செவ்வாய், 28 ஏப்ரல், 2009

நேர்க்கம்பியின் நிழல்கள்



தகிக்கின்ற சூரியனின்
தங்க ஒளிக்கீற்றுகள்
சன்னல் வழிப்பாய்கையில்-
வளைந்து குழைந்த
திரைச்சீலை மேலே
நெளிந்தே விழுகின்றன
நேர்க்கம்பியின் நிழல்கள்.

மின்னலென் வெட்டுகிறது
மூளைக்குள் சிந்தனையொன்று-
“பார்த்துப் பழகு”!

நேர்ப்பாதையிலே
செல்லுபவராய்
நாம் இருந்தாலும்-
பார்ப்பவருக்கு
கம்பியின் நெளிந்த நிழல்
போலவே கேள்விக்குறியாவோம்











சென்றுநாம் சேர்கின்ற கூட்டத்தார்-
வசதிக்கும் வாய்ப்புக்கும்
வளைந்து நெளிந்த
குறுக்குப் பாதையைத்
தேர்ந்தெடுப்பவரானால்!

*** *** ***




இக்கவிதை ஏப்ரல் 2009 மனிதம் மின்னிதழிலும், 29 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும் வெளியாகியுள்ளது. விகடனில்:

புதன், 22 ஏப்ரல், 2009

விடியலுக்கு ஏங்கும் வெற்றுப் பிம்பங்கள்

இது கவிதையா என்கிற ஆராய்ச்சியை ஒதுக்கி விட்டு, ஒவ்வொரு வேளை வயிற்றுப்பாட்டையும் ஒவ்வொரு நாள் வாழ்க்கைப் பாட்டையும் பெரும் சிரமங்களுடன் கழிக்கின்ற ஏழைப் பொது ஜனங்களின் இதயக் கூவலாக, மன்னிக்க.. கேவலாகப் பாருங்கள்.

1987-ல் முதுகலை (ஆங்கிலம்) இறுதியாண்டில் இருக்கையில் அனைத்துக் கல்லூரி கவியரங்கில் வாசிக்கப்பட்டு பரிசும் பாராட்டும் பெற்றது. அடுத்த ஆண்டு நெல்லை சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் ‘முன்னாள் மாணவி’ என்ற குறிப்புடன், கேட்டு வாங்கி வெளியிட்டிருந்தார்கள்.




சை அலைகள்
ஆர்ப்பரிக்கும்
அரசியல் அரங்கிலுன்
அடிப்படை
நியாய உணர்வுகள்
நசிந்து விடாதென்றே
நம்பி இருந்தோம்!

இன்று
புல்லுருவிகள்
புசிக்கத் தொடங்கி விட்டன.
அவைஉன் பழைய
புண்ணியங்களைப்
புதைத்து விட்டுப்
பணத்துக்காகப்
பாவம் பண்ணச் சொல்லி
பசியாறத் தொடங்கி விட்டன!

அந்த
நய வஞ்சகர்களின்
கயமை மகுடிக்கு
நர்த்தனம் ஆடும்
நச்சுப் பாம்பாக
நீமாறி விட்டதை
முதலில்
எம்கண்கள் நம்ப மறுத்தாலும்
பின்னர் உன்னால்
எம்நெஞ்சில் உருவாக்கப்பட்ட
புண்கள்-
அவை
நிஜமே என்று
நிச்சயப்படுத்தி விட்டன!

அன்று
உன் உதடுகள்
உச்சரித்த
உறுதி மொழிகளை
உண்மையென்றே நம்பி
உற்சாகம் அடைந்திருந்தோம்.

அவை அச்சான
தினசரிகளைக் கூட
ஆதாரமாய்க் கையிலேந்தி-
அன்றைய கஞ்சியைத் துறந்து
ஆளுயர மாலையாக்கி-

ஆவலுடன் உன்
ஆடம்பர மாளிகையின்
வாசல்தேடி வந்திருந்தோம்.

கற்றைநோட்டுக்களைத்
தந்து செல்லும்
கனவான்களின்
கார்களுக்கு மட்டும்
விரியவே திறந்த
வெளிக் கதவுகள்-
கனவுகளைக் கண்களில்
தேக்கிநின்ற எங்களைக்
கடைசி வரை
கண்டு கொள்ளவேயில்லை!

அட
போலிக்காகக் கூடப்
பொது மக்களைப்
பொறுத்துப் போகாத
புதுமையை
இங்குதான் பார்க்கிறோம்!
குற்றம்யாவும் அந்தக்
கூர்க்கன்மேல்தான் என்றெண்ணி
அப்படியும் அயராமல்
அடுத்தமுறை வந்திருந்தோம்.

உன்
தரிசனம் வேண்டி
எமை மதியாத-அத்
தலைவாசல் விட்டுச்
சற்று தள்ளியே
கவனமுடன் இம்முறை
தவமிருந்தோம்.

வெளி வந்ததுன்
படகு வண்டி.
தென் பட்டது
உன் திருமுகம்.
முன் வந்து
முகம் மலர்ந்தோம்.
கை கூப்பிக்
கலங்கி நின்றோம்.

நீயோ
கண்டு கொள்ளாமல்
வண்டியை விடச்
சொன்னாய்.
ஆனாலும்
கணநேரத்தில் சுதாகரித்து
காரினை மறித்துக்
கரகோஷம் இட்டோம்.

நீயோ
காவலரை நோக்கிக்
கண்ஜாடை காட்டியே-
எம்மைக்
கலைக்கச் செய்தாய்.

உன் வாகனம்
எம் நம்பிக்கைகள்மீது
புழுதியை இரைத்துவிட்டுப்
புறப்பட்டுச் சென்றது.

அப்போதுதான்
இந்த
அப்பாவி
ஜனங்களின் மனங்கள்
யார் பாவி என்று
தப்பின்றி உணர்ந்தது
காலங்கடந்தே யாயினும்
தப்பின்றி உணர்ந்தது.

போலிக்காகக் கூடப்
பொது மக்களைப்
பொறுத்துப் போகாத
புதுமையைப்
பழகவும்
தெரிந்து கொண்டோம்.

ட்டு வீட்டில்
வாழ்ந்த உன்னை
ஓட்டுப் போட்டு
மாடி வீட்டில்
ஏற்றி வைத்தோமே?
பதவிக்குநீ வந்தால்
எம்பிள்ளைகள் படிப்பார்-
பானைச்சோறு உண்பார்-
படுத்துறங்க கூரைபெறுவார்-

என்றெதேதோ எண்ணித்தானே
ஊரோடு ஒட்டுமொத்தமாய்
உனக்கோர்
வெற்றிக்கொடி அளித்தோம்!

தேடித்தேடி வந்தன்று
தேனொழுகப் பேசியநீ
உதவிகேட்டு இன்று
கதறிவரும்
எங்களைக் கண்டு-
பதறியடித்து
ஓடிவரா விட்டாலும்
பாராமுகமாய் இருப்பதைக்
கூடவா தவிர்த்திட
இயலவில்லை?

பட்டத்து அரசன்நீ
கொத்தவரும் பருந்தானாய்.
சிதறிப் போன
நம்பிக்கைகளைச்
சேகரிக்கும் முயற்சியில்
சிறகொடிந்து போன
சிட்டுக் குருவிகளாய்
சீரழிந்து கொண்டிருக்கும்
எங்களுக்கு-உன்
சிந்தனையில் இடமுண்டா
என்றறியோம்!

உனக்கிருக்கும் இன்றைய
தகுதியைத் தந்ததே உன்
தொகுதி மக்கள்தாம்
என்பது
உனக்கு மறந்தேவிட்டது.

உன்
மனசாட்சியும் மரத்துவிட்டது.
சுயநலம் எனும்
சுகந்தமான கிரீடத்தைச்
சூடிக் கொண்டு
மனபலம் இழந்து
மருண்டு போய்
மருகும் எங்களுக்கோர் நல்ல
மாற்றம் தர
மறுக்கும் உன்
மனசாட்சி மரத்தேதான்விட்டது!

எமது
உயிர்கள் இங்கே
ஊசலாடிக் கொண்டிருக்க
நீயோ
உற்சாகமாய் ஊழலில் அங்கே
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றாய்!

உலை வைக்கவும்
வகையின்றி எம்
உள்ளங்கள் உழலுவதை
உணராமல் எம்
உணர்வுகளுக்கு
உலைவைத்து விட்டுநீ
உல்லாசமாய் உலகைச்சுற்றி
உலாவந்து கொண்டிருக்கின்றாய்!
நீங்கள்
வெற்றி பெறுவதே
வெளி நாடுகளைச்
சுற்றிப் பார்க்கத்தானே?

ஆசை அலைகள்
ஆர்ப்பரிக்கும் அரசியல்
அரங்கிலுன் அடிப்படை
நியாய உணர்வுகள்
நசிந்து விடாதென்ற
எங்கள்
நம்பிக்கைகள்தாம்
நசிந்து விட்டன!
அடிப்படை
வாழ்வாதார வசதிகள்
என்பவை எமக்கு
கானல்
நீராகி விட்டன!

வறண்ட வாழ்வெனும்
வகுத்தலுக்கு விடைதேடும்
வெற்றுப் பிம்பங்களாகி
நிற்கின்றோம்!

***

வ்வொரு தேர்தலும்
நம்பிக்கையை விதைப்பதும்
ஓரிரு திங்களில்அவை
தேய்ந்து மறைவதுமாய்
இடிதாங்கி இடிதாங்கி எம்
இதயங்கள் வலுப்பெறுகின்றதா
ஆடி ஆடி ஒருநாள்
அடங்கியே விடப்போகின்றதா?


இக்கேள்விகளுக்கு விடையைத்
தேடிடத் தெம்பில்லாமல்
எம்மைச் சுற்றிப்படர்ந்திருக்கும்
சூனியம் சுட்டெரிக்கப்பட்டு
வெளிச்சமானதோர் விடியல்
வந்தேதீரும் என-
நசிந்துபோன நம்பிக்கைகளை
வழக்கம் போலப்
புதுப்பித்துக் கொண்டு-
இதோ கிளம்பி விட்டோம்
இப்போதும் வாக்களிக்க!













*** *** ***




கடைசி இரண்டு பத்திகள் மட்டும் இன்றைய தேவை கருதி சேர்த்தததாகும். அன்றும் சரி இன்றும் சரி. எந்தத் தனிப்பட்ட கட்சியையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதப் பட்டதில்லை இது. ஆனாலும் ஏங்குகின்ற ஏழைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் இன்றளவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

வறுமைக் கோட்டின் கீழே அல்லல் உற்றாலும் தங்கள் வாக்கினை என்றைக்கும் பதியத் தவறாத இவர்களை, இவர்தம் அடிப்படித் தேவைகளை, வெற்றி பெறுபவர்கள் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டி...

இந்தத் தேர்தலில் நாளை என் வாக்கினைப் பதியும் முன்...

வைக்கின்றேன் ஒரு கோரிக்கையாய் இப்பதிவையே!

***

[படம்: இணையத்திலிருந்து]




இங்கு வலையேற்றிய பின் 23,24,25 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன்.காமில் இக்கவிதை:




24,25 ஏப்ரல் 2009 விகடன்.காம் முகப்பிலும்:










1 மே 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

நீயெனது இன்னுயிர்க் கண்ணம்மா! [ஏப்ரல் PiT-n உணர்வுகள்]

Photography in Tamil நடத்தும் இம்மாத போட்டிக்கான தலைப்பு: உணர்வுகள்.

கைவசம் இருந்தது படம் ஒன்று. அதிலே காணக்கிடைத்ததோ நவரசம் இரண்டு.

முகமெல்லாம் சிரிப்பாகத் தந்தை. செல்ல மகளோ சிணுங்குகிறாள்:“ஏம்ப்பா, எங்கேயாச்சும் இடிச்சுக்கப் போறேனோன்னு, முடி வளரும் வரை இப்படித் தூக்கியேதான் வச்சிருப்பேன்னா எப்படி? புலவெளிதானே இது? இறக்கி விடுப்பா. ம்..ம்ம்!

"உறவுகள் தொடர்கதை...உணர்வுகள் சிறுகதை..." என்பார். எனக்கோ அது கவிதை. இதோ...

நீயெனது இன்னுயிர்க் கண்ணம்மா!

டுக்களையில் குவளைதேடி
விளிம்புவரை நீரூற்றி-ஒரு
துளியும் தளும்பாமல்
விழிப்பார்வை சிதறாமல்-
அன்னநடை பயின்றந்த
அம்பாளே வந்தாற்போல்-உன்
சின்னஞ்சிறு கால்கள்
பின்னப் பின்ன
அப்பன் எனக்கன்புடனே
தாகத்துக்குத் தண்ணீர்
கொண்டு தரும் அக்கறையில்-
கொண்டவன் வந்ததும்
குடும்பம் பெருகியதும்
கொஞ்சம் கொஞ்சமாய்க்
கூடப் பிறந்தவனை
நினைக்கின்ற நேரங்களைக்
குற்ற உணர்வுடனே
குறைத்து வரும் என்
குட்டித் தங்கையைப்
பார்க்கின்றேன் கண்ணம்மா!


ஏக்கத்தைப் போக்கிக்
கொள்கின்றேன் செல்லம்மா!

***
லுவல் முடிந்து
அலுப்புடன் நுழைந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அவிழ்த்தெறியும் காலுறைகள்
உன்கண்ணில் பட்டாலே
மிடுக்குடன் இடுப்பினிலே
இருகைகளும் வைத்துநின்று-
மிரட்டுகின்ற தொனியினிலே
‘இப்படியா போடுவது
களைந்ததை அப்படியே’
விரட்டுகின்ற உன் தோரணையில்-
நான் பிறந்ததும்
தானேயொரு தாயானாற்போல்
பூரித்துப் புளங்காகித்துத்
தொட்டில் ஆட்டி
இடுப்பில் சுமந்து
இட்டுக்கட்டி எத்தனையோ
கதைகள் சொல்லிக்
கனிவுடனே கவனித்தாலும்
பிழைசெய்து வரும்வேளை
பின்முதுகில் பூசைவைத்து
எதுசரியெனப் புரியவைத்து
அன்றுமுதல் இன்றுவரை
மழையென ஆலோசனை பொழியும்
மகராசி பெரியக்கா பேச்சினையே
கேட்கின்றேன் கண்ணம்மா!


உன்வாய்வழி உதிரும்
வார்த்தையாவும் பொன்அம்மா!

***
லைவலியால் கண்மூடித்
தவித்தபடி நானிருக்க
தாவியெந்தன் மடியேறித்
தாடையைப் பிடித்துக் கெஞ்சி
விளையாடக் கூப்பிடும் நீ
தைல வாசம் உணர்ந்ததும்
துடிதுடித்து உள்ளோடி
உன்னைவிட ஓரிரு பங்கு
உயரமான தலையணையைத்
தள்ளாடி இழுத்து வந்து
தலையிடுக்கில் செருகிவிட்டு
‘தூங்கப்பா கண்மூடி’யென
நெற்றி வருடிச் சொல்லுகையில்-
ஆயிரம் மைலுக்கப்பாலும்
அன்றாடம் என் நலனுக்காக
ஆண்டவனை மன்றாடி வருமென்
அன்னையின் அன்பினை
உணர்கின்றேன் கண்ணம்மா!


அவள்மடியாய் நினைத்து-உன்
மடியில் சாய்கின்றேன் சின்னம்மா!

***
கனென்றால் வரவு
மகளென்றால் செலவு என
இன்றைக்கும் எண்ணுகின்ற
மடையருக்கு இது புரியுமா?
என்றைக்கும் என் தோள்களுக்கு
நீ பாரமில்லை கண்ணம்மா!


உன்நெஞ்சினிலே எனைத்தாங்கும்நீ
நம்குடும்பத்துக் குல தெய்வமம்மா!
*** *** ***

* இக்கவிதை “சின்னஞ்சிறு கிளியே!” என்ற தலைப்பில் 1 ஆகஸ்டு 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும்:

புதன், 1 ஏப்ரல், 2009

இவர்களும் நண்பர்களே...

டவுள் நம் மீது கொண்ட கருணையினால் நல்ல குடும்பம் பெற்றோர் குழந்தைகள் அமைய பெறுகிறோம். ஆனால் அப்படி அமையப் பெறாதவர்... ஏதோ ஒரு சமயத்தில் கடவுளின் கருணை சற்றே குறைந்ததனால் இப்போது ஆதரவற்றோர் இல்லங்களில்.

இருப்பினும் இவர்களை என்றைக்கும் கடவுளின் குழந்தைகளாகவே அறியப் பட வைத்து பாசம் காட்டுவதும் கடவுள்தான். அவரது தேவைகளை உணர்ந்து தீர்த்து வைக்கத் தூதுவர்களாய் பிற மனிதர்களாகிய நம்மை அனுப்புவதும் கடவுள்தான்.

மனித நேயத்தால் இவர்களுக்கு உதவுபவர்கள் ஒரு பக்கமெனில், 'தர்மம் தலை காக்கும்' எனப் புண்ணியம் சேர்க்க உதவக் கிளம்புகிறவர்கள் ஒரு பக்கம். சரி இப்படியெல்லாம் சான்றோர் சொல்லி வைத்துச் சென்றிருக்கவில்லையாயின் பகிரும் எண்ணமே உதவும் உள்ளமே அற்றுப் போயிருக்கும் உலகத்தில்.

எப்படியோ இப்போது பலரும் இது போன்ற இல்லங்களுக்குத் தங்களாலான உதவிகளைச் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. அவரவர் அவரவருக்கு தெரிந்த முடிந்த வகையில் செய்து வரும் உதவிகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கு பகிர்ந்திட விளைகிறேன்.

நானறிந்த இல்லங்கள் இரண்டில் உதவிகளை ஏற்பதில் எதிர்மாறான விதிமுறைகள் இருந்து வருகின்றன. ஒன்று அரசு இல்லம். மற்றது தனியார் நடத்துவது. இரண்டுமே குழந்தைகளைப் பரமாரிப்பவை. அரசு தனியார் என்பதனாலன்றி அதை திறம்பட நடத்துபவரின் சில தனிப்பட்ட கொள்கைகளினாலேயே விதிமுறைகள் அமைந்துள்ளன என்பதையும் முதலிலேயே தெளிவு படுத்தி விடுகிறேன்.

நமக்குத் தேவையில்லாத பொருட்கள் எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார்கள் அரசு இல்லத்தில். நல்ல நாட்கள் அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நினைவு நாட்கள் வருகையில் அந்த நேரத்து சாப்பாட்டுக்கான செலவினை ஏற்றுக் கொண்ட முறையிலோ அல்லது உணவை தயாரித்து எடுத்துச் சென்றோ அக்குழந்தைகளுக்கு தம் கையால் உணவளிக்க விருப்பப் பட்டால் அனுமதிக்கும் இவர்கள் குழந்தைகளுக்கு அருமையாக டேபிள் மானர்ஸ் பழக்கியிருக்கிறார்கள். மேசையிலே தத்தமது தட்டுடன் வரிசையாக ஒழுங்குடன் அமர்ந்து பிரார்த்தனைக்குப் பிறகே உண்ண ஆரம்பிக்கிறார்கள். சின்னப் பருக்கையும் சிந்தாமல் கவனமுடன் உண்பதும் எதையும் வீணாக்காது உணவை முடிப்பதும் கருத்தைக் கவர்கிறது.

இந்த இல்லத் தலைவி அடிக்கடி வலியுறுத்தும் இன்னொரு விஷயம், இனிப்புகள் வழங்குவதைத் தவிர்க்கச் சொல்வது. அதற்குப் பதில் அந்தந்த சீஸன் பழங்களை வாங்கிக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார். இது எத்தனை நல்ல யோசனை. இதை எல்லோரும் சற்று கவனிக்கலாமே.

சில நேரங்களில் வாங்கித் தரும் இனிப்புகள் என்னதான் மிக நல்ல பெயர் பெற்ற கடையில் வாங்கினாலும், பாதுகாக்கப் பட்ட முறை, செய்ய பயன்படுத்தப் பட்ட பொருட்களின் பரிசுத்தம் இதில் ஏதும் பிரச்சனை இருக்க நேர்ந்தால் நம்மால் அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குக் கேடு வந்து விடவும் கூடாதல்லவா? நாமே வீட்டில் செய்ய முடிந்தால் நல்லது. அப்படி முடியாத பட்சத்தில், பழங்கள் சாலச் சிறந்ததல்லவா? இல்லை இனிப்புகள் தருவதே விருப்பம் அதில்தான் திருப்தி என்றால் அதன் தரத்தினை உறுதி செய்து கொள்வதுடன் கூடவே பழங்களையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்தானே.

பழங்கள் விற்கும் விலையில் சாப்பாடு போக அதை வாங்கி வழங்குவது என்பது தங்களுக்குச் சிரமமானதாய் இருப்பதாகவும் அந்த இல்லத் தலைவி தெரிவித்தார். உண்மைதானே. ஆரோக்கிய வாழ்வுக்கு அத்தியாவசியமான பழங்களை அவர்கள் சுவைத்திட தருவதில் நமக்கும் கிடைக்கும் ஒரு மன நிறைவு.

ன்னொரு தனியார் இல்லத்தில் சில வருடங்கள் முன்னர் வரை நமக்குத் தேவையற்ற பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி கொண்டார்கள்தான். ஆனால் இப்போது எந்த பழைய உடைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. தேவையற்ற ஸ்டேஷனரி அயிட்டங்கள் எதையும் உள்ளே அனுமதிப்பதில்லை. உதவ விரும்புபவர்கள் பணமாகவோ அல்லது புது உடைகள் அல்லது தைத்துக் கொள்ள புதுத் துணி புது பேனா பென்சில் நோட்டுப் புத்தகங்கள் இப்படித்தான் தர வேண்டும் என்கிறார்கள்.

'தானம் பெறும் நிலையில் இருந்து கொண்டு இந்த வெட்டிப் பந்தா தன்மானத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை' எனும் விமர்சனங்களுக்கு இவர்கள் வருத்தப் படவுமில்லை. இந்த இல்லத்தின் தலைவியை இது குறித்து நான் கேட்ட போது அவர் அளித்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாகவே தோன்றியது.

அவர் கூறியதாவது: "பெரும்பாலானவர்கள் உபயோகித்த தேவையில்லாத உடைகளை உதவுகிறோம் என்ற பெயரில் சலவைக்கு போடும் அழுக்கு மூட்டைகளாக மிக மோசமான நிலையில் வந்து இறக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள். அதே போல இங்கு வந்து விழும் க்ரையான்ஸ், கலர் பென்சில், நோட்டுக்கள் போன்ற ஸ்டேஷனரிகளும் அப்படியே. பாதிக்கும் மேலானவை உபயோகிக்கவே முடியாத நிலையில் இருக்கும். இதை வகைப்படுத்தி எடுப்பதே மிகப் பெரிய வேலையாகி விடுகிறது சமயத்தில்.

மேலும் இதைக் காண நேரும் எம் குழந்தைகளுக்கு மற்றவர் இரக்கத்தில் அண்டிப் பிழைக்கிறோமோ என்கிற மனோபாவம் எழவும் வாய்ப்பிருக்கிறது. தங்கள் கையால் இனிப்புகளை விநியோகம் செய்ய விரும்புவதாகச் சொல்லி விட்டு குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து ‘பொத் பொத்’ எனக் கையிலே போடுபவர்களும் சிலருண்டு. கருணை காட்டுவதாக எண்ணிக் கொண்டு எங்கள் குழந்தைகளைக் கையேந்துபவர்கள் போல நடத்துவதை எங்களால் அனுமதிக்க முடியவில்லை" என்றார்.

பின்னர் முத்தாய்ப்பாய் "எல்லோரும் அப்படி எனச் சொல்ல வரவில்லை. ஆனால் இது போன்ற சங்கடங்களைத் தவிர்க்கவே இப்போது எந்த பழைய பொருட்களையும் ஏற்பதில்லை" என முடித்தார். ஆக இவர் சொல்வது போன்ற விதிமுறைகள் சில இல்லங்களில் இருக்குமாயின் நம் உதவிகளை பணமாகவோ புது பொருட்களாகத் தருவதாகவோ அவர்களின் விதி முறைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டுமேயன்றி சிந்திக்காமல் அவர்களை விமர்சிக்கக் கூடாது.

பிறர் உதவியை எதிர்பார்த்துதான் இந்த இல்லங்கள் இயங்குகின்றன என்றாலும் இங்கிருப்பவர்கள் எவரும்.. குழந்தைகள் என்றன்றி ஆதரவற்ற பெண்கள், முதியோர்கள் அனைவருமே கருணைக்குரியவர்களாய் நடத்தப் படாமல் சக மனிதர்களால் நட்பும் அன்பும் பாராட்டப் படவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

நாம் நமது நண்பர்களுக்கு பரிசு வழங்க விரும்புகையில் அதை அழகான வண்ணத் தாளில் சுற்றி ரிப்பன் கட்டி எத்தனை அக்கறையாய் எடுத்துச் செல்கிறோம். அதே போல இவர்களையும் எண்ணி அந்த அக்கறையை இவர்களிடத்திலும் காட்டலாமே.

உபயோகித்த நமக்கு தேவையற்ற உடைகளாயின் சலவை செய்து தையலோ பொத்தானோ விட்டிருந்தால் தைத்து இஸ்திரி போட்டு அழகாய் கொடுக்கலாமே. விளையாட்டுப் பொருட்கள் போன்ற எதுவானாலும் உடையாமல் நல்லபடியாக இருந்தால் மட்டுமே கொடுங்களேன்.

நம் குழந்தைகளின் பழைய நோட்டுக்களில் எழுதாமல் எஞ்சிய சில தாள்களை நாமே கிழித்து பைண்டு செய்து கொடுக்கலாமே. சில பக்கங்களே எழுதியவையாயின் அவற்றை நாமே நீக்கி அட்டையிட்டு உபயோகிக்கும் நிலையில் தரலாமே. காலிலே சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஓடுகிற காலமிது எங்கே கிடைக்கும் இதற்கெல்லாம் நேரமென சிலர் நினைக்க வாய்ப்புண்டு. மனம் இருந்தால் உண்டுதானே மார்க்கம்?

அதே போல நம் கையால் உணவளிக்க விரும்பும் பட்சத்தில் நம் வீட்டு விருந்தினர்களை எப்படிக் கவனிப்போமோ அதே போல ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் சந்தித்துப் புன்னகைத்துக் கனிவுடன் பரிமாறுவதில் கவனம் எடுக்கலாமே. தருமம் அளிக்கப் படுகிறது என்கிற மாதிரியான எண்ணம் அவர்களுக்கு எழாதபடி பார்த்திடலாமே. இறைவனின் குழந்தைகளாகிய இவர்களும் நம் நண்பர்களேயன்றோ?

*** *** *** *** ***



*சர்வேசனின்சென்னை விஸிட்-உதவுக் கரங்கள்’. விஸிட் செய்யாதவர்கள் செய்யலாமே. அவரது பதிவினை மட்டுமல்ல, உதவுகின்ற கரங்கள் எங்கு இருப்பினும்...

*இப்பதிவின் பிரதிபலிப்பாக.. தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதாக இங்கு பின்னூட்டத்தில் வாக்களித்த படி.. 4 ஏப்ரல் 09 அன்று ஜீவன் அவரது 'கண்ணாடி' வலைப்பூவில் பதிந்த "இறைவனின் குழந்தைகள்"!

இனிப்புகள் வழங்குவதால் மட்டுமே ஆரோக்கியத்துக் கேடு வர வாய்ப்பென்பதில்லை, யார் யார் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பதை அறியாமல், எதையும் வீணாக்காது சாப்பிட வேண்டும் எனப் பழக்கப் படுத்தப் பட்ட அக்குழந்தைகளுக்கு நாம் பரிமாறுவதும் சரியல்ல என்பதையும் புரிய வைத்துள்ளார். கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள். கவனிக்க வேண்டிய கருத்து அது. அதையும் மீறி ‘தம் கையால் பரிமாறினால்தான் புண்ணியம்’ என்பது போன்ற கொள்கையுடையோர் கூடவே நிர்வாகத்தினரை அருகில் வைத்துக் கொள்வதும், கடைசிப் பத்தியில் நான் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கவனத்தில் கொள்வதும் அவசியம்.

*ஜீவனைத் தொடர்ந்து இங்கே வாக்களித்தபடி ரம்யா அவர்கள் தன் ஐம்பதாவது பதிவாக 14 ஏப்ரல் 09 அன்று, தான் வாழும் அர்த்தமுள்ள வாழ்க்கையின் அனுபங்களைப் பதிந்திருக்கும் "ஆதரவற்ற குழந்தைகளும்-முதியவர்களும்".




விழிப்புணர்வினைக் கோரும் இப்பதிவு இன்னும் பலரைச் சென்றடைய வழி செய்திருக்கும் விகடனுக்கு நன்றி!

  • தமிழ்மணம் திரட்டி நடத்திய தமிழ்மணம் விருது 2009 போட்டியில், சமுக விமர்சனங்கள் பிரிவில் முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை பெற்ற பதிவு! தமிழ் மணத்துக்கும், வாக்களித்து பலரிடத்தில் பதிவின் நோக்கம் சென்றடைய உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin