திங்கள், 10 செப்டம்பர், 2012

ஒரு சொல் - மலைகள் இதழில்..


நினைவின் விளிம்பில்
தளும்பி நின்றாலும்
முழுதாக முகங்காட்ட மறுத்துக்
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது
அந்த சொல்

பல ஒலிகளில் நீளங்களில்
விதவிதமான அழகுச் சொற்கள்
விரித்த வலையில் வந்து விழுந்தாலும்
எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை

பள்ளிக்கூட வாசலில்
சீருடைச் சிட்டுகளோடு கலந்துவிடும்
சின்னஞ்சிறு மகளைத்
தேடிக் களைக்கும் கண்களை விடச்
சோர்ந்து விட்டிருந்தது மூளை
நாட்கணக்கில் கசக்கப்பட்டதில்

மறந்து விடத் தீர்மானித்தேன்
மறந்து விட்டதாய்
சொல்லியும் கொண்டேன்

அப்படியும் எங்கிருந்தாவது
எட்டிப் பார்த்துப்
பாதிமுகம் காட்டிப் பைத்தியமாக்கியது
பல வாரங்கள் ஆட்டிப் படைத்தது

‘உனக்கும் எனக்குமிடையே
இனி ஒன்றுமேயில்லை
குறுக்கிடாதே என் வழியில்’
கோபித்துக் கொண்டேன்

என்ன நினைத்ததோ
காட்சிதந்தது மறுநாளே
தோட்டத்து மண்ணில்
வானத்து நட்சத்திரங்களாக
உதிர்ந்து கிடந்த
எண்ணற்றப் பவள மல்லிகளில்
ஒன்றாக.

விடிவெள்ளியாய்ப் பிரகாசித்ததனை
நொடியில் அடையாளங்கண்டு
சிலிர்ப்புடன் கையில் ஏந்தி
ஓடிச்சென்று பொருத்தினேன்
அந்த ஒரு சொல்லே
உயிர்நாடியென நான்
கைவிரித்து விட்டதால்
மரிக்கக் கிடந்த கவிதையில்..

எழுந்து அமர்ந்தது கவிதை.
குலுக்கிக் கொண்டோம்
நானும் சொல்லும் கைகளை.
***

படம் நன்றி: இணையம்

18 ஆகஸ்ட் 2012, மலைகளின் எட்டாவது இதழில்., நன்றி மலைகள்.காம்!

29 கருத்துகள்:

  1. யப்ப்பாடி. என்னவேகம் இந்தக் கவிதையில். அழகு பாரிஜாதமலர்கள் நட்சத்திரக் கவிதையாகி உங்கள் கைகளுக்கு வந்தது அற்புதம்.
    ராமலக்ஷ்மி மனம் நிறைந்தது.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மரிக்கக்கிடந்த கவிதையில்..:)
    சீருடை சிட்டுக்களில் தேடிக்களைப்பதும் ரொம்ப நல்லா இருக்கு..ராமலக்‌ஷ்மி..

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! உணர்வும் பொருளும் ஒன்றையொன்று முட்டித் தள்ளிக் கொண்டு வெளிப்பட்டிருக்கின்றன உங்கள் அழகான இந்தக் கவிதையில்!

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம் ..அழகிய உணர்வு
    அருமை மேடம்

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப அருமை வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  6. ரசிக்க வைக்கும் வரிகள்... மிக்க நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  7. அற்புதம். நினைத்துக்கொண்டே இருந்தாள் நினைவுக்கு வராது. விலகி ஓடினால் உடன் வந்து விடும் நினைவுக்கு! அது சரி... அது என்ன சொல்? அதைச் சொல்லவேயில்லையே! எந்தச் சொல்லோ... எது வேண்டுமானாலும் இருக்கலாம் உருவகம்தானே என்கிறீர்களா?!!

    பதிலளிநீக்கு
  8. கவிதையும் நீங்களும்....யாரை யார் உருவாக்கி ரசிக்கிறார்கள்.அருமை அக்கா !

    பதிலளிநீக்கு
  9. அப்பாடி என்னஒரு அழகான கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. @ஸ்ரீராம்.,

    சரியே, எது வேண்டுமானாலும் இருக்கலாம்:)! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. எழுந்து அமர்ந்தது கவிதை.
    குலுக்கிக் கொண்டோம்
    நானும் சொல்லும் கைகளை.//

    ஆஹா! கவிதை அற்புதம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin