வியாழன், 4 ஏப்ரல், 2024

பெங்களூரு அரண்மனை

 பெங்களூர் அரண்மனை: 

#1

இந்த அரண்மனை பெங்களூரின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. இதன் அருகாமையில் பல ஆண்டுகள் வசித்தபோதும் அப்போது ஏனோ செல்ல வாய்க்கவில்லை. சமீபத்தில் இதைப் பார்ப்பதற்காகவே ஒரு வாரநாளில் சென்று வந்தோம்.

இங்கிலாந்தில் உள்ள வின்ட்ஸர் கேஸில் என்னும் அரண்மனையை முன் மாதிரியாய் கொண்டு கட்டப்பட்டது. 145 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுற்றிலும் மரங்கள், தோட்டம், நுழைவாயிலில் பிரம்மாண்டமான கதவு, கோபுரங்கள் என கலைநயத்துடன் டியூடர் பாணிக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 454 ஏக்கர் கொண்டுள்ளது.

#2


#3


#4


அரண்மனையைச் சுற்றியுள்ள வெற்று நிலப்பரப்புக்கள் இசை நிகழ்ச்சிகள் உட்பட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உபயோகப்படுத்தப் படுகிறது . உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ராக் இசைப்பாடகர்கள் பலரும் இங்கே நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். அதுதவிர கலை, இலக்கிய, சினிமா, வணிகப் பொருட்காட்சிகள், அரசியல் மாநாடுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் அரண்மனையில் அமைந்துள்ள “பேலஸ் க்ரவுண்ட் - Palace Ground" என அழைக்கப்படும் பரந்த மைதானத்தில் நடத்தப்படுகின்றன.  

அரண்மனையைச் சுற்றிப் பார்க்கக் கட்டணம் உண்டு. சில காலத்துக்கு முன் வரை கேமராவுக்கு, வீடியோ கேமராவுக்கு எனத் தனித் தனிக் கட்டணங்களுடன் அனுமதித்து வந்தார்கள். இணையத்திலும் இந்தக் கட்டண விவரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது  கேமராக்களுக்கு அனுமதி இல்லை. மொபைலில் படம் எடுக்க அனுமதிக்கிறார்கள். வெளியில் மைதானத்திலும் கூட கேமராவை விடுத்து மொபைல்தான் பயன்படுத்த வேண்டுமென காவலுக்கு இருப்பவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதில் என்ன வித்தியாசம் காண்கிறார்களோ தெரியவில்லை. அரண்மனையின் உள்ளே ஓவியங்கள், சுவர்களை அலங்கரிக்கும் ராஜா ராணிகளின் குடும்பப் புகைப்படங்கள், புகழ்பெற்ற ஓவியங்களைப் படமெடுக்கத் தடை உள்ளது. இப்பதிவிலுள்ள படங்கள் யாவும் DSLR பயன்படுத்த முடியாத ஏமாற்றத்துடன் சாம்சங் கேலக்ஸி S22 ப்ளஸ் பயன்படுத்தி எடுத்தவை. 

தரைத் தளத்தில் மிகப் பெரிய கேளிக்கை அரங்கு உள்ளது. முதல் தளத்தில் தர்பார் அறை என்னும் அரசவை உள்ளது. தர்பார் அறையின் இருபுறங்களிலும் ராஜாரவிவர்மாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. இந்த அறையில்தான் ராஜாங்க அலுவல்கள் எல்லாம் நடக்கும். நாற்காலிகள், மேஜைகள் எல்லாம் சீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. உட்புறங்கள் நேர்த்தியான மரச் செதுக்கல்களையும், மலர் உருவங்களையும், அழகிய தூண்களையும் கூரை ஓவியங்களையும் கொண்டுள்ளன.

கீழ் தளத்து கேளிக்கை அரங்கு:

#5

#6


#7

சந்திரமுகி உட்படப் பல திரைப்படங்கள் இந்த அரண்மனையில் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதல் தளத்திற்கு இட்டுச் செல்லும், கீழ் வரும்  படிக்கட்டைப் பார்த்ததும் நினைவுக்கு வரக்கூடும், ஆளரவமற்ற அரண்மனையில் தனித்து விடப்பட்ட வடிவேலு தன்னுடன் வந்த ரஜினிகாந்தைக் காணாமல் தேடி அழுது புலம்பும் காட்சி:)!

#8


சாளரங்கள்:

#9


#10



சூரிய ஒளியில் ராணியின் முற்றம்:
#11



அறைகளுக்கு இட்டுச் செல்லும் அழகிய தாழ்வாரங்கள்:
#12


#13


உயர்ந்த தூண்கள்:
#14


இந்த அரண்மனை நிலமானது 1873 ஆம் ஆண்டில் ரெவ். காரெட்டிமிருந்து ரூ. 40,000 ரூபாய்க்கு சிறுவயது மகாராஜா ஜெயச்சாமராஜேந்திர உடையார்10_இன் ஆங்கில அரசுப் பாதுகாவலர்களால் அவரது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கப் பட்டது . இளம் மகாராஜாவுக்கு பெங்களூரில் ஆட்சி, கல்வி மற்றும் நிர்வாகப் பயிற்சி அளிக்க பொருத்தமான இடமாகக் கருதி வாங்கிக் கட்டப்பட்டிருக்கிறது இந்த அரண்மனை.

இந்த அரண்மனை கட்டிடத்தின் கட்டுமானம் ஏப்ரல் 1874_இல் தொடங்கப்பட்டு 1878_ஆம் ஆண்டு நிறைவடைந்தது. பெங்களூர் சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியின் முதன் முதல்வராக இருந்த ரெவ். காரெட் என்பவரால் கட்டப்பட்டது. 

லால்பாக் தோட்டத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த கண்காளிப்பாளர் ஜான் கேமரூன் இந்த அரண்மனையையும் இயற்கையோடு ஒன்றியதாக உருவாக்கினார். பல சேர்த்தல்கள் மற்றும் மேம்படுத்தல்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.

இச்சொத்துக்கான உரிமை தொடர்பாகப் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. மாநில அரசு கையகப்படுத்த முயன்று அது தோல்வியில் முடிந்தது.  தற்சமயம் ராஜா ஸ்ரீகண்ட தத்தா நரசிம்ம உடையாரின் மகளது வசம் அரண்மனை உள்ளது.

#15

தகவல்கள்: விக்கிப்பீடியா உட்பட இணையத்தில் சேகரித்தவை.

***

4 கருத்துகள்:

  1. எப்படி எல்லாம் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.... ஆனால் இப்போது அரசியல்வாதிகள் ஆடம்பரத்தில் அவர்களையும் மிஞ்சி விட்டார்கள்!

    பதிலளிநீக்கு
  2. பெங்களூர் அரண்மனை பிரமாண்டம் .அதன் சரித்திரம் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin