகிழ்ச்சி’ என்பது பொருளாம்) சீனக்கோவிலிலும் அதைக் காண முடிந்தது. இந்தக் கோவில் தெற்குச் சீனப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் வழி வந்தது.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இக்கோவில் கடற்கரையில் இருந்ததென்றால் நம்புவது கடினமே. இப்போது சிங்கப்பூரின் வியாபார மையத்தில் வான் தொடும் கட்டிடங்கள் சூழ பொலிவுடன் திகழ்கிறது.

# 2.
1821-ல் (ஜாஸ் ஹவுஸ்) மரத்தாலான வழிபாட்டுக் கூடமாக எழும்பியது. 1830-ல் சீனர்களின் நிதியுதவியுடன் தரமான மரங்கள், கிரானைட் கற்களுடன் கைதேர்ந்த வல்லுநர்களும் சீனாவிலிருந்தே வரவழைக்கப்பட்டனர். விளைவாக உருவானது தெற்குச் சீனப் பாரம்பரியக் கட்டிடக் கலையை உலகுக்கு காட்டும் விதமாக அமைந்த அழகுக் கோவில்.

புதன், 21 டிசம்பர், 2011

மூக்கும் முழியுமா.. கிளிகள் இத்தனை விதமா..?- ஜூராங் பறவைப் பூங்கா - சிங்கப்பூர் (பாகம் 7)

# 1. ரோசாப்பூக் கழுத்துக்காரி / Galah


Galah என ஆஸ்திரேலியாவிலும், Rose-breasted cockatoo-ஆகப் பிற பிரதேசங்களிலும் அறியப்படுகிற இவை எல்லா காக்கட்டூ கிளிகளையும் போலப் பல்லாண்டு வாழக் கூடிய ஆரோக்கியமான பறவைகள். நன்கு பராமரிக்கப்பட்டால் 50 வயது வரை வாழுமாம்.


Blue-and-yellow Macaw (Ara ararauna):

# 2. மூக்கும் முழியுமாய்..
Blue-and-Gold Macaw என்றும் அதன் தங்க வண்ணம் கொண்டு அழைக்கப்படுபவை. இதன் அலகு நல்ல கருப்பு நிறத்தில் ‘நறுக் முறுக்’ என கொட்டைகளைக் கடித்துச் சாப்பிடும் பலம் பொருந்தியவை. கருப்பு வரிகள் ஓடும் வெள்ளை முகம் ‘காச் மூச்’ எனக் கத்துகையில் சிலநேரம் பிங்க் ஆகி விடுவதுண்டாம்.

# 3. அன்பிற்கும் உண்டோ..
நீல உடல், வால்; ஆழ்நீலத் தாடை, தகதகக்கும் தங்க அடிப்பாகம், பச்சை நெற்றியென இதன் கவர்ச்சியான தோற்றத்தால் வளர்க்க ஆசைப்படுபவர் அதிகம். ஆனால் கிட்டத்தட்ட 3 அடி உயரமும் அதற்கேற்றபடி சுமார் 4 கிலோ எடையுமாய் வளர்ந்து நிற்குமாகையால் பெரிய கூண்டில் வைத்து பராமரிப்பது சிரமம் என ஒதுங்குபவரும் உண்டாம். 15 மீட்டர் அதாவது 50 அடி அகலத்துக்குக் குறைவான கூண்டில் இவற்றை வளர்க்கக் கூடாதென சட்டமே போடுகிறது World Parrot Trust. இந்தப் பூங்காவில் இடப் பிரச்சனையின்றி சுதந்திரமாகக் காட்டிலிருப்பது போலக் கொஞ்சிக் குலாவி வாழ்கின்றன.


திங்கள், 19 டிசம்பர், 2011

‘சதுரங்கம்’, ‘ஒருவேளை உணவு’ - 2010_ன் சிறந்த பனிரெண்டு சிறுகதைகளில்.. - ஒரு பகிர்வு (கீற்றினில்..)


சில கதைகளை எழுத்தாளருக்காகவே வாசிப்போம். சிலசமயம் எழுதியவர் யார் என்று கவனிக்காமலே வாசிக்கத் துவங்குவோம். பாதி வாசிக்கையிலேயே நடையாலோ கருத்தாலோ ஈர்க்கப்பட்டு அவசரமாய் பக்கத்தைத் திருப்பி யார் எழுதியது எனப் பார்ப்போம். அப்படியான அனுபவமே முதன்முறை ஆனந்த் ராகவ் அவர்களின் எழுத்தை வாசித்தபோது எனக்குக் கிட்டியது. கதையின் பெயர் நினைவில் இல்லை. பலமாதங்கள் முன்னர் வடக்குவாசலில் வெளியானது. புதியதாக வாங்கிய காரை ஓட்டிச் செல்லும் ஒருவனது மனநிலையைப் பற்றியதானது. பிறகு விகடனில் அவர் கதைகள் வெளியானபோது எழுதியவரின் பெயருக்காகவே முதலில் வாசித்தேன். வாசகர்களைக் கதைக்குள் இழுக்கும் நடைக்குச் சொந்தக்காரர். சென்ற வருட சிறந்த பனிரெண்டு கதைகளில் ஆகச்சிறந்ததாக இவரது கதை தேர்வாகியிருப்பதோடு இரண்டு கதைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சிறப்பையும் பெறுகிறார். அக்கதைகள் குறித்த பகிர்வுக்கு முன் இத்தொகுப்பைக் குறித்துச் சிலவரிகள்.

1970-லிருந்து கடந்த 41 வருடங்களாக இலக்கிய சிந்தனை வானதிபதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டு வருவதே இந்தப் பனிரெண்டு சிறந்த சிறுகதைகள் தொகுப்பு. பிரதி மாதம் கடைசி சனிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி மண்டபத்தில் இலக்கிய சிந்தனை அமைப்பின் கூட்டம் தவறாமல் நடைபெற்று வருகிறது. கூடுகிற வாசகர்களில் ஒருவர் கடந்த மாதத்தில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். ஆண்டு இறுதியில் புத்தகமாக 12 கதைகளையும் தொகுக்கும் முன், அதிலிருந்து ஒன்றைச் சிறந்ததாக தேர்ந்தெடுத்து அறிவிப்பதுடன், அனைத்துக் கதைகளுக்கும் மதிப்புரையும் வழங்கும் பணி ஒரு தேர்ந்த எழுத்தாளாருக்கோ அல்லது தீவிர இலக்கியத் திறானாய்வாளருக்கோ வழங்கப்படுகிறது. இந்த விவரங்களைத் தொகுப்பின் பதிப்புரை மற்றும் மதிப்புரையிலிருந்தே அறிய முடிந்தது. இம்மாதம் இப்பணியைச் சிறப்புற ஆற்றியிருப்பவர் மு. இராமநாதன் அவர்கள்.

சதுரங்கம் (ஆனந்த் ராகவ்), ‘அமுதசுரபி’ வெளியீடு: தாய்லாந்தின் எல்லையை எதிர்கொண்டபடி இருக்கும் மயாவடி எனும் பர்மிய நாட்டு எல்லையோர ராணுவ அவுட் போஸ்டில் முவங்தான், மின்டோன் ஆகிய இரண்டு முரட்டு அதிகாரிகளுக்கிடையேயான சதுரங்க ஆட்டம். எப்போதாவது அகப்படும் கேரன் படை கொரில்லாக்களுடன் சுபிட்சமில்லாத தம் நாட்டை விட்டுத் தாய்லாந்துக்குப் பிழைப்புத் தேடி தப்பியோடும் பர்மியரையும் சிறைப்படுத்துகிற இவர்கள், கைதிகளை எப்படி வெறித்தனமாகக் கொடுமை செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகச் சதுரங்க விளையாட்டைப் பயன்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சதுரங்கத்தை இதுகாலமும் புத்திசாலித்தனம், சாதுர்யம் நிறைந்த ஒரு விளையாட்டாகப் பார்த்தும் போற்றியும் வந்த நம்மில் பலரும் இக்கதையை வாசித்த பின்னர் நிச்சயமாய் அதைவேறு பரிமாணத்தில் பார்க்கத் தொடங்குவோம். உலகின் அத்தனை குற்றங்களுக்கும் பின்னான காய்நகர்த்தல்கள் எத்தனை கொடூரமானவை என்பது புரியவரும்.

முன்னே பின்னே பக்கவாட்டில் என்று குதித்து போர்களத்தின் வீச்சை நாலு எட்டில் எட்டி விடும் அந்தக் காயின் ஓட்டத்தைக் கண்டுபிடித்தவன் நிச்சயம் குதிரை சவாரியின் அற்புத அனுபவத்தை உணர்ந்த ஒரு புத்திஜீவி. குதிரை ஓட்டியபடியே ஓடும் மனிதர்களை துரத்திச் சுட்டுக்கொல்லும் முவங்தானுக்குப் பிடித்தமான வசீகரமான விளையாட்டைச் சதுரங்கக் குதிரையைக் கண்டுபிடித்தவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஆண்டாண்டு காலமாகத் தொடரும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தையும் போராட்டங்களைப் பற்றியதான அலட்சியம் மிகுந்த அவர்தம் எண்ணங்களையும் காட்டுகிறார்: “ராணுவத்திடம் பிடிபடும் சாத்தியக்கூறை மீறி எல்லை தாண்டுபவர்களின் எண்ணிக்கை குறையாமல் தொடர்வதும், உயிரைப் பயணம் வைத்து விடுதலை தேடும் வேட்கையும், முவங்தானால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. நாற்பத்தி எட்டு வருட ராணுவ ஆட்சியின் குரூரமான அடக்கு முறைக்கு அடிபணிந்த, நசுக்கப்பட்ட சமூகம் அவனை அவ்வளவாக எதிர்த்ததில்லை. எப்போதாவது எழும் போராட்டக் குரல்களும் ஊர்வலங்களும், ஆர்ப்பரிப்பும், வெடிக்கும் துப்பாக்கிகளில் சிதறிப்போய் தெருவெங்கும் ரத்தம் சிந்திவிட்டு சொற்ப நாட்களுக்குள் அடங்கிப் போய்விடும்.”

சதுரங்கப் பலகையை உற்று நோக்கியபடி மேலும் தொடர்கிறார்: “ ஒரு ராணுவ வீரனாய் அவன் அந்நிய நாட்டு எதிரிகளை விட சொந்த நாட்டின் ஜனங்களைக் கொன்றது அதிகம். அதுவேறு வகையான சதுரங்க ஆட்டம். ஆயுத பலம் பொருந்திய ராணுவத்தினருக்கும், நிராயுதமாணிகளான ஜனநாயகம் விரும்பும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் நிரந்தர சதுரங்க ஆட்டம். எதிரணியின் தலைமையைச் சிறையிலடைத்து அவர்கள் ஆதரவாளர்களை நகரக் கூட அனுமதிக்காத அடக்குமுறை ஆட்டம்.

ஆட்டத்தில் தோல்வியடையும் அதிகாரி ஆத்திரத்தில் சதுரங்கப் பலகையிருந்த மேஜையையே தூக்கியெறிகிறான். வென்றவனின் ஆர்ப்பரிப்பும் கொக்கரிப்பும் உச்சக்கட்டப் போர் கொடூரத்தை நோக்கி நகர்வதாகக் கதை முடிகிறது.

நம்பிக்கையூட்டும் படியாக இக்கதையின் முடிவு அமையாததற்கு பதில் சொல்லும் விதமாக மு. இராமநாதன் அவ்ர்கள் தன் மதிப்புரையில் எடுத்தாண்டிருக்கும் பி.ஏ. கிருஷ்ணனின் வரிகள் மறுக்க முடியாத உண்மையாக, “தருமம் வெல்வதும், சூது தோற்பதும் மனிதனின் நிறைவேறாத ஆசைகளில் முக்கியமானது... ஆனால் வெட்ட வெட்ட வளரும் தலைகள் சூதினுடையது.. தருமம் வெல்ல இன்னும் பலநாட்கள் ஆகும் என்பது பற்றி ஒரு நல்ல சிறுகதை கோடி காட்டிவிடும்”!

ஒருவேளை உணவு (பாவண்ணன்), ‘வடக்குவாசல்’ வெளியீடு: பெருநகரங்களில் ‘ஹெளஸ் கீப்பிங்’ எனும் சொல்லோடு வேலைக்கு எடுக்கப்படும் அடித்தட்டு பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்: “ஒப்பந்தக் காரர்களிடம் எப்போதும் இரண்டு தூண்டில்கள் உண்டு. கிராமத்தில் வாழ வழியில்லாமல் நகரை நோக்கி வருகிற, உடலுழைப்பாளர்களை நோக்கி ஒரு தூண்டில் எப்போதும் நீண்டிருக்கும். வசதியில்லாத காரணத்தால் நகரத்திலேயே பள்ளியிறுதிப் படிப்போடு கல்வியை முடித்துவிட்டு எதிர்காலம் குறித்த அச்சத்தோடு உலவிக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஈர்க்கும் வகையில் மற்றொரு தூண்டில் நீண்டிருக்கும்.

கதைசொல்லி பேருந்து நிறுத்தத்தில் தான் சந்திக்க நேரும் சாவித்திரி எனும் பெண்மணி, ஜி எம் குவார்டர்ஸில் வேலை செய்வதை அறிய வருகிறார். நாளடைவில் அவள் நட்புடன் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளின் மூலமாக ஒருவேளை உணவுக்காக இவர்கள் எப்படி சுயமரியாதை மறந்து வாழ வேண்டிய சூழலில் என்பதையும் பணம் என்கிற ஒரேயொரு விஷயத்தில் மேம்பட்டு விட்டதால் மனிதர் மனிதரை எப்படியெல்லாம் கீழ்தரமாக நடத்தவும் பேசவும் துணிகிறார்கள் என்பதையும் சொல்வதாகக் கதை அமைந்துள்ளது. சாவித்திரி சொல்லுகிறாள்: “ஒருவேளை சோத்துக்கூட வழியில்லன்னுதான இந்த வேலைக்கு வந்தம். மானம் ரோசம்லாம் பாத்தா எங்க போயி நிக்கறதுன்னு பல்ல கடிச்சினு போயிடுவேன்.

சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தாண்டி, இன்னும் பல தேவைகளையும் தீர்த்து வைக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உரையாடலில் உணவைப் பற்றிய பேச்சே இடம் பெறுவதில்லை. வீடு, வாசல், வாகனம், சொத்து எனப் பல திசைகளில் உணவைத் தாண்டிய தேவைகளை நோக்கி விரிந்து போகிறது. சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளவே முடியாதபடி பற்றாக்குறையாக இருக்கிறது. அவர்கள் மன ஆழத்தில் உள்ளூர உணவைப் பற்றிய அச்சம் எப்போதும் நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தபடியே இருக்கிறது.” விவரிக்கும் கதை சொல்லிக்கு மேல்வர்க்கம் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பார்த்து ஏற்படுகிற நடுக்கம் நமக்கும் பரவுகிறது.

வூடு (பாரதி தம்பி) ‘ஆனந்த விகடன்’ வெளியீடு: மனிதனுக்குப் பிறப்பு என்பது ஒரே விதமாகதான் நடக்கிறது. வறுமை என்பது தொப்புள் கொடியோடு சேர்ந்தா வருகிறது? அப்படித்தான் என்றால் எங்கோ பிழை இருக்கிறது.

பரந்த இவ்வானின் கீழ் தம் வீடென சொல்லிக்கொள்ள ஓரங்குல இடமும் அற்று வீதியோரத்தில் வாழ்க்கை நடத்தும் குடும்பம் ஒன்று. அதன் தலைவன் திறக்கப்படாத கட்டணக் கழிப்பறையில் தன் குடும்பத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு குடியேற்றுகிறான். அங்கேயே பால் காய்ச்சுகிறார்கள். வீட்டின் தனிமையை, தமது என்பதன் உரிமையை ரசித்து ருசிக்கிற குடும்பம் மீண்டும் வீதிக்கே வருவதே கதை. சிறுவன் ஜஸ்டிஸை முன் வைத்துக் கதை நகர்கிறது.

குறையொன்றுமில்லை (ஜோதிநகர் சிவாஜி கிருஷ்ணா) , கல்கி வெளியீடு: எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாது அரசு புறக்கணிக்கும் கிராமங்களில் நூறுசதவிகிதம் வாக்குப் பதிவாவதும் அவர்களை மதிக்க அரசு தவறுவதும் இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. அப்படியான ஒரு மலைக் கிராமத்துக்கு தேர்தல் சமயத்தில் வந்து சேரும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு எந்த வசதிக் குறைவும் வராது பார்த்துக் கொள்கின்றனர் அப்பாவி மக்கள். அந்தத் தேர்தலில் ஒரேயொரு வாக்கு மட்டும் குறைந்து போனதின் காரணம் கலங்க வைப்பதாக.

நான்கு கதைகளைப் பற்றி மட்டும் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். இவற்றுடன் ஆனந்த் ராகவ் எழுதிய ‘தரை தொடும் விமானங்கள்’ உட்பட செ. செண்பக கண்ணு, மாதங்கி, ஜெய் விஜய், சீதா ரவி, பாமதி மைந்தன், இராம. முத்து கணேசன், மலர் மன்னன் ஆகியோர் எழுதியதுமாக, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒன்றெனும் கணக்கில் பனிரெண்டு கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. பனிரெண்டு எழுத்தாளர்களுக்கும், கதைகளை வெளியிட்டப் பத்திரிகைகளுக்கும் வாழ்த்துகள். இலக்கிய சிந்தனை அமைப்பின் சேவைக்கும் வானதிப் பதிப்பகத்துக்கும் பாராட்டுக்கள். இந்த வருடம், 2011-ன் சிறந்த கதைகளின் தொகுப்புக்காகக் காத்திருப்போம்.
***

சதுரங்கம் - இலக்கியச் சிந்தனை 2010ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்


விலை ரூ:60. பக்கங்கள்: 154.

வெளியீடு: வானதி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடம்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006].
***

17 டிசம்பர் 2011, கீற்று இணைய இதழில், நன்றி கீற்று!

சனி, 10 டிசம்பர், 2011

சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து..

# 1

நேற்று மாலை கார்த்திகை நிறைநிலா. இன்று மாலையிலோ கிரகணப் பிறைநிலா. ஆறு மணி பதினான்கு நிமிடத்தில் ஆரம்பித்து, மெல்ல மெல்லக் கீழிருந்து மேலாக இடமிருந்து வலமாகத் தேய்ந்து எட்டு மணி இரண்டு நிமிடத்தில் முழுமையாக மறைந்து மறுபடியும் கீழிருந்து மேலாகவே வலமிருந்து இடமாக வளர்ந்த இச்சந்திரக் கிரகணமே இதுகாலமும் வந்தவற்றில் நீண்ட ஒன்றாகுமாம் அடுத்து 2018-ல் வரவிருக்கும் கிரகணம் வரை.

# 2 ஃப்ளிக்கர் தளத்தில் நேற்றுப் பதிந்த கார்த்திகை முழுநிலவு


இன்று:

# 3 கண் முன்னே தேயும் அற்புதம்

முன் நேரத்தில் தேயும் நிலவை யூரோப், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய நாடுகள் பார்க்க முடிந்திருக்காதாம் சந்திரன் உதிக்கும் நேரம் வந்திருக்காததால். இந்தியாவின் எல்லாப் பாகங்களிலிருந்தும் நன்கு பார்க்கமுடியுமென்று சொல்லப்பட்டாலும் மேகங்கள் மனது வைக்காவிட்டால் முடியாதே:)! ஆம், எட்டாவது தளத்துக் குளிரில், மூடிய வானைக் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்த என் மேல் இரக்கம் கொண்டு மேகங்கள் போனால் போகுதென அவ்வப்போது கொஞ்சமே கொஞ்சம் நகர்ந்து நிலவைக் காண்பித்துக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன.

# 4 முகில்களின் கருணையில்..
இதற்கடுத்து பதிவின் முதல் படத்தையும் முடித்து 15 நிமிடங்களாகியும் அடர்த்தியாக நிலவை மூடிக் கொண்டு ‘அவ்வளவுதான்’கட்டு மூட்டையை’ எனச் சொல்லி விட்டது மேகக்கூட்டம்:(! இதனால் வளரும் நிலவைப் படிப்படியாக பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

மறுபடி முழு நிலவாகும் நேரத்துக்குச் சிலமணித்துளிகள் முன்னே சரியாக மேலே சென்ற போது...

# 5

# 6





# 7
              பூமியின் நிழல் விட்டு விலக மீண்டும் வட்ட நிலாவாக..
இப்படியொரு அதி பிரகாசமான நிலவைக் கண்டதேயில்லை என சொல்லும்படியாக இருந்தது கிரகணம் முடிந்த உடன் ஒளிர்ந்த நிலவு:


அதுவரை சுற்றிச் சுற்றி வந்த மேகக் கூட்டம் இந்தப் பிரகாசத்தின் அருகில் நிற்க முடியாமலோ என்னவோ ஒருவித அதிர்ச்சி கலந்த வேகத்துடன் விலக ஆரம்பித்தன. அப்போது அவை வானில் வரிசை கட்டி நகன்ற கோணத்தைக் காணக் கண்கோடி வேண்டும். 18-55mm லென்ஸை உடன் எடுத்துச் சென்றிராததால் படமாக்க இயலவில்லை.

நேர்த்தியான படங்கள் என சொல்ல மாட்டேன். அப்பெச்சர் மோடிலிருந்து இப்போது மேனுவல் மோடிலுமாக முயன்ற பரிசோதனை முயற்சிகளில் சிலபடங்கள் திருப்திகரமாக இல்லைதான். இருந்தாலும் ஒரு அற்புத நிகழ்வைப் படமாக்கிய திருப்தி. சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வருகிற இப்பொழுதில், [தலைப்புக்கான பதில்:)] பூமியின் நிழலால் நிலவு இப்படித் தேய்ந்து மறைந்து மீண்டும் முழுமையாகத் தெரிகிற சந்திர கிரகணத்தை மீண்டும் காண நாம் 27/28 ஜூலை 2018 வரைக் காத்திருக்க வேண்டுமாம்.
***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON
2. சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..

புதன், 7 டிசம்பர், 2011

ஆப்ரிக்கக் காடும் அழகுப் பறவைகளும் - ஜுராங் பூங்கா - சிங்கப்பூர் (பாகம்-6)

பீடு நடை போடும் மயில், சிறகைச் சிலிர்க்கும் வான்கோழி, வீட்டுக்கு வரும் பக்பக் புறாக்கள் கீச்கீச் மைனாக்கள் எனப் பறவைகளைப் படம் எடுப்பதென்றால் படுகுஷியாகி விடும் என்னை, 20 ஹெக்டேர் பரப்பளவிலிருக்கும் பறவைப்பூங்காவில் கொண்டு விட்டால் என்னாகும்:)? விடைதான் இப்பதிவும், வரவிருக்கும் அடுத்த பாகமும்!!

# 1.மயில் போல... புறா ஒண்ணு...

[Victoria Crowned Pigeon]

சிங்கப்பூரின் ஜூராங் பறவைகள் பூங்கா 380 வகைகளில் 5000 பறவைகளைப் பராமரிக்கிறது என்றால் ஆச்சரியமாய் இருக்கிறதில்லையா? அதுவும் இயற்கையான சூழலிலேயே என்பதுதான் விசேஷம். ஏவியரி எனப்படும் உயர்ந்த மரங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டக் கூண்டுகளில் பறவைகள் வெளியேறியும் விடாமல் அதே நேரம் சுதந்திரமாக இயற்கையின் மழை வெயில் இடி மின்னல் எல்லாவற்றையும் அனுபவித்தபடி வாழுகின்றன.

பூங்காவின் எந்தெந்த இடத்தில் என்னென்ன வகைப் பறவைகள் உள்ளன என்பதற்கான தெளிவான வரைபடம் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் தந்து விடுகிறார்கள்.

# 2. பறவைகள் பலவிதம்


உள்ளே நுழைந்ததும் வரவேற்றது பேரட் பேரடைஸ். காக்கட்டூ, மக்கா, ஸ்கார்லெட், சன் பாரகீட், எலக்டஸ், ஜுவினைல் கிளிகளின் சத்தம் இடத்தையே ரம்மியமாக்கியது. வந்து கவனிக்கிறோமெனக் கையசைத்து விட்டு பனோரெயிலில் ஏறினோம்.

# 3. கிளிகள் கையில் கிளிகள்


மூன்று ஸ்டேஷன்களில் நிறுத்தம் கொண்ட இந்த பனோ ரயில் தொடர்ந்து சுற்றியபடி இருக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி [நடக்க முடிகிற அளவு:)]அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பறவைகளை ரசித்து விட்டு ரயில் அடுத்த ரவுண்ட் வரும் போது ஏறிக் கொள்ளலாம்.

திங்கள், 5 டிசம்பர், 2011

அழகன் - நவீன விருட்சத்தில்..



அந்தக் கனவில்
அவன் அழகாகத் தெரிந்தான்
கழுத்து நிறையப் பதக்கங்களுடன்
வெற்றிகளைக் குவித்திருந்தான்

ஒரு கனவில்
அவனை இந்திரன் சந்திரன் என்றனர்
மெத்தப் படித்த மேதாவி என்றனர்
அவன் முகத்தின் பொலிவு கண்டு
அவன் கண்களே கூசின

தனி விமானத்தில் உலகம் சுற்றிய
நீண்ட கனவொன்றில்
அவன் கம்பீரம் கூடியிருந்தது

தன் இருபத்தெட்டு மாடிவீட்டின்
மேல்தளத்துத் தோட்டத்தில்
காலைத் தேநீர் பருகிய கனவில்
மேகங்கள்
முற்றுகையிட்டுக் கொண்டாடின
அவன் அந்தஸ்தை

கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே
புலர்ந்தன தினம் பொழுதுகள்

இப்போதெல்லாம்
அவற்றுக்காகவே
சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான்

நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
திரை தந்தப் போதையில்
பகல் கனவும் பழக்கமாயிற்று

பலிக்குமெனச் சொல்லப்பட்ட
பகல் கனவுகளில்
மறந்தும் ஒருதுளி வியர்வை
வெளியேறிடாமல்
மேனி மினுமினுப்பைப்
பாதுகாத்துக் கொண்டான்

நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற
அறைநிலைக்கண்ணாடி
தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ள இயலா
சகிப்புடன்
காட்டிக் கொண்டிருந்தது
விழிசெருக வாய் திறந்து
கனவில் கிடந்தவனை

அவலட்சணத்தின்
மொத்த இலக்கணமாக.
***

14 நவம்பர் 2011 நவீன விருட்சம் இதழில்
.., நன்றி நவீன விருட்சம்.

வியாழன், 1 டிசம்பர், 2011

உன்னைப் போல் ஒருவன் - PiT - டிசம்பர் 2011 போட்டி

இரட்டை. ஆனால் ஒரே மாதிரியான இரண்டு.

ட்வின்ஸ். ஆமாம், ஒன்றைப் போல ஒன்று.

புரிந்திருக்குமே இப்போது தலைப்பு? ‘உன்னைப் போல் ஒருவன்’:)!

மூன்று வருடங்கள் முன்னர் ‘ஜோடி’ என ஒரு தலைப்பு தரப்பட்டது ஒரு சிலரின் நினைவுக்கு வரலாம். இரண்டு வேறு வேறு விஷயங்கள் ஜோடி போட்டு ஜாலியாகக் கை கோர்த்துக் கொள்ளலாம். இந்தத் தலைப்புக்கு அது கூடாது. அச்சிலே வார்த்த மாதிரி இல்லையானாலும் ‘அட ஆமா அவனைப் போலவே இவன்’ என சொல்லும்படியாக இருக்க வேண்டும்.

படத்தில் இரட்டையரே பிரதானமாகத் தெரிய வேண்டும்.

ஃபோட்டோஷாப் மிரரிங் உதவியோடு சப்ஜெக்ட் டபுளேக்ட் (டபுள் ரோல்) செய்யாமல் இயல்பான இரட்டையராக இருக்க வேண்டியதும் அவசியம்.

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

# 1) “நான் அவனில்லை”


# 2) 24 + 24 கேரட்


# 3) பூக்குட்டிகள்


# 4) பல்லவ ராஜாவின் பரிவார யானைகள்


# 5) “ஆறு வித்தியாசமா.. சான்ஸே இல்லை..”


# 6) கல் இருக்கு, ஆள் இல்லை..


# 7) ஒரு கொடியில்..


# 8) ஒன்றைப் போல் ஒன்று


# 9)‘என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...?’


# 10) யாரைப் போல யாரு?


இத்துடன் கீழ்வரும் ஜீவ்ஸ், கருவாயன், சர்வேசன் ஆகியோரது அழகான படங்களையும் மாதிரிக்கு முன்வைத்து, நடுவராக PiT தளத்தில் வெளியிட்ட அறிவிப்புப் பதிவையே இங்கும் பகிர்ந்துள்ளேன்:

கோதாவில் குதிக்கப் போகும் இரட்டையரை இங்கே வரவேற்கக் காத்திருக்கிறது PiT.

படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி 15 டிசம்பர் 2011.


29 நவம்பர் 2011 ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்திருந்த தங்க மீன்களை தன் Explore பக்கத்தில் ஃப்ளிக்கர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருந்ததை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி:
*****

ஞாயிறு, 27 நவம்பர், 2011

நட்சத்திர வாரமும் நன்றி நவிலும் நேரமும்

கண்சிமிட்டும் நேரத்தில் கடந்து விட்டது வாரம். வாய்ப்பு வந்த வேளையில் சேமிப்பில் இருந்த சில பதிவுகளை மட்டுமே நம்பிச் சரி என ஏற்றுக் கொண்டாலும் ஒருவித மலைப்பு இருக்கவே செய்தது. ஆயினும் சராசரியாகத் தினம் இரண்டு என்ற விகிதத்தில் இத்துடன் 16 இடுகைகள் அளிக்க முடிந்தது என்றால் அது நண்பர்களின் ஊக்கத்தினாலும், நட்சத்திரமாகப் பொறுப்பேற்றது அறிந்து வழக்கமாக வராதவர்கள் கூட தேடி வந்து முதல் பதிவில் அளித்த வாழ்த்துகள் தந்த பலத்தினாலுமே.



இவ்வார முன்னணி இருபது வலைப்பதிவுகளில் அதிக பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்தில் முத்துச்சரம். எதிர்பாராதது. வாழ்த்தியிருந்தார் இன்றைய பதிவில் நண்பர் ஒருவர். ஒருநாள் முதல்வர் போலக் கிடைத்த இந்த ஒருவாரச் சிறப்புக்குக் காரணம் முகப்பில் தனிக்கவனம், இடுகைகளின் எண்ணிக்கை, நண்பர்களின் ஆதரவு ஆகியவையே. கூகுள் ஸ்டாட்ஸ் தினம் சில ஆயிரங்களில் காட்டியப் பார்வையாளர்கள் எண்ணிக்கைச் சற்று மிரளவே வைத்தது. இந்த இடத்தின் புரிதல் சரிவர இன்றிப் பெரிய திட்டமிடலும் இல்லாமல் தொடங்கியிருந்த வேளையில் மாலை நேரப் பதிவுகளாக 3 நாட்கள் பயணக்கட்டுரையைப் புகைப்படங்களுடன் பகிர்ந்த போது ‘நட்சத்திர வாரத்தில் ஒரே மாதிரியான அதுவும் புகைப்படங்களாகவே வேண்டாமே’ என அன்புடன் அறிவுறுத்திய உரிமையுடன் கேட்டுக் கொண்ட நட்புகளுக்கு என் சிறப்பு நன்றி. ஆம், அதிகம்பேர்கள் ரசித்தாலும், புகைப்படங்களை எப்போது வேண்டுமானாலும் பகிரலாம்தான். எழுதும் எண்ணத்தில் குறிப்புகளோடு நிறுத்தியிருந்த பதிவுகளை வேகமாகச் செயல்பட்டு எழுதிப் பதிந்தேன். நள்ளிரவில் பெற்றோம்.. இன்னும்.. ; இவர்களுக்குப் பூங்கொத்து இரண்டுமே மனதுக்கு நிறைவாக. நிறைவு நாளான இன்று வெளியாகியுள்ள தினமணி கதிர் சிறுகதையும் சமூகத்துக்கான இன்னொரு பதிவாக அமைந்ததில் திருப்தி.

வாசிப்பின் மீதான நேசம் மக்களுக்கு வற்றிவிடவில்லை எனக்காட்டுவதாக அமைந்திருந்தன வாழ்வை வளமாக்கும் புத்தகங்கள், புத்தகக் கண்காட்சிப் பதிவு ஆகியன பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை. மலரும் நினைவுகளுடன், குறும்பட விமர்சனம், கவிதை, வாசிப்பனுபவம், புகைப்படக் கலையை வளர்க்கும் PiT என இயன்றவரை (மீள்பதிவுகள் இன்றி) மாறுபட்டப் பதிவுகளைப் பகிர்ந்ததாகவே என் வரையில் எண்ணுகிறேன்.

வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
*****

கற்க-கற்பிக்க-கற்க “தமிழில் புகைப்படக்கலை”

டிஜிட்டல் புரட்சி புகைப்படக்கலையைப் பொறுத்தவரை ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் பிரமாண்டமானது. ரோல் ஃப்லிமை வாங்கி 36 (அதற்கும் முந்தைய காலத்தில் 12) படங்களே எனப் பார்த்து பார்த்து எடுத்து, ஸ்டுடியோவில் “நன்றாக வந்தவை மட்டும்” எனும் குறிப்போடு பிரிண்ட் போடக் கொடுத்து... அந்தக் காலமெல்லாம் போயே போச்சு. ஒரு படம் நல்ல வரணுமா? “தட்டு ராசா தட்டு” எனத் தொடர்ந்து கேமராவை தட்டிக்கிட்டே இருக்கலாம். எந்தக் கட்டுப்பாடுமின்றி செல்லுமிடங்களில் ( நம் கேமராவின் மெமரி கார்ட் கொள்ளளவைப் பொறுத்து) எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். வீட்டில் விசேஷமா, கேமரா மேனை கூப்பிட்டாகும் கட்டாயங்கள் இல்லை. நினைவுகளை சந்தோஷமாகப் பத்திரப்படுத்துகின்றன குடும்பங்கள். படம் பிடிப்பது, பிரதி எடுப்பது இவை தம் வருமானத்துக்கு ஆடம்பரம் என்பது போய் அனைத்து தரப்பினருக்கும் எட்டும் கனியாகியிருப்பது டிஜிட்டலின் இன்னொரு சிறப்பு. எளிய முறையில் கையாள வசதியாக பாயின்ட் அண்ட் ஷூட் கேமராக்கள். அதுவுமின்றி பத்திரிகை, மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, விளம்பரம், விஞ்ஞானம் முதல் விண்வெளி வரை இக்கலை இல்லாத துறைகளே இல்லை எனலாம். பதிவர்களைப் பொறுத்த வரையில் செல்லும் நிகழ்வுகளைப் படங்களுடன் பகிரவேண்டிய அவசியமும் ஆவலும் இருக்கிறது.

ஆனால் எடுக்கிற படங்களைச் சிறப்பாக எடுக்கிறோமா? என்ன தவறுகள் செய்கிறோம்? ஒரு கேமராவில் தரப்பட்டிருக்கும் பலவிதமான வசதிகளை முழுமையாகப் பயன்படுத்துகிறோமா? அவரவரின் தேவைகள் என்ன? அதற்கு என்ன வகையான கேமரா சிறந்தது? இன்னும் நம் திறனை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்? இவற்றை எல்லாம் எளிய தமிழில் புரியும் வகையில் கற்றுத் தரும் திறனில்தான் “தமிழில் புகைப்படக்கலை” Phototography-in-Tamil (சுருக்கமாக PiT) தளம் பிற புகைப்படக்கலை தளங்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. இங்கு படங்களை மேம்படுத்தும் ஃபோட்டோஷாப் நுணுக்கங்களை மட்டும் சொல்லித் தராமல் மேல் சொன்னவற்றையும் விளக்குவதாலேயே 800 பேர்கள் தொடர, ரீடரில் தொடருபவர் 1160-யைத் தாண்டி வளர்ந்தபடி இருக்கிறது. புதுப்பதிவுகள் இல்லாத நாளிலும் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 300 பார்வையாளர்களைப் பெற்றபடி உள்ளது.


இத்தளம் குறித்து பதிவுலகில் அனைவரும் நன்கறிந்திருப்பினும் புதிதாக வருபவரும், ஏன் பதிவராகி ஓரிரு வருடங்கள் கடந்த சிலரும் கூட ‘PiT என்றால் என்ன? ஏதோ மாசாமாசம் அதுக்கு போட்டின்னுல்லாம் பதிவு போடுறீங்களே?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் போன்றவருக்காகவும் சமீபத்தில் இணைந்தவருக்காகவும் இப்பதிவென்று கொள்ளலாம். இதன் ஆரம்பக்கால வரலாறையும் சற்றேத் திரும்பிப் பார்க்கலாம்.

“கற்க-கற்பிக்க-கற்க” (learn-teach-learn) எனும் நோக்கத்துடன் ஆர்வமுள்ள திறமையான நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ஜூன் 2007-ல் ஓசைச் செல்லா மற்றும் ஜீவ்ஸ் ஆகியோர் ஆரம்பித்ததே இத்தளம். பலரும் இணைந்து பணியாற்றிய களத்தில் ஓசைச்செல்லா, CVR, தீபா போன்றோர் பணிச்சுமையால் தொடர்ந்து செயலாற்ற இயலாத நிலையில் விலகிச் சென்று விட்டாலும் ஆரம்பத்திலிருந்து தளத்தைச் சிறப்பாகக் கொண்டு சென்றபடி இருப்பவர்கள் சர்வேசன், கருவாயன், நாதாஸ், ஆனந்த், ஜீவ்ஸ் ஆகியோர். சமீபத்தில் இணைந்தவர்களாக MQN, Anton மற்றும் நான். இக்கலையானது முடிவற்ற கற்றலை உடையது. உறுப்பினர்கள் தாங்கள் தொடர்ந்து பரீட்சிக்கும், கற்றுக் கொள்ளும் விஷயங்களைப் படிப்படியான விளக்கங்களுடன் பகிர்வதே PiT பாடங்களின் சிறப்பு.

பாடப் பகிர்வுகளோடு நின்றிடாமல் தமிழர்களிடையே இக்கலையின் மீதான் ஆர்வம் தொடர்ந்து வளர PiT நடத்தும் மாதாந்திரப் போட்டிகளையும் நடத்தி வருகிறது. பொதுவாக ஒன்றாம் தேதி போட்டி அறிவிப்பு, 20ஆம்தேதி முதல் சுற்று, மற்றும் 25 ஆம் தேதி இறுதிச் சுற்று அறிவிப்புகள் வெளியாகும். படங்களை அனுப்பக் கடைசித் தேதி 15, தவிர்க்க முடியாத காரணங்களால் அறிவிப்புகள் தள்ளிப் போகையில் மட்டும் முடிவுத் தேதி 20 என அறிவிப்பாகும். ஒவ்வொரு மாதத்துக்குமான பொதுவான போட்டி விதிமுறைகள் இங்கே. ஆர்வத்துடன் ஒவ்வொரு மாதமும் 50 முதல் 90 பேர் வரை போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள் . அவரவர் தங்கள் திறமையை நிரூபிக்க, படங்களை மற்றவர் பார்வைக்கு வைக்க உதவும் களமாக மட்டுமின்றி பிறர் படங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் நல்ல வாய்ப்பையும் இப்போட்டிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. போகவும் உலகளாவிய போட்டிகள் பலவற்றைப் பற்றிய அறிவிப்புகளையும் PiT தன் தளத்தில் தமிழ் நண்பர்களுக்கு அறியத் தருகிறது.

இன்னொரு முக்கிய அம்சம், இது ஒரு இலாப நோக்கற்ற தளம். இதன் உறுப்பினர் பலரும் தங்கள் கடும் பணிச்சுமைக்கு மத்தியில் தமிழ் நண்பர்கள் புகைப்பட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திட வேண்டுமென்கிற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே செயலாற்றி வருகிறார்கள். இப்போது இதிலிருக்கும் பாடங்களை வகைப்படுத்தி PDF கோப்புகளாக மாற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன் வந்துள்ளார் கிடைக்கிற ஓய்வு நேரத்தில் உறுப்பினர் Anton. வாசகர் வசதிக்காக அவற்றைத் தொகுத்து மின்புத்தகமாக வழங்க உள்ளது PiT.

அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமில்லாமல் சிலருக்குத் தொழிலாக, சிலருக்கு மனதுக்குப் பிடித்த பொழுது போக்காக, சிலருக்கு தாம் வாழ்ந்த காலத்தை வருங்கால சமுதாயத்துக்கு ஆவணப்படுத்தும் ஊடகமாக எனப் பலவித பயன்பாடுகளுடன் நிழற்படக் கலை. கற்போம். பகிர்வோம். கற்போம்.
***

இன்னொரு வசந்தா - (இன்றைய) தினமணி கதிர் சிறுகதை

சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி.

திசைக்கொன்றாகப் பக்கங்கள் பறந்து விழும்படிப் பத்து நாட்களாகச் செய்தித்தாள் விசிறியடிக்கப்பட்டக் கடுப்பில் இருந்தவர்“ஏஜெண்ட் வரலியோ? இந்த மாசத்திலேருந்து பேப்பரு வேண்டாம்னு சொல்லிடு”என்றார் அலைபேசியில் தினம் கூப்பிட்டும் ஏஜண்ட் தன் அழைப்பை எடுக்காத கோபத்தில்.

“ஐயையோ அப்படில்லாம் சொல்லாதீங்க. என்னய வேலய விட்டுத் தூக்கிடுவாரு. நேரத்துக்குப் போடுறனே சார்!”பதட்டமாகக் கூவினான் சிறுவன்.

அதிர்ச்சியாக இருந்தது சபாபதிக்கு. பேப்பர் போடப் பையன்கள் உபயோகிக்கப்படுவது அறிந்ததுதான். அதற்காக இப்படியா? நாலடி எட்டாத உயரம். பனிரெண்டு வயதைத் தாண்டியிருக்க வாய்ப்பே இல்லாத பால் வடியும் முகம்

“அலாரம் வச்சு மூணரைக்கெல்லாம் எந்திச்சுக்கறேன். சரியா நாலு மணிக்கு ஏஜண்ட் வாசலில் சைக்கிள் பெல் அடிச்சுக் கூட்டிட்டுப் போயிடுவார். ஒருநாள் லீவு போட்டதில்லையே? என்ன தப்பு சார் செஞ்சேன்?” கலக்கத்துடன் பையன் கேட்கவும் அதிர்ச்சியின் அளவு எகிறியது.

“ஆமா உன்ன மாதிரிச் சின்னப் பசங்க பேப்பரு போட்டா போலிசுல புடிச்சுடுவாங்க தெரியுமா? படிக்கற வயசுல எதுக்கு இந்த வேல? என்ன கஷ்டம் வீட்டுல? சரி நீ போ. நான் பேசிக்கறேன் ஒன் மொதலாளிகிட்டயே” என்றார் கடுமையாகவே.

“படிப்புச் செலவுக்கு ஆகுமின்னுதான் இந்த வேலயச் செய்றேன் சார். ஒம்பதாவதுல இருக்கேன். ஒழுங்கா ஸ்கூல் போறேன்j எங்க மொதலாளி ரொம்ப ரொம்ப நல்லவரு. அவர எதுவுஞ் சொல்லிடாதீங்க. பரிச்சைக்கு லீவுல்லாம் கொடுக்கேன்னுருக்கார். யூனிஃபார்ம் கூட எடுத்துக் கொடுத்தார்.”

‘சோழியன் குடுமி சும்மவா ஆடும். கையில காசு பொழங்க ஆரம்பிச்சதும் எந்தப் படிப்புக்காக வேலையில சேந்தியோ அதயே தொலச்சுட்டு நிக்கப் போறடா பாவி’ மனதில் ஓடியதைச் சொல்ல முடியாமல் நிற்கையில், “உங்களுக்கு என்ன ஆகணும்னு எங்கிட்டயே சொல்லுங்க. நடுவால மொதலாளி எதுக்கு? இன்னும் அர மணி முன்ன தரணுமா?” குரல் கரகரக்கக் கண்ணீர் விட்டு அழவே ஆரம்பித்து விட்டான்.

தர்ம சங்கடமாய்ப் போயிற்று. இப்போதைக்குச் சமாதானமாகப் பேசி அனுப்பி விட்டால் போதுமென முடிவெடுத்தவராய் “டைமுக்கு வைக்கற சரிப்பா. கதவுக் கம்பியில சொருகி வைக்கணும். தூக்கி எறியப்புடாது. ஆனாலும் நீ புதுசா இருக்கதால பணத்தை அவர்ட்டதான் கொடுப்பேன்னு சொல்லிடு.” என்றார் தீர்மானமாய், சின்ன மீனை அனுப்பிப் பெரிய மீனை பிடித்துத் தாளித்து விடும் எண்ணத்தில்.

“அதான் ரசீது பொஸ்தம் கொண்டாந்திருக்கனே” வாதாடிப் பார்த்தான். ‘இந்த மனுசனிடம் பருப்பு வேகாது’ எனப் புரிந்த கொண்டானோ என்னவோ, சில நொடிகளில் கண்களைத் துடைத்துக் கொண்டு சந்தேகமாகப் பார்த்தபடியே வெளியேறினான்.

“காசைக் கொடுத்து அனுப்பிருக்கலாமே? இப்ப அந்தாளு வந்து தாம்தூம்னு குதிக்கவா? நானே காவேரி வரலியேங்கற டென்ஷன்ல இருக்கேன். இது வேறப் புதுத் தலவலி.” சிடுசிடுத்தாள் சொர்ணம்.

வள் கவலை அவளுக்கு. நேற்று எதிர்பாராத விருந்தினர்கள் இரவு உணவுக்கு வந்து விட, சேர்ந்து போனப் பாத்திரங்கள் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. முன்னெல்லாம் இவரது கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து, பொதுநல விஷயங்களில் இவர் காட்டும் அக்கறையைப் பெருமையாகக் கருதி வந்த சொர்ணம் இப்போது தலைகீழாக மாறி விட்டிருந்தாள்.

வயதின் இயலாமை ஆட்டுவிப்பதைத் தவறாகவும் சொல்ல முடியவில்லை. மூட்டெலும்புத் தேய்மானம். இரத்த அழுத்தம். போதாக்குறைக்கு சர்க்கரை நோயும். சிலவருடம் முன்னர் வரை எந்த வேலைக்கும் ஆள் எதிர்பார்த்து வாழ்ந்தவள் இல்லை. அப்போதெல்லாம் முடிந்த அளவு கூட இவரால் இப்போது உதவ முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வியாதிகள் ஓய்வு கால போனஸாக வந்து சேர சின்னச் சின்ன வேலைகளையே செய்து கொடுக்க முடிகிறது. அடுத்தவரை அண்டியே வாழ வேண்டிய சூழலில் இருவருமே.

மகனும் மகளும் திருமணமாகி வெளிநாட்டில் இருந்தார்கள். வருந்தி வருந்தி அழைக்கவே செய்தார்கள். ஆறுமாதங்களுக்குத் திட்டமிட்டுச் சென்றால் ’நம்மூரைப் போலாகுமா’ என மூன்றே மாதங்களில் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விடுவதே நடந்தது. நிரந்தரமாய் போய்த் தங்குவது நினைத்தும் பார்க்க முடியாதிருந்தது. வயது காலத்தில் தனியாக வாழுகையில் பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளக் கூடாதென்பதில் சொர்ணம் தெளிவாக இருந்தாள். இந்த வயதில் தன்னலமே நல்லதென்றாள். போனமாதம் நடந்த சம்பவம் இந்தத் தீர்மானத்தை மேலும் தீவிரமாக்கியிருக்க வேண்டும்.

வீட்டெதிர் விளக்குக் கம்பத்தின் கீழ் மாலையில் கீரைக்கடை பரப்பும் கங்கம்மா, ஒரு நாள் முன்னிரவில் “நாளக்கி பரிச்ச இருக்கு. போகாதம்மா” எனப் பரிதாபமாக மகன் கூவக் கூவ காதில் வாங்காமல் வியாபாரத்துக்கு அவனை நிற்க வைத்து விட்டு சீரியல் பார்க்கச் செல்ல,, மறுநாள் அவளை ஒருபிடி பிடித்து விட்டார் சபாபதி. அவமானம் தாங்காதவளாய் ”எம்புள்ள மேல எனக்கில்லாத அக்கறதான் ஒமக்குப் பொத்துக்கிட்டு வருதோ?” சீறியதோடு அன்றிலிருந்து இவரைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்ளலானாள். சொர்ணத்தையும் தன் கடைப்பக்கம் வரவேண்டாமெனச் சொல்லி விட்டாள். இப்போது மார்க்கெட் வரை போய் கீரைவாங்க வேண்டிவந்தது கூட வருத்தமாய் இல்லை. “தேவையா இது நமக்கு”எனத் தினம் தினம் சொர்ணம் சொல்லிக் காட்டுவதைத்தான் தாங்க முடியவில்லை. இதே சொர்ணம் எப்படியெல்லாம் பக்கபலமாக முரட்டு ஆசாமிகளிடம் கூட மல்லுக்கு நின்றிருக்கிறாள் ஒருகாலத்தில்.

சிலர் அடாவடியாகப் பேசுவார்கள். சில ஏழைப் பெற்றோர் “என்ன சார் செய்வது? படிப்பு ஏறல. எங்களுக்கும் சொல்லித் தரத் தெரியல. அப்படியே விட்டாலும் பசங்க வீணாகிடுவாங்களேன்னு வேலைக்கு விட்டுட்டோம்”எனக் காரணம் சொல்வார்கள். அப்போது ஆயிரங்களைக் கொட்டி ட்யூஷனுக்குப் பிள்ளைகளை அனுப்புகிற சாராருக்கும், ஏழைகளுக்குச் சரியான கல்வி மறுக்கப்படுகிற அவலத்துக்குமான இடைவெளி மனதைப் பிறாண்டும்.

பெரிய அங்காடி முதல் சிறிய கீரைக்கடை வரை குடும்ப வியாபாரத்துக்குக் கல்லாவில் அமர்ந்து உதவும், பழகும் குழந்தைகளைப் பார்க்கிறார்தான். அது படிப்பைப் பாதிக்காமல் நடந்தால் பரவாயில்லை. அதிலும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இந்த பேப்பர் ஏஜண்ட் போல மற்றவர் பிள்ளைகளைத் தம் சுயநலத்துக்குப் பலி கொடுப்பவரை மன்னிக்கவே முடிந்ததில்லை அவரால், தன் பெற்றோர் உட்பட.

த்தாம் வகுப்பில் இவர் நுழைந்த முதல் நாளன்று மாலை. டிரைவர் ஆறுமுகம் தன் தங்கை காமாட்சியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் வீட்டு வேலைக்கென. காமாட்சியின் கணவர் ஒருமாதம் முன்னர் தவறி விட்டதாகவும், பெண்ணின் படிப்புக்காக இங்கே அழைத்து வந்து, தன் பக்கத்து வீட்டிலேயே குடி வைத்திருப்பதாகவும் சொன்னார். காமாட்சியின் பின்னால் நின்றிருந்தது அன்று புது அட்மிஷனாக இவரது வகுப்பிலே சேர்ந்திருந்த வசந்தாதான். முதல் நாளே தன் பேச்சாலும் அறிவாலும் ஆசிரியர்களைக் கவர்ந்து விட்டிருந்தவள். அன்றைக்கு அவர் வீட்டுக்கு வந்தவளே. பிறகு ஒருபோதும் வந்ததில்லை, அம்மா கூப்பிட்டு அனுப்பும் வரை.

ஆனால் ஆறுமுகத்தின் மகன் ரங்கன் அடிக்கடி வருவான். வசந்தா இவர் வகுப்பில் என்றால் ரங்கன் சின்னக்கா வகுப்பில் இருந்தான். ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாத நல்ல கல்வி முறை இருந்தது அந்தக் காலத்தில். இவரை விட இரண்டு வயது பெரியவனாயினும் நெருங்கிய விளையாட்டுத் தோழன். வசந்தாவைத் திட்டிக் கொண்டேயிருப்பான். “இவ நல்லாப் படிக்கறதப் பார்த்து எப்பவும் எனக்கு வீட்டுல திட்டு விழுது. நான் பாஸாகிறது பத்தாதாம். அவளப் போல க்ளாசுல மொதலா வரணுமாம். எங்கழுத்த அறுக்கதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கா” என அங்கலாய்ப்பான். போதாதற்கு அவள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கிக் குவித்தது இன்னும் வெறுப்பை ஏற்றியது.

கோடை விடுமுறைக்கு பெரியக்கா வயிற்றில் மூன்று மாத மசக்கையும் கையில் இரண்டு வயது மகளுமாக வந்திருந்தாள். கூடவே ஆஸ்த்மா தொந்திரவு வேறு. அம்மா சாதுர்யமாகக் கேட்டாள், “ஏன் காமாட்சி. ரங்கன் வர்ற மாதிரி வசந்தாவும் நம்ம வீட்டுக்கு வந்து போய் இருக்கட்டுமே. இப்பப் பெரிய லீவுதான? சின்னவ கூட விளையாடட்டும். குட்டிப்பாப்பாவும் வசந்தாவைப் பாத்தா ஒட்டிக்குவா.”

காமாட்சி தலையைத் தலையை ஆட்டினாலும் அழைத்து வரவில்லை. அப்புறம் அம்மா நேராக விஷயத்துக்கு வந்து விட்டாள். ஒரு வாரத்தில் ஊருக்குக் கிளம்பவிருந்த அக்காவுடன் வசந்தா போய் ஒரு மாதம் உதவியாக இருந்து வரட்டுமென. காமாட்சியால் மறுக்க முடியவில்லை. மறுநாள் வசந்தா குழந்தையோடு பழக வீட்டுக்கு வந்தாள். அம்மா சின்னக்காவின் துணிமணிகளைக் கொடுத்ததோடு புதிதாகவும் ரெண்டு மூணு செட் எடுத்திருந்தாள். கூடவே பளபளவென ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசும் வாங்கிக் கொடுத்தாள்.

“படிக்கிற பொண்ணாச்சே. அதுவும் சின்னப் பொண்ணு” என ஆட்சேபித்த அப்பாவை“நம்ம பொண்ணுங்க இந்த வயசுல வீட்டு வேல செஞ்சதில்லையா? சின்னவ பாப்பாவப் பாத்துக்கறதில்லையா? அது போலதான? ஸ்கூல் திறக்குமுன்னே நானே போய் அழைச்சுட்டு வந்துடறேன்” என்று மடக்கினாள். நாத்தனாருக்குத் திருமணமென அக்கா போயே ஆக வேண்டியிருந்த சூழலில் அப்பாவால் தடுக்க முடியவில்லை.

வசந்தா ரொம்ப சமர்த்தாகப் பாப்பாவைப் கவனித்துக் கொள்வதாகவும் அதைவிட அருமையாகப் பாட்டு, பாடமெல்லாம் சொல்லித் தருவதாகவும் அக்கா எழுதிய கடிதத்தைக் காமாட்சியிடம் காட்டிப் புகழ்ந்தாள் அம்மா. பதினோராம் வகுப்பு ஆரம்பமாக சிலநாட்களே இருக்க வசந்தாவை அழைத்து வர அம்மா எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரித் தெரியாது போக காமாட்சி வாய் விட்டேக் கேட்டு விட்டாள். அந்நேரம் ரங்கன் வசந்தாவிடம் தோற்றுவிடக் கூடாதென முயன்று படித்து பியுசி பாஸ் ஆகியிருந்தான், அம்மா அழகாகக் காய் நகர்த்த வசதியாக.

ங்கனைப் பட்டதாரியாக்கி, வேலை வாங்கித் தந்து, ஐந்து பவுன் நகையோடு வசந்தாவை அவனுக்குக் கட்டி வைப்பதாகவும் அதுவரை வசந்தா அக்காவுடனே இருக்கட்டுமென்றும் அம்மா சொல்ல “அவ அப்பாக்கு அப்படியொரு ஆசம்மா பொண்ணப் பெரிய படிப்பு படிக்க வைக்கணுமின்னு. புண்ணியவான் போய்ச் சேந்துட்டாரு. புகுந்த வூட்டு சனம் பொட்டைப்புள்ளக்கி எதுக்குப் படிப்புன்னு சொல்லப் போய்தான் அண்ணன அண்டிப் பொழைக்க இங்க வந்தேன். இந்த வருச கவர்மெண்டு பரிச்சயாச்சும் முடிச்சிரட்டுமேம்மா” தயங்கித் தயங்கிக் காமாட்சி சொன்னாள். அப்போதெல்லாம் பதினோராம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சி!

“என்னைக்கானாலும் ரங்கனைக் கட்டிக்கிட்டுச் சோறாக்கத்தானே போறா? ரங்கனுக்கு நல்ல வேலை அமைஞ்சா இவ எதிர்காலந்தானே செழிப்பா இருக்கப் போது? நல்லா யோசிச்சு ஆறுமுகத்துட்டேயும் பேசிட்டுச் சொல்லு.”

ஆறுமுகத்துக்குக் கசக்குமா என்ன? தங்கை மனதை மாற்றினார். அப்பா ரங்கனைப் படிக்க வைப்பதில் பாவம் தீர்ந்து விடுமென எண்ணி விட்டார் போலும். ரங்கனுக்குக் கொஞ்சம் தன்மானம் அடிவாங்கின மாதிரி தோன்றினாலும் கல்லூரி ஆசை கை கூடியதில் ரோஷம் ஓடி ஒளிந்தது. பி.காம் முடித்த கையோடு வங்கி வேலையும் கிடைத்தது. அம்மா சொன்ன வாக்கு மாறாமல் பத்துக்குப் பதினைந்து பவுனாக நகை போட்டுக் கோவிலில் கல்யாணம் முடித்து, வீட்டுத் தோட்டத்திலே பந்தல் போட்டு ஊரைக் கூட்டிச் சாப்பாடு போட்டாள். திருமணத்துக்கு முன் தினம் வரை பெரியக்காவின் குழந்தைகள் இரண்டும் வசந்தா ஊட்டினால்தான் சாப்பிட்டன.

ஊர் மெச்சிய கல்யாண விருந்திலே வருத்தமாகக் கை நனைத்த ஜீவனாக அவர் படித்த பள்ளியின் தலைமையாசிரியர். பதினோராம் வகுப்புப் பரீட்சையில் மாநிலத்தில் முதலாவதாய் வந்து, பள்ளிக்குப் பெயர் வாங்கித் தருவாள் வசந்தா எனப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தவர். ‘பெரிய கலெக்டராய் வருவாள்’ என வாய்க்கு வாய் பாராட்டியவர். இவரிடம் முணுமுணுப்பாகத் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டுத் தளர்வாக வெளியேறினது இன்றும் கண்களினின்று அகலாக் காட்சியாக.

ழைப்பு மணி ஒலிக்க நினைவுகளிலிருந்து மீண்டார்.

பக்கத்திலிருந்த சொர்ணம் “இனியெங்க காவேரி வரப் போறா? ஏஜெண்டா இருக்கும். இல்லேன்னா அந்தப் பையனையே திருப்பித் துரத்தி விட்டிருப்பார். சும்ம மல்லுக்கு நிக்காம ரூவாயக் குடுத்தனுப்புங்க. கீரைக்கு நடையா நடக்கறது பத்தாம, விடிஞ்சும் விடியாமப் பேப்பருக்கு நடக்கப் போறீங்களாக்கும்?” அலுத்துக் கொண்டவள் “அத்தன காலையில தெருவெல்லாம் வெறிநாய்ங்க அட்டகாசம் வேற” கண்களை உருட்டிச் சின்னக் குழந்தையைப் பயமுறுத்துவதைப் போலச் சொன்னாள். அதே தெருவழிதான் அந்தச் சின்னப்பையனும் வரவேண்டும் எனும் நினைப்பு அவளுக்கு எழாதது வேதனையைத் தர, எதுவும் பேசாமல் போய்க் கதவைத் திறந்தார். நின்றிருந்தது சிறுவன் அல்ல. பளிச் முகத்தோடு பள்ளிச் சீருடையில் பதிமூன்று வயது மதிக்கத்தக்கச் சிறுமி.

யாரெனக் கேட்கும் முன்னர் அவளே “வணக்கம் சார். என் அம்மாதான் காவேரி. எதுத்த வீட்டுல வேல பாக்கும் அக்காவ வழியில பாத்தேன். அம்மா வரலன்னு பெரியம்மா கோவமா இருப்பதா சொன்னாங்க. ‘எனக்கும் நேரமில்ல. நீ போனா என்னாடி’ன்னாங்க. அம்மாக்கு ஒடம்பு முடியல. நாள வந்திடுவாங்க. எதும் செய்யணுமின்னா சொல்லுங்க. ஸ்கூலுக்கு லேட்டாப் போயிக்கலாம். மொதப் பீரியடு கேம்ஸுதான்” படபடவெனப் பேசினாள். சூட்டிகையான அந்தக் குழந்தையின் முகத்தில் அம்மாவின் வேலையைக் காப்பாற்றிக் கொடுக்க வந்தப் பெருமிதம்.

“இல்லம்மா. நீ ஸ்கூலுக்கு...”

பாய்ந்து வந்த சொர்ணம் இவரைத் தள்ளாத குறையாக இழுத்து நிறுத்திக் கதவை விரியத் திறந்து விட்டாள்.

இப்படியான தாக்குதலைச் சற்றும் எதிர்பாராதவர் அதிலிருந்து மீண்டு வரும் முன்னரே “நல்லதாச்சுப் பொண்ணே. வேறொண்ணும் செய்ய வேண்டாம். இன்னைக்கு ஒரே ஒரு நாள்.., பாத்திரத்தை மட்டும் தேச்சுக் கொடுத்துட்டுப் போயிடு” என்ற சொர்ணத்தைப் பின் தொடர்ந்தாள் அந்தச் சின்னபெண், முதுகில் பள்ளிக்கூடப் பையுடன் கருத்துப் போனக் கால் கொலுசுகள் சுடிதாருக்குக் கீழே தலைநீட்டி ’ஜலங் ஜலங்’ எனச் சத்தமிட.

திகைத்து நின்றிருந்த சபாபதிக்கு “ஒரே ஒரு மாசந்தானேங்க” ஐம்பது வருடங்களுக்கு முன் அப்பாவிடம் சொன்ன அம்மாவும், கணுக்கால் தெரியும் பாவாடை தாவணியில் மஞ்சள் துணிப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு அம்மா பரிசளித்தப் புதுக் கொலுசுகள் மின்னப் பெரியக்காவுடன் ரயிலேறிய வசந்தாவும் மீண்டும் நினைவுக்கு வந்தார்கள்.
***

27 நவம்பர் 2011 இன்றைய தினமணி கதிரில்..,

நன்றி தினமணி கதிர்!


கதாபாத்திரங்களை உயிர்த்தெழச் செய்திருக்கும் தலைசிறந்த ஓவியர் ராமு அவர்களுக்கும் நன்றி!

  • முடிவற்றுத் தொடரும் அவலம் பற்றியதான இச்சிறுகதை நட்சத்திர வாரத்தின் நிறைவு நாளில் வெளியாகிப் பலருடன் பகிர்ந்திடும் வாய்ப்புக் கிட்டியதில் மனதுக்கு ஒரு திருப்தி.
  • மழலைகள் உலகம் மகத்தானது’ எனும் தலைப்பில் தொடர்பதிவு இட என்னை அன்புடன் அழைத்திருந்த அமைதிச் சாரலுக்கு நன்றி. அச்சங்கிலியில் இக்கதையினையும் இணைக்கிறேன்.


தினமணியில் வெளியான என் பிற சிறுகதைகள்:

வயலோடு உறவாடி..
ஆயர்ப்பாடி மாளிகையில்..
கைமாறு
வடம்
பிடிவாதம்

சனி, 26 நவம்பர், 2011

நவீன விருட்சம் 89-90வது இதழ் - ஒரு பகிர்வு (அதீதத்தில்..)



எனது எழுத்துப் பயணம் தொடங்கியதே சிற்றிதழில்தான். பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு மலர்கள் அதற்கு அச்சாரமிட்டன என சொல்லலாம். திருநெல்வேலியிலிருந்து வெளியான ‘நண்பர் வட்டம்’ இதழில் 1987-ல் கல்லூரியில் படிக்கும் போதே எழுத ஆரம்பித்து விட்டிருந்தேன். தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகள் அதில் எழுதிவந்த நிலையில் சில காரணங்களால் அது நின்று போனது. வேற்று மாநிலங்களில் வசித்த காரணத்தால் அதன் பிறகு வேறெந்த சிற்றிதழ்களோடும் அறிமுகமில்லை. பின்னர் 2003-ல் திண்ணை இணைய இதழ் அறிமுகமாகி எழுதிக் கொண்டிருந்தேன் எனினும் 2008-ல் எனக்கென முத்துச்சரம் வலைப்பூவை உருவாக்கிக் கொண்டு பதிவுலகம் நுழைந்த பின்னரே வாசிப்பும், நல்ல நட்புகளும் அவர்கள் மூலமாக பல இலக்கியப் பத்திரிகைகளும், இணைய இதழ்களும் அறிமுகமாயின.

நவீன விருட்சம் வலைப் பக்கம் அனுஜன்யா மற்றும் உழவன் ஆகியோரின் பதிவுகள் மூலமாகவே எனக்கு அறிமுகமானது. அன்றிலிருந்து அத்தளத்தை தொடர்கிறேன் என்றாலும் அதன் 23ஆம் ஆண்டின் 89-90 வது தொகுப்புதான் நான் புத்தக வடிவில் வாசிக்கும் முதல் நவீன விருட்ச சிற்றிதழ்.

என்னைப் பொறுத்தவரை சில இதழ்கள் வாசகர் வசதிக்காக தங்கள் இணையப் பக்கத்திலும் படைப்புகளை வெளியிட்டாலும் கூட சிற்றிதழ் வடிவத்திற்கு நாம் ஆதரவு தர வேண்டும். நண்பர்களுக்கு ஓராண்டு சந்தாவைப் பரிசளித்து இதழ்களை அறிமுகப்படுத்தலாம். பிறகு தொடர்வது அவர்கள் விருப்பம். பல சிற்றிதழ்கள் எந்த வியாபார நோக்குமின்றி இலக்கிய ஆர்வத்தினால் பொருளாதார நெருக்கடிகளை உதாசீனம் செய்தபடி தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கின்றன. நவீன விருட்சம் 23 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு இதழுக்காகவும் அதன் வாசகர் வட்டம் ஆவலாகக் காத்திருப்பதுமே அதன் மதிப்பைப் புரிய வைப்பதாக இருந்தது.

89-90வது இதழ்-ஒரு பகிர்வு

க.நா.சு அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது கட்டுரையொன்றைப் பிரசுரிக்க விரும்பிய ஆசிரியரின் கண்ணில் சிக்கியிருக்கிறது கணையாழி இதழில் பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘இலக்கியத் தரம் உயர’ எனும் கட்டுரை. இக்காலத்துக்கும் பொருந்துவதாக பல விஷயங்களில் நியாயம் இருப்பதாகக் கூறி ஆசிரியர் அதனை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆம், அதிலும் நியாயம் இருக்கிறது, நீங்களே பாருங்கள். க.நா.சு சொல்லுகிறார்:

இலக்கியத் தரமான விஷயங்களை, எண்பது பக்கங்களில், எட்டுப் பக்கமாவது தராத பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என்று ஒரு ஐம்பதாயிரம், லட்சம் வாசகர்களாவது உடனடியாக விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது சாத்தியமா? யார் அந்த எட்டுப் பக்கத்தின் இலக்கியத் தரத்தையும் தரமின்மையையும் நிர்ணயிப்ப்பது என்பதெல்லாம் மிகவும் சாதாரணமான கேள்விகள். இலக்கியத் தரத்தை உணர்ந்து செயலாற்றத் தீர்மானித்து விட்டால், தானே தீர்ந்துவிடக் கூடிய பிரச்சனைகள் இவை. இப்போது எந்த விஷயத்தைப் பிரசுரித்தால் வாசகர் எண்ணிக்கை குறையும் என்று எண்ணுகிறார்களோ அந்த விஷயத்தை வெளியிட்டு, எண்பதில் எட்டுப் பக்க அளவிலாவது வெளியிட்டு வந்தார்களானால், அதுவும் பரவலாகப் படிக்கப் படுகின்ற விஷயமாகிவிடும்.


இதழின் கடைசி மூன்று பக்கங்களில் ஆசிரியர் அழகிய சிங்கர் தன் எண்ணங்களை, பேருந்து நிலையத்தில் சந்தித்துப் பயணிக்கும் ஜெகன் மற்றும் மோகினியுடான உரையாடல் மூலமாக எள்ளலுடன் சொல்லியிருப்பது ரசனைக்குரியது. இது ஒவ்வொரு இதழிலும் வரும் தொடர் பகுதியாகவும் இருக்கலாம்.

வள்ளுவர் ஏன் இது மாதிரி ஒரு குறளைப் படைத்தார்?” என்றொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆசிரியரின் “ஜோல்னாபைகள்” கவிதை உட்பட்ட பல படைப்புகளுடன்..,

சத்தியப் பிரியன் எழுதிய “பாரத புத்ரி” நாவலைப் பற்றிய விமர்சனம்:

பக்கம் 14: ‘அடிப்படைத் தேவைகள் எதையுமே பூர்த்தி செஞ்சு வைக்காம என்றும் சலுகைகள் மட்டும் எதை பூர்த்தி செல்ல இயலும்?’....

ஒவ்வொரு எழுத்திலும் மிகத் தீவிரமான அரசியல் படிந்துள்ளது என்ற ரமேஷ் - பிரேம் வரிகளுடன், நாம் ஒத்துப் போக வேண்டியது ஆகிறது.இது பெண்ணின நாவலா?.......

பக்கம் 91: பெண் ஜென்மம் பாவம் எனத் தோன்றியது. பண்ணெடுங்காலம் முன்பு ஆதி சக்தியிலிருந்து பிறந்த முப்பொறிகளே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆனதாக தேவி பாகவதம் சொல்கிறது. இதை நிறுவும் முகமாகவே திரிபுரம் எரித்த மகாசக்தி அவதாரம் எடுத்தாள். ஆனால் எங்கு பிசகியது என்று தெரியவில்லை. மனிதப் பிறவியில் பெண் இரண்டாம் நிலையை எய்திவிட்டாள். அவளுக்குண்டாஅன உரிமைகள் மறுக்கப் பட்டுவிட்டன.......

பக்கம் 127 எந்த அரசுப் பணியாளராலும் அரை மணிநேரம் தொடர்ந்து ஓர் இருக்கையில் அமர்ந்து வேலை செய்ய இயலவில்லை. டீ குடிக்க, சிகரெட் குடிக்க, சொந்த அலுவல்களை கவனிக்க அலைந்த வண்ணம் இருந்தனர்.அடிப்படை இந்தியமனம், அக்கறையின்மை, அரசியல் குறுக்கீடு இவை மூன்றும்தான் அரசு அமைப்புகளைப் பாழ்படுத்துகின்றன.........

“வெறும் சம்பவக் கோர்வையாக அமைந்திருக்க வேண்டிய ஒரு ஆனந்த விகடன் தொடர்கதையில் இத்தனை திட்டவட்டமான கருத்துக்களைக் கூற முற்பட்ட சத்தியப்பிரியன் ஒரு புத்திசாலி எழுத்தாளர்தான், இந்நூல் நம்மால் ஒரு முறையேனும் படிக்கப்பட வேண்டிய நூல்”.


லாவண்யா, உஷாதீபன், எஸ். சங்கர நாராயணன், நா. ஜெயராமன் (ஆசிரியர்: “நா ஜெயராமனின் கதைகள், கவிதைகள் தொகுத்து ஒரு புத்தகமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டுவர எண்ணம். அவருடைய கதை ஒன்றை கசடதபற இதழிலிருந்து கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறேன்”) ஆகியோரின் சிறுகதைகள்.

விட்டல் ராவ் அவர்கள் “பழம் புத்தகக் கடை”யில் கண்டெடுத்தாகச் சொல்லும் “FOR YOU THE WAR IS OVER" புத்தகம் பற்றியொரு பகிர்வு. “SUNDAY CHRONICLE" பிரிட்டிஷ் பத்திரிகையின் யுத்த நிருபராக இருந்த GORDON HORNER எழுதிய நூல்: “இந்நூலை மூன்று நிலைகளில் வைத்துப் பார்க்க சிறந்த ஒன்றாக விளங்குகிறது. ஒன்று: இரண்டாம் உலகப் போர் கைதி ஒருவரின் சிறந்த கைதிமுகாம் டைரி. இரண்டு : அந்த யுத்த அனுபவங்களையும் கைதி முகாம் நாட்களையும் அதன் மனிதர்களையும் நிகழ்வுகளையும் மிகச் சிறந்த கோட்டோவியங்கள் மற்றும் வாஷ் சித்திரங்கள் வாயிலாக ஆவணப்படுத்தியிருப்பது. மூன்று: கோட்டோவியங்கள் மற்றும் நீர் வண்ண ஓவியங்களின் உயர்ந்த தரம்.

நீல. பத்மநாபன், அனுஜன்யா, குமரி. எஸ். நீலகண்டன், ரிஷான் ஷெரீப், மிருணா, ராஜேஷ் நடராஜன், மதியழகன், செல்வராஜ் ஜெகதீசன், ஐராவதம் ஆகியோரின் கவிதைகளுடன் எனது கவிதை “அழகிய வீரர்கள்” (முன்னர் பகிர்ந்த போது வந்த கருத்துக்களுடன் காண இங்கே செல்லலாம்.):

மிகக் கவனமாகக்
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..


அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..


இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..


விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
‘அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..


காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..


மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..


ஆராதித்து வந்த தலைமையின்
அசல் முகங்கண்ட அதிர்ச்சியில்,
விசிறியடிக்கப்பட்ட விசுவாசி
விதியை நொந்தபடி..


இக்கணத்திலும்,
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..


மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***



தற்போது விற்பனையில்,
நவீனவிருட்சம் 89-90
பக்கங்கள்: 90
ஆசிரியர்: அழகிய சிங்கர்
விலை: ரூ.15
கிடைக்குமிடம்: New Book Lands, T.Nagar, Chennai-17 (தொலைபேசி எண்கள்: 28158171,28156006)

அடுத்த இதழ் தயாராகி வரும் நிலையில் சந்தா செலுத்த விரும்புகிறவர்கள் ஆண்டுச் சந்தா ரூ:60-யை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்:
6/5 போஸ்டல் காலனி முதல் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை 600 033.http://www.blogger.com/img/blank.gif

அல்லது இணையம் மூலமாக கீழ்வரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு,
Name of the account - Navinavirutcham
Account No: 462584636
Bank: Indian Bank
Branch - Ashok Nagar, Chennai.
உங்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு navina.virutcham@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
*** *** ***


[14 நவம்பர் 2011, அதீதம் இணைய இதழில் பகிரப் பட்டக் கட்டுரை].

வெள்ளி, 25 நவம்பர், 2011

மிலே சுர் - சர்வேசனின் குறும்படம் - கிரியின் விமர்சனம்

பாகம் 1
பாகம் 2


யாதும் ஊரே யாவரும் கேளீர் என வாழும் இந்நாளில் அனைவரின் சுரமும் ஒன்றாகி அகிலமெங்கும் அன்பு பெருக சர்வேசன் எடுத்துக் கொண்டிருக்கும் நன்முயற்சியே இக்குறும்படம்:

http://youtu.be/_cRtySd65u8



பிழைப்புக்காக உழைப்புக்காக மட்டுமின்றி, பிறந்த மண்ணில் இருக்க இயலா கட்டாயத்தாலும் புலம் பெயர்ந்து வாழுபவர் உலகில் பல கோடி. சக மனிதர் எவர் மீதும் நேசம் பாராட்டும் உணர்வு ஒன்றாலேயே உலகில் அமைதி சாத்தியப்படும். அந்த வகையில் நம் நாட்டின் ஒற்றுமைக்கான இப்பாடலைப் பிறநாட்டு முகங்களும் பாடுகையில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. தொழில் நுட்ப வகையில் தரமான ஆக்கம். பல மாத உழைப்புக்குச் சிறப்பான பலன்.

இவர் சமூக நோக்குடனான பதிவுகள் பல குறித்து ஆசிரியராக வலைச்சரம் தொகுத்த போது நான் பகிர்ந்தவை இங்கே. ‘மிலே சுர்’ரின் அடுத்த கட்ட முயற்சியாக நல்ல சமூகக் கருத்துடைய ஒரு கருவை எடுத்து இயக்க விரும்பிக் கதை தேடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை ஷக்தி பிரபா உதவக் கூடும். இன்னொரு நல்ல சமுதாய நோக்குடனான குறும்படம் பிறக்கக் கூடும். அதற்கு இப்பதிவு ஒரு விதையாய் அமையுமாயின் மகிழ்ச்சியே.

‘மிலேசுர்’ படம் குறித்த விமர்சனத்தை நான் தருவதை விடப் பதிவுலகில் சிறந்த திரைப்பட விமர்சகராக அறியப்படும் கிரி தந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. கோரிக்கையை ஏற்றுக் குறுகிய அவகாசத்தில் செய்து தந்த அவருக்கு என் நன்றி.

கிரியின் பார்வையில் ‘மிலே சுர்’:

ம்மில் பலருக்கும் ஏதாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதாவது வழக்கமான நமது பணியில் இருந்து விலகி. ஒரு சிலர் பைலட் ஆக நினைத்து இருக்கலாம், சிலர் ஆசிரியர் ஆக நினைத்து இருக்கலாம் இன்னும் சிலர் கலெக்டர் ஆக விரும்பி இருக்கலாம் சிலர் ஒரு இசையமைப்பாளரோ அல்லது இயக்குனர் ஆக நினைத்து இருக்கலாம் ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் அப்போது கிடைத்த வாய்ப்பை பொறுத்து நாம் ஒரு பணியில் அமர்ந்து இருக்கலாம். இருப்பினும் நாம் ஏதாவது வித்யாசமாக செய்து அல்லது நமது மனதுக்கு பிடித்த மாதிரி உள்ள பணியை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

இது போல நிலையில் என்ன தான் நாம் நம் பணியில் சிறப்பாக இருந்தாலும் நம் மனதிற்கு முழு திருப்தி அளிக்கக்கூடிய பணியை செய்யவில்லையே என்ற ஒரு வருத்தம் அல்லது ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இது போல ஒரு நிலையில்தான் சுனில் ஜெயராம் (சர்வேசன்) ஒரு வகுப்பில் இணைந்தார். இதில் நம் ஆர்வம் என்ன? என்ன செய்யலாம் என்பதற்கு ஆலோசனை கூறுவார்கள் அதன் படி நாம் முயற்சிக்கலாம். என்னதான் இதை எல்லாம் நாமே செய்யலாம் என்றாலும் நமக்கு இதை செய்யலாம் என்று அனுபவமுள்ள ஒருவர் ஆலோசனை கூறும் போது நமக்கும் சரி இதை முயற்சித்துப் பார்த்தால்தான் என்ன? என்று தோன்றும்.

இது போல ஒரு வகுப்பில் இவரிடம் உள்ள புகைப்பட கலையில் உள்ள ஆர்வத்தை தெரிந்து கொண்ட அவர் நீங்கள் குறும்படம் எடுக்கலாம் என்று ஆலோசனை கூறி இருக்கிறார். இவருக்கு அப்போது முடியும் என்று தோன்றவில்லை என்றாலும் அது மனதில் இருந்து கொண்டே இருந்ததால் சரி முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று இந்த குறும்படத்தை எடுத்து இருக்கிறார். ஒரு சிலருக்கு என்னதான் நல்ல சம்பளம் வசதி இருந்தாலும் ஏதாவது வித்யாசமாக செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றும் அந்தத் தேடலில் வந்ததுதான் இந்தக் குறும்படம்.

எனக்குக் கூட நிருபராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் அது முடியாமல் போய் விட்டது. அதனால் அந்த ஆசையை அல்லது தற்போதைய சூழ்நிலையில் முடியாத ஒன்றை நிறைவேற்ற ப்ளாகில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இது போல் ஒருவரின் முழுமையான முயற்சிதான் இந்தக் குறும்படம்.

இதை தன்னுடைய அலுவலகத்தில் 3000 பேர் உள்ள இடத்தில் மின்னஞ்சல் அனுப்பி இதைப் போல செய்யப்போவதாக கூறியுள்ளார் இதற்கு பதில் அளித்த பலரும் தாங்களும் இதில் பங்கு கொள்வதாகக் கூறி அதை சிறப்பாகச் செய்தும் இருக்கிறார்கள். இது நிச்சயம் ஒரு கூட்டு முயற்சிதான். ஒரு நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் உள்ளவர்களை (வெள்ளையர்கள் சைனீஸ் உட்பட) ஒருங்கிணைத்து செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை என்பது உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

இனி குறும்பட விமர்சனம்:

முன்னரே கூறியபடி 80-களில் வந்த தூர்தர்ஷன் பாடலை அப்படியே தற்கால சூழ்நிலைக்கேற்ப ரொம்ப மாற்றாமல் அழகாகக் கொடுத்து இருக்கிறார்கள். நிச்சயம் மிகச் சிறப்பான இயக்கம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

Mile Sur பாடல் இந்திய ஒருமைப்பாட்டை அழகாக விளக்கிய குறும்படம். இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி நபர்களையும் ஒரே பாடலில் கொண்டு வந்து நமது கலாச்சாரத்தை அனைவருக்கும் உணர்த்தி இருப்பார்கள். இன்று வரை இதை அடித்துக்கொள்ள ஒரு தேசிய ஒருமைப்பாட்டு குறும்படம் வரவில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து.

Mile Sur Mera Tumhara [இதன் பிறகு வரும் ஹிந்தி புரியவில்லை ஹமாரா தவிர :-)] என்பதன் அர்த்தம் "நீயும் நானும் பாடும் பொழுது அந்தப்பாடல் நம் பாடலாகிறது". சரிதானே! இது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் பொதுவான ஒன்றுதானே! நாமும் வேறு ஒரு நாட்டு நபரும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கினால் அது இதைத்தானே குறிக்கிறது. இதை விட பொருத்தமான ஒரு பாடல் இவர்கள் நிறுவன ஊழியர்களை வைத்து இயக்கும் போது கிடைக்குமா என்ன! அருமையான தேர்வு.

எனக்கு உள்ள மிகப் பெரிய ஆச்சர்யம் எப்படி இவ்வளவு பேரை ஒருங்கிணைத்து செய்தார்கள் என்பதே! ஒரு பன்னாட்டு (MNC) நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு இதில் உள்ள சிரமம் நிச்சயம் புரியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அதுவும் வெள்ளைக்காரர்கள் சீனர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு படம் எடுப்பது என்பது மிகச் சிரமமான ஒன்றே.

ஒவ்வொரு காட்சிக்கும் சரியான நபர்களை காட்சிப்படுத்தி இருப்பதே என்னைப் பெரிதும் கவர்ந்து இருந்தது. ஒரு சில படங்களில் நீங்கள் கவனித்து இருக்கலாம். பாடல் நல்ல ஹைபிச்சில் இருக்கும். ஆனால் அதில் நடித்துள்ள கதாநாயகன் கதாநாயகி வாயசைப்பது அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும். மெலடி பாடலைப் பாடுவது போல ஒரு ஹைபிச் பாடலுக்கு முகத்தில் உணர்ச்சிக் காட்டுவார். இதில் என்னை கவர்ந்தவர் என்றால் அஜித். பாடலுக்குத் தகுந்த உணர்ச்சி அவரது முகத்தில் இருக்கும். எடுத்துக்காட்டு "சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்" படம் தீனா.

இதில் அந்தத் தவறு செய்யாமல் சரியான நபரை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். மிகக் கனமான குரலாக இருக்கும், ஆனால் பாடுபவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பார். இதில் அது போல இல்லாமல் குரலுக்கேற்ற நபராக இருக்கிறது. இது தெரியாமல் நடந்ததா இல்லை இதை எல்லாம் யோசித்து செய்தார்களா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் நன்றே.

குறிப்பாக லதா மங்கேஷ்கர் குரலுக்கு 5.40 நிமிடத்தில் வருபவரும் (அட்டகாசம்), 3.20 நிமிடத்தில் வருபவரும், 4:51 நிமிடத்தில் வருபவரும் மிகச் சரியான தேர்வு. அவர்களே பாடுவது போல உள்ளது. பாடியவர்கள் (வாயசைத்தவர்கள்) பெரும்பாலானோர் சிறப்பாக செய்து இருக்கிறார்கள் என்றாலும் இவர்கள் என்னை ரொம்பக் கவர்ந்தார்கள்.

# தேர்வுகள் அருமை..






ஒரிஜினல் குறும்படம் வெளிவந்த போது தமிழ்நாட்டில் இருந்து கமல் பிரதாப் போத்தன் ரேவதி KR விஜயா பாலமுரளி கிருஷ்ணா என்று பலர் வருவார்கள் அடடா! இதில் நம்ம தலைவர் இல்லையே என்று நினைத்ததுண்டு. இதில் அந்தக் குறை நீக்கப்பட்டு இருக்கிறது :-) தமிழ்ப் பகுதி வரும் போது அதில் வருபவர் ரஜினி ஸ்டைலில் நடித்து இருக்கிறார். [இதோடு துவக்கத்தில் அண்ணாமலை பாட்ஷா படத்தில் வருவது போல அமைத்து இருப்பது சூப்பர் :-)] ரஜினி ஸ்டைலிலான ‘தமிழ்’ பகுதி மற்றும் 5:06 நிமிடத்தில் வரும் ஒளிப்பதிவு இவை சரியாக வரவில்லை. அனைத்து இடங்களிலும் ஒரு திரைப்படத்துக்கான தரத்தில் ஒளிப்பதிவு இருக்கும் போது இந்த இடங்களையும் கவனித்துச் சரியாக எடுத்து இருக்கலாம். பாடல் துவங்கும் போது (1.30 நிமிடத்தில்) கேமரா வளைந்து அறைக்குள் செல்லும் போதும் இசைக்கு ஏற்ப ஒரு இடத்தில் ஒரிஜினல் ரயிலை போலப் பயன்படுத்தி இருப்பதும் சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்.

# பாட்ஷா

பன்னாட்டு நிறுவனம் என்பதால் வெள்ளைக்காரர்களையும் சீனர்களையும் அவர்களது மொழியில், பாரம்பரிய உடையில் நடிக்க வைத்து இருப்பது நல்ல உத்தி. அவர்களுக்கும் முழுக்க இந்தியப்படம் என்றில்லாமல் இது அனைத்து நாட்டு மக்களையும் உள்ளடக்கியப் படம் என்ற திருப்தி இருக்கும். இந்தப்பாடலும் அதையே வலியுறுத்துகிறது.

இந்தப் பாடலின் அர்த்தம் என்ன என்று தெரியாமலே (ஹிந்தி நகி மாலும்) பாடலை ரசித்து வந்தேன். இதில் முதலில் வந்த சப் டைட்டில் மூலமே இதன் அர்த்தம் புரிந்தது. அதனால் என்ன! இசைக்கு மொழி உண்டா என்ன? இசையை ரசிக்க என்றும் எனக்கு மொழி அவசியமாக இருந்தது இல்லை இது அனைவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

இதில் நடித்துள்ளவர்கள் எந்த ஒரு வழக்கமான நடிகருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போல எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் நடித்து இருக்கிறார்கள். படம் எடுத்ததும் திரைப்படம் போல ட்ராலி எல்லாம் வைத்து (Camera--> Rolling --> Action) ஒரு ப்ரொஃபசனலாக எடுத்து இருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாரும் ஓவர் ஏக்டிங் செய்யாமல் குறும்படத்தை காப்பாற்றி இருப்பது :-). பொதுவாக மலையாளத்துக்காரர்கள் என்றாலே ஆண்கள் என்றால் அடர்த்தியான மீசையும் பெண்கள் என்றால் படர விட்ட ஈரக் கூந்தலும்தான் சிறப்பு. இதில் கேரளப்பகுதியில் வருபவருக்கு மீசை இல்லை. இதில் கொஞ்சம் கவனம் எடுத்து யோசித்துச் செய்து இருக்கலாம்.

துவக்கத்தில் பெயர் போடும் போது இன்னும் கொஞ்சம் ப்ரொஃபசனலாக ஸ்டைலிஷாக போட்டு இருக்கலாம். இவர்கள் எடுத்த படத்திற்கும் துவக்கத்தில் வரும் எழுத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல இருக்கிறது. அதாவது குறும்படம் டாப்பாக உள்ளது. எழுத்து ரொம்பச் சாதாரணமாக உள்ளது.

# இன்னும் ஸ்டைலிஷா...மணிரத்னம் போன்ற சில இயக்குனர்கள் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம். எழுத்துப் போடும் போது கூட அதிலும் ஒரு அழகு இருக்கும். துவக்கத்தில் வரும் எழுத்தின் அழகில் கூட ஒரு இயக்குனரின் ரசனை அடங்கி இருக்கிறது என்பது என் கருத்து. படம் ஆரம்பிக்கும் போதே பார்ப்பவர்களை அசரடிக்க வேண்டும்.

குறும்படம் முடியும் போது ஜாக்கி சான் படத்தில் வருவது போல, காட்சிகளை எடுக்கும் போது நடந்த நிகழ்வுகளைச் சேர்த்து இருக்கிறார்கள். நன்றாக இருந்தது சரியான யோசனை கூட.

சர்வேசன் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "கலக்கிட்டீங்க" :-) என் மனமார்ந்த வாழ்த்துகள்.
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin