திங்கள், 31 டிசம்பர், 2012

பெண்மை வாழ்கவென..


நாற்பது வருடங்களாகக் கோமாவில் இருக்கிறார் அருணா ஷான்பாக். தற்போது 64 வயதாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் பத்திரிகையாளரும் அவரது தோழியுமான பிங்கி விரானியால் இவருக்காகக் கோரப்பட்ட கருணைக் கொலைக்கான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து தள்ளுபடி செய்யப்பட்ட போதுதான் இவருக்கு நேர்ந்த கொடுமை பலகாலம் கழித்து மீண்டும் உலகின் கவனத்திற்கு வந்தது. சோஹன்லால் பர்தா வால்மிகி எங்கோ உத்திரபிரதேசத்தில் கல்யாணம் காட்சி பார்த்து புள்ளையும் குட்டியுமாக நன்றாக இருக்கிறான் எனக் கேள்வி. தன் பிறப்பின் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் அருணா சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்றில் இந்த சமூகத்தின் அலட்சியமும், இன்றைய நொடி வரைத் தன்னை மாற்றிக் கொள்ளாத ஆணவமும் கலந்திருக்கிறது.

வால்மிகி விடுதலையானது சட்டங்கள் கடுமையாக இல்லை எனும் வாதத்துக்குத் துணை செல்கிறதென்றால், 1978-ல் அதே தில்லியில் நடந்த இன்னொரு பாலியல் குற்றத்துக்காக பில்லா, ரங்காவுக்கு வழங்கப்பட்டத் தூக்குத் தண்டனை சமூகத்தில் என்ன பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது? இன்றளவும் இந்தியா எங்கிலும் இக்குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன? இந்தக் குற்றங்களைச் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த நேரத்தில் போதையில் இருந்திருக்கிறார்கள். எப்பேற்பட்டத் தண்டனையை அரசு அவர்களுக்கு வழங்கக் காத்திருந்தாலும் அதுகுறித்த சிந்தனை மூளைக்கு எட்டுமா என்பதே சந்தேகம். காந்திஜி விரும்பிய மதுவிலக்கு இந்த நாட்டில் சாத்தியப்படாத ஒன்று என்பதற்காகவும் சேர்த்து நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இப்போதைய பேருந்து சம்பவமும் சரி, தில்லியில் நடந்த முந்தைய சில சம்பவங்களும் சரி, தலைநகரில் நடைபெற்றதாலேயே மீடியாக்கள் இத்தனை பரபரப்பாக்குகின்றன, உலகின்.. நாட்டின்.. மற்ற பாகங்களில் தொடரும் கொடுமைகளை மீடியாக்களும் மக்களும் கண்டு கொள்வதில்லை எனும் குரல்களுக்கும், இந்த சம்பவத்தினாலாவது ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டதே போன்றதான பதில்களுக்கும், எங்கள் பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை என மனம் வெதும்பும் பெற்றோர்களின் பேட்டிகளுக்கும் மத்தியில் உதிர்ந்து விட்ட அந்த மலர்களின் ஆன்ம சாந்திக்கு நாம் செய்யும் உண்மையான பிரார்த்தனை எதுவாக இருக்க முடியும்? இனியும் இவை தொடராத சூழலை சமூகத்தில் ஏற்படுத்துவது மட்டுமே.

செய்வோமா?
***


உங்கள் யோசனைகளை கருத்துகளை மின்னஞ்சலில் முன் வைக்கலாம் இங்கே, 5 ஜனவரி 2013 வரையிலும்: justice.verma@nic.in
***




படம் நன்றி: குங்குமம் தோழி

"நடந்துவிட்ட வலிமிகு சம்பவங்களின் அடையாளமாக.. நம் ஆதரவின் அடையாளமாக .."
எனக் குங்குமம் தோழி FB-யில் பகிர்ந்த படம்.
"எந்தவொரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் தனித்த முறையிலான அடையாளப் படம் அல்ல இது ., அன்றாடம் தம் புற வாழ்விலும் அக வாழ்விலும் மனவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வன்புணர்வு செய்யப்படும் பெண்களுக்கான ஒரு அடையாளப் படம்..”
என்கிறாள் தோழி.
***

11 கருத்துகள்:

  1. மனம் பதறும் நிகழ்வைப் பார்த்து மனம் வெதும்பியோ திருந்தியோ சமூகம் கொஞ்சமாவது மாறும் என்ற எதிர்பார்ப்பு, பொய்யாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பது அடுத்தடுத்துத் தொடர்ந்து வரும் இதே போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன. நல்லவற்றைப் பலர் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டாலும் வெளியே அது தெரியாத நிலையில், இது போன்ற சம்பவங்களைக் கயவர்கள் சிலர் முன்னுதாரணமாகக் கொண்டுச் செயல்படுத்துவது வேதனையாக இருக்கிறது, சமூகச் சீர்கேட்டினையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு இந்தியக் குடி மகனின் / மகளின் மனதிலும் நல்லதொரு மாற்றத்தை 2013 ஏற்படுத்தட்டும்.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மாற்றங்களுடன் மலரட்டும் புத்தாண்டு. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. ராமலக்ஷ்மி, கட்டுரை நன்றாக எழுதி இருக்கிறீர்கள். மது போதை நல்ல குணத்தை கெடுத்து தவறான பாதைக்கு இட்டு செல்லும் உண்மைதான்.

    அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை பெண்களுக்கு அநீதிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
    இப்போது மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருக்கிறது.
    நாளும் பேப்பர், தொலைக்காட்சியில் இந்த செய்திகள் தான்.

    தனி மனித ஒழுக்கம் பின்பற்றப்பட்டால் தான் சமுதாயம் சீர் அடையும்.

    வரும் ஆண்டு, மனித நேயம் மிக்க ஆண்டாக மலர வாழ்த்துவோம்.
    வாழ்க வளமுடன்.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அடுத்து வரும் புது வருடத்திலாவது நல்லவை நடக்கட்டுமென்று வேண்டிக்கொள்வோம்.

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. @கோமதி அரசு,

    அப்படியே பிரார்த்திப்போம். நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  8. @Kanchana Radhakrishnan,

    மிக்க நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin