ஞாயிறு, 4 மே, 2008

ஒன்று பட்டால்...




உள்ளத்தை உணர்த்துகின்ற
ஒலிவடிவே மொழி என்றால்
உலகம் உய்த்திருக்க
ஒருவழிதான் ஒருமொழிதான்
அதுவே அன்புமொழி.
வாழ்க்கைக்கு வழிகாட்டும்
ஒளிவிளக்கே மதம் என்றால்
வையகத்தை வாழ்விக்க
'ஒன்றேகுலம் ஒருவனேதேவன்'
என்பதுவே வேதம்.
***

மொழியின் ஒலிவகை
பலவாக இருப்பினும்
பண்பெனும் பாதையிலே
அம்மொழிப் பாதங்கள்
பயணிக்கையிலே
பாஷைகளின் ஓசைகள்யாவும்
நேசத்துடன் இனிமையாய்
தேசிய கீதத்துக்கு
இசை அமைத்திடாதோ!
***

மதங்களிலே இந்துமதம்
எடுத்துரைக்கும் அறநெறிகளும்;
விவிலியம் கற்பிக்கும்
கருணவடிவாம் கர்த்தரின்
வாழ்வும் போதனையும்;
குர்ஆன் உரைக்கும் உயர்நெறிகளும்;
மாற்றானை நேசிக்கவும்-
மனசாட்சிக்கு பயப்படவும்-
மனிதநேயம் வளர்க்கவும்-
வலியுறுத்தும் வழிகாட்டிகளாய்த்தான்
விளங்குகின்றன திகழுகின்றன!
***

சமுத்திரத்தில் சங்கமமாகும்போது
சகலநதிகளின் சிறப்புச் சரித்திரங்களும்
சமத்துவமாகி விடுகின்றன.
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கிடையே-
அந்நதிகளின் அமுதநீர் இன்னதென்று
பிரித்தறிந்திட இயலுகிறதா?
***

வார்த்தைகளால் வர்ணிக்க வாராது
விவரிக்க விவரிக்க வியப்பேற்றும்
வரலாற்றுச் சிறப்புகள்
ஒவ்வொரு மொழிக்கும்
ஒவ்வொரு மதத்துக்கும்
உண்டென்றாலும் கூட
இந்திய சரித்திரமெனும்
மகா சமுத்திரத்தில்
சங்கமிக்கையில் அவற்றினிடையே
பேதம்பார்ப்பது பேதமையல்லவா?
***

கடலிலே கலந்திட்ட மழைத்துளியைக்
கண்டெடுப்பது ஆகிற காரியமல்ல.
அன்புக்கடலிலே மக்கள் கலந்துவிட்டால்
அவர்களைப் பிரிப்பது சுலபமல்ல.
பாஷைகள் பலவானால் என்ன ?
மதத்தால் மாறுபட்டால் என்ன ?
பார்க்கின்ற பார்வையிலே
பாசத்தைப் படரவிட்டால்
வாழ்கின்ற வாழ்க்கை வசந்தமாகுமே!
தேசத்தில் ஒற்றுமையுணர்வு
தேனாறாய் ஓடுமே!
***

எந்தத்தாயும் தன் குழந்தைகள்
ஒன்றுபட்டு வாழ்வதை
விரும்பிடல் இயல்பு.
பாரதமாதாவும் அதற்கில்லை
பாருங்கள் விதிவிலக்கு.
நம்போல வேற்றுமையிலே
ஒற்றுமைகாண வேறெருதேசம்
இனிப்பிறந்துதான் வரவேண்டுமெனப்
பெருமிதமாய் பேசிப்பூரித்திருந்த
பொழுதுகள் யாவும்-
இன்று கனவுக்காட்சிகளோ எனக்
காற்றோடு காற்றாய்க் காணமல்
போய்க் கொண்டிருக்கின்றன.
***

மனம் வலித்தாலும்
மறுக்க முடியவில்லையே!
கணக்கிட்டால் நாம் களித்திருந்த
கணங்களை விடவும் மனம்
வலித்திருந்த கணங்கள்தாம் அதிகம்.
அவர் தம் மொழியினரே;
ஆயினும் தம்மதம் இல்லையென
அடித்துக் கொள்கிறார்.
அவர் தம் மதத்தவரே;
ஆயினும் தம்சாதி இல்லையென
வெட்டி வீழ்த்த விழைகிறார்
சுட்டுத் தள்ளவும் துணிகிறார்.
***

இன்னாரின் தொழில் இதுவென்றறிய
அன்னாளில் தோன்றியதே சாதி.
திறமையிருந்தால் எந்தத் துறையிலும்-
எவரும் பிரகாசிக்க வாய்ப்புக்கள்
வரிசைகட்டி நிற்கின்ற இந்த
இருபத்தோராம் நூற்றாண்டிலும்
சாதி எனும் சங்கடத்தைப்
பாரமாய்ச் சுமந்து திரியவேண்டுமா ?
நீ இந்தஇனம் நான் அந்தஇனமென
உயர்வுதாழ்வு பார்ப்பது நம்மைநாமே
இழிவுபடுத்துதல் ஆகாதா?
***

'சுதந்திரம் ' என்ற குறிக்கோளுக்காக
அன்று ஒன்றுபட்டு நின்றதால்தான்
'இந்தியா 'வை முழுமையாகப் பெற்றோம்.
இன்று சிதறிவிடுவோமோ என்கின்ற
அச்சம்ஒன்றே மிச்சமாகி நிற்கின்றோம்.
***

சுனாமிநம்மைச் சூறாவளியைப் போலச்
சூரையாடிய போது மொழிம்தம்இனம்
மட்டுமின்றி தேசமும் தாண்டிய
மனிதநேயம் பார்த்து
மலைத்துப்போனோமே!
அந்தநேயம் கண்டு நெஞ்சுருகி
நின்ற யாவரும்-
'மனிதம்' கற்ற மகத்தானநேரமது.
இந்திய இதயங்களிலும் ஈரம்
முற்றிலுமாய் வற்றிவிடவில்லையென
நம்பிக்கை விதைகள் விழுந்ததருணமது.
***

இயற்கையின் சீற்றத்தால்-
இழப்புக்கள் நேர்வது விதி.
மனிதனின் சீற்றத்துக்கு-
மனிதன் பலியாவது வலி.
வந்துபோன சுனாமி மற்றுமொரு
வரலாற்று வேதனையெனக்
குறிப்பெழுதி ஒதுக்கி விடாமல்;
வரும்நாளில் கற்றுணர்ந்த மனிதத்தை
கணநேரமும் மறவாதிருப்போம்.
***

பலிவாங்கும் பழிவாங்கும்
பாவ காரியங்களுக்குப்
பலம் கொடுப்பதில்லை
படை திரட்டுவதில்லையெனப்
பத்திரம் எழுதிடுவோம்.
விவேகத்தை வளர்த்துக் கொண்டால்
விரோத நினைப்புக்கள் விடைபெறும்.
துவேஷத்தைத் துடைத்து விட்டால்
துர்எண்ணங்கள் தோற்று விடும்.
மாசற்ற மனமே பாசம்வளர்க்கும்,
தேசம் தாண்டியும் நேசக்கரம்நீட்டும்.
***

நம் 'மக்கள்சக்தி ' கண்டு
மாபெரும் தேசம் யாவும்
மருண்டு மலைத்து
வியந்து நிற்கின்றன.
நம்உதவியில் உயரஉவந்து
விரைந்து வருகின்றன;
உதவியபடியே நம்மையும்
உயர்த்திக்கொள்ள உன்னதநேரமிது.
***

இன்று உலகமே நம்
ஒவ்வொரு அசைவையும்
கூர்ந்து கவனிக்கிறது.
இழை பிசகினாலும் இந்தியாவுக்கு
இறங்கு முகமே!
வேண்டாமே அந்த வேதனை.
கடந்து வந்த சோதனைகள்
கற்பித்தப் பாடங்கள் போதுமே.
***

வரும்நாளில் இந்தியா வல்லரசாய்
வளர்ந்திடத் தெளிவோடு ஒன்றுபட்டால்..
சாதனைகள் சத்தியமாய் சாத்தியம்,
சிகரத்தை எட்டிடலாம் சீக்கிரம்!
*** *** ***
[படம்: இணையத்திலிருந்து]


23 கருத்துகள்:

  1. எல்லாம் சரி...சோதனைக் காலங்களில்
    இறுகப் பின்னிப் பிணையும் கைகள்,
    சாதாரண காலங்களில் கத்தியும் அரிவாளும் துப்பாக்கியும் எடுப்பது ஏன்?
    காரணம் சோதனை நேரங்களில் எந்த அரசியல்வாதியும் அங்கே வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  2. இயற்கை தரும் சோதனையை விடுங்கள் நானானி! மீதி சோதனைகளுக்குக் காரணகர்த்தாவே அரசியல்வாதிகள்தானே! அப்புறம் எப்படி தலை காட்டுவார்கள்?

    பதிலளிநீக்கு
  3. கவிதை நல்லா இருக்கு.

    நனானி சொன்னதும் சிந்திக்க வேண்டிய விசயம்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி ம.சிவா! நானானிக்கு நான் சொல்லியிருக்கும் பதிலும் சரிதானா பாருங்க!

    பதிலளிநீக்கு
  5. முத்துச்சரம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன், அன்பார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. நானும் அதையே விருப்புகிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி, ஜீவா!

    பதிலளிநீக்கு
  7. படங்கள் கவிதை அனுபவத்தைச் சற்று குறைத்தது!

    நீளமும் அதிகமே!

    என் பதிவுகள் படித்த அனுபவமோ!:))))

    பதிலளிநீக்கு
  8. RL-ம் இதே feed back கொடுத்திருந்தார். எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த format-தான். மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். என் பழைய கவிதைகளையும் முத்துச் சரத்தில் கோர்க்கையில், முடிந்தவரை format மாற்றித் தர நினைத்திருக்கிறேன். அறிவுரைக்கு நன்றி VSK!

    பதிலளிநீக்கு
  9. அன்பின் சகோதரி ராமலஷ்மி,

    உங்க கவிதையும் கருத்தும் மிகவும் அருமை. உங்களைப் போன்ற சிலரால் தான் இந்த தேசத்தில் இன்னும் மனிதம் தழைக்கிறது. கவிதை என்ற பெயரில் காதலைப் பற்றி மட்டுமே பலரும் எழுதுகையில் மனிதநேயம் பற்றி எழுதும் உங்களுக்கு என் மனமார்ந்த சல்யூட்!

    பதிலளிநீக்கு
  10. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அப்துல்லா. மனித நேயம் மரித்துப் போகாதிருக்க எல்லா கடவுள்களையும் பிரார்த்திப்போம்!

    பதிலளிநீக்கு
  11. அற்புதமான மனித நேயம் கொண்ட ஆழமான கவிதை. கொஞ்சம் நீளமும் கூட :)) நானும் இந்த சப்ஜெக்ட் இதுவரை கையாண்டதில்லை, இறங்கிப் பாரு என்று தோன்ற வைத்துவிட்டது உங்கள் பதிவு :)))))

    பதிலளிநீக்கு
  12. சதங்கா (Sathanga) said...
    அற்புதமான மனித நேயம் கொண்ட ஆழமான கவிதை.

    நன்றி சதங்கா.

    //கொஞ்சம் நீளமும் கூட :))//

    ஆமாம் பொறுமையைச் சோதிக்கும் நீளம்தான். பலரும் சுட்டிக் காட்டியதே. அதனால்தான் எனது பழைய கவிதைகளை format சற்று மாற்றியே வலையேற்றினேன். (உதா:கல்விச் சந்தை). இனி நீளத்தைக் குறைப்பதில் கவனம் கொள்கிறேன்.

    //நானும் இந்த சப்ஜெக்ட் இதுவரை கையாண்டதில்லை, இறங்கிப் பாரு என்று தோன்ற வைத்துவிட்டது உங்கள் பதிவு :)))))//

    இறங்கலாமே சதங்கா.ஆங்காங்கே மனித நேயத்துக்காக ஒலிக்கின்ற குரல்களிலே நமது குரலும் (ஓங்கி ஒலிக்கா விட்டாலும்) ஒரு ஓரத்திலாவது கேட்கட்டுமே!

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான கவிதை அக்கா,

    நேர்த்தியான வரிகள்!

    //இயற்கையின்
    சீற்றத்தால்-
    இழப்புக்கள்
    நேர்வது விதி.
    மனிதனின்
    சீற்றத்துக்கு-
    மனிதன்
    பலியாவது வலி//

    அற்புதமான வரிகள்!
    நானும் உங்கள மாதிரி நல்லா எழுத முயற்சிக்கிறேன்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  14. @ சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)

    நன்றி சுடர்மணி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. அக்கா! நிதர்சனமான உண்மைகளை எழுதி இருக்கீங்க... :)

    பதிலளிநீக்கு
  16. தமிழ் பிரியன் said...
    //நிதர்சனமான உண்மைகளை எழுதி இருக்கீங்க... :)//

    கசப்பான உண்மைகளும் கூட:(.
    காலம் நல்ல விதமாகக் கனியக் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  17. //சமுத்திரத்தில் சங்கமமாகும்போது
    சகலநதிகளின் சிறப்புச் சரித்திரங்களும்
    சமத்துவமாகி விடுகின்றன.
    ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கிடையே-
    அந்நதிகளின் அமுதநீர் இன்னதென்று
    பிரித்தறிந்திட இயலுகிறதா?//

    இன்றைக்கே முதல் முறையாக வருகிறேன்..

    அருமையான சிந்தனை....

    மேற்கோள் காட்டி பின்னூட்டம் இடுவதாயின்,
    தங்கள் முழு பதிவையுமே நான் மீள்பதிவுதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்..

    வாழ்த்துக்கள்

    உமது வரிகளால்
    வலிகள் மறக்கப்படட்டும்.

    // இன்னாரின் தொழில் இதுவென்றறிய
    அன்னாளில் தோன்றியதே சாதி.

    இருபத்தோராம் நூற்றாண்டிலும்
    சாதி எனும் சங்கடத்தைப்
    பாரமாய்ச் சுமந்து திரியவேண்டுமா ?

    நீ இந்தஇனம் நான் அந்தஇனமென
    உயர்வுதாழ்வு பார்ப்பது நம்மைநாமே
    இழிவுபடுத்துதல் ஆகாதா? //

    சகோதரி,

    இன்றைய மனிதர்கள்
    பட்டு நூலாடையைப் போன்றவர்கள்..
    இவர்கள்
    சாதிக்காற்று வேகமாக வீசியதால்
    தம்மையறியாமலேயே
    முட்களிலே விழுந்தவர்கள் - ஆம்
    முட்காடுகளிலே விழுந்தவர்கள்..

    இவர்களை பிரித்தெடுப்பதென்பது
    இலேசுப்பட்டதல்ல !
    பட்டும் கிழியக் கூடாது - முட்கள்
    பட்டும் விடக் கூடாது !

    கவனத்துடன் நாம்
    பிரிக்க வேண்டும் !
    முட்காட்டினை நாம்
    அழிக்க வேண்டும் !

    கருவேல முட்காடு
    காலளவு இருந்தால் போதும்
    காற்றும் மழையும்
    ஒருமுறை வந்தாலும்
    கழுத்து வரை வளர்ந்து விடும் ! -
    கரு முட்கள் குத்தி விடும்..

    எனவே

    கருவேலங்காட்டினை நாம்
    வேரோடு அழிப்பது போல்
    கசப்பான சாதிக் காட்டையும்
    அடியோடு அழித்திடுவீர் -
    அத்தனையும் கொளுத்திடுவீர் !

    "சாதி என்ற அரக்கனுக்குச்
    சாவு மணி அடித்தால்
    கோடானு கோடி மக்கள்
    கோயில் மணி அடிப்பார் "

    நேரம் இருக்கையில் என் பதிவுகளை ஒரு பார்வையிடுங்கள்...

    நன்றி

    அன்புடன்

    ஈ ரா

    http://www.padikkathavan.blogspot.com

    பதிலளிநீக்கு
  18. @ஈ.ரா

    //பட்டும் கிழியக் கூடாது - முட்கள்
    பட்டும் விடக் கூடாது !//

    அருமையாய் சொல்லி விட்டீர்கள் அழகுத் தமிழில் விவரமாய் தங்கள் கருத்தை. தங்கள் முதல் வருகைக்கும் சிந்தனைப் பகிர்வுக்கும் நன்றி ஈ.ரா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  19. //இன்னாரின் தொழில் இதுவென்றறிய
    அன்னாளில் தோன்றியதே சாதி.
    திறமையிருந்தால் எந்தத் துறையிலும்-
    எவரும் பிரகாசிக்க வாய்ப்புக்கள்
    வரிசைகட்டி நிற்கின்ற இந்த
    இருபத்தோராம் நூற்றாண்டிலும்
    சாதி எனும் சங்கடத்தைப்
    பாரமாய்ச் சுமந்து திரியவேண்டுமா ?
    நீ இந்தஇனம் நான் அந்தஇனமென
    உயர்வுதாழ்வு பார்ப்பது நம்மைநாமே
    இழிவுபடுத்துதல் ஆகாதா?
    //

    //சமுத்திரத்தில் சங்கமமாகும்போது
    சகலநதிகளின் சிறப்புச் சரித்திரங்களும்
    சமத்துவமாகி விடுகின்றன.
    ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கிடையே-
    அந்நதிகளின் அமுதநீர் இன்னதென்று
    பிரித்தறிந்திட இயலுகிறதா?
    //

    எனக்குப் பிடித்த வரிகள் ராமலக்ஷ்மி. தேசப் பற்று அவசியம். அதை விட மனிதப் பற்று அவசியம்.

    மிக நல்ல கருத்து. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. Shakthiprabha said...

    // தேசப் பற்று அவசியம். அதை விட மனிதப் பற்று அவசியம்.//

    உண்மைதான் ஷக்தி. மனிதப் பற்று இருந்தாலே உலகில் அமைதியும் ஒற்றுமையும்தான் ஓங்கிடுமே.

    // மிக நல்ல கருத்து. வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வளர்ந்திடத் தெளிவோடு ஒன்றுபட்டால்..
    சாதனைகள் சத்தியமாய் சாத்தியம்,

    எப்படி நம் மக்களை தெளிவு படுத்த?

    தொலைகாட்சியில் முகம் தெரியவேண்டும் என்பதற்காகவே நடிகர்களின் படங்களுக்கு
    இந்த பாழாய்ப்போன இந்த கூட்டத்தை!

    நானும் நெல்லை காரன்தான்.

    பதிலளிநீக்கு
  22. @ Dominic RajaSeelan,

    நெல்லையா நீங்கள்? மகிழ்ச்சி!

    ஒன்றுபடும் கனவு ஆதங்கமாகவே நின்றுவிடுமோ என ஐயமாகவே உள்ளது! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin