சனி, 31 டிசம்பர், 2011

2011-ல் முத்துச்சரம்



ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நேசம் அமைப்பு பற்றி அறிந்திட இங்கே செல்லக் கேட்டுக் கொள்கிறேன்.


சென்ற வருடம் இதே நாளில் நண்பர்கள் அழைத்ததன் பேரில் 2010-ல் முத்துச்சரம் [தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்] எழுதினேன். ‘2011-ம் நானும்’ எனத் தொடர் பதிவுகள் பதிவுலகில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் முத்துச்சரம் பற்றிய ஒரு பார்வை, சுய அலசலாக அடுத்த ஆண்டை எதிர்நோக்க வைக்கும் என்பதால் இந்தப் பகிர்வு. எனக்கான ஒரு டைரிக் குறிப்பாகவும் கொள்கிறேன்.

வலையுலகில் முதல் மூன்று வருடங்களுமே மாதம் மூன்று எப்போதேனும் நான்கு என்ற அளவிலேயே பதிவிட்டு வந்த நான் இந்த வருடம் சராசரியாக மாதம் 10 பதிவுகள் தந்திருப்பதற்கு நண்பரின் ஊக்கம் காரணம் என்பதை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

இந்த வருடச் சிறப்பாக அமைந்திருந்தன வலைச்சர வாரமும், தமிழ்மணம் நட்சத்திர வாரமும்.

வலைச்சர வாரத்தில் நண்பர்கள் பலரின் சிறந்த பதிவுகளை அறிமுகப்படுத்த முடிந்த மகிழ்ச்சியுடன் அங்கு ஒன்றும், அறிவிப்பாக முத்துச்சரத்தில் ஒன்றுமாக வழக்கத்துக்கு மாறாக 14 பதிவுகள் இட்டது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் மீள்பதிவுகள் இன்றித் தரமுடிந்த 16 பதிவுகள். நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் வெளியிடும் வாராந்திர ‘டாப் 20’ பட்டியலில் முத்துச்சரத்துக்கு முதலிடம் கிடைத்தது.

இரண்டு வாரங்களிலும் நண்பர்கள் தந்த ஊக்கம் நெகிழ்வானது.

எழுத்துக்கும் புகைப்படப் பயணத்துக்குமான அங்கீகாரங்களாக அமைந்து ஊக்கம் தந்தன கீழ்வரும் வெளியீடுகள்:

பத்திரிகைகள்:

  • தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள். அதிலொன்று நட்சத்திரவாரத்தில் பிடித்த ஓவியர் ராமுவின் சித்திரத்துடன்..

  • வடக்குவாசல் இலக்கிய இதழில் 3 கவிதைகள்
  • நவீன விருட்சம் 89-90வது இதழில் கவிதை

இணைய இதழ்கள்:


  • உயிரோசையில் 3 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
  • கீற்றினில் 5 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
  • திண்ணையில் 4 கவிதைகள்; 4 புத்தக விமர்சனங்கள்; 1 சிறுகதை
  • நவீனவிருட்சத்தில் 11 கவிதைகள்
  • வல்லமையில் 2 புத்தக விமர்சனங்கள், 1 கவிதை
  • பண்புடனில் 1 கவிதை; 1 புகைப்படத் தொகுப்பு
  • அதீதத்தில் 3 புத்தக விமர்சனங்கள்; 1 மொழிபெயர்ப்புக் கவிதை

வெளியிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.


க்ளிக் க்ளிக்


புகைப்படங்களைப் பொறுத்தவரை ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பதிவுக்கு தமிழ்மணம் விருது 2010-ன் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது: 2009-லும் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் என்பதில் இது தொடர் வெற்றியாயிற்று.

DSLR-ன் பயன்பாடுகளைக் கற்றுத் தேறிட வேண்டுமென்பதில் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. இருப்பினும் அதில் எடுத்த படங்களுடனான பதிவுகள் பல நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. PiT பதிவுகள் போக குடியரசு மற்றும் சுதந்திர தின மலர்கண்காட்சிகள், நிலவைப் பிடித்த கதைகள்(சூப்பர் மூன், சித்திரா பெளர்ணமி, சந்திரக் கிரகணம்), அதிவேகத்தில் எடுத்த இயற்கைக் காட்சிகள், பக் பக் பறவைகள், பெங்களூர் சிவாலயம் மற்றும் சிங்கப்பூர் பயணப் படங்கள் ஆகியன அவற்றில் சில.

மே மாதம் PiT குழுமத்தில் உறுப்பினராக இணைந்தது இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வைத் தந்தது.

29 நவம்பர், ஃப்ளிக்கர் எக்ஸ்போளரரில் அன்றைய சிறந்த படங்களில் ஒன்றாக என் படம் இடம் பெற்றது:

ஜூலையிலிருந்து அதீதம் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாக. அதன் ‘வலையோசை’ மற்றும் ‘ஃபோட்டோ கார்னர்’ பகுதிகளுக்கு முழுப் பொறுப்பு எடுத்து நல்ல வலைப்பக்கங்களையும் சிறந்த நிழற்படங்களையும் அறிமுகப்படுத்த முடிவதில் திருப்தி கிடைக்கிறது.

அதீதம் புத்தாண்டு இதழில்..அதீதத்தில் இந்த வருடம் மாதம் ஒரு சிறப்பாசிரியரை அறிமுகம் செய்வதை நடைமுறைப்படுத்தி உள்ளோம். புத்தாண்டு இதழுக்கு யார் ஆசிரியர் என அறிய இங்கே செல்லுங்கள். வலையோசையைக் காண இங்கே செல்லலாம். ஃபோட்டோ கார்னரில் புத்தாண்டை வரவேற்று ஆடும் அழகு மயில்களை எடுத்தவர் யார் என்பதைக் காண வேண்டாமா?

டந்த வருடம் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடாக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டுமென எடுத்தத் தீர்மானம் ஓரளவு நிறைவேறியிருப்பதைப் புத்தக விமர்சனங்களின் எண்ணிக்கை காட்டுகிறது. சிறுகதைகள் அதிகம் எழுத வேண்டுமென எடுத்த தீர்மானம் காற்றில் பறந்தது. பல கரு மனதில் இருந்தும் வடிவம் கொடுக்காத சோம்பேறித்தனம் வரும் ஆண்டிலாவது மாறுமா தெரியவில்லை. கவிதைகள் தோன்றும் பொழுது மட்டுமே எழுதுவதால் எந்தத் தீர்மானமும் எடுத்திருக்கவில்லை.

ஆக, செயல்படுத்த முடிந்த புகைப்பட நுணுக்கங்கள் கற்பது, வாசிப்பு இதற்கே வரும் வருடத்திலும் அதிக நேரம் செலவிட வேண்டுமென்பது சுலபமான நிலைப்பாடாகத் தோன்றுகிறது:)! பதிவுகளைப் பொறுத்த வரையில் வாரம் இத்தனை எனும் திட்டமிடல் ஏதுமின்றி இயலும்போது பதியலாம் என்றிருக்கிறேன். எண்ணிக்கை இவ்வருடம் போல் அமைவது சிரமமே.

2012_ல் வேண்டுவது இயற்கையின் ஆசி, உலகில் அமைதி, அனைத்துதரப்பு மக்கள் வாழ்விலும் சுபிட்சம், ஆரோக்கியம். இயற்கையிடம் நன்றியுடன் இருப்போம். இயன்றவரை பிறருக்கு உதவுவோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

வெள்ளி, 30 டிசம்பர், 2011

நைட் சஃபாரி - சிங்கப்பூர் பயணம் (9) - நிறைவுப் பாகம்

# 1. நீரைக் குடித்து நெருப்பாய்க் கக்கு
காணும் கனவைக் காரியம் ஆக்கு


ருட்டத் தொடங்கும் ஏழுமணிக்கே ஆரம்பமாகிறது காட்டுக்குள் பயணம். அதற்கொரு அரை மணி முன்னதாகவே ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றத் தொடங்கி விடுகிறார்கள். காத்திருக்கும் வேளையில் மீன் தொட்டிகளுக்குள் கால்களைக் கொடுத்து ஃபிஷ் ஸ்பா செய்தபடி சிலர், சுற்றியிருக்கும் கடைகளில் நினைவுப் பொருட்கள் வாங்கியபடி சிலர், மலைப்பாம்புகளை வாங்கிக் கழுத்தில் இட்டுப் படமெடுத்தபடி சிலர் எனக் கலகலப்பாக இருக்கிறது இடம். பாம்புகளைத் தோளில் போட்டுக் கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமென்கிற நம்பிக்கை அங்கே உள்ளது. ஜூராங் பூங்கா, மக்கள் நடமாட்டமுள்ள மெர்லயன் என எல்லா இடங்களிலுமே இதற்கென்றே பாம்புகளை வைத்திருந்தது குறித்து பாகம் இரண்டில் படங்களுடன் பகிர்ந்திருந்தேன். கையிலெடுக்க நடுக்கம், ஆனால் வேண்டும் அதிர்ஷ்டம் என்போருக்கு இங்கே அட்டை வீரன் பாம்பை ஏந்திக் காத்திருக்கிறான். முகத்தை உள்ளே விட்டுப் படமெடுத்துக் கொண்டு திருப்தியாக நடையைக் கட்டுகிறார்கள் வரப்போகும் அதிர்ஷ்டத்தை எண்ணிக் கனவு கண்டபடி.

# 2. முகப்பில் வரவேற்கும் பழங்குடியினர் சிலைகள்

# 3. பக்கத்தில் (சிரித்த முகத்துடன்?)‘நல்வரவு’ எனக் கூவும் முதலைசமீபத்தில் தன் அமெரிக்கப் பயணத்தில் அச்சு அசல் இதே போன்ற ஒரு முதலைச் சிலையின் வாயினுள் தன் ஒற்றைக் காலைக் கொடுத்து இரண்டு கைகளையும் தூக்கி அலறுவது போன்ற முகபாவத்துடன் ஒரு தோழி தன் படத்தைப் பகிர்ந்திருந்தார்:)! யோசனையும் ரசனையும் இணைந்த காட்சியாக இருந்தது அது.

# 4. நிகழ்வு மேடைஇரவு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் வரை தைரியசாலிகள் பாம்புமாலை அணிந்து காட்சி கொடுத்தபடி இருந்த மேடை.

# 5. தீப்பந்தங்கள்

திங்கள், 26 டிசம்பர், 2011

சீனக் கோவில், ஒரு சித்திரக் கூடம் - சிங்கப்பூர் பயணம் (பாகம் 8)



லகின் எந்தப் பாகமானாலும் இறையும் கலையும் இணைந்தே இருப்பதொரு அற்புதம். சிங்கப்பூரின் முக்கியமான, மிகப் பழமை வாய்ந்த வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான தியான் ஹாக் கெங் (‘சொர்கத்தின் மகிழ்ச்சி’ என்பது பொருளாம்) சீனக்கோவிலிலும் அதைக் காண முடிந்தது. இந்தக் கோவில் தெற்குச் சீனப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் வழி வந்தது.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இக்கோவில் கடற்கரையில் இருந்ததென்றால் நம்புவது கடினமே. இப்போது சிங்கப்பூரின் வியாபார மையத்தில் வான் தொடும் கட்டிடங்கள் சூழ பொலிவுடன் திகழ்கிறது.

# 2.
1821-ல் (ஜாஸ் ஹவுஸ்) மரத்தாலான வழிபாட்டுக் கூடமாக எழும்பியது. 1830-ல் சீனர்களின் நிதியுதவியுடன் தரமான மரங்கள், கிரானைட் கற்களுடன் கைதேர்ந்த வல்லுநர்களும் சீனாவிலிருந்தே வரவழைக்கப்பட்டனர். விளைவாக உருவானது தெற்குச் சீனப் பாரம்பரியக் கட்டிடக் கலையை உலகுக்கு காட்டும் விதமாக அமைந்த அழகுக் கோவில்.

புதன், 21 டிசம்பர், 2011

மூக்கும் முழியுமா.. கிளிகள் இத்தனை விதமா..?- ஜூராங் பறவைப் பூங்கா - சிங்கப்பூர் (பாகம் 7)

# 1. ரோசாப்பூக் கழுத்துக்காரி / Galah


Galah என ஆஸ்திரேலியாவிலும், Rose-breasted cockatoo-ஆகப் பிற பிரதேசங்களிலும் அறியப்படுகிற இவை எல்லா காக்கட்டூ கிளிகளையும் போலப் பல்லாண்டு வாழக் கூடிய ஆரோக்கியமான பறவைகள். நன்கு பராமரிக்கப்பட்டால் 50 வயது வரை வாழுமாம்.


Blue-and-yellow Macaw (Ara ararauna):

# 2. மூக்கும் முழியுமாய்..
Blue-and-Gold Macaw என்றும் அதன் தங்க வண்ணம் கொண்டு அழைக்கப்படுபவை. இதன் அலகு நல்ல கருப்பு நிறத்தில் ‘நறுக் முறுக்’ என கொட்டைகளைக் கடித்துச் சாப்பிடும் பலம் பொருந்தியவை. கருப்பு வரிகள் ஓடும் வெள்ளை முகம் ‘காச் மூச்’ எனக் கத்துகையில் சிலநேரம் பிங்க் ஆகி விடுவதுண்டாம்.

# 3. அன்பிற்கும் உண்டோ..
நீல உடல், வால்; ஆழ்நீலத் தாடை, தகதகக்கும் தங்க அடிப்பாகம், பச்சை நெற்றியென இதன் கவர்ச்சியான தோற்றத்தால் வளர்க்க ஆசைப்படுபவர் அதிகம். ஆனால் கிட்டத்தட்ட 3 அடி உயரமும் அதற்கேற்றபடி சுமார் 4 கிலோ எடையுமாய் வளர்ந்து நிற்குமாகையால் பெரிய கூண்டில் வைத்து பராமரிப்பது சிரமம் என ஒதுங்குபவரும் உண்டாம். 15 மீட்டர் அதாவது 50 அடி அகலத்துக்குக் குறைவான கூண்டில் இவற்றை வளர்க்கக் கூடாதென சட்டமே போடுகிறது World Parrot Trust. இந்தப் பூங்காவில் இடப் பிரச்சனையின்றி சுதந்திரமாகக் காட்டிலிருப்பது போலக் கொஞ்சிக் குலாவி வாழ்கின்றன.


திங்கள், 19 டிசம்பர், 2011

‘சதுரங்கம்’, ‘ஒருவேளை உணவு’ - 2010_ன் சிறந்த பனிரெண்டு சிறுகதைகளில்.. - ஒரு பகிர்வு (கீற்றினில்..)


சில கதைகளை எழுத்தாளருக்காகவே வாசிப்போம். சிலசமயம் எழுதியவர் யார் என்று கவனிக்காமலே வாசிக்கத் துவங்குவோம். பாதி வாசிக்கையிலேயே நடையாலோ கருத்தாலோ ஈர்க்கப்பட்டு அவசரமாய் பக்கத்தைத் திருப்பி யார் எழுதியது எனப் பார்ப்போம். அப்படியான அனுபவமே முதன்முறை ஆனந்த் ராகவ் அவர்களின் எழுத்தை வாசித்தபோது எனக்குக் கிட்டியது. கதையின் பெயர் நினைவில் இல்லை. பலமாதங்கள் முன்னர் வடக்குவாசலில் வெளியானது. புதியதாக வாங்கிய காரை ஓட்டிச் செல்லும் ஒருவனது மனநிலையைப் பற்றியதானது. பிறகு விகடனில் அவர் கதைகள் வெளியானபோது எழுதியவரின் பெயருக்காகவே முதலில் வாசித்தேன். வாசகர்களைக் கதைக்குள் இழுக்கும் நடைக்குச் சொந்தக்காரர். சென்ற வருட சிறந்த பனிரெண்டு கதைகளில் ஆகச்சிறந்ததாக இவரது கதை தேர்வாகியிருப்பதோடு இரண்டு கதைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சிறப்பையும் பெறுகிறார். அக்கதைகள் குறித்த பகிர்வுக்கு முன் இத்தொகுப்பைக் குறித்துச் சிலவரிகள்.

1970-லிருந்து கடந்த 41 வருடங்களாக இலக்கிய சிந்தனை வானதிபதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டு வருவதே இந்தப் பனிரெண்டு சிறந்த சிறுகதைகள் தொகுப்பு. பிரதி மாதம் கடைசி சனிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி மண்டபத்தில் இலக்கிய சிந்தனை அமைப்பின் கூட்டம் தவறாமல் நடைபெற்று வருகிறது. கூடுகிற வாசகர்களில் ஒருவர் கடந்த மாதத்தில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். ஆண்டு இறுதியில் புத்தகமாக 12 கதைகளையும் தொகுக்கும் முன், அதிலிருந்து ஒன்றைச் சிறந்ததாக தேர்ந்தெடுத்து அறிவிப்பதுடன், அனைத்துக் கதைகளுக்கும் மதிப்புரையும் வழங்கும் பணி ஒரு தேர்ந்த எழுத்தாளாருக்கோ அல்லது தீவிர இலக்கியத் திறானாய்வாளருக்கோ வழங்கப்படுகிறது. இந்த விவரங்களைத் தொகுப்பின் பதிப்புரை மற்றும் மதிப்புரையிலிருந்தே அறிய முடிந்தது. இம்மாதம் இப்பணியைச் சிறப்புற ஆற்றியிருப்பவர் மு. இராமநாதன் அவர்கள்.

சதுரங்கம் (ஆனந்த் ராகவ்), ‘அமுதசுரபி’ வெளியீடு: தாய்லாந்தின் எல்லையை எதிர்கொண்டபடி இருக்கும் மயாவடி எனும் பர்மிய நாட்டு எல்லையோர ராணுவ அவுட் போஸ்டில் முவங்தான், மின்டோன் ஆகிய இரண்டு முரட்டு அதிகாரிகளுக்கிடையேயான சதுரங்க ஆட்டம். எப்போதாவது அகப்படும் கேரன் படை கொரில்லாக்களுடன் சுபிட்சமில்லாத தம் நாட்டை விட்டுத் தாய்லாந்துக்குப் பிழைப்புத் தேடி தப்பியோடும் பர்மியரையும் சிறைப்படுத்துகிற இவர்கள், கைதிகளை எப்படி வெறித்தனமாகக் கொடுமை செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகச் சதுரங்க விளையாட்டைப் பயன்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சதுரங்கத்தை இதுகாலமும் புத்திசாலித்தனம், சாதுர்யம் நிறைந்த ஒரு விளையாட்டாகப் பார்த்தும் போற்றியும் வந்த நம்மில் பலரும் இக்கதையை வாசித்த பின்னர் நிச்சயமாய் அதைவேறு பரிமாணத்தில் பார்க்கத் தொடங்குவோம். உலகின் அத்தனை குற்றங்களுக்கும் பின்னான காய்நகர்த்தல்கள் எத்தனை கொடூரமானவை என்பது புரியவரும்.

முன்னே பின்னே பக்கவாட்டில் என்று குதித்து போர்களத்தின் வீச்சை நாலு எட்டில் எட்டி விடும் அந்தக் காயின் ஓட்டத்தைக் கண்டுபிடித்தவன் நிச்சயம் குதிரை சவாரியின் அற்புத அனுபவத்தை உணர்ந்த ஒரு புத்திஜீவி. குதிரை ஓட்டியபடியே ஓடும் மனிதர்களை துரத்திச் சுட்டுக்கொல்லும் முவங்தானுக்குப் பிடித்தமான வசீகரமான விளையாட்டைச் சதுரங்கக் குதிரையைக் கண்டுபிடித்தவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஆண்டாண்டு காலமாகத் தொடரும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தையும் போராட்டங்களைப் பற்றியதான அலட்சியம் மிகுந்த அவர்தம் எண்ணங்களையும் காட்டுகிறார்: “ராணுவத்திடம் பிடிபடும் சாத்தியக்கூறை மீறி எல்லை தாண்டுபவர்களின் எண்ணிக்கை குறையாமல் தொடர்வதும், உயிரைப் பயணம் வைத்து விடுதலை தேடும் வேட்கையும், முவங்தானால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. நாற்பத்தி எட்டு வருட ராணுவ ஆட்சியின் குரூரமான அடக்கு முறைக்கு அடிபணிந்த, நசுக்கப்பட்ட சமூகம் அவனை அவ்வளவாக எதிர்த்ததில்லை. எப்போதாவது எழும் போராட்டக் குரல்களும் ஊர்வலங்களும், ஆர்ப்பரிப்பும், வெடிக்கும் துப்பாக்கிகளில் சிதறிப்போய் தெருவெங்கும் ரத்தம் சிந்திவிட்டு சொற்ப நாட்களுக்குள் அடங்கிப் போய்விடும்.”

சதுரங்கப் பலகையை உற்று நோக்கியபடி மேலும் தொடர்கிறார்: “ ஒரு ராணுவ வீரனாய் அவன் அந்நிய நாட்டு எதிரிகளை விட சொந்த நாட்டின் ஜனங்களைக் கொன்றது அதிகம். அதுவேறு வகையான சதுரங்க ஆட்டம். ஆயுத பலம் பொருந்திய ராணுவத்தினருக்கும், நிராயுதமாணிகளான ஜனநாயகம் விரும்பும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் நிரந்தர சதுரங்க ஆட்டம். எதிரணியின் தலைமையைச் சிறையிலடைத்து அவர்கள் ஆதரவாளர்களை நகரக் கூட அனுமதிக்காத அடக்குமுறை ஆட்டம்.

ஆட்டத்தில் தோல்வியடையும் அதிகாரி ஆத்திரத்தில் சதுரங்கப் பலகையிருந்த மேஜையையே தூக்கியெறிகிறான். வென்றவனின் ஆர்ப்பரிப்பும் கொக்கரிப்பும் உச்சக்கட்டப் போர் கொடூரத்தை நோக்கி நகர்வதாகக் கதை முடிகிறது.

நம்பிக்கையூட்டும் படியாக இக்கதையின் முடிவு அமையாததற்கு பதில் சொல்லும் விதமாக மு. இராமநாதன் அவ்ர்கள் தன் மதிப்புரையில் எடுத்தாண்டிருக்கும் பி.ஏ. கிருஷ்ணனின் வரிகள் மறுக்க முடியாத உண்மையாக, “தருமம் வெல்வதும், சூது தோற்பதும் மனிதனின் நிறைவேறாத ஆசைகளில் முக்கியமானது... ஆனால் வெட்ட வெட்ட வளரும் தலைகள் சூதினுடையது.. தருமம் வெல்ல இன்னும் பலநாட்கள் ஆகும் என்பது பற்றி ஒரு நல்ல சிறுகதை கோடி காட்டிவிடும்”!

ஒருவேளை உணவு (பாவண்ணன்), ‘வடக்குவாசல்’ வெளியீடு: பெருநகரங்களில் ‘ஹெளஸ் கீப்பிங்’ எனும் சொல்லோடு வேலைக்கு எடுக்கப்படும் அடித்தட்டு பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்: “ஒப்பந்தக் காரர்களிடம் எப்போதும் இரண்டு தூண்டில்கள் உண்டு. கிராமத்தில் வாழ வழியில்லாமல் நகரை நோக்கி வருகிற, உடலுழைப்பாளர்களை நோக்கி ஒரு தூண்டில் எப்போதும் நீண்டிருக்கும். வசதியில்லாத காரணத்தால் நகரத்திலேயே பள்ளியிறுதிப் படிப்போடு கல்வியை முடித்துவிட்டு எதிர்காலம் குறித்த அச்சத்தோடு உலவிக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஈர்க்கும் வகையில் மற்றொரு தூண்டில் நீண்டிருக்கும்.

கதைசொல்லி பேருந்து நிறுத்தத்தில் தான் சந்திக்க நேரும் சாவித்திரி எனும் பெண்மணி, ஜி எம் குவார்டர்ஸில் வேலை செய்வதை அறிய வருகிறார். நாளடைவில் அவள் நட்புடன் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளின் மூலமாக ஒருவேளை உணவுக்காக இவர்கள் எப்படி சுயமரியாதை மறந்து வாழ வேண்டிய சூழலில் என்பதையும் பணம் என்கிற ஒரேயொரு விஷயத்தில் மேம்பட்டு விட்டதால் மனிதர் மனிதரை எப்படியெல்லாம் கீழ்தரமாக நடத்தவும் பேசவும் துணிகிறார்கள் என்பதையும் சொல்வதாகக் கதை அமைந்துள்ளது. சாவித்திரி சொல்லுகிறாள்: “ஒருவேளை சோத்துக்கூட வழியில்லன்னுதான இந்த வேலைக்கு வந்தம். மானம் ரோசம்லாம் பாத்தா எங்க போயி நிக்கறதுன்னு பல்ல கடிச்சினு போயிடுவேன்.

சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தாண்டி, இன்னும் பல தேவைகளையும் தீர்த்து வைக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உரையாடலில் உணவைப் பற்றிய பேச்சே இடம் பெறுவதில்லை. வீடு, வாசல், வாகனம், சொத்து எனப் பல திசைகளில் உணவைத் தாண்டிய தேவைகளை நோக்கி விரிந்து போகிறது. சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளவே முடியாதபடி பற்றாக்குறையாக இருக்கிறது. அவர்கள் மன ஆழத்தில் உள்ளூர உணவைப் பற்றிய அச்சம் எப்போதும் நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தபடியே இருக்கிறது.” விவரிக்கும் கதை சொல்லிக்கு மேல்வர்க்கம் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பார்த்து ஏற்படுகிற நடுக்கம் நமக்கும் பரவுகிறது.

வூடு (பாரதி தம்பி) ‘ஆனந்த விகடன்’ வெளியீடு: மனிதனுக்குப் பிறப்பு என்பது ஒரே விதமாகதான் நடக்கிறது. வறுமை என்பது தொப்புள் கொடியோடு சேர்ந்தா வருகிறது? அப்படித்தான் என்றால் எங்கோ பிழை இருக்கிறது.

பரந்த இவ்வானின் கீழ் தம் வீடென சொல்லிக்கொள்ள ஓரங்குல இடமும் அற்று வீதியோரத்தில் வாழ்க்கை நடத்தும் குடும்பம் ஒன்று. அதன் தலைவன் திறக்கப்படாத கட்டணக் கழிப்பறையில் தன் குடும்பத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு குடியேற்றுகிறான். அங்கேயே பால் காய்ச்சுகிறார்கள். வீட்டின் தனிமையை, தமது என்பதன் உரிமையை ரசித்து ருசிக்கிற குடும்பம் மீண்டும் வீதிக்கே வருவதே கதை. சிறுவன் ஜஸ்டிஸை முன் வைத்துக் கதை நகர்கிறது.

குறையொன்றுமில்லை (ஜோதிநகர் சிவாஜி கிருஷ்ணா) , கல்கி வெளியீடு: எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாது அரசு புறக்கணிக்கும் கிராமங்களில் நூறுசதவிகிதம் வாக்குப் பதிவாவதும் அவர்களை மதிக்க அரசு தவறுவதும் இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. அப்படியான ஒரு மலைக் கிராமத்துக்கு தேர்தல் சமயத்தில் வந்து சேரும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு எந்த வசதிக் குறைவும் வராது பார்த்துக் கொள்கின்றனர் அப்பாவி மக்கள். அந்தத் தேர்தலில் ஒரேயொரு வாக்கு மட்டும் குறைந்து போனதின் காரணம் கலங்க வைப்பதாக.

நான்கு கதைகளைப் பற்றி மட்டும் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். இவற்றுடன் ஆனந்த் ராகவ் எழுதிய ‘தரை தொடும் விமானங்கள்’ உட்பட செ. செண்பக கண்ணு, மாதங்கி, ஜெய் விஜய், சீதா ரவி, பாமதி மைந்தன், இராம. முத்து கணேசன், மலர் மன்னன் ஆகியோர் எழுதியதுமாக, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒன்றெனும் கணக்கில் பனிரெண்டு கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. பனிரெண்டு எழுத்தாளர்களுக்கும், கதைகளை வெளியிட்டப் பத்திரிகைகளுக்கும் வாழ்த்துகள். இலக்கிய சிந்தனை அமைப்பின் சேவைக்கும் வானதிப் பதிப்பகத்துக்கும் பாராட்டுக்கள். இந்த வருடம், 2011-ன் சிறந்த கதைகளின் தொகுப்புக்காகக் காத்திருப்போம்.
***

சதுரங்கம் - இலக்கியச் சிந்தனை 2010ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்


விலை ரூ:60. பக்கங்கள்: 154.

வெளியீடு: வானதி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடம்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006].
***

17 டிசம்பர் 2011, கீற்று இணைய இதழில், நன்றி கீற்று!

சனி, 10 டிசம்பர், 2011

சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து..

# 1

நேற்று மாலை கார்த்திகை நிறைநிலா. இன்று மாலையிலோ கிரகணப் பிறைநிலா. ஆறு மணி பதினான்கு நிமிடத்தில் ஆரம்பித்து, மெல்ல மெல்லக் கீழிருந்து மேலாக இடமிருந்து வலமாகத் தேய்ந்து எட்டு மணி இரண்டு நிமிடத்தில் முழுமையாக மறைந்து மறுபடியும் கீழிருந்து மேலாகவே வலமிருந்து இடமாக வளர்ந்த இச்சந்திரக் கிரகணமே இதுகாலமும் வந்தவற்றில் நீண்ட ஒன்றாகுமாம் அடுத்து 2018-ல் வரவிருக்கும் கிரகணம் வரை.

# 2 ஃப்ளிக்கர் தளத்தில் நேற்றுப் பதிந்த கார்த்திகை முழுநிலவு


இன்று:

# 3 கண் முன்னே தேயும் அற்புதம்

முன் நேரத்தில் தேயும் நிலவை யூரோப், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய நாடுகள் பார்க்க முடிந்திருக்காதாம் சந்திரன் உதிக்கும் நேரம் வந்திருக்காததால். இந்தியாவின் எல்லாப் பாகங்களிலிருந்தும் நன்கு பார்க்கமுடியுமென்று சொல்லப்பட்டாலும் மேகங்கள் மனது வைக்காவிட்டால் முடியாதே:)! ஆம், எட்டாவது தளத்துக் குளிரில், மூடிய வானைக் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்த என் மேல் இரக்கம் கொண்டு மேகங்கள் போனால் போகுதென அவ்வப்போது கொஞ்சமே கொஞ்சம் நகர்ந்து நிலவைக் காண்பித்துக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன.

# 4 முகில்களின் கருணையில்..
இதற்கடுத்து பதிவின் முதல் படத்தையும் முடித்து 15 நிமிடங்களாகியும் அடர்த்தியாக நிலவை மூடிக் கொண்டு ‘அவ்வளவுதான்’கட்டு மூட்டையை’ எனச் சொல்லி விட்டது மேகக்கூட்டம்:(! இதனால் வளரும் நிலவைப் படிப்படியாக பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

மறுபடி முழு நிலவாகும் நேரத்துக்குச் சிலமணித்துளிகள் முன்னே சரியாக மேலே சென்ற போது...

# 5

# 6





# 7
              பூமியின் நிழல் விட்டு விலக மீண்டும் வட்ட நிலாவாக..
இப்படியொரு அதி பிரகாசமான நிலவைக் கண்டதேயில்லை என சொல்லும்படியாக இருந்தது கிரகணம் முடிந்த உடன் ஒளிர்ந்த நிலவு:


அதுவரை சுற்றிச் சுற்றி வந்த மேகக் கூட்டம் இந்தப் பிரகாசத்தின் அருகில் நிற்க முடியாமலோ என்னவோ ஒருவித அதிர்ச்சி கலந்த வேகத்துடன் விலக ஆரம்பித்தன. அப்போது அவை வானில் வரிசை கட்டி நகன்ற கோணத்தைக் காணக் கண்கோடி வேண்டும். 18-55mm லென்ஸை உடன் எடுத்துச் சென்றிராததால் படமாக்க இயலவில்லை.

நேர்த்தியான படங்கள் என சொல்ல மாட்டேன். அப்பெச்சர் மோடிலிருந்து இப்போது மேனுவல் மோடிலுமாக முயன்ற பரிசோதனை முயற்சிகளில் சிலபடங்கள் திருப்திகரமாக இல்லைதான். இருந்தாலும் ஒரு அற்புத நிகழ்வைப் படமாக்கிய திருப்தி. சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வருகிற இப்பொழுதில், [தலைப்புக்கான பதில்:)] பூமியின் நிழலால் நிலவு இப்படித் தேய்ந்து மறைந்து மீண்டும் முழுமையாகத் தெரிகிற சந்திர கிரகணத்தை மீண்டும் காண நாம் 27/28 ஜூலை 2018 வரைக் காத்திருக்க வேண்டுமாம்.
***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON
2. சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..

புதன், 7 டிசம்பர், 2011

ஆப்ரிக்கக் காடும் அழகுப் பறவைகளும் - ஜுராங் பூங்கா - சிங்கப்பூர் (பாகம்-6)

பீடு நடை போடும் மயில், சிறகைச் சிலிர்க்கும் வான்கோழி, வீட்டுக்கு வரும் பக்பக் புறாக்கள் கீச்கீச் மைனாக்கள் எனப் பறவைகளைப் படம் எடுப்பதென்றால் படுகுஷியாகி விடும் என்னை, 20 ஹெக்டேர் பரப்பளவிலிருக்கும் பறவைப்பூங்காவில் கொண்டு விட்டால் என்னாகும்:)? விடைதான் இப்பதிவும், வரவிருக்கும் அடுத்த பாகமும்!!

# 1.மயில் போல... புறா ஒண்ணு...

[Victoria Crowned Pigeon]

சிங்கப்பூரின் ஜூராங் பறவைகள் பூங்கா 380 வகைகளில் 5000 பறவைகளைப் பராமரிக்கிறது என்றால் ஆச்சரியமாய் இருக்கிறதில்லையா? அதுவும் இயற்கையான சூழலிலேயே என்பதுதான் விசேஷம். ஏவியரி எனப்படும் உயர்ந்த மரங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டக் கூண்டுகளில் பறவைகள் வெளியேறியும் விடாமல் அதே நேரம் சுதந்திரமாக இயற்கையின் மழை வெயில் இடி மின்னல் எல்லாவற்றையும் அனுபவித்தபடி வாழுகின்றன.

பூங்காவின் எந்தெந்த இடத்தில் என்னென்ன வகைப் பறவைகள் உள்ளன என்பதற்கான தெளிவான வரைபடம் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் தந்து விடுகிறார்கள்.

# 2. பறவைகள் பலவிதம்


உள்ளே நுழைந்ததும் வரவேற்றது பேரட் பேரடைஸ். காக்கட்டூ, மக்கா, ஸ்கார்லெட், சன் பாரகீட், எலக்டஸ், ஜுவினைல் கிளிகளின் சத்தம் இடத்தையே ரம்மியமாக்கியது. வந்து கவனிக்கிறோமெனக் கையசைத்து விட்டு பனோரெயிலில் ஏறினோம்.

# 3. கிளிகள் கையில் கிளிகள்


மூன்று ஸ்டேஷன்களில் நிறுத்தம் கொண்ட இந்த பனோ ரயில் தொடர்ந்து சுற்றியபடி இருக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி [நடக்க முடிகிற அளவு:)]அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பறவைகளை ரசித்து விட்டு ரயில் அடுத்த ரவுண்ட் வரும் போது ஏறிக் கொள்ளலாம்.

திங்கள், 5 டிசம்பர், 2011

அழகன் - நவீன விருட்சத்தில்..



அந்தக் கனவில்
அவன் அழகாகத் தெரிந்தான்
கழுத்து நிறையப் பதக்கங்களுடன்
வெற்றிகளைக் குவித்திருந்தான்

ஒரு கனவில்
அவனை இந்திரன் சந்திரன் என்றனர்
மெத்தப் படித்த மேதாவி என்றனர்
அவன் முகத்தின் பொலிவு கண்டு
அவன் கண்களே கூசின

தனி விமானத்தில் உலகம் சுற்றிய
நீண்ட கனவொன்றில்
அவன் கம்பீரம் கூடியிருந்தது

தன் இருபத்தெட்டு மாடிவீட்டின்
மேல்தளத்துத் தோட்டத்தில்
காலைத் தேநீர் பருகிய கனவில்
மேகங்கள்
முற்றுகையிட்டுக் கொண்டாடின
அவன் அந்தஸ்தை

கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே
புலர்ந்தன தினம் பொழுதுகள்

இப்போதெல்லாம்
அவற்றுக்காகவே
சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான்

நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
திரை தந்தப் போதையில்
பகல் கனவும் பழக்கமாயிற்று

பலிக்குமெனச் சொல்லப்பட்ட
பகல் கனவுகளில்
மறந்தும் ஒருதுளி வியர்வை
வெளியேறிடாமல்
மேனி மினுமினுப்பைப்
பாதுகாத்துக் கொண்டான்

நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற
அறைநிலைக்கண்ணாடி
தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ள இயலா
சகிப்புடன்
காட்டிக் கொண்டிருந்தது
விழிசெருக வாய் திறந்து
கனவில் கிடந்தவனை

அவலட்சணத்தின்
மொத்த இலக்கணமாக.
***

14 நவம்பர் 2011 நவீன விருட்சம் இதழில்
.., நன்றி நவீன விருட்சம்.

வியாழன், 1 டிசம்பர், 2011

உன்னைப் போல் ஒருவன் - PiT - டிசம்பர் 2011 போட்டி

இரட்டை. ஆனால் ஒரே மாதிரியான இரண்டு.

ட்வின்ஸ். ஆமாம், ஒன்றைப் போல ஒன்று.

புரிந்திருக்குமே இப்போது தலைப்பு? ‘உன்னைப் போல் ஒருவன்’:)!

மூன்று வருடங்கள் முன்னர் ‘ஜோடி’ என ஒரு தலைப்பு தரப்பட்டது ஒரு சிலரின் நினைவுக்கு வரலாம். இரண்டு வேறு வேறு விஷயங்கள் ஜோடி போட்டு ஜாலியாகக் கை கோர்த்துக் கொள்ளலாம். இந்தத் தலைப்புக்கு அது கூடாது. அச்சிலே வார்த்த மாதிரி இல்லையானாலும் ‘அட ஆமா அவனைப் போலவே இவன்’ என சொல்லும்படியாக இருக்க வேண்டும்.

படத்தில் இரட்டையரே பிரதானமாகத் தெரிய வேண்டும்.

ஃபோட்டோஷாப் மிரரிங் உதவியோடு சப்ஜெக்ட் டபுளேக்ட் (டபுள் ரோல்) செய்யாமல் இயல்பான இரட்டையராக இருக்க வேண்டியதும் அவசியம்.

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

# 1) “நான் அவனில்லை”


# 2) 24 + 24 கேரட்


# 3) பூக்குட்டிகள்


# 4) பல்லவ ராஜாவின் பரிவார யானைகள்


# 5) “ஆறு வித்தியாசமா.. சான்ஸே இல்லை..”


# 6) கல் இருக்கு, ஆள் இல்லை..


# 7) ஒரு கொடியில்..


# 8) ஒன்றைப் போல் ஒன்று


# 9)‘என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...?’


# 10) யாரைப் போல யாரு?


இத்துடன் கீழ்வரும் ஜீவ்ஸ், கருவாயன், சர்வேசன் ஆகியோரது அழகான படங்களையும் மாதிரிக்கு முன்வைத்து, நடுவராக PiT தளத்தில் வெளியிட்ட அறிவிப்புப் பதிவையே இங்கும் பகிர்ந்துள்ளேன்:

கோதாவில் குதிக்கப் போகும் இரட்டையரை இங்கே வரவேற்கக் காத்திருக்கிறது PiT.

படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி 15 டிசம்பர் 2011.


29 நவம்பர் 2011 ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்திருந்த தங்க மீன்களை தன் Explore பக்கத்தில் ஃப்ளிக்கர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருந்ததை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி:
*****

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin