வெள்ளி, 21 மார்ச், 2014

வெங்கட் நாகராஜ் பார்வையில்.. - ‘இலைகள் பழுக்காத உலகம்’

சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது வாங்கிய பல புத்தகங்களில் ஒன்று தான் “இலைகள் பழுக்காத உலகம்”.  இந்த கவிதைத் தொகுப்பினை வெளியிட்டவர் பதிவுலகில் முத்துச்சரம் எனும் வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதிவரும் திருமதி ராமலக்ஷ்மி.  கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மிகச் சிறந்த புகைப்படங்கள் எடுப்பது, என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். இப்புத்தகம் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் மொத்தம் 61 – கல்கி, ஆனந்த விகடன், வடக்கு வாசல், அகநாழிகை போன்ற பல இதழ்களில் வெளிவந்த அவரது சிறப்பான கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். 61 கவிதைகளும் எனக்குப் பிடித்திருந்தாலும் எல்லா கவிதைகளையும் இங்கே சொல்லி விடக் கூடாது எனும் உணர்வினால் ஒரு சில கவிதைகளைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கப் போகிறோம்.

கடலை யாருக்குத் தான் பிடிக்காது?
கடற்கரையில் செல்லும்போது, ஓய்வில்லாது இயங்கிக் கொண்டிருக்கும் கடலலைகள் நாம் பதிக்கும் கால் தடங்களை அழிந்து விடும் என நமக்கு உணர்வு வருவது இயல்பு.  அந்த கலக்கம் கடலுக்கே வருகிறதாம் – பச்சிளம் குழந்தை ஒன்றின் சின்னஞ்சிறு கால்கள் பதித்த சுவடுகள் அழிந்து விடுமோ என! 

தவிப்பு

அழகுச் சிப்பியொன்றை
கரையில் ஒதுக்கிய அலை
மெல்லத் தழுவிச் சென்ற
மணல் தளம் பளிங்கு போல

அதில் தன்
சின்னஞ்சிறு கால்கள் பதித்து
சிப்பியைக் கைப்பற்றியக் குழந்தை
குதூகலமாய்க் குதித்தோடி
மணிகள் பல ஆன பின்னும்
பதித்த பாதச்சுவடை
அழித்திட மனமின்றி
அழிந்திடுமோ எனப்பதறி
அலைக்கழிந்து கொண்டிருந்த்து

பொழிந்த பால் நிலவில்
கலக்கத்துடன் கடல்.... 

“காப்பாத்து கடவுளே” என்ற தலைப்பிட்ட கவிதையில் எல்லோரும் மழை வேண்ட, ஒரு சிறுமி முட்செடியில் மாட்டிக்கொண்ட சிட்டுக் குருவிக்காக “காப்பாத்து கடவுளே” என்று கேட்டவுடன் அந்த வேண்டுகோள் அம்பாகப் பாய்ந்து மழை பெய்ததைச் சொல்கிறார். படிக்கும் நம் மனதிலும் சந்தோஷச் சாரல்....

உங்கள் குழந்தைகள் நல்ல விஷயங்களைக் கடைபிடித்தால், தேவதை பரிசு தரும் என்று நீங்கள் சொல்வதுண்டா? ஒவ்வொரு ஞாயிறும் தனக்கு பரிசு தரும் அந்த தேவதைக்கே பரிசு தர நினைக்கும் ஒரு குழந்தை பற்றி அவர் எழுதிய கவிதையான “தேவதைக்குப் பிடித்த காலணிகள்” படிக்கும்போது நாம் அந்த தேவதை ஆகி விடமாட்டோமா என்று தோன்றியது!

கடன் அன்பை வளர்க்கும்

’வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை’
புதுக்கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இடத்தில்
வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான்
முந்தைய கடன்களை
காலத்தே அடைத்ததற்கான
நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன்வைத்தான்.

சிணுங்கியது அலைபேசி
‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’
அறிவித்தாள் அன்பு மகள்
முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க
சில்லறை இல்லாதபோது
தன்குட்டிப் பையைக் குலுக்கித் தேடி
எடுத்துத் தந்த இரு ஐந்து ரூபாய்
நாணையங்களை நினைவூட்டி.

யுத்தம் – இரண்டு பேர்களுக்குள் சண்டை நடக்கிறது. வார்த்தைகள் பறவைகளுக்கான தானியங்கள் போல இறைபட, அவற்றை ருசிக்கும் புறாக்களைப் போல வேடிக்கை பார்க்கிறார்கள் மற்றவர்கள். அந்த யுத்தத்தின் முடிவில் சண்டை போட்டவர்கள் சோர்ந்து போக, புறாக்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் காலத்தால் கழுவ முடியாத கசப்பான மிச்சங்களாக இருப்பதாகச் சொன்ன கவிதை.

ராணித் தேனீ கவிதை என்னை மிகவும் பாதித்தது என்று சொல்வேன். ஒரு ஏழையின் வீட்டில் அம்மா மட்டும் வேலை செய்து குடும்பத்தினைக் காப்பாற்ற, அவள் சம்பாதித்து மகளின் தேர்வுக்கு கட்ட வைத்திருந்த பணத்தினை அவளிடமிருந்து பிடுங்கி சாராயம் குடிக்கும் தகப்பன்.  மகள் ராஜாத் தேனீக்களுக்குக் கொடுக்கு கொடுக்காததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறாள்!

காசில் கறாராய் இருக்கும் பூக்காரி, பூக்கள் இல்லாது இருக்கும் மூன்று இளங்குழந்தைகளுக்கு இலவசமாய் பூக்கொடுக்கும் நல்லெண்ணம் பற்றிச் சொன்ன ‘மொழம்’ கவிதை,  அழகழகான குடைகள் விற்கும் வியாபாரி, மழை வரும் நேரத்தில் குடை ஒன்றை விரித்துப் பிடிக்காது எல்லா குடைகளையும் மழையில் நனைந்து விடாதிருக்க பத்திரப் படுத்துவதை சொன்ன “வண்ணக்குடைகள் விற்பனைக்கு” கவிதை, “மறுப்பு” என்ற தலைப்பில் மூதாட்டி தந்த பூக்களை வாங்க மறுத்தவர் வீட்டில் மல்லிகைச் செடிகள் மொட்டுவிட மறந்து போனதைச் சொன்ன கவிதை என பல கவிதைகளை எனக்குப் பிடித்த கவிதைகளாக மேற்கோள் காட்டிக் கொண்டே போகலாம்.

அரும்புகள்

என்றைக்கு
எப்போது வருமென
எப்படியோ தெரிந்து
வைத்திருக்கின்றன
அத்தனைக் குஞ்சுமீன்களும்

அன்னையருக்குத் தெரியாமல்
நடுநிசியில் நழுவிக்
குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட
மெல்ல மிதந்து
உள்ளே வருகிறது
பிள்ளைப் பிறை நிலா.

ஆங்கிலத்தில் Last but not the least என்று சொல்வது போல, இந்தக் கவிதை பற்றி கடைசியாகச் சொன்னாலும், நகரங்களில் தொலைந்து போன விஷயமான  மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சி பற்றிச் சொல்லும் “நாளினை நனைத்த சொற்கள்” கவிதையும் எனக்குப் பிடித்தது.

பல சிறப்பான கவிதைகளை தன்னகத்தே கொண்ட “இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பில் மொத்தம் 96 பக்கங்கள். வெளியீடு – அகநாழிகை.  புத்தகம் கிடைக்கும் இடம்:

அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS வளாகம், முதல் தளம், சைதாப்பேட்டை, சென்னை – 15.
தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com

இணையத்தில் வாங்கிட: இலைகள் பழுக்காத உலகம்..
*
19 மார்ச் 2014 அன்று வெங்கட் நாகராஜ் (சந்தித்ததும் சிந்தித்ததும்) வலைப்பக்கத்தில்.. இப்பகிர்வு:
http://venkatnagaraj.blogspot.com/2014/03/blog-post_19.html
*

மகிழ்ச்சியும் நன்றியும் வெங்கட்! அங்கு வாழ்த்தியிருந்த நண்பர்களுக்கும் என் நன்றி.
**

வெங்கட் நாகராஜின் இந்த நூல் விமர்சனம், ஆஸ்திரேலிய வாராந்திர தமிழ்ப் பத்திரிகையான “தமிழ் முரசு” தளத்திலும்.., நன்றி தமிழ் முரசு!
http://www.tamilmurasuaustralia.com/2014/03/blog-post_5132.html
***


14 கருத்துகள்:

  1. அருமையான கவிதைத் தொகுப்புக்கொரு சுவாரசிய விமரிசனம்....

    பதிலளிநீக்கு
  2. எனக்கு அங்கேயொரு கமெண்ட்.இங்கேயொரு கமெண்ட்என்று போடத்தெரியாது ...இதோ அங்கே போட்ட கமெண்ட்#மேடம் ராம லக்ஷ்மியின் வலைப் பதிவின் பெயரைப் போலவே கவிதைகள் அனைத்தும் முத்துச்சரம்தான்! #
    தம+1

    பதிலளிநீக்கு
  3. விமரிசனம் வெங்கட்டின் பதிவில் படித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. @ரிஷபன்,

    நன்றி. ஆம், மிக அருமையாக எழுதியுள்ளார்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin