Tuesday, November 22, 2011

நிழல் - இம்மாத வடக்கு வாசலில்..

தலைநகர் தில்லியிலிருந்து வெளிவரும் ‘வடக்கு வாசல்’ இதழை எனக்கு அறிமுகம் செய்தது ‘சிறுமுயற்சி’ கயல்விழி முத்துலெட்சுமி. கடந்த இரண்டு வருடங்களாக வாங்கி வருகிறேன். ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களில் அளிக்கப்படும் கவிதைகளும், இரண்டு சிறப்பான சிறுகதைகளும், ஆசிரியர் எழுதும் ‘சனிமூலை’ பக்கமும் (சமீபத்தில் தொகுப்பாக வெளிவந்துள்ளது) பேசப்படுவன ஆகும். அட்டைப்படத் தேர்வுடன், இதழின் படைப்புகளுக்கான படங்களும் (குறிப்பாகச் ‘சந்தனார்’ சந்திரமோகனின் ஓவியங்கள்) ரசிக்கும்படியாக இருக்கும். இம்மாத அட்டைப்பட ஓவியமும் அவருடையதே.

கல்வித் துறை மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து சி.டி.சனத் குமார் அவர்கள் எழுதிவரும் தொடர் பெற்றோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்றாகும். இதுவரை வெளியான இவரது கட்டுரைகளின் தொகுப்பும் “விருட்சங்கள் விதைகளாகும்” என சிந்திக்க வைக்கும் வித்தியாசமான தலைப்புடன் வெளியாகியுள்ளது. வடக்குவாசல் பதிப்பக வெளியீடுகள் குறித்த விவரங்கள் இங்கே.

சந்தா விவரம் இங்கே. எந்தச் சிற்றதழாயினும் தொடரும் எண்ணமிருக்கும் பட்சத்தில், ஆசிரியர் நினைவுறுத்தக் காத்திராமல் சந்தாவைச் சரியான மாதத்தில் புதுப்பிப்பது நம் கடமையும், ஆசிரியர்களின் இலக்கியசேவைக்கான மரியாதையும் என்பதை நினைவில் கொள்வோம்.

நவம்பர் 2011, வடக்கு வாசல் இதழில் வெளியாகி இருக்கும் எனது கவிதை நிழல்:

நிழல்


கண்ணுக்குப் புலப்படாத சக்தியின்
கனத்த நிழல் நிலத்தில்.

விண்ணெங்கும் பார்வையால் துழாவியும்
நிஜம் அகப்படாமலே.

எட்டிவிடும் தூரத்தில் இருந்தாலும்
நிஜமற்றதன் பிம்பமென்ற
அலட்சியத்திலும்
மூலம் தெரியாத குழப்பத்திலும்
இளைப்பாற விருப்பமின்றி
ஒதுங்கியோ தாண்டியோ
சென்றிட எத்தனிக்கையில்
மெல்ல நகரத் தொடங்குகிறது நிழல்.

ஆச்சரியமாகத் தொடர்கிறான்
அவ்வப்போது
மிதக்கிறதா ஏதேனும் மேலே என
மீண்டும் ஆகாயம் துழாவி..

கவனத்தில் பதியவில்லை
வழியெங்கும் அந்நிழலில்
யார்யாரோ ஏறுவதும்
நன்றியோடு இறங்குவதும்.

விரும்பி வந்து செல்பவருக்காக
நீண்டு விரிந்தும் அகன்று படர்ந்தும்
நிழலின் பயணம்.

ஆழ்கடல் சிப்பியாக
அதன் குளுமைக்குள்
ஒளிந்திருந்த பதிலை
நனைந்து கைப்பற்றாமல்
சந்தேகமாகத் தேடித் தேடி..

விடை கிடைக்காத சலிப்பில்
வெறுத்து நின்றவனைச் சூழ்கிறது
எங்கிருந்தோ புறப்பட்டு வந்த
அனல் புயல்.

விலகிச் சென்று கொண்டிருந்தது
கண் முன்னே
வேகவேகமாக நிழல்.
***

படம்: இணையத்திலிருந்து...

நன்றி வடக்கு வாசல்!

***

41 comments:

kothai said...

பிரியாத தன்மைக்கு நிழல் துணை போவதுண்டு..ஆனால் அதன் ஆழத்தை இக்கவிதை காணவைத்துவிட்டது.

வேலன். said...

தமிழ்மணம் நட்சத்திர விருதுக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
வாழக் வளமுடன்
வேலன்.

கோமதி அரசு said...

விரும்பி வந்து செல்பவருக்காக
நீண்டு விரிந்தும் அகன்று படர்ந்தும்
நிழலின் பயணம்.//


நிழலின் பயணம் அருமை.

வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

தமிழ் உதயம் said...

நிழல் பற்றி கவிதை சொன்னது நிஜம்.

மோகன் குமார் said...

தங்கள் கவிதையோடு புத்தகம் குறித்தும் சந்தா குறித்தும் சொன்னதில் தான் ராம லட்சுமி நிற்கிறார் !

கணேஷ் said...

வடக்கு வாசல் சில இதழ்களை நானும் வாசித்ததுண்டு. இனி தொடர்ந்து படிக்கிறேன். உங்கள் கவிதை மனதில் நின்றது. அருமை...

ஓசூர் ராஜன் said...

நிழலால் கவிதை, நெஞ்சில் நிலைக்கும் கவிதை! தமிழ் மனம் விருதுக்கு வாழ்த்துக்கள்!

Shakthiprabha said...

கவிதை ரொம்ப ஆழம், நுணுக்கம் அழகு....ரொம்ப ரொம்ப ரசித்தேன்.
வாழ்த்துக்கள் !

சசிகுமார் said...

பதிவு நன்றாக இருந்தது அக்கா..

Lakshmi said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

நம்பிக்கைபாண்டியன் said...

கவனத்தில் பதியவில்லை
வழியெங்கும் அந்நிழலில்
யார்யாரோ ஏறுவதும்
நன்றியோடு இறங்குவதும்.

இந்த வரிகள் சிறப்பு, கவிதை நன்றாக இருக்கிறது!

ஸ்ரீராம். said...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, தேவையற்ற சந்தேகங்களால், வரும் வாய்ப்பையும் இழக்கிறோம் என்று சொல்கிறதோ கவிதை? வடக்கு வாசலில் கவிதை வெளி வந்ததற்கு வாழ்த்துகள். உங்கள் படைப்புகள் வெளிவராத இடங்கள் குறைவுதான் போல!.

தக்குடு said...

தமிழ்மண ஸ்டாருக்கும் வடக்கு வாசல் இதழில் கவிதை வெளிவந்தமைக்கும் ராமலெக்ஷ்மி அக்காவுக்கு வாழ்த்துக்கள்!

avainaayagan said...

"....தேடித் தேடி..
விடை கிடைக்காத சலிப்பில்
வெறுத்து நின்றவனைச் சூழ்கிறது
எங்கிருந்தோ புறப்பட்டு வந்த
அனல் புயல்.
விலகிச் சென்று கொண்டிருந்தது
கண் முன்னே
வேகவேகமாக நிழல"
எதையும் நாம் தேவையென உணரும் போது அது நம்மை விட்டு விலகுவது தானே நிஜம்.
அழகான வரிகளில் சொல்லி இருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

நிழலின் அருமை தெரிவதற்குள்,
வெயிலால் தாக்கப் படுகிறான்.

மனம் அகன்றால் நலம் உண்டு என்று நிழல் நகர்ந்துவிட்டது.
எனக்குப் புரிந்தது இவ்வளாவுதான் ராமலக்ஷ்மி.மீண்டும் வாழ்த்துகள்.வடக்குவாசல் பத்திரிகை சென்னையில் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்லக் கவிதை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கவிதை ராமலக்‌ஷ்மி ..

ஹேமா said...

என் கற்பனைக்கு முகிலின் நிழலாகவும் தெரிகிறது கவிதை !

இனியன் said...

ஏற்கனவே ஜொலிக்கின்ற நட்சத்திரம் நீங்கள்..தமிழ்மண நட்சத்திர ஜொலிப்பும் சேர்ந்து பிரகாசிக்கட்டும்..வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

kothai said...

//பிரியாத தன்மைக்கு நிழல் துணை போவதுண்டு..ஆனால் அதன் ஆழத்தை இக்கவிதை காணவைத்துவிட்டது.//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

வேலன். said...

//தமிழ்மணம் நட்சத்திர விருதுக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
வாழக் வளமுடன்//

சென்றவார நட்சத்திரமாகிய தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி. நன்றி வேலன்.

ராமலக்ஷ்மி said...

கோமதி அரசு said...
//நிழலின் பயணம் அருமை.

வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

நன்றி கோமதிம்மா.

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//நிழல் பற்றி கவிதை சொன்னது நிஜம்.//

நன்றி ரமேஷ்.

ராமலக்ஷ்மி said...

மோகன் குமார் said...

//தங்கள் கவிதையோடு புத்தகம் குறித்தும் சந்தா குறித்தும் சொன்னதில் தான் ராம லட்சுமி நிற்கிறார் !//

நன்றி மோகன் குமார்:)! நல்ல புத்தகங்கள் பலரையும் சென்றடைய வேண்டுமென்கிற ஆவலே காரணம்.

ராமலக்ஷ்மி said...

கணேஷ் said...

//வடக்கு வாசல் சில இதழ்களை நானும் வாசித்ததுண்டு. இனி தொடர்ந்து படிக்கிறேன். உங்கள் கவிதை மனதில் நின்றது. அருமை...//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஓசூர் ராஜன் said...

//நிழலால் கவிதை, நெஞ்சில் நிலைக்கும் கவிதை! தமிழ் மனம் விருதுக்கு வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

Shakthiprabha said...

//கவிதை ரொம்ப ஆழம், நுணுக்கம் அழகு....ரொம்ப ரொம்ப ரசித்தேன்.
வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி ஷக்தி.

ராமலக்ஷ்மி said...

சசிகுமார் said...
//பதிவு நன்றாக இருந்தது அக்கா..//

நன்றி சசிகுமார்.

ராமலக்ஷ்மி said...

Lakshmi said...

//கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//

நன்றி லக்ஷ்மிம்மா.

ராமலக்ஷ்மி said...

நம்பிக்கைபாண்டியன் said...

//கவனத்தில் பதியவில்லை
வழியெங்கும் அந்நிழலில்
யார்யாரோ ஏறுவதும்
நன்றியோடு இறங்குவதும்.

இந்த வரிகள் சிறப்பு, கவிதை நன்றாக இருக்கிறது!//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...

//இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, தேவையற்ற சந்தேகங்களால், வரும் வாய்ப்பையும் இழக்கிறோம் என்று சொல்கிறதோ கவிதை?//

மிகச் சரியான புரிதல். நன்றி ஸ்ரீராம்:)!

ராமலக்ஷ்மி said...

தக்குடு said...
//தமிழ்மண ஸ்டாருக்கும் வடக்கு வாசல் இதழில் கவிதை வெளிவந்தமைக்கும் ராமலெக்ஷ்மி அக்காவுக்கு வாழ்த்துக்கள்!//

வருகையில் மகிழ்ச்சி:)! நன்றி தக்குடு!

ராமலக்ஷ்மி said...

avainaayagan said...
//எதையும் நாம் தேவையென உணரும் போது அது நம்மை விட்டு விலகுவது தானே நிஜம்.
அழகான வரிகளில் சொல்லி இருக்கிறீர்கள்.//

நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

ராமலக்ஷ்மி said...

வல்லிசிம்ஹன் said...

//நிழலின் அருமை தெரிவதற்குள், வெயிலால் தாக்கப் படுகிறான். மனம் அகன்றால் நலம் உண்டு என்று நிழல் நகர்ந்துவிட்டது.
எனக்குப் புரிந்தது இவ்வளாவுதான் ராமலக்ஷ்மி.மீண்டும் வாழ்த்துகள்.வடக்குவாசல் பத்திரிகை சென்னையில் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.//

நான் சொல்ல வந்ததும் அதுவே. பொதுவாகச் சிற்றிதழ்கள் பத்திரிகைக் கடைகளில் கிடைப்பதில்லை. குறிப்பிட்டச் சில புத்தகக் கடைகளில் விற்பனைக்கு இருக்கும். சந்தா முறை இரு தரப்பினருக்கும் வசதி. இருப்பினும் சென்னையில் விற்பனைக்குத் தனி இதழாகக் கிடைக்கிறதா என்பதைக் கேட்டறிந்து உறுதி செய்கிறேன். நன்றி வல்லிம்மா.

ராமலக்ஷ்மி said...

குமரி எஸ். நீலகண்டன் said...

//நல்லக் கவிதை...//

மிக்க நன்றி நீலகண்டன்.

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//நல்ல கவிதை ராமலக்‌ஷ்மி ..//

நன்றி முத்துலெட்சுமி.

ராமலக்ஷ்மி said...

ஹேமா said...

//என் கற்பனைக்கு முகிலின் நிழலாகவும் தெரிகிறது கவிதை !//

ஹேமா:)! உபயோகப்படுத்தியிருக்கும் படத்திலுள்ள நிழல் முகிலினுடையதே. கவிதைக்குப் பொருத்தமாகத் தோன்றவே உபயோகித்துக் கொண்டேன்.

ராமலக்ஷ்மி said...

இனியன் said...

//ஏற்கனவே ஜொலிக்கின்ற நட்சத்திரம் நீங்கள்..தமிழ்மண நட்சத்திர ஜொலிப்பும் சேர்ந்து பிரகாசிக்கட்டும்..வாழ்த்துக்கள்...//

நன்றி, முதல் வருகைக்கும்.

ராமலக்ஷ்மி said...

திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வடக்கு வாசல் இதழில் கவிதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

@ வை.கோபாலகிருஷ்ணன்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin