வியாழன், 5 ஜூன், 2008

ஜானி ஜானி நோ பப்பா:( ?


"ப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ்"

"ஏண்டா இப்படிக் கிளம்புற நேரத்தில் உயிரை வாங்கிற! சொன்னா சொன்னதுதான்." பெட்டிகளை வேனில் ஏற்றுவதில் மும்முரமாக இருந்த ரகுபதி சுள்ளென்று எரிந்து விழுந்தார்.

முரளிக்கு கண்ணீர் வந்தது. மெல்ல மண்டியிட்டு அமர்ந்து ஜானியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். "இல்லடா ராஜா, உன்னை விட்டுட்டு போயிட மாட்டேன்" என்றான் அடிக்குரலில். அதற்கு புரிந்ததோ என்னமோ வழக்கத்தை விட அதிக பாசத்துடன் வாலை ஆட்டியபடி அவனிடம் குழைந்தது.

வீட்டுக்குள் இருந்து எதேதோ சாமான்களை வேனில் ஏற்றுவதற்காக சிரமத்துடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த அக்கா கல்பனா கோபத்தில் கத்தினாள். "எப்படி அல்லாடுறேன்! இங்க வந்து ஒரு கை கொடேன். இன்னும் ஏன் அதோடயே இழைஞ்சிட்டு நிக்கறே ? சனியனை என்னவானாலும் கூட்டிட்டுப் போகறதில்லேன்னு ஆயிடுச்சு." ஜானியைக் கண்டாலே அவளுக்கு அப்படியொரு வெறுப்பு. ஜானிக்கு பயந்துதான் தன் தோழிகள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்று வேறு நினைப்பு.

"போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு" பதிலுக்குச் சீறினான் முரளி. 'சே! ஜானி எவ்வளவு நன்றியாய் பாசமாய் இருக்கிறது! யாரும் அதைப் புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறார்களே! ' வருத்தம் மேலிட அதைத் தடவிக் கொடுத்தான்.

ஜானி குட்டியாய் இருந்த போது, ஒரு மழை நாளில் குளிரில் நடுங்கியபடி இவன் வீட்டு வராந்தாவில் பதுங்க, பாவப்பட்டு அடைக்கலம் கொடுக்கப் போய் இவனுடனேயே ஒட்டிக் கொண்டது. இந்த இரண்டு வருடத்தில் 'திமுதிமு ' என ஒரு பெரிய கன்றுக்குட்டியின் சைசுக்கு என்னமாய் வளர்ந்து விட்டது. ஸ்கூலுக்கு, கடைக்கு, நண்பர் வீடுகளுக்கு என் எங்கு போனாலும் கூடவே வரும்.

இப்போது அப்பாவுக்குப் பதவி உயர்வோடு மாற்றலாகி விட்டது. வீட்டு சாமான்களெல்லாம் டெம்போவில் போயாகி விட்டது. இவர்களும் இன்று கிளம்புகிறார்கள். ஜானியைக் கூட அழைத்துப் போக வேனில் இடமிருந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் மனதில் இடமில்லையே.

கடைசி நிமிடம் வரை போராடிப் பார்த்து விடுவது எனத் தீர்மானித்தவன் போல "அப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ்" என மறுபடியும் கெஞ்ச ஆரம்பித்தான் முரளி.

"டேய் சும்ம தொணதொணக்காதே! ஏதோ ரொம்ப ஆசைப்பட்டியேன்னு இது நாள் வரை அதை இருக்க விட்டதே பெரிசு. நான்தான் அங்கே போனதும் உனக்கு வேற நாய் வாங்கித் தர்றேன்னு சொல்றனே! " என்றார் எரிச்சலாய்.

"ஏம்பா! அந்த புது நாய் என் ஜானியாகிட முடியுமா என்ன ? "கண்ணில் நீர் முட்டக் கேட்டான் முரளி.

"புரியாம பேசறியேடா! வாங்கிற நாய்க்கும் ஜானின்னு பேர் வச்சா போச்சு! நாம போற இடத்தில அவனவன் டாபர்மேன், அல்சேஷன்னு வளர்த்திட்டிருப்பான். அங்கே இந்த தெரு நாயைக் கூட்டிட்டுப் போனா நம்ம ஸ்டேட்டஸ் என்னாகிறது? "

"சரியா சொன்னீங்கப்பா, 'புசுக் புசுக்'குன்னு பட்டுப் போல ஒரு பொமரேனியனை வாங்கி வளர்ப்போம்" என்று ஒத்துப் பாடினாள் கல்பனா.

"நீ சும்மா இருடி" என்று அவளை அதட்டிய முரளி ஒரு கணம் அப்பாவை உறுத்துப் பார்த்து விட்டுக் கேட்டான், "ஏம்ப்பா இந்த வாயில்லா ஜீவன்கள் கிட்டேயே ஜாதி பார்க்கிற நீங்களா மனுஷங்களுக்கிடையே உள்ள ஜாதி வித்தியாசங்களை ஒழிக்கப் போறீங்க?"

த்து வயது பாலகனின் அந்தக் கேள்வி, பல ஆயிரம் பாம்புகள் கொத்தியது போலிருந்தது ரகுபதிக்கு.

நேற்று அவருக்கும் குடும்பத்தினருக்கும் தரப்பட்ட பிரிவு உபசார விழாவில், தான் பேசியதைத்தான் முரளி குறிப்பிடுகிறான் எனப் புரியாமல் இல்லை.

"எனக்குப் பதவி உயர்வு கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சதும் ஜாதி சங்கத்திலே இருந்து கூட்டமா வந்து எனக்குப் பாராட்டு விழா எடுக்க விரும்புறதா சொன்னாங்க. 'முதல்ல உங்க சங்கத்தை கலைச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு பெரிய விழா எடுத்துட்டுப் போறேன்'னு நான் சொன்னேன்"

நன்றியுரை ஆற்றும் போது அவர் சொன்னதைக் கேட்டு சிரித்த கூட்டத்தை நோக்கி கையமர்த்தி விட்டு ஆவேசமாய் "ஜாதி என்னய்யா ஜாதி ? நான் உசந்தவன், நீ தாழ்ந்தவன்கிற சண்டையே ஜாதியாலதான் வருது. ஜாதிகள் மறையணும்னா முதல்படியா சங்கங்கள் கலையணும். போற இடத்திலே எல்லாம் நான் இதை அஞ்சாமல் அடித்துச் சொல்லத்தான் போகிறேன்" என்றார் ரகுபதி.

அப்போது கை தட்டிக் கரகோஷித்தக் கூட்டம் இப்போது கை கொட்டி சிரிப்பது போல மனதுக்குள் ஒரு பிம்பம் தோன்றி மறைய, தலையை உலுக்கிக் கொண்டார் ரகுபதி.

"எவ்வளவு திமிர் இருந்தா அப்பாவையே எதிர்த்துப் பேசுவ நீ" என்று சமயம் பார்த்துத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள கை ஓங்கிய கல்பனாவைத் தடுத்த ரகுபதி, முரளியைக் கனிவுடன் நோக்கி "ஜானியும் நம்ம கூட வருது" என்றார்.


***



'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1992 'நண்பர் வட்டம்' இலக்கியப் பத்திரிகையிலும், பின்னர் August 28, 2003 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்த சிறுகதை.

படம் : இணையத்திலிருந்து

இங்கு வலையேற்றிய பின் மார்ச் 11, 2009 யூத்ஃபுல் விகடன் இணையதளத்தில் கீழ் காணும் தலைப்புடன் வெளிவந்த இச்சிறுகதைக்கு விகடன்.காம் முகப்பிலும் லிங்க் தரப்பட்டிருந்தது:


42 கருத்துகள்:

  1. அருமையான கதைங்க!

    ஜானி ஜானி, யெஸ் பப்பா!
    ஜாதி ஜாதி, நோ பப்பா!!

    என்பதை அழகுற விளக்கி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. அட!
    பிள்ளை பேச்சுக்கு மதிப்பு கொடுத்த இன்னோரு அப்பா.

    சுவாமிநாத முரளி வாழ்க.

    பதிலளிநீக்கு
  3. ராமலக்ஷ்மி மேடம்,

    பாதி படிச்சிருக்கேன். மீதி படிச்சிட்டு சொல்றேன். திடீருனு பி.ஸி.

    பதிலளிநீக்கு
  4. கவிநயா said:
    //ஜானி ஜானி, யெஸ் பப்பா!
    ஜாதி ஜாதி, நோ பப்பா!!//

    அருமையான வரிகள் கவிநயா!
    நானும் பாரதியார் சொன்ன "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற கதையின் ஒரிஜனல் தலைப்பைத்தான் காலத்துக்கு ஏற்றாற்போல் "ஜானி ஜானி நோ பப்பா"வாக்கி விட்டிருந்தேன். தலைப்பைத்தான் மாற்ற முடிகிறது, நாட்டின் தலையெழுத்தை...? பாரதியார் பாடியதை நாமும் பாடிக் கொண்டேதான் இருக்கிறோம், ஆனாலும் இன்று வரை நாட்டில் அரசியலே ஜாதி ஓட்டுக்களை நம்பித்தானே நடந்து கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. வல்லிசிம்ஹன் said... //அட!
    பிள்ளை பேச்சுக்கு மதிப்பு கொடுத்த இன்னோரு அப்பா.//

    வல்லியம்மா, அப்படி ஒரு மெசேஜ் இருக்கிறதா? இல்லையா பின்னே, கேட்டது பிள்ளையேயானாலும் அதில் சத்தியம் இருக்கும் பட்சத்தில் மதித்து ஏற்றுக் கொண்டால்தான் பிள்ளையிடம் ஒரு தகப்பனுக்கு மதிப்பு.

    பதிலளிநீக்கு
  6. சதங்கா said:
    //பாதி படிச்சிருக்கேன். மீதி படிச்சிட்டு சொல்றேன். திடீருனு பி.ஸி.//

    மெதுவாக வாசியுங்கள் சதங்கா! அப்படியே அப்பாக்கள் 'கப்'னு பிடிச்சுக்க வல்லியம்மா தந்திருக்கும் மெசேஜிலும் கவனம் இருக்கட்டும்:-)!

    பதிலளிநீக்கு
  7. நீங்க எழுதியதா? அழகான சிறுகதை, ரொம்ப நல்லா இருக்கு. :)

    பதிலளிநீக்கு
  8. ambi said://நீங்க எழுதியதா?//

    என்ன அம்பி இப்படிக் கேட்டுட்டீங்க? பின்ன மண்டபத்திலே யாராவது எழுதிக் கொடுத்து அதையா பதிவிட்டிருக்கிறேன்..:( ? நான் நான் நானேதான் எழுதியது...!

    பாராட்டுக்கு நன்றி:-)!

    பதிலளிநீக்கு
  9. நானும் இந்த மாதிரி ஒரு அருமையா சின்கி வளர்த்தேன். எங்கள் வீட்டில் நாய் என்று அதைக் கூப்பிடக்கூட மட்டோம். கல்யாணம் பன்னி வந்ததும் "ஒன்று நான் இருக்கணும், இல்லை அது இருக்கணும்" என்று மனைவி சொல்லி விட்டாள். என்னத்தைச் சொல்ல :(

    பதிலளிநீக்கு
  10. விஜய் said://என்னத்தைச் சொல்ல:(//

    சொல்லவே வேண்டாம் விஜய், உங்க சாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்னு...:)!

    இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன். "சின்கி அப்புறம் எங்கே போச்சு?"

    பதிலளிநீக்கு
  11. பாராட்டுக்கு மிக்க நன்றி கயல்விழி முத்துலெட்சுமி!

    பதிலளிநீக்கு
  12. வல்லியம்மா said//அட!
    பிள்ளை பேச்சுக்கு மதிப்பு கொடுத்த இன்னோரு அப்பா.
    சுவாமிநாத முரளி வாழ்க.//

    தந்தைக்கே மந்திரம் சொன்னவராச்சே (முரளி)முருகப் பெருமான். 'பெரியவங்க பேச்சைக் கேட்கலாமா'ன்னு நாச்சியாரில் பதிவிட்ட பெரியவங்க நீங்க,'சின்னவங்க பேச்சையும் கேட்கலாம்'(சரியா இருக்கும் பட்சத்தில்)னு ஒரு பெரிய மெசேஜை புரிய வச்சதுக்கு நன்றி. நன்றி!

    பதிலளிநீக்கு
  13. கதையும் அருமை,
    அம்பியின் கேள்விக்கு
    தருமி ஸ்டைலில்
    உங்கள் பதிலும் அருமை.

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  14. சகாதேவன் said:
    //கதையும் அருமை,
    அம்பியின் கேள்விக்கு
    தருமி ஸ்டைலில்
    உங்கள் பதிலும் அருமை.//

    'நச்' என நாலே வரியில் நீங்க பின்னூட்டமிட்டிருக்கும் விதமும் அருமை. எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம்!

    பதிலளிநீக்கு
  15. நெத்தியடிக் கதை. அருமை. 1992லேயே எழுதிட்டீங்களா. என்னமோ இன்னிக்கு நடைமுறைய எழுதியது போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  16. உங்க கல்விச் சந்தை கவிதை போல இதுவும் இந்தக் காலத்துக்கும் பொருத்தமாத்தான் இருக்கு....

    நல்ல கதை.

    --RL

    பதிலளிநீக்கு
  17. கவிநயத்தோடு கவிநயா சொன்ன ரெண்டு வரி அற்புதம்! கதிக்கும் சேத்துத்தான்.

    குரங்கிலிருந்துதானே மனிதன் பிறந்தான், எனவே ஜாதி ஒழிப்பு
    விலங்கினத்திலிருந்தே நாம் ஆரம்பிப்போம். சேரிதானே?
    ராமலஷ்மி?
    மோதிரக் கையிலிருந்து குட்டுதான் விழணும் என்பதில்லை...தட்டும்
    விழலாம்!!!!!

    பதிலளிநீக்கு
  18. RL said://உங்க கல்விச் சந்தை கவிதை போல இதுவும் இந்தக் காலத்துக்கும் பொருத்தமாத்தான் இருக்கு....//

    "(எக்)காலத்துக்கும்...பொருத்தமாவே இருந்துவிடக் கூடாது RL!

    பதிலளிநீக்கு
  19. சதங்கா said://1992லேயே எழுதிட்டீங்களா. என்னமோ இன்னிக்கு நடைமுறைய எழுதியது போல் உள்ளது.//

    உண்மைதான் சதங்கா! RL-க்கு சொன்ன மாதிரி, எக்காலத்துக்கும் பொருந்தற மாதிரி இருந்திடக் கூடாதென இறைவனை வேண்டிக்குவோம் .

    பதிலளிநீக்கு
  20. நானானி said://குரங்கிலிருந்துதானே மனிதன் பிறந்தான், எனவே ஜாதி ஒழிப்பு விலங்கினத்திலிருந்தே நாம் ஆரம்பிப்போம். சேரிதானே? ராமலஷ்மி?//

    நல்ல பாயிண்ட். சேரி மேடம்!

    நானானி said://மோதிரக் கையிலிருந்து குட்டுதான் விழணும் என்பதில்லை...தட்டும்
    விழலாம்!!!!!//

    துளசி மேடம் குட்டை ஷொட்டாக்கினார்கள். நீங்கள் 'சபாஷ்'னு தட்டாக்கி விட்டீர்கள். ஸோ இனி ஷொட்டையும், தட்டையும் மெயின்டெய்ன் பண்ணியாகணும்:) நன்றி நானானி!

    பதிலளிநீக்கு
  21. எனக்கு நாய்னா ரொம்ப பிடிக்கும் (என் பதிவில் பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்). நீங்க வேற ரொம்ப மனதை தொடும் கதையா போட்டுட்டீங்க. உண்மையிலேயே இது கதையாக இருந்தாலும் ஜானியை விட்டுட்டு போய்ட போறாங்களோ என்ற தவிப்பு இருந்தது உண்மை. நல்ல வேளை சுபமான முடிவா போட்டு என்னை சந்தொசபடுத்திட்டீங்க.

    சூப்பர் கதைங்க நல்ல கருத்துடன்.

    பதிலளிநீக்கு
  22. பார்த்தேன்.பார்த்தேன். ஜானி போல 'கன்றுக்குட்டி' சைஸில் ஒன்றும், கல்பனா ஆசைப் பட்டாற் போல ''புசுக் புசுக்' எனப் பட்டுப் போன்ற பொமரேனியன்' ஒன்றும்.

    பதிலளிநீக்கு
  23. அருமையான கதை.
    அப்பா உடனே மனசு மாறீட்டாரே..

    பதிலளிநீக்கு
  24. கதை நல்லாஇருக்கு. அதிலும் என் பெயர் நல்ல கேரக்டரில் வருவதால் இரட்டிப்பு சந்தோஷம்

    பதிலளிநீக்கு
  25. முரளி கண்ணன் said://என் பெயர் நல்ல கேரக்டரில் வருவதால் இரட்டிப்பு சந்தோஷம்.//

    எனக்கும் இரட்டிப்பு சந்தோஷம்- முதல் வருகைக்கும், பாராட்டி பின்னூட்டமிட்டதற்கும்.

    பதிலளிநீக்கு
  26. அருமையாக உள்ளது கதை..

    நல்ல கருத்து..

    //ஜானி ஜானி, யெஸ் பப்பா!
    ஜாதி ஜாதி, நோ பப்பா!!//

    மிகவும் ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  27. பதிவின் படத்தைப் பார்த்துட்டு உள்ளே நுழைய 'தில்' இல்லாம ஓடுனவள் நான்.

    இன்னிக்குத்தான் மனசை திடப்படுத்திக்கிட்டு வந்தேன்.


    ஹேப்பி எண்டிங் இல்லாம இருந்திருந்தா.......

    நான் செத்தேன்.

    பதிலளிநீக்கு
  28. பிரேம்ஜி தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. gokulan said..
    // //ஜானி ஜானி, யெஸ் பப்பா!
    ஜாதி ஜாதி, நோ பப்பா!!//

    மிகவும் ரசித்தேன் :)//

    கதைக்கு நானிட்ட தலைப்பை விட கவிநயாவின் இப்பின்னூட்ட வரிகள் பலரை ரசிக்க வைத்திருக்கிறது. கவிநயாவுக்கும் நன்றி!

    //நல்ல கருத்து..// என்ற தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோகுலன்.

    பதிலளிநீக்கு
  30. என் பிளாகில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த ஜானியை "ஜானி ஜானி எஸ் பாப்பா"ன்னு பாடி எழுப்பி விட்டீர்களே.
    உங்களை புளு க்ராசில் சொல்லி என்ன பண்றேன் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  31. Goma said...//உங்களை புளு க்ராசில் சொல்லி என்ன பண்றேன் பாருங்கள்.//

    ஹை, அதானே முடியாது. துளசி மேடம் போல படத்தைப் பார்த்து பயந்து விலகியவர்கள், படித்து முடித்ததும் பாராட்டவில்லையா?

    அது போல படத்தைப் பார்த்து பதறி வரும் புளூ க்ராஸ், படித்து முடித்ததும் நெகிழ்ந்து திரும்பி விடுவார்கள் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  32. துளசி கோபால் said...
    //பதிவின் படத்தைப் பார்த்துட்டு உள்ளே நுழைய 'தில்' இல்லாம ஓடுனவள் நான்.//

    அது சரி, அதற்காக முரளி உங்கள் ஃபேவரைட் ஆன ஆனைய வளர்த்தான் என நான் கதை பண்ண முடியுமா மேடம், லாஜிக் இடிக்குமே:))?

    //இன்னிக்குத்தான் மனசை திடப்படுத்திக்கிட்டு வந்தேன்.//

    கவிதை பக்கம்தான் வர மாட்டேன்னுட்டீங்க! இது கதைதானே! சரி இனி உங்களை சுவாரசியப் படுத்தும்னு தோண்றதை நானே சப்மிட் பண்ணிறட்டுமா டீச்சர்?

    //ஹேப்பி எண்டிங் இல்லாம இருந்திருந்தா.......நான் செத்தேன்.//

    நல்ல வேளை உங்களைக் காப்பாத்திட்டேன். இல்லேன்னா உங்க வலையுலக ரசிகர்களிடமிருந்து என்னை யார் காப்பாத்துறது??

    பதிலளிநீக்கு
  33. அருமையான கதை
    நல்ல இருந்தது...

    என்றும் அன்புடன்
    கருணா கார்த்திகேயன்

    பதிலளிநீக்கு
  34. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கார்த்திகேயன்.

    பதிலளிநீக்கு
  35. நல்லதொரு கதை!

    வெறுமனே திருப்பம் மட்டுமின்றி நல்ல மெஸேஜூம் இருப்பதால் கவனத்திற்குள்ளாகிறது!

    அம்மா.. ஏன் நீங்க இது மாதிரி இன்னும் எழுதக்கூடாது?

    பதிலளிநீக்கு
  36. ராமலக்ஷ்மி

    1992 லே - 2003 லே - 2008 லே
    இன்னும் நாம் இப்படியே தான் இருக்கிறோம். கதை அருமை. சுவாமிநாத முரளியின் கருத்தை ஏற்றுக் கொண்ட ரகுபதியின் பண்பும் பாராட்டத்தக்கதே !

    நல்ல நடை - நல்ல தெள்ளிய நீரோட்டம் போல் செல்கின்ற கதை

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  37. பரிசல்காரன் said...
    //ஏன் நீங்க இது மாதிரி இன்னும் எழுதக்கூடாது?//

    கருத்துக்கு நன்றி பரிசல்காரரே! நீங்கள் சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. cheena (சீனா) said...
    //1992 லே - 2003 லே - 2008 லே
    இன்னும் நாம் இப்படியே தான் இருக்கிறோம்.//

    இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு என்பது புரியாத புதிர்தான் இல்லையா சார்.

    //சுவாமிநாத முரளியின் கருத்தை ஏற்றுக் கொண்ட ரகுபதியின் பண்பும் பாராட்டத்தக்கதே !//

    ஆம் அதுவே ஒரு நல்ல மனிதனுக்கு மட்டுமின்றி நல்ல தகப்பனுக்குமான அடையாளம்!

    //நல்ல நடை - நல்ல தெள்ளிய நீரோட்டம் போல் செல்கின்ற கதை.

    நல்வாழ்த்துகள்//

    ஊக்கமளிக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  39. மிக அருமையான கதை, ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க:))

    பதிலளிநீக்கு
  40. Divya said...
    //மிக அருமையான கதை, ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க:))//

    வாங்க திவ்யா. நீங்கள் ஒரு சிறந்த கதாசிரியர் என்று தெரியும். முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin