வியாழன், 10 மார்ச், 2011

பறந்து பறந்து விதை தூவுவோம்.. - பெண்கள் சக்திச்சரம்

  • பனிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறையன்றி, மனித நேயம் மாசுப்படும் வேளையெல்லாம் அதைத் தூசு தட்டப் பூத்தபடியே இருக்கும் கவிக்குறிஞ்சி.
  • வீட்டு நடப்பு, ஊர் நடப்பு, நாட்டு நடப்பு, உலக நடப்பு என எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி திறந்து காட்டும் இவரது டிரங்குப் பெட்டி.
  • தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் தண்ணீரில் தத்தளித்த குழந்தைகளைக் காப்பாற்ற உயிர் நீத்து அணையா ஜோதியாய் அனைவர் மனதிலும் ஒளிரும் பள்ளி ஆசிரியை சுகந்தியை நினைவுகூறும் முத்தான பெண்மணி.
  • உலகில் அல்லலுறும் மக்கள் யாவருக்காகவும் அன்பை யாசிக்கும் எழுத்து. அதன் மொழிப்புலமையில் மகிழ்ந்து மயிலாகத் தோகை விரித்தாடியும், வேதனைகளில் நெகிழ்ந்து தாய்மடியாய் தாங்கியும் துணை செல்லுகிறது இவருக்கு, தமிழ்.
  • ‘நாம் தூவும் விதைகள் என்றேனும் ஒருநாள் யாருக்கேனும் இலை உதிர்க்கட்டும்... நிழல் கொடுக்கட்டும்.....பழம் கொடுக்கட்டும் பூக்கள் கொட்டட்டும்.’ நம்பிக்கை தருகிறது இவரது நட்சத்திர வார்த்தைகள்.

யார் யார் இவர்கள்?
அறிய வாருங்கள்!




பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



‘குறிஞ்சி மலர்கள்’ சுந்தரா:
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்குமாம் குறிஞ்சி மலர். மனித நேயம் மாசுப்படும் வேளையெல்லாம் அதைத் தூசு தட்டப் பூத்தபடியே இருக்கும் சுந்தராவின் கவிமலர்கள். உறவுகளின் நடுவே ஏற்படும் விரிசல்கள், மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், சமூக நலன் குறித்த ஆதங்கங்கள் வீச்சுடன் வெளிப்படுகின்றன இவர் எழுத்துக்களில். காலவதி மருந்துகளை விற்று காசு பார்த்தக் கூட்டத்தைச் சாடுகிறார் இப்படி,
“உயிரைக் கொடுத்தேனும்
நீதிகாத்த நாட்டினில்
உயிரை எடுத்தேனும்
பணம்சேர்க்கும் மனிதர்கள்...

வணிகமயமாகிவிட்ட
வாழ்க்கையின் போக்கினில்
காலாவதியாகிப்போனது
மனிதமும்கூடத்தான்... ” காலாவதி மனிதம்.
***
இன்னும் சில:வாடகை வயிறுகள், இருவகை இரவுகள், உறவுக் கயிறு,


ஹுஸைனம்மா:
வீட்டு நடப்பு, ஊர் நடப்பு, நாட்டு நடப்பு, உலக நடப்பு என எல்லாவற்றைப் பற்றியும் ‘பொழந்து கட்டும்’ ஹுஸைனம்மாவின் ‘டிரங்குப் பெட்டி’[அனைத்துப் பாகங்களும் இந்த இழையில்] பதிவுலகில் அதி பிரபலம். “நாமளும் வித்தியாசமா பேர் வைப்போம்னு மூளையக் குடைஞ்சதில கண்டுபிடிச்சதுதான் இந்த “டிரங்குப் பொட்டி” !! நாம சின்னப் புள்ளைங்களா இருந்தப்போ (இப்பவும் யூத்துதான்!!) எல்லார் வீட்டிலயும் ஒரு டிரங்குப் பொட்டி கண்டிப்பா இருந்திருக்கும். அதுல அப்பாவோட கணக்குப் பொஸ்தகம், அம்மாவோட சிறுவாடு காசு, நம்மளோட விலைமதிப்பில்லாத “சாவி கொடுத்தா கொட்டடிக்கிற குரங்கு பொம்மை”...இப்படிப் பலதும் கிடக்கும். அதேதான் இது!!” என்கிறார்.

பலரது பதிவுகளில் இவர் இடும் பின்னூட்டங்கள், கேட்கும் கேள்விகள் பளிச்சுன்னு நமக்கு ஒரு புன்னகையை வரவழைக்கும். அதே நேரம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். எதிலும் ஒரு அநாயசம், தனித்துவம், இது ‘தாமிரபரணித் தண்ணியக் குடிச்சு’ வளர்ந்த பலரிடம் காணக்கூடிய ஒன்று என்றால் மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது:)!

இவரது அனுபவப் பகிர்வுகளாகிய ஆறுமுகத்தாய்- பாகம் 1, பாகம்-2 என்னை மிகக் கவர்ந்தவையாகும். சிறப்பான எழுத்து நடைக்கு உதாரணமும்.
‘உப்புமடச் சந்தி’ ஹேமா

தன் ஊர் பெயர் கொண்ட ‘உப்புமடச் சந்தி’யில் ‘கதை பேச வாங்கோ’ என அன்புடனே நமை அழைத்து அளவளாவும் ஹேமா கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கிறார், இங்கே.

தன் தாய் தேசம் தந்த பரிசாக
மனநெகிழ்வோடும் கண்ணீரோடும் இவர் ஏந்திய ஈழம் பிரிவுக்கான தமிழ்மணம் விருது 2010, இவர் அனுபவித்த.., இவர் போன்ற பல ஈழத்தமிழர்கள் அனுபவித்த வேதனைகளுக்கெல்லாம் மவுன சாட்சியாக, யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு. “கண் திறக்காமலே அப்பா என்னைப் பிடித்தப்படி "ஓடி வா ஓடி வா" என்றபடி ஓட முயற்சிக்கிறார்.கால் அடி எடுத்து வைக்கவே இடம் இல்லை அங்கு.அப்பாவை நான் இழுக்க என்னை அவர் இழுக்க எங்கோ ஒரு குழிக்குள் விழுந்ததாய் விளங்குகிறது.அப்பாவின் கை என்னோடுதான் இன்னமும்.சேறு அப்பிக்கொள்ள நிறையப் பேர் இருந்தோம் அந்தக் குழிக்குள்.மழையும் வெள்ளமும் சேறும் என்று முன்னமே சொல்லியிருந்தேன்.இப்போது விளங்குகிறது.அது குழியல்ல.வெள்ள வாய்க்கால்.

அப்பா அணைத்துக்கொள்கிறார்.எதுவும் சொல்லவில்லை நான்.பயமோடா தம்பி என்று கேட்டாலோ,குளிருதோ என்று கேட்டாலோ,நோகுதோ என்று கேட்டாலோ இல்லை என்றேதான் சொல்லியிருப்பேன்.மனம் முழுக்க வலி.தமிழனாய்ப் பிறந்து தாய்மொழி தமிழுக்கு விழா எடுக்கக்கூட முடியாத தேசத்திலா நாம் பிறந்திருக்கிறோம் என்று.


இந்த வலிகளில் பிறக்கும் இவரது படைப்புகள் உலகில் அல்லலுறும் மக்கள் யாவருக்காகவும் அன்பை யாசிப்பதாக உள்ளன.

இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகும் இவர் கவிதைகள் யாவும் ‘வானம் வெளித்த பின்னும்..’ வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகின்றன. இவர் மொழிப்புலமை கண்டு வியந்து மகிழும் தமிழ், எழுத்துக்களில் மயிலாகத் தோகை விரித்தும், வேதனைகளில் நெகிழ்ந்து போய் தாயாகப் பங்கெடுத்துத் தன் தோளிலே சாய்த்தும் துணை செல்கிறது.
ஹாஸ்ய ரசம் கோமா
நண்பர் வட்டம், திண்ணை இதழ்களில் ஒரேகால கட்டத்தில் நாங்கள் எழுதி வந்திருந்தாலும் இவரது முதல் படைப்பை நான் வாசித்தது ஒன்பதாவது படிக்கையில், 1979-ல், ரத்னாபாலா சிறுவர் இதழில். ‘இன்னொரு காந்தி வரவேண்டும்!” என்கிற அந்த சிறுகதை பெற்ற ஆயிரம் ரூபாய் பரிசு அந்தக் காலத்தில் உயரிய ஒரு அங்கீகாரம். அதை வலைப்பூவில் இவர் பதிந்திருக்கிறாரா எனத் தேடியபோது கிடைக்கவில்லை. தனிமடலில் கேட்டபோது, ‘அக்கட்டுரையின் கருத்து இக்காலத்துக்கு பொருந்தாதே?’ என்றார். ‘நாட்டுப் பற்றை விதைக்கும் நல்லதொரு கருத்து பொருந்தாமல் போனது காலத்தின் பிழை. நாட்டின் வருந்தத்தகு நிலை. ’ என்றேன். சம்மதித்துள்ளார் பதிவதாக. இன்றும் அந்த விதை எவர் மனதையேனும் அசைத்து, துளிர்த்துத் தளிர்விட வல்லதென்றே நம்புகிறேன். இந்த வாரத்துள் கிடைத்தால் அதன் சுட்டியை இங்கு இணைத்திடுவேன், முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரசித்த படைப்பை வலைச்சரத்தில் தொகுத்த பெருமையுடன்!

ஒருவேளை தாமதமானாலும், அவர் பதியும் போது பின்னூட்டத்தில் இணைத்திடுவேன் அதன் உரலை.

‘இன்னொரு காந்தி வரவேண்டும்’ வலைச்சரத்துக்கும் நாட்டுக்கும்!
***

இவரது டைமிங் நகைச்சுவைக்கு யாரைக்கேக்கணும்?, வாக்களித்தவன் கேள்விகளும் தமிழக அரியாசனத் தலைமையின் பதில்களும்!
***

தனக்கு நீச்சல் தெரியாத நிலையில் கூட,தண்ணீரில் தத்தளித்த ,பல குழந்தைகளைக் காப்பாற்றி ,தன் உயிர் நீத்த பள்ளி ஆசிரியை சுகந்தி”யை நினைவு கூர்ந்து தான் தேடும் பத்தாவது பெண்மணியாகவும் ஆகிறார் இங்கே முத்தான 10 பெண்மணிகள்.

வள்ளுவம் வலைப்பூவில் இவர் விதைத்து வரும் சிந்தனைளும், ஆன்மீகப் பாடல்களும், ஹாஸ்ய ரசங்களும் விரைவில் தனித்தனிப் புத்தகங்களாகத் தொகுக்கப்பட உள்ளன என்பது உங்களுக்குக் கூடுதல் தகவல். வாழ்த்துவோம் இவரை.

[கோரிக்கையை ஏற்று இன்னொரு காந்தியை வலைச்சரத்துக்கு அழைத்து வந்திருக்கும் கோமாவுக்கு நன்றியும் வணக்கங்களும்!!]

அன்புடன் அருணா
தாய்மையின் மறு உருவாய் மாணவரை வழிநடத்தும் தலைமையாசிரியை, பொறுப்பான இல்லத்தரசி, சக மனிதர் யாவரிடமும் அக்கறை காட்டும் சமூக உணர்வு கொண்டவர், மனிதரோடு மழையையும் நேசிப்பவர். எங்கே, நல்ல விஷயங்களைக் கண்டாலும் மனமும் முகமும் மலந்து நீட்டிடுவார் பூங்கொத்தை. சென்றவாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலித்த போது பகிர்ந்த படைப்புகள் யாவும் கல்வெட்டு. அதில் நிறைவுதினக் கவிதையை பறந்துபோய் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன் இந்த நட்சத்திர வார்த்தைகளில் உலகம் துளிர்ப்பது நிச்சயம் என்று:
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்

உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள் விதைகளை.....
கைக்கெட்டா தூரம் வரை விசிறியடியுங்கள் விதைகளை....

ஒரு பறவையின் நோக்கத்தோடு பறந்து பறந்து விதை தூவுங்கள்...

எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.

என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.

கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!
” நன்றி அருணா!! தூவுவோம் விதைகளை!!
***

இன்றுடன் பெண்சக்தி சிறப்புச்சரம் நிறைவுறுகிறது. 33 சதவிகிதம் தருவதற்கே யோசிக்கும் உலகினிலே, கொடுத்திடுவோம் பெருந்தன்மையுடன் ஐம்பது சதவிகிதமாய் அடுத்த மூன்று நாட்களை, ஆண் சக்திகளுக்கு:)!

21 கருத்துகள்:

  1. என்னையும் அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி அக்கா.

    மற்ற தோழியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான அறிமுகம் ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள் சுந்தரா;:)

    பதிலளிநீக்கு
  3. //•தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் தண்ணீரில் தத்தளித்த குழந்தைகளைக் காப்பாற்ற உயிர் நீத்து அணையா ஜோதியாய் அனைவர் மனதிலும் ஒளிரும் பள்ளி ஆசிரியை சுகந்தியை நினைவுகூறும் முத்தான பெண்மணி//


    தியாக சுடர்மணி சுகந்தி......

    பதிலளிநீக்கு
  4. விரிவான அறிமுகங்கள் அனைவருக்கும் தந்திருக்கும் விதம் சிறப்பு . வாழ்த்துக்கள் உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் .

    பதிலளிநீக்கு
  5. சுந்தரா said...
    //என்னையும் அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி அக்கா.

    மற்ற தோழியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் என் நன்றிகள்!//

    நன்றி சுந்தரா:)!

    பதிலளிநீக்கு
  6. அமைதிச்சாரல் said...
    //அங்கே வரேன் :-))//

    நல்வரவு:)!

    பதிலளிநீக்கு
  7. சே.குமார் said...
    //வாழ்த்துக்கள்!//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  8. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //மிக அருமையான அறிமுகம் ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள் சுந்தரா;:)//

    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  9. MANO நாஞ்சில் மனோ said...
    ***//•தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் தண்ணீரில் தத்தளித்த குழந்தைகளைக் காப்பாற்ற உயிர் நீத்து அணையா ஜோதியாய் அனைவர் மனதிலும் ஒளிரும் பள்ளி ஆசிரியை சுகந்தியை நினைவுகூறும் முத்தான பெண்மணி//


    தியாக சுடர்மணி சுகந்தி....../***

    ஆம் நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  10. !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
    //விரிவான அறிமுகங்கள் அனைவருக்கும் தந்திருக்கும் விதம் சிறப்பு . வாழ்த்துக்கள் உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும்.//

    மிக்க நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு
  11. //தேனம்மை லெக்ஷ்மணன் said...

    மிக அருமையான அறிமுகம் ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள் சுந்தரா;:)//

    வலைச்சரத்தில் என்னை முதலில் அறிமுகம்செய்த உங்களுக்கும் என் நன்றிகள் தேனம்மை :)

    பதிலளிநீக்கு
  12. பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா

    பதிலளிநீக்கு
  13. வலைச்சரத்தில் வரும் அறிமுகங்களை இங்கு கொடுத்து சஸ்பென்ஸ் தருகிறீர்களா...நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
  14. ஹேமா said...
    //யார் யார் !//

    நீங்களும்தான் ஹேமா. நன்றி:)!

    பதிலளிநீக்கு
  15. சிவகுமாரன் said...
    //பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா//

    வெல்லட்டும் பெண்மை! நன்றி சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம். said...
    //வலைச்சரத்தில் வரும் அறிமுகங்களை இங்கு கொடுத்து சஸ்பென்ஸ் தருகிறீர்களா...நல்ல முயற்சி.//

    நன்றி ஸ்ரீராம், தொடரும் வருகைக்கும்:)!

    பதிலளிநீக்கு
  17. "என்றேனும் ஒருநாள் யாருக்கேனும்...."
    மிகச் சிறந்த மனப்பான்மை.

    பதிலளிநீக்கு
  18. @ சிந்தனை,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin