வியாழன், 17 ஏப்ரல், 2014

தன்னந்தனியே.., அன்னபெல் லீ - எட்கர் ஆலன் போ கவிதைகள் (1,2)

தன்னந்தனியே..

குழந்தைப் பிராயத்திலிருந்து
மற்றவர்களைப் போல் நான் இருந்ததில்லை;
மற்றவர்கள் பார்த்தது போல் பார்த்ததில்லை;
எல்லோரையும் போல் என் உணர்வுகளை
வெளிக் கொண்டு வர முடிந்ததில்லை;
பிறருக்கு வருத்தம் ஏற்படுத்தியவை
எனக்கு வருத்தங்களைத் தந்ததில்லை;
பிறரை சந்தோஷப்படுத்தியவற்றால்
என் இதயம் குதூகலித்ததில்லை;
எதையெல்லாம் நான் நேசித்தேனோ
நேசித்தேன் தன்னந்தனியனாக..
வெள்ளப் பிரவாகமோ நீரூற்றோ,
மலையின் செங்குத்தான பாறையில்
இலையுதிர்கால இளம்பொன் நிறத்தில்
எனைச் சுற்றி வரும் சூரியனோ
வெட்டிச் செல்லும் வானத்து மின்னலோ
இடியிலும் புயலிலும், திரண்ட மேகமோ
(ஏனைய சொர்க்கம் நீலமாய் இருக்கையில்)
எல்லாமே தெரிந்தன அரக்கர்களாய்
என் பார்வைக்கு.
*

மூலம்:
Alone
By
Edgar Allan Poe
**

அன்னபெல் லீ

பலப் பல வருடங்களுக்கு முன்
கடலின் இராஜ்ஜியத்தில்
வாழ்ந்திருந்த அந்தச் சிறுமியை நீங்களும் அறிந்திருக்கக் கூடும்
அன்னபல் லீ அவள் பெயர்;
வேறெந்த சிந்தனையும் கிடையாது அவளுக்கு
என்னை நேசிக்கவும் என்னால் நேசிக்கப்படுவதையும் தவிர்த்து.

நான் ஒரு சிறுவன் அவள் ஒரு சிறுமி
கடலின் இந்த இராஜ்ஜியத்தில்;
நேசித்தோம் ஒருவரையொருவர்
நேசத்தை விட உயர்வான
நேசத்தைச் செலுத்தினோம்-
நானும் அன்னபல் லீயும்;
அந்த நேசத்தால் கவரப்பட்ட தேவதைகள்
அந்த நேசம் தமக்கே வேண்டுமென்கிற இச்சையில்
பிரிக்கப் பார்த்தனர் என்னிடமிருந்து அவளை.

இந்தக் காரணத்தினால்தான், அந்நாளில்
இந்தக் கடலின் இராஜ்ஜியத்தில்,
சொர்க்கத்தில் அத்தனை சந்தோஷம் கிடைத்திராத தேவதைகள்,
எங்கள் மேல் பொறாமையுற்று அனுப்பி வைத்தக் காற்று-
ஆம்!-அதுதான் காரணம் (இந்தக் கடல் இராஜ்ஜியத்தின்
அனைத்து மக்களும் அறிவர்)
மேகத்திலிருந்து இரவில் வெளிப்பட்டு
உறைய வைத்து, கொன்றும் விட்டது என் அன்னபெல் லீயை.

ஆனால் எங்கள் நேசம், நேசத்தை விட வலுவான நேசம்
எங்களிலும் மூத்தவர்களுடையதை விடவும்
எங்களிலும் அறிவாளிகளுடையதை விடவும்.
சொர்க்கத்தில் வாழும் தேவதைகளாலும் சரி
கடலுக்கு அடியில் வாழும் அரக்கர்களாலும் சரி
பிரிக்க முடியாது என் ஆன்மாவை, அழகான
என் அன்னபெல் லீயின் ஆன்மாவிடமிருந்து.

ஏனென்றால், காய்வதில்லை நிலா
அழகான என் அன்னபெல் லீ பற்றிய
கனவுகளைக் கொண்டு தராமல்;
எழுவதில்லை நட்சத்திரங்கள்
என் அன்னபெல் லீயின்
பிரகாசமான கண்களை நினைவு படுத்தாமல்;
ஆகையால் படுத்துக் கிடக்கிறேன்
அலைகள் பொங்கும் இரவில், கரையின் அருகில்
‘என் அன்பே- என் அன்பே- என் வாழ்வே, என் துணையே’
கடலையொட்டிய அவள் சமாதிக்கு அருகில்
சமுத்திரம் எழுப்பும் சத்தங்களுக்கிடையே அவள் கல்லறையில்.
*

மூலம்:
Annabel Lee
By
Edgar Allan Poe
**

எட்கர் ஆலன் போ

2 ஏப்ரல் 2014, மலைகள் 47_ஆம் இதழில்.., நன்றி மலைகள்!

படங்கள் நன்றி: இணையம்
***

14 கருத்துகள்:

  1. இரண்டுமே அருமை. முதலாவது கொஞ்சம் ஜுனூன் தமிழ் போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. // காய்வதில்லை நிலா... எழுவதில்லை நட்சத்திரங்கள்... //

    அன்பு...

    பதிலளிநீக்கு
  3. தனிமையை இதைவிட ஆழமாகச் சொல்ல முடியுமா. இரண்டு கவிதைகளுமே அருமை.

    பதிலளிநீக்கு
  4. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம். குறிப்பாக முதல் சில வரிகள். சரிதானே:)? மாற்றியிருக்கிறேன். இப்போது பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. //மாற்றியிருக்கிறேன்//

    நன்றி. இப்போது மிக அருமையாக உள்ளது படிக்கும்போது. :)))

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான கவிதைகள்
    அருமையான மொழிமாற்றம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இரண்டு கவிதைகளுமே சிறப்பு...

    படித்தேன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. வரிக்கு வரி மிக மிக நுணுக்கமான மொழியாக்கம்! சொல்லப்போனால் மொழிபெயர்ப்பு என்றே தெரியாத அளவு இயல்பாக... அட்டகாசம்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin