வெள்ளி, 2 செப்டம்பர், 2011

விஸ்வரூப தரிசனம்-பெங்களூரு சிவாலயம் (பாகம் 1)


பெங்களூரு பழைய ஏர்போர்ட் சாலையில் இருப்பதாலும், எம்.ஜி ரோடின் ‘கிட்ஸ் கெம்ப்’ நிறுவனத்தினரால் அவர்களது கெம்ப்ஃபோர்ட் வளாகத்தில் தோன்றுவிக்கப் பட்டதாலும் இந்த சிவாலாயம் ஏர்போர்ட் அல்லது கெம்ப்ஃபோர்ட் சிவாலயம் என்றே பெரும்பாலும் விளிக்கப் படுகிறது, இரண்டுமே இப்போது அங்கு இயங்காது போயினும். கெம்ப்ஃபோர்ட் இருந்த இடத்தில் டோட்டல் மால் இயங்கி வருகிறது என்றாலும் கோவிலின் பராமரிப்பு கிட்ஸ் கெம்ப் நிறுவனமே கவனித்து வருவதாகத் தெரிகிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன் கோவில் வருவதற்கு முன்னர் மைதானமாக இருந்த இடத்தில் சிவன் மட்டும் பிரமாண்டமாக 65 அடி உயரத்தில் தலையில் கங்கை பொங்கி வழிந்தோட தவக்கோலத்தில் காட்சி தந்த போதே அங்கு சென்று படமெடுத்திருக்கிறேன். பிறகு கோவிலாக மாறிய பின்னர் உறவினர் யார் வந்தாலும் அழைத்துச் செல்வது வழக்கமாகி பலமுறை சென்று வந்திருப்பினும் முழுமையாக கோவிலைப் படமெடுத்ததில்லை. சிலமாதங்களுக்கு முன் தற்செயலாக ஒரு சந்தர்ப்பம் வாய்ந்தது சிவனருளால்.

(படங்கள் திறப்பதற்கு நேரம் எடுத்தால் ஏதேனும் ஒன்றின் மேல் க்ளிக் செய்து light box_ல் வரிசையாகக் காணலாம்)

சாலையிலிருந்து நுழையும் இடம் குகை போன்ற அமைப்புடன்.
#2


சிறுகடைகள் பல தாண்டி சற்று தூரத்தில் காட்சி தருகிறார் 32 அடி உயர விநாயகர் சுமார் பதினைந்தடி உயர மேடையிலிருந்து.
#3


முன்னர் கெம்ப்ஃபோர்ட் பின்புறபடிகள் வழியாக இறங்கிவந்து சிவனை நோக்கி நேராக நடந்திடலாம். இப்போது அப்பாதை சங்கிலிகளால் மறிக்கப்பட்டுள்ளன. நுழைவுக்கட்டணம் செலுத்தி, காமிராவுக்குத் தனி அனுமதி பெற்று(எங்கும் படமெடுக்கத் தடையில்லை), படிகளில் ஏறி விநாயகரை தரிசித்து விட்டு அவருக்கு வலப்புறமாகச் சென்று மீண்டும் சில படிகள் ஏறி [அப்போது கிடைத்த அற்புதக் கோணத்தையே ‘மகா கணபதி’யாக சதுர்த்தி வாழ்த்துக்களுடன் பகிர்ந்திருந்தேன்], பின்புறமாகச் சுற்றிக் கொண்டு ஒரு வாயில் முன் வந்து நின்றோம்.

அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதுதான் “மலைக் கோவில் யாத்திரை”. இது கடந்த வருடம் 2010 சிவராத்திரியை ஒட்டி புதிதாக அமைத்தார்களாம். இமயத்தின் இருண்ட மலைக் குகை வளைந்து வளைந்து செல்கிறது. உள்ளே மெல்லிய நீல மற்றும் சிகப்பு விளக்குகளாலான ஆங்காங்கே மட்டும் வெளிச்சம். ஒரே ஒரு நபர் மட்டுமே செல்ல முடிகிற அகலம். உயர்ந்தும் தாழ்ந்தும் படிக்கட்டுகள். அந்த சூழல் பழகும் முன் வெளியேறுமிடம் வந்து விடுகிறது. அந்த சில நொடிப் பயணத்தில் நமக்கு கிடைக்கின்றன வரிசையாக ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நார் ஸ்தலங்களில் அருள்பாலிக்கிற லிங்கங்களின் தரிசனம். இறுதியாக அமர்நாத்தின் பனிலிங்கம். அற்புதக் காட்சி. அந்த இடமும், கால் வைத்தால் தரையும் ஜில்லென்றிருக்க சிலிர்ப்பான தரிசனம். தொடர்ந்து பின் பக்கம் மக்கள் வந்து கொண்டிருந்தபடியாலும், முதன்முறை என்பதால் குகை அமைப்பை எதிர்பாராத நிலையில் காமிராவைத் தயாராக வைக்காததாலும் படம் எடுக்க முடியவில்லை.

குகை விட்டு வெளிவந்து அண்ணாந்து பார்த்தால் மேகம் சூழ்ந்த ஆகாயம் வரை உயர்ந்து, கங்கையினைத் தலையில் கொண்டு, தவக்கோலத்தில் புலித்தோலின் மேல் வீற்றிருக்கிறார் சிவ பெருமான்.
#4


பாலபிஷேகம்
#5
விருப்பமானவர்கள் பால் வாங்கி அபிஷேகம் செய்திடலாம்.


ஆராதனை
#6


தீப ஆராதனை முடிந்ததும் சிவனை வலம் வரும் பிரகாரக் குகை விஸ்தாரமானதே. இந்தியாவின் முக்கிய ஸ்தலங்களிலுள்ள சிவலிங்கங்களை அதே வடிவத்தில் இங்கு அமைத்திருக்கிறார்கள். இந்தக் குகை யாத்திரை படங்களை அடுத்த பாகமாகப் பகிர்ந்திடுகிறேன்.

குகை விட்டு வெளியில் வரும்போது கங்கை சாரலாக நமை நனைத்தபடி இருக்கிறாள். இதை கங்கா ஸ்நானம் என்று குறிப்பிடுகிறார்கள்.
#7
சாரலை வணங்கி ஏற்றி நகர்ந்து விடும் பக்தர்கள் மத்தியில் சிலர் அங்கே மழைக் கோட் பெற்றுக் கொண்டு சிவனுக்குப் பின்புறம் உயரத்திலிருந்து பொங்கி விழும் நதியில் (நனையாமல்) நனைந்து கங்கா லிங்கத்தின் ஆசிர்வாதத்தைப் பெறுகிறார்கள்.

போகவும் மானசரோவர் ஏரி போன்ற ஒரு வடிவமைப்பை சிவனுக்கு முன்னால் அமைத்துள்ளார்கள், ‘அற்புதம் அருளும் இடம்’ எனும் அறிவிப்புடன். அதில் மனமுருகி வேண்டிக் கொண்டு நாணயத்தை போட்டோமானால் நினைத்தது நிறைவேறுமென. நாணயங்களால் நிரம்பிக் கிடக்கிறது ஏரி.

சத்தமாக “நமசிவாய நமசிவாய.. ஓம் நமசிவாய..” ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஹோம குண்டத்தில் அக்னி அணையாமல் இருக்கிறது. விறகுகளை வாங்கி பக்தர்கள் தாமே ஹோமகுண்டத்தில் சேர்த்து பிரார்த்தனை செய்து கொள்ளும் வசதி. ஓரிடத்தில் ‘பாப நாச விளக்குகள்’ என எண்ணெய் அகல் விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றிடும் வசதி. நவக்கிரகங்கள் கோள் போன்ற அமைப்புக்குள். படத்தில் நீலவண்ணத்தில் தெரிகிறது பாருங்கள்.
#8


ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியாக எள்தீபம் ஏற்றும் வசதி. ஏற்றிய தீபத்தை உள்ளே எடுத்துச் சென்று தேவியருடன் வீற்றிருக்கும் தேவர்களுக்கு பக்தர்கள் ஆரத்தி காட்டிடவும் அனுமதி.
#9


இப்படிப் பிரார்த்தனையை செலுத்திட பல வழிமுறைகள். ஒவ்வொன்றுக்கும் தனிக் கட்டணம். பெரிய விநாயர்சிலையை தரிசிக்க ஏறும் படிக்கம்பிகளும், நேர்முன்னே அமைந்த கம்பிகளும் பக்தர்கள் வேண்டிக் கொண்டு கட்டிய கயிறுகளால் மறைந்து போயிருக்கின்றன. வலப்பக்கம் இருக்கும் உயரமான மரக் கிளைகளிலும் இக்கயிறுகள்.
#10
வினைதீர்க்கும் விநாயகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அல்லல் அகலுமென அதற்கென்றே இறைநாமத்துடனான கயிறுகளை விற்பனை செய்கிறார்கள். போகவும் மற்றபல மரங்களிலும் மக்களாகக் கொண்டு வந்த கயிறுகள், வளையல்கள் போன்றன வேண்டுதல்களின் அடையாளங்களாக.

மக்களின் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள். ஏதேதோ கவலைகள். இறக்கி வைக்க இறைவனிடம் தீராத நம்பிக்கையுடன் ஓடி வருகிறார்கள். அவற்றைத் தீர்த்து வைக்கவும் எல்லோரும் நலம்வாழவும் வேண்டியபடி, வெளியேறும் முன் எடுத்த நேர்க்கோணப் படம்:
#11
கால இடைவெளிகளில் ஏதேனும் மாற்றங்கள் வந்தபடியே உள்ளன. குறிப்பாக இந்த இமயம் போன்ற அமைப்பு சிவனைச் சுற்றிவர பக்கவாட்டிலும் இப்போது அமைத்திருப்பது கைலாய மலையைக் கொண்டு வந்தது போலொரு தோற்றம். அதில் ஈர்க்கப்பட்டு எடுத்ததே முன்னர் அதீதத்தில் வெளிவந்து உங்களுடன் பகிர்ந்து கொண்ட ‘எல்லாம் வல்ல’ கையிலை நாதன் படம். சிவன் எழுந்து நடக்கிற மாதிரியாக ஒரு தோற்றத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து எடுத்தேன். இந்தப் படங்களையும் கூடவே பகிர்ந்திருந்தால் அந்தத் தோற்றம் மனதில் பதிந்திருக்காதுதானே:)?
***

பாகம் 2: “ஒரு வலம்.. பல ஸ்தலம்..” இங்கே.
***





43 கருத்துகள்:

  1. அக்கா, என்னையும் ஒருமுறை கூட்டிட்டுப் போறீங்களா இந்த கோவிலுக்கு...

    அருமையான படங்கள், அருமையான விமர்சனமும்...

    பதிலளிநீக்கு
  2. படங்களெல்லாம் அருமையாயிருக்கு. உங்கூர்ல பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்டில் இன்னுமொரு இடமும் சேர்ந்தாச்சு :-)

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப வருசம் முன்ன பார்த்த இடம்.. புதுசா நிறைய செய்திருக்காங்க போல..

    விஸ்வரூபம் தான்..
    புகைப்படங்கள் அழகா இருக்கு ராமலக்‌ஷ்மி..:)

    பதிலளிநீக்கு
  4. பலமுறை போய் பார்க்கும் வாய்ப்புக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டது. நான் சென்ற போது அவர்கள் சிவனை போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை.
    நுழைவாயிலில் உள்ள அந்த பிரும்மாண்ட விநாயகரை மட்டும் போட்டோ எடுத்து வந்தேன்.

    நல்லதொரு கோயில், நல்ல பதிவு. ஒரு முறையேனும் போய்ப்பார்க்க வேண்டிய இடம் தான். பகிர்வுக்கு நன்றி. vgk

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்களுடன் அருமையான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  6. கெம்ப்ஃபோர்ட் என‌க்கும் மிக‌வும் பிடித்த‌ கோயிலாக‌ இருந்த‌து ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால். கிட்ட‌த்த‌ட்ட‌ நான்கு வ‌ருடங்க‌ளுக்கு ஒவ்வொரு வார‌மும் சென்று வ‌ந்திருக்கிறேன். அத‌ன் பின் வெளி நாட்டில் இருந்த‌தால் அடுத்த‌ ஐந்து வ‌ருடங்க‌ள் செல்ல‌ முடிய‌வில்லை. மீண்டும் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சென்று பார்த்த‌ பொழுது மிக‌வும் க‌ம‌ர்ஷிய‌ல் இட‌ம் போல் மாறிய‌து மிக‌வும் வ‌ருத்த‌ம‌ளித்த‌து. இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் கோயிலுக்கு மிக‌ அருகில் வ‌சித்திருந்தாலும், டோட்ட‌லுக்கு இர‌ண்டு வார‌த்திற்கு ஒரு முறை சென்று வ‌ந்திருந்தாலும் கோயிலுக்கு இர‌ண்டு முறை தான் சென்றேன். ஏதோ ஒரு வ‌ருத்த‌ம்.

    புகைப்ப‌ட‌ங்க‌ள் அழ‌காக‌ இருக்கின்ற‌ன மேட‌ம்

    பதிலளிநீக்கு
  7. அருமையான புகைப் படங்களுடன் பதிவு. 10 என்று என்னிடப்பட்டுள்ள விநாயகர் படம் (கோணம்+பின்னணி) அருமை.

    //அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதுதான் “மலைக் கோவில் யாத்திரை”. இது கடந்த வருடம் 2010 சிவராத்திரியை ஒட்டி புதிதாக அமைத்தார்களாம்//

    2002 லேயே பார்த்த ஞாபகம் இருப்பதாக என் அண்ணன் சொன்னார்.

    //இந்தக் குகை யாத்திரை படங்களை அடுத்த பாகமாகப் பகிர்ந்திடுகிறேன்.//

    காத்திருக்கிறோம்.

    //நாணயத்தை போட்டோமானால் நினைத்தது நிறைவேறுமென. நாணயங்களால் நிரம்பிக் கிடக்கிறது ஏரி//

    நம்பிக்கைகளால் நிறைந்து கிடக்கிறது ஏரி, மற்றும் மனிதர் மனம்!

    பதிலளிநீக்கு
  8. பெங்களூரு சிறப்பு இந்த தலத்தால் இமயம் முட்டி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  9. 3-வருடம் முன்பு நானும் இங்கபோய் பாத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  10. படங்களும் தகவல்களும் நன்று.

    //இந்தக் குகை யாத்திரை படங்களை அடுத்த பாகமாகப் பகிர்ந்திடுகிறேன்.//

    காத்திருக்கிறோம்.

    //அடுத்த பாகம்: “ஒரு வலம்.. பல ஸ்தலம்..” கூடிய விரைவில். //

    மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  11. படங்கள் மிகத்தெளிவாக அருமை..

    பதிலளிநீக்கு
  12. விநாயகரின் ‘பெல்ட்’ தெளிவாத் தெரியுது!! அப்பாகிட்டருந்து ’டையை’ வாங்கி, பெல்ட்டா மாட்டிருக்கார்போல!! விளையாட்டுப் பையர்!! ;-))))))))

    பதிலளிநீக்கு
  13. பிரசாத் வேணுகோபால் said...
    //அக்கா, என்னையும் ஒருமுறை கூட்டிட்டுப் போறீங்களா இந்த கோவிலுக்கு...

    அருமையான படங்கள், அருமையான விமர்சனமும்...//

    நன்றி பிரசாத். போகலாம்:)! ஒரு முறையேனும் செல்ல வேண்டிய கோவில்.

    பதிலளிநீக்கு
  14. அமைதிச்சாரல் said...
    /படங்களெல்லாம் அருமையாயிருக்கு. உங்கூர்ல பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்டில் இன்னுமொரு இடமும் சேர்ந்தாச்சு :-)/

    நல்லது சாந்தி:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //ரொம்ப வருசம் முன்ன பார்த்த இடம்.. புதுசா நிறைய செய்திருக்காங்க போல..

    விஸ்வரூபம் தான்..
    புகைப்படங்கள் அழகா இருக்கு ராமலக்‌ஷ்மி..:)//

    மிக்க நன்றி. ஆம், சமீபமாக நிறைய மாற்றங்கள்.

    பதிலளிநீக்கு
  16. மோகன் குமார் said...
    //Good photoes

    Tamil Manam not working. :((//

    நன்றி.

    ஆம், அடுத்தநாள் சரியாகி இருக்கிறது:)!

    பதிலளிநீக்கு
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    /பலமுறை போய் பார்க்கும் வாய்ப்புக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டது. நான் சென்ற போது அவர்கள் சிவனை போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. நுழைவாயிலில் உள்ள அந்த பிரும்மாண்ட விநாயகரை மட்டும் போட்டோ எடுத்து வந்தேன்./

    ஆச்சரியமாக உள்ளது. எப்போதும் அனுமதிப்பார்களே. காமிரா கட்டணம் மட்டும் இப்போது புதிது.

    /நல்லதொரு கோயில், நல்ல பதிவு. ஒரு முறையேனும் போய்ப்பார்க்க வேண்டிய இடம் தான். பகிர்வுக்கு நன்றி./

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  18. சே.குமார் said...
    /அழகான படங்களுடன் அருமையான விமர்சனம்./

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  19. தமிழ் உதயம் said...
    /அருமை. புகைப்படங்கள் பேசுகிறது./

    மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  20. தீஷு said...
    /கெம்ப்ஃபோர்ட் என‌க்கும் மிக‌வும் பிடித்த‌ கோயிலாக‌ இருந்த‌து ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால். கிட்ட‌த்த‌ட்ட‌ நான்கு வ‌ருடங்க‌ளுக்கு ஒவ்வொரு வார‌மும் சென்று வ‌ந்திருக்கிறேன். அத‌ன் பின் வெளி நாட்டில் இருந்த‌தால் அடுத்த‌ ஐந்து வ‌ருடங்க‌ள் செல்ல‌ முடிய‌வில்லை. மீண்டும் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சென்று பார்த்த‌ பொழுது மிக‌வும் க‌ம‌ர்ஷிய‌ல் இட‌ம் போல் மாறிய‌து மிக‌வும் வ‌ருத்த‌ம‌ளித்த‌து. இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் கோயிலுக்கு மிக‌ அருகில் வ‌சித்திருந்தாலும், டோட்ட‌லுக்கு இர‌ண்டு வார‌த்திற்கு ஒரு முறை சென்று வ‌ந்திருந்தாலும் கோயிலுக்கு இர‌ண்டு முறை தான் சென்றேன். ஏதோ ஒரு வ‌ருத்த‌ம்./

    உங்கள் கருத்தில் அர்த்தமும், வருத்தத்தில் நியாயமும் உள்ளது. உங்களுக்கு மட்டுமின்றி இது ஒரு பொதுக் கருத்தாகவே நிலவுகிறது. ஆரம்பத்தில் ஏகாந்தமாக சிவனைப் பார்த்து அமர்ந்திருக்கும் தருணத்துக்காகவே நானும் கெம்ப்ஃபோர்ட் சென்றிருக்கிறேன். பரமாரிப்பு செலவுகளுக்காக என எத்தனையோ காரணங்கள் இருப்பினும், ஒருகாலத்தில் சுதந்திரமாக சென்றவர முடிந்த புராதன கோவில்களும் கூட கெடுபிடிகள் நிறைந்ததாகி விட்ட நிலையில் இதுவும் விதிவிலக்கல்ல என சமாதானமாக வேண்டியுள்ளது.

    /புகைப்ப‌ட‌ங்க‌ள் அழ‌காக‌ இருக்கின்ற‌ன மேட‌ம்/

    நன்றி தீஷூ அம்மா:)!

    பதிலளிநீக்கு
  21. சசிகுமார் said...
    /மிக அருமை/

    நன்றி சசிகுமார், பதிவை தமிழ்மணத்தில் இணைத்ததற்கும்:)!

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம். said...
    //அருமையான புகைப் படங்களுடன் பதிவு. 10 என்று என்னிடப்பட்டுள்ள விநாயகர் படம் (கோணம்+பின்னணி) அருமை. //

    மிக்க நன்றி. நீலக்குடை போன்றன தவிர்க்க முடியவில்லை.
    _____________

    ***//அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதுதான் “மலைக் கோவில் யாத்திரை”. இது கடந்த வருடம் 2010 சிவராத்திரியை ஒட்டி புதிதாக அமைத்தார்களாம்//

    2002 லேயே பார்த்த ஞாபகம் இருப்பதாக என் அண்ணன் சொன்னார். /***

    வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். அதற்கு பிறகு கூட நான் சென்றிருக்கிறேனே. அவர் பார்த்தது பாகம் இரண்டில் நான் காட்டவிருக்கும் சிவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வரும் பிரகாரக் குகை யாத்திரையாக இருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
  23. goma said...
    /பெங்களூரு சிறப்பு இந்த தலத்தால் இமயம் முட்டி நிற்கிறது./

    நன்றி கோமாம்மா:)!

    பதிலளிநீக்கு
  24. Lakshmi said...
    /3-வருடம் முன்பு நானும் இங்கபோய் பாத்திருக்கேன்./

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  25. அமைதி அப்பா said...
    /படங்களும் தகவல்களும் நன்று./

    மிக்க நன்றி. அடுத்த பாகம் வெகு விரைவில்:)!

    பதிலளிநீக்கு
  26. asiya omar said...
    /படங்கள் மிகத்தெளிவாக அருமை../

    நன்றி ஆசியா. நலம்தானே:)?

    பதிலளிநீக்கு
  27. ஹுஸைனம்மா said...
    /விநாயகரின் ‘பெல்ட்’ தெளிவாத் தெரியுது!! அப்பாகிட்டருந்து ’டையை’ வாங்கி, பெல்ட்டா மாட்டிருக்கார்போல!! விளையாட்டுப் பையர்!! ;-))/

    உங்கள் கமெண்டை விநாயகரிடம் சொன்னேன். தும்பிக்கை தூக்கி ரசித்துச் சிரித்தார்:)! நன்றி ஹுஸைனம்மா!

    பதிலளிநீக்கு
  28. Rathnavel said...
    //அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

    மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. விநாயகர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார். அருமையான படங்களுக்கும், விவரங்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  30. //தும்பிக்கை தூக்கி ரசித்துச் சிரித்தார்//

    நன்றிக்கா!!

    இங்கே விநாயகர் ‘பெல்ட்’டைக் கண்டதும் நேற்று படித்த இந்தக் கதையில் ”டை நெளிந்தது” ஞாபகம் வந்தது. கமெண்ட் எழுதிட்டேன்.

    http://rithikadarshini.blogspot.com/2011/08/55.html

    பதிலளிநீக்கு
  31. பெங்களூரில் இருந்தப்போ இந்த கோயிலுக்கு போனது!! அப்படியே கண்ணுமுன்னால பெரிய சிவனை பார்த்த மாதிரி இருக்கு. படங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. கவிநயா said...
    //விநாயகர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார். அருமையான படங்களுக்கும், விவரங்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.//

    நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  33. ஹுஸைனம்மா said...
    //இங்கே விநாயகர் ‘பெல்ட்’டைக் கண்டதும் நேற்று படித்த இந்தக் கதையில் ”டை நெளிந்தது” ஞாபகம் வந்தது. கமெண்ட் எழுதிட்டேன். //

    பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா :)!

    பதிலளிநீக்கு
  34. முகுந்த் அம்மா said...
    //பெங்களூரில் இருந்தப்போ இந்த கோயிலுக்கு போனது!! அப்படியே கண்ணுமுன்னால பெரிய சிவனை பார்த்த மாதிரி இருக்கு. படங்களுக்கு நன்றி.//

    மிக்க நன்றி முகுந்த் அம்மா..

    பதிலளிநீக்கு
  35. Kanchana Radhakrishnan said...
    //அருமையான படங்கள்.//

    மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  36. //இப்படிப் பிரார்த்தனையை செலுத்திட பல வழிமுறைகள். ஒவ்வொன்றுக்கும் தனிக் கட்டணம். //

    அதெல்லாம் சரியா வசூல் பண்ணிடுவாங்களே! :-)


    ஒருமுறையாவது இந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறேன். கடவுள் இருக்கும் இடம் அமைதியும் அழகும் இருக்கிறது என்றால் அந்த இடத்தில் செயற்கை நுழையாமல் இருக்கும் வரையே! தற்போது கோவில்கள் பணம் சம்பாதிக்கும் இடங்களாக மாறி விட்டதால் அங்கே இறைவனை தேடிப்பயன் இல்லை. மனத்திருப்திக்காக!! செல்லலாம்.

    இன்று வரை எனக்கு திருப்தி அளிக்கக் கூடிய ஒரே கோவில் எங்கள் ஊரில் உள்ள ஒரு முருகன் கோவில் தான். இங்கு தான் எந்த புதுமையும் புகுந்து விடாமல் கோவிலின் அழகை கெடுக்காமல் இருக்கிறார்கள். ஒரு முறை சபரிமலை சென்றபோது (பத்து முறை சென்று இருக்கிறேன்) நிறைவாக உணர்ந்தேன். அதன் பிறகு எந்த கோவில் சென்றாலும் இந்த முருகன் கோவிலில் கிடைப்பது போல ஒரு மனநிறைவை பெறவில்லை. பழனி எல்லாம் சென்றால் எரிச்சல் தான் வருகிறது.

    பதிலளிநீக்கு
  37. கிரி said...
    //ஒருமுறையாவது இந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறேன்.//

    ஆம் ஒருமுறையேனும் சென்றுவர வேண்டிய இடமே. நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  38. படங்கள் எல்லாம் துல்லியமாக மிக அழகாய் இருக்கிறது.
    நான் கைலாயம் போன போது நீங்கள் எழுதியது அது தான் நான் பார்க்க தவறி இருக்கிறேன்.
    கல்கி தீபம் இதழ் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin