திங்கள், 25 ஆகஸ்ட், 2008

புன்னகைப் பூவே பூமிகா


பெற்றதும் பெற்றவளே 'தான் இனிப் பிழைக்க மாட்டோம்' என்ற எண்ணத்தில், பெற்ற பூவை பூமிக்குள் புதைத்து விட்டுப் பின் மனம் பதைத்து ஊர் மக்களிடம் சென்று சொல்ல, திரண்டு வந்து அவர்களால் காப்பாற்றப் பட்டிருக்கிறாள் இந்தச் சிசு. பெற்ற தாய் கை விட்டாலும் பூமித் தாய் கை விடவில்லை. அதனாலேயே "பூமிகா" என அன்புடன் அவர்களால் பெயரிடப் பட்டிருக்கிறாள். தாயும் இறந்து விட தூத்துக்குடி அடைக்கலாபுரத்திலுள்ள புனித சூசை அறநிலையக் காப்பகத்தில் அடைக்கலமாயிருக்கிறதாம் இந்தப் புன்னகைப் பூ.

இது ஒரு செய்தியாக படத்துடன் போன மாதம் குமுதம் வார இதழில் வெளியாகி இருந்தது. இதே போல 2003-ல் பெங்களூரின் பிரபல மருத்துவமனையொன்றில் பால்மணம் மாறாத பச்சிளம் சிசுவைக் கையாடி.. மயக்க மருந்து கொடுத்து.. சட்டத்துக்குப் புறம்பாக ஒரு கும்பல் விற்க முனைந்தாகச் செய்தி ஒன்றைப் படித்தப் பாதிப்பில் செப்டம்பர் 4, 2003 திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:



கண்ணே கலைமானே



பெற்றவள் கை
மாற்றியா விட்டாள்?
சொல்கிறார்கள் குற்றமாய்-
ஆயினும் எவருக்கும்
தெரியவில்லை சரியாய்-
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடி-கிளியே
கேள்விக் குறியாக நீ!

***

நோட்டுக்களாலே தொட்டில் கட்டி
நோட்டமிட்டு உனைக் கவர்ந்து
நோகாமல் கையாள
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!

***

தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் தடம் மாற்றி-
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பலிடம்
தத்தளித்திடும் தளிரே உண்மையிலே
தத்து அளித்திடவா
தரப் பட்டாய் நீ ?

***

கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!

***

கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ ?

***

மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!

***

காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்தாய் ஒரு வழியாய்
நிம்மதி நெஞ்சோடு
நிறைவாய் ஒரு வாக்கியம்
இனியேனும் இனிதாக
வாழ்வாங்கு வாழ்க நீ!

*** *** ***
இப்போது புன்னகைப் பூவாம் பூமிகாவும் நல்ல இடத்தில் சேர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்திடுவோம்!

முதல் படம் நன்றி: 6 ஜுலை 2008 குமுதம் வார இதழ்
இரண்டாவது படம் நன்றி: 29 ஜூலை 2003 டைம்ஸ் ஆஃப் இண்டியா [செய்தியுடன் வந்தது]

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேண்டுகோள்: பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!
கேள்வி: அரசுத் தொட்டில் முறை தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கிறதா?
ஆசை: முறை தவறுவதால் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் வறுமை மற்றும் பல காரணங்களால் வளர்க்க வழிவகை அறியாதவர்களுக்கும் உதவும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இம்முறை தவறாமல் இருக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரார்த்தனை: அரசுத் தொட்டில்களில் இட நேருகின்ற அவலங்கள் யாவும் மறைந்து அதற்கான அவசியமே இல்லாது போகும் பொற்காலம் பிறந்திட வேண்டும் என விரும்பும் பதிவர் ஆர்.செல்வக்குமாரின் கனவு மெய்ப்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விழிப்புணர்வு: 28 Aug 2008 அன்று இரவு Times Now சேனலில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் சுட்டியை பதிவர் சஞ்சய் மறுமொழியில் தந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் [பிரார்த்தனையை ஒரு பக்கம் நாம் தொடர்ந்தாலும்] தற்போதைய நடைமுறைத் தேவைக்காகவே எனது அந்த வேண்டுகோளும் ஆசையும் என்பது விளங்கக் கூடும். குழந்தைகளைப் புறக்கணிக்காமல், இப்படி கை மாற்றில் ஈடுபடாமல் பலவித சொந்தக் காரணங்களால் வளர்க்க இயலாது எனக் கருதுபவர்கள் முறையாகக் காப்பகங்களில் கொண்டு சேர்த்தால் அவர்கள் தத்து எடுக்கக் காத்திருக்கும் பல பெற்றோர்கள் வசம் சட்டப்படி ஒப்படைக்கப் பட்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.




வியாழன், 21 ஆகஸ்ட், 2008

காணாமல் போன கொசுவுடன் தொலைந்து போன லூஸு

நான் எழுதி 7/11/1986 குங்குமம் வார இதழில் வெளிவந்த துணுக்கு:

அப்போது நான் முதுகலை இறுதியாண்டு "மாணவாஸ்"ஸில் ஒருவள்.

***


திங்கள், 18 ஆகஸ்ட், 2008

வெண் புறா

ஆயிற்று ஆண்டுகள் சரியாக அறுபத்தியொன்று, அவரவர் வழியை அவரவர் பார்த்துக் கொண்டு போகிறோம் என அந்நியரிடமிருந்து அடுத்தடுத்த நாட்கள் சுதந்திரம் வாங்கிக் கொண்டு.

திரும்பிப் பார்த்தால் எத்தனை உயிர் இழப்புகள் இரண்டு பக்கங்களிலும் அன்றிலிருந்து இன்றுவரை என்னன்னவோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு.

வேண்டாம் வேண்டாம் இனி எந்த துவேஷமும் என ஏங்குவோர் இருபுறமும் உண்டு. அயர்வாக இருக்கிறது... அப்பக்கமும் இப்பக்கமும் விடுவதில்லை விடுவதில்லை என விடாமல் ஆவேசப்பட்டே அழிவுக்கு இட்டுச் செல்லும் அறிவிலிகளைக் கண்டு.

அத்தனையையும் தாண்டி அவ்வப்போது துளிர் விடும் நட்புகளைப் பூக்க விட்டால் நன்று. ஐந்தாண்டுகளுக்கு முன் அப்படி நம் நாட்டுக்கு வந்தது ஒரு அழகிய பூச்செண்டு.

சிகிச்சைக்கென வந்த நூர்பாத்திமாவின் வரவையொட்டி ஜூலை 24,2003-ல் திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை இதோ உங்கள் பார்வைக்கு:



வெண்புறா

இரு துருவங்களாக
பாகிஸ்தானும் பாரதமும்!
பாலமாக நீ வந்தாய்
நூர் பாத்திமா!
இத் துருவங்களை
இணைக்கத்தான்
இரு துளைகளை
இறைவன் வைத்தானோ
இத்தனை சின்ன உன்
இதயத்திலே!









மறுபடியும் துளிர்க்கிறது நட்பு,
லாகூருக்கும் டெல்லிக்கும் பேருந்து-
சின்னத் தேவதையே உன்னைச்
சிணுங்காமல் ஏற்றிக் கொண்டு!
பெங்களூரே பரபரப்பானது,
பிஞ்சே உன்
பஞ்சுப் பாதங்கள் பட்ட போது.
'நூர் நூர் ' என
உன்னைப் பார்க்கத்தான்
எத்தனை நூறு பேர்-
கை நிறைய பூங்கொத்துக்களும்
வாய் நிறைய வாழ்த்துக்களும்
நெஞ்சு நிறைய பிரார்த்தனைகளுமாய்-
குழந்தைகளும் பெரியவரும்
வரிசை வரிசையாய்-
நினைத்தாலே பெருமிதம்!












'அந்நிய நாட்டுக் குழந்தை ' என
அந்நியப் படுத்தாமல்
அத்தனை செலவையும்-ஏற்று
கொண்டார் ஒரு சிலர்.
அது
ஆனந்தம் என்றால்
நல்லிணக்கத்துடன்
அதை ஏற்று,
பாச மகளின்
மருத்துவதுக்காகக்
கொண்டு வந்த
பெருந்தொகையை
நேசத்துடன்
இந்தியக் குழந்தைகளுக்காக
இந்திய மருத்துவரிடம்
தந்தாரே உன் தந்தை-
அது
பேரானந்தம்!
தேறிடுவாய் நீ
சீக்கிரம்
தேவதையே பாத்திமா!
உன்
சிங்காரச் சிரிப்பினிலே
சிலிர்த்துக் கிளம்பிப்
பறந்திடுமே
சமாதான வெண்புறா!
*** *** ***


[படங்கள்:இணையத்திலிருந்து]

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

காலைக் கதிரவன் - PiT மெகா போட்டி


காலைக் கதிரவனே, எம்
கண்ணின் ஒளி நீயே!
வேலையேதும் நடப்பதில்லை, நீ
வெண்கதிர் வீசி வாராயெனில்!

புத்தம்புது ஒளி வெள்ளமென
நித்தம் நீ தோன்றியே
வித்தைகள் பல புரிகின்ற
விந்தையை என் சொல்வேன்!

உறக்கம் நீங்கியதும் உலகமெலாம்
உற்ற துணைவனாம் உன்வரவை
உவகையுடன் நாடி நிற்கும்
உன் பெருமைதான் என்னே!

நீயில்லாது இயங்காது நானிலமே
நீவாராது வாழாது வையகமே!
விண்ணிலே உதிக்கின்ற பொன்னொளியே
மண்ணினை வாழவைப்பாய் உன்னொளியால்!

தங்கமென நீ மிளிர்ந்து
தாமரையை மலர வைக்கையில்
வைரமெனவும் நீ ஒளிர்ந்து
வாழ வைப்பாய் எங்களையும்
!

*** *** ***

இப்புகைப்படம் என்னவோ மிகச் சமீபத்தில் எடுத்தது. ஆனால் கவிதை...1985-ல் இளங்கலை இறுதி ஆண்டில் இருந்த போது நான் பயின்ற திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.

போட்டிக்கான இப்படத்தை என் காமிரா கவர்ந்து கொண்ட சில கணங்களுக்கு முன்னும் சில கணங்களுக்குப் பின்னும் எடுத்த புகைப் படங்களும் இதோ உங்கள் பார்வைக்கு:




பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்கதிர் விசிடும் கதிரவா நில்
என் தேர்வு போட்டிக்குச் சரிதானாவென்று
சொல் சொல் சொல்!
!

*** *** ***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin