Sunday, November 27, 2011

கற்க-கற்பிக்க-கற்க “தமிழில் புகைப்படக்கலை”

டிஜிட்டல் புரட்சி புகைப்படக்கலையைப் பொறுத்தவரை ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் பிரமாண்டமானது. ரோல் ஃப்லிமை வாங்கி 36 (அதற்கும் முந்தைய காலத்தில் 12) படங்களே எனப் பார்த்து பார்த்து எடுத்து, ஸ்டுடியோவில் “நன்றாக வந்தவை மட்டும்” எனும் குறிப்போடு பிரிண்ட் போடக் கொடுத்து... அந்தக் காலமெல்லாம் போயே போச்சு. ஒரு படம் நல்ல வரணுமா? “தட்டு ராசா தட்டு” எனத் தொடர்ந்து கேமராவை தட்டிக்கிட்டே இருக்கலாம். எந்தக் கட்டுப்பாடுமின்றி செல்லுமிடங்களில் ( நம் கேமராவின் மெமரி கார்ட் கொள்ளளவைப் பொறுத்து) எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். வீட்டில் விசேஷமா, கேமரா மேனை கூப்பிட்டாகும் கட்டாயங்கள் இல்லை. நினைவுகளை சந்தோஷமாகப் பத்திரப்படுத்துகின்றன குடும்பங்கள். படம் பிடிப்பது, பிரதி எடுப்பது இவை தம் வருமானத்துக்கு ஆடம்பரம் என்பது போய் அனைத்து தரப்பினருக்கும் எட்டும் கனியாகியிருப்பது டிஜிட்டலின் இன்னொரு சிறப்பு. எளிய முறையில் கையாள வசதியாக பாயின்ட் அண்ட் ஷூட் கேமராக்கள். அதுவுமின்றி பத்திரிகை, மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, விளம்பரம், விஞ்ஞானம் முதல் விண்வெளி வரை இக்கலை இல்லாத துறைகளே இல்லை எனலாம். பதிவர்களைப் பொறுத்த வரையில் செல்லும் நிகழ்வுகளைப் படங்களுடன் பகிரவேண்டிய அவசியமும் ஆவலும் இருக்கிறது.

ஆனால் எடுக்கிற படங்களைச் சிறப்பாக எடுக்கிறோமா? என்ன தவறுகள் செய்கிறோம்? ஒரு கேமராவில் தரப்பட்டிருக்கும் பலவிதமான வசதிகளை முழுமையாகப் பயன்படுத்துகிறோமா? அவரவரின் தேவைகள் என்ன? அதற்கு என்ன வகையான கேமரா சிறந்தது? இன்னும் நம் திறனை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்? இவற்றை எல்லாம் எளிய தமிழில் புரியும் வகையில் கற்றுத் தரும் திறனில்தான் “தமிழில் புகைப்படக்கலை” Phototography-in-Tamil (சுருக்கமாக PiT) தளம் பிற புகைப்படக்கலை தளங்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. இங்கு படங்களை மேம்படுத்தும் ஃபோட்டோஷாப் நுணுக்கங்களை மட்டும் சொல்லித் தராமல் மேல் சொன்னவற்றையும் விளக்குவதாலேயே 800 பேர்கள் தொடர, ரீடரில் தொடருபவர் 1160-யைத் தாண்டி வளர்ந்தபடி இருக்கிறது. புதுப்பதிவுகள் இல்லாத நாளிலும் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 300 பார்வையாளர்களைப் பெற்றபடி உள்ளது.



இத்தளம் குறித்து பதிவுலகில் அனைவரும் நன்கறிந்திருப்பினும் புதிதாக வருபவரும், ஏன் பதிவராகி ஓரிரு வருடங்கள் கடந்த சிலரும் கூட ‘PiT என்றால் என்ன? ஏதோ மாசாமாசம் அதுக்கு போட்டின்னுல்லாம் பதிவு போடுறீங்களே?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் போன்றவருக்காகவும் சமீபத்தில் இணைந்தவருக்காகவும் இப்பதிவென்று கொள்ளலாம். இதன் ஆரம்பக்கால வரலாறையும் சற்றேத் திரும்பிப் பார்க்கலாம்.

“கற்க-கற்பிக்க-கற்க” (learn-teach-learn) எனும் நோக்கத்துடன் ஆர்வமுள்ள திறமையான நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ஜூன் 2007-ல் ஓசைச் செல்லா மற்றும் ஜீவ்ஸ் ஆகியோர் ஆரம்பித்ததே இத்தளம். பலரும் இணைந்து பணியாற்றிய களத்தில் ஓசைச்செல்லா, CVR, தீபா போன்றோர் பணிச்சுமையால் தொடர்ந்து செயலாற்ற இயலாத நிலையில் விலகிச் சென்று விட்டாலும் ஆரம்பத்திலிருந்து தளத்தைச் சிறப்பாகக் கொண்டு சென்றபடி இருப்பவர்கள் சர்வேசன், கருவாயன், நாதாஸ், ஆனந்த், ஜீவ்ஸ் ஆகியோர். சமீபத்தில் இணைந்தவர்களாக MQN, Anton மற்றும் நான். இக்கலையானது முடிவற்ற கற்றலை உடையது. உறுப்பினர்கள் தாங்கள் தொடர்ந்து பரீட்சிக்கும், கற்றுக் கொள்ளும் விஷயங்களைப் படிப்படியான விளக்கங்களுடன் பகிர்வதே PiT பாடங்களின் சிறப்பு.

பாடப் பகிர்வுகளோடு நின்றிடாமல் தமிழர்களிடையே இக்கலையின் மீதான் ஆர்வம் தொடர்ந்து வளர PiT நடத்தும் மாதாந்திரப் போட்டிகளையும் நடத்தி வருகிறது. பொதுவாக ஒன்றாம் தேதி போட்டி அறிவிப்பு, 20ஆம்தேதி முதல் சுற்று, மற்றும் 25 ஆம் தேதி இறுதிச் சுற்று அறிவிப்புகள் வெளியாகும். படங்களை அனுப்பக் கடைசித் தேதி 15, தவிர்க்க முடியாத காரணங்களால் அறிவிப்புகள் தள்ளிப் போகையில் மட்டும் முடிவுத் தேதி 20 என அறிவிப்பாகும். ஒவ்வொரு மாதத்துக்குமான பொதுவான போட்டி விதிமுறைகள் இங்கே. ஆர்வத்துடன் ஒவ்வொரு மாதமும் 50 முதல் 90 பேர் வரை போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள் . அவரவர் தங்கள் திறமையை நிரூபிக்க, படங்களை மற்றவர் பார்வைக்கு வைக்க உதவும் களமாக மட்டுமின்றி பிறர் படங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் நல்ல வாய்ப்பையும் இப்போட்டிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. போகவும் உலகளாவிய போட்டிகள் பலவற்றைப் பற்றிய அறிவிப்புகளையும் PiT தன் தளத்தில் தமிழ் நண்பர்களுக்கு அறியத் தருகிறது.

இன்னொரு முக்கிய அம்சம், இது ஒரு இலாப நோக்கற்ற தளம். இதன் உறுப்பினர் பலரும் தங்கள் கடும் பணிச்சுமைக்கு மத்தியில் தமிழ் நண்பர்கள் புகைப்பட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திட வேண்டுமென்கிற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே செயலாற்றி வருகிறார்கள். இப்போது இதிலிருக்கும் பாடங்களை வகைப்படுத்தி PDF கோப்புகளாக மாற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் கிடைக்கிற ஓய்வு நேரத்தில் உறுப்பினர் Anton. வாசகர் வசதிக்காக அவற்றைத் தொகுத்து மின்புத்தகமாக வழங்க உள்ளது PiT.

அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமில்லாமல் சிலருக்குத் தொழிலாக, சிலருக்கு மனதுக்குப் பிடித்த பொழுது போக்காக, சிலருக்கு தாம் வாழ்ந்த காலத்தை வருங்கால சமுதாயத்துக்கு ஆவணப்படுத்தும் ஊடகமாக எனப் பலவித பயன்பாடுகளுடன் நிழற்படக் கலை. கற்போம். பகிர்வோம். கற்போம்.
***

16 comments:

மோகன் குமார் said...

PIT பற்றி அவ்வப்போது பதிவுகளில் குறிப்பிடுவீர்கள். இந்த பதிவின் மூலம் விரிவாய் அறிய முடிந்தது. இந்த நற்செயலை தொடரும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்

துரைடேனியல் said...

Pugaippadak kalaikkenru PiT blog iruppathe inruthan kelvipadukiren. Naanum oru kaalathil Nikon SLR Camera vaithirunthen. Ippothu aluvalaga velai nimitham thodarnthu padam edukka mudiya villai. En ponrorukku useful site. Pakirvukku nanri. Tamilmanam Vote 2.

ஸ்ரீராம். said...

மெமரி கார்டின் கொள்ளளவு என்ன பெரிய விஷயம்? 'சட்'டென கணினியில் சேமித்து காலி செய்து கொண்டு மறுபடி தொடரலாம்!

//"எளிய முறையில் கையாள வசதியாக பாயின்ட் அண்ட் சூட் கேமிராக்கள்"//

என்னைப் போன்றவர்களும் (ஃபிலிம் போடாமலேயே) படம் (காட்ட) எடுக்க வசதியாக!

PIT பற்றி நீங்களும் சொல்லி வருகிறீர்கள்.அப்புறம் ஒரு பாராட்டு...இன்றைய தினமணியில் வெளியாகி இருக்கும் 'இன்னொரு வசந்தா' சிறுகதைக்கு எங்கள் பாராட்டும் வாழ்த்துகளும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் உபயோகமான பதிவு, ஆர்வமுள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு.

ரிஷபன் said...

இது ஒரு இலாப நோக்கற்ற தளம். இதன் உறுப்பினர் பலரும் தங்கள் கடும் பணிச்சுமைக்கு மத்தியில் தமிழ் நண்பர்கள் புகைப்பட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திட வேண்டுமென்கிற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே செயலாற்றி வருகிறார்கள். இப்போது இதிலிருக்கும் பாடங்களை வகைப்படுத்தி PDF கோப்புகளாக மாற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் கிடைக்கிற ஓய்வு நேரத்தில் உறுப்பினர் Anton. வாசகர் வசதிக்காக அவற்றைத் தொகுத்து மின்புத்தகமாக வழங்க உள்ளது PiT.

உற்சாகமாய் இருக்கிறது அறிந்து கொள்ள.

asiya omar said...

எனக்கு போட்டோக்களை ரசிக்கப் பிடிக்கும்.பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமில்லாமல் சிலருக்குத் தொழிலாக, சிலருக்கு மனதுக்குப் பிடித்த பொழுது போக்காக, சிலருக்கு தாம் வாழ்ந்த காலத்தை வருங்கால சமுதாயத்துக்கு ஆவணப்படுத்தும் ஊடகமாக எனப் பலவித பயன்பாடுகளுடன் நிழற்படக் கலை. கற்போம். பகிர்வோம். கற்போம்//.

அருமை ராமலக்ஷ்மி.

நல்ல பதிவு, கற்க ஆசைதான்.

ராமலக்ஷ்மி said...

மோகன் குமார் said...
//PIT பற்றி அவ்வப்போது பதிவுகளில் குறிப்பிடுவீர்கள். இந்த பதிவின் மூலம் விரிவாய் அறிய முடிந்தது. இந்த நற்செயலை தொடரும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்//

நன்றி மோகன் குமார்.

ராமலக்ஷ்மி said...

துரைடேனியல் said...
Pugaippadak kalaikkenru PiT blog iruppathe inruthan kelvipadukiren. Naanum oru kaalathil Nikon S//LR Camera vaithirunthen. Ippothu aluvalaga velai nimitham thodarnthu padam edukka mudiya villai. En ponrorukku useful site. Pakirvukku nanri. //

மகிழ்ச்சியும் நன்றியும்.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//மெமரி கார்டின் கொள்ளளவு என்ன பெரிய விஷயம்? 'சட்'டென கணினியில் சேமித்து காலி செய்து கொண்டு மறுபடி தொடரலாம்! //

உண்மைதான்:)! நான் சொல்ல வந்தது கையோடு கணினியின்றி சுற்றும் போது:)! நன்றி ஸ்ரீராம், சிறுகதைக்கான பாராட்டுக்கும்.

ராமலக்ஷ்மி said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
//மிகவும் உபயோகமான பதிவு, ஆர்வமுள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு.//

மிக்க நன்றி vgk sir.

ராமலக்ஷ்மி said...

ரிஷபன் said...
//உற்சாகமாய் இருக்கிறது அறிந்து கொள்ள.//

மிக்க நன்றி ரிஷபன்.

ராமலக்ஷ்மி said...

asiya omar said...
//எனக்கு போட்டோக்களை ரசிக்கப் பிடிக்கும்.பகிர்வுக்கு நன்றி.//

எடுப்பதையும் தொடருங்கள்:)! நன்றி ஆசியா.

ராமலக்ஷ்மி said...

கோமதி அரசு said...
//அருமை ராமலக்ஷ்மி.

நல்ல பதிவு, கற்க ஆசைதான்.//

எளிதில் கற்கலாம். நன்றி கோமதிம்மா.

அமைதிச்சாரல் said...

பிட் பத்தி தெரியாதவங்களும் இனிமே பிட்டடிக்க ஆரம்பிக்கலாம் :-)

ராமலக்ஷ்மி said...

@ அமைதிச்சாரல்,

நன்றி சாந்தி:)!

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin