திங்கள், 30 மே, 2011

சவாலே சமாளி.. பட்டிமன்றம் - மேடைப்படங்கள் (பாகம் 1)

லைகள், அதில் ஈடுபடுவோர் ரசிப்போர் இருசாராருக்கும் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தருபவை. சென்ற வருடம் ரசிக்கக் கிடைத்த சில [இசை, நடனம், பட்டிமன்றம்] நிகழ்வுகளைப் பற்றியும் அவற்றைக் காட்சிப் படுத்திய அனுபவம் பற்றியும் ரொம்பத் தாமதமாக... :)!

மேடைப்படங்கள் எடுப்பது சற்றே சிரமமானது. பெரிய நிகழ்வுகளில் மேடை முன்னே நடக்கும் அனுமதி இருக்காது. மிக அருகில் சென்று எடுக்க இயலாது. இருந்து இடத்திலிருந்து எடுக்கையில் முன் வரிசையில் இருப்பவர் தலைகள் ஃப்ரேமுக்குள்ளே வரக் கூடாது. இரவுக் காட்சிகளாக இருப்பின் பாயிண்ட் & ஷுட்(P&S) காமிராவில் அத்தனை பிரமாதமான ரிசல்ட் கிடைக்குமென எதிர்பார்க்க இயலாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் செய்கிற பரிசோதனை முயற்சிகள், தவறுகளில் கிடைக்கும் பாடங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவுகின்றன. எடுத்த படங்கள் சில வேளைகளில் சரிவராது போனால் கூட, . “அடடா இது நமக்கு சரிப்படாது” என சோர்ந்து ஒதுங்கிப் போகாமல் தவறுகளை ஆராய்ந்து திருத்திக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

பட்டி மன்றம்:


பேச்சுக்கலையை தமிழ்நாட்டில் வளர்ப்பவை அரசியல் மேடைகளா பட்டிமன்றங்களா என ஒரு பட்டிமன்றமே நடத்தி விடலாம். 1987-ல் என நினைக்கிறேன். தூர்தர்ஷனின் தமிழ் ஒளிபரப்பு தமிழகம் எங்கும் தெரிய ஆரம்பித்த காலத்தில்தான் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றங்கள் அறிமுகமாயின. ஆரம்பக் காலத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் வெகுவிரைவில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்புகளில் (எனக்கு) ஈர்ப்பு இல்லாததாலும், சிலநேரங்களில் ஓரணியில் இருக்க நேர்ந்து விட்ட காரணத்துக்காக விடாப்பிடியாக தவறான கருத்துக்களை வலியுறுத்துவது(விதண்டா வாதம்?) போன்ற தோற்றங்களைத் தந்ததாலும் நாட்டம் குறைந்து பட்டிமன்றங்களைப் பார்ப்பதேயில்லை நான். இதனால் இக்கால பேச்சாளர்கள் பற்றியும் அதிகம் அறிந்திருக்கவில்லை.

அப்புறமாக வந்த விஜய் டிவியின் ‘நீயா நானா’ கலந்துரையாடல் புதுமையாகவும் அருமையாகவும் தோன்றியது. தொடக்க ஜோர் அதிலும் கொஞ்ச கொஞ்சமாய் தேய்ந்து போனது. உறவு சார்ந்த தலைப்புகளில் குடும்ப நபர்களுக்குள்ளே பகையை உண்டு பண்ணும் அளவுக்கு நிகழ்ச்சிகள் செல்ல, கலந்து கொள்பவர்களும் ‘என்ன பேசுகிறோம்’ எனும் விவஸ்தையின்றி எதையெதையோ பேசுவது கண்டு ஏற்பட்ட அயர்ச்சியில் அதையும் நிறுத்தி விட்டேன். எப்போதேனும் தாம் கலந்து கொள்வதாக பதிவர்கள் அறிவிக்கையில் மட்டும் பார்க்கிறேன் இப்போது:)!

கடந்த வருடம் ஜூலை இரண்டாவது ஞாயிறு மாலை, பெங்களூர் செளடையா அரங்கில் சன் டிவியின் ‘கல்யாண மாலை’ பட்டிமன்றமும் படப்பிடிப்பும் நடக்கவிருப்பதாகவும் வர விருப்பமா எனக் கேட்டும் அழைப்பு விடுத்தார் தோழி ஷைலஜா. மல்லேஷ்வரத்தில் வயலின் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த அரங்கு என் இல்லத்திலிருந்து அதிக தொலைவில் இல்லை என்பதால் மட்டுமின்றி, நேரில் பட்டிமன்றம் பார்த்ததில்லை என்கிற ஆர்வத்தாலும் நண்பர்களை சந்தித்த மாதிரியும் ஆயிற்று என்பதாலும் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

அவ்வப்போது பெங்களூரில் இலக்கியக் கூட்டம் நடத்தும் ஐவரில் ஒருவர் (ஷக்தி ப்ரபா) தனக்குப் பிறந்தநாள் எனப் பின் வாங்கிவிட, திருமால் மற்றும் ஜீவ்ஸ் உள்ளிட்ட நால்வர் ‘பேரணி’(?) சரியான நேரத்தில் அரங்க வாயிலில் ஆஜர் ஆனது! மூன்றாம் வரிசையில் இருக்கைகளைத் தேடி அமர்ந்து கொண்டது.

கூட்டணியின் இரண்டு புகைப்படக்காரர்களும் தத்தமது காமிராக்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தோம். லென்சுகளை அடிக்கடி கழற்றி மாற்றிப் போட்டு, ஜூம் செய்து படங்களை எடுத்துக் கொண்டிருந்தார் வல்லுநர். சலங்கை ஒலி கமல், ஜெயப்ரதா எடுத்த படங்களைப் பார்த்து தன்னுடைய காமிராவை ஒளித்து வைத்தது போலன்றி, அசராமல் என் சோனி W80-யில் சுட்டுத் தள்ளினேன். பின்னே, தன்னம்பிக்கையே என் தாரக மந்திரம் அல்லவா:)? காமிராவின் அதிக பட்ச ஜூம்(zoom) ஒத்துழைத்த அளவுக்குக் கிடைத்த படங்களே இங்கே. எப்படி வந்துள்ளன என்பதை உங்கள் கருத்துக்கே விடுகிறேன்.

வொயிட் பாலன்ஸும் காமிராவின் இன்னபிற வசதிகளும்:


ஒளிக்கு ஏற்ப white balance-யை மாற்ற வேண்டும் என்பதை இப்போது SLR-ல் மறக்காமல் கவனிக்கும் எனக்கு P&S[Point and shoot]-ல் அந்த வசதி உண்டு எனும் அடிப்படை கூடத் தெரியாது இருந்திருக்கிறது அப்போது! அதை சொல்லித் தந்தார் வல்லுநர். வரவேற்புரை, குத்துவிளக்கேற்றும் வைபவம் என ஆரம்பத்தில் எடுத்தவற்றை விட வொயிட் பாலன்ஸ் அட்ஜஸ்ட் செய்தபின் எடுத்த படங்கள் கூடுதல் தெளிவாக இருந்தன.

இதை நீங்களே P & S-ல் பரிசோதித்துப் பார்க்கலாம். சாதாரணமாக auto mode-ல் வைத்து எடுப்பதற்கும் Program mode-க்கு மாறிக் கொண்டு வீடியோ வெளிச்சத்துக்கு ஏற்ப [use under incandescent light or video lights எனும் குறிப்போடு குண்டு பல்பு படம் போட்டிருக்கும் கவனியுங்கள்.] செட் செய்து எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் கிடைப்பதை. படங்கள் துல்லியமான விவரங்களுடன் கிடைக்கும். அது போல வெள்ளை ஒளி [white fluorescent light], சூரிய வெளிச்சமெனில் அதற்கேற்ப white balance-யை மாற்றிடுங்கள்.

நமது பதிவர்கள் பலரும் தொடர்ந்து ஏதேனும் நிகழ்வுகளுக்கு சென்று படமெடுத்து பதிந்தபடியே இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கேனும் இக்குறிப்பு பயனாகலாம்.

தவிரவும், எப்போதுமே நமது காமிராவில் தரப்பட்டுள்ள பலதரப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள். வேகக் காட்சிகளுக்கு Action or Sports, குறைந்த ஒளியில் Night மற்றும் ISO, இயற்கை காட்சிகளின் வண்ணங்களை எடுப்பாகக் காட்ட Landscape, பொருட்களை வெகு அருகாமையில் எடுக்க macro இப்படியாக..

இனி பட்டிமன்ற மேடைக்கு செல்வோமா?

குடும்பமா.. பணியிடமா..:


அன்றைய தலைப்பு, இன்றைய வாழ்வில் சவாலாக இருப்பது குடும்பமா பணியா என்பதே. காலத்துக்கேற்ற தலைப்புதான். குடும்பம்தான் என்று வாதிட முறையே மென்பொருள், பத்திரிகை மற்றும் அக்கவுண்ட்ஸ் துறைகளைச் சார்ந்த மூவர். பணியிடம்தான் என்று வாதிட மென்பொருள், அரசுப்பணி மற்றும் வ்ங்கித் துறை சார்ந்த மூவர்.

1. ஆரம்பமாகிறது பட்டிமன்றம்
அறிவிக்கப்பட்ட சரியான நேரத்தில்..


2. குடும்பம்-சவாலே சமாளி
நகைச்சுவையாகப் பேசித் தன் கருத்துக்களை முன் வைக்கிறார் அணித் தலைவர்.

சிரிக்கிற யுவதியை வல்லுநர் எப்படி அழகாய் படம் பிடித்துப் பதிந்துள்ளார் என நீங்களே பாருங்கள்: http://www.flickr.com/photos/iyappan/4960758285/in/photostream
ஃப்ளிக்கர் தளம் சிலருக்கு எளிதாகத் திறப்பதில்லை ஆதலால் படம் இங்கேயும்:
படம்#ஜீவ்ஸ்அசந்து மறந்து இதற்கான பாராட்டை என் கணக்கில் யாரும் டெபாசிட் செய்து விடக் கூடாதென்பதால் வித்தியாசப்படுத்த சிறிய அளவில் பதிந்துள்ளேன்:)!

இந்த அளவுக்கு விருப்பத்துக்கு ஏற்றவாறு வொயிட் பாலன்ஸ் அளவுகளை பாயிண்ட் அண்ட் ஷூட்டுகளில் மாற்ற இயலாதுதான். அதே நேரம், ஒரே மேடையின் ஒரே சமயப் படங்களில் காணக் கிடைத்த ஒளி வேறுபாடு வொயிட் பாலன்ஸின் அவசியத்தை உங்களுக்கு உணர்த்தும். எனது காமிராவில் நான் அட்ஜஸ்ட் செய்யாமல் இருந்திருந்தால் படங்கள் இப்போது உள்ளதைவிடவும் அதிகமாய் மஞ்சள் பூசிக் குளித்திருந்திருக்கும்.

3. பணியிடமே பயங்கர சவால்
முஷ்டியை மடக்கி வாதிடுகிறார் எதிரணித் தலைவர்


4. நடுவராக பாரதி பாஸ்கர்
தீர்ப்பு வழங்கும் திண்டாட்டத்தில்..


பட்டிமன்றங்கள் பார்த்ததில்லை என்று சொன்னேனே. ஆக, பிரபல பேச்சாளரான பாரதி பாஸ்கரை டிவியில் அன்றி அங்குதான் முதன் முறை பார்த்தேன். பேச்சையும் கேட்டேன். வாதங்களுக்கு ஏற்ப மிகச் சரளமாகவும் மென்மையானதொரு ஆளுமையுடனும் நகைச்சுவை மிளிரப் பேசி வியக்க வைத்தார். மொத்தத்தில் இருபக்கத்தினருமே வீண் தர்க்கங்கள் ஏதுமின்றி ரசிக்கத்தக்க நியாயமான பதில்களைத் தந்து அவரவர் கருத்துக்களை அழுத்தமாகப் பேசி முடித்தது சிறப்பு.

கல்யாண மாலை பல ஊர்களிலும் நடத்தி வரும் பட்டிமன்றங்களில் அந்தந்த ஊரைச் சேர்ந்த பேச்சாளர்களையும், புதியவர்களையும் ஊக்கம் தந்து மேடையேற்றி வருவதாகவும் தெரிய வந்தது. பெங்களூரிலிருந்து இரண்டு கட்சிக்கும் ஒவ்வொருவரைத் தேர்வு செய்து தர ஷைலஜாவின் உதவி நாடப்பட, அவர் நம் பதிவர்களை முன் நிறுத்த விரும்ப, குடும்பச் சுமையால் அம்பியும், பணிச் சுமையால் ஜீவ்ஸும் தேர்வுக்கு சென்னை செல்ல இயலாமல் வாய்ப்பைத் தவற விட்டு ஷைலஜாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். நாமும் பதிவர்களை ‘உலகெங்கும்’ [அதிர அதிர சொல்லிக்கணும்] ஒளிபரப்பாகும் நிகழ்வு மேடையில் காணும் வாய்ப்பினை இழந்தோம்!

பார்வையாளர் கூட்டத்திலிருந்த எங்களை பளிச்சுன்னு படமெடுத்து பத்து வார ஒளிபரப்பிலும் தோன்றச் செய்த கேமிரா மேனை நான் பளிச்சுன்னு புடிச்ச படம்:)!


5. தொழில் பக்தி

செய்யும் தொழிலே தெய்வம்
சொல்லாமல் சொல்லுகிறது
காமிராவை அலங்கரிக்கும் பூச்சரம்.

பட்டிமன்றத்தின் முடிவில் நடுவர் அளித்த தீர்ப்பு இருக்கட்டும் ஒரு பக்கம். உங்கள் பார்வையில், இன்றைய சூழலில் அதிக சவாலாக இருப்பது பணியிடமா குடும்பமா?


[இசை, நடனம்- மேடைப்படங்கள். அடுத்த பாகத்தில் அல்லது இரண்டு பாகங்களாக விரைவில்..:)]

*** ***

25 கருத்துகள்:

  1. >>பெங்களூரிலிருந்து இரண்டு கட்சிக்கும் ஒவ்வொருவரைத் தேர்வு செய்து தர ஷைலஜாவின் உதவி நாடப்பட, அவர் நம் பதிவர்களை முன் நிறுத்த விரும்ப, குடும்பச் சுமையால் அம்பியும், பணிச் சுமையால் ஜீவ்ஸும் தேர்வுக்கு சென்னை செல்ல இயலாமல் வாய்ப்பைத் தவற விட்டு ஷைலஜாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். நாமும் பதிவர்களை ‘உலகெங்கும்’ [அதிர அதிர சொல்லிக்கணும்] ஒளிபரப்பாகும் நிகழ்வு மேடையில் காணும் வாய்ப்பினை இழந்தோம்!

    ஹா ஹா நல்ல வேளை நாங்க தப்பிச்சோம்

    பதிலளிநீக்கு
  2. பாரதி பாஸ்கர் தடுமாற்றம் இல்லாமல் கேமரா பயம் இல்லாமல் தெளீவான பேச்சுக்கு சொந்தக்காரர்

    பதிலளிநீக்கு
  3. >>‘என்ன பேசுகிறோம்’ எனும் விவஸ்தையின்றி எதையெதையோ பேசுவது கண்டு ஏற்பட்ட அயர்ச்சியில் அதையும் நிறுத்தி விட்டேன்.

    உண்மை தான்.. கேமரா நம்மை கவனிக்கிறது,. எதையாவது பேசி கவன ஈர்ப்பு செஞ்சா போதும் என்னும் முனைப்பு தெரிகிறது அவர்கள் முகத்திலே

    பதிலளிநீக்கு
  4. >>இன்றைய சூழலில் அதிக சவாலாக இருப்பது பணியிடமா குடும்பமா?

    பணி இடமே

    பதிலளிநீக்கு
  5. காலம் கடந்த பதிவாக இருந்தாலும் சிறப்பாக உள்ளது. கல்யாணமாலை ஒளிப்பரப்பான சமயத்தில் சொல்லியிருந்தால் நாங்களும் பார்த்திருப்போமே!

    படம் எடுப்பதற்கு தங்களின் ஆலோசனைகள் சிறப்பாக உள்ளது.

    //இன்றைய சூழலில் அதிக சவாலாக இருப்பது பணியிடமா குடும்பமா?//

    குடும்பமே....
    பணியிடத்தில் பிரச்சினைகள் என்றால் வேறு இடமோ அல்லது வேறு பணிக்கு சென்று விடலாம்.
    குடும்பத்தில் பிரச்சினை என்றால் உறவுகளை மாற்ற முடியுமா?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. போட்டோக்கள் எல்லாமே நன்றாகவே எடுக்கப்பட்டுள்ளன. பாரதி பாஸ்கர் நல்லதொரு மிகச்சிறந்த பேச்சாளர் தான்.

    //இன்றைய சூழலில் அதிக சவாலாக இருப்பது பணியிடமா குடும்பமா?//

    பணியாற்றும் வரை : பணியிடம்
    ஓய்வு பெற்ற பின் : குடும்பம்

    பதிலளிநீக்கு
  7. //பார்வையாளர் கூட்டத்திலிருந்த எங்களை பளிச்சுன்னு படமெடுத்து பத்து வார ஒளிபரப்பிலும் தோன்றச் செய்த கேமிரா மேனை நான் பளிச்சுன்னு புடிச்ச படம்:)!//

    ஆஹா.. அப்பவே சொல்லியிருக்கலாமே.. சூப்பர் :-)

    பதிலளிநீக்கு
  8. புகைப்படங்கள் அருமை. பாரதிபாஸ்கர் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர். எழுத்தாளரான நீங்கள், சக எழுத்தாளரை சந்தித்தில் பெற்ற மகிழ்ச்சியில், அவரை வெகு அழகாக படம் எடுத்துவிட்டீர்கள் போலும்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல புகைப்படங்களுடன் புகைப்படக்கலை சார்ந்த நுணுக்கங்களையும் சேர்த்து பட்டிமன்றச் சுவையோடு பகிர்ந்துள்ளீர்கள்... தொடரட்டும் உங்களின் சுறு....சுறுப்...பான..... பகிர்தல்கள்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. அருமையான தகவல்கள் அக்கா.

    படங்கள் ப்ரமாதம்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல புகைப் படங்கள். பட்டிமன்றங்கள் போர் அடித்துதான் விட்டன. ஆனாலும் ராஜா, பாரதி பாஸ்கர் பேச்சுகள் சுவையாக இருக்கும் என்பதால் தவற விடுவதில்லை!. பாரதி பாஸ்கர் எழுதிய புத்தகம் ஒன்று பற்றி விமர்சனம் ஒன்று சமீபத்தில் படித்தேன். (வழக்கம் போல) வாங்க வேண்டும்! விகடன் பிரசுரம் என்று ஞாபகம்.
    குடும்பமா பணியிடமா என்பது அவரவர் மன முதிர்ச்சியையும், அவரவர்க்கு (இரண்டு இடங்களிலும்) வாய்க்கும் துணையையும் பொறுத்தது!!

    பதிலளிநீக்கு
  12. சி.பி.செந்தில்குமார் said...
    //ஹா ஹா நல்ல வேளை நாங்க தப்பிச்சோம்//

    அடுத்த வாய்ப்பு உங்களுக்கே:)!

    //பாரதி பாஸ்கர் தடுமாற்றம் இல்லாமல் கேமரா பயம் இல்லாமல் தெளீவான பேச்சுக்கு சொந்தக்காரர்//

    ஆம். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு
  13. அமைதி அப்பா said...
    /காலம் கடந்த பதிவாக இருந்தாலும் சிறப்பாக உள்ளது. கல்யாணமாலை ஒளிப்பரப்பான சமயத்தில் சொல்லியிருந்தால் நாங்களும் பார்த்திருப்போமே!/

    நிகழ்வில் பங்கு பெற்றிருந்தால் சொல்லியிருந்திருக்கலாம். பார்வையாளர் கூட்டத்தில்தானே இருந்தோம்:)!

    /படம் எடுப்பதற்கு தங்களின் ஆலோசனைகள் சிறப்பாக உள்ளது./

    நன்றி அமைதி அப்பா.

    ****//இன்றைய சூழலில் அதிக சவாலாக இருப்பது பணியிடமா குடும்பமா?//

    குடும்பமே....
    பணியிடத்தில் பிரச்சினைகள் என்றால் வேறு இடமோ அல்லது வேறு பணிக்கு சென்று விடலாம்.
    குடும்பத்தில் பிரச்சினை என்றால் உறவுகளை மாற்ற முடியுமா?//****

    பளிச் பதில்:))!

    பதிலளிநீக்கு
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ***/நல்ல பதிவு. போட்டோக்கள் எல்லாமே நன்றாகவே எடுக்கப்பட்டுள்ளன. பாரதி பாஸ்கர் நல்லதொரு மிகச்சிறந்த பேச்சாளர் தான்.

    //இன்றைய சூழலில் அதிக சவாலாக இருப்பது பணியிடமா குடும்பமா?//

    பணியாற்றும் வரை : பணியிடம்
    ஓய்வு பெற்ற பின் : குடும்பம்/***

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. "உழவன்" "Uzhavan" said...
    ***//பார்வையாளர் கூட்டத்திலிருந்த எங்களை பளிச்சுன்னு படமெடுத்து பத்து வார ஒளிபரப்பிலும் தோன்றச் செய்த கேமிரா மேனை நான் பளிச்சுன்னு புடிச்ச படம்:)!//

    ஆஹா.. அப்பவே சொல்லியிருக்கலாமே.. சூப்பர் :-)/***

    நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  16. தமிழ் உதயம் said...
    //புகைப்படங்கள் அருமை. பாரதிபாஸ்கர் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர். எழுத்தாளரான நீங்கள், சக எழுத்தாளரை சந்தித்தில் பெற்ற மகிழ்ச்சியில், அவரை வெகு அழகாக படம் எடுத்துவிட்டீர்கள் போலும்.//

    நன்றி தமிழ் உதயம். ஆம், அவரது கதைகள் வாசித்துள்ளேன்:)!

    பதிலளிநீக்கு
  17. குமரி எஸ். நீலகண்டன் said...
    //நல்ல புகைப்படங்களுடன் புகைப்படக்கலை சார்ந்த நுணுக்கங்களையும் சேர்த்து பட்டிமன்றச் சுவையோடு பகிர்ந்துள்ளீர்கள்... தொடரட்டும் உங்களின் சுறு....சுறுப்...பான..... பகிர்தல்கள்... வாழ்த்துக்கள்//

    எங்கே சுறு..சுறு..:)? ரொம்ப தாமதமான பகிர்வு. ஆயினும் இப்போது சுறுசுறுப்பாய் தொடரை முடித்து விட்டேன். நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  18. சுசி said...
    //அருமையான தகவல்கள் அக்கா.

    படங்கள் ப்ரமாதம்.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம். said...
    //நல்ல புகைப் படங்கள். பட்டிமன்றங்கள் போர் அடித்துதான் விட்டன. ஆனாலும் ராஜா, பாரதி பாஸ்கர் பேச்சுகள் சுவையாக இருக்கும் என்பதால் தவற விடுவதில்லை!. பாரதி பாஸ்கர் எழுதிய புத்தகம் ஒன்று பற்றி விமர்சனம் ஒன்று சமீபத்தில் படித்தேன். (வழக்கம் போல) வாங்க வேண்டும்! விகடன் பிரசுரம் என்று ஞாபகம். //

    அப்படியா? தலைப்பு அறிந்தால் சொல்லுங்கள். நானும் வாங்குகிறேன்.

    //குடும்பமா பணியிடமா என்பது அவரவர் மன முதிர்ச்சியையும், அவரவர்க்கு (இரண்டு இடங்களிலும்) வாய்க்கும் துணையையும் பொறுத்தது!!//

    உண்மைதான்:)!

    பதிலளிநீக்கு
  20. அமுதா said...
    //nalla padangal matrum thahavalhal//

    நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  21. ஷர்மிளா said...
    //அடுத்த பாகம் எப்பங்க//

    பாகங்கள்... முடித்து விட்டேன்:)! நன்றி ஷர்மிளா தங்கள் முதல் வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  22. தமிழ்மணம், இன்ட்லி திரட்டிகளில் வாக்களித்த, buzz, fb-யில் பதிவை விரும்பியிருந்த நட்புகளுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin