
விருந்தினர் வருகை
நாளெல்லாம் வேலை.
'இன்று வகுப்பிலே..'
'பக்கத்து வீட்டு
நாய்க்குட்டி..'
'இந்த வீட்டுக்கணக்கு..'
முடிக்கும் முன்னரே
ஒவ்வொரு முறையும்
'அப்புறமாய் சொல்லுடா'
அன்பாய் தலைகலைத்து
அவசரமாய் அடக்கிவிட்டு
வந்தவர்க்ளைக் கவனித்து
வழியனுப்பி வைத்தபின்
திரும்பிப் பார்த்தால்
உறங்கிப் போயிருந்தது
குழந்தை
பொம்மையை இறுக
அணைத்தபடி.
விலகியிருந்த அதன்
போர்வையைச்
சரி செய்தவளை
ஏக்கமாய்ப்
பார்த்துக் கொண்டிருந்தது
மடிப்புக்கலையா அழகுடன்
பிரிக்கப்படாமல் கிடந்த
அன்றைய செய்தித்தாள்.
***
படம்: இணையத்திலிருந்து..
* உரையாடல் கவிதைப் போட்டிக்கு..
Sunday, December 13, 2009
ஏக்கம்
Subscribe to:
Posts (Atom)










