வியாழன், 30 ஜனவரி, 2014

'எங்கள் Blog' ஸ்ரீராம் பார்வையில்.. இலைகள் பழுக்காத உலகம்

எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் நண்பரான ஸ்ரீராம் அவர்களது பார்வையில்.. இலைகள் பழுக்காத உலகம்:



நீள நீளமாய்க் கவிதைகள் எழுதுவது என்னைப் பொருத்தவரைக் கடினமான செயல். நாலுவரி எழுதுவதற்குள் நாக்கு தள்ளி  விடுகிறது! பாரா பாராவாக அதை நீட்டிச் சொல்வதற்கு திறமை வேண்டும். அது ராமலக்ஷ்மியிடம் நிறைய இருக்கிறது. பல்துறை வித்தகர். கதை, கவிதை, கட்டுரை, பயண அனுபவங்கள் என்று எழுதுவதோடு மூன்று தளங்களில் ஆசிரியர் பொறுப்பும். அப்புறம் அவரது ஸ்பெஷல் ஃபோட்டோக்ராஃபி.
          
நவீன விருட்சம், கீற்று, கல்கி, விகடன், உயிரோசை, சொல்வனம், மல்லிகை மகள், தேவதை என்று பல்வேறு இடங்களிலும் வெளிவந்த அவரது கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்த நூல். மிகச் சமீபத்தில் கல்கியில் வந்த அவரது 'நாளினை நனைத்த சொற்களு'ம் கூட நூலில் இடம் பெற்றிருப்பதற்கு அகநாழிகைப் பொன் வாசுதேவனைப் பாராட்ட வேண்டும். அவரை இன்னொரு விஷயத்துக்கும் பாராட்ட வேண்டும்.
நேர்த்தியான வடிவமைப்பு, கச்சிதமான அளவு மட்டுமல்ல, புத்தகத்தில் எழுத்துப் பிழைகளை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுதான் தேட வேண்டும். மிகச் சொற்பமான அளவிலேயே பிழைகள்.

ஏனென்றால், பிழைகளுடன் இருக்கும் புத்தகம் சமீபத்தில் படித்த அனுபவத்தில் சொல்கிறேன்!  நல்ல கருத்துகள் கொண்ட புத்தகம் கூட பிழையினால் பொலிவிழந்து போகும்!
         
பெரும்பாலும் ஏற்கெனவே அவர் பகிர்ந்து படித்தவைதான். ஆனாலும் ஒவ்வொன்றாக ப்ளாக்கில் படிப்பதற்கும், புத்தகமாய்ப் பார்ப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. 
            
61 தலைப்புகளில் கவிதைகள். (கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கவேண்டும் என்றே எனக்கு சமீபத்தில்தான் தெரியும்!) 
               
ஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போதும் ப்ளாக்கில் படித்தபோது எனக்கு என்ன தோன்றியது என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது. இத்தனைக்கும் நான் படிக்காத கவிதைள் கூட இருந்தன, புத்தகத்தில்.  படித்து நினைவில்லையா, அல்லது சிலவற்றை ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பக்கத்தில் பகிரவில்லையா... தெரியவில்லை.
              
அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எவ்வளவு ஆழ்ந்து கவனிக்கிறார் ராமலக்ஷ்மி என்று கவிதைகளின் கருவிலிருந்து தெரிகிறது. முன்னுரையில் 'புன்னகை' கவிதை இதழ் ஆசிரியர் க. அம்சப்ரியா இதைத்தான் சொல்கிறார்.
              
சிலசமயம் கவிதைகள் சொல்லவரும் கருப்பொருளை, கவிதையின் நடுவிலிருந்து தேடி எடுக்க வேண்டியிருக்கிறது. நடுவில் எங்கோ ஒளிந்திருக்கும் கவிதைக் கருவின் வார்த்தைகள்! சொல்லவரும் கருத்து தெரிந்தவுடன், கவிதையை மறுபடி படித்தால், எங்கிருந்து, எதனை ஒப்புமைப் படுத்துகிறார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.
              
கதை எழுதும் அதே கவனத்தோடு கவிதைகளுக்கும் கரு தேவைப் படுகிறது.  (உதாரணத்துக்கு 'ஒன்றையொன்று') ராமலக்ஷ்மிக்கு அதற்குப் பஞ்சமேயில்லை. கடற்கரைக்குச் சென்றால் காற்று வாங்கி விட்டுத் திரும்பும் என் போன்றோரிடையே அங்கு கடல், சிப்பியைக் கொண்டு வரும் தடம், அதை எடுக்கச் சென்ற குழந்தையின் கால் தடம்,  என்றெல்லாம் கவனித்து, அந்தக் கால் தடம் கலையாதிருக்க கடல் படும் கவலையைச் சொல்கிறார்.
             
மற்றவர்கள் பார்க்காததை எல்லாம் கவிஞனின் கண்கள் பார்க்குமாம். இரவு கண்ணிழுக்கும் தூக்கத்தில் கார் ஓசை கேட்டு ஒவ்வொரு வீடும் விழித்துக் கொண்டு 'தன் வீட்டுக் கா(ர)ரா' என்று படும் கவலையைக் கவிதையாக்குகிறார்.  ( 'நட்சத்திரங்கள்' - இங்கு எனக்கு என்னமோ 'மிளிர்ந்து கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள்' வரியோடு கவிதை முடிந்து விடுகிறது!)
        
புத்தகத் தலைப்பான 'இலைகள் பழுக்காத உலகத்தை' அப்பாவை நினைத்து எழுதி இருக்கிறார். புத்தகத்தையும் அப்பாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.
             
ஒரு மூச்சிலேயே படித்து முடித்தேன் என்று சொல்லக் கூடிய புத்தகம் இல்லை இது. அவ்வப்போது எடுத்து புரட்டிக் கொண்டே இருக்கலாம்.

பூக்குட்டியின் கவலை புரிந்து விரையும் மேகம்..
இருந்த இடத்தைத் தேடும் மூஞ்சூறு... ஓவியக் கண்காட்சி பற்றி சமீபத்தில் கூட எழுதி இருந்தார். அங்கு செல்லும்போது கண்கள் காணும் காட்சியில் எல்லாம் மனம் ஒரு கதையை, சம்பவத்தைக் கற்பனை செய்துவிடும் போல!  
             
குழந்தை கால்தடம் மீதான கடலின் 'தவிப்பு'...
பூமி குளிர மழை பொழியக் காரணம்...
வண்ணத்துப் பூச்சியாக ஆசைப்படும் ஒரு வண்ணத்துப் பூச்சி..
             
ராஜாத் தேனீக்களுக்கு கொடுக்குகள் இல்லாத காரணம் தெரியுமோ...
'அழகிய வீரர்கள்' - எதிலிருந்து எதற்கு ஒப்பீடு செய்கிறார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது. 
              
மனிதம் குறைந்த உலகில் தென்படும் துளிக் கருணை நனைக்கிறது மனதை, தொடரும் பயணத்தில் ...
   
சுவாரஸ்யப் புதிராய் 'யார் அந்தச் சிறுவன்'
  
மறுப்பு - அந்த வயதான பெண் தானே உள்ளே சென்று படைக்கலாமே என்ற ஆதங்கம் தருகிறது!  
               
'பிரார்த்தனை' யில் 'பிரார்த்திக்கத் தொடங்குகிறது வேதனையுடன் அன்பு' என்ற வரிகளை என் சௌகர்யத்துக்காகக் கடைசியில் சேர்த்துக் கொண்டேன்! 
    
காதல், காதல் தோல்வி என்று கவிதைகள் படித்திருக்கிறேன்.

ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்துவார்த்த சிந்தனையும், வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கவனிக்கப் பட்டிருக்கும் நுணுக்கமான சமூகப் பார்வையும் தெரிகிறது. 
              
எனக்கெல்லாம் 'கைமாத்தாக'க் கிடைத்தால்தான் உண்டு கவிதை!
          
'ஒரு சொல்' சமீபத்திய என் அவஸ்தையை நினைவு படுத்துகிறது. படித்த ஒரு நாவலின் பெயரை மறந்து திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
'பேரன்பி'ல் எனக்கு என் அப்பாவின் நினைவு வந்தது!

மென்மேலும் சிகரங்களைத் தொட எங்கள் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
*

'இலைகள் பழுக்காத உலகம்'
ராமலக்ஷ்மி
அகநாழிகைப் பதிப்பகம்
96 பக்கங்கள், 80 ரூபாய்.
--

இணையத்தில் வாங்கிட.. http://aganazhigaibookstore.com/

மற்றும் கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம், 390,
அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com
**

முதல் மதிப்புரைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஸ்ரீராம்:)!

எங்கள் Blog தளத்தில் நேற்று வெளியான இந்தப் பதிவில், வாழ்த்திய நண்பர்கள் அத்தனை பேருக்கும் இங்கும் என் நன்றி!

***

8 கருத்துகள்:

  1. என்னை கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி. மறுபடியும், மென்மேலும் சிகரங்களைத் தொட 'எங்கள்' வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. "எங்கள்" குழுவினருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. @ஸ்ரீராம்.,

    அப்படிச் சொல்வது உங்கள் பெருந்தன்மை. மீண்டும் என் நன்றியும், ‘எங்கள்’ Blog ஆசிரியர் குழுவினருக்கு:)!

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் சாரின் விமர்சனம் உடனே வாங்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டியது.. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. அங்கேயே படித்தேன்.

    விரைவில் புத்தகம் படிக்க ஆசை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin