புதன், 26 ஆகஸ்ட், 2020

இருவாச்சி விருந்து - நவீன விருட்சம் 113_வது இதழில்..

இருவாச்சி விருந்து



பூனை சாமர்த்தியமானது.
உயிர்த் தொகையைக் குறைப்பதில்
பெரும்பங்கு வகிப்பது.
பூனை வேகமாகப் பாயும் போது
இரையும் நொடியில் மாண்டு போகிறது.
பூனைக்கு அதிகமாய் பசியெடுக்கும் போது
இரைகளுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.
பூனை பசியில்லாத பொழுதுகளில்
தோட்டத்து அணில்களையும் எலிகளையும்
அசுவராஸ்யமாகப் பார்க்கிறது.
பலமுறை ருசித்து விட்டதாலோ என்னவோ
வேப்ப மரத்துப் பொந்திலிருந்த
கிளிக் குஞ்சுகளைக் ஒதுக்கிவிட்டு
அவக்கடோ மரத்துக் கூட்டிலிருந்த
சாம்பல் இருவாச்சிக்  குஞ்சுகளை
விருந்தாக்கிக் கொண்ட நாளின்
மாலைப் பொழுதில்
பூனை பெருங்குரலில் அழுது ஓலமிட்டு
வெறியோடு உறுமியபடி
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது,
விசிறப்பட்ட அட்டைப் பெட்டிக்குள் 
பத்திரமாக இருக்குமென நினைத்து
விட்டு வைத்திருந்த தன்
குட்டிகளில் ஒன்றைக் காணாது.


**


நவீன விருட்சம் 113_வது இதழில்.., 
நன்றி நவீன விருட்சம்!
***

6 கருத்துகள்:

  1. நவீன விருட்சத்தில் வந்த கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்றாக இருக்கிறது.
    பூனைக்கும் தன் குட்டியை பிரியும் சோகம் வந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அந்தப் பிரிவு எதனாலும் வந்திருக்கக் கூடும். சூழலியல் போராட்டங்கள். நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin