வியாழன், 7 ஜூன், 2012

அகஸ்டஸின் ‘டீக்கடைச்சூரியன்': மானுட வாழ்வின் மறுபக்கங்கள் - வடக்கு வாசலில்..

ப்படிதான் இருக்க வேண்டும் கவிதை என யாரும் அதை ஒரு வரையறைக்குள் கொண்டு வர இயலாது. கவிதைக்கொரு விதிசெய்வது காற்றைக் கையில் பிடிக்க முயலுவது போல என்பார்கள். பிடிக்க முடிந்து விட்டால் அது காற்று அல்ல. கோட்பாட்டுக்கு உட்பட்டு எழுதினால் அது கவிதை அல்ல. கவிதை குறித்து பலருக்கும் பலவிதமான கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கூறிய கருத்து மனதுக்கு இசைவானதாக இருக்கிறது: “சக்திமிகு உணர்வுகளின் தங்குதடையற்ற வெளிப்பாடே கவிதை”. அப்படியான கவிதைகள் தாமே தமது வேகத்தை வடிவத்தை நீளத்தை நிர்மாணித்து நதியைப் போல் பாய்ந்து வாசகனின் மனமெனும் கடலோடு சங்கமித்து வெற்றி கண்டு விடுகின்றன. அப்படிப் பல்வேறு இதழ்களின் மூலமாக வாசகர் மனங்களைத் தொட்ட, இருபத்தியெட்டு வருடங்களாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கும் கவிஞர் அகஸ்டஸின் இருபத்தைந்து கவிதைகள் அடங்கிய தொகுப்பே ‘டீக்கடைச் சூரியன்’.

முதல் ஆச்சரியமே பின் அட்டைதான். நூலுக்குள் வரவேற்கும் விதமாக, நூலாசிரியர் படத்துடன் அவர் பற்றிய குறிப்புகளோ, படைப்பைப் பற்றிய பாராட்டுகளோ இடம்பெறும் முற்றத்தில் ஒரு கவிதை.., கவனமாக இழைக்கப்பட்ட கவிப்பேழையைத் திறக்க நம் கையில் கிடைத்தத் தங்கச்சாவியாக:
இடுப்புவரை அலையாடி
விளையாடிக் கிடப்பது
கடல்தானென்றால்
கைகளால் விலக்கிக்
கால்களால் முன்னேறி
வெளிவந்து விடலாம்தான்

கடலல்ல
கருங்கற்பாறை
இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க
யோசித்தபடியே டீ குடித்து
பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற
சிற்பியையே
வெறித்துக்கொண்டிருந்தது
தலையிலிருந்து
இடுப்புவரை
செதுக்கவிடப்பட்ட சிலை.


சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’ எனும் அதன் தலைப்பைப் பரபரப்பாகப் புத்தகத்தைப் புரட்டியே அறிய வருகிறோம். ஆதிகாலந்தொட்டு இன்று வரையிலும் தொடரும் அவலமாக அமைந்த ஒரு சூழலை இதை விடச் சிறப்பாக மனதில் உளி கொண்டுப் பதிக்க எவராலேனும் முடியுமா என்றே தோன்றியது.

மனித வாழ்வின் தீராக் காதலாய் அடங்கா வெறியாய் அணை போட இயலா உணர்வாய் இருப்பவற்றுள் முக்கியமானது புகழ் மீதான ஆசை. சிலைகள் புகழின் அடையாளங்கள். வாழ்ந்ததின் மிச்சமாக விட்டுச் செல்ல எண்ணுபவற்றின் உச்சக்கட்ட ஆசையாக இருக்கிறது பலபேருக்கு:
அயராத பேச்சொலியில்
அடங்காத கரவொலியில்
தூக்கம் கலைந்து
அனைத்தும் ஒரு சிலைக்கென்றறிந்து
அச்சிலையின் வாழ்வைக் கனவாக்கி
கட்டியணைத்துக் கிடந்த
கற்பிண்டங்களைத் தட்டிவிலக்கி
மலையிலிருந்து நழுவி
சிற்பியிடம் சென்று நின்றது ஒரு கல்”.

“முதல் சிலையை
தானேதான்
செதுக்கிக் கொள்ளவேண்டும்
சிற்பி செதுக்கி வருவதில்லை
சிலைகளுக்குப் பெயரும் புகழும்

எனத் தொடங்கி வளரும் ‘சிலைகள் வளரும் காலம்’ முச்சந்தியின் முழுச் சிலையொன்றில் முடிகிறது.

சிலைகளைப் படிமங்களாகக் கொண்டு வாழ்வைச் சித்தரிக்கும் இன்னுமொரு கவிதையாக ‘சிலைகள் நகரும் நேரம்’ பேசுகிறது பெருநகரம் ஒன்றின் பசியை:
கீழே
சிறு மணலைக்கூட
உருட்டிக் கல்லாக்கி
உளிகொண்டு செதுக்கி
ஒரு சிலையாக்கிவிடும் பசியுடன்
வாழ்ந்து கொண்டிருந்தது
ஒரு பெரும் நகரம்


யுத்தங்கள் நிறைந்த பூமி இது. வலியோனும் வலியோனும் மோதிக் கொள்ளும் யுத்தங்களை விடவும் எளியோனைத் தன் பலத்தினால் அடக்கியோ நசுக்கியோ வெற்றி பெற்றதாகக் கொக்கரிக்கும் மடையர்களும் கொடூரர்களுமே யுத்தக் குறிப்புகளை அதிகமாக ஆக்ரமித்துக் கிடக்கிறார்கள். கவிஞரின் ‘மகா யுத்தம்’ அதைக் கண் முன்னே கொண்டு வருகிறது. சிலைகளைப் போலவே இன்னொரு படிமமாகப் பலகவிதைகளில் தோன்றுகிற நத்தை இக்கவிதையில்:
சிற்றுடல் இழுத்து வாழ்வதன்றி
வேறேதும் புரியாதிருந்தும்
ஏதோவொன்று தன்மீது
பளிச்சென்று எச்சில் துப்பக்
காத்திருப்பதாய்ப் பயந்து
பயம் பயமென
உடலைக் குறுக்கியதில்
செயலற்றவனின் ஓட்டைச்சுற்றி
கேலியும் கிண்டலும்
முட்புதர்களும் கல்செடிகளும்


வெலவெலத்த நத்தை தன் மேல் படர்ந்த நிழலை யாதென்று அறியாது திகைத்திருந்த வேளையில்,
ஆடாது அசையாது
தூக்கி நிறுத்திய காலால்
பாத நிழலை
நிழற்சிலையென படர்த்திக்
காத்து நின்ற கோபம்
தலைக்குள்ளெரிய
சிறு நத்தையோட்டையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த யானை
சிறுநகர்வு கண்டதும்
வெறியும் வெற்றியுமாய்ப் பிளிறி
நிலத்தோடு அறைந்து மூடியது
அந்தச் சிறு உலகத்தை
”.

விதிக்கப்பட்ட நாள் வரையிலும் பிழைத்துக் கிடக்க வேண்டிய பூமியில் வலியோரைச் சமாளித்துத் தொடர வேண்டியிருக்கிற வாழ்க்கைப்பயணத்தையும் நத்தையின் மூலமாகவே உணர்ந்துகிறது ‘யுத்த முயற்சி’.

காலைத் தேநீரில் ஊதியூதி அந்தச் சூரியனையே குடிக்கிற கவிஞர் எப்படி மலை இறங்குகிறார் பாருங்கள் ‘டீக்கடைச் சூரியன்’ கவிதையில்,
அருவியில் நீர் அள்ளாமல்
காலியாய்த் திரும்பும்
குடத்துக்குள்
சிரிக்கும் காற்றின் சிரிப்பைக்
கேட்டபடியே
”.

றுக்கெனச் சுருக்கமாகச் சொல்லி நகரும் கவிதைகளுக்கு நடுவே சில நீளமான கவிதைகளும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் சொன்னது போலக் கவிதையின் நீளத்தைக் கவிஞனின் உணர்வுகளும் அதன் வேகமுமே தீர்மானித்திருக்கிறது. தனக்காகப் படைக்கிற கவிதைகளில் வாசகருக்கு அயர்வைத் தருமோ போன்ற எண்ணங்கள் கவிஞனுக்கு ஏற்படுவதில்லை.

ஆதியில் வார்த்தை
ஆண்டவனிடம் இருந்தது
அவன் அதை மனிதனில் விதைக்க
முளைத்தது நாக்கு

எனத் தொடங்குகிற முதல் கவிதை ‘வார்த்தைப்பாடு’ம், கடைசிக் கவிதை ‘அஞ்சலி’யும் அப்படியானவை. பல்வேறு பரிமாணங்களில் பாடுபொருளை அடர்த்தியாகக் காட்டியபடி கூட்டிச் செல்லுவதில் இரண்டு கவிதைகளுமே தனித்து நிற்கின்றன.

வார்த்தைப் பாட்டில்,
வாழ்வைச்
சட்டையைப் போல மடித்துக்
கரையில் வைத்துவிட்டு
ஆதிவார்த்தையின்
மாய மெளனம் கேட்கத்
தத்தம் கடவுள்களின் கடலில்
வார்த்தைப் பெருநீச்சலிடுகின்றனர்
சிலர்
”.

அஞ்சலியில்,
ஆயிரமாயிரமாய்
விளக்குகள் எரிந்து கொண்டிருக்க
உன்போன்று மெழுகுவர்த்திகளும்
தேவையற்று எரிந்துகொண்டிருக்க
நீஅணைந்தபோது
உன் குழந்தைகளைச்
சுற்றிமட்டும் இருள் சூழ்ந்தது.


ஆழமான உணர்வுகளை அழுத்தமாகப் பதித்துக் காலத்தால் பேசப்படும் நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர்.
***

விலை ரூ:50; பக்கங்கள்: 71; வெளியீடு: நிலாப் பதிப்பகம்;
விற்பனை உரிமை: வடக்கு வாசல் பதிப்பகம்
[5A/11032,Galli No.9, Sat Nagar, Karol Baug, New Delhi-110005.
vadakkuvaasal@gmail.com ; Ph: 011-25815476,65858656]
*****

ஜூன் 2012 வடக்குவாசலில்:

நன்றி வடக்குவாசல்!

23 கருத்துகள்:

  1. ///சக்திமிகு உணர்வுகளின் தங்குதடையற்ற வெளிப்பாடே கவிதை///

    எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூடிய விளக்கம். "William Wordsworth" கவிதைகள் பள்ளி பாட புத்தகத்தில் மட்டுமே படித்ததுண்டு

    பதிலளிநீக்கு
  2. தனக்காகப் படைக்கிற கவிதையில்.... உண்மைதான். இதில்தான் உண்மையான உணர்ச்சி பூர்வக் கவிதைகள் அல்லது படைப்புகள் கிடைக்கின்றன.

    நல்லதொரு பகிர்வு. எடுத்துக் கொடுத்துள்ள கவிதைகள் சிறப்பைக் காட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  3. இது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. நண்பர் அகஸ்டஸின் இந்தப் புத்தக வாசிப்பு அனுபவத்தினை நானும் எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்....

    வடக்குவாசல் பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள ராமலட்சுமி...


    வடக்குவாசல் அஞ்சலில் நேற்று வந்தது. உங்கள் பெயரைப் பார்த்ததும் வலையில் பார்த்தபெயராக உள்ளதே என்று நினைத்தேன். இருப்பினும் முழுக்க வாசித்தேன். இப்போது உங்கள் வலைப்பக்கம் வந்தால் அது சரியாக இருக்கிறது. தேவையான செய்திகளோடு கூடிய விமர்சனம் உங்களுடையது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதைகள்
    மிக மிக அருமையான அறிமுகம்
    நல்ல நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. //“சக்திமிகு உணர்வுகளின் தங்குதடையற்ற வெளிப்பாடே கவிதை”. அப்படியான கவிதைகள் தாமே தமது வேகத்தை வடிவத்தை நீளத்தை நிர்மாணித்து நதியைப் போல் பாய்ந்து வாசகனின் மனமெனும் கடலோடு சங்கமித்து வெற்றி கண்டு விடுகின்றன//

    மிக மிக உண்மை..

    //“அருவியில் நீர் அள்ளாமல்
    காலியாய்த் திரும்பும்
    குடத்துக்குள்
    சிரிக்கும் காற்றின் சிரிப்பைக்
    கேட்டபடியே”//

    அபாரம்!! வாசிக்கும் ஆர்வத்தைத்தூண்டுது உங்க விமர்சனம்..அருமை.

    பதிலளிநீக்கு
  7. அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஹப்பா... கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை. நல்லதொரு நூலைப் பற்றி பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி. அமைதிச்சாரல் மேடம் ரசித்த கவிதையை நானும் மிக ரசித்தேன். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கருங்கற்பாறை இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க யோசித்தபடியே டீ குடித்து பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற சிற்பியையே வெறித்துக்கொண்டிருந்தது தலையிலிருந்து இடுப்புவரை செதுக்கவிடப்பட்ட சிலை.”

    -என்ன அழகான கவிதை! நானும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க ட்ரை பண்றேன். அறிமுகம் பண்ணின உங்களுக்கு என்னோட நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அருமையான் அறிமுகம்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. வரலாற்று சுவடுகள் said...

    /எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூடிய விளக்கம்./

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம். said...
    // இதில்தான் உண்மையான உணர்ச்சி பூர்வக் கவிதைகள் அல்லது படைப்புகள் கிடைக்கின்றன.

    நல்லதொரு பகிர்வு.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. வெங்கட் நாகராஜ் said...
    //இது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. நண்பர் அகஸ்டஸின் இந்தப் புத்தக வாசிப்பு அனுபவத்தினை நானும் எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்....//

    ஆம், நானும் வாசித்திருந்தேன் அதை. வாழ்த்துகளுக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  14. ஹ ர ணி said...
    /உங்கள் பெயரைப் பார்த்ததும் வலையில் பார்த்தபெயராக உள்ளதே/

    எனது சில கவிதைகளுக்குத் தாங்கள் நவீன விருட்சத்தில் கருத்துரைத்திருக்கிறீர்கள்!

    //தேவையான செய்திகளோடு கூடிய விமர்சனம் உங்களுடையது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  15. Ramani said...
    //அருமையான கவிதைகள்
    மிக மிக அருமையான அறிமுகம்
    நல்ல நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  16. அமைதிச்சாரல் said...
    // வாசிக்கும் ஆர்வத்தைத்தூண்டுது உங்க விமர்சனம்..அருமை.//

    நன்றி சாந்தி, கவிதைகளை ரசித்தமைக்கும்.

    பதிலளிநீக்கு
  17. Nithi Clicks said...
    //அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்//

    நன்றி நித்தி.

    பதிலளிநீக்கு
  18. பா.கணேஷ் said...
    //ஹப்பா... கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை. நல்லதொரு நூலைப் பற்றி பகிர்ந்திருக்கிறீர்கள். //

    மகிழ்ச்சி. நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  19. நிரஞ்சனா said...
    // நானும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க ட்ரை பண்றேன். அறிமுகம் பண்ணின உங்களுக்கு என்னோட நன்றி!//

    நல்லது நிரஞ்சனா. நன்றி!

    பதிலளிநீக்கு
  20. ஸாதிகா said...
    //அருமையான் அறிமுகம்.வாழ்த்துக்கள்//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  21. அழகா அறிமுகப்படுத்தியிருக்கீங்க.நூல் எல்லா இடத்திலயும் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  22. @ விச்சு,

    நன்றி. வடக்குவாசலுக்கு பணம் செலுத்தி தபால் மூலம் பெற்றிடலாம். விவரங்கள் இங்கே உள்ளன: http://www.vadakkuvaasal.com/books-sale.html

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin