திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)

#1
ஆங்கிலப் பெயர்: Pelican
றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாகக் கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதைக் கூழைக்கடா எனும் பெயர் வந்ததாகத் தெரிகிறது. Pelecanidae எனும் குடும்பத்தைச் சேர்ந்தது.

#2
உயிரியல் பெயர்: Pelecanus Occidentalis

டை:
4.5 முதல் 11 கி.கி வரை
சிறகுகளின் நீளம்: 2.7 மீ.
மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ
அலகு நீளம்: 22 செ.மீ.
ஆயுட்காலம்: 15 முதல் 25 ஆண்டுகள் வரையிலும்..

#3
வேறு பெயர்கள்:
மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு

கூழைக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை. இவ்வினத்தின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை அண்மித்த இனம் என்ற பிரிவில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (ஐயுசிஎன்) - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.
#4


ந்தியாமற்றும் இலங்கையில் புள்ளிவாய்க் கூழைக்கிடா, டால்மில்டன், பெரிய வெள்ளைக் கூழைக்கடா ஆகிய மூன்று வகை கூழைக்கடாக்கள் காணப்படுகின்றன. போகவும் கூழைக்கடா இனத்திலேயே சிறியதான பழுப்புக் கூழைக்கடா வகையும் உண்டு. இவற்றில் Spot-billed pelican எனப்படும்  புள்ளிவாய்க் கூழைக்கிடா தனது நீண்ட அலகின் இரு பக்கங்களிலும் கறுப்பு புள்ளிகளைக் கொண்டிருக்கும்.

இலங்கையில் எடுத்த புள்ளிவாய்க் கூழைக்கிடாவின் படங்களையே இப்பதிவில் பகிர்ந்துள்ளேன். உயிரியல் பெயரும் அவற்றின் வகைக்கு ஏற்ப மாறும். புள்ளிவாய்க் கூழைக்கிடாவின் உயிரியல் பெயர்  Pelecanus philippensis.

#5

கூழைக்கடா நன்றாக நீந்தக் கூடியது. விண்ணில் தாவிப் பறக்க தொடங்கும்போது, நீரில் அல்லது நிலத்தில் தேவைக்கேற்ற தூரம் ஓடி மேலே விண் நோக்கி சாய்தளப் பாதையில் ஏறுகிறது. விண்ணில் தன்னை சமநிலைப்படுத்தியதும், எந்தவித தடுமாற்றமுமின்றி சீரான சிறகடிப்பில் தலையை இரண்டு தோள்பட்டைகளுக்கு இடையில் இழுத்து வைத்துப் பறக்கும். நீர்நிலைகளை அடையும்போது நேர்கோட்டில் பறந்து வரும். நீரில் இறங்கும்போது வட்டமிட்டு அல்லது சாய்தளமாக இறங்கி சிறிது தூரம் ஓடி பின் சறுக்கி இறங்கும்.

#6

பெரிய உடலும் சிறு கால்களும் கொண்டவை. இவற்றின் சிறப்பம்சம் தொங்கும் பை போன்ற தாடை. மேல் அலகின் நுனி கீழ் நோக்கி வளைந்திருக்கும். முன்பக்கம் கரண்டி போல் அகன்றிருக்கும். இதன் காலின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருப்பதால் நீரில் எளிதாக நீந்தும். உடலிறகுகள் வெள்ளை. ஆனால், சிறகுகளிலுள்ள நீண்ட இறகுகள் கறுப்புநிறம். வாலும் கறுப்புநிறம். சதுரவடிவமான தலையின் மேல் சிகரம் முடிச்சாகக் காணப்படும். இதன் அதிக எடையும், பரந்த உடல் அமைப்பும் விண்ணில் விபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பாகப் பறக்க உதவும் காரணிகளாகும்.

கூழைக்கடாக்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:
*வளர்ந்த நிலையில் வெண்ணிறமாக இருக்கும் பறவைகள் தரையில் கூடு கட்டி வாழ்கின்றன. ஆஸ்த்திரேலிய, தால்மேசிய, வெள்ளைக் கூழைக்கடாக்கள் இவற்றுள் அடங்கும்.
*மற்றொரு வகை வளர்ந்த நிலையில் பழுப்பு நிறம் கொண்டிருக்கும். இவை மரத்தில் கூடு கட்டும். பழுப்புக் கூழைக்கடா, புள்ளிவாய்க் கூழைக்கடா போன்றன இவ்வகையைச் சேர்ந்தன.
*போகவும், பெருநாட்டுக் கூழைக்கடா கடற்புறங்களில் உள்ள பாறைகளில் கூடு கட்டி வாழும்.

தன் முக்கிய உணவு மீன்களாகும். தனியாக அல்லது கூட்டமாக குளங்களில் இரைதேடும். நீருக்கடியில் சுமார் ஓரடி ஆழத்தில் நீந்தி செல்கின்ற மீன்களைக் காணக் கூடிய கூர்மையான கண்களையுடையது. நீருக்கடியில் மீன்களைக் கண்டதும் அலகை நீருக்குள் நுழைத்து பை போன்ற அலகில் மீனை முகர்ந்து பிடிக்கிறது.

#7
“லபக்!”
கூழக்கடாவின் நீண்ட உணவுக் குழலில் இருக்கும் அரைக்கப்பட்ட முழுமையாகச் செரிக்கப்படாத உணவு மீண்டும் வாய்க்குள் கொண்டுவரப்படுகிறது. அந்த உணவைக் குஞ்சுகளுக்குக் கொடுக்கும். கூழைக்கடாக்களால் மீன் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் இவை நோய்வாய்ப்பட்ட மீன்களையே வேட்டையாடுகின்றன.

கூழைக்கடாக்கள் டிசம்பர் மாதத்தில் புளியமரங்கள், பனைமரங்களில் குச்சிகளை வைத்து நடுவில் குழிந்த பெரிய மேடை போன்ற கூட்டைக்கட்டும். கூடுகள் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். கூட்டை பத்து நாட்களில் கட்டி முடித்துவிடும். கூடுகளைக் கட்டுவதற்கு முன்னரே ஆண், பெண் இருபறவைகளும் கூடும். 2 அல்லது 3 முட்டைகள் இடும். ஆரம்பத்தில் வெள்ளைநிறத்தில் இருக்கும் முட்டைகள் நாளாக நாளாக அழுக்கு நிறத்தில் காணப்படும். ஆண்-பெண் இருபறவைகளுமாகச் சேர்ந்து 21 நாட்கள் அடைகாக்கும். குஞ்சுகள் வெளிவந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உணவூட்டும். குஞ்சுகள் முழு வளர்ச்சியடைய ஓராண்டு காலமாகும். கூழைக்கடாக்கள் குஞ்சுகளை தூக்கவரும் பறவைகளை வெறியுடன் தாக்கும்.

தெற்காசியாவில் தென் பாகிஸ்தானிலிருந்து (இந்தியா உட்பட) கிழக்கே இந்தோனேசியா வரை கூழைக்கிடாக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. கூழைக்கடாக்கள் அண்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.
#8

*
தகவல்கள்: விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து சேகரித்தவை.
**
படங்கள்: இலங்கை விகரமகாதேவி பூங்காவில் எடுக்கப்பட்டவை.
***

16 கருத்துகள்:

  1. இந்த பறவை எங்கள் குலதெய்வம் கோவில் ஏரிக்கு வந்து இருந்தது ஒரு முறை அதை படம் எடுத்து என் குலதெயவ பதிவில் பகிர்ந்து இருந்தேன்.

    அதன் விவரங்களை அருமையாக சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது. நான் வெளியிடங்களில் பார்த்ததில்லை. முன்னர் மைசூர் உயிரியல் பூங்காவில் இப்பறவைகள் பலவற்றை மிக அருகாமையில் படமாக்கிப் பகிர்ந்திருக்கிறேன். இந்த முறை இலங்கை ஏரியில் கூழைக்கடா ஒரே ஒரு பறவையே இருந்தது. நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய... அம்மாடி... ஆச்சர்யமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அதன் பறக்கும் ஸ்டைலைப் பார்க்கும்போது "பறவையைக் கண்டான்.. விமானம் படைத்தான்..." பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. நோய்வாய்ப்பட்ட மீன்களையே இவை வேட்டையாடுகின்றன - மனிதனுக்கு வதைவி. மேலும் மீன்கள் நோயுற்றவை என்று கண்டறியும் அறிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பறவைகளைப் பற்றிய பல தகவல்கள் ஆச்சரியமளிப்பவையாக உள்ளன.

      நீக்கு
  5. இலங்கையில் பறவையைக் கண்டதும் காத்திருந்து வெவ்வேறு கோணங்களில் பிடிக்கப்பட்ட படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு படமும் கதை பேசுகின்றன...அத்துனை அழகு..

    பதிலளிநீக்கு
  7. படங்கள் வெகு சிறப்பு. தகவல்கள் தொகுப்பு பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. குறிப்புகளை மிக அருமையாகத் தொகுத்து தந்து இருக்கிறீர்கள். 20 million வருடங்கள் முந்தையது இன்றும் தனது இருப்பைத் தக்கவைத்து இருப்பது என்பது சவாலானது.

    நான் தற்போது புதிய திட்டப்பணிகள் நிமித்தம் Khasab Musandam (Oman) என்கிற பகுதிக்கு மாறுதல் ஆகி வந்துள்ளேன். இது ஒரு சிறிய தீபகற்பம்.இங்கு தற்போது ஆயிரக்கணக்கான கடற் பறவைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன. கடற் பரப்பில் அவை அமர்ந்து உள்ள அழகும் மீனை இலவகமாக பிடிக்கும் திறனும் வியப்பாக உள்ளது. எத்தனை ஆயிரம் பறவைகள்.., அதற்குத் தேவையான மீன்கள்.., இயற்கையின் படைப்பு ஒவ்வொன்றும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. பணி நிமித்த மாறுதல்களால் பல இடங்களில் வசிக்கும் போது கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்கள் அலாதியானதுதான். ஆயிரக் கணக்கான கடற் பறவைகளைக் கண்டு இரசிக்க அருமையான வாய்ப்பு.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin