சனி, 24 மே, 2014

அமைதி காத்தல் - பாப்லோ நெருடா (1)

இப்போது நாம் பன்னிரெண்டு வரை எண்ணுவோம்
எண்ணுகையில் அனைவரும் அசையாமல் நிற்போம்

ஒரு முறையேனும் இப்பூமியில்
எந்த மொழியிலும் பேசாதிருப்போம்
ஒருநொடியேனும் நம் கைகளை
அதிகம் அசைக்காமல் நிற்போம்

அவசரங்களின்றி, இயந்திரங்களின்றி
அதிசயமாய் நாம் அனைவரும் இணைந்திருப்பது
விநோதமாய்த் தோன்றலாம்.

திமிங்கலங்களுக்குத் தீங்கிழைக்க  மாட்டார்கள்
குளிர்ந்த கடலில் மீனவர்கள்.
காயம்பட்டத் தம் உள்ளங்கைகளைக் கவனிப்பார்கள்
உப்பைச் சேகரிக்கும் மனிதர்கள்.

பசுமைக்கு எதிராக
காற்றுக்கும் நெருப்புக்கும் எதிராக
போர்கள் தொடுத்து
எவரும் எஞ்சியிராத களத்தில்
வெற்றியைக் கொண்டாடுவதை விடுத்து
தூய ஆடைகள் அணிந்து
சகோதரர்களுடன் இணைந்து
நிழலில் நடக்கலாம், எதுவும் செய்யாமல்.

நான் சொல்ல விழைவதை
வாழாவிருத்தலோடு குழப்பிக் கொள்ளக் கூடாது
வாழ்க்கை, அதைப் புரிந்து கொள்வதில் இருக்கிறது
வாழும் போதே மரணிப்பதை நான் விரும்பவில்லை.

வாழ்க்கையைக் கொண்டு செல்ல
இத்தனை சுயநலமாய் சிந்திக்காமல்
ஒருமுறையேனும் எதுவும் செய்யாமல் இருக்கலாம்.

அத்தகு பேரமைதி
நம்மை நாமே புரிந்து கொள்ளாத வருத்தத்தைப் போக்கிட
மரணத்தை நினைத்து
நம்மை நாமே பயமுறுத்திக் கொள்வதைத் தடுத்திட
வாய்ப்பிருக்கிறது.

பூமி நமக்குக் கற்பிக்கக் கூடும்
எல்லாமே மரித்து விட்டதாய்த் தோன்றுகையில்
துளிர்த்தலும் உயிர்த்தலுமான வாழ்வை.

இப்போது நான் பனிரெண்டு வரை எண்ணுகிறேன்
அனைவரும் அமைதி காத்திடுங்கள், நான் போகிறேன்.

*
மூலம் (ஸ்பானிஷ் மொழியில்): "Keeping Quiet"
by Pablo Neruda (1904 – 1973) 

ஆங்கிலத்தினூடாகத் தமிழாக்கம் செய்யப்பட்டக் கவிதை.

23 மே 2014, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

படங்கள் நன்றி: இணையம்

**

13 கருத்துகள்:

  1. நவீன விருட்சத்திலும் படித்தேன்.

    நல்ல கவிதை. தமிழில் இக்கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. \\நான் சொல்ல விழைவதை
    வாழாவிருத்தலோடு குழப்பிக் கொள்ளக் கூடாது
    வாழ்க்கை, அதைப் புரிந்து கொள்வதில் இருக்கிறது
    வாழும் போதே மரணிப்பதை நான் விரும்பவில்லை.\\

    அற்புதமான வரிகள். ஒவ்வொருவரும் சுய பரிசோதனை மூலம் தன்னைத்தானே மீட்டெடுக்கும் வழிமுறைகள். அசையாமல் நின்று பன்னிரண்டு வரை எண்ணக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவலத்தை அழகாக எடுத்தியம்பும் வரிகள். சிறப்பான தமிழாக்கம். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கையை புரிந்து கொள்வதில் சில சிரமங்கள் இருக்கிறது.
    சில நேரங்களில் மெளனம் நல்லது.


    அமைதி காத்தல் எல்லா வகையிலும் நல்லது தான்.
    பூமி நமக்கு கற்பிக்கிறது என்பது உணமை.
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை ராமலெக்ஷ்மி. மொழிபெயர்ப்பு சரளமாக வருகிறது. வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  5. தற்பரிசோதனை செய்யத் தூண்டும் வரிகள். இயற்கை மாசுபடாமல் வாழவும், பிற உயிரினங்கள் பாதுகாக்கப்படவும் நம்மால் இயன்றளவு முன்னெடுப்போம். நல்லதொரு விழிப்புணர்வு கவிதை.

    பதிலளிநீக்கு
  6. தேடி வாசித்து, அளித்திருக்கும் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin