ஞாயிறு, 27 நவம்பர், 2011

இன்னொரு வசந்தா - (இன்றைய) தினமணி கதிர் சிறுகதை

சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி.

திசைக்கொன்றாகப் பக்கங்கள் பறந்து விழும்படிப் பத்து நாட்களாகச் செய்தித்தாள் விசிறியடிக்கப்பட்டக் கடுப்பில் இருந்தவர்“ஏஜெண்ட் வரலியோ? இந்த மாசத்திலேருந்து பேப்பரு வேண்டாம்னு சொல்லிடு”என்றார் அலைபேசியில் தினம் கூப்பிட்டும் ஏஜண்ட் தன் அழைப்பை எடுக்காத கோபத்தில்.

“ஐயையோ அப்படில்லாம் சொல்லாதீங்க. என்னய வேலய விட்டுத் தூக்கிடுவாரு. நேரத்துக்குப் போடுறனே சார்!”பதட்டமாகக் கூவினான் சிறுவன்.

அதிர்ச்சியாக இருந்தது சபாபதிக்கு. பேப்பர் போடப் பையன்கள் உபயோகிக்கப்படுவது அறிந்ததுதான். அதற்காக இப்படியா? நாலடி எட்டாத உயரம். பனிரெண்டு வயதைத் தாண்டியிருக்க வாய்ப்பே இல்லாத பால் வடியும் முகம்

“அலாரம் வச்சு மூணரைக்கெல்லாம் எந்திச்சுக்கறேன். சரியா நாலு மணிக்கு ஏஜண்ட் வாசலில் சைக்கிள் பெல் அடிச்சுக் கூட்டிட்டுப் போயிடுவார். ஒருநாள் லீவு போட்டதில்லையே? என்ன தப்பு சார் செஞ்சேன்?” கலக்கத்துடன் பையன் கேட்கவும் அதிர்ச்சியின் அளவு எகிறியது.

“ஆமா உன்ன மாதிரிச் சின்னப் பசங்க பேப்பரு போட்டா போலிசுல புடிச்சுடுவாங்க தெரியுமா? படிக்கற வயசுல எதுக்கு இந்த வேல? என்ன கஷ்டம் வீட்டுல? சரி நீ போ. நான் பேசிக்கறேன் ஒன் மொதலாளிகிட்டயே” என்றார் கடுமையாகவே.

“படிப்புச் செலவுக்கு ஆகுமின்னுதான் இந்த வேலயச் செய்றேன் சார். ஒம்பதாவதுல இருக்கேன். ஒழுங்கா ஸ்கூல் போறேன்j எங்க மொதலாளி ரொம்ப ரொம்ப நல்லவரு. அவர எதுவுஞ் சொல்லிடாதீங்க. பரிச்சைக்கு லீவுல்லாம் கொடுக்கேன்னுருக்கார். யூனிஃபார்ம் கூட எடுத்துக் கொடுத்தார்.”

‘சோழியன் குடுமி சும்மவா ஆடும். கையில காசு பொழங்க ஆரம்பிச்சதும் எந்தப் படிப்புக்காக வேலையில சேந்தியோ அதயே தொலச்சுட்டு நிக்கப் போறடா பாவி’ மனதில் ஓடியதைச் சொல்ல முடியாமல் நிற்கையில், “உங்களுக்கு என்ன ஆகணும்னு எங்கிட்டயே சொல்லுங்க. நடுவால மொதலாளி எதுக்கு? இன்னும் அர மணி முன்ன தரணுமா?” குரல் கரகரக்கக் கண்ணீர் விட்டு அழவே ஆரம்பித்து விட்டான்.

தர்ம சங்கடமாய்ப் போயிற்று. இப்போதைக்குச் சமாதானமாகப் பேசி அனுப்பி விட்டால் போதுமென முடிவெடுத்தவராய் “டைமுக்கு வைக்கற சரிப்பா. கதவுக் கம்பியில சொருகி வைக்கணும். தூக்கி எறியப்புடாது. ஆனாலும் நீ புதுசா இருக்கதால பணத்தை அவர்ட்டதான் கொடுப்பேன்னு சொல்லிடு.” என்றார் தீர்மானமாய், சின்ன மீனை அனுப்பிப் பெரிய மீனை பிடித்துத் தாளித்து விடும் எண்ணத்தில்.

“அதான் ரசீது பொஸ்தம் கொண்டாந்திருக்கனே” வாதாடிப் பார்த்தான். ‘இந்த மனுசனிடம் பருப்பு வேகாது’ எனப் புரிந்த கொண்டானோ என்னவோ, சில நொடிகளில் கண்களைத் துடைத்துக் கொண்டு சந்தேகமாகப் பார்த்தபடியே வெளியேறினான்.

“காசைக் கொடுத்து அனுப்பிருக்கலாமே? இப்ப அந்தாளு வந்து தாம்தூம்னு குதிக்கவா? நானே காவேரி வரலியேங்கற டென்ஷன்ல இருக்கேன். இது வேறப் புதுத் தலவலி.” சிடுசிடுத்தாள் சொர்ணம்.

வள் கவலை அவளுக்கு. நேற்று எதிர்பாராத விருந்தினர்கள் இரவு உணவுக்கு வந்து விட, சேர்ந்து போனப் பாத்திரங்கள் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. முன்னெல்லாம் இவரது கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து, பொதுநல விஷயங்களில் இவர் காட்டும் அக்கறையைப் பெருமையாகக் கருதி வந்த சொர்ணம் இப்போது தலைகீழாக மாறி விட்டிருந்தாள்.

வயதின் இயலாமை ஆட்டுவிப்பதைத் தவறாகவும் சொல்ல முடியவில்லை. மூட்டெலும்புத் தேய்மானம். இரத்த அழுத்தம். போதாக்குறைக்கு சர்க்கரை நோயும். சிலவருடம் முன்னர் வரை எந்த வேலைக்கும் ஆள் எதிர்பார்த்து வாழ்ந்தவள் இல்லை. அப்போதெல்லாம் முடிந்த அளவு கூட இவரால் இப்போது உதவ முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக வியாதிகள் ஓய்வு கால போனஸாக வந்து சேர சின்னச் சின்ன வேலைகளையே செய்து கொடுக்க முடிகிறது. அடுத்தவரை அண்டியே வாழ வேண்டிய சூழலில் இருவருமே.

மகனும் மகளும் திருமணமாகி வெளிநாட்டில் இருந்தார்கள். வருந்தி வருந்தி அழைக்கவே செய்தார்கள். ஆறுமாதங்களுக்குத் திட்டமிட்டுச் சென்றால் ’நம்மூரைப் போலாகுமா’ என மூன்றே மாதங்களில் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விடுவதே நடந்தது. நிரந்தரமாய் போய்த் தங்குவது நினைத்தும் பார்க்க முடியாதிருந்தது. வயது காலத்தில் தனியாக வாழுகையில் பிரச்சனைகளை இழுத்துக் கொள்ளக் கூடாதென்பதில் சொர்ணம் தெளிவாக இருந்தாள். இந்த வயதில் தன்னலமே நல்லதென்றாள். போனமாதம் நடந்த சம்பவம் இந்தத் தீர்மானத்தை மேலும் தீவிரமாக்கியிருக்க வேண்டும்.

வீட்டெதிர் விளக்குக் கம்பத்தின் கீழ் மாலையில் கீரைக்கடை பரப்பும் கங்கம்மா, ஒரு நாள் முன்னிரவில் “நாளக்கி பரிச்ச இருக்கு. போகாதம்மா” எனப் பரிதாபமாக மகன் கூவக் கூவ காதில் வாங்காமல் வியாபாரத்துக்கு அவனை நிற்க வைத்து விட்டு சீரியல் பார்க்கச் செல்ல,, மறுநாள் அவளை ஒருபிடி பிடித்து விட்டார் சபாபதி. அவமானம் தாங்காதவளாய் ”எம்புள்ள மேல எனக்கில்லாத அக்கறதான் ஒமக்குப் பொத்துக்கிட்டு வருதோ?” சீறியதோடு அன்றிலிருந்து இவரைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்ளலானாள். சொர்ணத்தையும் தன் கடைப்பக்கம் வரவேண்டாமெனச் சொல்லி விட்டாள். இப்போது மார்க்கெட் வரை போய் கீரைவாங்க வேண்டிவந்தது கூட வருத்தமாய் இல்லை. “தேவையா இது நமக்கு”எனத் தினம் தினம் சொர்ணம் சொல்லிக் காட்டுவதைத்தான் தாங்க முடியவில்லை. இதே சொர்ணம் எப்படியெல்லாம் பக்கபலமாக முரட்டு ஆசாமிகளிடம் கூட மல்லுக்கு நின்றிருக்கிறாள் ஒருகாலத்தில்.

சிலர் அடாவடியாகப் பேசுவார்கள். சில ஏழைப் பெற்றோர் “என்ன சார் செய்வது? படிப்பு ஏறல. எங்களுக்கும் சொல்லித் தரத் தெரியல. அப்படியே விட்டாலும் பசங்க வீணாகிடுவாங்களேன்னு வேலைக்கு விட்டுட்டோம்”எனக் காரணம் சொல்வார்கள். அப்போது ஆயிரங்களைக் கொட்டி ட்யூஷனுக்குப் பிள்ளைகளை அனுப்புகிற சாராருக்கும், ஏழைகளுக்குச் சரியான கல்வி மறுக்கப்படுகிற அவலத்துக்குமான இடைவெளி மனதைப் பிறாண்டும்.

பெரிய அங்காடி முதல் சிறிய கீரைக்கடை வரை குடும்ப வியாபாரத்துக்குக் கல்லாவில் அமர்ந்து உதவும், பழகும் குழந்தைகளைப் பார்க்கிறார்தான். அது படிப்பைப் பாதிக்காமல் நடந்தால் பரவாயில்லை. அதிலும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இந்த பேப்பர் ஏஜண்ட் போல மற்றவர் பிள்ளைகளைத் தம் சுயநலத்துக்குப் பலி கொடுப்பவரை மன்னிக்கவே முடிந்ததில்லை அவரால், தன் பெற்றோர் உட்பட.

த்தாம் வகுப்பில் இவர் நுழைந்த முதல் நாளன்று மாலை. டிரைவர் ஆறுமுகம் தன் தங்கை காமாட்சியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் வீட்டு வேலைக்கென. காமாட்சியின் கணவர் ஒருமாதம் முன்னர் தவறி விட்டதாகவும், பெண்ணின் படிப்புக்காக இங்கே அழைத்து வந்து, தன் பக்கத்து வீட்டிலேயே குடி வைத்திருப்பதாகவும் சொன்னார். காமாட்சியின் பின்னால் நின்றிருந்தது அன்று புது அட்மிஷனாக இவரது வகுப்பிலே சேர்ந்திருந்த வசந்தாதான். முதல் நாளே தன் பேச்சாலும் அறிவாலும் ஆசிரியர்களைக் கவர்ந்து விட்டிருந்தவள். அன்றைக்கு அவர் வீட்டுக்கு வந்தவளே. பிறகு ஒருபோதும் வந்ததில்லை, அம்மா கூப்பிட்டு அனுப்பும் வரை.

ஆனால் ஆறுமுகத்தின் மகன் ரங்கன் அடிக்கடி வருவான். வசந்தா இவர் வகுப்பில் என்றால் ரங்கன் சின்னக்கா வகுப்பில் இருந்தான். ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாத நல்ல கல்வி முறை இருந்தது அந்தக் காலத்தில். இவரை விட இரண்டு வயது பெரியவனாயினும் நெருங்கிய விளையாட்டுத் தோழன். வசந்தாவைத் திட்டிக் கொண்டேயிருப்பான். “இவ நல்லாப் படிக்கறதப் பார்த்து எப்பவும் எனக்கு வீட்டுல திட்டு விழுது. நான் பாஸாகிறது பத்தாதாம். அவளப் போல க்ளாசுல மொதலா வரணுமாம். எங்கழுத்த அறுக்கதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கா” என அங்கலாய்ப்பான். போதாதற்கு அவள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கிக் குவித்தது இன்னும் வெறுப்பை ஏற்றியது.

கோடை விடுமுறைக்கு பெரியக்கா வயிற்றில் மூன்று மாத மசக்கையும் கையில் இரண்டு வயது மகளுமாக வந்திருந்தாள். கூடவே ஆஸ்த்மா தொந்திரவு வேறு. அம்மா சாதுர்யமாகக் கேட்டாள், “ஏன் காமாட்சி. ரங்கன் வர்ற மாதிரி வசந்தாவும் நம்ம வீட்டுக்கு வந்து போய் இருக்கட்டுமே. இப்பப் பெரிய லீவுதான? சின்னவ கூட விளையாடட்டும். குட்டிப்பாப்பாவும் வசந்தாவைப் பாத்தா ஒட்டிக்குவா.”

காமாட்சி தலையைத் தலையை ஆட்டினாலும் அழைத்து வரவில்லை. அப்புறம் அம்மா நேராக விஷயத்துக்கு வந்து விட்டாள். ஒரு வாரத்தில் ஊருக்குக் கிளம்பவிருந்த அக்காவுடன் வசந்தா போய் ஒரு மாதம் உதவியாக இருந்து வரட்டுமென. காமாட்சியால் மறுக்க முடியவில்லை. மறுநாள் வசந்தா குழந்தையோடு பழக வீட்டுக்கு வந்தாள். அம்மா சின்னக்காவின் துணிமணிகளைக் கொடுத்ததோடு புதிதாகவும் ரெண்டு மூணு செட் எடுத்திருந்தாள். கூடவே பளபளவென ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசும் வாங்கிக் கொடுத்தாள்.

“படிக்கிற பொண்ணாச்சே. அதுவும் சின்னப் பொண்ணு” என ஆட்சேபித்த அப்பாவை“நம்ம பொண்ணுங்க இந்த வயசுல வீட்டு வேல செஞ்சதில்லையா? சின்னவ பாப்பாவப் பாத்துக்கறதில்லையா? அது போலதான? ஸ்கூல் திறக்குமுன்னே நானே போய் அழைச்சுட்டு வந்துடறேன்” என்று மடக்கினாள். நாத்தனாருக்குத் திருமணமென அக்கா போயே ஆக வேண்டியிருந்த சூழலில் அப்பாவால் தடுக்க முடியவில்லை.

வசந்தா ரொம்ப சமர்த்தாகப் பாப்பாவைப் கவனித்துக் கொள்வதாகவும் அதைவிட அருமையாகப் பாட்டு, பாடமெல்லாம் சொல்லித் தருவதாகவும் அக்கா எழுதிய கடிதத்தைக் காமாட்சியிடம் காட்டிப் புகழ்ந்தாள் அம்மா. பதினோராம் வகுப்பு ஆரம்பமாக சிலநாட்களே இருக்க வசந்தாவை அழைத்து வர அம்மா எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரித் தெரியாது போக காமாட்சி வாய் விட்டேக் கேட்டு விட்டாள். அந்நேரம் ரங்கன் வசந்தாவிடம் தோற்றுவிடக் கூடாதென முயன்று படித்து பியுசி பாஸ் ஆகியிருந்தான், அம்மா அழகாகக் காய் நகர்த்த வசதியாக.

ங்கனைப் பட்டதாரியாக்கி, வேலை வாங்கித் தந்து, ஐந்து பவுன் நகையோடு வசந்தாவை அவனுக்குக் கட்டி வைப்பதாகவும் அதுவரை வசந்தா அக்காவுடனே இருக்கட்டுமென்றும் அம்மா சொல்ல “அவ அப்பாக்கு அப்படியொரு ஆசம்மா பொண்ணப் பெரிய படிப்பு படிக்க வைக்கணுமின்னு. புண்ணியவான் போய்ச் சேந்துட்டாரு. புகுந்த வூட்டு சனம் பொட்டைப்புள்ளக்கி எதுக்குப் படிப்புன்னு சொல்லப் போய்தான் அண்ணன அண்டிப் பொழைக்க இங்க வந்தேன். இந்த வருச கவர்மெண்டு பரிச்சயாச்சும் முடிச்சிரட்டுமேம்மா” தயங்கித் தயங்கிக் காமாட்சி சொன்னாள். அப்போதெல்லாம் பதினோராம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சி!

“என்னைக்கானாலும் ரங்கனைக் கட்டிக்கிட்டுச் சோறாக்கத்தானே போறா? ரங்கனுக்கு நல்ல வேலை அமைஞ்சா இவ எதிர்காலந்தானே செழிப்பா இருக்கப் போது? நல்லா யோசிச்சு ஆறுமுகத்துட்டேயும் பேசிட்டுச் சொல்லு.”

ஆறுமுகத்துக்குக் கசக்குமா என்ன? தங்கை மனதை மாற்றினார். அப்பா ரங்கனைப் படிக்க வைப்பதில் பாவம் தீர்ந்து விடுமென எண்ணி விட்டார் போலும். ரங்கனுக்குக் கொஞ்சம் தன்மானம் அடிவாங்கின மாதிரி தோன்றினாலும் கல்லூரி ஆசை கை கூடியதில் ரோஷம் ஓடி ஒளிந்தது. பி.காம் முடித்த கையோடு வங்கி வேலையும் கிடைத்தது. அம்மா சொன்ன வாக்கு மாறாமல் பத்துக்குப் பதினைந்து பவுனாக நகை போட்டுக் கோவிலில் கல்யாணம் முடித்து, வீட்டுத் தோட்டத்திலே பந்தல் போட்டு ஊரைக் கூட்டிச் சாப்பாடு போட்டாள். திருமணத்துக்கு முன் தினம் வரை பெரியக்காவின் குழந்தைகள் இரண்டும் வசந்தா ஊட்டினால்தான் சாப்பிட்டன.

ஊர் மெச்சிய கல்யாண விருந்திலே வருத்தமாகக் கை நனைத்த ஜீவனாக அவர் படித்த பள்ளியின் தலைமையாசிரியர். பதினோராம் வகுப்புப் பரீட்சையில் மாநிலத்தில் முதலாவதாய் வந்து, பள்ளிக்குப் பெயர் வாங்கித் தருவாள் வசந்தா எனப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தவர். ‘பெரிய கலெக்டராய் வருவாள்’ என வாய்க்கு வாய் பாராட்டியவர். இவரிடம் முணுமுணுப்பாகத் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டுத் தளர்வாக வெளியேறினது இன்றும் கண்களினின்று அகலாக் காட்சியாக.

ழைப்பு மணி ஒலிக்க நினைவுகளிலிருந்து மீண்டார்.

பக்கத்திலிருந்த சொர்ணம் “இனியெங்க காவேரி வரப் போறா? ஏஜெண்டா இருக்கும். இல்லேன்னா அந்தப் பையனையே திருப்பித் துரத்தி விட்டிருப்பார். சும்ம மல்லுக்கு நிக்காம ரூவாயக் குடுத்தனுப்புங்க. கீரைக்கு நடையா நடக்கறது பத்தாம, விடிஞ்சும் விடியாமப் பேப்பருக்கு நடக்கப் போறீங்களாக்கும்?” அலுத்துக் கொண்டவள் “அத்தன காலையில தெருவெல்லாம் வெறிநாய்ங்க அட்டகாசம் வேற” கண்களை உருட்டிச் சின்னக் குழந்தையைப் பயமுறுத்துவதைப் போலச் சொன்னாள். அதே தெருவழிதான் அந்தச் சின்னப்பையனும் வரவேண்டும் எனும் நினைப்பு அவளுக்கு எழாதது வேதனையைத் தர, எதுவும் பேசாமல் போய்க் கதவைத் திறந்தார். நின்றிருந்தது சிறுவன் அல்ல. பளிச் முகத்தோடு பள்ளிச் சீருடையில் பதிமூன்று வயது மதிக்கத்தக்கச் சிறுமி.

யாரெனக் கேட்கும் முன்னர் அவளே “வணக்கம் சார். என் அம்மாதான் காவேரி. எதுத்த வீட்டுல வேல பாக்கும் அக்காவ வழியில பாத்தேன். அம்மா வரலன்னு பெரியம்மா கோவமா இருப்பதா சொன்னாங்க. ‘எனக்கும் நேரமில்ல. நீ போனா என்னாடி’ன்னாங்க. அம்மாக்கு ஒடம்பு முடியல. நாள வந்திடுவாங்க. எதும் செய்யணுமின்னா சொல்லுங்க. ஸ்கூலுக்கு லேட்டாப் போயிக்கலாம். மொதப் பீரியடு கேம்ஸுதான்” படபடவெனப் பேசினாள். சூட்டிகையான அந்தக் குழந்தையின் முகத்தில் அம்மாவின் வேலையைக் காப்பாற்றிக் கொடுக்க வந்தப் பெருமிதம்.

“இல்லம்மா. நீ ஸ்கூலுக்கு...”

பாய்ந்து வந்த சொர்ணம் இவரைத் தள்ளாத குறையாக இழுத்து நிறுத்திக் கதவை விரியத் திறந்து விட்டாள்.

இப்படியான தாக்குதலைச் சற்றும் எதிர்பாராதவர் அதிலிருந்து மீண்டு வரும் முன்னரே “நல்லதாச்சுப் பொண்ணே. வேறொண்ணும் செய்ய வேண்டாம். இன்னைக்கு ஒரே ஒரு நாள்.., பாத்திரத்தை மட்டும் தேச்சுக் கொடுத்துட்டுப் போயிடு” என்ற சொர்ணத்தைப் பின் தொடர்ந்தாள் அந்தச் சின்னபெண், முதுகில் பள்ளிக்கூடப் பையுடன் கருத்துப் போனக் கால் கொலுசுகள் சுடிதாருக்குக் கீழே தலைநீட்டி ’ஜலங் ஜலங்’ எனச் சத்தமிட.

திகைத்து நின்றிருந்த சபாபதிக்கு “ஒரே ஒரு மாசந்தானேங்க” ஐம்பது வருடங்களுக்கு முன் அப்பாவிடம் சொன்ன அம்மாவும், கணுக்கால் தெரியும் பாவாடை தாவணியில் மஞ்சள் துணிப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு அம்மா பரிசளித்தப் புதுக் கொலுசுகள் மின்னப் பெரியக்காவுடன் ரயிலேறிய வசந்தாவும் மீண்டும் நினைவுக்கு வந்தார்கள்.
***

27 நவம்பர் 2011 இன்றைய தினமணி கதிரில்..,

நன்றி தினமணி கதிர்!


கதாபாத்திரங்களை உயிர்த்தெழச் செய்திருக்கும் தலைசிறந்த ஓவியர் ராமு அவர்களுக்கும் நன்றி!

  • முடிவற்றுத் தொடரும் அவலம் பற்றியதான இச்சிறுகதை நட்சத்திர வாரத்தின் நிறைவு நாளில் வெளியாகிப் பலருடன் பகிர்ந்திடும் வாய்ப்புக் கிட்டியதில் மனதுக்கு ஒரு திருப்தி.
  • மழலைகள் உலகம் மகத்தானது’ எனும் தலைப்பில் தொடர்பதிவு இட என்னை அன்புடன் அழைத்திருந்த அமைதிச் சாரலுக்கு நன்றி. அச்சங்கிலியில் இக்கதையினையும் இணைக்கிறேன்.


தினமணியில் வெளியான என் பிற சிறுகதைகள்:

வயலோடு உறவாடி..
ஆயர்ப்பாடி மாளிகையில்..
கைமாறு
வடம்
பிடிவாதம்

39 கருத்துகள்:

  1. நல்ல சிறுகதை. தினமணி கதிரில் வெளியானதற்கு வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  2. நட்சத்திர வாரத்தை சிறப்பாகக் கொண்டு சென்று இறுதியில் மனதைத் தொடும் விதமாய், மாற்றம் வர வேண்டிய விஷயத்தை சிறுகதையாய் படைத்து தந்த விதம் நன்று.பாராட்டுக்கள் மேடம்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்.நான் தூத்துக்குடி அனல் மின் நிலைய குடியிருப்பில் இருந்தப்போ அங்கேயுள்ள மீனவக்குப்பத்தில் இருந்து வேலைக்கு வந்த மூக்கம்மாவும்,அவள் மகள் ராணியும் நினைவிற்கு வருகிறார்கள்.மிக நல்ல கதை..

    பதிலளிநீக்கு
  4. தமிழ் மணத்தில் இந்த வாரம் முதல் இடத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  5. அருமையான சிறுகதை.
    இப்படித்தான் வாழ்க்கை சிலர் மீது எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே யதார்த்தம். சபாஷ்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் மேடம்.
    வாழ்த்துக்கள்.
    இன்றைய தினமணி கதிரில் உங்களுடைய 'இன்னொரு வசந்தா ' சிறுகதை படித்தேன்.

    நம் நாட்டில் தினம் தினம் ஓராயிரம் வசந்தாக்கள் படிப்பைத் தொலைத்து விட்டு ஜனத்திரளுக்குள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் உண்மையை உணர்த்தி கலங்கச்செய்தது கதையின் கடைசி வரிகள்.

    -சரண்

    பதிலளிநீக்கு
  7. கதையா நிஜமா.
    எப்போது நிற்கும் இந்த அவலம். ஆனால் முன்னைக்கு இப்பத் தேவலை ராமலக்ஷ்மி. எங்கள் வீட்டு ராணியின் பெண்தான் வேலைக்காரர்கள் வரிசியில் கடைசி. அவள் தன் மூன்று பெண்களையுமே பெரிய பள்ளியில் படிக்கவைக்கிறாள். இனி அவர்களுக்கு நல்ல காலமே. மிக நெகிழ்வான கதை அருமையிலும் அருமை அம்மா.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு கதை.வாழ்த்துகள் அக்கா !

    பதிலளிநீக்கு
  9. கதையில் உயிரோட்டம் ததும்புகின்றது,அருமை.

    பதிலளிநீக்கு
  10. அழகான, மிகவும் யதார்த்தமான, வீட்டுக்கு வீடு நடக்கும் இதுபோன்ற அவலங்களை, அப்படியே ஒரு கதையாக வடித்து, அவரவர் மனசாட்சியைத் தொட்டுப்பார்க்கச் சொன்னதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இதுபோன்ற இளமையில் வறுமையை அனுபவிக்கும் குழந்தைகள் பாடு மிகவும் கஷ்டம் தான்.

    இதற்கெல்லாம் தீர்வு சொல்வதும் மிகவும் கஷ்டம் தான்.

    தினமணி கதிரில் வெளியிடப்பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ஒரு வாரம் தமிழ்மண நட்சத்திரமாக, ஜொலித்து முடிக்கவுள்ள தங்களின் நிறைவுப்பகுதியில் இந்த மிகச்சிறந்த கதையைத்தந்தது, மிகவும் அருமை தான். இதுபோன்ற தங்களின் எழுத்துக்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  11. இன்றைய என்னுடைய தமிழ்மண வோட் எண்: 5 vgk

    பதிலளிநீக்கு
  12. நல்ல கதை.. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. மனசு கனத்து போச்சு... கதை பிரசுரத்துக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. ம்ம்ம்ம்., இப்போவும் இப்படி எல்லாம் நடப்பது அதிசயமே; ஆனாலும் பெண்களும் படிப்பில் விருப்பம் கொண்டிருக்கவேண்டும். மூன்று பெண்கள் இருக்கும் வீட்டில் ஒரு பெண் மட்டும் படிக்காமல் இருப்பதையும், பள்ளிக்குச் செல்ல மறுப்பதும் நடக்கிறது. சிறுவர்கள் தாய், தகப்பனுக்கு உதவியாக வருவதில் தவறில்லை. ஆனாலும் நாமும் அவர்களிடம் சுமையைச் சுமக்க வைக்காமல் எளிதான வேலைகளையே செய்யச் சொல்லலாம்.(தவிர்க்க முடியவில்லை எனில்) எங்க வீட்டுப் பேப்பர் பையர் நினைவில் வந்தார். இதே வயசு தான். தினம் விடியற்காலை வந்துவிடுவார். ஞாயிறன்று மட்டும் ஏழு, எட்டு மணி ஆகும்.

    எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதுண்டு. பேனா, பென்சில், ஜியாமெட்ரி பெட்டி, விளையாட்டுப் பொருட்கள் என வாங்கித் தருவோம். படிப்பிலும் கவனம் வைத்திருக்கிறான் என்பதால் குற்ற உணர்ச்சி தோன்றுவதில்லை. அதே எங்க வீட்டில் வேலைகளில் உதவும் பெண்ணின் மகளோ பதினைந்து வயதுக்குள் காதல் திருமணம், 2 குழந்தைகள். இன்னும் பதினெட்டு வயது முடியவில்லை! :((((( புரிதல் தேவை.

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதை ராமலக்ஷ்மி.
    தினமணி கதிரில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. வீட்டுவேலைக்கு வரும் உதவியாளர்களின் குழந்தைகள் பெற்றோர்போல அதே வேலையில் தங்கிவிடாமல் படிச்சு முன்னேறணும். இப்போ பல இடங்களில் பார்த்தால் நல்ல முன்னேற்றம் வந்துகிட்டு இருக்கு என்பது மகிழ்ச்சிதான்.

    வயசானால் சுயநலம் கூடிப்போகுது என்பது கண் முன்னே காணும் உண்மை. இவுங்களா இப்படின்னு வாயடைச்சு நிற்கிறேன் பலசமயங்களில்!

    ரொம்ப அருமையா இருக்கு 'கதை'. இனிய பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  18. நட்சத்ரவார முடிவில் கதிர் உங்களை மேலும் பிரகாசப்படுத்தியமைக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  19. தொடரைத்தொடர்ந்ததுக்கு ரொம்ப நன்றி ராமலஷ்மி..

    அருமையான கதைக்கும் கதிரில் வெளியானதுக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  20. வெங்கட் நாகராஜ் said...
    //நல்ல சிறுகதை. தினமணி கதிரில் வெளியானதற்கு வாழ்த்துகள்....//

    மிக்க நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  21. raji said...
    //நட்சத்திர வாரத்தை சிறப்பாகக் கொண்டு சென்று இறுதியில் மனதைத் தொடும் விதமாய், மாற்றம் வர வேண்டிய விஷயத்தை சிறுகதையாய் படைத்து தந்த விதம் நன்று.பாராட்டுக்கள் மேடம்//

    மிக்க நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  22. asiya omar said...
    //வாழ்த்துக்கள்.நான் தூத்துக்குடி அனல் மின் நிலைய குடியிருப்பில் இருந்தப்போ அங்கேயுள்ள மீனவக்குப்பத்தில் இருந்து வேலைக்கு வந்த மூக்கம்மாவும்,அவள் மகள் ராணியும் நினைவிற்கு வருகிறார்கள்.மிக நல்ல கதை..//

    மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  23. மோகன் குமார் said...
    //தமிழ் மணத்தில் இந்த வாரம் முதல் இடத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள் !//

    அறியத் தந்தமைக்கு நன்றி மோகன் குமார்!

    பதிலளிநீக்கு
  24. ரிஷபன் said...
    //அருமையான சிறுகதை.
    இப்படித்தான் வாழ்க்கை சிலர் மீது எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே யதார்த்தம். சபாஷ்.//

    மிக்க நன்றி ரிஷபன்.

    பதிலளிநீக்கு
  25. சரண் said...
    //வணக்கம் மேடம்.
    வாழ்த்துக்கள்.
    இன்றைய தினமணி கதிரில் உங்களுடைய 'இன்னொரு வசந்தா ' சிறுகதை படித்தேன்.

    நம் நாட்டில் தினம் தினம் ஓராயிரம் வசந்தாக்கள் படிப்பைத் தொலைத்து விட்டு ஜனத்திரளுக்குள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் உண்மையை உணர்த்தி கலங்கச்செய்தது கதையின் கடைசி வரிகள்.//

    மிக்க நன்றி சரண்.

    பதிலளிநீக்கு
  26. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //Nice//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வல்லிசிம்ஹன் said...
    //கதையா நிஜமா.
    எப்போது நிற்கும் இந்த அவலம். ஆனால் முன்னைக்கு இப்பத் தேவலை ராமலக்ஷ்மி. எங்கள் வீட்டு ராணியின் பெண்தான் வேலைக்காரர்கள் வரிசியில் கடைசி. அவள் தன் மூன்று பெண்களையுமே பெரிய பள்ளியில் படிக்கவைக்கிறாள். இனி அவர்களுக்கு நல்ல காலமே. மிக நெகிழ்வான கதை அருமையிலும் அருமை அம்மா.//

    பேப்பர் பையன்கள் உள்ளிட்ட நிஜங்கள் கலந்த கதை. முன்பை விட தேவலாம்தான். ஆயினும் பெருநகரத்தில் வேலைக்குச் செல்லுபவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்களுக்கானத் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் வயதுச் சிறுமியர் படிப்பை விட்டுவிட்டு இதை நோக்கி ஈர்க்கப் படுவதும் பரவலாக நடக்கிறது. அதிக சம்பளம் ஒரு ஈர்ப்பாகவும்:(!

    பதிலளிநீக்கு
  28. ஹேமா said...
    //நல்லதொரு கதை.வாழ்த்துகள் அக்கா !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  29. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //.... தினமணி கதிரில் வெளியிடப்பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ஒரு வாரம் தமிழ்மண நட்சத்திரமாக, ஜொலித்து முடிக்கவுள்ள தங்களின் நிறைவுப்பகுதியில் இந்த மிகச்சிறந்த கதையைத்தந்தது, மிகவும் அருமை தான். இதுபோன்ற தங்களின் எழுத்துக்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி vgk sir.

    பதிலளிநீக்கு
  30. குமரி எஸ். நீலகண்டன் said...
    //நல்ல கதை.. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...//

    மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  31. Shakthiprabha said...
    //மனசு கனத்து போச்சு... கதை பிரசுரத்துக்கு வாழ்த்துக்கள்//

    நன்றி ஷக்தி.

    பதிலளிநீக்கு
  32. geethasmbsvm6 said...
    //எங்க வீட்டுப் பேப்பர் பையர் நினைவில் வந்தார். இதே வயசு தான். தினம் விடியற்காலை வந்துவிடுவார். ................ படிப்பிலும் கவனம் வைத்திருக்கிறான் என்பதால் குற்ற உணர்ச்சி தோன்றுவதில்லை. //

    எல்லா சிறுவர்களும் அப்படி இருந்து விடுவதில்லை என்பதுதான் சோகம். அரசுப் பள்ளியில் பத்தாவதில் சிறந்த மாணவனுக்கான ஷீல்ட் வாங்கிய சிறுவன் அந்த விடுமுறையில் பேப்பர் போட ஆரம்பித்து கல்லூரியில் சேர்ந்த பின்னும் தொடர்ந்து இந்தவருடம் பியூ இரண்டாம் வருடத்தில் தோல்வி, கூடவே வேண்டாத பழக்கங்களுமாக :(! பெண்கள் மிகச் சிறிய வயதில் மணம் முடிப்பதும் அதிகமாகவே உள்ளது. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  33. கோமதி அரசு said...
    //நல்ல கதை ராமலக்ஷ்மி.
    தினமணி கதிரில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  34. துளசி கோபால் said...
    //வீட்டுவேலைக்கு வரும் உதவியாளர்களின் குழந்தைகள் பெற்றோர்போல அதே வேலையில் தங்கிவிடாமல் படிச்சு முன்னேறணும். இப்போ பல இடங்களில் பார்த்தால் நல்ல முன்னேற்றம் வந்துகிட்டு இருக்கு என்பது மகிழ்ச்சிதான்.

    வயசானால் சுயநலம் கூடிப்போகுது என்பது கண் முன்னே காணும் உண்மை. இவுங்களா இப்படின்னு வாயடைச்சு நிற்கிறேன் பலசமயங்களில்!

    ரொம்ப அருமையா இருக்கு 'கதை'. இனிய பாராட்டுகள்//

    நன்றி மேடம். இரண்டு வகையாகவும் உள்ளதுதான். ஒருபக்கம் நல்ல பள்ளிகளில் படித்து பிள்ளைகள் கைநிறைய சம்பாதித்துக் குடும்பத்தை மேலேற்றுவதும் நடக்கவே செய்கிறது.

    பதிலளிநீக்கு
  35. ஸ்ரீராம். said...
    //வாழ்த்துகளும், பாராட்டுகளும்.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  36. ஷைலஜா said...
    //நட்சத்ரவார முடிவில் கதிர் உங்களை மேலும் பிரகாசப்படுத்தியமைக்கு வாழ்த்துகள்!//

    மிக்க நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  37. அமைதிச்சாரல் said...

    //தொடரைத்தொடர்ந்ததுக்கு ரொம்ப நன்றி ராமலஷ்மி..

    அருமையான கதைக்கும் கதிரில் வெளியானதுக்கும் வாழ்த்துகள்..//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  38. ஸாதிகா said...
    //கதையில் உயிரோட்டம் ததும்புகின்றது,அருமை.//

    மிக்க நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin