வெள்ளி, 27 ஜூலை, 2012

குங்குமம் தோழியில் எனது பேட்டி: ‘ஆர்வமும் தேடலும் அழகான படம் தரும்’

இன்று வெளியாகியுள்ள ஆகஸ்ட் 2012 இதழின்
நடுப்பக்கத்தில்.., ‘கலை’ பிரிவில்..

நன்றி குங்குமம் தோழி!
***






எனது படங்களை ரசித்து உற்சாகம் அளித்து வரும் Flickr, FB, பதிவுலக நண்பர்களுக்கும், ஆர்வத்துக்கு அடித்தளமாக அமைந்த PiT மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி:)!
***


தினகரன் இணையதளத்திலும், நாளிதழிலும்..

தமிழ்முரசில்..

நன்றி தோழி:)!

புதன், 25 ஜூலை, 2012

தூறல்: 6 - வேலை தேடும் பெங்களூர் சீனியர் சிட்டிசன்ஸ்

ஓய்வு காலத்தில் எது மகிழ்ச்சி?

பாமரர் படித்தவர் பாகுபாடின்றி முதுமையில் உழைக்க வேண்டிய கட்டாயம் பெருகி விட்டது தேசத்தில். பெங்களூரில் அறுபது வயதைக் கடந்தவர்களுக்காகவே நடைபெற்ற வேலைவாய்ப்புச் சந்தையில் 800 பெரியவர்கள் கலந்து கொள்ள நிர்வாகம், மேற்பார்வை, தொழில் நுட்பம், மக்கள் தொடர்பு, கற்பித்தல், கணக்கியல், காப்பீடு, சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் 300 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது சென்ற வாரம். எழுத்தாளர்கள்,புகைப்படக்காரர்கள் போன்றோருக்கும் வாய்ப்புகளை விரித்துக் காத்திருந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் எதிரே பார்க்கவில்லை இந்த தமது முயற்சிக்கு இப்படியொரு வரவேற்பு கிட்டுமென.
ஓய்வு காலத்தில் எது மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவர் மனநிலை பொறுத்து மாறுபடுகிறது. சிலருக்கு வயதொத்தவருடன் அரட்டை, நடை, வாசிப்பு, தொலைக்காட்சி என ஏதேனும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதில்; சிலருக்கு வீட்டு நிர்வாகத்தில் உதவியாக இருப்பதில்; சிலருக்கு பேரன் பேத்திகளோடு விளையாடிக் கதை சொல்லி நேரம் செலவழிப்பதில். சிலருக்கோ உடலும் மனதும் தெம்பாக இருக்கும்வரை உலகுக்குத் தம் அனுபவ அறிவு பயன்பட வேண்டுமென்கிற விருப்பம் தீராததாக இருக்கிறது. அதை செயல்படுத்தவும் முடிந்தவிட்டால் தம்மை விட அதிர்ஷ்சாலிகள் எவருமில்லை எனும் உற்சாகத்துடன் மனதளவில் இளைஞராகியும் விடுகின்றனர்.

84வது வயதில் தனது நேரத்தை எப்படி உபயோகமுள்ளதாகச் செலவழிக்க முடியுமென அறியவே அங்கு வந்ததாகப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஒரு பெரியவர், ஜம் எனப் புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்திருந்தார். ஒரு காலத்தில் ஓவியராக பெங்களூர் ஐந்து நட்சத்திர விடுதிகளில் பல கண்காட்சிகள் நடத்திய 68 வயது பெண்மணி, தன் கற்பனாசக்திக்கு ஏற்ற வகையில் எந்த வேலையானாலும் சரி, தனது வாழ்வாதாரத்துக்கு அது மிக அத்தியாவசியமெனத் தெரிவித்திருந்தார். மற்ற பலரோ வீட்டுக்குத் தெரியாமல் வந்திருந்திருந்ததால் தங்கள் பெயரைக் கூட வெளிப்படுத்த விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார்கள்.

“ஒரு வேலைக்கு இளைஞரா, முதியவரா யாரை வைப்பீர்கள் என்றால் பின்னவரையே சொல்வோம். ஏனெனில் பொறுப்புணர்வும் அனுபவமும் நிறைந்த அவர்களுக்கு பயிற்சியே தேவையில்லை” என்கிறார் முதியோருக்கான மருத்துவ சேவையை நல்கும் ஒரு நிறுவனத் தலைவர். அன்று பத்து முதியவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது இவரது நிறுவனம். ”இந்தியாவின் 87% முதியோருக்கு பென்ஷன் இல்லை. கூடுகிற வயதோடு அதிகரிக்கிற மருத்து செலவுகள் இவர்களை அச்சுறுத்துகின்றன. நிரந்தர வருவாய் இருந்தால் தேவலாமென எண்ணுகிறார்கள். மனரீதியான தெம்புக்கும் இந்த வேலை அவர்களுக்கு உதவுகின்றது” எனத் தெரிவித்திருக்கிறார்.

எப்படி நியாயப்படுத்தப்பட்டாலும் நிர்ப்பந்தங்களினால் வேலை தேடி வந்தோர் நிலை வலி தருகிறது.


பெற்றோருக்கு இணையான இடம்

நன்னெறிப்படுத்துகிறோம் என்ற பெயரில் மாணவரின் தன்னம்பிக்கையை சிதைத்து, தன்மானத்தை அவமதித்து பிஞ்சு மனங்களிலே மாறாத வடுக்களை ஏற்படுத்தும் அநியாயங்கள் பரவலாகத் தொடருகிறது. சிறுநீர் பருக நிர்ப்பந்தித்தது, கேசங்களை வெட்டியது என சமீபத்திலும் பல சம்பவங்கள். இருவருடங்களுக்கு முன் நான் எழுதிய பொட்டலம் சிறுகதை நினைவுக்கு வந்து போகிறது. தண்டனைகள் தீவிரமாகப் போவதில்லை. வெறும் சஸ்பென்ஷன்களால் இக்கொடுமைகள் நிற்கப் போவதுமில்லை. கண்டிப்பு அவசியமென்றாலும் கனிவையும் அடிப்படை நேயத்தையும் மறப்பது செய்யும் பணிக்கே களங்கம். தெய்வத்துக்கும் உயரிய ஸ்தானத்தில், பெற்றோருக்கு இணையான இடத்தில் தாம் இருப்பதை இத்தகு ஆசிரியர்கள் உணர்வார்களா? தங்கள் மன அழுத்தங்களுக்கு வடிகாலாக மாணவரை இம்சிப்பதை நிறுத்துவார்களா?


‘கேட்பினும் பெரிது கேள்’







க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு கவிதைகளுக்கென்றே வெளிவருகிற இருமாத சிற்றிதழ் “புன்னகை”, கேட்பினும் பெரிது கேள்!

இதன் 60வது சிறப்பிதழில் இடம் பெற்ற 60 கவிஞர்களின் கவிதைகளில் ஒன்றான எனது கவிதை “ஆயிரமாயிரம் கேள்விகள்” இங்கே. சமீபத்தில்தான் இதழுக்கு சந்தாதாரர் ஆனேன். பலரது சிறந்த கவிதைகள், விமர்சனங்களோடு குறிப்பிட்ட கவிஞரின் சிறப்பிதழாகவும் மலர்ந்து அவர்களைக் கெளரவித்து வருகிறது புன்னகை. இதழ்-70-ல் கவிஞர் கதிர்பாரதி கெளரவிக்கப்பட்டிருக்கிறார். புத்தகம் கிடைத்ததும் அடுத்த தூறலில் பகிருகிறேன்.

மார்ச்-ஏப்ரல் 2012 கவிதை இதழ் 68-ல்.. தோழன் அன்பாதவனின் ‘கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்களை’ முன்னிறுத்தி... லதா ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதை வாசிப்பில் கிடைப்பதென்ன?” விமர்சனக் கட்டுரையிலிருந்து:

எந்த வகையான கவிதை சமூகத்திற்குத் தேவை என்ற கேள்வியோடு கூட, கவிதை என்ற இலக்கிய வகைமையே சமூகத்திற்குத் தேவைதானா என்ற கேள்வியும் காலங்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டிற்குமே அடிப்படை ஒருவகையில், மனித மனங்களை உணர்வுகளை, ரசனைகளை, விருப்பங்களை, அடையாளமழித்து அடிமைப்படுத்தும் மனப்போக்குதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

24 மணிநேரமும் மனிதனை முட்டாளாக்குவதே குறியாய், அபத்த நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேவைதானா என கேள்வி எழுதுவதில்லை. ஆனால் கவிதை தேவைதானா என்ற கேள்வி மட்டும் வெகு சுலபமாக தொடர்ந்த ரீதியில் கேட்கப்பட்டு வருகிறது. (அரசு நூலகத்துறை தற்காலத்தைய தமிழ் கவிதைத் தொகுப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வதேயில்லையென்று கேள்வி). கவிதை எழுதுவதில், கவிதை வாசிப்பதில் என்ன கிடைக்கிறது என்பது போன்ற ஆழமான சுற்றாய்வுகளோ, கலந்துரையாடல்களோ மேற்கொள்ளப்பட வழிவகுப்படாமலேயே இந்த கேள்வி வலம்வந்து கொண்டேயிருக்கிறது..

**

மே-ஜூன் 2012 கவிதை இதழ் 69-ல்.. நான் இரசித்த கவிதைகளுள் ஒன்று:

ஆளில்லாத வீடு

ஆளில்லாத வீட்டுக்கு
தேடி வந்தது
இம்சையாயிருக்கிறது

உதாசீனமாய் பார்க்கிறது
அக்கம்பக்க
மின்விளக்குத் தூண்கள்

உறுத்தும்
சந்தேகப் பார்வையில்
உள்ளங்கால் முதல் தலைவரை
வாசற்கதவுகள் ஆராய்கின்றன

எதையும் விழுங்கி
ஜீரணிக்கும்
இருளும்
குற்றமாய்ப் பார்த்து உறுமியது

காற்றின் கிச்சு கிச்சு மூட்டலில்
ஜன்னல்,மரம்
இன்னும் எவைஎவையோ
நெளிந்து குலுங்கினாலும்
எனக்குள் நடுக்கமெடுக்கிறது

அவமானத்தைக் கூட
சகித்து ஆற்றிக் கொள்ளலாம்
எதிர்கொள்ள முடியவில்லை
இந்த வெறுமையை.

- வசந்த தீபன்
**

புன்னகை இருமாத இதழின் ஆண்டுச் சந்தா ரூ 75.

அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை
68 பொள்ளாச்சி சாலை,
ஆனை மலை- 642 104.

மின்னஞ்சல்: punnagaikavi@gmail.com


நட்பின் அன்பு

பதிவுலகம் வந்த முதலிரண்டு வருடங்களில் வாரம் ஒரேயொரு பதிவென்றிருந்து, மூன்றாமாண்டு வாரம் இரண்டாக முன்னேறி, எந்தத் திட்டமிடலும் இன்றி முடிகிற போது பதிவு என முடிவெடுத்த நடப்பு வருடத்தில் சராசரியாக வாரம் மூன்றெனப் பதிந்து கொண்டிருப்பது எனக்கு சற்று ஆச்சரியமே. ஏனெனில் முத்துச்சரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த காலத்தில் முடியாத ஒன்று, இன்று Flickr, PiT, அதீதம் ஆகிய தளங்களிலும் இயங்கியபடியே செய்ய இயலுகிறதென்றால் அதற்கான பலம் எங்கிருந்து வருகிறது? உங்களிடமிருந்தே..
நன்றி கவிநயா!

விருதோடு கவிநயா அளித்த ஊக்கம் இங்கே. அன்பினால் சற்று அதிகப்படியாகி விட்ட பாராட்டு என்றாலும், அவர் சொல்லியிருப்பதை யோசித்துப் பார்த்தால் ‘கவிதை, கட்டுரை, சிறுகதை’ இந்த மூன்றில் மட்டுமே இணையத்தில் இயங்க ஆரம்பித்த என்னை இன்று ஒளிப்படம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, இணைய இதழ் மற்றும் PiT பொறுப்பு எனப் பல பிரிவுகளுக்கு இட்டுச் சென்றது நல்ல நட்புகள் தந்து வருகிற ஊக்கமே.
ஒற்றை இலக்கத்தில் வந்து நிற்கிற தமிழ்மணம் ட்ராஃபிக் ரேங்க் முன்னோ பின்னோ போகலாம். இங்கே பதிகிற வேகம், எண்ணிக்கை குறையலாம். ஆனால் ஏதோ ஒரு தளத்தில் இணையத்தில் இயங்கிக் கொண்டுதான் இருப்பேன், நட்புகளிடமிருந்து பெறும் பெரும் பலத்தில்:)!


அதீதம் ஃபோட்டோ கார்னர்:

தளிர் நடை - மெர்வின் ஆன்டோ
கண்ணான பூமகன் - நித்தி ஆனந்த்
உள்ளம் கொள்ளை போகுதே - சத்தியா
அன்பின் ரேகைகள் - எழில் இராமலிங்கம்

படத்துளி:

அன்பின் நிழல்..
அடர்த்தியானது!
***

புதன், 18 ஜூலை, 2012

ஏக்கம் - ஹிட்டோமரோ ஜப்பானியக் கவிதை - அதீதத்தில்..


உயிரோடு அவள் இருந்த பொழுது
கைகோர்த்து வெளியில் செல்வோம்.
வீட்டின் முன் உயர்ந்து வளர்ந்திருந்த
கரையோர மரங்களைப் பார்த்து நிற்போம்.
அவற்றின் கிளைகள்
பின்னிப் பிணைந்திருக்கும்.
அவற்றின் உச்சிகள்
இளவேனிற்கால இலைகளால் அடர்ந்திருக்கும்
எங்கள் அன்பைப் போல.

அன்பும் நம்பிக்கையும் மட்டுமே
போதுமானதாக இருக்கவில்லை
வாழ்க்கைச் சக்கரத்தைப்
பின்னோக்கிச் செலுத்த.
பாலைவனத்துக் கானல் நீராய்
மங்கி மறைந்து போனாள்.
ஒரு காலைப் பொழுதில்
ஒரு பறவையைப் போலப் பறந்து போனாள்
மரணத்தின் பிடிகளுக்குள்.

அவள் நினைவாக விட்டுச் சென்ற குழந்தை
அவளைக் கேட்டு அழும் வேளையில்
என்னால் முடிந்ததெல்லாம்
அவனைத் தூக்கத் தெரியாமல் தூக்கி
அணைக்கத் தெரியாமல் அணைப்பது மட்டுமே.
அவனுக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை.

எங்கள் அறையில் எங்கள் தலையணைகள்
அருகருகே கிடக்கின்றன எங்களைப் போல.
அமர்ந்திருக்கிறேன் அவற்றருகே
நாட்கணக்காக இருளை வளரவிட்டபடி
இரவு முழுவதும் விழித்தபடி
பொழுது புலரும்வரை பெருமூச்செறிந்தபடி.
எத்தனை வருந்தினாலும்
மீண்டும் அவளைப் பார்க்க முடியாது.

எல்லோரும் சொல்கிறார்கள் அவளது ஆன்மா
பருந்தின் இறக்கைகளைப் பற்றியபடி
இந்த மலையைச் சுற்றிக் கொண்டிருக்குமென.
சிரமத்துடன் பாறைமுனைகளைப் பற்றி
மலையுச்சியை அடைய முனைகிறேன்.
காற்றின் அசைவில் கூட
உணரமுடியாது அவளை என்பதை
நன்கு தெரிந்தே செய்கிறேன்.

என்னுடைய இந்த அன்பு, என்னுடைய இந்த ஏக்கம்
எந்த மாற்றங்களையும் கொண்டுவரப் போவதில்லை.
***

மூலம் : HITOMARO (8th century)
ஆங்கில மொழியாக்கம்: Kenneth Rexroth
[One hundred poems from the Japanese ]

16 ஜூலை அதீதம் இதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.

திங்கள், 16 ஜூலை, 2012

திறக்கிற மறுகதவு


அலாதி மகிழ்ச்சி..


1. குழப்பமான கேள்விகளுக்கு எளிமையான பதில்களை வைத்திருக்கிறது, பலநேரங்களில் வாழ்க்கை.

2. தடைகள் தற்காலிகமானவை. நிரந்தரமாக்குவது நாமே.

3. மூடிய கதவையே ஏக்கத்துடன் பார்த்து நின்றிருந்தால் திறக்கிற மறுகதவு கண்களுக்குத் தென்படாமலே போகும்.

4. 'உன்னால் முடியாது' என சொல்லப்பட்டதை, செய்து காட்டுகையில் கிடைக்கிற மகிழ்ச்சி அலாதியானது.

5. எங்கே நிற்கிறோம் என்பதை விட எதை நோக்கி நகருகிறோம் என்பது முக்கியமானது.

6. செய்யும் பிழையால் தள்ளிப் போகலாம் வெற்றி. செய்த பிழையையே திரும்பச் செய்வதால் தட்டிப் போகக் கூடாது.

7. நம்மிடமிருந்து பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிராமல் நமக்கு என்ன தேவை என்பதிலும் அக்கறை காட்டுவோம்.

8. நசநசக்கும் சிறு மழையோடு வானவில். நகரும் வாழ்வில் சிறுசிறு வலிகளோடு பெருமகிழ்ச்சி.

9. சில பிரச்சனைகளுக்கு தீர்வை விடத் தேவையாய் இருப்பது, கடந்து வெளிவரும் முதிர்ச்சி.

10. சுயத்தின் வீம்புக்கும் அனுபவத்தின் எச்சரிக்கைக்கும் நடுவே தத்தளிக்கிறது இயலாமையுடன் வாழ்வின் சமரசங்கள்.

***

(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)




தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..
வாழ்க்கை என்பது எதிரொலி

அறிவின் கருவி
உறுதி ஊற்றெடுக்கும் காலம்


செவ்வாய், 10 ஜூலை, 2012

இரவோடு இரவாக.. பெங்களூரு கோரமங்களாவில்..

#1 ரவோடு இரவாக இருக்கிற மரங்களை வெட்டிச் சாய்க்கிற பெங்களூரு மாநகராட்சி, வேரற்ற மரத்தை அழகுச் சிலையாக வேறோர் இடத்தில் எழுப்ப வெட்கப்படவில்லை. சின்னஞ்சிறுவர்களின் கைச்சங்கிலி வளையத்துக்குள் சிறைப்பட்டு ”மரங்களைக் காக்க வேண்டும்” எனச் சேதி சொல்லி நிற்கும் காட்சியைப் பார்த்து சிரிக்கவா அழவா? முடிவு செய்யும் முன் எம்.ரிஷான் ஷெரிஃபின் இந்த வரிகளுடனான அருமையான கட்டுரையை வாசியுங்கள்:

இனி வரும் நாட்களில் வனங்களின் படங்களைக் கொண்டே காடென்பது யாதென, வரும் சந்ததியினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது. விடுமுறை நாட்களில் ஏதேதோ விளையாட்டு உலகங்களுக்கு நம் குழந்தைகளை அழைத்து செல்லும் நாம் காடுகளுக்கும் அழைத்துச் சென்று காடென்பதைக் காட்டி வருவோம்.
-எம். ரிஷான் ஷெரீப்

#2 வனத்தில் மிதக்கும் விருட்சங்களின் பாடல்கள்வடக்கு வாசல் தளத்தில் வாசிக்க:
http://vadakkuvaasal.com/component/content/article/550.html


#3 ஜூன் இதழ்இக்கட்டுரைக்காக எனது கீழ்வரும் இரண்டு படங்களை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கும் வடக்குவாசலுக்கு நன்றி!

#4 அடர்ந்த வனம்



#5 பரந்த மரம்



ஆரம்பித்த கதைக்கு வருகிறேன்.

பாரதி சிமெண்டின் விளம்பரத்துக்குக் கைகோர்த்து முக்கிய சந்திப்புகளில் சிங்கம், புலி என விதம் விதமான சிலைகளை எழுப்பி வருகிறது பெங்களூரு மாநகராட்சி ‘காசுக்கு காசும் ஆச்சு, நகரை அழகு படுத்துனாப்லயும் ஆச்சு’ என. அப்படியாகப் பேலஸ் க்ரவுண்ட் அருகிலிருக்கும் மெஹ்க்ரி சர்க்கிள் சந்திப்பில் திடுமென ஒரு நாள் தோன்றிய சிலைகள் இவை:

#6 “வெட்ட விட மாட்டோம்.. நட்டு வைத்தும் வளர்ப்போம்..”
[படம் ஒன்றும் இதுவும் விரையும் வாகனத்தினுள் இருந்து எடுத்தவை]

நல்ல கருத்தை வலியுறுத்துகிறதுதான். ஆனால், இந்த இடத்திலிருந்து சில பர்லாங்கு தூரத்தில், சென்ற வருடம் மாதக் கணக்கில் மரங்களைக் காக்கக் கோரி பெரியவர்களோடு பள்ளிச் சிறுவர்களும் களமிறங்கிப் போராடியபோது அதற்கு மதிப்புக் கொடுக்காத மாநகராட்சி அதே காட்சியை சிலையாக எழுப்பினால் சலிப்போடு சிரிப்பும் எழுகிறது.

விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றது இழந்ததும்.. , ஜனவரி 2012 வடக்குவாசல் இதழில் வெளியான என் கட்டுரையிலிருந்து:

மல்லேஷ்வரம் சாங்கிடேங்க் முனையில் அமைந்த கோட்டையின் மேல் குதிரை மேல் வீற்றிருக்கும் வீரசிவாஜி சிலை நேர்கொண்டு பார்க்கும் சாலை ‘சாங்கி ரோட்'.
#7 அகன்ற இச்சாலையின் இருபுறமும் அடர்ந்துயர்ந்த அழகு மரங்கள் வரிசைகட்டி நிற்பது பார்ப்பவர் மனதை அள்ளும். மெட்ரோவுக்காக இவற்றை வெட்டிச்சாய்க்க ஒன்றரை வருடம் முன் அரசு முடிவெடுத்த போது பதைப்புடன் வீதிக்குப் போராட வந்த பொதுமக்களில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களும் அடக்கம். ஞாயிறு காலைகளில் அந்தப் பக்கம் சென்றால் ‘மரங்களைக் காப்போம்’, ‘இயற்கையைப் போற்றுவோம்’ போன்ற வாசகங்களைத் தம் கைப்பட எழுதிப் பிடித்தபடிப் பள்ளிச் சிறுவர்கள் சிவாஜி சிலைமுன் நிற்பதைக் காண முடிந்தது மாதக்கணக்கில். பலனாக நீதிமன்றம் விதித்த தடை உத்திரவு அரசு கொடுத்த அழுத்தத்தில் திரும்பப் பெறப்பட்டு விட்டது நவம்பரில். டிசம்பரில் கோடாரியின் முதல் வெட்டுக்குப் பலியான மரத்தின் கீழ் மெட்ரோவுக்கான பூஜை போடப்பட்டபோது மனம் வெதும்பி எவரும் அப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. விரல் விட்டு எண்ணுமளவில் ஏழெட்டு பேர்களே நின்றிருந்ததைப் பத்திரிகையில் படமெடுத்துப் போட்டிருந்தார்கள்.”

பார்த்தது மாநகராட்சி. ‘முன்னறிவிப்பு செய்து விட்டு கோடாரியை இறக்கினால்தானே போராட்டம் எதிர்ப்பு எல்லாம்? இரவோடு இரவாகப் போட்டுத் தள்ளிவிடலாம் இனி’ என்று முடிவெடுத்து விட்டது போலும்.

25 மே 2012, அதிகாலை அதிர்ச்சிகரமாக விடிந்தது கோரமங்களா பகுதி மக்களுக்கு. முக்கிய சந்திப்பில் முறையே நான்கு கிமீ நீளங்களில் நான்கு பைபாஸ் கட்டுவதற்காக செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை முன்னிருக்கும் சாலையின் 46 மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்து விட்டது மாநகராட்சி. இந்தத் திட்டம் குறித்த பேச்சு எழுந்ததுமே பகுதி மக்கள் எதிர்ப்பைப் பல்வேறு அமைப்புகள் மூலமாகப் பதிவு செய்ததோடு வழக்கு தொடர்ந்து ஸ்டே ஆர்டர் வழங்கச் செய்திருந்தார்கள். 29 மே, வழக்கு விசாரணைக்கு வர இருக்கையில், முதலமைச்சரிடம் கொடுத்த மனுவும் பரிசீலிக்கப்பட்டு உரிய பதிலளிக்குமாறு உத்திரவாகியிருந்த வேளையில் இப்படியொரு வேலையை செய்து விட்டிருந்தது மாநகராட்சி.

500-க்கும் அதிகமான பேர் ஊர்வலமாகச் சென்றும், வீழ்ந்து கிடந்த மரங்களை அள்ளிச் செல்ல விடாமல் அவற்றின் மீது ஏறி அமர்ந்தும் தங்கள் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் மக்கள் அரசுக்குத் உணர்த்தியதன் பலன் உயர்நீதி மன்றத் தீர்ப்பில் எதிரொலித்தது.

ரூ.129 கோடி மக்கள் வரிப்பணத்தை குறிப்பிட்ட காண்ட்ராக்டர்களுக்கு வாரிவழங்குவதே திட்டத்தின் அஸ்திவாரம் எனும் குற்றச்சாட்டுக்கும், இந்த பைபாஸ் வரவால் பெரிய நன்மை விளையப் போவதில்லை எனும் வாதத்திற்கும் வலு சேர்ப்பவையாக இருந்தன அப்பாதைகளில் பொதுப்போக்குவரத்து தடையாவது, பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்படுவது, பாதசாரிகள் சாலையைக் கடக்க இயலாது போவது போன்றன.

‘பைபாஸ் அமைக்க 188 மரங்கள் பலிகொடுக்கப்பட வேண்டியிருந்ததில் 88 மரங்களை பிடுங்கி எறிய தங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று மாநகராட்சி நீட்டிய காகிதங்களைப் புறந்தள்ளிய உயர்நீதிமன்றம், ‘வெட்டிய மரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஈடாகப் பத்து மரக்கன்றுகளை வைப்போம்’ எனும் உறுதிமொழியையும் ஏற்கவில்லை. எந்த விதத்திலும் அது சாய்க்கிற விருட்சத்துக்கு ஈடாகாது எனச் சொன்னதோடு, சரியான சிந்தனையோடு செயல்படவில்லை என்றும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து விட்டதாகவும் நீதிமன்றம் அரசு அதிகாரிகளைக் கண்டித்திருக்கிறது தனது அறிக்கையில்.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டிருப்பது தற்காலிகமாக ஆறுதலைத் தந்தாலும் மல்லேஸ்வரம் போராட்டம் முடிந்த விதத்தை நினைத்து ஒரு அச்சம் எழாமல் இல்லை.

செய்திகளாக ஒவ்வொன்றையும் நாம் கடந்து நாம் போய்க் கொண்டே இருக்கிறோம். மேகங்களும் நமட்டுப் புன்னகையுடன் நகர்ந்து போய்க் கொண்டேயிருக்கின்றன:

#8 மேகம் கொட்டட்டும்அக்னி நட்சத்திரம் முடிகிற சமயம், மே மூன்றாம் வாரத்திலிருந்தே அடைமழையால் நனைய ஆரம்பித்து விடுகிற பெங்களூர் சில வருடங்களாகவே ஆகாயம் பார்த்துக் காத்தே கிடக்கிறது. இந்த வருடம் ஜூலை பிறந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அவ்வப்போது சின்னத் தூறல், அபூர்வமாய் அரைமணி, போனால் போகிறதென எப்போதாவது ஒருமணி ஊற்றிவிட்டு ஓடி விடுகின்றன மேகங்கள். மக்களின் இந்த விழிப்புணர்வு இனியேனும் இருக்கிற மரங்களைக் காக்கட்டும். மின்னல் வெட்டி மேகங்கள் கொட்டட்டும்.


5 ஜூன், சுற்றுப்புற சூழல்தினத்தையொட்டி ஃப்ளிக்கரில் நான் பதிந்த படம்:

நினைவில் கொள்வோம்!
***


இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக அதீதம் ஃபோட்டோகார்னருக்கு நான் தேர்வு செய்த படங்கள்:
பசுமை காப்போம் - ஜேம்ஸ் வஸந்த்
நீர் சேமிப்போம் - ஆன்டன் க்ருஸ்
வாழ விடுவோம் (1) - குரு
வாழ விடுவோம் (2) - குரு
***

ஞாயிறு, 8 ஜூலை, 2012

அக்காவின் ரீங்காரமும் அண்ணாவின் பாடலும்

ஞாயிறு வணக்கம். வாங்க, அக்காவின் ரீங்காரத்தைக் கேட்டு விட்டு அண்ணாவின் பாடலுக்குப் போகலாம்:)!

#1 ரீங்காரப் புறா / Cooing Pigeon
இளங்காலையில்
ஸ்ருதி பிசகாமல்
’பக்கூம் பக்கூம்’ என
முணுமுணுக்கையில்..


#2 சிறகு உலர்ந்தும் சின்னப்புறா / Puffy Pigeon
மழை ஓய்ந்த மாலைப் பொழுதில்..


#3 “காக்கை அண்ணாவே நீங்க
அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க..”
என் பாட்டைக் கேட்டுத் தன் பாட்டை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்த போது எடுத்த படம்:)!


#4 ‘சாதாரணமாய் காணக் கிடைத்தாலும் நான் அசாதாரணமானவனில்லையா....?’

நிச்சயமா!

இவரு ஒரு ஒப்பற்றத் துப்பரவுத் தொளிலாளி. சுற்றுப்புறச் சூழல் சேவகர்.


#5 “என்னைப் புகழ்ந்து பாராட்டிப் படம் பிடிச்சுப் போட்டதுக்கு தேங்ஸ்மா”

***

பறவை பார்ப்போம் (4)

தொடர்புடைய சில முந்தைய பதிவுகள்:

வியாழன், 5 ஜூலை, 2012

எல்லாம் மகள் மயம் - 'கல்கி' ஆர்ட் கேலரியில் ஓவியர் மாரியப்பன்

‘பெங்களூரு சித்திரச் சந்தை 2012’_ல் ஓவியக் கலைஞர் மாரியப்பன் குறித்துப் பகிர்ந்திருந்தேன். கல்கி ஆர்ட் கேலரிக்காக அவர் அளித்த பேட்டி மேலும் சில ஓவியங்களுடன்:

ஓவியரின் கலைத் திறனை பலரிடம் கொண்டு சேர்த்திருக்கும் கல்கிக்கு நன்றி!

8 ஜூலை 2012

சித்திரச்சந்தை பதிவில் அப்பாத்துரை அவர்கள் ஓவியரின் அலைபேசி எண் கிடைக்குமா எனக் கேட்டிருந்தார். தேவைப்படுகிறவர்களுக்கு பயனாகும் வகையில் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன் அவரது அனுமதியோடு.

மின்னஞ்சல் முகவரி:
"Mariappan V"
mariappanart@gmail.com

தொடர்பு எண்கள்:
09159679904 / 09489819904

ஓவியர் மாரியப்பன் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
***

ஞாயிறு, 1 ஜூலை, 2012

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin