ஞாயிறு, 21 ஜூன், 2009

தான் என்னும் எண்ணம்தனை விட்டுத்தான் பார்ப்போமே!

*'தான்' என்னும் எண்ணத்தைதான் 'ஈகோ' என ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இருக்க வேண்டியதுதான் அளவோடு ஈகோ, ஏளனமாய் எவரேனும் இகழுகையில் வீறு கொண்டு எழுந்து முன்னேற்றப் பாதையில் முடுக்கி விடும் மந்திரசக்தியாய்.., மற்றவர் போல் ‘தன்’னாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்கிற வைராக்கியத்தைத் தூண்டும் கருவியாய்!

*ஆனால் அந்த ‘தன்’, உணர்ச்சி வசப்பட்டு ‘தான்’ ஆகுகையில், தேவையற்ற விஷயங்களில் காட்டப் படுகையில், விளைவுகள்... வீழ்ச்சிக்கோ விரும்பத் தகாத மன வருத்தங்களுக்கோ அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது?

*வாருங்களேன், ஈகோ நம் இரத்தத்தோடு கலந்து நினைவோடு இழைந்து இருந்தால்தான் கெளரவம் என்கிற சிந்தனையும், இன்றைய என்றைய வாழ்வியல் சூழலுக்கும் 'தாம் தாம்' எனக் குதிக்கும் இந்தத் ‘தான்’ சரி வருமா என்றும் சில கோணங்களில் அலசிப் பார்ப்போம்.

*எப்போது விசுவரூபம் எடுக்கும் இந்த எண்ணம் எனக் கேட்டால்.. அந்நியரோ அந்யோன்யமானவரோ, அடுத்தவர் அவ்வப்போது நம் தவறைச் சுட்டிக் காட்டும் போதும், அதனால் நம் 'சுயம்' பாதித்து விட்டதாய் பதறி மனம் சுருங்கும் போதும்...

*'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என நக்கீரன் சொன்ன போது சிவனே அதை 'சிவனே' என ஏற்றுக் கொள்ள மறுத்து, சீறிப் பாய்ந்தாரே, இந்த மானிடப் பிறவிகள் எம்மாத்திரம், என்கிறீர்களா ? அது காவியம். நாம் தீட்டுவதோ வாழ்க்கை எனும் ஓவியம். 'தான்' எனும் எண்ணத்தால் வண்ணங்கள் தவறானால்... ஓவியம்தான் உயிர் பெறுமா?

*பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே!

*நாம் பார்த்து வளர்ந்த பிள்ளைகளே, சமயத்தில் நம் தவறினைச் சுட்டி, சரி செய்ய வேண்டிட நேரலாம். நியாயமாய் இருக்கும் பட்சத்தில், நெஞ்சு சுட்டாலும் 'நமக்கு சரி நிகரா?' என்ற கோபம் தவிர்த்துக் கொஞ்சம் நினைக்கலாம்.. 'அவர்தம் வளர்ச்சியின் இன்னொரு பரிணாமமே இந்தப் பக்குவம்' என.

*நாம் பார்த்து பணியில் சேர்ந்தவரே ஆனாலும், 'நமக்கே படிப்பு சொல்ல வந்து விட்டாரா? ' என்ற எண்ணம் தவிர்த்து 'நம்மிடத்தில் பணி செய்த அனுபவமே பேசுகிறது' எனப் பெருமையும் பெருந்தன்மையும் ஒருங்கிணைய அவர்தம் அறிவுரையை 'ஏற்பது இகழ்ச்சி' அன்று. பாடம் சொல்ல பகவானே நேரில் வர நாம் யாரும் 'அர்ச்சுனர்' அன்று.

*'ஐயா,ஐயா' என அடிமை போலக் கையைக் கட்டி நிற்பவரிடம் சேவகம் பெற்ற காலமும், 'யெஸ் சர், யெஸ் சர்' என 'டை'யைக் கட்டியவர், தவறோ சரியோ எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டிய காலமும், இந்தக் கணினி உலகில் பழங்கதைகள்!

*வார்த்தைகள் வருத்தம் தந்தாலும், 'நாம் இப்படி இப்படி இருத்திருக்கலாம் நடந்திருக்கலாம், இப்படி இப்படி இனி இருக்கலாம் நடக்கலாம்' என ஒரே ஒரு கணமேனும் அவை நம்மை நினைக்க வைத்தால், அவற்றை உரைத்தவர் நமக்கோர் 'உரை கல்'.

*சுயமாக நம்மைப் புடம் போட்டுக் கொள்ள இறைவன் அனுப்பிய தூதர்களாய்ச் சொன்னவரை எடுத்துக் கொண்டால் சொர்க்கம் நம் கையில். இது தெளிவானவருக்குக் கையில் கிடைக்கும் வடையோ பிரசாதம். தெளிவற்றவருக்கோ, நடுவில் தெரியும் துளைதான் பிரதானம்!

*தவறுகளைத் தட்டிக் கேட்க, சுட்டிக் காட்ட கடவுள் காட்சியொன்றும் தருவதில்லைதான். ஆனால் உணர்ந்து கொள்ள, திருத்திக் கொள்ள சந்தர்ப்பங்களைத் தராமல் இருப்பதில்லை. 'என்னைச் சொல்ல எவருக்கு என்ன தகுதி' என நினைப்பது நியாயமில்லை. ஏன் என வினவினால், நமது தகுதி எது என்பதே பல சம்யங்களில் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை!

*நாம் இன்னாரின் மனைவி/கணவன், மகள்/மகன், இன்னாரின் மருமகள்/மருமகன், சகோதரி/சகோதரன் என எந்த உறவின் அடிப்படையிலும் எழுந்து நிற்பது அல்ல 'தகுதி'. நமது படிப்பு-பணம்; பதவி-புகழ்; அழகு-அந்தஸ்து நிர்ணயிப்பது அல்ல 'தகுதி'. இவை யாவும் வெறும் அடையாளங்களே!

*அறிந்த தெரிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே 'தகுதி'. நாம் அங்கு நிற்கவே இல்லை என்றால்...?

*சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.

*'தான்' எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தெரிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!
*** *** *** *** ***


[July 10, 2003 திண்ணை இணைய இதழில் "தான் எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் பெற.." என்கின்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை.]


[இன்றைய யூத்ஃபுல் விகடன் Good...Blogs பரிந்துரையில் இப்பதிவு:













நன்றி விகடன்!]

75 கருத்துகள்:

  1. அருமையான சிந்தனை பகிர்வு பிரண்ட்!! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  2. //பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே!//


    மிகச்சரி!

    நம்மை மேன்படுத்தும் எந்தவொரு விசயத்தினையும் எந்த நிலையில் உள்ளவர்களிடமிருந்தும் நம்மால் பெற்று.ஏற்றுக்கொள்ளமுடியும் ஏற்றுக்கொள்ளவேண்டும் ! - மேன்மையடைவது நாம்தானே! :)

    பதிலளிநீக்கு
  3. //சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.//

    மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டிய வரிகள் நன்றி ராமா அக்கா!

    பதிலளிநீக்கு
  4. //*'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ' என நக்கீரன் சொன்ன போது சிவனே அதை 'சிவனே ' என ஏற்றுக் கொள்ள மறுத்து, சீறிப் பாய்ந்தாரே,//

    இது பற்றி எனது பதிவு http://dondu.blogspot.com/2006/10/blog-post_30.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  5. //சிவனே 'சிவனே' என்றில்லாமல்// - நல்ல பகடி.

    அடையாளம், தகுதி பற்றி சொல்லியிருந்தது பிடித்தது. கலக்குறீங்க சகோ.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  6. தான் என்ற அகங்காரம் ஒழிந்தால் மட்டுமே ஒருவனால் உயர்ந்த நிலைக்கு வர முடியும்..

    நல்லா கூறி இருக்கீங்க ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு.
    /*அது காவியம். நாம் தீட்டுவதோ வாழ்க்கை எனும் ஓவியம். 'தான்' எனும் எண்ணத்தால் வண்ணங்கள் தவறானால்... ஓவியம்தான் உயிர் பெறுமா?*/
    அருமையாகச் சொன்னீர்கள். வாழ்வெனும் தன் ஓவியத்தை "தான்" என்ற எண்ணம் கலைக்க விடக்கூடாது.

    /*...'அவர்தம் வளர்ச்சியின் இன்னொரு பரிணாமமே இந்தப் பக்குவம்' */
    உண்மை


    /*'தான்' எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தெரிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!*/
    அழகாகக் கூறினீர்கள்

    பதிலளிநீக்கு
  8. "தான் என்னும் எண்ணம்தனை விட்டுத்தான் பார்ப்போமே!"//

    அருமையா சொல்லியிருக்கீங்க.

    மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டியதொரு பதிவு

    பதிலளிநீக்கு
  9. ”தான்” மேல் இருக்கும் போது குழம்பு...தான் அடியில் சென்றவுடன் தெளிந்து ரசமாக இருக்கும்..சிறந்த பதிவு....வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. தான் என்ற அகங்காரம் தான் எந்த ஒரு பெரிய மனிதனின் அழிவிற்கும் ஆரம்பம் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..........

    வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
  11. அபி அப்பா said...

    //அருமையான சிந்தனை பகிர்வு பிரண்ட்!! சூப்பர்!//

    நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  12. ஆயில்யன் said...

    //மிகச்சரி!

    நம்மை மேன்படுத்தும் எந்தவொரு விசயத்தினையும் எந்த நிலையில் உள்ளவர்களிடமிருந்தும் நம்மால் பெற்று.ஏற்றுக்கொள்ளமுடியும் ஏற்றுக்கொள்ளவேண்டும் ! - மேன்மையடைவது நாம்தானே! :)//

    நிச்சயமாக, விமர்சனங்கள் என்பதே நம்மை மேம்படுத்திடத்தான் என்கிற தெளிவு இருந்தாலே போதும்.

    ****//சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.//

    மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டிய வரிகள் நன்றி ராமா அக்கா!****

    என் மனதிலும் நிறுத்தியிருக்கிறேன் ஆயில்யன். கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //தண்டோரா said...
    ”தான்” மேல் இருக்கும் போது குழம்பு...தான் அடியில் சென்றவுடன் தெளிந்து ரசமாக இருக்கும்..//

    **********

    தென்னாட்டின் ஈடு இணையற்ற தத்துவ மேதை அண்ணன் "தண்டோரா" வாழ்க வாழ்க..........

    இந்த "தான்" என்கிற ஒரு வார்த்தையில், எவ்வளவு அழகாக குழம்பு, ரசம் பற்றிய தத்துவத்தை அடக்கி விட்டார்.......!!

    பதிலளிநீக்கு
  14. dondu(#11168674346665545885) said...

    **** //*'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ' என நக்கீரன் சொன்ன போது சிவனே அதை 'சிவனே ' என ஏற்றுக் கொள்ள மறுத்து, சீறிப் பாய்ந்தாரே,//

    இது பற்றி எனது பதிவு http://dondu.blogspot.com/2006/10/blog-post_30.html ****

    நகைச்சுவையாக எழுதியிருந்த உங்கள் பதிவினைப் படித்தேன் டோண்டு சார்:)! என் வலைப்பூவுக்கு முதன் முறையாக வந்துள்ளீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  15. அனுஜன்யா said...

    **** //சிவனே 'சிவனே' என்றில்லாமல்// - நல்ல பகடி.****

    :)!

    //அடையாளம், தகுதி பற்றி சொல்லியிருந்தது பிடித்தது. கலக்குறீங்க சகோ.//

    நன்றி அனுஜன்யா.

    பதிலளிநீக்கு
  16. கிரி said...

    //தான் என்ற அகங்காரம் ஒழிந்தால் மட்டுமே ஒருவனால் உயர்ந்த நிலைக்கு வர முடியும்..//

    உண்மைதான் கிரி, கருத்துக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. அமுதா said...

    //நல்ல பதிவு. //

    நன்றி அமுதா.

    **** /*அது காவியம். நாம் தீட்டுவதோ வாழ்க்கை எனும் ஓவியம். 'தான்' எனும் எண்ணத்தால் வண்ணங்கள் தவறானால்... ஓவியம்தான் உயிர் பெறுமா?*/

    அருமையாகச் சொன்னீர்கள். வாழ்வெனும் தன் ஓவியத்தை "தான்" என்ற எண்ணம் கலைக்க விடக்கூடாது.****


    ஆம் அமுதா, ஓவியம் அழகுறுவது நம் கையில்தான் உள்ளது. ஒத்த உங்கள் கருத்துக்கள் யாவற்றுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. புதுகைத் தென்றல் said...

    // //"தான் என்னும் எண்ணம்தனை விட்டுத்தான் பார்ப்போமே!"//

    அருமையா சொல்லியிருக்கீங்க.

    மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டியதொரு பதிவு//

    வாங்க தென்றல். கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தண்டோரா said...

    //”தான்” மேல் இருக்கும் போது குழம்பு...தான் அடியில் சென்றவுடன் தெளிந்து ரசமாக இருக்கும்..//

    அழகாய்ச் சொல்லி விட்டீர்கள். ஆர்.கோபியும் எப்படி ரசித்திருக்கிறார் பாருங்கள்:)!

    //சிறந்த பதிவு....வாழ்த்துக்கள்...//

    வலைப்பூவுக்கு இது உங்கள் முதல் வருகை. அதற்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி தண்டோரா.

    பதிலளிநீக்கு
  20. R.Gopi said...

    //தான் என்ற அகங்காரம் தான் எந்த ஒரு பெரிய மனிதனின் அழிவிற்கும் ஆரம்பம் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..........

    வாழ்த்துக்கள்.......//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபி.

    //தென்னாட்டின் ஈடு இணையற்ற தத்துவ மேதை அண்ணன் "தண்டோரா" வாழ்க வாழ்க..........

    இந்த "தான்" என்கிற ஒரு வார்த்தையில், எவ்வளவு அழகாக குழம்பு, ரசம் பற்றிய தத்துவத்தை அடக்கி விட்டார்.......!!//

    உண்மைதான்:)!

    பதிலளிநீக்கு
  21. அருமையான எண்ணலைகள்
    எண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை.


    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  22. "நாம் இன்னாரின் மனைவி/கணவன், மகள்/மகன், இன்னாரின் மருமகள்/மருமகன், சகோதரி/சகோதரன் என எந்த உறவின் அடிப்படையிலும் எழுந்து நிற்பது அல்ல 'தகுதி'. நமது படிப்பு-பணம்; பதவி-புகழ்; அழகு-அந்தஸ்து நிர்ணயிப்பது அல்ல 'தகுதி'. இவை யாவும் வெறும் அடையாளங்களே!

    *அறிந்த தெரிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே 'தகுதி'"

    எல்லோரும்,எப்போதும் மனதில் கொள்ள வேண்டிய வரிகள்.

    பதிலளிநீக்கு
  23. டிரேட் மார்க் பதிவு!
    ///
    *நாம் பார்த்து வளர்ந்த பிள்ளைகளே, சமயத்தில் நம் தவறினைச் சுட்டி, சரி செய்ய வேண்டிட நேரலாம். நியாயமாய் இருக்கும் பட்சத்தில், நெஞ்சு சுட்டாலும் 'நமக்கு சரி நிகரா?' என்ற கோபம் தவிர்த்துக் கொஞ்சம் நினைக்கலாம்.. 'அவர்தம் வளர்ச்சியின் இன்னொரு பரிணாமமே இந்தப் பக்குவம்' என.////

    சரியா சொன்னீங்க... பட்ட அனுபவம் மறக்க முடியாதது... :(

    பதிலளிநீக்கு
  24. மிக அருமையான கருத்துகள் ராமலஷ்மி! நல்ல சிந்தனை முத்துகள்! :-)

    பதிலளிநீக்கு
  25. சிந்தையில் வைத்து
    வந்தனம் செய்து போற்றவேண்டிய பதிவு. உங்கள் சரத்தின் இன்னொரு முத்து ராமலஷ்மி!

    பதிலளிநீக்கு
  26. தான் என்னும் எண்ணம் ஒருவகையான அறியாமைதான்.

    திருவிளையாடலில் அந்த சிவனின் ஆட்டிட்யூட் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.

    இங்கே சிவனை குறைசொல்வதைவிட அதை உருவாக்கிய எ பி நாகராஜனைத்தான் குறைசொல்லனும் என்பார்கள் சிவபக்தர்கள் :)

    You can see the egoism even here:

    பாட்டும் நானே பாபமும் நானே பாடும் உனை நான் பாட வைத்தேனே!

    அசையும் பொருளில் இசையும் நானே!

    அறிவாய் மனிதா உன் ஆனவம் பெரிதா?

    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே!

    Whenever I hear the song I feel that the God sounds too egoistic here when he was trying to correct a ignorant human being:)))

    Again,the song is written by a human! So we cant blame the God, the siva bakthars will defend :))

    பேசினால்தானே பிரச்சினை? உங்க ஈகோ வெளியில் தெரியும். கடவுள் என்னைக்கு பேசினார்? :)

    Anyway,

    தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பதும், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பதும் அறியாமையின் இரண்டுவிதம்ங்க ராமலக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  27. முத்துச் சரத்தில் இன்னொரு முத்து!!!
    அருமையான முத்து....

    பதிலளிநீக்கு
  28. அன்பின் ராமலக்ஷ்மி,

    //பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே//

    மிகச் சரி சகோதரி. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நல்ல பதிவு..தொடருங்கள் !

    பதிலளிநீக்கு
  29. //இது தெளிவானவருக்குக் கையில் கிடைக்கும் வடையோ பிரசாதம். தெளிவற்றவருக்கோ, நடுவில் தெரியும் துளைதான் பிரதானம்!//

    :)பார்வையில்தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் "attitude is everything" என்று சொல்வது போல், எதையும் நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. அருமையான சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. தன் உயிர், தான், அறப்பெற்றானை, ஏனைய‌
    மன் உயிர் எல்லாம் தொழும்

    என்பார் வள்ளுவர்.

    தான் எனும் செறுக்கற்றவனை எல்லா உயிர்களுமே வணங்கும்.

    இச்செறுக்கற்றவன் " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் " என்ற நிலையில்
    செயல்படுகிறான். எவ்வுயிரிலும் தன்னைக் காண்கிறான்.
    பிறரின் துன்பங்களைத் தன் துன்பமாக எண்ணி அவற்றினைக் களைய முற்படுகிறான்.

    வள்ளலார் மனிதனாய்ப் பிறந்தார். இறைவனாய் வாழ்ந்தார்.
    வாயார இறைவனை வாழ்த்தும் நாமோ மனிதனை, மனித நேயத்தை மறந்துவிட்டோம்.

    தான் எனும் எண்ணத்தினை விட்டுத்தான் பார்ப்போமே ! என்று எழுதுகிறீர்கள்.

    தான், தனது என்ற எண்ணம் இல்லையெனின், இவ்வுலகு இப்போது நோக்கும் பிரச்னை
    எதுவுமே இருக்காது ! மொழி, சாதி, மதம், இனம்,நாடு, இருப்பவன்-இல்லாதவன், எல்லாவற்றிலும்
    அடித்தள் பிரச்னையே " தான், தனது" என்பது தானே !

    அன்பு மலர வேண்டிய இடத்தில், அறிவு சுடர் விட வேண்டிய நேரத்தில், " தான்" "தனது" இல்லா
    மற்றெல்லாவற்றிலும் வெறியும் வெறுப்பும் அல்லவா எரிமலைக்குழம்பு போல் உமிழ்ந்து
    மனிதனைச் சூறையாடுகின்றன !

    மனிதன், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இத்தடைகளைத் தாண்டி வருவானா ?
    தான் எனும் அகந்தையைத் தகர்ப்பானா ?
    தனது எனும் எண்ணத்தைத் தவிர்ப்பானா ?

    சாத்தியம் என்று தோன்றவில்லை.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  31. நல்லா இருக்கு, ஆனா ரெண்டு மூணு தடவை படிச்சேன்

    பதிலளிநீக்கு
  32. திகழ்மிளிர் said...

    //அருமையான எண்ணலைகள்
    எண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை//.

    நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  33. துபாய் ராஜா said...

    //எல்லோரும்,எப்போதும் மனதில் கொள்ள வேண்டிய வரிகள்.//

    வலைப்பூவிற்கு த்ந்திருக்கும் முதல் வருகைக்கும், ‘தகுதி’ பற்றிய தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி துபாய் ராஜா.

    பதிலளிநீக்கு
  34. தமிழ் பிரியன் said...

    //டிரேட் மார்க் பதிவு!//

    அப்படின்னா...:)?


    ****///
    *நாம் பார்த்து வளர்ந்த பிள்ளைகளே, சமயத்தில் நம் தவறினைச் சுட்டி, சரி செய்ய வேண்டிட நேரலாம். நியாயமாய் இருக்கும் பட்சத்தில், நெஞ்சு சுட்டாலும் 'நமக்கு சரி நிகரா?' என்ற கோபம் தவிர்த்துக் கொஞ்சம் நினைக்கலாம்.. 'அவர்தம் வளர்ச்சியின் இன்னொரு பரிணாமமே இந்தப் பக்குவம்' என.////

    சரியா சொன்னீங்க... பட்ட அனுபவம் மறக்க முடியாதது... :( ****

    அனுபவங்கள் பாடங்களாகும். கருத்துக்கு நன்றி தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  35. சந்தனமுல்லை said...

    //மிக அருமையான கருத்துகள் ராமலஷ்மி! நல்ல சிந்தனை முத்துகள்! :-)//

    நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  36. //கையில் கிடைக்கும் வடையோ பிரசாதம்//
    ஆமாம். இல்லையா பின்னே?

    'நீங்க சொல்றது சரி'ன்னு சொல்லவும் ஒரு பெரியமனசு வேணும் இல்லே?

    பதிலளிநீக்கு
  37. ஷைலஜா said...

    //சிந்தையில் வைத்து
    வந்தனம் செய்து போற்றவேண்டிய பதிவு. உங்கள் சரத்தின் இன்னொரு முத்து ராமலஷ்மி!//

    பாராட்டுக்கு நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  38. வருண் said...

    //திருவிளையாடலில் அந்த சிவனின் ஆட்டிட்யூட் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.

    இங்கே சிவனை குறைசொல்வதைவிட அதை உருவாக்கிய எ பி நாகராஜனைத்தான் குறைசொல்லனும் என்பார்கள் சிவபக்தர்கள் :) //

    ஆமாம், இறை காவியங்கள் யாவுமே மனிதனால் வடிக்கப் பட்டவைதானே:)!

    //தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பதும், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பதும் அறியாமையின் இரண்டுவிதம்ங்க ராமலக்ஷ்மி :)//

    ரொம்பச் சரி.

    //தான் என்னும் எண்ணம் ஒருவகையான அறியாமைதான். //

    எழுதிய என்னிலிருந்து எல்லோருக்கும் இந்த அறியாமை உண்டு. அதே சமயம் அதிலிருந்து எழுப்பி விட சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது, 'அறியாமை'க் கிணற்றிலிருந்து மேலேறி வா எனக் கயிறு வீசப் படும் போது பற்றிக் கொள்வது புத்திசாலித்தனமல்லவா. அறியாமையால் நல்ல நட்புகளையும் இனிய உறவுகளையும் நாம் இழந்து விடக் கூடாதென்பதே என் ஆதங்கம்.

    கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  39. நல்ல பதிவுங்க.. ஆனால் சில சமயம் தான் எனும் எண்ணம் தவிர்க்க இயலாதது மிக சில சமயம் தவிர்க்க இயலாமல் கூட போகும்

    பதிலளிநீக்கு
  40. முந்தைய பின்னூட்டம் தவறுதலாக என்
    பெயர் விடுபட்டு விட்டது .
    ஆழமான பாதிப்புடன் எழுதிய பதிவாக இருக்கிறதே என்று குறிப்பட்டது.

    பதிலளிநீக்கு
  41. அன்புடன் அருணா said...

    //முத்துச் சரத்தில் இன்னொரு முத்து!!!
    அருமையான முத்து....//

    நன்றி அருணா அருமையான பாராட்டுக்கு.

    பதிலளிநீக்கு
  42. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //மிகச் சரி சகோதரி. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நல்ல பதிவு..தொடருங்கள் !//

    தவறாமல் தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  43. கவிநயா said...

    ****//இது தெளிவானவருக்குக் கையில் கிடைக்கும் வடையோ பிரசாதம். தெளிவற்றவருக்கோ, நடுவில் தெரியும் துளைதான் பிரதானம்!//

    :)பார்வையில்தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் "attitude is everything" என்று சொல்வது போல், எதையும் நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.*****

    அதே அதே:)!

    **** அருமையான சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி.****

    உங்கள் கருத்துக்கும் நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  44. sury said...

    //தன் உயிர், தான், அறப்பெற்றானை, ஏனைய‌
    மன் உயிர் எல்லாம் தொழும்

    என்பார் வள்ளுவர்.

    தான் எனும் செறுக்கற்றவனை எல்லா உயிர்களுமே வணங்கும்.//

    உயரிய கருத்து!

    //இச்செறுக்கற்றவன் " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் " என்ற நிலையில்
    செயல்படுகிறான். எவ்வுயிரிலும் தன்னைக் காண்கிறான்.
    பிறரின் துன்பங்களைத் தன் துன்பமாக எண்ணி அவற்றினைக் களைய முற்படுகிறான்.

    வள்ளலார் மனிதனாய்ப் பிறந்தார். இறைவனாய் வாழ்ந்தார்.
    வாயார இறைவனை வாழ்த்தும் நாமோ மனிதனை, மனித நேயத்தை மறந்துவிட்டோம்.//

    நிஜம்தான்:(!

    //தான் எனும் எண்ணத்தினை விட்டுத்தான் பார்ப்போமே ! என்று எழுதுகிறீர்கள்.

    தான், தனது என்ற எண்ணம் இல்லையெனின், இவ்வுலகு இப்போது நோக்கும் பிரச்னை
    எதுவுமே இருக்காது ! மொழி, சாதி, மதம், இனம்,நாடு, இருப்பவன்-இல்லாதவன், எல்லாவற்றிலும்
    அடித்தள் பிரச்னையே " தான், தனது" என்பது தானே !//

    நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் ‘தான்’ ஈகோவைப் பற்றியது என்றாலும், ’தான்’ மற்றும் ’தனது’ எனும் சுயநலச் சுழல்தனில் மானுடம் சிக்கிக் கொண்டு மனிதம் மறந்து போனதால் வந்தபடியே இருக்கும் பிரச்சனைகளை அழகாய் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

    //மனிதன், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இத்தடைகளைத் தாண்டி வருவானா ?
    தான் எனும் அகந்தையைத் தகர்ப்பானா ?
    தனது எனும் எண்ணத்தைத் தவிர்ப்பானா ?

    சாத்தியம் என்று தோன்றவில்லை.//

    சாத்தியப் படாத விஷயங்கள் சாத்தியப்பட வேண்டும் என்கிற ஆதங்கங்களுக்கு வடிகாலாக இருப்பவை என்றைக்கும் எழுத்துக்கள்தானே. தங்கள் உயரிய சிந்தனைப் பகிர்ந்தலுக்கு நன்றி சூரி சார்!

    பதிலளிநீக்கு
  45. நசரேயன் said...

    //நல்லா இருக்கு,//

    நன்றி நசரேயன்.

    //ஆனா ரெண்டு மூணு தடவை படிச்சேன்//

    அப்படியா, சரி மனதில் இருத்திட உதவும்தானே:)?

    பதிலளிநீக்கு
  46. துளசி கோபால் said...

    ****//கையில் கிடைக்கும் வடையோ பிரசாதம்//
    ஆமாம். இல்லையா பின்னே?

    'நீங்க சொல்றது சரி'ன்னு சொல்லவும் ஒரு பெரியமனசு வேணும் இல்லே?****

    நிச்சயமா வேணும்தான்! சரியாக இருக்கும் பட்சத்தில் சரின்னு சொல்ல சங்கடப் படாத பெரியமனசுக்காரங்களா இருப்போமே:)! கருத்துக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  47. குறை ஒன்றும் இல்லை !!! said...

    // நல்ல பதிவுங்க..//

    நன்றி, முதல் வருகைக்கும்.

    ஆனால் சில சமயம் தான் எனும் எண்ணம் தவிர்க்க இயலாதது மிக சில சமயம் தவிர்க்க இயலாமல் கூட போகும்//

    தலை தூக்கியபடியேதான் இருக்கும்ங்க. நாமதான் சுதாகரிப்பாய் இருக்கவேண்டும்:)!

    பதிலளிநீக்கு
  48. போட்டி பொறாமை மிக்க இந்த உலகத்தில் ''தான்'' என்ற எண்ணம் சில இடங்களில் அவசியமோ என நினைக்க தோன்றுகிறது! 'தான்' என்பது தன்னம்பிக்கை!! ''தான்தான்'' என்பதுதான் தலைக்கனம்! இது என் தாழ்மையான கருத்து!!!

    பதிலளிநீக்கு
  49. @ ஜீவன்,

    நீங்கள் சொல்லியிருப்பதையேதான் நானும் முதலிரண்டு பத்திகளில் சற்றே மாற்றி சொல்லியிருக்கிறேன் ஜீவன்:)! 'தன்'னாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்கிற வைராக்கியம் ‘தன்னம்பிக்கை’ என்றும், அந்தத் ‘தன்’ உணர்ச்சி வசப்படுகையில்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘தான்தான்’ தோன்றுகிறதென்றும், இருக்க வேண்டியதுதான் அளவோடு ஈகோ என்றும்:)!

    கருத்துக்கு மிக்க நன்றி ஜீவன்.

    பதிலளிநீக்கு
  50. இந்தப் பதிவைப் படித்தாலே தான் என்னும் எண்ணம் தானாகவே ஓடிவிடும். அழகு :-)

    பதிலளிநீக்கு
  51. @ உழவன்,

    கருத்துக்கு மிக்க நன்றி உழவன்!

    பதிலளிநீக்கு
  52. //
    *'தான்' என்னும் எண்ணத்தைதான் 'ஈகோ' என ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். இருக்க வேண்டியதுதான் அளவோடு ஈகோ, ஏளனமாய் எவரேனும் இகழுகையில் வீறு கொண்டு எழுந்து முன்னேற்றப் பாதையில் முடுக்கி விடும் மந்திரசக்தியாய்.., மற்றவர் போல் ‘தன்’னாலும் வாழ்ந்து காட்ட முடியும் என்கிற வைராக்கியத்தைத் தூண்டும் கருவியாய்!
    //

    ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும் என்ற தூண்டுதல்கள் மேற்காணும் அனைத்து வாக்கியங்களிலும் வெளிப்படுகின்றது அக்கா.

    பதிலளிநீக்கு
  53. //
    *ஆனால் அந்த ‘தன்’, உணர்ச்சி வசப்பட்டு ‘தான்’ ஆகுகையில், தேவையற்ற விஷயங்களில் காட்டப் படுகையில், விளைவுகள்... வீழ்ச்சிக்கோ விரும்பத் தகாத மன வருத்தங்களுக்கோ அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது?
    //

    தான் என்ற எண்ணம் விவேகத்தை மறைத்துவிடும். அருமையா சொல்லி இருக்கீங்கக்கா!

    பதிலளிநீக்கு
  54. //
    *நாம் பார்த்து வளர்ந்த பிள்ளைகளே, சமயத்தில் நம் தவறினைச் சுட்டி, சரி செய்ய வேண்டிட நேரலாம். நியாயமாய் இருக்கும் பட்சத்தில், நெஞ்சு சுட்டாலும் 'நமக்கு சரி நிகரா?' என்ற கோபம் தவிர்த்துக் கொஞ்சம் நினைக்கலாம்.. 'அவர்தம் வளர்ச்சியின் இன்னொரு பரிணாமமே இந்தப் பக்குவம்' என.
    //

    அருமை! பக்குவப்பட்ட மனசு எந்த அவமானங்களையும் பெரிது படுத்தாது.

    ஒவ்வொரும் வரிகளுக்கு உண்மைகளைச் சுமந்து வெளிப்பட்டிருக்கின்றது!

    பதிலளிநீக்கு
  55. //
    *நாம் இன்னாரின் மனைவி/கணவன், மகள்/மகன், இன்னாரின் மருமகள்/மருமகன், சகோதரி/சகோதரன் என எந்த உறவின் அடிப்படையிலும் எழுந்து நிற்பது அல்ல 'தகுதி'. நமது படிப்பு-பணம்; பதவி-புகழ்; அழகு-அந்தஸ்து நிர்ணயிப்பது அல்ல 'தகுதி'. இவை யாவும் வெறும் அடையாளங்களே!
    //

    அருமை ரொம்ப நல்லா அடையாளம் காட்டி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  56. ஒவ்வொன்றாக படித்து ரசித்து பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தேன். என்ன சொல்ல. வைரங்களாக . மின்னுதுக்கா. ஒவ்வொரு இடுகைகளிலும் உங்கள் எழுத்துக்களுக்கு கிரிடம் வைத்தால் மட்டும் போதாது. அவ்வளவு அருமையா எழுதறீங்க.

    தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  57. EGO = Etching GOD out.

    ஈகோ உள்ளார வந்துட்டா.. கடவுள் தன்னால வெளீய போய்டுவார்... :)


    அருமையா எழுதிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  58. //சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.//

    அருமையான வரிகள். பதிவு முழுதும் நன்கு விதைக்கப்பட்ட நல்ல சிந்தனை(கள்).

    பதிலளிநீக்கு
  59. @ RAMYA,

    வாங்க ரம்யா, தேர்ந்தெடுத்துக் காட்டி தாங்கள் ஒத்துப் போயிருக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  60. Jeeves said...
    *** "EGO=Edging-GOD-Out" ***

    நல்ல விளக்கம்.

    //ஈகோ உள்ளார வந்துட்டா.. கடவுள் தன்னால வெளீய போய்டுவார்... :)
    அருமையா எழுதிருக்கீங்க..//

    நீங்களும் அழகாய் சொல்லியிருக்கீங்க.., நன்றி ஜீவ்ஸ்:)!

    பதிலளிநீக்கு
  61. ஜெஸ்வந்தி said...

    //நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  62. சதங்கா (Sathanga) said...

    //பதிவு முழுதும் நன்கு விதைக்கப்பட்ட நல்ல சிந்தனை(கள்).//

    நன்றிகள் சதங்கா, பிடித்த வரிகளைச் சுட்டிப் பாராட்டியிருப்பதற்கும்.

    பதிலளிநீக்கு
  63. அனுபவம் ஆழமாக பேசியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  64. @ நானானி,

    நன்றி நானானி, அனுபவம்தானே சிறந்த ஆசான்!

    பதிலளிநீக்கு
  65. மிகவும் அருமையான கருத்தை அழகாகக் கூறி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  66. @ மாதேவி,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  67. பிரமாதம் அக்கா!
    அதிலேயும் //'தான்' எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தெரிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!// இந்த வரிகள் நூற்றுக்கு நூறு நிஜம்.
    //பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! //
    இப்படியானவர்களை நான் அடிக்கடி சந்திக்கிறேன், வருத்தத்துடன்.

    பதிலளிநீக்கு
  68. @ சுசி,

    வலைப்பூவுக்கு முதன்முறையாக வருகிறீர்கள், மகிழ்ச்சி. பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுசி!

    பதிலளிநீக்கு
  69. என்றுதான் உங்கள் வலைப்பக்கம் என் கண்ணில் பட்டது... உங்கள் பதிவுகளை அருமை தொடருங்கள்..

    ஒரு மனிதன் தான் என்ற அகந்தையில் இருந்து மீண்டால் அவனால் எல்லா வழிகளிலும் முன்னேற்றமடைய முடயும்.

    பதிலளிநீக்கு
  70. படிக்க படிக்க ஆகான்னு இருக்கு..
    அதைப்போல முயற்சி செய்யமுடியுமான்னா.. பெருமூச்சுத்தான் வருது :))

    ஓவியம் ... அப்பப்ப அங்கங்க பிசிராகி அழிச்சு அழிச்சு வ்ரையபட்டுக்கிட்டிருக்கு..

    பதிலளிநீக்கு
  71. சந்ரு said...

    //இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் என் கண்ணில் பட்டது... உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்..//

    வலைப்பூவுக்கு முதன்முறையாக வந்துள்ளீர்கள், நன்றி.

    //ஒரு மனிதன் தான் என்ற அகந்தையில் இருந்து மீண்டால் அவனால் எல்லா வழிகளிலும் முன்னேற்றமடைய முடியும்.//

    நிச்சயமாக. கருத்துக்கு நன்றி ச்ந்ரு!

    பதிலளிநீக்கு
  72. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //படிக்க படிக்க ஆகான்னு இருக்கு..
    அதைப்போல முயற்சி செய்யமுடியுமான்னா.. பெருமூச்சுத்தான் வருது :))//

    வாங்க முயற்சிப்போமே:))!

    //ஓவியம் ... அப்பப்ப அங்கங்க பிசிராகி அழிச்சு அழிச்சு வ்ரையபட்டுக்கிட்டிருக்கு..//

    உணருகிறோமே, அப்போ நிச்சயமா பிசிறில்லாத ஓவியம் தீட்டிடத்தான் போகிறோம்:)!

    நன்றி முத்துலெட்சுமி!

    பதிலளிநீக்கு
  73. @ கடவுள்,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin