வெள்ளி, 30 செப்டம்பர், 2022

நான் புத்தரைப் பிரார்த்திக்கும் பொழுதுகளில்.. - கோபயஷி இஸா ஜப்பானியத் துளிப்பாக்கள்

இன்று செப்டம்பர் 30, சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்!


1.
நான் புத்தரைப் பிரார்த்திக்கும் பொழுதுகளில் எல்லாம்
கொன்று கொண்டேயிருக்கிறேன்
கொசுக்களை.

2.
பூச்சிகளிலும் கூட
சிலவற்றால் பாட முடிகிறது
சிலவற்றால் முடிவதில்லை.

3.
என் காதருகில் கொசு
என்னை செவிடன் என
நினைக்கிறானா?

4.
மாலை நிலவின் கீழே
இடுப்புவரை துகிலுரிக்கப்பட்டு
நத்தை.

5.
தேம்பி அழாதீர்கள், பூச்சிகளே -
காதலர்களே, நட்சத்திரங்களுக்கும் கூட
பிரிவு நிச்சயம்.

6.
நான் மென்மையாகத் தொடுகின்ற எல்லாமே, 
ஐயகோ
முட்புதரைப் போல் குத்துகின்றன.

7.
குளிர்காலத் தனிமை - 
கேட்டுக் கொண்டிருக்கிறேன், அந்த மாலையில்
மலையில் பொழியும் மழையை.

8.
கடைசி முறை என நினைக்கிறேன்
என் தந்தையின் முகத்திலிருந்து
ஈக்களை ஓட்டுகிறேன்.

9.
நீங்கள் பிறந்ததும் ஒரு குளியல்
நீங்கள் இறந்ததும் ஒரு குளியல்,
என்னவொரு மூடச்செயல்.
*

கோபயஷி இஸா (1763 – 1828) ஜப்பானின் மிகப் புகழ் வாய்ந்த நான்கு ஹைக்கூ கவிஞர்களில் ஒருவர். ஜப்பானின் ஷினானோ பகுதியில் காஷிவபோரோ எனும் ஊரில் பிறந்தவர். கோபயாஷி யடாரோ, கோபயாஷி நொபுயுகி எனவும் அறியப்பட்டவர். இறுதியில் ‘ஒரு கோப்பைத் தேநீர்’ எனும் பொருள் கொண்ட  ‘இஸா’ எனும் புனைப்பெயரை வைத்துக் கொண்டார்.

ஹைக்கூ கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவர் எழுதிய இருபதாயித்திற்கும் மேலான ஹைக்கூ கவிதைகள் இன்றைய நாள் வரையிலும்  ஒரு பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளது. சித்திரங்கள் வரைவதிலும் வல்லவர்.

இஸாவின் தந்தை ஒரு விவசாயி. மூன்று வயதாக இருக்கும் போதே தாயை இழந்தார். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இவர் சந்தித்த இன்னல்களுக்கு ஆரம்பமாக இருந்திருக்கிறது தாயின் மரணம். தந்தை மறுமணம் செய்து கொள்ள, மாற்றாந்தாய் மூலமாக ஒரு சகோதரன் பிறந்தார். இஸா தன் பாட்டியால் வளர்க்கப்பட்டார். இவருக்கு 14 வயதாகையில் அன்பு செலுத்திய பாட்டியும் காலமாகி விட சொந்த வீட்டில் தனிமையாய் உணர்ந்தார். உற்சாகமற்ற சிறுவனாய் ஊருக்குள் வயல்களில் சுற்றித் திரிந்தார். இவரது போக்கு மாற்றாந்தாய்க்குப் பிடிக்காமல் போனது. 15 வயதில் தந்தையால் எடோ நகருக்கு பிழைப்பைத் தேடிக் கொள்ளுமாறு அனுப்பப்பட்டார். 

அடுத்த 10 வருடங்களுக்கு அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றிய சரியான தகவல்கள் இருக்கவில்லை. அதன் பின் ஜப்பானின் பல இடங்களுக்கும் பயணித்து தன் எழுத்தால் புகழ் பெற்றார். 1801_ஆம் ஆண்டு தந்தை காலமான போது சொந்த ஊருக்குத் திரும்பி மாற்றாந்தாய் மற்றும் சகோதரனுடன் தகராறு செய்து சொத்தில் ஒரு பகுதியைப் பெற்றார்.  “ என் தந்தையின் கடைசி நாட்கள்” என  தந்தையைப் பற்றி இவர் எழுதிய டைரிக் குறிப்புகள், “இஸாவின் தந்தையுடைய கடைசி நாட்கள்” என்ற பெயரில் இன்றும் முக்கியப் படைப்பாக அறியப்பட்டு வருகிறது.

இவர் வாழ்க்கையில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோகங்களாக அமைந்து போயின, காஷிவபோரோவில் இவரது முதல் மனைவி மற்றும் 3 குழந்தைகளின் அடுத்தடுத்த மரணங்கள், தோல்வியில் முடிந்த இரண்டாவது திருமணம், வீடு எரிந்து சாம்பலான சம்பவம், மற்றும் மகிழ்ச்சியைத் தராத மூன்றாவது திருமணம்.

இஸாவின் பல கவிதைகள் உலகின் மிகச் சிறிய ஜந்துக்களான கொசுக்கள், வவ்வால்கள், பூனைகள் ஆகியவற்றைப் பற்றியதாக, சோகத்தின் சாயத்தைப் பூசிக் கொண்டவையாக, மனிதர்களின் நடத்தையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துபவையாக இருப்பதைக் காணலாம்.

*

[படங்கள்: இணையத்திலிருந்து.. நன்றியுடன்..]

ஆசிரியர் குறிப்பு மற்றும் துளிப்பாக்கள்.. ஆங்கிலம் வழித் தமிழில்: ராமலக்ஷ்மி

நன்றி சொல்வனம்!

**
தொடர்புடைய முந்தைய பதிவு:
***

6 கருத்துகள்:

  1. எல்லா ஹைக்கூக்களும் மிக அருமை.  குறிபபாக 8, 7,1  கவிஞர் பற்றிய குறிப்புகளும் சுவாரஸ்யம்.+

    பதிலளிநீக்கு
  2. 6வது துளிப்பா நேரிடையாக அவரது துயரத்தின் வலியைச் சொல்வது போலத் தோன்றுகிறது.

    2 & 7: "சோகத்தைச் சாயம் பூசி" துயர அனுபவத்தையும் இனிமையான வார்த்தைகளால் ஆனால் வலியை உணரும் வகையில் உள்ளது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கவிதைகள் நன்றாக இருக்கிறது. கவிதையில் சோகம் இழையூடுகிறதே! என்று பார்த்தால் அவரின் வாழ்க்கையில் நிறைய சோகங்கள்.

    ஆசிரியர் குறிப்பு அவரின் சோகத்தை கூறுகிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin