சென்ற வருடம் சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலையும், பெங்களூரில் திருவள்ளுவரின் சிலையும் நிறுவப்பட்டதைப் பாராட்டும் வண்ணமாக 13 ஆகஸ்ட் 2010 அன்று கன்னட மற்றும் கலாச்சாரத் துறை அகில இந்திய மொழி நல்லிணக்க நாளைக் கொண்டாடியது. பெருமளவில் அண்டை மாநிலங்களிலிருந்து எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலந்து கொண்ட அவ்விழா பேசப்பட்ட இலக்கிய நிகழ்வாக அமைந்து போனது.
இலக்கியத்தின் மூலமாகவும் நாட்டு மக்களை இணைத்திட முடியுமென்கிற நம்பிக்கை தந்த மகிழ்ச்சியில் மீண்டும் நேற்று 13 ஆகஸ்ட் 2011 பெங்களூருவின் “கன்னட பாவன நயனா” அரங்கில் ‘அகில இந்திய மொழி நல்லிணக்க நாள்’ அனுசரிக்கப் பட்டது.
#1 விருந்தாளிகளை வரவேற்கிறது கெம்பகெளடா மண்டபத் தூண்:
[நிகழ்வு அரங்கிலிருந்து சற்று தொலைவில் உள்ளது.]‘கலாச்சாரப் பரிமாற்றக் கருத்தரங்கு’ காலையிலும், ‘பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பு’ இடைவேளைக்குப் பிறகும் நடைபெற்றன.
தமிழ் மொழி சார்பாக கவிஞர் மதுமிதா கலந்து கொண்டு உரையாற்றினார்.
#2 மதுமிதா

மொழியும் இலக்கியமும் குறித்து அவர் முன் வைத்த கருத்துக்களின் சுருக்கம்:
“எல்லரிகி நமஸ்காரா. மனிதர்கள் தங்களுக்குள் கருத்துக்களையும், உணர்வுகளையும் பரிமாறிக்கொள்ள மொழி மிகச் சிறந்த சாதனம். இலக்கியம் என்பது ஆரம்பத்தில் மனிதர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பாடல்கள் உருவில் இருந்தன. வேதங்களையும், இதிகாசங்களையும் போன்று தாலாட்டு, விழாக்கால பாடல்கள் போன்றவையும் எழுத்து வடிவில் இல்லாது, செவி வழியாகத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள்தான்.
இன்று அவற்றில் பல எழுத்துவடிவம் பெற்று விட்டன. சதகங்கள் என்றால் 100 பாடல்களைக்கொண்ட தொகுப்புகள். இலக்கியத்தில் இவை தனிவகை. பத்து பத்தாக நூறு பாடல்களைக் கொண்ட தொகுப்பு பதிற்றுப்பத்து. அகநானூறு, புறநானூறு 400 பாடல்களைக் கொண்டவை. ஐங்குறுநூறு 500 பாடல்களைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணையிலும் நூறு நூறு பாடல்களாக இயற்றப்பட்டுள்ளது. பிற மொழிகளிலும் சதக இலக்கியங்கள் பரவலாக இருக்கின்றன.
சுதந்திர போராட்ட காலத்தில் தேச விடுதலை இயக்கப் பாடல்களை அளித்தவர் சுப்ரமணிய பாரதியார். இது இதற்கு முன்பு இல்லாத தனிவகை இலக்கியம். உரைநடை எழுச்சி 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்தது. புதினம், சிறுகதை, கட்டுரை என அதன் வளர்ச்சி முன்னேறியது. பாரதியார், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்றவர்களைத் தொடர்ந்து இன்றுவரையிலும் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் தமிழுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சரித்திரநாவல்கள் தனிவகையைச் சேர்ந்தவை. நெடுங்கதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும், மரபுக் கவிதைகளும், பின் வந்த புதுக்கவிதைகளும் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கின்றன.
ஆண் எழுத்தாளர்களைப் போன்று பெண் எழுத்தாளர்களும் இன்று வரை சிறப்பாக எழுதிவருகிறார்கள். திருநங்கைகளின் வரிசையில் பார்த்தால் லிவிங் ஸ்மைல் வித்யாவும் தனது சரிதையைத் தமிழில் கொடுத்துள்ளார். அதை டாக்டர் தமிழ்செல்வி கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்புகளை நான் பெரிதும் மதிக்கிறேன். பல மொழிகளின் சிறந்த படைப்புகளை பிற மொழியறியாத தமிழுக்கு கொண்டு சேர்க்கும் சீரிய பணியை அவர்கள் செய்கிறார்கள்.
பிற மொழிகளில் எழுத்தாளர்களுக்கு சிறந்த மரியாதை கொடுக்கிறார்கள். குறிப்பாக கன்னடத்தில் டாக்டர் தமிழ்ச்செல்விக்குக் கிடைத்த கெளரவம் மறக்க இயலாதது. நானும் அவரும் இணைந்து அக்கமகாதேவியின் வசனங்களை இரண்டு வருட உழைப்பில் தமிழில் கொண்டு வந்தோம்.
இங்கே இதற்கு முன்பு வெவ்வேறு மொழிகளில் பேசிய அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிந்தது என்பதே இன்றைய சிறப்பாகக் கருதுகிறேன்.தெரியாத மொழி பேசும் மக்கள் சேர்ந்திருக்கிறோம் என்னும் நினைவை மறந்து இந்த ஒருங்கிணைந்த நாளில் மன ஆழத்திலிருந்து மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர முடிந்தது. சென்ற வருடம் இதே அகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த சர்வக்ஞர், திருவள்ளுவர் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் போன்று இன்று இங்கே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலும் பெரு மகிழ்ச்சியடைகிறேன். தன்யவாதுகலு.”
அவர் உரையாற்றி முடித்ததும் தமிழ் அறிந்த திரு. ராமதாஸ் அவர்கள் கன்னடத்தில் அதை மொழிபெயர்க்க, கூட்டத்தில் பலத்த கரவொலி. தொடர்ந்து திரு. நடராஜன் அவர்கள் அதே உரையை ஆங்கிலத்தில் தர மீண்டும் கரவொலி.
#3 விழாத் தலைவர் திரு ராமதாஸுடன்

#4 அரங்க வாயிலில்

[
முதல் 3 படங்களும் நான் எடுத்தவை. நான்காவதில் மதுமிதாவுடன் நான்.]
இடைவேளையில் எதிர்ப்பட்டவரெல்லாம் அவரைப் பாராட்டியபோது தமிழுக்கும், ஏன் நமக்கும் கிடைத்த பெருமையாகவே மனம் மகிழ்வாக உணர்ந்தது. என்னால் சிறிது நேரமே அங்கிருக்க முடிந்தது. மதியம் அவர் வாசித்த கவிதைக்கும் சிறப்பான அங்கீகாரம் கிடைத்திருக்குமென நம்புகிறேன்.
நாடு அறுபத்து நான்காவது சுதந்திர தினத்தைக் காணவிருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற நல்லிணக்க விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கட்டும்!
ஆழி சேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல், திசை வேறானாலும் மதம் வேறானாலும் மொழி வேறானாலும் இசைந்தால் நம் அனைவரின் சுரமும் ஒன்றாகாதோ? ஆகும்!
அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்!
***