ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

வாழ்க்கை என்பது எதிரொலி


மற்றவர் கோணம்..

1. இழுக்கின்ற கயிற்றின் மறுமுனையைக் காணும் வரை விடாது தொடருவோம்.

2. பெரிய சாதனைகள் சிறிய வாய்ப்பிலேயே துளிர் விடுகின்றன.

3. கையிலேயே கிடைத்தாலும் ‘கடினமாய் இருக்கிறதே’ என உடைக்காமல் உருட்டிக் கொண்டிருப்பான் தேங்காயை, பசியற்றவன்.

4. தோல்வி மோசமான ஒன்றல்ல. அதிலிருந்து மீண்டு வரும் எண்ணமற்றிருப்பது மிக மோசமானது.

5. நமது கோணத்தில் மற்றவரைப் பார்க்க வைக்கப் போராடும் முன் அவரது கோணத்தையும் கவனிப்போம். ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் பிறகு..

6. வாழ்க்கை என்பது எதிரொலி. கொடுப்பதே பன்மடங்காகத் திரும்பும்.

7. நல்ல வார்த்தைகளால் நாலு பேரைப் பாராட்டுவதை விடவும் எளிதானதே அமைதி காத்து ஒருவரைப் பற்றி அவதூறு சொல்லாதிருப்பது.

8. ‘நன்றாகச் சொன்னாய்’, ‘நன்றாகச் செய்தாய்’ எது சிறப்பு?

9. திருப்தி என்பது நம் தேவைகள் நிறைவேறுவதால் ஏற்படும் ஒன்றல்ல. இதுவரையில் என்னவெல்லாம் கிடைத்திருக்கிறது என்பதை மனப்பூர்வமாக உணர்வதில்.

10. இதழ்களில் வரையப்பட்டதாக அன்றி இதயத்திலிருந்து மலருவதாக இருக்கட்டும் சிரிப்புகள்.

***

[ஆன்றோரும் சான்றோரும் அனுபவத்தில் சொல்லாத ஏதொன்றையும் புதிதாக நாம் சொல்லிவிடப் போவதில்லை. ஆயினும் நம் அனுபவத்தில் ஏற்றுக் கொண்டவற்றை, புரிந்து கொண்டவற்றை, நடைமுறைப் படுத்தியவற்றை, கடைப்பிடிக்க விரும்புவற்றை நமக்கு நாமே உரக்கச் சொல்லிக் கொள்வது உற்சாகமாய் இருக்கவும் உறுதியுடன் நகரவும் வழிவகுக்கும். அப்படியாக ஆரம்பித்த ‘ட்வீட்’களை, பலராலும் விரும்பப்பட்ட ‘ஃபேஸ்புக்’  நிலைமொழிகளை  இங்கும் தொகுப்பது தொடர்கிறது.., உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், எனக்கான சேமிப்பாகவும்.]

தொடர்புடைய முந்தைய பதிவு:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..



நட்சத்திர வாய்ப்புக்கு நன்றி யுடான்ஸ்!

உடன் வந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி!

***

சனி, 25 பிப்ரவரி, 2012

உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?

ந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டுமானால் அதை குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்’ என்றார் தேசப் பிதா. அவர் சொல்லிச் சென்ற எதைக் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதை மட்டும் விட்டு விட்டதாக வருத்தப்பட?

எந்த சிசுவும் தன் பிள்ளைப் பிராயத்தில் உழைப்பதற்காக இப்பூமியில் ஜனிக்கவில்லை. விடைதெரியாத காலக் கணக்குகளால் துளிர்விடும் மொட்டுகளில் பல, மலர வகையின்றிக் குடும்பமாகிய தாய்ச் செடிகளின், சமூகமாகிய மரங்களின் பாதுகாப்பை இழந்து உதிர்ந்து மிதிபட்டுக் கொண்டேயிருக்கின்றன.

தங்களுக்கான உரிமை எதுவென்றே புரிந்த கொள்ள இயலாத வயதில் வறுமையால் பெற்றோராலோ, வஞ்சனையால் திருட்டுக் கும்பலாலோ பிச்சை எடுக்கவும் உழைக்கவும் நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள் நாட்டில் எத்தனை கோடியோ? கல்வி, பாதுகாப்பு எல்லாமே மறுக்கப்பட்டு சின்ன வயதிலேயே உலகின் மோசமான பக்கங்களைப் பார்க்க நேரும் பிஞ்சுகளின் மனது கடினப்பட்டுப் போவதும், சரி தவறுகளைப் பாகுபடுத்திப் பார்க்கும் வாய்ப்புகளின்றி பின்னாளில் குற்றவாளிகளாக உருவெடுக்க நேருவதும், தங்கள் மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் நியாயங்களிலிருந்து விடுபட முடியாமல் சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டுப் போவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இவற்றை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் முழுமையான அக்கறை காட்டுகின்றனவா எனும் கேள்விக்கு எதிர்மறை பதிலையே எங்கெங்கும் கண்டு வருகிறோம் குழந்தைத் தொழிலாளர்களாக, குப்பை பொறுக்கும் சிறுவர்களாக, சிக்னல்களில் ரயில்வே பேருந்து நிலையங்களில் கையேந்தும் பிஞ்சுகளாக.


சென்ற மாதம் லால்பாக் மலர் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது வழக்கத்துக்கு மாறாகப் பத்து பதினைந்து சிறுவர் சிறுமியர், சில பதின்ம வயது பெண்கள் பலூன்கள் விற்றுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. வறுமையின் வாட்டம் உடைகளில் தெரிந்தது. இவர்கள் பெற்றோருடனேதான் வசிக்கிறார்களா? அல்லது வேற்றாட்களால் கடத்தப்பட்டு உழைக்க நிர்ப்பந்தப் பட்டவர்களா தெரியவில்லை. புகைப்படங்களுக்கு விரும்பி போஸ் கொடுக்கிறவர்கள் ஏதேனும் கேட்க முயன்றால் விலகி ஓட்டமெடுக்கிறார்கள்.

பால்வடியும் அழகான முகத்துடனான இச்சிறுமியையும், கள்ளமற்ற சிரிப்புடனான பாலகனையும் காணுகையில் மனதினுள் சங்கடமாக இருந்து வந்த வேளையில், சமீபத்தில் தெருக்குழந்தைகள் மீட்பு பற்றிய சில பத்திரிகைச் செய்திகள் ஆறுதல் தருவனவாகவும், ஆனால் எந்த மாதிரியான சூழலிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டார்கள் என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும் இருந்தன.

று மாதங்களுக்கு முன் பெங்களூர் போலீஸ் துணை கமிஷனர் பிரணாப் மொகண்டிக்கு உதித்த சிந்தனையில் உருவானதே ‘ஆபரேஷன் ரக்‌ஷனே’. இதன்படி நகர போலீஸ் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு தெருக் குழந்தைகளை மீட்டெடுத்து புனர்வாழ்வு அளிக்கக் கிளம்பினார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

2011 டிசம்பர் முதல் வாரத்தில் மீட்கப்பட்ட சுமார் 300 குழந்தைகளில் 6 குழந்தைகள் குடும்பத்தோடு சேர்க்கப்பட்டு அவர்களின் சொந்தக் கிராமம் இருக்கும் சண்டிகருக்கு அம்மாநில அரசின் பாதுகாப்போடு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சில குழந்தைகளின் சொந்த மாநிலங்கள் தெரியவந்து தொடர்பு கொண்டதில் பதிலே இல்லையாம். சண்டிகர் மாநில அரசு மட்டுமே ஒத்துழைத்திருக்கிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் பெற்றோர் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு உண்மையில் பெற்றோர்தானா என உறுதிசெய்யப்பட்ட பிறகு ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள். எலஹங்கா சிக்னலில் மீட்கப்பட்ட அனிதா, லக்ஷ்மி ஆகியோரில் குழந்தைகளின் பெற்றோர் எச்சரிக்கப்பட்டு, பள்ளிகளில் சேர்த்து விடப்பட்டிருக்கின்றனர். அனிதா ஆவலுடன் படிக்க, சூழலுக்கு பொருந்த இயலாமலோ அல்லது குடும்பத்தினரின் வற்புறுத்தலாலோ தன் தந்தையோடு மறுபடியும் லக்ஷ்மி குப்பை பொறுக்கச் சென்று விட்டிருப்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறது தன்னார்வ நிறுவனம்.

பெற்றோர் எங்கென அறிய முடியாத சிறுவர்கள் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பில் பரவலாக 25 காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டு, ஒன்பது பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் நலனைத் தொடர்ந்து தன்னார்வ நிறுவனங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கும்.

தன்னை விடவும் ஐந்து வயது குறைந்த குழந்தைகளுடன் சந்தோஷமாகக் கல்வி கற்க ஆரம்பித்திருக்கும் சிறுமி சப்னாவின் கடந்த காலம் வலிகள் நிறைந்தது. இவளை தன் கஸ்டடியில் வைத்திருந்தவர் உண்மையில் உறவினரே அல்ல. அதிகாலை 3 மணிக்கு இவளை எழுப்பி விடுவார். எலஹங்காவிலிருந்து கிளம்பி சிட்டி ரயில்வே ஸ்டேஷன் சென்று கையேந்தி 200 ரூபாய் தினசரி கொண்டு வந்தே ஆகவேண்டும். அதற்கும் மேல் கிடைக்கிற சொற்பத்தில்தான் தன் வயிற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு மாதங்களாக செயிண்ட் சார்ல்ஸ் பள்ளியில் தன் புது ஜென்மத்தில் மகிழ்ந்து போய் ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கிறாள், ஆரம்பத்தில் டாக்டர் ஆகவேண்டுமெனச் சொன்னவள் இப்போது ‘ஆசிரியர் ஆவேன்’ என்று சொல்லியபடி.

சப்னாவை பிடித்து வைத்திருந்தது ஒரு தனிமனிதர், அவள் செலுத்த வேண்டியிருந்த தினசரி கப்பம் ரூ 200 என்றால், நூற்றுக்கணக்கான சிறுவர்களைத் தங்கள் பிடிக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்கு ரூ 20ல் கிடைக்கிற மட்டமான சரக்கு மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாக்கி, தினசரி ரூ 400 கொண்டுவந்தால் மட்டுமே இரவு போதைப் பொருட்கள் கிடைக்கும் எனும் சூழலுக்குத் தள்ளி விட்டுருந்த கயவர் கும்பல்களை என்னவென்று சொல்ல. வெறிபிடித்தாற்போல அன்றைய சம்பாத்தியத்தை ஈட்ட சிக்னல்களில் அலைந்திருக்கிறார்கள் இச்சிறுவர்கள். சாந்திநகரில் சுற்றித் திரிந்த பத்து வயது பாலகன் மஞ்சுநாத்தின் “வேலை” நேரம் காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை. இரவில் குழுத்தலைவனின் மரப்பெட்டியில் நானூறை வைக்காத சிறுவர்கள் பட்டினி போடப்படுவது வாடிக்கையாம். அதே கும்பலில் மாட்டியிருந்த இன்னொரு சிறுவன் கிரிஷா இதனாலேயே தம்மைப் போன்றவர் விடாமல் பொதுஜனங்கள் பின்னாலேயே சென்று நச்சரிப்பதாகச் சொல்லியிருக்கிறான்.

கொள்ளை அடிப்பவர்களைப் போட்டுத் தள்ளுவது சரியா எனும் வேளச்சேரி என்கவுண்டர் குறித்தத் தன் பகிர்வில், முதலில் போட்டுத் தள்ளப்பட வேண்டியவர்கள் பிள்ளைகளைக் கடத்துகிற கும்பல் தலைவர்களையே எனக் கொதித்திருந்தார் பதிவரும் வக்கீலுமான மோகன் குமார். தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரையில் இவை தொடரவே செய்யும் என்பதும் கண்கூடாகத் தெரிகிறது. இன்னும் 158 பகுதிகளில் ஆயிரம் சிறுவர்களாவது மீட்கப்பட வேண்டியிருப்பதாக கர்நாடகப் போலிசுக்கு ஆய்வு அறிக்கை கிடைத்திருக்க, முற்றிலும் களைந்து விட்டதாக நினைத்த சிக்னல்களில் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் புதிது புதிதாய் குழந்தைகள் களம் இறக்கப்படுவது கண்டு தாங்கள் அரண்டு போயிருப்பதாகப் போலீஸே சொல்கிறது. சமூகத்தால் தங்களது எந்த வேதனைகளும் துடைக்கப்படாமலே வளரும் குழந்தைகள் நாளை அதே சமூகத்தை வஞ்சிக்கப் புறப்படுவது காலகாலமாக நடக்க, இப்போது இவர்களை ஆட்டுவிக்கும் முரடர்களின் சிறுவயதுப் பிராயம் குறித்த கேள்விகளும் எழுகின்றன.

கையேந்தும் சிறார்கள், குழந்தைத் தொழிலாளர்களாக அவதிப்படும் பேப்பர் போடும் பையன்கள், கடைகளில் ஓட்டல்களில் எடுபிடியாக இருப்பவர்கள், பத்துப் பனிரெண்டு வயதில் கைக்குழந்தைகளைக் கவனிக்கவும் வீட்டு வேலை செய்யவும் வந்து விட்ட சிறுமிகள் என ஆயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் உள்ளனரே. அரசும் பொதுமக்களும் இணைந்து அக்கறை காட்டினால் மட்டுமே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு பிறக்கும். காந்திஜி சொன்னது போல் உலக அமைதி இவர்களின் வாழ்வு சீராகும் புள்ளியில் இருந்து மட்டுமே உதிக்க முடியும்.
***

இன்றைய வல்லமையில்.., நன்றி வல்லமை!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

‘நிருத்யாஞ்சலி’ இந்தியப் பாரம்பரிய நடனங்கள் - பெங்களூர் மலர் கண்காட்சியில்..


இந்த வருடக் குடியரசுதின மலர் கண்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த சிறப்பம்சங்களான மகாபாரத மணல் சிற்பம், மெகா சைஸில் ஒயிலாக நின்றிருந்த ஜோடி மயில், பொங்கி வந்த பூ அருவி என மேலிருக்கும் படத்திலிருப்பவற்றைப் பாகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த பாகமாகப் பகிர்ந்திடுவதாகச் சொல்லியிருந்த ‘நிருத்யாஞ்சலி’ எனும் நம் நாட்டின் பாரம்பரிய நடனங்களினாலான வணக்கம் விதம் விதமான மலர்கள் பழங்களால் சித்தரிக்கப்பட்டிருந்த காட்சிகளைக் காணலாம் வாங்க..

# 1 வரவேற்கிறது கம்பளம்..

# 2 நிருத்யாஞ்சலி

# 3 பரதம்


# 4 கதக்களி


# 5 கரகம்
கும்பத்தின் உச்சியிலே பச்சைக் கிளி:)!

# 6 பொய்க்கால் குதிரை


# 7 ஒடிசி



# 8 டோலு


# 9 மூங்கில் நடனம்


# 10 பாங்ரா


# 11 குச்சுப்புடி



# 12. கம்சாலே


# 13. மணிப்புரி

இந்த நடன சித்தரிப்புகளை வித்தியாசமாகச் செய்திருக்கலாம் என்பது பலரின் கருத்தும். ஆனால் சிரமமேற்கொண்டு செய்த கலைஞர்களின் உழைப்புக்கான அங்கீகாரமாகப் படமெடுத்துப் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதுவுமில்லாமல் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமான அவர்களின் தொடர் முயற்சியும் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

# 14. பளிங்கு மாளிகை அரிசி மணிகளில்..அரிசிமணிகளாலான தேசியக் கொடியையும், கடுகினால் எழுதப்பட்ட தேசிய கீதத்தையும் சென்ற பதிவில் பதிந்திருந்தேன். அதுபோல தாஜ்மகாலை அரிசி மணிகளால் நுணுக்கமாகச் செதுக்கியிருந்தார்கள். அருகில் சென்று எடுக்க வழியில்லாததால் கண்ணாடியில் விழுந்த பிரதிபலிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.

# 15. பூங்கொத்திலிருந்து தலைநீட்டும் அன்னாசிப் பிஞ்சைப் பாருங்க:)


# 16. இன்னொரு மலர் விரிப்பு

“இந்த முறை போகணுமா...” என ஒவ்வொரு முறையும் கேள்வி எழும். வேண்டாமென எடுக்கும் முடிவு ஒவ்வொரு நாளும் காட்சி குறித்து வெளியாகும் செய்திகளால் மெல்ல மெல்ல வலுவிழந்து கேமராப் பையைத் தூக்க வைத்து விடும்:)! விதம் விதமான மலர்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லைதான். பாருங்க...

# 17. எத்தனை வண்ணங்கள்..மொத்தமாய் காணும் போது மனம் மயங்கதானே செய்கிறது:)?



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


1. 2012 குடியரசு தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக் - மகாபாரத மணல் சிற்பம், பூ அருவி, புத்தர் ஸ்தூபி..

2. தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..-சுதந்திரதின சேதி சொல்லி..

3. ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் (பாகம்-1)

4. சித்திரப் பூக்கள் - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சி (பாகம்-2)

5. 2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்

6. பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010

7. மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்..

வியாழன், 23 பிப்ரவரி, 2012

BSNL-ன் சிறப்பான சேவையும், ஒரு தபால் அலுவலகத்தின் கடுப்பான சேவையும்



ரு அரசு அலுவலகம் சிறப்பாக செயல்படுகிறது என்றால் அது அவர்களின் கடமை. இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது’ எனக் கேட்கலாம். பல அரசு அலுவலகங்கள் பொதுமக்களை அலட்சியப் படுத்துபவர்களாக, பிரச்சனையுடன் செல்லுபவர்களை அலைக்கழிப்பவர்களாக இருந்து வருகையில் மாற்றாக ஒரு நிறுவனம் செயல்படும்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சுமார் கடந்த பத்துப் பனிரெண்டு வருடங்களாகவே BSNL-லின் சேவை நான் இருக்கும் பகுதியில் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக லான்ட் லைன் தொலைபேசி அவுட் ஆஃப் ஆர்டர் ஆனது விரல் விட்டு எண்ணும்படி மூன்று நான்கு தடவைகளே. புகார் பதிவு செய்தால் மறுநாள் காலை பத்துமணிக்குள் சரி செய்துவிட்டு, அழைத்து உறுதிப் படுத்தியும் கொள்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் பெருமழையினால் குடியிருப்பின் அருகே கேபிள்கள் பாதிக்கப்பட்டபோது சரி செய்ய நாலைந்து தினங்கள் ஆகுமோ என்றே மக்கள் நினைத்திருக்க வேகவேகமாக செயல்பட்டு ஒன்றரை நாட்களில் சரி செய்து முடித்தார்கள். நான் குறிப்பாகச் சொல்ல வந்த விஷயம் வேறு.

இவர்களின் இன்முக சேவை. நாலைந்து வருடங்களுக்கு முன்னால் மீட்டர் எகிறுவது போல தவறாக எங்களுக்கு பில் வர, லோகல் அலுவலகத்தினர் தலைமை அலுவலகத்தை அணுகச் சொன்னார்கள். அங்கே காத்திருந்தபோது இதே போன்ற பிரச்சனையுடன் வந்திருந்த ஒருவர் கட்டிடமே கிடுகிடுக்கக் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அதிகாரியோ அவரை ஆசுவாசப்படுத்தி ஆவன செய்யப்படுமென மிக அமைதியாகப் பதிலளித்தது ஆச்சரியத்தையே தந்தது. நான் கொண்டு சென்றிருந்த பிரச்சனையையும் சுமுகமாகத் தீர்த்து வைத்தார்கள்.

ங்கு போலவே வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் விதத்தில் தனியார் நிறுவனங்களை தோற்கடிக்கும் விதமாகவே செயல்படுகிறது எங்கள் பகுதி பி எஸ் என் எல். இணைய இணைப்புத் திட்டத்தில் மாற்றம் வேண்டி சில தடவைகள் சென்ற போது இந்த மேசையிலிருந்து அந்த மேசைக்கும், ஒன்றாம் மாடியிலிருந்து நாலாவது மாடிக்கும் அனுப்பினாலும், பேப்பர்களை சமர்ப்பித்து இரண்டுநாள் கழித்து நிலவரம் அறியப் போனால் ‘மேடம் ப்ளீஸ், இது ரெண்டாவது மாடிக்குச் செல்ல வேண்டிய பேப்பர், சாரி’ என எரிச்சலூட்டினாலும் கூட அந்த பணிவான ‘சாரி, ப்ளீஸ்’ சிரமங்களை மறக்கச் செய்து விடுகிறது. வருத்தம் தெரிவிப்பதோடு நின்றிடாமல் கூடவே வந்திருந்து வேலையை உடனடியாக முடிக்க உதவித் தவறைத் திருத்தியும் கொள்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி அனைவரின் சேவையுமே மெச்சத் தகு வகையில் உள்ளது.

15 வருடங்களுக்கு முன் பெங்களூரின் ஒரு பகுதியிலிருந்து இந்தப்பகுதிக்கு மாறுகையில், ஃபோனை ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டி இதே பி எஸ் என் எல்லை அணுகிய போது. அதிகாரி ஏறெடுத்துக் கூட பாராமல் அலட்சியமாக லெட்டரை டேபிளில் வைத்து விட்டுப் போகுமாறு சொன்னது மறக்கவில்லை. அப்போது வேறொரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இப்போதும் கட்டிடம்தான் 4 மாடிக்கு உயர்ந்து நிற்கிறதே தவிர, உட்கார்ந்தால் எங்கே விழுந்து விடுவோமோ என ஆட்டம் காண்பிக்கும் ஆதிகால வயர் சேர்கள், ஸ்டீல் மேசைகள், தூசுபடிந்த ஃபைல்கள் நிரம்பிய ஸ்டீல் ஷெல்ஃப்கள், பெயிண்ட் போன ஸ்டீல் பீரோக்கள் எனத் தோற்றத்தில் எந்த மாறுபாடும் இல்லை மேசைக்கு மேசை கணினி முளைத்திருப்பதைத் தவிர. ஆனால் தங்கள் சிறப்பான செயல்பாட்டினாலும், வாடிக்கையாளர்கள் பிரச்சனைகளை இன்முகமாக அணுகுகின்ற பண்பினாலும், அதிகாரி முதல் வயர்களை சரிபார்க்க வரும் அடிப்படை ஊழியர் வரை எவரும் எந்த சேவைக்கும் ‘எதை’யும் எதிர்பார்க்காத நேர்மையினாலும் மக்கள் மனதில் நெம்பர் 1 ஆக நிற்கிறது பி எஸ் என் எல். இதில் உங்களுக்கு வேறுவிதமான அனுபவங்களோ மாற்றுக்கருத்தோ இருப்பின் மன்னிக்க. இருக்கவும் கூடும். ஆனால் இது என் அனுபவத்தில் கண்டது. என் அனுபவம் மட்டுமேதானா என்றும் எண்ணி, பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் நண்பர்கள் சிலரிடம் விசாரித்ததில் அவர்களும் இதே பாராட்டினை வழங்கினார்கள்!

நினைத்தால் அடுத்த அரைமணியில் அலைபேசி இணைப்பு எனப் போட்டிகள் பெருகி விட்ட ஒன்றையே இதற்குக் காரணமாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் ஃபோனைப் போட்டால் வீட்டுக்கே வந்து கொரியர் வாங்கிச் செல்லும் வசதிகள் பெருகி விட்ட நிலையில் தபால் அலுவலகங்களும் அப்படி நடக்க வேண்டுமே.

மேற்சொன்ன ஆதிகால அலுவலகத் தோற்றத்துடனே இருந்து வந்த எங்கள் பகுதி தபால் அலுவலகம் திடுமென மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு வங்கியைப் போல் பளபள கண்ணாடி கவுன்டர்கள், வாடிக்கையாளர் காத்திருக்க அழகான இருக்கைகள், ஊழியர்களுக்குப் புத்தம்புது கணினிகள் எனத் தன் கெட் அப்பை மாற்றிய போது மக்கள் எல்லோருமே ‘அட’ என வியந்தார்கள். மகிழ்ந்தார்கள். ஆனால் கெட் அப்புதான் மாறியதே தவிர செட் அப் மாறவில்லை:(. அதே ஊழியர்களே தொடர்ந்த நிலையில் கணினியை இயக்க சரியான பயிற்சி தரப்பட்ட மாதிரித் தெரியவில்லை.

கால்கடுக்க நின்று மின்சார, தொலபேசிக் கட்டணங்கள் கட்டிய, ரெயில்வே டிக்கெட் எடுத்த காலமெல்லாம் போன ஜென்மம் போலாகி இப்போது நுனியில் வேலைகளை முடிக்கப் பழகிவிட்ட மக்கள் அதே வசதியை அனைத்து இடங்களிலும் எதிர்பார்ப்பதைத் தவறாகச் சொல்லவும் முடியாது. இங்கே ஊழியர்கள் ‘தடவித் தடவி’ ஒவ்வொருவருக்காக மனி ஆர்டர், பார்சல் என்ட்ரி போடும் வேகத்தைப் பார்க்கையில் வரிசையில் நிற்பவர்கள் பொறுமை இழக்கத் தொடங்கி விடுகிறார்கள். நீண்ட வரிசைகள் ஆமை வேகத்தில்தான் நகரும். சில சிற்றிதழ்களுக்கு இணையம் மூலமாக சந்தா கட்டும் வசதியில்லாதிருக்க, அதற்காக சென்ற போது கவனித்ததே இது. ஏதேனும் விவரங்கள் சந்தேகங்கள் கேட்கிற பொதுஜனங்கள், ஏறெடுத்துப் பாராமல் ஊழியர்கள் வீசும் பதில்களைதான் பெறுகின்றார்கள். இதெல்லாம் கூடப் போகிறதெனச் சகித்துக் கொள்ளலாம்.

ஏழை எளியவருக்கும் சரி, வங்கிகளை விட அதிக வட்டி தருவதிலும் சரி, பாதுகாப்பான முதலீடு என்ற வகையிலும் சரி, தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படுவதை மறுப்பதற்கில்லை. வருந்தி உழைத்துச் சம்பாதித்தப் பணத்தை வட்டிக்கு ஆசைப்பட்டுச் ‘சீட்டு’ப் போட்டு ஏமாந்து நிலைகுலைந்து போகும் அடித்தட்டுப் பெண்களுக்கு நான் காட்டும் வழி தபால் நிலைய சேமிப்புதான். என் ஆலோசனையில் அப்படி இணைந்து மாதாமாதம் பணம் சேர்த்து வரும் (ரெகரிங் டெபாசிட்) ஒரு பெண் சில காரணங்களால் சென்ற மாதம் சரியான நேரத்தில் கட்ட முடியாது போய் விட்டது. சரி அதற்கான அபராதம் 40, 50ரூபாய் இருக்கும் போல என நினைத்து கட்டவேண்டிய இருமாதத் தொகையோடு கூட ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அபராதமோ 8 ரூபாய். 4 ரூபாய் மட்டுமே சில்லறையாய் பஸ்ஸுக்கென வைத்திருந்தது இருந்திருக்கிறது. ரொம்ப தொலைவில் இருந்து வருவதைச் சொல்லி இந்த முறை மன்னிக்குமாறு நூறு ரூபாய்க்குச் சில்லறை கேட்கவும் நோட்டை அவள் முகத்தில் விசிறியடித்த அலுவலக ஊழியர் “எப்படியாவது மாற்றிக்கிட்டு வா” எனச் சொல்ல இவளும் அங்கிருந்த பலரிடம் ஓடியாடி சில்லறை கேட்பதை வேடிக்கை பார்த்திருக்கிறார் ஊழியர். எவரேனும் சும்மாவேனும் நான்கு ரூபாய் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் அப்படிக் கேட்க இப்பெண்மணிக்கு சுயகெளரவம் தடுத்திருக்கும் இல்லையா?

வெளியில் போய் கடையில் எதையாவது வாங்கிச் சில்லறை மாற்றும் வசதியும் மனமும் இன்றி மறுபடி ஊழியரிடமே வந்து கெஞ்சியிருக்கிறார். அடுக்கிய ஐம்பது, இருபது, பத்துகள் மற்றும் சில்லறைகள் அடங்கிய டிராயரை கண்ணில் படும்படியாக விரியத் திறந்து வைத்துக் கொண்டே, அவளது சேமிப்புப் புத்தகத்தினுள் இருந்த ‘பே இன் ஸ்லிப்’பைச் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு “போ..போ.. எப்போ 8 ரூவாய் சில்லறையா கொண்டு வர முடியுதோ, அப்போ வந்துக் கட்டு” என அனுப்பி விட்டிருக்கிறார் அந்த “பெண்” ஊழியர்.

பிற இடங்களில் எப்படி எனத் தெரியாது. ஒரு ஊழியரின், ஒரு அலுவலகத்தின் செயல்பாட்டினை வைத்து ஒட்டு மொத்த தபால் சேவையையும் குறை சொல்லவும் கூடாது. அதனால்தான் தலைப்பில் “ஒரு” தபால் அலுவலகத்தின் எனக் குறிப்பிட்டுள்ளேன். இன்றைக்கும் வேகாத வெயிலிலும், மழைநீர் வழுக்கும் சாலைகளிலும் சைக்கிளை மிதித்து வந்து தபால் பட்டுவாடா செய்கிற தபால்காரர்கள் மதிப்பிற்குரியவர்களே.நான் சொல்ல வருவதெல்லாம், வாடிக்கையாளர்களை மதித்துச் செயல்பட வேண்டும் என்பதே. 'நான்கு ரூபாய் சில்லறைக்கு நூறு ரூபாயை எல்லோரும் நீட்டினால் நாங்கள் என்ன செய்வோம்' என நியாயம் பேசுவார்களேயானால் அதைச் சொல்ல ஒரு முறை இல்லையா? மனம் வைத்திருந்தால் விதிவிலக்காக உதவியிருக்கலாம். சரி, முடியாதா? அந்த மனிதாபிமானம் இல்லையா? பணிவாகவேனும் மறுத்திருக்கலாம்.

ப்போது மாறுவார்கள்? வாடிக்கையாளர் சேவை என்றால் என்னவென யார் எப்போது இவர்களுக்கு பயிற்றுவிப்பார்கள்? ஏற்கனவே சென்றமாதம் வடக்குவாசல் இதழில் வெளியான எனது பெங்களூர் குறித்த கட்டுரையில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும் இவர்களது சேவை என பி எஸ் என் எல்-லைப் பாராட்டி ஒரு பத்தி எழுத இருந்தேன். அக்கட்டுரை நீளமாகி விட்டபடியால் தவிர்க்க நேர்ந்து விட்டது. இப்போது இந்தத் தபால் ஊழியரின் செயல் BSNL-யைப் பாராட்டியே தீர வேண்டுமென்கிற உந்துதலைத் தந்து விட்டது.

பாராட்டுகளுடன், முகப்புத்தகத்தில் கண்ட BSNL-லின் வித்தியாசமான விளம்பரம் ஒன்றையும் இங்கு பகிந்து கொள்கிறேன்:
***

புதன், 22 பிப்ரவரி, 2012

பறத்தலின் மீதான புரிதல் - நவீன விருட்சத்தில்..


உனக்கான இடம் இதுவல்ல
உள்ளுணர்வு சொல்லிய போது
உணர்கிறான் தோளோடு இருந்த
வலுவான இறக்கைகளை

அடைய வேண்டிய உயரமும்
போக வேண்டிய பாதையும்
வரைபடமாக விரிந்த போதும்
இறகுகளை நீவி அழகு
பார்த்தபடி நிற்கிறான்

எவருக்கும் தனை நிரூபிக்கும்
விருப்பங்கள் அற்று
பறக்க அஞ்சுவதாக எழுந்த
பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான்

வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக
மேகங்களின் வேகமும்
மாறும் அதன் வடிவங்களும்

பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்

வானம் தாண்டிக் கோடானு கோடிக்
கோள்களைப் பார்க்க இயலும்
பிரபஞ்சத்தின் உச்சியை
அடைகின்ற பொழுதில்..

விரிக்கக் கூடும் தன் சிறகுகளை
அளவற்ற ஆனந்தத்தில்.
***

12 பிப்ரவரி நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்.

படம்: கவிதையுடன் வெளியானது.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

தூறல்: 1 - பள்ளி நிர்வாகங்கள்; பிளாஸ்டிக் அரக்கன்; அங்கீகாரங்கள்

பள்ளி நிர்வாகங்கள்:

மாணவர்-ஆசிரியர்-பெற்றோர் இவர்களுக்கிடையான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த என் எண்ணங்களை ஒன்றரை வருடம் முன், நான் படித்த பள்ளிக்கு சென்று வந்த போது பதிந்த தாயுமானவராய்..” பதிவில் சொல்லி விட்டுள்ளேன்.

ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு நேர்ந்த அவலமான முடிவுக்குப் பின் மீண்டும் விவாதிக்கப்பட்டு வரும் இப்பிரச்சனையில் நான்காவது கோணமாகப் ‘பள்ளி நிர்வாகங்கள்’ அழுத்தமான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன. இதை மறுப்பதற்கில்லை. நூறு சதிவிகித ரிசல்டில்தான் தங்கள் கெளரவம் அடங்கியிருப்பதாகக் கருதும் பள்ளிகளையும், அதை முன்னிறுத்தியே கட்டணங்களை ஏற்றுவதையும், பிற பள்ளிகளோடு ஒப்பீடு செய்து பெருமை கொள்வதையும் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. மதிப்பெண்களை நோக்கி மாணவர்களைத் துரத்தும் பணிக்கு ஆசிரியர்களும் நிர்ப்பந்தப்படுத்தப் படுகிறார்கள்.

தங்கள் பள்ளியிலேயே சின்ன வயதிலிருந்து படித்த மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் வடிகட்டிவிட்டுப் பெருமிதமாய் நூறு சதவிகித ரிசல்ட் காட்டும் பள்ளிகளை விடவும், படிப்பில் பின் தங்கிய மாணவர்களைச் சரியான முறையில் கையாண்டு அவர்கள் தேர்ச்சி பெற முடிந்தவரை முயன்றிடும் பள்ளிகளே போற்றுதலுக்குரியவை. அவர்கள் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எத்தனையோ வழிகள் இருப்பதை நம்பிக்கை ஏற்படும் விதமாக விளக்கி, குறைந்தபட்சம் SSLC-யாவது படித்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி ஊக்கம் கொடுத்து, பரீட்சை எழுதும் வாய்ப்பை எத்தனை பள்ளிகள் வழங்க முன் வருகின்றன? இந்த அழுத்தம் ஒரு சுழற்சியாய் மாணவரை, ஆசிரியரை, பெற்றோரை பாதித்தபடியே இருப்பதற்கு பல வருந்தத்தகு செய்திகளை உதாரணமாகச் சொல்லிக் கொண்டே போக முடியும்:(!

அரக்கனின் விலை:

“அம்பது நூறுன்னு ஆக்கிப் பாருங்க”
ன் தங்கையின் எட்டு வயது மகள் சென்ற தீபாவளி சமயத்தில் மால் ஒன்றின் கேஷ் கவுண்டரில் சில நிமிடங்கள் நடப்பதைக் கூர்மையாகக் கவனித்திருந்து விட்டு கேஷியரிடம் நேராகப் போய் ‘பிளாஸ்டிக் பைகளுக்கு 3 ரூபாய் , 5 ரூபாய் என விலை நிர்ணயித்து மக்களை மேலும் உபயோகிக்கவே தூண்டுகிறீர்கள். நானும் பார்க்கிறேன். எவருக்குமே அதை காசு கொடுத்து வாங்குகிறோமென்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லை. விலையை 50, 100 என ஆக்கிப் பாருங்கள்’ என்றாளாம்.

சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்பும் போது சணல் பைகளை எடுத்துக் கொள்கிற நான், வேறெங்கேனும் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் போக நேர்ந்தால் பைகளைக் குற்ற உணர்வுடன் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படவே செய்கிறது. இவள் சொன்னதைக் கேட்ட பிறகு அது இன்னும் அதிகரிக்க, நிரந்தரமாக 2,3 பைகள் காரில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.

என்னதான் நாம் பைகளைக் கொண்டு சென்றாலும் பலசரக்கு பொருட்கள் எல்லாமே ப்ளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டுதானே விற்பனையாகிறது? முழுமையாகத் தவிர்க்க முடியாத இப்புழக்கத்திற்கு மாற்றான தீர்வுதான் என்ன எனும் சிந்தனை வந்த போது நான்கு வருடங்களுக்கு முன் பெங்களூரைச் சேர்ந்த அகமது கான் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய பிளாஸ்டிக் சாலை நினைவுக்கு வர, அந்த முறை பின்பற்றப் படாததற்கு அரசியல் காரணங்கள் ஏதேனும் இருக்குமோ எனும் கேள்வி என்னுள் சுற்றிக் கொண்டிருந்தது.

ப்போது சென்னையின் 200 வார்டுகளில் பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் போட ஏற்பாடாகி இருக்கிற விவரம் மகிழ்ச்சி அளிக்கிறது. மாநகராட்சியே ஆட்களை அமர்த்தி புதன் கிழமை தோறும் வீடு வீடாகச் சென்று மெல்லிய பிளாஸ்டிக் பைகளைச் சேகரிக்க இருப்பதாகவும், பொது மக்கள் plasticwaste@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெல்லிய பைகள் குறித்த தகவல் அளிக்கலாம் என்றும் ஒரு நண்பர் முகப்புத்தகத்தில் பகிர்ந்திருக்கக் கண்டேன்.

கனவாகனப் போக்குவரத்து இல்லாத எல்லா சாலைகளையும் (அதாவது போட்டு ஒருசில வருடங்களில் கோடிகளை முழுங்கி விட்டுச் சேதமாகிப் பல்லைக் காட்டும் ரோடுகளை) பிளாஸ்டிக் சாலைகளாக மாற்றிடுவது குறித்து எல்லா மாநில அரசுகளும் விரைவில் பரிசீலிக்கும் என நம்புவோம்.

பெங்களூரில் என் தங்கை வசிக்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட குடியிருப்பின் அசோசியேஷன் மிகக் கடுமையாகப் பின்பற்றிவரும் முறை இது:

1. சமையல் கழிவுகள் மட்டுமே தினசரிக் குப்பையாக வெளியேற்றப்பட வேண்டும்.

2. பேப்பர், அட்டைகள், பிளாஸ்டிக் கவர் மற்றும் பொருட்கள் அவர்கள் தருகிற சாக்குப் பையில் சேமிக்கப்பட்டு வாரயிறுதி நாட்களில் வெளியேற்றப் படவேண்டும்.

3. வேண்டாத பாட்டில்கள் போன்றவை தனியாகக் கீழ்தளத்தில் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் ட்ரம்களில் சேர்க்கப்பட வேண்டும். இதில் குளறுபடி செய்கிறவர்களுக்கு அபராதம் உண்டு.

இந்த முறையினால் மறுசுழற்சிக்குப் பொருட்களை எளிதில் அனுப்ப முடிகிறது. இந்த நடைமுறையில் வெகுவாகு மகிழ்ந்து, அசோசியேஷன் தலைவராக செயல்பட்டு வரும் பெண்மணியை பெங்களூர் மாநகராட்சி (BBMP) பாராட்டிக் கெளரவித்துள்ளது. இவரை முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து குடியிருப்புகளும் இம்முறையைப் பின்பற்ற வலியுறுத்தி வருகிறது.

அங்கீகாரங்கள்:

எழுத்துக்கு..

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் முனைவர் இளங்கோவன் அவர்கள் தனது நண்பர் பேராசிரியர் பட்டாபிராமனுக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு என்னைப் பற்றிய விவரங்கள் தேவைப்படுவதாக அறிமுகம் செய்து வைத்திருந்தார். தொடர்ந்து பேராசிரியர் பட்டாபிராமன் கேட்டுக் கொண்ட விவரங்களை அனுப்பி வைத்திருந்தேன். தென்காசியைச் சேர்ந்த இவர் புளியங்குடியில் இருக்கும் மனோ கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் “இணையத்தில் இலக்கியம் - பெண்களின் பங்கு” என்பது குறித்தத் தன் ஆய்வின் ஒரு பாகமாக எனது படைப்புகள் சிலவற்றை எடுத்துக் கொண்டிருந்ததுடன், ஆய்வு அறிக்கையில் என் புகைப்படம், வாழ்க்கைக் குறிப்பு மற்றும் வலைப்பூ குறித்த விவரங்களைச் சமர்ப்பித்திருந்ததையும், இந்த ஜனவரி ஐந்தாம் தேதி முனைவர் பட்டம் பெற்று விட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். முனைவர் பட்டாபிராமன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியும். என் பெயரைப் பரிந்துரைத்திருந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றி.

நிழற்படங்களுக்கு..

ஓய்வு பெற்ற பேராசிரியரும், மதிப்பிற்குரிய பதிவரும், சிறந்த புகைப்படக் கலைஞருமான தருமி அவர்கள் தனது நாற்பதாண்டு கால புகைப்பட அனுபவங்களைக் குறித்து “நானும், photography-யும்” என ஒரு தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். அதன் பாகம் நான்கில் எனது புகைப்படங்களைக் குறித்த பெருந்தன்மையுடனான அவரது பாராட்டு ஒரு விருதைப் பெற்ற மகிழ்ச்சியைத் தந்தது என்றால் அது மிகையன்று. நன்றி தருமி சார்:)!

வலைப்பூவுக்கு..

போதுமென ஒரு சோர்வோ சலிப்போ தோன்றும் வேளைகளில் எங்கிருந்தேனும் வந்தடையும் அங்கீகாரங்கள் நம்மைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. ‘திருமதி பக்கங்கள்’ கோமதி அரசு வழங்கிய “The Versatile Blog” விருதுக்கும்; ‘கற்றலும் கேட்டலும்’ ராஜி,‘சமையல் அட்டகாசங்கள்’ ஜலீலா கமல் ஆகியோர் வழங்கிய “Liebster Blog" விருதுக்கும் என் அன்பு கலந்த நன்றி. இதுவரையிலுமாக 26 நண்பர்கள் அன்புடன் வழங்கிய 12 விருதுகளும் ஊக்கம் தரும் சக்தியாக எப்போதும் முத்துச்சரம் முகப்பில்.. பிகாஸா ஆல்ப வடிவில்..!

வழக்கம் போலவே இந்த இரு விருதுகளையும், பல்வேறு பணிகளுக்கு இடையே தொடர்ந்து எழுதி வரும் அனைத்து வலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இது சரியா?

வசக்தி என்றொரு தளம். பிப்ரவரி 7ஆம் தேதி ஒரே நாளில் எனது கவிதைகள், கட்டுரைகள், நூல்விமர்சனம் மற்றும் (முந்தைய பாகங்களின் சுட்டிகளையும் கொண்ட) சிங்கப்பூர் பயணக் கட்டுரையின் கடைசிப்பாகம் என 10 பதிவுகளைத் தங்கள் தளத்தில் தனித்தனியே காபி பேஸ்ட் செய்து பதிந்துள்ளார்கள். போக ‘முத்துச்சரம்’ எனத் தனியாக ஒரு அறிவிப்புப் பதிவும். பதிவர்களுக்கு விளம்பரமா? புரியவில்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் எனது வலைப்பூவுக்கு இணைப்பு கொடுப்பதாக நினைத்து தவறுதலாக வேறொரு வலைப்பூவின் பெயர் மற்றும் இணைப்பைக் கொடுத்துள்ளார்கள். அனுமதி இல்லாமல் போட்டதுதான் போட்டார்கள். அதையாவது சரிசெய்யுமாறு கேட்டுப் பின்னூட்டம் இட்டேன். எந்தப் பதிலும் இல்லை. சரி செய்யவும் இல்லை.

அதீதம் கார்னர்:

வலையோசை-7_ல் க. நா. சாந்தி லட்சுமணன்;
வலையோசை-10_ல் சுந்தரா;
வலையோசை-11_ல் கே. ரவிசங்கர்

***


ஃபோட்டோ கார்னர்..

11 ஜனவரி பொங்கல் சிறப்பிதழில்..:
  • உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (பீ வீ)
  • ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவதுபோல்.. நம் இசை ( சேத்தன் ராம்)

29 ஜனவரி இதழில்.. உலகின் உன்னத இடங்கள்:

  • தந்தையின் தோள் (ராகேஷ் );
  • தாயின் மடி (அமைதிச்சாரல்)

14 பிப்ரவரி காதல் சிறப்பிதழில்..:

  • எங்கும் அன்பு எதிலும் அன்பு (MQN)
  • பருவமே புதிய பாடல் (ஜீவ்ஸ்)

என் ரசனையில் அமைந்த படத் தேர்வுகளைக் கண்டு களியுங்கள்:)!




படத்துளி:

குட்டி நாயின் நீண்ட நிழல்




கலவையான விஷயங்களை ஒரு தொகுப்பாக வகைப்படுத்திப் பகிரும் எண்ணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. துளித்துளியாக இனி அவ்வப்போது தூறும் :)!

***

திங்கள், 20 பிப்ரவரி, 2012

‘க்ளோஸ்-அப்’ இம்மாத PiT போட்டி - ‘யுடான்ஸ்’ இவ்வார நட்சத்திரம்

அடடா அடடா! க்ளோஸ்-அப் (அண்மைக் காட்சி) என ஒரு தலைப்பை நடுவர் கொடுத்தாலும் கொடுத்தார், அறிவிப்பு ஆன தினத்திலிருந்து நிற்காத அடைமழையாய் படங்கள் வந்து கொட்டிக் கொண்டே இருக்கின்றன. ஒரே நாளில் 23 பேர், 45 பேர்களின் படங்களெல்லாம் வந்து திக்கு முக்காடச் செய்து விட்டன. அப்புறம் எதற்கு நினைவூட்ட ஒரு பதிவெனக் கேட்கிறீர்களா:)? நம்ம கடமையை நாம செஞ்சிரணுமில்லையா? அதுவுமில்லாம வழக்கம் போலப் படங்களை அனுப்ப 15ஆம் தேதியே கடைசி என நினைத்துத் தவற விட்டவர்களுக்கு 20-தான் கடைசி, இன்னும் இருக்கு முழுசா ஒரு நாள் எனச் சொல்லவுமே இப் பதிவு.

அறிவிப்பில் க்ளோஸ்-அப் பற்றி மிக அருமையான விளக்கம் தந்திருக்கிறார் சர்வேசன். குறிப்பா “குழந்தையின் முகமோ, கைகளோ, பூக்களின் மேலிருக்கும் வண்டோ, பறவையின் கூரிய பார்வையோ, பெண்களின் புருவமோ, மீசைக்காரரின் வசீகரச் சிரிப்போ, பாட்டியின் சுருங்கிய விரல்களோ, மீனோ, மானோ, பளீர் தக்காளியோ, சில்லென்ற கோக் பாட்டிலோ, ஃபுல் மீல்ஸோ, எதுவாக இருந்தாலும், அருகாமையில் சென்று அதன் விவரங்களைப் பதிந்தால், அந்தப் புகைப்படத்துக்கு ஒரு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்.” என அவர் மகுடி வாசித்த விதத்துக்கு மயங்கிக் கட்டுண்டு நண்பர்கள் படமெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
இதுவரை வந்திருக்கும் 140-க்கும் அதிகமான படங்களைக் காண இங்கே செல்லுங்கள். உங்கள் கருத்துகளை வழங்கி உற்சாகம் கொடுங்கள்.

நான் எடுத்த சில பார்வைக்கு:

# 1. சின்னஞ்சிறு ப்ரிமுலா

# 2. மக்கா கிளி

3. பூக்களின் ராணி


# 4. கணபதயே நமக
# 5. சிவாய நமக
# 6. எத்தனை அடுக்கு எண்ணலாம், வாங்க
# 7. யார் வரவைத் தேடுது..

கீழ்வருவன யாவும் முத்துச்சரத்தில் இதுவரையிலும் பகிராதவை:

# 8. மழை ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில் சிறகுலர்த்தும் சின்னப் புறா


# 9. கொஞ்சம் நீள முகம்


# 10. தைப்பூச நிலா
மறையும் முன் நிறை நிலா..
மஞ்சளுக்கு மாறிக் கொண்டிருந்த நேரத்தில்..!

# 11. பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக
உழவர் திருநாள் வாழ்த்தாக ஃப்ளிக்கரில் பதிந்த மஞ்சள் கொத்து

# 12. ஏதோ நினைவுகள்.. கனவுகள்..



ஓரங்குலமே இப் பொம்மையின் முகம். 4-வது படத்திலிருக்கும் கணேசா 3 அங்குல உயரம் கொண்டவரே. படமெடுக்க வீட்டுகுள்ளேயே நிறைய வாய்ப்புகள். சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டுங்க:)! பக்கமாய் நின்று படம் புடிங்க.

# 13. உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே..

# 14. யார் தூரிகை செய்த ஓவியம்..?


# 15. யார் சிந்தனை குழைந்த காவியம்.. :)?
கண்ணைப் பறிக்கும் ‘மெஜந்தா’ வண்ணம்.

# 16. பளிச்சிடும் பற்களுக்குக் ‘க்ளோஸ் அப்’ :)!


# 17. க்க்க்ளோஸ்-அப்ப்ப்

தேமே என நின்றிருந்த தேனீ பக்கத்துல போய் கேமரா ‘கிர்ரக் கிர்ரக்’ என சவுண்டு விட்டு க்ளிக்கினால் அது சும்மா இருக்குமா? மெல்ல கால்களைத் தூக்கி அதுவும் சவுண்டு விட ஆரம்பித்தது...

# 18. ZZZzzzz.....கைகளைப் பதம் பார்த்து விடக் கூடாதெனத் தேனீ மேலே டார்ச் அடித்து ஒளிபாய்ச்சிய உதவியாளர்களிடம் 'பேக் அப்' சொல்லி விட்டேன். இதுவரை படம் அனுப்பாதவங்களுக்கு சொல்லவிரும்புவது:
ஸ்டார்ட் கேமரா' :)!


இந்த வாரம் திங்கள் முதல் ஞாயிறு வரை
என்னை நட்சத்திரப் பதிவராக
அறிவித்திருக்கும் யுடான்ஸ் திரட்டிக்கு
நன்றி!!!
***

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

மகா சிவராத்திரி - சிறப்புப் படங்கள் இரண்டு

வாழ்வே தவம்
அன்பே சிவம்!


அருட்பெரும் ஜோதி
தனிப் பெருங்கருணை!
கோவில் பிரகாரம் ஒன்றில்..

முதல் படம் எடுக்கப்பட்ட பெங்களூர் சிவாலயம் குறித்த முந்தைய பதிவுகள் இங்கே:
1. விஸ்வரூப தரிசனம்-பெங்களூரு சிவாலயம் (பாகம் 1)
2. ஒரு வலம்.. பல ஸ்தலம்-பெங்களூரு சிவாலயம் (பாகம் 2)

நெல்லைப்பர் திருக்கோவில் குறித்த பகிர்வு இங்கே:
இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்

சிவனருளால் எங்கும்
அன்பு பெருகி
அமைதி நிலவட்டும்!
அகிலம் செழிக்கட்டும்!
***

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

எனதன்பும் உனதன்பும் - அதீதம் Feb 14 சிறப்பிதழில்..



எனதன்பு மெளனமானதே
எம்மொழியில் முயன்றாலும்
முழுமையாகப் புரியவைக்க
இயலாது போகுமோ
எனும் அச்சத்தால்
நான் அடை காக்கும்
அன்பு மெளனமானதே

ஆயினும்
உனதன்பை நீ சொல்லிக் கொண்டேயிரு.

சந்தர்ப்பங்கள் வாய்க்கக் காத்திராமல்
அடிக்கடி உனதன்பை நீ
வெளிப்படுத்தியபடி இருப்பது
உனக்கு மட்டுமின்றி
எனக்கும் பிடித்திருப்பதால்

தொடர்ந்து
உனதன்பை நீ சொல்லிக் கொண்டேயிரு.

எத்தனை நட்சத்திரங்கள்
வானத்தை நிறைத்தாலும்
எண்ணிக்கை அதிகமென
எண்ணுவதில்லை நிலவு

எத்தனை மலர்கள்
வனமெங்கும் பூத்தாலும்
பரவும் நறுமணத்தால்
திணறுவதில்லை காற்று

எத்தனை முறை உனதன்பை
நீ எப்படிச் சொன்னாலும்
ஒவ்வொரு சொல்லும்
பிரபஞ்சத்தையே பரிசாக
ஏந்தி வருவதாக
மெளனமாக மகிழ்ந்து கொண்டிருக்கும்
எனதன்புக்காக

உனதன்பை நீ சொல்லிக் கொண்டேயிரு.
***

அதீதம் காதல் சிறப்பிதழில்.
படம் நன்றி: MQN

புதன், 8 பிப்ரவரி, 2012

ஏன் பாடுகிறது கூண்டுப் பறவை.. நானறிவேன்! - மாயா ஏஞ்சலோ கவிதை (1)


ரு சுதந்திரப் பறவை
காற்றின் முதுகில் தொத்திக் கொண்டு
பாயும்நீரின் முனைவரை மிதந்து
தன் சிறகுகளை
ஆதவனின் ஆரஞ்சுக் கதிரினில் நனைத்து
வானத்தையும் ஆக்ரமிக்கத் துணிகிறது.
அடைப்பட்ட பறவைக்கோ
குறுகிய கூண்டின் கொடும் கம்பிகளை மீறி
வெளியுலகினைக் காண இயலுவதில்லை.
கால்கள் கட்டப்பட்டிருக்க
சிறகுகள் ஒடுக்கப்பட்டிருக்க
வேறு வழியின்றிப் பாடத் தொடங்குகிறது
தொண்டையைத் திறந்து.

பாடுகிறது கூண்டுப்பறவை
நடுக்கம் நிறைந்த குரலெழுப்பி
அறிந்திராத விடயங்களைப் பற்றி
ஆனால் அறிய ஏங்குவன பற்றி...
விடுதலைக்காக இறைஞ்சும் அதன் இசை
தூரத்து மலைகளுக்கும் கேட்கும்படி.

ன்னொரு இளந்தென்றலைத் தேடுகின்ற
சுதந்திரப் பறவைக்காக
பருவக்காற்று நயமாகிறது
நெடுமூச்செறியும் மரங்களின் ஊடே.
காத்திருக்கின்றன கொழுத்த புழுக்கள்
சுதந்திரப் பறவைக்காக..
அதிகாலை பிரகாசத்துடன்
மினுங்கியப் புல்வெளியில்.
கொண்டாடுகிறது சுதந்திரப்பறவை
வானத்தைத் தனதென்று.

கூண்டுப்பறவையோ நிற்கிறது தன்
கனவுகளின் கல்லறை மேலே.
அதன் நிழலும் கூட அலறுகிறது
கோரக்கனவு கண்டதனாலே.
கட்டப்பட்ட கால்களுடன்
ஒடுக்கப்பட்ட சிறகுகளுடன்
பாடத் தொடங்குகிறது
வேறு வழியறியாது
தொண்டையைத் திறந்து..

நடுக்கம் நிறைந்த குரலெழுப்பி
அறிந்திராத விடயங்களைப் பற்றி
ஆனால் அறிய ஏங்குவன பற்றி..
தூரத்து மலைகளுக்கும் கேட்கும்படி
விடுதலை வேண்டி.
***

மூலம்:
I Know Why The Caged Bird Sings
Maya Angelou (April 4, 1928)


படம் நன்றி: இணையம்

29 ஜனவரி 2012 அதீதம் இணைய இதழுக்காக மொழிபெயர்த்தக் கவிதை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin