சனி, 22 செப்டம்பர், 2012

அவள் - மலைகள் இதழில்..



நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன
குறிப்பாக அவளிடமிருந்து

அவளுள் இருந்தார்கள்
மகள் தாய் மனைவி தங்கை தோழி
அத்தனை பேரும்

மிகப் பெரிய குற்றங்களையோ
மறக்க முடியாத துரோகங்களையோ
எவருக்கும் செய்துவிடவில்லை

சில தற்செயலாக நிகழ்ந்தவை
பல காலகாலமாக எல்லோரும் செய்தவை
அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு
வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை

நிறைய நோகச் செய்திருக்கிறேன்
அது குறித்துக்
கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்
இப்போது
மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..
மன அமைதிக்காக

காலம் கடந்து விட்டது
எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
கசிந்துருகி நிற்கும் எனக்குக்
காட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
நான் யாசிக்கிற மன்னிப்பு
மறுக்கப்படுகிறது

கையில் அள்ளி வீசும் நீராக
அலைக்கழித்த என்னை
ஆழ்கடலின் பேரமைதியுடன்
அச்சுறுத்துகிறாள் இன்று.
***

18 ஆகஸ்ட் 2012 மலைகளின் எட்டாவது இதழில்.., நன்றி மலைகள்.காம்!

26 கருத்துகள்:

  1. எல்லோருக்குள்ளும் இருக்கும் குற்ற உணர்வை
    மிக மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மனம் நோகச் செய்யும் பொழுது தெரியாத குற்ற உணர்வு பின்னாட்களில் மன்னிப்பு யாசிக்கையில் பூதாகரமாய் பயமுறுத்தத்தான் செய்கின்றன. அருமையான கவிதையின் மூலம் ‘அவளை’ பிரம்மாண்டப்படுத்தி மனதில் பதியச் செய்து விட்டீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  3. காலம் கடந்து விட்டது
    எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
    கசிந்துருகி நிற்கும் எனக்குக்
    காட்டப்படுகிற கருணையில்
    உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
    நான் யாசிக்கிற மன்னிப்பு
    மறுக்கப்படுகிறது//அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  4. சிலபேர் கேட்கிறார்கள்... சிலர் உணர்வதேயில்லை!

    பதிலளிநீக்கு
  5. மிக அருமை,சிந்திக்க வைத்தது..ராமலஷ்மி..

    பதிலளிநீக்கு
  6. கையில் அள்ளி வீசும் நீராக//
    அருமை..ராமலக்‌ஷ்மி .
    இயலாமையின் உருவகப்படுத்தல்..

    பதிலளிநீக்கு
  7. மனதை நெருடும் சில குற்ற உணர்வுகள்....எல்லோருடைய உணர்வும் உங்கள் கவிதையில்.வாழ்த்துகள் அக்கா !

    பதிலளிநீக்கு
  8. "கசிந்துருகி நிற்கும் எனக்குக்
    காட்டப்படுகிற கருணையில்
    உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது"

    அன்பு தெரிவதால் கருணையும் கூடவருவதால் மன்னிப்பு தேவைப்படுவதில்லை!

    பதிலளிநீக்கு
  9. சிறு வயதில் (சட்டை செய்யாத )மனைவியை கவனிக்காத கணவன் வயதான பின் காலம் கடந்து மன்னிப்பு கேட்பதும் எல்லோர் இடத்தில் காட்டும் ஒரே அனபு மட்டும் கிடைப்பதும், தனியாக சிறப்பு மன்னிப்பு எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடையும் கணவனின் பரிதவிப்பு கவிதையில் அழகாய் சொல்லப்பட்டு இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. @ஸ்ரீராம்.,

    உணராது போவோர் அதிகமும் கூட. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. @சந்திர வம்சம்,

    அப்படி எடுத்துக் கொள்வது ஒரு வகை செளகரியம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @சந்திர வம்சம்,

    அப்படி எடுத்துக் கொள்வது ஒரு வகை செளகரியம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @கோமதி அரசு,

    கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  14. @Mohan P,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அருமையான வரிகள் ராமலக்ஷ்மி..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin